Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

சீவக சிந்தாமணி சுருக்கம்
ஒளவை துரைசாமி



சீவக சிந்தாமணி சுருக்கம்

1. சீவக சிந்தாமணி சுருக்கம்

2. பதிப்புரை

3. பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!

4. நுழைவாயில்

5. தண்டமிழாசான் உரைவேந்தர்

6. ஆராய்ச்சி முன்னுரை

7. கடவுள் வாழ்த்து

8. நாமகள் இலம்பகம்

9. கோவிந்தையா ரிலம்பகம்

10.காந்தருவதத்தையார் இலம்பகம்

11.குணமாலையார் இலம்பகம்

12.பதுமையார் இலம்பகம்

13.கேமசரியார் இலம்பகம்

14.கனகமாலையார் இலம்பகம்

15.விமலையார் இலம்பகம்

16.சுரமஞ்சரியார் இலம்பகம்

17.மண்மகள் இலம்பகம்

18.பூமகள் இலம்பகம்

19.இலக்கணையார் இளம்பகம்

20.முத்தியிலம்பகம்

21.பாட்டு முதற்குறிப்பகராதி

நூற் குறிப்பு

நூற்பெயர் : சீவக சிந்தாமணி சுருக்கம்

தொகுப்பு : உரைவேந்தர்தமிழ்த்தொகை - 4

பதிப்பாசிரியர் : ஒளவை துரைசாமி

பதிப்பாளர் : இ. தமிழமுது

பதிப்பு : 2009

தாள் : 16 கி வெள்ளைத்தாள்

அளவு : 1/8 தெம்மி

எழுத்து : 11 புள்ளி

பக்கம் : 24 + 336 = 360

நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)

விலை : உருபா. 225/-

படிகள் : 1000

நூலாக்கம் : பாவாணர் கணினி

தி.நகர், சென்னை - 17.

அட்டை ஓவியம்: ஓவியர் மருது

அட்டை வடிவமைப்பு: வ. மலர்

அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா

ஆப்செட் பிரிண்டர்சு

இராயப்பேட்டை, சென்னை - 14.

பதிப்புரை

ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை

தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து

வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்

தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே

முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்

107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

நன்றி

பதிப்பாளர்

பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!

பொற்புதையல் - மணிக்குவியல்

“ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்

மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்

உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்

அள்ளக் குறையாத ஆறு”

என்று பாவேந்தரும்,

“பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே

பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு

நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே

நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்

கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்

காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்

தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே

தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”

என்று புகழ்ந்ததோடு,

“அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்

அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே

புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”

எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.

பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து

வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்

பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய

வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.

பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்

களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.

கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.

“இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்

பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,

கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த

பெரும்புலமைக் கல்வி யாளர்!

விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,

வடமொழிநூல், மேற்பால் நூல்கள்

நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய

நற்றமிழ் தழைக்க வந்தார்!”

என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.

கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.

ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.

ஒளவை நடராசன்

நுழைவாயில்

செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்

களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.

எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.

சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.

பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.

சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச்செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.

தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.

ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.

ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை

நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.

ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.

ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.

அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.

ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.

ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.

“தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.

ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப் பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.

ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

**rமுனைவர் இரா.குமரவேலன்

தண்டமிழாசான் உரைவேந்தர்

உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.

ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.

நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு

தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.

எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.

“ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்

அமைபவன் நூலுரை ஆசிரியன்”

எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.

உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.

தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.

எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.

“இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,

“ வாதம் வெல்லும் வகையாதது வென்னில்

ஓதி வெல்ல லுறுவார்களை என்கை

கோதுகொண்ட வடிவின் தடியாலே

மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’

என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.

சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.

நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

“ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்

அறிவளித்தான்; சான்றோ னாகி

ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்

அவ்வப் போ தயர்ந்த காலை

ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;

இனியாரை யுறுவேம்; அந்தோ

தேயாத புகழான்தன் செயல் நினைந்து

உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”

எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.

இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெரு முயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.

உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.

“ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்

கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்

பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை

வாயார வாழ்த்தாத வாய்”

எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!

வாழிய தமிழ் நலம்!

முனைவர் வேனிலா ஸ்டாலின்

உரைவேந்தர் தமிழ்த்தொகை

தொகுதி - 1

ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

தொகுதி - 2

சிவஞானபோத மூலமும்சிற்றுரை

தொகுதி - 3

சிலப்பதிகாரம் சுருக்கம்

மணிமேகலைச் சுருக்கம்

தொகுதி - 4

சீவக சிந்தாமணி - சுருக்கம்

தொகுதி - 5

சூளாமணி சுருக்கம்

தொகுதி - 6

பெருங்கதைச் சுருக்கம்

தொகுதி - 7

சிலப்பதிகார ஆராய்ச்சி

மணிமேகலை ஆராய்ச்சி

சீவகசிந்தாமணி ஆராய்ச்சி

தொகுதி - 8

யசோதர காவியம்

தொகுதி - 9

தமிழ் நாவலர் சரிதை

தொகுதி - 10

சைவ இலக்கிய வரலாறு

தொகுதி - 11

மாவை யமக அந்தாதி

தொகுதி - 12

பரணர்

தெய்வப்புலவர்

The study of thiruvalluvar

தொகுதி - 13

சேரமன்னர் வரலாறு

தொகுதி - 14

நற்றிணை -1

தொகுதி - 15

நற்றிணை -2

தொகுதி - 16

நற்றிணை -3

தொகுதி - 17

நற்றிணை -4

தொகுதி - 18

ஐங்குறுநூறு -1

தொகுதி - 19

ஐங்குறுநூறு -2

தொகுதி - 20

பதிற்றுப்பத்து

தொகுதி - 21

புறநானூறு -1

தொகுதி - 22

புறநானூறு -2

தொகுதி - 23

திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள்

தொகுதி - 24

செந்தமிழ் வளம் - 1

தொகுதி - 25

செந்தமிழ் வளம் - 2

தொகுதி - 26

வரலாற்று வாயில்

தொகுதி - 27

சிவநெறிச் சிந்தனை -1

தொகுதி - 28

சிவநெறிச் சிந்தனை -2

கிடைக்கப்பெறாத நூல்கள்

1.  திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை

2.  தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு

3.  புதுநெறித் தமிழ் இலக்கணம்

4.  மருள்நீக்கியார் (நாடகம்)

5.  மத்தவிலாசம் (மொழியாக்கம்)

ஆராய்ச்சி முன்னுரை

பொது

சீவக சிந்தாமணி யென்பது சமண முனிவர்கள் தமிழில் செய்துள்ள காவியங்களுள் தலையாயது. தமிழில் வழங்கும் காவியங்களுள் பெருங்காவியம், சிறுகாவியம் என இருவகை யுண்டு. இவை வகைக்கு ஐந்து காவியங்களாகக் கூறப்படும். பெருங்காவியம் ஐந்தனுள், வளையாபதி, குண்டலகேசி என்ற இரண்டொழிய, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலையென்ற மூன்றும் அச்சாகி வெளிவந்திருக்கின்றன. சிறுகாவியம் ஐந்தனுள் நாககுமார காவியம், யசோதர காவியம் என்ற இரண்டொழிய, ஏனை, சூளாமணி, நீலகேசி, உதயணன் பெருங்கதை என்ற மூன்றும் அச்சாகி வெளிவந்துள்ளன. யசோதர காவியம் நெடுநாட்களுக்கு முன்பு அச்சாகி வெளிவந்ததுண்டு. இப்போது கிடைப்பது அரிது. நாக குமார காவியம் கிடைக்கவேயில்லை.

தமிழ்மொழிப் பயிற்சிக்கண் இருந்த ஆர்வக்குறைவாலும் தமிழ் படிப்பவர் தொகை குன்றியிருந்ததுடன் தமிழ்நூல் ஆராய்ச்சி மக்கள் மனக் கண்ணிற்கு உயர்வாகத் தோன்றாமையாலும் தமிழ் நூல்கள் பல வெளிவரத் தடையுற்றன. வெளிவந்தவை மறுபதிப்பு எய்த மாட்டாது மடியலாயின.

இக்காலத்தே தமிழ் நூலாராய்ச்சி சிறிது உயர்வு பெற்று வருகிறது. தமிழ் கற்போரும் பெருகுகின்றனர். மக்கட்கும் தமிழிடத்தும் தமிழ் நூல்களிடத்தும் பற்று உண்டாகி வருகிறது. திங்கள் வெளி யீடுகளும், கிழமை வெளியீடுகளும், நாள் வெளியீடுகளும் பல்கி யிருப்பதொன்றே, யாம் கூறிய கருத்தை வலியுறுத்துவதாம்.

இப்போது, இனிய தமிழ் நூல்கள் பல எளிய விலையில் அழகுற அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. பதினைந்தாண்டுகட்கு முன் இருந்த தமிழ் நூல்களின் தொகையினும் இப்போது அத்தொகை பன்மடங்கு பெருகி இருக்கிறது. படிப்போர் திரளும் மிகுந்திருக் கிறது. இந்நிலையில், உண்மையாகவே தமிழ்த்தொண்டு புரியும் நன்மக்களும், கழகங்களும் மேற்கொண்டு புரியத்தக்க பணி யொன்றே உளது. அஃதாவது, உயரிய நூல்களை யாவரும் பெறத் தக்க முறையில் வெளியிடுவதும், அவற்றின் அரிய கருத்துக்களை எளிய வகையில் சுருக்கியும் வடித்தும் உரைப்படுத்தும் மொழி பெயர்த்தும் மக்கள் தமிழ்வேட்கை மிகக் கொள்ளுமாறு செய்வது மாம். இத்துறையில் பல கழகங்கள் வேலை செய்கின்றன. அவற்றுள் இச்சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அவ்வெல்லாவற்றிற்கும் முற்பட்டிருக்கிறது என்பது ஒருதலை. இக் கழகம் இப்போது சீவக சிந்தாமணியைச் சுருங்கிய வடிவில் தமிழுலகிற்கு வழங்குகிறது.

நூலாசிரியர்

சீவக சிந்தாமணியை இயற்றிய ஆசிரியர், திருத்தக்க தேவர் என்னும் சமணமுனிவராவர். நரி விருத்தம் என நிலவும் சிறுநூலும் இவர் இயற்றியதே என்பர். சீவக சிந்தாமணி பதின்மூன்று இலம் பகங்களாக வகுக்கப்பெற்று *மூவாயிரத்து நூற்று நாற்பத்தைந்து செய்யுட்களைக் கொண்டுள்ளது. சீவகன் என்னும் அரசகுமரன் வரலாறு கூறும் வாயிலாகச் சமண் சமயக் கருத்துக்களையும் உடன் உரைக்கும் திறம் உடையது.

இந்நூலாசிரியரான திருத்தக்க தேவர் பிறந்த ஊர், குலம், காலம் முதலியன வெளிப்படையாக ஒன்றும் தெரியவில்லை, சைனர் மட்டில் கேள்வி வழியாகப் பெற்ற ஒரு குறிப்பையுரைக் கின்றனர்.

திருத்தக்கதேவர் சோழர் குலத்திற் பிறந்தவர். இளமையி லேயே தென்மொழி, வடமொழியென்ற இரு மொழியிலும் நிரம்பிய புலமை பெற்றவர். அப்போதே, துறவு பூண்டு சமண் சமயத்துக்குரிய நூல் பலவும் கற்றுச் சீரிய சமண முனிவராய் விளங்கினவர். இவர் காலத்தே மதுரையிலிருந்த சங்கப் புலவருடன் இவர் நட்புற்றுப் பழைய தமிழ் நூல்களை இனிதாராய்ந்தனர். அச்சங்கப் புலவர், சமண் சமயத்துப் புலவர் பலர்க்கும் துறவினை வியந்து பாடத் தெரியுமேயன்றி, இன்பச் சுவை கனியப் பாடல் இயற்ற இயலாதுபோலும் என்றனர். அதுகேட்ட இவர் சீவகசிந்தா மணியை யெழுதி அவர் கருத்து மாறச் செய்தனர்.

இக் கேள்வி வரலாற்றை நோக்கின் இவர் சோழநாட்டவர் என்றும், சோழர் குலத்தவர் என்றும், பாண்டி நாட்டில் தம் புலமை நிரம்பப்பெற்று, இவ்வினிய தமிழ்க் காவியத்தை யியற்றினர் என்றும் ஓராற்றால் உணரலாம். இவர் காலத்திருந்த மதுரைத் தமிழ்ச் சங்கம், சிலப்பதிகாரம், இறையனார் அகப்பொருள் என்ற இவற்றுட் கூறப்படும் கடைச்சங்கம் அன்று என்பது, இந்நூற்கு உரைகண்ட நச்சினார்க்கினியரது உரைக்குறிப்பால் தெரிகின்றது. அவர் இந்நூலை, “பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலியனவாம்” என்று குறிக்கின்றார். இனி, இத் திருத்தக்கதேவரது காலத்தை ஆராய்ந்து காண முயன்ற ஆராய்ச்சியாளர், “இவருடைய காலம் கி.பி. 900 அல்லது அதற்குப் பிந்தியதாக இருக்கலாம்”* என்று கூறுகின்றனர்.

நூல் வரலாறு

தமிழ்நாட்டில் சமண் சமயத்தவருள், இச்சிந்தாமணியே யன்றிச் சந்திரசூடாமணி, கத்திய சிந்தாமணி, சீவந்தரநாடகம், சீவந்தர சம்பு என்பன வடமொழியிலும், மகாபுராணம், ஸ்ரீபுராணம் என்பன மணிப்பிரவாள நடையிலும் உள்ளன என்பர். இவற்றுள் தேவரியற்றிய சிந்தாமணிக்குக் காலத்தால் முற்பட்டன இவை, பிற்பட்டன இவை என்பது நன்கு காணப்படவில்லை. சைனருட் சிலர் கத்திய சிந்தாமணி இதற்கு முதல் நூல் என்கின்றனர். மற்று, இதனைத் தேவரும் எடுத்தோதவேயில்லை. “சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன்”, இதனைத் “தெருண்டார்” ஏற்றுக் கொண்டனர் என்றே கூறலாம். சீவகன் வரலாறு தேவர் காலத்தே சமணருலகத்தில் பயில வழங்கிய தென்பதுமட்டில் இனிது தெரிகின்றது.

சீவகன் பிறப்பு

கோடாத செங்கோல் குளிர்வெண்குடைக்

கோதை வெள்வேல்

ஓடாத தானை உருமுக்குரல்

ஓடை யானை,

வாடாத வென்றிமிகு சச்சந்தன்

என்ப மன்னன்

வீடாத கற்பின் அவன்தேவி

விசயை யென்பாள்.

இதன்கட் கூறிய சச்சந்தனுக்கும் விசயைக்கும் பிறந்த மகன் சீவகன். இவன் பிறந்த அன்றே சச்சந்தன் இறந்தான். இவனும் தன்னைப் பெற்ற தாயை விட்டுப் பிரிந்து கந்துக்கடன் என்பவனால் வளர்க்கப்பட்டான். அச்சணந்தி என்ற பெரியோன்பால் எல்லாக் கலைகளும் கற்றான். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர்தனித் தோன்றலாய்ச் சீவகன் விளக்கமுற்றான். விசயை தெய்வமொன்றின் துணையால் தண்டக வனத்துத் தவப்பள்ளியில் தன் மகன் வாழ்க என நோன்பு நோற்கலுற்றாள்.

வளர்ப்பு

சீவகன் கலைபலவும் கற்றபின், ஆசிரியனால் தன் பிறப்பு வரலாறு உணர்ந்தான். ஆசிரியன் பணித்ததனால், ஏற்ற காலம் வருமளவும், தன் பிறப்பு உண்மையினை வெளிப்படாவாறு மறைத்துக் கொண்டான். தந்தையாய் வளர்த்த கந்துக்கடன்பாலும், அவன் மனைவி சுநந்தைபாலும் மாறா அன்பு பூண்டொழுகினான். இவனுக்குரிய அரசுரிமையைத் தனக்கே யாக்கிக்கொண்ட கட்டியங்காரனே ஆட்சி செலுத்தி வந்தான். அந்த நகரின்கண்ணே சீவகனும் வளர்ந்து சிறப்புற்றான்.

கோவிந்தை திருமணம்

சீவகன் சிறப்புற்று வரும் நாளில், இராசமாபுரத்து ஆயர் நிரைகளைக் கவர்ந்து சென்ற வேடர் கூட்டத்தை அரசன் தானை வீரர் வெல்லமாட்டாது முதுகிட்டோட, சீவகன் தன் தோழருடன் சென்று, “ஆளற்ற மின்றி” வேடருடன் பொருது துரத்திவிட்டு, ஆனிரையை மீட்டுத் தந்து, ஆயர் தலைவனான நந்தகோன் என்பவன் மகள் கோவிந்தை யென்பவளைத் தன் தோழருள் ஒருவனான பதுமுகனுக்குத் திருமணம் செய்வித்தான்.

காந்தருவதத்தை திருமணம்

அவ்விராசமாபுரத்தே வாழ்ந்த சீதத்தன் என்னும் வணிகன், தன்பால் கலுழவேகன் என்னும் விஞ்சையர் வேந்தன் அடைக் கலப்படுத்திய அவன் மகள் காந்தருவதத்தையை இசைப்போர் செய்து வெற்றி பெறுவோனுக்குத் திருமணம் செய்து தருவதாகத் தெரிவிப்ப, அப்போரில் அரசர் பலரும் தோற்றது கண்டு, சீவகன் சென்று அவளைத் தோல்வியுறுவித்து மணம் செய்து கொண்டான்.

குணமாலை திருமணம்

அந் நகரமாந்தர் வேனிற்காலத் தொருநாள் பொழில் விளை யாடிப் புனலாட்டயர ஒரு பூம்பொழிலுக்குச் சென்றிருந்த பொழுது, குணமாலை சுரமஞ்சரி என்ற இரண்டு செல்வ மங்கையர், சுண்ணப் பொடி காரணமாகத் தம்முள் நட்பு மாறுபட்டுப் பிரிந்தேகினர். அவருள் சுண்ணத்தால் மேம்பட்ட குணமாலை நீராடிவிட்டு வரும்போது, அசனிவேகம் என்னும் அரச யானை, மதம் மிக்க அவளைக் கொல்ல ஓடிவரவே, அது கண்ட சீவகன், அவ் யானையை அடர்த்து, அவளை உயிருய்வித்தான், பின்பு அவன் அவள் மீதும் அவள் அவன்மீதும் கருத்தைப் போக்கிக் காதல் மிகுந்து மணம் செய்துகொண்டனர். இதற்குள், அரசன் யானை அடர்க்கப்பட்டது தெரிந்து, சீவகனைப் பற்றிக் கொணருமாறு வீரரைப் பணிப்ப, அவர் போந்து, அவனைக் கொண்டேகுங்கால், பெரும்புயலும் மழையும் வந்து மோதிப் பேதுறுப்ப, அதனிடையே வந்த சுதஞ்சணன் என்னும் நன்றி மறவாத் தேவன், சீவகனைத் தான் வாழும் மலை முடிக்குக் கொண்டு போயினன்.

பதுமை திருமணம்

பின்னர், சீவகன், அத் தேவன்பால் சிலநாள் தங்கிப் பின் வேறு நாடுகளைக் காண வேட்கைகொண்டு, விடைபெற்றுப் பல மலைகளையும், காடிடையிட்ட நாடுகளையும் கடந்து, பல்லவ தேயத்துச் சந்திராபமென்னும் தலைநகரையடைந்தான். அந் நகரவேந்தன் மகன் உலோகபாலன் என்பானுடன் நட்புற்றான். அவன் தங்கை பதுமை என்பவளைப் பாம்பு தீண்ட, அவள் அறிவுசோர்ந்தாள். பலரும் பலவகையால் முயன்றும் ஒருபயனும் எய்தவில்லை. முடிவில் சீவகன் நஞ்சினைப் போக்கி அவட்கு நலம் செய்து, அவளை மணந்து கொண்டான். சின்னாள் கழிந்ததும், சீவகன் ஒருவருக்கும் சொல்லாமல், வேற்றுருக்கொண்டு, அந்நாட்டை விட்டுப் போய்விட்டான்.

கேமசரி திருமணம்

போனவன், தக்க நாட்டையடைந்தான். அந்த நாட்டுக் கேமமாபுரத்தில் வாழ்ந்த சுபத்திரன் என்னும் வணிகன் நாடோறும் செய்துவந்த விருந்துக்குச் சென்றான். அவனுக்குக் கேமசரி என்று ஒரு மகளிருந்தாள். அவள் பிறந்தநாளைக் குறித்த காலக்கணக்கர், இவட்குக் கணவனாவான் எவனோ அவனன்றிப் பிற ஆடவர் எவரும் இவள் கண்ணிற்கு ஆடவராகத் தோன்றமாட்டார். என்று உரைத்திருந்தனர். சீவகனைக் கண்டதும் அவள் நாணித் தலை கவிழ்ந்து நிற்ப, இவனும் அவள்பால் வேட்கை கொண்டான். இருவர்க்கும் திருமணம் இனிது நடந்தது. அங்கே சிலநாளிருந்த சீவகன் அவளிடத்தும் பிறர் எவரிடத்தும் கூறாமல், பிரிந்தேகி, எதிர்ப்பட்ட ஒருவனுக்குத் தன் அணிகலனை ஈந்து அறம் சில பகர்ந்து ஏகினன்.

கனகமாலை திருமணம்

பின்பு சீவகன் மத்திமதேயத்து ஏமமாபுரத்தையடைந்து அந் நகரத்து வேந்தன் மக்கட்குப் படைக்கலம் பயில்விக்கும் ஆசிரிய னாய் அமர்ந்து, வில், வாள் முதலிய படைப்பயிற்சி நல்கிவந்ததோடு, அவ்வப்பொழுது அறநெறியும் அறிவுறுத்தி வந்தான். அவ்வரசன் மகள் கனகமாலை என்பாளுக்கும், சீவகனுக்கும், கருத்தொருமை எய்த அரசன் தன் மக்கட்கு இவன் வழங்கியுள்ள பயிற்சிச் சிறப்புக் கண்டு வியந்து, தன் மகளை மணம் செய்து கொடுத்தான். இங்கேயும் சீவகன் சின்னாளே தங்கினான். இதற்கிடையே இவன் உயிரோடி ருப்பதை இராசமாபுரத்தேயிருந்த காந்தருவதத்தை தன் விஞ்சை யாலுணர்ந்து, சீவகன் தம்பியான நந்தட்டன் என்பவனை விஞ்சை யால் ஏமமாபுரத்தை அடையுமாறு செய்தனள். நந்தட்டன் சீவகனுடன் இருந்து வந்தான். பதுமுகன் முதலிய (சீவகன்) தோழர்கள் இவனைத் தேடிவருங்கால், தண்டக வனத்துத் தவப்பள்ளியில் விசயையைக் கண்டு அளவளாவிக் கொண்டு இவ் வேமமாபுரத்தை யடைந்து, நிரை கவர்வார்போல் போர் தொடங்கிச் சீவகனையடைந்து தாம் விசயையைக் கண்ட செய்தியைக் கூறினர். சீவகன் அவர் அனை வரையும் அரசனுக்கும், அவன் மக்கட்கும், கனகமாலைக்கும் அறிவித்து அவர்பால் விடைபெற்றுவந்து விசயையடி வீழ்ந்து வணங்கினன்.

விமலை திருமணம்

மகனைக் கண்டு மனம் மிக மகிழ்ந்த விசயை, சீவகனை உடனே விரைந்து சென்று, மாமனான கோவிந்தராசனைக் கண்டு, அவன் துணைபெற்றுக், கட்டியங்காரனை வெல்ல வேண்டுமெனப் பணித்தனள். அப் பணியை மேற்கொண்ட சீவகன், இராசமா புரத்தை யடைந்து, தோழரை ஓரிடத்தே இருக்கவைத்துத் தான் வேற்றுருக் கொண்டு நகர்க்குள் நுழைந்தான். நுழைந்தவன், அந் நகரத்துச் சாகரதத்தன் என்னும் வணிகன் கடையை அண்மினான். அப்போது, அவ்வணிகன் மகள் விமலை யென்பவள், பந்தாடிக் கொண்டிருந்தவள், சீவகனைக் கண்டு வேட்கை கொண்டாள். இவனும் அவள்பால் வேட்கை மிகுந்தான். இதற்குள் அவன் கடையில் விலையாகாமலிருந்த சரக்கு விலையாகிவிட்டது. மகட்குக் கணவன் வருங்கால் விலையாகாப் பண்டம் விலையாகி விடும் என்று சாகரதத்தன் மகளது குறிப்புக் குறித்தோர் கூறியிருந் தமையின், அவன் சீவகனுக்கு அவளை மணம் செய்துவைத்தான். சீவகன் அவளுடன் இரண்டு திங்கள் இருந்தான்.

சுரமஞ்சரி திருமணம்

பின்பு அவன் தன் தோழரை யடைந்தான். அவர்கள், குண மாலையுடன் பிணங்கி நீங்கிய சுரமஞ்சரி, ஆடவர் முகத்தையும் பாரேன், அவர் பெயரையும் செவிகொடுத்துக் கேளேன் என்று நோன்பு பூண்டிருப்பதைத் தெரிவித்து, அவளை மணந்து வருமாறு தூண்டினர். சீவகன் முதியவொரு வேதியன் வடிவுகொண்டு சுரமஞ்சரியின் கன்னிகாமாடம் அடைந்து, கவர் பொருள்பட இனிய சொல்லாடி, பாட்டிசைத்து, அவளைக் காமன் கோட்டத்துக்குச் செல்வித்துத் தானும் உடனே சென்று தோழர் சூழ்ச்சியால் மணந்து கொண்டான்.

இலக்கணை திருமணம்

பின்பு, சீவகன் குதிரை வாணிகன் வடிவுபூண்டு, விதைய நாட்டினையடைந்து, தன் மாமன் கோவிந்தராசனைக் கண்டு கட்டியங்காரனை வெல்லற்கு வேண்டியதைச் சூழலுற்றான். கோவிந்தராசனும் கட்டியங்காரன் தனக்கு வஞ்சனையாக விடுத் திருந்த ஓலையைக் காட்டினான். பின்னர், திரிபன்றி யொன்றை நிறுவி, “இதனை அம்பெய்து வீழ்த்துபவர்க்கு என் மகள் இலக்கணை உரியள்” என்று கோவிந்தராசன் அரசர்கட்கும் கட்டியங்காரனுக்கும் ஓலை விடுத்தனன். அரசரும் கட்டியங்காரனும் அவன் மக்கள் நூற்றுவரும் வந்து கூடி அத் திரிபன்றியை வீழ்த்தமாட்டாராய் மெலிவுற்றனர். சீவகன் அதனை வீழ்த்தி வெற்றிகொண்டான். அவன் இன்னான் என்பதைக் கோவிந்தராசன் வேந்தர் பலருக்கும் அறிவித்தான். வானிடத்தே, ஓர் இயக்கன் தோன்றி, “சீவகன் என்னும் அரிமா கட்டியங்காரன் என்னும் யானையின் உயிரைச் செருக்கும்” என்று கூறினான். கட்டியங்காரன் சினங்கொண்டு போருக்கு எழுந்தான். அவன் படையெழுந்தது. மக்கள் எழுந்தனர். போர் மிகக் கடுமையாக நடந்தது போரில் கட்டியங்காரன் பட்டமிழந் தான். அவன் தானை பட்டது. மக்களும் பட்டனர். விசயை கேட்டு மிக்க மகழ்ச்சி எய்தினாள்.

பின்பு சீவகன் ஏமாங்கத நாட்டுக்கு அரசனாய் மணிமுடி புனைந்துகொண்டு, தம்பியர்க்கும் தோழர்க்கும் செய்தற்குரிய சிறப்புக்களைச் செய்தான். கோவிந்தராசன் மகள் இலக்கணை யாரையும் அரசற்குரிய முறைப்படியே திருமணம் புரிந்தான்.

சீவகன் துறவு

சீவகன் நாடாட்சி புரிந்து வருகையில் விசயமாதேவி துறவு பூண்டாள். சீவகன் மனைவியான காந்தருவதத்தை முதல் இலக்கணை ஈறாக உள்ள மனைவியர் பலரும் முறையே நன்மக்களை பயந்தனர். அவர்களும் செவ்வியராக வளர்ந்து சிறப்பெய்தினர். சீவகனுக்கும் முதுமை யெய்தலுற்றது. ஒருநாள் சோலைபுக்கு இனிதிருந்த சீவகன் ஆங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்றைக் கண்டு, துறவு பூணத் தொடங்கினான். தன் மூத்தமகன் சச்சந்தனை அரசனாக்கி, ஏனைத் தம்பியரை அவனுக்கு உரியராக்கினன். பின்பு முனிவர்களைக் கண்டு நல்லறம் கேட்டு, நற்றுறவு மேற்கொண்டு, நோன்பு பல ஆற்றி, கடையிலா இன்ப நிலையாகிய சிவகதி பெற்றான். அவன் மனைவியரும் அவன் பிரிவு ஆற்றாது வருந்திப் பின்பு துறவு பூண்டனர்.

நூலின் நோக்கம்

இனி, இந்நூலாசிரியர் இந்நூலைச் செய்தற்குக்கொண்ட நோக்கம் இஃது எனக் காண்டல் வேண்டும். திருத்தக்க தேவர் இந்நூலைத் தொடங்குங் காலத்தே, தம் ஆசிரியர் அருள் பெற்றுப் பாடி, முடிவில் அவர்கட்குக் காட்ட, அவர் இந்நூலின் சொற் பொருள் நலங் கண்டு வியந்து, “சிந்தாமணி யோதியுணர்ந்தார் கேட்டார் இந்நீரராய் உயர்வர்” “பூந்தாமரையாள் காப்பாளாம்” என்று பாராட்டினர். தேவரும், “ஐயனே, நின்பாதம் ஏந்தி, சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன்; தெருண்டவர் நன்றென்று மேற்கொண்டனர்” என்று கூறினர். நூன்முடிவில் இவ்வாறு தேவருக்கும் அவர்தம் ஆசிரியருக்கும் இன்பவுரையாட்டு நிகழக் காண்கின்றோம். நூலின் தொடக்கத்தும் நூல் செய்யும் தம் கருத்தையும் தேவர் இனிது விளங்கக் கூறுகின்றாரில்லை.

கேள்வி வழியாக வழங்கும் வரலாறு, “சமண முனிவர் காமச் சுவை முற்றும் கனியக் கவிபாடும் வன்மையுடையார்” என்பதனை நிலைநாட்டுவது கருத்தாகக் கொண்டு, தேவர் இந்நூலினை எழுதினார் என்று கூறுகின்றது. இதுவே தேவர்க்குக் கருத்தென்ப தனை அவர் தாமே எவ்விடத்தும் இனிது விளங்கக் கூறினாரில்லை. நூற் புணர்ப்பும் அக்கருத்தை வற்புறுத்தவில்லை.

நூற்புணர்ப்பு ஆராய்சசி

சச்சந்தன் விசயைபாலும், கட்டியங்காரன் அநங்கமாலை என்னும் பரத்தைபாலும், சீவகன் காந்தருவதத்தை முதலிய மகளிர் பாலும் தேசிகப் பாவை முதலிய பரத்தையர்பாலும் காமவின்பம் துய்த்த செய்தியே இச் சிந்தாமணிக்கண் காணப்படும் காமப் பகுதிகளாகும். காமக் காதலுற்ற இருவர், ஒருவரையொருவர் காண்டலும் காதல் கொளலும், இடையீடின்றிக் கூடலும் நிகழ்த்து வாரல், அவரது இன்பம் கேட்போருக்கும் கற்றறிவோருக்கும் சீரிய இன்பம் தருவதாகாது. காதலிருவர் தம்மிற்கூடி இன்பம் சிறத்தலும், இடையீடுபட்டுத் துயருறுதலும், பின்னர் அது நீங்கலும், இருவரும் கூடி இன்புறுதலும், காமச்சுவை கனிய யாக்கும் நூல் யாப்புக்குச் சிறந்தனவென்பது யாவரும் கண்ட நூற்புணர்ப்பாகும். இப்பெற்றித்

தாய நூற்புணர்ப்பு இந்நூற்கண் யாண்டும் இல்லை. காம வயப்

பட்ட காதலர் ஒருவரும் தம் காதலொழுக்கம் இடையீடு பட்டதாக இந்நூல் கூறுகின்றதில்லை. காதற்காம நெறியாகிய களவொழுக்கத்தே பல முட்டுப்பாடு நிகழாதவழி, இன்பம் சிறவாது என்ற மெய்ம்மை நெறியைத் தமிழ் இலக்கணம் இற்செறிப்பு, சேட்படை முதலிய

வற்றை இடையீடாகத் தொடுத்துக் கூறுகிறது. “பல்முட்டின்றால் தோழிநம்களவே” எனப் பரணர் முதலாயினாரும் விளக்கியுள்ளனர். மேனாட்டு ஜான்ஸன் முதலிய பேராசிரியர்களும் இக்கருத்தே இன்பச்சுவை மிகவுரைக்கும் நூற்புணர்ப்புக்கு இன்றியமையாததென இயம்பியிருக்கின்றனர். *தமிழ் நூல் துறையும் பிற வடமொழித் துறையும் நன்கு உணர்ந்த தேவர்க்கு, இந்நெறி தெரியாததன்று. ஆகவே, திருத்தக்க தேவர், “சமணமுனிவர்க்குக் காமச்சுவை கனியப்

பாடும் திறனுண்டு” என்பதை நிலைநாட்டப் பாடினார். என்னும் செய்தி சிறிதும் பொருந்துவதன்று. அஃது உண்மையாயின், திருத்தக்கதேவர் காமச்சுவை கனியத் தொடர் நிலைச் செய்யுள் யாக்கும் துறையில் படுதோல்வி எய்தினார் என்பதே துணிவாம். சீவகன், சச்சந்தன், பதுமுகன், கட்டியங்காரன் முதலாயினர் காமவின்பம் துய்த்தநெறி கூறுமிடத்தும் தேவரது புலமைத்திறம் கற்பார் அறிவிற்கு அறிவின்பம் தரும் நெறியில் அமையவில்லை. இதனாலும் தேவர் காமச்சுவை கனியப் பாட வேண்டுமென இந்நூலைப் பாடினர் என்பது பொருந்தாமை இனிது துணியப்படும். ஈண்டு அப்பொருந்தாமையினை எடுத்தோதின் பெருகும்.

மணநூல் என்னும் கொள்கை

இனி, இந்நூலை “மணநூல்” என்று அறிஞர் வழங்குவர். சீவகன் காந்தருவதத்தை முதலிய மகளிரைத் திருமணம் செய்து கொண்ட செய்தி பெரிதும் கூறப்படுவதேயன்றி, அவன் கல்விபயின்று சிறந்த செய்தி கூறுமிடத்தும், சிவநெறி பெற்ற செய்தி கூறுமிடத்தும், அவற்றைத் திருமணமாகவே கூறியுள்ளனர். சீவகன் கல்வியறிவு பெற்ற செய்தியை, “குழைமுக ஞானமென்னும் குமரியைப் புணர்க் கலுற்றார்” என்றும், அவன் ஏமாங்கத நாட்டின் அரசேற்று முடிபுனைந்து கொண்ட செய்தியை “பொருவில் பூமகட் புணர்ந்தனன்” என்றும் அவன் சிவநெறிக்குரிய பரிநிருவாண மெய்திய செய்தியை

“கேவல மடந்தை யென்னும்

கேழ்கிளர் நெடிய வாட்கண்

பூவலர் முல்லைக் கண்ணிப்

பொன்னொரு பாக மாகக்

காவலன் தானொர் கூறாக்

கண்ணிமை யாது புல்லி

மூவுல குச்சி யின்பக்

கடலினுள் மூழ்கி னானே.”

என்றும் கூறியிருத்தலால், இதனை மணநூல் என அறிஞர் வழங்கும் பெயர் மிகப் பொருத்தமாகவேயுளது.

இல்லிருந்து செய்தற்குரிய இல்லறத்தையும், அதனைத் துறந்து செய்தற்குரிய துறவறத்தையும் காமக்கூட்டமாக வைத்துப் புணர்ந்த திறத்தால் காமச்சுவை கனியப் பாடினார் திருத்தக்க தேவர் என்பது கருத்தாயின், காமக் கூட்டத்தின் சிறப்பை அவன் நன்கறிந்து பாடினாரில்லை என்பதே துணிபாம். இடையீடில் வழிக் காமம் சிறவாதென்பது, “அலரிற் றோன்றும் காமத்திற் சிறப்பே” என்ற நூற்பாவினை நுணுகி நோக்கியவழிப் புலனாகும்.

சமயநுண் பொருள் கூறல்

இனி, தேவரது கருத்துத்தான் யாதோ வெனின் கூறுதும், தேவர் காலத்தே வேத வழக்கொடு பட்ட வைதிக சமயம் தமிழ் நாட்டில் நன்கு வேரூன்றி வேற்றுச் சமயங்கள் இடம் பெறா வகையில் தகைந்துகொண்டிருந்தது. மக்கள் மனத்தே அவ் வைதிக நெறி பற்றிய வரலாறுகளும் கொள்கைகளுமே பதிந்திருந்தன. அகப்பாட்டாராய்ச்சியும், அதன் வழிப்பெறு மின்பமும் அறிஞர் அறிவைப் பணிகொண்டொழுகின. அவரைத் தம் வயமாக்கி அவருள்ளத்தே, தாமுணர்த்தக் கருதிய சமண்சமயக் கருத்துக்களை யுணர்த்துதற்கு வேறு வாயில் காணாது, இந்நூற் பு

இனி, தேவர், இத் தொடர்நிலைச்செய்யுள் யாப்பின்கண் இடையிடையே பல்வகை நிலையாமைகளையும் வினைத்தொடர் பின் வீறுபாட்டினையும் தெளித்துச்சென்று சீவகன் முத்தி பெற்ற செய்தி கூறும் இலம்பகத்தே அவற்றை நன்கு வற்புறுத்திச் சமண் சமயக் கருத்துக்களை இனிய பாக்களால் அரிய சொற்பொழிவு செய்து முடிக்கின்றார்.

மணிமேகலையில் ஆதிரை என்பாளது கணவன் சாதுவன் என்போன் நாகர்வாழ் மலைப்பக்கம் சார்ந்து அவர் பான்மை யனாகியபோது, நாகர் தலைவனுக்கும் சாதுவனுக்கும் கள்ளும் ஊனும் உண்டலைப் பற்றியதொரு சொல்லாட்டு நிகழ்கின்றது. அவ்வாறே சீவகன் சுதஞ்சணன்பால் விடைபெற்று பல்லவ நாட்டை நோக்கி வருங்கால் காட்டிடையே வேட்டுவர் தலைவன் ஒருவனைக் கண்டு, அவனோடு கள்ளுண்டல், ஊனுண்டல் என்பவற்றைப் பேசி அவனைத் தெருட்டுகின்றான்.

கிளைக் கதைத் தொடர்பு

இவ்வாறு, இந்நூற்கண் கிளைக் கதைகள் சில வருகின்றன. நாய் தேவனானது, வேட்டுவர் தலைவனைக் கண்டது, அநங்கமா வீணை அலமந்து தெருண்டது, தேசிகப் பாவை அனங்கமாலைபால் தோழியாய் அமைவது முதலியனவாகும். இவற்றைச் சீவகன் வரலாற்றுடன் இணைக்கும் திறம் ஆசிரியரது புலமை நலத்தை மிகுவிக்கின்றது. நாய் தேவனான கதை சுதஞ்சணனால் சீவகன் கட்டியங்காரன் கையகப்படாது நீங்கி ஏனை மகளிரை மணத்தற்கு வாயிலமைக்கின்றது. அசனிவேகம் மதம்பட்டது, குணமாலைக்கும் சீவகற்கும் காதலுண்டாக்கியதோடு, கட்டியங்காரற்குச் சீவகன் பால் செற்றம் நிகழ்விக்கிறது. வேட்டுவர் தலைவனைச் சீவகன் காண்பதும், அனங்கமாவீணை அலமந்து தெருள்வதும் சீவகன் வரலாற்றிற்கு நயம்பயக்கும் இயைபுடையவல்ல. சீவகன் பதுமை யாரை மணந்த கதைக்கு, ஆசிரியர் சீவகனைக் கூத்தரங்கத்தே கொண்டு நிறுத்தி, தேசிகப்பாவையின் சிந்தையை நெகிழ்வித்து, அதுவாயிலாக, சீவகற்கும் உலோகபாலற்கும் தொடர்பு உண்டு பண்ணுகின்றார். இன்றேல், சீவகன் பதுமையை மணத்தற்கு ஏது அமையாது! போலும். அநங்கமாலை சீவகன்பால் காதலுற்றாளை வலிதிற் பற்றிக் கூடினான் கட்டியங்காரன் என்றவர், தேசிகப்பாவை சீவகன்பாற் கொண்ட காதற்பெருக்கை, பதுமையை மணந்திருந்த ஞான்று காவிற்கூடிக் கரைகண்டு, சீவகன் மணிமுடி சூடி அரசிருந்த நாளில் அநங்கமாலையின் தோழியாய்ப் போந்து அவனைக் கூடித் தணித்துக்கொள்ளச் செய்கின்றார். பல்வேறு கதை நிகழ்ச்சிகளால் எடுத்த வரலாற்றைச் சிக்குப்படுத்தி, படிப்படியாக அச்சிக்கலை யறுத்து முடிவெய்துவிக்கும் நூற்புணர்ப்பு முறை இக் காவிய காலங்களிலாதல், பின் வந்த புராண காலங்களிலாதல் நம் நாட்டில் புலவர் மனத்தே இடம் பெறவில்லை. சங்க காலத்திருந்த இடை யீட்டுச் சிக்கல் நெறி எதனால் இவற்றுள் இல்லாதாயிற்று என்பது விளங்கவில்லை. இடையூறு படுதலும் அது நீங்கித் தெளிவுறுதலும் அறிவுக்கு இன்பந்தருவன வென்பது காவிய ஆராய்ச்சியாளர் கருத்து.

ஆடவர் பெண்டிர்களின் குணஞ்செயல் காண்டல்

இக் காவியத்தின்கண் வரும் சிறப்புடைய ஆடவர் பெண்டிர் களின் பண்பினைச் சிறிது காண்பாம்.

சச்சந்தன்

சச்சந்தன் என்பான் சீவகனுக்குத் தந்தை, இவன்,

“தருமன் தண்ணளி யால்;தனது ஈகையால்

வருணன்; கூற்றுஉயிர் மாற்றலில் வாமனே

அருமை யால்;அழ கில்கணை யைந்துடைத்

திரும கன்; திரு மாநில மன்னனே.”

அருமையால் இவன் வாமனேயாயினும், பெண்ணின்பத்துள் மூழ்கி, அரசியற்றும் தன் உறுதொழிலைத் தாங்கமாட்டாது. அமைச்சன்பால் வைத்து உயிர் துறக்கின்றான். அமைச்சனான கட்டியங்காரனை அரசனாக்குதற்கெண்ணி, அவன்பால் தன் கருத்தைச் சொல்லுங்காலும், பெண்ணின்பத்தையே பெரிதும் நினையும் நினைவால், தன் மனைவி விசயை,

“வசையிலாள் வரத்தின் வந்தாள்;

வான்சுவை யமிர்தம் அன்னாள்;

விசையையைப் பிரித லாற்றேன்”

என்றே விதந்தோதி, “நீ வேந்தனாகி வையம் காத்தல் வேண்டும்” என்கின்றான். இவனை ஏனை யமைச்சர் தெருட்டிய காலத்தில், காமச் செருக்கால் கருத்திழந்து,

“எனக்குயி ரென்னப் பட்டான்

என்னலால் பிறரை யில்லான்

முனைத்திறம் முருக்கி முன்னே

மொய்யமர் பலவும் வென்றான்

தனக்குயான் செய்வ செய்தேன்

தான்செய்வ செய்க ஒன்றும்

மனக்குஇன்னா மொழிய வேண்டா

வாழியர் ஒழிக.”

என்று கூறுகின்றான். பின்பு விசயை கனவு கண்டு கூறியது கேட்டு, “எந்திர வூர்தி யியற்றுமின்” என ஏற்பாடு செய்த இவனது அறிவு. இப்போது மழுங்கியதற்கு, அவனது காமக் களிப்பே காரண மாகின்றது. “காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா வாதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்” (சீவக. 1632) எனப் பிறிதொரு காலத்தே சீவகன் தெளிந்து தனக்குள் உரைத்துக்கொள்ளும் இலக்கணத்துக்கு இவன் இலக்கியமாகின்றான். ஆயினும் இதற்கு ஏதுக் கூறப் போந்த திருத்தக்கதேவர்,

“இனமா மென்றுரைப் பினும்ஏ தமெணான்,

முனமா கியபான் மைமுளைத் தெழலால்;

புனமா மலர்வேய் நறும்பூங் குழலாள்

மனமா நெறியோ டியகா வலனே”

என்கின்றார்.

இவ்வாறு முதற்கண் மழுங்கிய சச்சந்தன் அறிவு, விசயை கண்டு கூறிய கனவால் எந்திரவூர்தி இயற்றச் செய்ததே யன்றிக் கட்டியங்காரனை விலக்கி அரசுரிமை அடைவியா தொழிகின்றது. கட்டியங்காரன் வளைத்துக்கொண்ட போதுதான் சச்சந்தன் தெளிவடைகின்றான். செல்வம், யாக்கை இளமை முதலியவற்றின் நிலையாமை அவற்குப் புலனாகின்றது. “நங்கைநீ நடக்கல் வேண்டும்; நன்பொருட்டு இரங்கல் வேண்டா உரிமைமுன் போக்கி யல்லால் ஒளியுடை மன்னர் போகார்” கருமம் ஈது; என்றெல்லாம் கழறிக் கூறுகின்றான்.

சீவகன்

இனி. சச்சந்தனது காமக்கள்ளாட்டின் பயனாகத் தோன்றிய சீவகன் வரலாறு முழுதும் அக் காமக் கூத்தே பெரிதும் நடை பெறுகிறது. சீவகனை வளர்த்த கந்துக்கடன் தன் மனைவி சுநந்தை யுடன் கூடிச் சீவகற்குக் கல்வி கற்பித்த செய்தியையும், காமக் குறிப்பே நிலவத் திருத்தக்கதேவர் “மழலையாழ் மருட்டுந் தீஞ்சொல் மதலையை, மயிலஞ் சாயல் குழைமுக ஞான மென்னும் குமரியைப் புணர்க்க லுற்றார்,” என்றே கூறுகின்றார். இவ்வாறு கல்வி பெற்ற சீவகன் காந்தருவதத்தையை வென்று மணந்து, “அலமரல் இலாத இன்பக் கடலகத் தழுந்தி,” னவன், குணமாலையை அசனிவேகத் தினின்றும் காத்து உயிர் வழங்கித் தன் மனையேகி அவளது உருவமெழுதிக் காமக் கனலால் வெதும்புகின்றான். ஆண்டுப் போதரும் தத்தை அவ்வுருவு கண்டு புலந்தபோது,

“பாவைநீ புலவியில் நீடல் பாவியேற்கு

ஆவியொன்று இரண்டுடம் பல்லது”

எனப் பொய்யும் கவர் பொருளும் எய்தப் பேசுகின்றான். பின்பு, பதுமையை நோக்கி, அவளுற்ற விடநோய் நீக்கி நலஞ் செய்தவன், அவள் பார்வையால் காமக் கொதிப்பெய்தி,

போது லாஞ்சிலை யோபொரு வேற்கணோ

மாது லாமொழி யோமட நோக்கமோ

யாதும் நானறி யேன்அணங் கன்னவள்

காதல லால்கடை கின்றது காமமே.

என்று தன்னுட் கதறுகின்றான். இவ்வண்ணமே சென்ற விடமெங்கும் பல மகளிரை மணந்து கூடியவன், சுரமஞ்சரி என்பவளையும் தன் தோழரால் “காம திலகன்” என்ற சிறப்புப் பெய ரெய்துவதற்காக, வேற்று வடிவம் கொண்டு சென்று காதற்காமம் சிறந்து கடிமணம் செய்துகொள்ளுகின்றான், முடிவில் சீவகன், பரி நிருவாணமென்னும் கேவல ஞானத்தை யெய்தியதையும் ஆசிரியர் கேவல மடந்தை யென்னும் மங்கையைக் “கண்ணிமை யாது புல்லி, மூவுலகுச்சி யின்பக் கடலினுள் மூழ்கினானே,” என்கின்றார்.

இவ்வாறு காமமே கன்றிய உருவினனாக வரும் சீவகன் பால் அறம் திறம்பிய காமம் சிறிதும் இல்லையென்பது அநங்கமா வீணையென்பாள் வரலாற்றாலும், கோவிந்தையாரைப் பதுமுகனுக்கு மணம் செய்த வரலாற்றாலும் விளங்குகின்றது. மேலும், அந்தணர்க்காக்கிய சோற்றை நாய் கதுவிற்றென அவர்கள் அதனைப் புடைத்துக் கொன்றதும், அதற்குரிய களிமகன் அந்தணரை அலைத்ததும் சீவகன் கண்டு, அந்தணரைக் காத்தும், களிமகனை விலக்கியும், நாய்க்கு அருமறை வழங்கியும் தன் உயர் குணத்தை வெளிப்படுத்து

கின்றான். கேமசரியை மணந்து அவளிடம் சொல்லாது பிரிந்து சென்ற சீவகன் வழிப்போக்கன் ஒருவற்கு அறம் கூறித், தன் ஆடையணிகலன்களைக் கொடுத்து நீங்குகின்றான். இவற்றா லெல்லாம் இவனது அறவுணர்ச்சி விளங்குமேனும், சித்திரகூடத்துத் தவப்பள்ளியில் மகளிரொடு வாழ்ந்த துறவிகட்கும், வழிப் போக்கனுக்கும், பவதத்தனுக்கும் மகளிரின் மனப்புன்மை கூறித் தெருட்டிய இச் சீவகன் தான் மட்டில் பலமகளிரைக் கண்டு காமத்தால் நயந்து மணந்து கூடிச் சிலர்பால் சொல்லியும், சிலர்பால் சொல்லாமலும் பிரிந்தேகுகின்றான். இவன் மனப் புன்மையை ஆசிரியர் எடுத்தோதாதொழிவது என்னோ? நூலுடைத் தலைமகன் பால் குற்றம் காண்டல் கூடாது என்பது பற்றிப் போலும்.

இனி, சீவகனது போர்வன்மை மிக இனிதாகக் கூறப்படுகிறது. குணமாலையை யழித்தற்குச் சென்ற அசனி வேகம் என்கிற யானையைச் சீவகன் அடர்த்த திறம்,

மல்லல் நீர்மணி வண்ணனைப் பண்டொர்நாள்

கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதுஅச்

செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம்போல்

பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே.

எனக் கண்ணன் மேல் வந்த குவலையாபீடமென்னும் களிற்றை அவன் வென்ற செய்தியால் உவமித்துக் காட்டப் படுகிறது. சீவகனது வில்வன்மையை வியந்த விசயன் என்பான், “மராமர மேழு மெய்த வாங்குவில் தடக்கை வல்வில், இராமனை வல்லனென்பது இசையலாற் கண்டதில்லை; உராமனம் இவன்கண் இன்றி உவக்குமா செய்வல்,” எனத் தனக்குள் கூறிக் கொள்வதனாலும் நிரை கவர்ந்த வேட்டுவரைச் சீவகன், “ஆளற்றமின்றிப் புறங்காண்பதனாலும், கட்டியங்காரனை, மையார் விசும்பின் மதி வீழ்வதுபோல,” வீழ்த்தலாலும் அவனது வில்வன்மை விளக்கப்படுகிறது. இவை தவிர, ஒரு காவியத் தலைவற்குரிய தலைமைப் பண்புகள் பலவும் பல்லாற்றானும் உரைக்கப்படுகின்றன.

சீவகன் விசயமாதேவி துறவு பூண்டு தண்டாரணியத்துத் தவப்பள்ளியி லிருத்தலைத் தோழரா லுணர்ந்து, ஆங்குச் சென்று கண்டு வணங்கி நின்றபோது, விசயைக்குத் தேற்றரவு கூறுவான்.

“கெடலருங் குரைய கொற்றம்

கெடப்பிறந் ததுவு மன்றி

நடலையுள் அடிகள் வைக

நட்புடை யவர்கள் நைய

இடைமகன் கொன்ற இன்னா

மரத்தினேன் தந்த துன்பக்

கடலகத் தழுந்த வேண்டா

களைகஇக் கவலை யென்றான்”

இதனைக் கேட்ட விசயை, ஒருவாறு தேறி,

“யானலன் ஒளவை யாவாள்

சுநந்தையே ஐயற் கென்றும்

கோனலன் தந்தை கந்துக்

கடன்எனக் குணத்தின் மிக்க

பானிலத் துறையுந் தீந்தேன்

அனையவாய் அமிர்த மூற

மானலங் கொண்ட நோக்கி

மகன்மனம் மகிழச் சொன்னாள்”

என்று கூறியதைத் தெளிவுறக் கேட்டு உளம்கொண்ட சீவகன், பின்பு, விசயையுடன் சுநந்தையும் துறவு பூண்டு அவளை நீங்கிய போது, அவன் சுநந்தையை நோக்கி,

“அடிகளோ துறக்க ஒன்றும்

உற்றவர் யாது மல்லர்;

சுடுதுயர் என்கட் செய்தாய்,

சுநந்தைநீ ஒளவை யல்லை

கொடியைநீ கொடிய செய்தாய்

கொடியைஓ கொடியை என்னா

இடருற்றோர் சிங்கம் தாய்முன்

இருந்தழு கின்றது”

போலக் கூறினான்.

சீவகன் தன் மனைவியர் ஊடல் தீர்த்தற்கும், பிறவற்றிற்குமாக நிகழ்த்தும் சொற்கள் மிக்க இன்பம் பயப்பனவாகும். அவற்றுள், சீவகன் கேமசரியைப் பிரியக்கருதிய அன்று, அவன் கூறும் சொற் களும், விமலையைக் கூடியிருந்த ஞான்று வேட்கை மேலிட்டு ரைப்பதும், சுரமஞ்சரியுடன் சொல்லாட்டயர்தலும், பிறவும் படிக்குந்தோறும் மிக்க இன்பந் தருவன வாகும்.

இன்பத் துறையின்கண்ணே யன்றி, வேறு துறையின் கண்ணும், அஃதாவது அறவுரை வழங்கல், துயருற்றாரைத் தெளிவித்தல், உயர்ந்தோரை வழிபடல், தோழரையளித்தல் முதலிய துறையின் கண்ணும் சீவகனது தெளிந்த அறிவு நலம் இன்பம் பயக்கின்றது.

நந்தட்டன்

சீவகனுடன் கந்துக்கடன் மனையில், அக் கந்துக்கடற்கு மகனாய்ச் சீவகன் வந்தடைந்த பின் பிறந்த நந்தட்டனென்பான் ஒள்ளிய தம்பியர்க்குரிய உயர்குணனும், கடமையுணர்வும் மிகக் கொண்டு விளங்குகின்றான்.

குணமாலையை மணந்த பின் சீவகன் காணாமற்போனது கண்டு, அவன் தம்பியரும் தோழரும் கலக்கமுற்றிருக்கையில், நந்தட்டன் காந்தருவதத்தை மனையையடைந்து, சீவகனிருப்பை அறியக் கருதியபோது, அவள், கவலையின்றி இருப்பது கண்டு வியப்பும் மருட்கையும் கொண்டு, மூன்றுவிற்கிடை நீளத்தே நின்று, உயரிய உணர்வும் ஒழுக்கமும் தோன்ற,

“பொறிகுலாய்க் கிடந்த மார்பின்

புண்ணியன் பொன்றி னானேல்

வெறிகுலாய்க் கிடந்த மாலை

வெள்வளை முத்தம் நீக்கி

நெறியினால் நோற்றல் ஒன்றோ

நீள்எரி புகுதல் ஒன்றோ

அரியலென் கொழுநன் மாய்ந்தால்

அணிசுமந் திருப்பது?”

என்று வினவுகின்றான். இவன் தம்பிமாரான நபுல விபுலர்களும் போரற நெறியினும் பிறவற்றினும் நிகரின்றி விளங்குகின்றனர்.

சீவகன் தோழர்

சீவகன் தோழன்மாருள் பதுமுகன், புத்திசேனன் என்ற இருவரும் சீவகனைக் காண்டற்குச் செய்யும் சூழ்ச்சிகளும், போர் செய்யுந் திறங்களும் படிக்கின்றவர் உள்ளத்தே பெருமிதத்தைப் பயக்கின்றன.

கட்டியங்காரன்

இனி, கட்டியங்காரன் சச்சந்தனுக்கு உயிர்த்துணைவனாய் இருந்தவனென்பது “எனக்குயிர் என்னப்பட்டான் என்னலால் பிறரையில்லான்,” என்று அவனால் போற்றப்படுதலால் தெரிகிறது. இவனது “வெளிறிலாக் கேள்வி” சச்சந்தனைக் கொல்லற்குச் செய்யும் சூழ்ச்சியில் அத்துணைச் சீரியதாகத் தோன்றவில்லை.

“மன்ன வன்பகை யாயதோர் மாதெய்வம்

என்னை வந்திடங் கொண்டு அஃது இராப்பகல்

துன்னி நின்று செகுத்திடு நீயெனும்;

என்னை யான்செய்வ? கூறுமின்.”

என்று கட்டியங்காரன் சச்சந்தனைக் கோறற்கு ஏதுக்காட்டுகின்றான். இவ்வாறே, சீவகன் குணமாலையை மணந்திருக்குஞான்று, அவனைப் பற்றிக் கொணருமாறு மதனனைப் பணித்த காலையில், யானைப் பாகன், அசனிவேகம் சுளித்து வருந்தி நிற்றற்கு ஏது, “இற்றென உரைத்தல் தேற்றேன், இறைவநின் அருளினாங்கொல், செற்றமிக் குடைமையால் கொல், சீவக னின்ன நாளால், மற்றிதற்கு உடற்சி செய்ய மதமிது செறித்தது,” என்றதுவே கொண்டு,

“மாண்டதில் செய்கை சூழ்ந்த

வாணிகன் மகனை வல்லே

ஆண்திறங் களைவன் ஓடிப்

பற்றுபு தம்மின்,”

என்று கூறுகின்றான், சீவகன் தத்தையை மணந்த காலத்தும், “வாளினான் மலைந்து கொள்ளின் வாழ்கநும் கலையுமாதோ,” என்று ஏனை யரசரைக் கட்டியங்காரன் தூண்டிவிடுகின்றான். இவ்வண்ணம் சீவகன் பிறப்பு வரலாறு அறியாமுன்பே இவன் சீவகன்பால் பகைமை கோடற்குக் காரணம் வேண்டுமன்றோ? அதற்கு நூலாசிரியர் அநங்கமாலையை அவன் வலிதிற் பற்றிக் கற்பழித்த காலத்தே, அவள் “சீவக சாமியோ” என வாய்வெருவினாள். அதுகொண்டே அவற்குச் சீவகன்பால் பகைமை பிறப்பதாயிற் றென்றும், சீவகன் வேடரைப் புறங்கண்டு அவர் கவர்ந்த ஆனிரையை மீட்டது கேட்டு அழுக்காறு மிக்கு, அரசினை இழந்தனன், போலக் கருதி “என்னை வௌவும் வாயில்தான் என்னும் சூழ்ச்சியே,” கொண்டிருந்தானென்றும் கூறுகின்றார்.

கட்டியங்காரன் சச்சந்தனைக் கொன்றபின் விசயை இருப்பை நாடா தொழிகின்றான். அவளைப் பற்றி ஒரு சிறிதும் எண்ணுகின்றா னில்லை. அவள் உடன்பிறந்தவனும் விதைய நாட்டரசனுமான கோவிந்தராசனுக்கு ஒரு திருமுகம் விடுக்கின்றனன். அதன்கண், அசனிவேகம் மதம்பட்டுப் பாகர் நூற்றுவரைக் கொன்றோடிய காலை, சச்சந்தன் அதனையடக்கிக் கந்திற் பிணிக்கும்போது அவ்யானையாற் குத்துண்டு இறந்தான் என்பவன், “இனி, நீயே இந்நாட்டிற்கு இறைவனாதல் வேண்டும்; யான் உயிரும் ஈவேன்; நீ வரின் பழியும் நீங்கும்; வருக” என்று எழுதுவதனால் இவனது மனப்புன்மையும் தெளிவின்மையும் இனிது விளங்கும்.

இவன் சீவகனோடு பொரநின்றபோது, அவனது சினமிகுதியும் தன் மக்கள் மாண்டதுங் கண்டு கட்டியங்காரன், அறிவு தெளிவுடை யவன்போல்

“நல்வினை யுடைய நீரார் நஞ்சுணின் அமுத மாகும்

இல்லையேல் அமுதும் நஞ்சாம், இன்னதால் வினையினாக்கம்”

என்றும் “அகப்படு பொறியினாளா ஆக்குவர் யாவர்?” மிகப்படு பொறியினாரை வெறியராச் செய்யலாமோ? என்றும் “இருவினை சென்று தேய்ந்தால் பரிவுற்றுக் கெடாமல் செல்வம் பற்றி யார் வைப்பார்” என்றும் கூறுவது வியப்புத் தருகின்றது. இதனை நன்கறிந்த சீவகன், எயிறு தோன்ற எள்ளி நகைத்து, “நீ அஞ்சினாய்” என்கின்றான். இச்சொல்லாட்டால், கட்டியங்காரன், “மொய்யமர் பலவும் வென்றான்” எனச் சச்சந்தன் பாராட்டிய பாராட்டையும் பொய்ப் படுத்திவிடுகின்றான்.

மதனன்

இனி, மதனன் என்னும் வீரன் கட்டியங்காரற்கு மைத்துனன், சச்சந்தனைக் கொல்லக் கருதுவது முறையன்றெனத் தருமதத்தன் கூறக்கேட்டதும், இவன் சினம் மிகுந்து, “தோளினால் வலியராகித் தொக்கவர் தலைகள் பாற, வாளினால் பேச லல்லால் வாயினால் பேசல் தேற்றேன்,” என இயைபின்றிப் பிதற்றுகின்றான். சீவகனைப் பற்றிக் கொணரப்போந்த மதனன், அவனைக் குணமாலை மனையி லிருந்து கொணர்கையில், தேவனால் காணாமற் போனதால் கலங்கி, வெறிது செல்லின் அரசன் வெகுள்வன் என வேறொருவனைக் கொன்று பொய் சொல்வது அவனது வழுக்குடைய வீரத்திற்குச் சான்று பகருகின்றது.

ஏனையோர்

இனி, சீவகனை வளர்த்த தந்தையான கந்துக்கடன், தாய் மாமனான கோவிந்தராசன், சீவகற்கு மகட்கொடை நேர்ந்தவர் முதலியோர் நலங்களும் இவ்வண்ணமே பலதிறத்தவாய்ப் பகுத்து நோக்குதற்கண் இன்பந்தருகின்றன.

விசயை

இனி, பெண்மகளிருள் விசயை முதலாயினாருடைய குண நலங்களைச் சிறிதே காண்பாம். விசயை இளமையிலேயே நல்ல அறிவு நூல்களை ஆராய்ந்துள்ளாள். தான் கண்ட கனவைத் தன் கணவருக்கு உரைக்கப் போங்கால், அவள் வாமனை வணங்கிச் செல்வது அவளது சமய வொழுக்கத்தைப் புலப்படுத்துகின்றது. கட்டியங்காரன் கொலை கருதி வந்தது கேட்டு, அவள் நடுங்கக் கண்ட சச்சந்தன், “வாமனால் வடித்த நுண்Qல் உண்டு வைத்தனைய நீ,” என்றும் “ஒண்டொடி நீ வருந்துவது தகுவதன்று” என்றும் கூறக்கேட்டுத் தெளிந்தமைகின்றாள்.

சீவகன் சுடுகாட்டில் பிறந்தபோது அவள் புலம்பும் புலம்பல் கல்லும் உருக்கும் கனிவுடையவை. அவள் தவப்பள்ளியில் இருந்த போது சீவகன் மறைந்ததும், தோழர்தேடி வந்ததும் கேட்டுப் புலம்பும் புலம்பலை ஒருங்கு வைத்து நோக்கின், ஆங்கே அவளது உள்ளம் இடச்சார்பால் துறவுப் பான்மை கதுவி நின்றமையின் அத்துணைக் கனிவு இல்லை. சீவகனைக் கண்டபோது, நினக்குத் தாய் சுநந்தையே; தந்தை கந்துக்கடனே என்பவை, இராமாயணத்தே, சுமித்திரை இலக்குவனை இராமனுடன் காட்டிற்கு விடுத்தபோது, “மாகாதல் இராகவன் இம்மன்னவன், போகா உயிர்த்தாயர் பூங்கழற் சீதை,” என்ற சொற்களை நினைவுறுத்துகின்றன. பின்பு அவள் சீவகன் பிறந்த சுடுகாட்டை அறக்கோட்டமாக்கியதும், சீவகனுக்கும் அவன் மனைவியர்க்கும் கூறுவனவும் மிக்க உருக்க முடையன வாகும். தத்தை முதலாயினாரை நோக்கி, “சிறுவர்ப் பயந்து இறைவற் றெளிவீர்” என்பதும் பிறவும் இறும்பூது பயக்கின்றன.

சீவகன் மனைவியர்

சீவகன் மனைவியருள் குணமாலையின் திறமே சிறிது விரியக் கூறப் பெறுகின்றது. முதல் மனைவியாகிய காந்தருவதத்தை விஞ்சை வன்மையும், எதுவரினும் ஏற்றுத் தாங்கிச் செய்வன செய்தற்கண் ஊக்கம் குன்றாமையும் உருவாகக் கொண்டு விளங்குகின்றாள். கனகமாலைபால் மகிழ்ந்திருந்த சீவகற்கு அவள் விடுக்கும் திருமுகம் உண்மைக் காதன்மை ஒருபுறம் புலப்படுக்கினும், அவளது மான உணர்ச்சியை மறைத்திலது.

“பட்டபழி வெள்ளிமலை மேல்பரத்த லஞ்சித்

தொட்டுவிடுத் தேன்அவனைத் தூதுபிற சொல்லிப்

பட்டபழி காத்துப்புக ழேபரப்பி னல்லால்

விட்டலர்ந்த கோதையவ ரால்விளைவ துண்டோ?”

என்ற இச்சொற்கள் அவளது உள்ளப்பான்மையை ஒளியாது தெரிவிக்கின்றன. குணமாலையின் பிரிவாற்றாமையை இத்தத்தையே எடுத்துரைப்பதை நோக்கின் குணமாலையின் குணச்சிறப்பும், தந்தை ஏனை மகளிர்பால் கொண்டிருந்த அன்பும் நாம் நன்குணர விளக்குகின்றன. இவர்கள் ஒவ்வொருவருடைய குணநலங்களைத் தனித்தனியே எடுத்து நோக்க விரும்பின், இந் நூற்கண் நுழைந்து கண்டு இன்புறுதல் தக்கதேயன்றி வேறில்லை.

இறுதியாக, இந்நூற்கண், திருத்தக்கதேவர், தம் சமயநூற் பொருளை வற்புறுத்துவதே பெரு நோக்கமாகக் கொண்டுள்ளார் எனினும், பெண்கட்கு ஆடவர் ஏற்புழித்தக்க துணைபுரிய வேண்டு மென்பதைப் பலவிடங்களில் வற்புறுத்துகின்றார். சீவகன்பால் கட்டியங்காரன் செற்றங்கொண்டதை யறிந்து அவனுள்ளத்தை மாற்ற நினைந்த கந்துக்கடன், “நாண்மைய்க்கொண் டீட்டப் பட்டார் நடுக்குறு நவையை நீக்கல், ஆண் மக்கள் கடன்” என்று கூறுகின்றான். குணமாலை அசனி வேகத்தின் முற்பட்டதைக் கண்ட சீவகன், “பெண்ணுயி ரவலம் நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாதல்,” என்று எண்ணுகின்றான்.

தேவரும் பெண்மையும்

இவ்வண்ணம் தேவர் கருதினாரெனினும், பெண் மனம் புன்மையுடையதென்றும், பெண்ணால் ஆண் மகன் காக்கப் படுதல் உயர்வன்றென்றும் குறிப்பிடுகின்றார். இவ்விரு கருத்தையும், பெண்ணின்பமே பெரிதும் விரும்பி நின்ற சீவகன் வாயிலே வைத்து வழங்குகின்றார். பவதத்தனைத் தெருட்டியபோது சீவகன், “பெண் ணெனப் படுவகேண்மோ பீடில பிறப்பு நோக்கா, உண்ணிறை வுடைய வல்ல ஓராயிரம் மனத்தவாகும்,” என்றும் பிறிதோரிடத்தில் “பெண்இடர் விடுப்ப வாழ்விற் சாதலே பெரிது நன்று,” என்றும் கூறுகின்றான்.

இவ்வண்ணமே ஏனையோர் குணஞ்செய்கைகளையும் எடுத்து வகுத்தோதின், இம் முன்னுரை மிக விரியும் என அஞ்சி அறிஞர் அவற்றை இந் நூற்கண் நுழைந்து கண்டின்புறுமாறு விடுத்து, இந்நூலை யாத்தற்குத் தேவர் துணைக்கொண்ட நூல்களுட் சிலவற்றைக் கூறி இரண்டோரெடுத்துக்காட்டுக்களை வழங்குவேன். திருக்குறளும், எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் இந்நூலின் ஆக்கத்திற்குச் சொல்லும் சொற்றொடரும் கருத்தும் உதவியிருக் கின்றன. பல கருத்துக்களை விளக்குவதற்குச் சங்க இலக்கியத்துக் கருத்துக்கள் சில உவமமாகவும் துணை செய்துள்ளன.

நூலின் ஆக்கத்திற்குத் துணை செய்த தமிழ் நூல்கள்

‘பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், காண்பது போல் இனத்துக்கு ஓரொன்று காட்டுதும்’

“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகுஅதனில் கூரியது இல்;”

என்பது திருக்குறள். இதனைத் தேவர் ‘செய்க பொருள் யாரும் செறுவாரைச் செறுகிற்கும்,’ எஃது பிறிதில்லை இருந்தே உயிரும் உண்ணும், ஐயமிலை இன்பம் அறனோடு அவையும் ஆக்கும், பொய்யில் பொருளே பொருள் மற்றல்ல பிறபொருளே என அமைத்துக் கொள்ளுகின்றனர்.

தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து

என்ற திருக்குறள், ‘தொழுததங் கையி லுள்ளுந் துறுமுடி யாகத்துஞ் சோர, அழுதகண்ணீரினுள்ள மணிகலத்தகத்து மாய்ந்து, பழுது கண்ணரிந்து கொல்லும் படையுட னொடுங்கும் பற்றா, தொழி கயார் கண்ணுந் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற் றாரே’ என இழைத்துக்கொள்ளப்படுகின்றது. இவ்வண்ணம் பல உள,

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

மாநிறை வில்லதும் பன்னாட் காகும்

நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே

வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்.

என வரும் புறப்பாட்டு, வாய்ப்படுங் கேடு மின்றாம் வரிசை யினரிந்து நாளுங், காய்த்தநெற் கவளந் தீற்றிற் களிறுதான் கழனி மேயின், வாய்ப்பட வின்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளி, னீத்தநீர் ஞால மெல்லா நிதிநின்று சுரக்கு மன்றோ, என்றும்,

கால்பார் தோத்து ஞாலத் தியக்குங்,

காவற் சாகா டுகைப்போன் மாணின்

ஊறின் றாகி யாறினிது படுமே,

உய்த்த றேற்றா னாயின் வைகலும்,

பகைக்கூழ் அள்ளற் பட்டு

மிகப்பல் தீநோய் தலைத்தலத் தருமே.

என்னும் புறப்பாட்டு, ’ஆர்வலஞ் சூழ்ந்த வாழியலைமணித்தேரை வல்லா, னேர்நிலத் தூரு மாயி னீடுபல் காலஞ்செல்லு, மூர்நில மறிதல் தேற்றா தூருமேன் முறிந்து வீழுந்தார்நில மார்ப வேந்தர் தன்மையு மன்ன தாமே, என்றும் உதவியிருக்கின்றன.

பழமொழிகள், வழக்காறுகள்

இனி, பழம்பகை நட்பாதல் இல்லை, குன்றின் மேலிட்ட விளக்கு என்பன முதலிய பழமொழிகள், ‘பாட்டினைக் கேட்ட லோடும் பழம்பகை நட்பு மாமே’ எனவும், ‘தோன்றினான் குன்றத் தூக்கிச் சுடர்ப்பழி விளக்கிட்டன்றே’ எனவும் இந்நூலின்கண் கையாளப்படுகின்றன. கார்த்திகை விளக்கீடு, வேனில்விழா முதலிய வழக்காறுகள் பல ஆங்காங்கு விளக்கப்படுகின்றன. மகளிர் பந்தாடுதல், நீராடுதல், முல்லைக்கொடி முதலியன வைத்து வளர்த்து அவை தலைப்பூ மலர்ந்தவிடத்துச் சிறப்புச் செய்தல், சிறுவர்க்கு எழுத்தறிவித்தல் முதலிய செய்கைகள் அவ்வவ்விடங் களில் நன்கு சிறப்பிக்கப்பெறுகின்றன.

கதைக்குரியோர் நிலைக்கேற்பச் சொல் வழக்கம் செய்தல்

மக்களின் வாழ்க்கை நிலைக்கேற்ப அவர் வழங்கும் சொற் களும் அமைந்திருக்கும். அவர் சொற்களில் வரும் உவமமும் அவர் பயிலும் பொருள்களே யாகும். இந்நெறி முற்றும் பாவலர் பாக்களில் சிறந்து நிற்கும். திருத்தக்கதேவர் நூலும் இவ்வுண்மைக்குச் சான்று காட்டுகின்றது. சீவகன் வேட்டுவர் தலைவனைக் கண்டு நீ வாழும் மலை யாது என்று வினவ, அவற்கு அத் தலைவன், “இதா தோன்று கின்ற சோலை சூழ்மலை” என்கின்றான், நந்தகோன் தன் மகள் கோவிந்தையின் நலம் கூறலுற்று.

“வெண்ணெய்போன்று ஊறினியள், மேம்பால்போல் தீஞ்சொல்லள்,

உண்ண உருக்கிய ஆன்நெய்போல் மேனியள்

வண்ண வனமுலை மாதர் மடநோக்கி

கண்ணும் கருவிளம் போதிரண்டே கண்டாய்.”

என்று சொல்கின்றான். இவன் சொல்லில், வெண்ணெயும் பாலும், நெய்யும், கருவிளம்பூவுமே உவமங்களாக வருதல் காண்க. இவன் சொல்லை ஏற்றுச் சீவகன் விடையிறுத்தற்குள்ளே விரைந்து இவனே,

“குலம் நினையல் நம்பி கொழுங்கயற்கண் வள்ளி

நலன்நுகர்ந்தா னன்றே நறுந்தார் முருகன்

நிலமகட்குக் கேள்வனும் நீள்நிரைநப் பின்னை

இலவலர்வாய் இன்னமிர்தம் எய்தினா னன்றே.”

என்று பேசுகின்றான். இவ்வாறெல்லாம் பேசுவதும் பிறவும் அவர்தம் வாழ்க்கைப் பண்பெனக் காட்டும் புலமை நலத்துக்கு எடுத்துக் காட்டாம். இவ்வாறு வருவன பல இந்நூற்கண் மிளிர்கின்றன.

இன்னோரன்ன நலம்பலவும் விளக்கிக் கற்பார்க்குக் கழி பேரின்பம் நல்கும் செந்தமிழ் இன்பக் கருவூலமாக, இச்சிந்தாமணி நந்தா வளங்கொண்டு திகழ்கின்றது. சோழன் அநபாயன் என்பான் இந்நூலின் தமிழ் நலம் பெருக உண்ணும் விருப்பினால் அல்லும் பகலும் இதனையே படித்து வந்தான் என்றும் அவன் கருத்தை மாற்றவே சேக்கிழார் பெரிய புராணத்தைச் செந்தமிழ் நலம் சிறக்கச் செய்தனர் என்றும் நுவலுங் கதை ஒன்று தமிழ்நாட்டில் வழங்கு வதுண்டு. அஃது உண்மையாயின், இதன் பெருமை அளவிட்டுரைப்ப தென்பது அரிதாம். கம்பனது இராமாயணமும் தணிகைப் புராணம் சேதுபுராணம் முதலிய தமிழ்நலங்கெழுமிய தல புராணங்களும் தோன்றி நம்மனோர்க்கு இன்பம் சுரந்து வருதற்கு வழிகாட்டியாகிய ஏற்றம் இச்சிந்தாமணிக்கு உண்டு என்பதை ஈண்டு நாம் நினைவு கூர்தல் வேண்டும்.

முடிப்புரை

இனி இச்சிந்தாமணிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் அழகிய தொரு நல்லுரை எழுதியுள்ளார். அவ்வுரையை வியந்து மகிழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் “சிந்தாமணியும், திருக் கோவையும் எழுதிக்கொளினும் நந்தா உரையை எழுதல் எவ்வாறு நவின்றருளே” என்று பாராட்டியுள்ளார்.

இத்தகைய சிறப்புமிக்க பெருங்காவியமாகிய இச் சீவக சிந்தாமணியின் பெருநலனை மக்களனைவரும் அறிந்து துய்த்து இன்புறுதற்கு வாயிலாக வரும் இதனைத் தமிழுலகமேற்றுப் பயன் கொள்ளுமாக.

“தென்த மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்

அன்பன் சேவடி யடைந்தனம் அல்லல்ஒன் றிலமே.”

சீவக சிந்தாமணி சுருக்கம்

கடவுள் வாழ்த்து

சித்த சரணம்

மூவா முதலா உலகம்ஒரு மூன்றும் ஏத்தத்

தாவாத இன்பம் தலையாயது, தன்னின் எய்தி

ஓவாது நின்றகுணத்து ஒண்நிதிச் செல்வன் என்ப

தேவாதி தேவன்அவன் சேவடி சேர்து மன்றே. 1

அருக சரணம்

செம்பொன் வரைமேல் பசும்பொன்எழுத் திட்ட தேபோல்,

அம்பொன் பிதிர்வின்மறு ஆயிரத் தெட்ட ணிந்து

வெம்பும் சுடரின் சுடரும்திரு மூர்த்தி, விண்ணோர்

அம்பொன் முடிமேல் அடித்தாமரை சென்னி வைப்பாம். 2

தன்ம சரணம், சாது சரணம்

பன்மாண் குணங்கட்கு இடனாய்ப்

பகைநண்பொடு இல்லான்

தொல்மாண் பமைந்தபுனை நல்லறம்

துன்னி நின்ற

சொல்மாண் பமைந்த குழுவின்சரண்

சென்று தொக்க

நன்மாண்பு பெற்றேன், இது நாட்டுதல்

மாண்பு பெற்றேன். 3

அவையடக்கம்

கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்

நற்பால் அழியும் நகைவெண் மதிபோல் நிறைந்த

சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியாற் கழூஉவிப்

பொற்பா இழைத்துக் கொளற்பாலர் புலமை மிக்கார். 4

நாமகள் இலம்பகம்

நாமகள் இலம்பகம் : நாமகள் - கலைமகள், இலம்பகம் நூலின் ஓர் உறுப்பு, சீவகன் நாமகளைக் கூடின இலம்பகம் என்பது பொருள்.

(இதன்கண், சீவகன் தந்தையான சச்சந்தன், விசயையை மணந்து இராசமாபுரத்தேயிருந்து ஏமாங்கத நாட்டை ஆண்டுவந்த தன் ஆட்சியைக் கட்டியங்காரன் என்னும் அமைச்சன்பால் வைத்துப் பின் அவன் சூழ்ச்சியால் இறந்துபட்டதும், அவனால் மயிற் பொறியில் ஏற்றிவிடுக்கப்பட்ட விசயை சுடுகாட்டில் நள்ளிரவில் சீவகனைப் பெற்று, தோழி வடிவிற் போந்த தெய்வம் துணையாகத் தண்டகாரணியத்தவப்பள்ளி யடைந்ததும், சீவகனை இராசமா புரத்துக் கந்துக்கடன் என்பான் எடுத்துச் சென்று வளர்த்ததும், அச்சணந்தி யென்பவன்பால் சீவகன் கலைத்துறை பலவும் கற்றுத் தேர்ந்ததும் பிறவும் கூறப்படுகின்றன.

ஏமாங்கத நாட்டு வளம்

காய்மாண் தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்

பூமாண்ட தீந்தேன் தொடைகீறி, வருக்கை போழ்ந்து.

தேமாங் கனிசிதறி, வாழைப் பழங்கள் சிந்தும்

ஏமாங் கதம்என்று இசையால்திசை போய துண்டே. 5

இந்த நாட்டில், வேண்டுங்காலத்துப் பொய்யாது வேண்டு மளவு தெரிந்து பொழியும் மழைக்கூட்டம், கடல் நீரை முகந்து சென்று மலையுச்சியில் தங்கியது.

மழை பெய்தல்

தேன்நி ரைத்துயர் மொய்வரைச் சென்னியின்

மேல்நி ரைத்து விசும்புற வெள்ளிவெண்

கோல்நி ரைத்தன போல்கொழுந் தாரைகள்,

வான்நி ரைத்து மணந்து சொரிந்தவே. 6

இவ்வாறு பெய்த மழையால், மலைகளில் அருவிகள் பெருகி இழிந்தோடின.

அருவிகள் வீழ்தல்

குழவி வெண்மதிக் கோடுழக் கீண்டுதேன்

முழவின் நின்றதிர் மொய்வரைச் சென்னியின்

இழியும் வெள்ளரு வித்திரள் யாவையும்

குழுவின் மாடத் துகிற்கொடி போன்றவே. 7

மலையடியைச் சேர்ந்த அருவிநீர், பல கால்களாய்ச் சென்று கூடி, சிற்றாறுகளாயும் பேரியாறுகளாகியும் ஏமாங்கத நாட்டில் படர்ந்தது.

யாறு நாட்டிற் பாய்தல்

வீடில் பட்டினம் வௌவிய வேந்தெனக்

காடு கையரிக் கொண்டு கவர்ந்துபோய்

மோடு கொள்புனல் மூரி நெடுங்கடல்

நாடு முற்றிய தோஎன நண்ணிற்றே. 8

இவ்வண்ணம் நண்ணிய பெருநீர் ஏமாங்கத நாட்டிற் பாயும் சரயு நதியிற் கலந்தது,

அந்த நீரைச் சரயு நதி கொண்டு செல்லுதல்

திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமேல்

நுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான்,

சரையெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக்

குரைபுனற் கன்னிகொண்டு இழிந்த தென்பவே. 9

சரயு கொணர்ந்த வெள்ளம் நாட்டில் பாய்வதால், உழவர்கள், நெல்லும் கரும்பும் விளைவிக்கலாயினர்.

உழவர் உழவு செய்ய ஒருப்படுதல்

நெறிமருப் பெருமையின் ஒருத்தல் நீளினம்

செறிமருப் பேற்றினம் சிலம்பப் பண்ணுறீஇப்

பொறிவரி வராலினம் இரியப் புக்குடன்

வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே. 10

நாற்று விடுதல்

சேறமை செறுவினுள் செந்நெல் வான்முளை

வீறோடு விளைகஎனத் தொழுது வித்துவார்

நாறிது பதமெனப் பறித்து நாட்செய்வார்

கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார். 11

களை யெடுத்தல்

கண்ணெனக் குவளையும் கட்ட லோம்பினார்,

வண்ணவாள் முகமென மரையின் உள்புகார்

பண்ணெழுத் தியல்படப் பரப்பி யிட்டனர்

தண்வயல் உழவர்தம் தன்மை யின்னதே. 12

நெல் விளைதல்

சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்

மெல்லவே கருவிருந் தீன்று, மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித், தேர்ந்தநூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. 13

காய்த்த நெல்லை உழவர்கள் அரிந்து மலைபோலப் போரிட்டனர்.

நெற் பெருமை

ஈடுசால் போர்பு அழித்து எருமைப் போத்தினால்

மாடுறத் தெழித்து,வை களைந்து, காலுறீஇச்

சேடுறக் கூப்பிய செந்நெற் குப்பைகள்

கோடுயர் கொழும்பொனின் குன்றம் ஒத்தவே. 14

விளைந்த நெல்லை இது செய்தாராக, விளைந்து முற்றிய கரும்பை ஆலையில் இட்டு ஆட்டிச் சாறு கொண்டனர்.

கரும்படுதல்

கரும்புகண் உடைப்பவர் ஆலை தோறெலாம்

விரும்பிவந் தடைந்தவர் பருகி விஞ்சிய

திருந்துசா றடுவுழிப் பிறந்த தீம்புகை

பரந்துவிண் புகுதலின் பருதி சேந்ததே. 15

பண்படுத்திய நெல்லையும், கரும்பட்ட கட்டியையும் பல்வேறு பண்டிகளில் ஏற்றி மிக்க ஆரவாரத்துடன் ஊர்களுக்குக் கொண்டு போயினர். பல்லாறாகத் துய்த்தற்குரிய வளம் பலவும் மல்கியிருத்தலால், ஊர்கள் மிக்க சிறப்புற்றிருந்தன.

ஊர்ச் சிறப்பு

விலக்கில் சாலை யாவர்க்கும் வெப்பின் முப்ப ழச்சுனைத்

தலைத்தணீர் மலரணிந்து சந்தனம்செய் பந்தரும்,

கொலைத்தலைய வேற்கணார் கூத்து மன்றி, ஐம்பொறி

நிலைத்தலைய துப்பெலாம் நிறைதுளும்பு மூர்களே. 16

அடிசில் வைகல் ஆயிரம், அறப்புறமும் ஆயிரம்

கொடிய னார்செய் கோலமும் வைகல் தோறும் ஆயிரம்,

மடிவில் கம்மி யர்களோடு மங்கலமும் ஆயிரம்,

ஒடிவி லைவெ றாயிரம் ஓம்பு வாரின் ஓம்பவே. 17

இராசமாபுரத்தின் சிறப்பு

நற்ற வம்செய் வார்க்கிடம் தவம்செய் வார்க்கு மஃதிடம்

நற்பொருள்செய் வார்க்கிடம், பொருள்செய் வார்க்கு மஃதிடம்

வெற்ற வின்பம் விழைவிப்பான் விண்ணு வந்து வீழ்ந்தென

மற்ற நாடு வட்ட மாக வைகும் மற்ற நாடரோ. 18

இவ்வினிய நாட்டின் தலைநகரான இராசமாபுரத்தின் சிறப்பு இனிக் கூறப்படுகிறது. இந்த நகரம், புறநகர், அகநகர் என இரு கூறாய் விளங்கும். புறநகர்க்கண் நால்வகைப் படை வீரரும், யானை, குதிரை முதலியனவும் உள்ளன. இது கடந்து செல்லின், அகழும் மதிலும் காணப்படுகின்றன. அகழின்கண் நீர் நிரம்பி முதலை முதலிய நீர் வாழ்வனவும் புள்ளினமும் செறிந்திருக்கும்.

இராசமாபுரத்துக் கிடங்கின் சிறப்பு

கோட்சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள்

ஆட்பெறா திரிதர அஞ்சிப் பாய்வன,

மோட்டிறாப் பனிக்கிடங்கு உழக்க மொய்த்தெழுந்து

ஈட்டறாப் புள்ளினம் இரற்று மென்பவே. 19

நிரைகதிர் நித்திலம் கோத்து வைத்தபோல்

விரைகமழ் கமுகின்மேல் விரிந்த பானையும்,

குரைமதுக் குவளைகள் கிடங்கிற் பூத்தவும்

உரையின்ஓர் ஓசனை உலாவி நாறுமே. 20

இனி, அதன் அருகே நிற்கும் மதில் பலவகைப் பொறிகளைக் கொண்டு விண்தொட உயர்ந்துள்ளது. நூற்றுவரைக் கொல்லி, விற்பொறி, கற்பொறி, அரிநூல் முதலிய பல எந்திரங்கள் வைக்கப்பெற்றுள்ளன.

மதிற் சிறப்பு

வயிரவரை கண்விழிப்ப போன்று மழையுகளும்,

வயிரமணித் தாழ்க்கதவு வாயில் முகமாக,

வயிரமணி ஞாயில்முலை, வான்பொற் கொடிக்கூந்தல்

வயிரக் கிடங்காடை மதிற்கன்னி யதுகவினே. 21

இவ் வகநகர்க்கண் மிகப் பலவாகிய செல்வ வீதிகளில்

உள்ள செல்வர் மனைச் சிறப்பு

நறையும் நானமும் நாறும் நறும்புகை

விறகின் வெள்ளி யடுப்பின் அம் பொற்கலம்

நிறைய ஆக்கிய நெய்பயில் இன்னமுது

உறையு மாந்தர் விருந்தொடும் உண்பவே. 22

அருகன் கோயில் உண்மை

திங்கள் முக்குடை யான்திரு மாநகர்

எங்கும் இங்கும் இடந்தொறும் உண்மையால்

அங்கண் மாநகர்க் காக்கம் அறாததோர்

சங்க நீள்நிதி யால்தழைக் கின்றதே. 23

இராசமாபுரத்தின் பொது வனப்பு

தேன்தலைத் துவலை மாலை, பைந்துகில், செம்பொன் பூத்து,

ஞான்றன வயிர மாலை, நகுகதிர் முத்த மாலை,

கான்றமிர் தேந்தி நின்ற கற்பகச் சோலை, யார்க்கும்

ஈன்றருள் சுரந்த செல்வத்து இராசமா புரமதாமே. 24

இந்நகரின் நடுவே அரசனது கோயிலுளது, அதனைச் சுற்றி அகழும் மதிலும் இருப்ப, மதிலிற் கட்டிய கொடிகள் வானத்தே விளங்குகின்றன.

அரசன் கோயிலின் கொடி வனப்பு

இஞ்சி மாக நெஞ்சுபோழ்ந்து எல்லை காண ஏகலின்,

“மஞ்சு சூழ்ந்து கொண்டணிந்து மாக நீண்ட நாகமும்,

அஞ்சும் நின்னை” என்றலின் ஆண்டு நின்று நீண்டதன்

குஞ்சி மாண்கொ டிக்கையால் கூவி விட்ட தொத்ததே. 25

அரசன் கோவில் இந்திரன் கோயில்போல் சிறத்தல்

கந்து மாம ணித்திரள் கடைந்து செம்பொன் நீள்சுவர்ச்

சந்து போழ்ந்தி யற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனால்,

இந்தி ரன்தி ருநகர் உரிமை யோடும் இவ்வழி

வந்தி ருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. 26

சச்சந்தன் என்ற அரசன் சிறப்பு

நச்சு நாகத்தின் ஆரழற் சீற்றத்தன்,

அச்ச முற்றடைந் தார்க்கமிர் தன்னவன்

கச்சு லாம்முலை யார்க்கணங் காகிய

சச்சந் தன்எனும் தாமரைச் செங்கணான். 27

தருமன் தண்ணளி யால்,தன தீகையால்

வருணன், கூற்றுஉயிர் மாற்றலின், வாமனே

அருமை யால்,அழ கில்கணை ஐந்துடைத்

திரும கன்,திரு மாநில மன்னனே. 28

இவ்வாறு அரசன் வாழ்ந்து வருநாளில், விதைய நாட்டரசனுக்கு விசயை என்ற மகளொருத்தி உருவும் திருவும் பிற நலங்களும் மிகவுடையளாய் இருந்து வந்தாள். அவ்வரசன் சச்சந்தனுக்கு மாமன், விசயையின் அழகும் குணமும் பிறநலங்களும் கேள்வியுற்ற சச்சந்தன் அவள்மீது பெருங்காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ள நினைத்தான். சான்றோர் சிலரை அவன்பாற் செலுத்தி மணம் பேசுவித்தான்.

சச்சந்தற்குத் திருமணம் செய்தல்

மருமகன் வலந்ததும், மங்கை யாக்கமும்,

அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய

கருமமும் கண்டு,அவர் கலத்தற் பான்மையில்

பெருமகற் சேர்த்தினார் பிணைய னாளையே. 29

சச்சந்தனும் விசயையும் இன்பவாழ்வு நடாத்துதல்

தன்னமர்காத லானும் தையலு மணந்த போழ்தில்,

பொன்னனாள் அமிர்த மாகப் புகழ்வெய்யோன் பருகியிட்டான்

மின்னவிர் பூணினானை, வேற்கணார்க் கியற்றப் பட்ட

மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள். 30

துறுமலர்ப் பிணையலும், சூட்டும், சுண்ணமும்,

நறுமலர்க் கண்ணியும், நாறு சாந்தமும்,

அறுநிலத் தமிர்தமும், அகிலும், நாவியும்

பெறுநிலம் பிணித்திடப் பெரியர் வைகினார். 31

இவ்வாறு வைகும் நாளில், விசயைபால் பிறந்த ஆராக்காத லால், சச்சந்தனுக்கு, அவள் இருக்கும் உவளகத்தை விட்டு, அரசிருக்கை மண்டபத்திற்குப் பிரிந்து போவதும் நெடும்பிரி வாய்த் தோன்றிற்று. அவளோடு இடையறவின்றிக் கூடியிருந்து நுகரும் இன்பமே சிறந்து தோன்ற, அவன், அரசாளுதலைக் கருத்திற் கொள்ளானாயினான்.

சச்சந்தன் அரசாட்சியிற் கருத்தூன்றாமை

மண்ணகம் காவலின் வழுக்கி, மன்னவன்,

பெண்ணருங் கலத்தொடு பிணைந்த பேரருள்,

விண்ணகம் இருள்கொள விளங்கு வெண்மதி

ஒண்ணிற வுரோணியோ டொளித்த தொத்ததே. 32

சச்சந்தன், விசயையின் காதலின்பத்தில் மூழ்கித் திளைத்தற்கு அரசு புரியும் தொழில் தடையாக இருக்கிறதென்று நினைந்து, அவ்வரசினைத் தன் அமைச்சருள் தலைவனான கட்டியங்காரன் மேல் வைத்து, தான் பெண்ணின்பத்தில் இடையீடின்றித் திளைத் திருக்கத் துணிந்தான்.

சச்சந்தன் கட்டியங்காரனைத் தனியாக அழைத்துத்

தன் கருத்தை யுரைத்தல்

“அசைவிலாப் புரவி வெள்ளத்து

அரிஞ்சயன் குலத்துள் தோன்றி,

வசையிலாள் வரத்தின் வந்தாள்

வான்சுவை அமிர்த மன்னாள்

விசையையைப் பிரித லாற்றேன்,

வேந்தன்நீ யாகி வையம்

இசைபடக் காத்தல் வேண்டும்

இலங்குபூண் மார்ப" என்றான். 33

கேட்ட கட்டியங்காரன், முதற்கண் உடன்படான் போல் நடித்து, “யானையின் கழுத்தின்மேல் வைத்தற்குரிய தவிசினை, நாயின்மேல் வைப்பது கிடையாது. அதுபோல வுளது அடியேன் மேல் தேவரீர் சுமந்து போந்த அரசினை வைப்பது” என்று கூற, அரசன், நீ மறுத்து மொழி யற்க என்றான்.

கட்டியங்காரன் உடன்பட்டுரைத்தல்

எழுதரு பருதி மார்பன்

இற்றென இசைத்த லோடும்

தொழுதடி பணிந்து சொல்லும்

“துன்னலர்த் தொலைத்த வேலோய்!

கழிபெருங் காத லாள்கண்

கழிநலம் பெறுக, வையம்

பழிபடா வகையிற் காக்கும்

படுநுகம் பூண்பல்," என்றான். 34

இதனையறிந்து நிமித்திகன் முதலிய அமைச்சர்கள் தடுத்துரைத்தல்

வலம்புரி பொறித்த வண்கை

மதவலி விடுப்ப ஏகிக்

கலந்தனன் சேனை காவல்

கட்டியங் காரன் என்ன,

“உலந்தரு தோளி னாய்!நீ

ஒருவன்மேல் கொற்றம் வைப்பின்

நிலம்திரு நீங்கும்" என்றோர்

நிமித்திகன் நெறியிற் சொன்னான். 35

சச்சந்தன் கூறல்

“எனக்குயிர் என்னப் பட்டான்;

என்னலால் பிறரை யில்லான்;

முனைத்திறம் முருக்கி முன்னே

மொய்யமர் பலவும் வென்றான்;

தனக்குயான் செய்வ செய்தேன்;

தான்செய்வ செய்க; ஒன்றும்

மனக்கினா மொழிய வேண்டா;

வாழியர், ஒழிக" என்றான். 36

நிமித்திகன் மேலும் கூறல்

“காவல! குறிப்பன் றேனும்

கருமம் ஈது, அருளிக் கேண்மோ;

நாவலர் சொற்கொண் டார்க்கு

நன்கலால் தீங்கு வாரா;

பூவலர் கொடிய னார்கண்

போகமே கழுமி மேலும்

பாவமும் பழிய முற்றார்

பற்பலர்; கேள்இது" என்றான். 37

என்றவன், பிரமன் திலோத்தமை பொருட்டு நான் முகனாகி யதும், அரன் மங்கை பங்கனாகியதும், மாயோன் கோவியர் துகில் கவர்ந்து குருந்தொசித்துச் சிறு சொல்பெற்றதும், புத்தன் பெண் கழுதையாகி இழிக்கப்பட்டதும் எடுத்துக் கூறினான்.

பெண்ணின்பத்தால் அரசாட்சியை நெகிழ்த்தல்

நன்றன்று என அவனே வற்புறுத்திக் கூறல்

“படுபழி மறைக்க லாமோ?

பஞ்சவர் அன்று பெற்ற

வடுவுரை யாவர் பேர்ப்பார்?

வாய்ப்பறை அறைந்து தூற்றி,

இடுவதே யன்றிப் பின்னும்

இழுக்குடைத் தம்ம; காமம்

நடுவுநின் றுலக மோம்பல்

நல்லதே போலும்," என்றான். 38

உருத்திரதத்தன் கூறல்

ஆரறி விகழ்தல் செல்லா

ஆயிரம் செங்க ணானும்,

கூரறி வுடைய நீரார்

சொற்பொருள் கொண்டு செல்லும்;

பேரறி வுடையை நீயும்

பிணையனாட்கு அவலம் செய்யும்

ஓர்அறி வுடையை என்றான்

உருத்திர தத்தன் என்பான். 39

சச்சந்தன் விடையிறுத்தல்

அளந்துதாம் கொண்டு காத்த அருந்தவ முடைய நீரார்க்கு

அளந்தன போக மெல்லாம், அவரவர்க்கு அற்றை நாளே

அளந்தன வாழும் நாளும், அதுஎனக் குரையல் என்றான்

விளங்கொளி மணிகள் வேய்ந்து விடுசுடர் இமைக்கும் பூணான். 40

நிமித்திகன் துறவு

“மூரித்தேந் தாரி னாய்!நீ, முனியினும், உறுதி நோக்கிப்

பாரித்தேன் தரும நுண்ணூல்; வழக்குஅது வாதல் கண்டே;

வேரித்தேங் கோதை மாதர் விருந்துனக் காக இன்பம்

பூரித்தேந் திளைய கொங்கை புணர்க; யான் போவல்” என்றான். 41

அமைச்சர்கள் நீங்கிச் செல்ல, கட்டியங்காரன் அரசபாரத் தைத் தான் சுமந்து ஆட்சி புரிந்து வருகின்றான், சச்சந்தன் தன் மனைவி விசயையின் காதலின்பத்தின் மூழ்கிக் களித்திருக்கின்றான். இவ்வாறு நாட்கள் செல்ல, விசயை ஒருநாளிரவு தீக்கனவு காண்கின்றாள்.

விசயை தீக்கனாக் கண்டு சச்சந்தன்பால்

உரைத்தற்கு எழுதல்

பஞ்சி யடிப்பவ ளத்துவர் வாயவள்,

துஞ்சு மிடைக்கன மூன்றவை தோன்றலின்,

அஞ்சி நடுங்கினள் ஆயிழை; ஆயிடை

வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே. 42

அருகனைப் பரவுதல்

பண்கெழு மெல்விர லால்பணைத் தோளிதன்

கண்கழூஉச் செய்து கலைநல தாங்கி

விண்பொழி பூமழை வெல்கதிர் நேமிய

வண்புகழ் மாலடி வந்தனை செய்தாள். 43

சச்சந்தனை யடைந்து வழிபடுதல்

இம்பரி லாநறும் பூவொடு சாந்துகொண்டு

எம்பெரு மானடிக் கெய்துக என்றேத்தி

வெம்பரி மான்நெடுந் தேர்மிகு தானைஅத்

தம்பெரு மானடி சார்ந்தன ளன்றே. 44

தானமர் காதலி தன்னொடு, மாவலி

வானவர் போல்மகிழ் வுற்றபின், வார்நறும்

தேனெனப் பாலெனச் சில்லமிர் தூற்றெனக்,

கானமர் கோதை, கனாமொழி கின்றாள். 45

கனாவை யுரைத்தல்

தொத்தணி பிண்டி தொலைந்தற வீழ்ந்ததுஎண்

முத்தணி மாலை முடிக்கிட னாக,

ஒத்ததன் தாள்வழி யேமுளை யோங்குபு,

வைத்தது போல வளர்ந்ததை யன்றே. 46

சச்சந்தன் கனாவின் பயன் கூறல்

நன்முடி நின்மக னாம்;நறு மாலைகள்

அன்னவ னால்அம ரப்படுந் தேவியர்;

நன்முளை நின்மக னாக்கம தாம்,எனப்

பின்னத னாற்பயன் பேசலன் விட்டான். 47.

“இற்றத னாற்பயன் என்?”என, “ஏந்திழை!

உற்றதுஇன் னேஇடை யூறுஎனக்கு” என்றலும்,

மற்றுரை யாடல ளாய்,மணி மாநிலத்து

அற்றதோர் கோதையின், பொற்றொடி சோர்ந்தாள். 48

இவ்வாறு சோர்ந்து வீழ்ந்த விசயையைச் சச்சந்தன் தகுவன கூறித் தேற்றினன், அவள் காதலன் அன்பால் தேறி இனிதிருக் கையில், கருக்கொண்டாள்.

விசயையின் கருப்பநிலை

கரும்பார் தோள்முத்தம் கழன்று, செவ்வாய்

விளர்த்துக், கண்பசலை பூத்த, காமம்

விரும்பார் முலைக்கண் கரிந்து, திங்கள்

வெண்கதிர்கள் பெய்திருந்த பொற்செப் பேபோல்

அரும்பால் பரந்து, நுசுப்பும் கண்ணின்

புலனாயிற்று; ஆய்ந்த அனிச்ச மாலை

பெரும்பார மாய்ப்பெரிது நைந்து, நற்சூல்

சலஞ்சலம் போல், நங்கை நலம்தொலைந் ததே. 49.

விசயை கண்ட கனவின்படியே தனக்கு ஏதம் வரும் என்னும் எண்ணத்தனாய்ச் சச்சந்தன் இருந்து வருகையில், தான் அமைச்சர் காட்டிய நெறியை மேற்கொள்ளா தொழிந்தசிறுமை நினைந்து வருந்தும் அவனது அறிவில் ஒரு விரகு தோன்றிற்று, தீங்கு நேர்ந்த போது தன் காதலி விசயையை அப்புறப்படுத்த எண்ணி, ஓர் எந்திரத்தைச் சமைக்கத் துணிந்தான்.

மயிற்பொறி சமைத்தல்

அந்தரத் தார்மய னேஎன ஐயுறும்

தந்திரத் தால்தம நூல்கரை கண்டவன்,

வெந்திற லான்,பெருந் தச்சனைக் கூவி“ஓர்

எந்திர வூர்திஇ யற்றுமின்” என்றான். 50

பல்கிழி யும்,பயி னும்,துகில் நூலொடு

நல்லரக் கும்,மெழு கும்,நலம் சான்றன,

அல்லன வும்,அமைத்து ஆங்குஎழு நாளிடைச்

செல்வதொர் மாமயில் செய்தனன் அன்றே. 51

நன்னெறி நூல்நயந் தான்நன்று நன்றிது;

கொன்நெறி யிற்பெரி யாய்!இது கொள்கென,

மின்எறி பல்கலம் மேதகப் பெய்ததொர்

பொன்னறை தான்கொடுத் தான்,புகழ் வெய்யோன். 52

சச்சந்தன் விசயைக்கு மயிற்பொறி ஊர்ந்து

செல்லும் வகையைக் கற்பித்தல்

ஆடியல் மாமயி லூர்தியை, அவ்வழி

மாடமும் காவும் மடுத்தொர்சின் னாள்செலப்,

பாடலின் மேன்மேல் பயப்பயத், தான்துரந்து

ஓட முறுக்கி உணர்ந்த வுணர்ந்தாள். 53

இஃது இங்ஙனமிருக்க, அரசு மேற்கொண்டிருந்த கட்டியங் காரன் அவ்வரசுரிமை முற்றும் தானே கவர்ந்துகொள்ளக் கருதி, அதற்குத் தடை சச்சந்தன் உயிரோடிருப்பதே என்றெண்ணி அவனைத் தொலைத்துவிட ஒரு சூழ்ச்சி செய்யலுற்றான்.

கட்டியங்காரன் அமைச்சர்கட்குத் தன்

சூழ்ச்சியை யுரைத்தல்

மன்ன வன்பகை யாயதொர் மாதெய்வம்

என்னை வந்திடங் கொண்டுஅஃது இராப்பகல்

துன்னி நின்று, செகுத்திடு நீஎனும்

என்னை யான்செய்வ, கூறுமின் என்னவே. 54

இச் சொற்களைக் கேட்டு உளம் நடுங்கிய அமைச்சர்களுள் தருமதத்தன் என்னும் அமைச்சன் கழறுதல்

“தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்

குவளை யேயள வுள்ள கொழுங்கணாள்,

அவளை யே,அமிர் தாகஅவ் வண்ணலும்

உவள கம்தன தாக ஒடுங்கினான்” 55

“தன்னை யாக்கிய தார்ப்பொலி வேந்தனைப்

பின்னை வௌவின் பிறழ்ந்திடும் பூமகள்;

அன்ன வன்வழிச் செல்லின்இம் மண்மிசைப்

பின்னைத் தன்குலம் போக்குநர் இல்லையே;” 56

“தீண்டி னார்தமைத் தீச்சுடும்; மன்னர்தீ

ஈண்டு நும்கிளை யோடும் எரித்திடும்;

வேண்டில் இன்னமிர் தும்நஞ்சு மாதலால்;

மாண்ட தன்றுநின் வாய்மொழித் தெய்வமே;” 57

“வேலின் மன்னனை விண்ணகம் காட்டி,இஞ்

ஞால மாள்வது நன்றெனக் கென்றியேல்,

வாலி தன்று” எனக் கூறினன், வாள்ஞமற்கு

ஓலை வைத்தன்ன ஒண்டிற லாற்றலான்." 58

“பிறையது வளரத் தானும் வளர்ந்துடன் பெருகிப் பின்னாள்

குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வ தேபோல்,

இறைவனாய்த் தன்னை ஆக்கி யவன்வழி யொழுகின் என்றும்

நிறைமதி இருளைப் போழும் நெடும்புகழ் விளைக்கும்” என்றான். 59

மதனன் கூறல்

தார்ப்பொலி தரும தத்தன் தக்கவா றுரைப்பக் குன்றில்

கார்த்திகை விளக்கிட் டன்ன கடிகமழ் குவளைப் பைந்தார்

போர்த்ததன் அகல மெல்லாம் பொள்ளெ வியர்த்துப் பொங்கி

நீர்க்கடல் மகரப் பேழ்வாய் மதனன்மற் றிதனைச் சொன்னான். 60

“தோளினால் வலிய ராகித் தொக்கவர் தலைகள் பாற

வாளினால் பேச வல்லால், வாயினால் பேசல் தேற்றேன்

காளமே கங்கள் சொல்லிக் கருனையாற் குழைக்குங் கைகள்

வாளமர் நீந்தும் போழ்தில் வழுவழுத் தொழியு மென்றான்.” 61

இவற்றைக் கேட்டுக் கட்டியங்காரன் வெகுண்டு கூறுதல்

“என்னலால் பிறர்கள் யாரே

இன்னவை பொறுக்கும் நீரார்?

உன்னலால் பிறர்கள் யாரே

உற்றவற்கு உறாத சூழ்வார்?

மன்னவன்போய்த் துறக்கம் ஆண்டு

வானவர்க் கிறைவ னாக,

பொன்னெலாம் விளைந்து பூமி

பொலிய யான் காப்பல்" என்றான். 62

மதனன் முதலியோர் அஞ்சி அமைந்து மொழிதல்

விளைக; பொலிக; அஃதே;

உரைத்திலம்; வெகுளல் வேண்டா;

களைகம், எழுகம் இன்னே;

காவலற் கூற்றம் கொல்லும்,

வளைகய மடந்தை கொல்லும்

தான்செய்த பிழைப்புக் கொல்லும்;

அளவறு நிதியம் கொல்லும்;

அருள்கொல்லும்; அமைக, என்றான். 63

அமைச்சர் பலரும் தன் கருத்துக்கு இசைந்தது கண்டு கட்டியங்காரன் பல்வகைப் படையேந்திய நால்வகைத் தானை சூழச் சச்சந்தனிருந்த திருநகரை வளைந்துகொண்டான்.

கட்டியங்காரன் போர்க்கெழுந்ததை

வாயிலோன் சச்சந்தனுக்குக் கூறல்

“நீணில மன்ன, போற்றி;

நெடுமுடிக் குருசில், போற்றி;

பூணணி மார்ப, போற்றி;

புண்ணிய வேந்தே, போற்றி;

கோள்நினைக் குறித்து வந்தான்,

கட்டியங் காரன்," என்று

சேண்நிலத் திறைஞ்சிச் சொன்னான்

செய்யகோல் வெய்ய சொல்லான். 64

சச்சந்தன் கோயில் வீரர்க்கு உரைத்தல்

“திண்ணிலைக் கதவ மெல்லாம்

திருந்துதாழ் உறுக்க; வல்லே

பண்ணுக பசும்பொன் தேரும்,

படுமதக் களிறும், மாவும்;

கண்ணகன் புரிசை காக்கும்

காவலர் அடைக" என்றான்

விண்ணுரும் ஏறு போன்று

வெடிபட முழங்கும் சொல்லான். 65

அவன் விசயைக்கு வேண்டுவ கூறி வெளியேற்றல்

“நங்கை நீ நடக்கல் வேண்டும்,

நன்பொருட் கிரங்கல் வேண்டா;

கங்குல்நீ அன்று கண்ட

கனவெலாம் விளைந்த" என்னக்

கொங்கலர் கோதை மாழ்கிக்

குழைமுகம் புடைத்து வீழ்ந்து

செங்கயற் கண்ணி வெய்ய

திருமகற்கு அவலம் செய்தாள். 66

சாதலும் பிறத்தல் தானும்

தம்வினைப் பயத்தி னாகும்;

ஆதலும் அழிவு மெல்லாம்

அவைபொருட் கியல்பு கண்டாய்

நோதலும் பரிவு மெல்லாம்

நுண்ணுணர் வின்மை யன்றே!

பேதைநீ; பெரிதும் பொல்லாய்;

பெய்வளைத் தோளி! என்றான். 67

தொல்லைநம் பிறவி யெண்ணில்

தொடுகடல் மணலும் ஆற்றா

எல்லைய; அவற்று ளெல்லாம்,

ஏதிலம் பிறந்து; நீங்கிச்

செல்லுமக் கதிகள் தம்முள்

சேரலம்; சேர்ந்து நின்ற

இல்லினுள் இரண்டு நாளைச்

சுற்றமே; இரங்கல் வேண்டா; 68

வண்டுமொய்த் தரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண்ணூல்

உண்டுவைத் தனைய நீயும் உணர்விலா நீரை யாகி,

விண்டுகண் ணருவி சோர விம்முயிர்த் தினையை யாதல்

ஒண்டொடி தகுவ தன்றால்; ஒழிகநின் கவலை யென்றான். 69

உரிமைமுன் போக்கி யல்லால் ஒளியுடை மன்னர் போகார்;

கருமமீது எனக்கும்; ஊர்தி சமைந்தது; கவல வேண்டா;

புரிநரம் பிரங்கும் சொல்லாய்! போவதே பொருள்மற்று என்றான்,

எரிமுயங் கிலங்கு வாட்கை யேற்றிளஞ் சிங்கமன்னான். 70

விசயை வெளியேறல்

என்புநெக் குருகி உள்ளம் ஒழுகுபு சோர,யாத்த

அன்புமிக் கவலித் தாற்றா ஆருயிர்க் கிழத்தி தன்னை,

இன்பமிக் குடைய சீர்த்தி இறைவன் தாணை கூறித்

துன்பமில் பறவை யூர்தி சேர்த்தினன், துணைவி சேர்ந்தாள். 71

சச்சந்தன் வீழ்ச்சி

விசயை சென்ற பிரிவுத் துயரை ஒருவாறு ஆற்றிக்கொண்ட வேந்தன் போர்க்கோலம் பூண்டு, படை வீரர் சூழ்ந்துவரப் போர்க் களம் புகுந்து பெரும் போர் உடற்றுகின்றான். இருதிறத்தும் பலர் மாண்டு வீழ்கின்றனர்; குருதி வெள்ளம் பெருக்கிட்டோடுகிறது. முடிவில் கட்டியங்காரனும் சச்சந்தனும் நேர் நின்று பொரு கின்றனர். இறுதியாக, கட்டியங்காரன் எறிந்த நெடுவேல் மார்பிற் பட்டுருவ, வேந்தன் வீழ்கின்றான்.

தோய்ந்த விசும்பென்னும் தொன்னாட் டகம்தொழுது

புலம்பெய்தி மைந்தர் மாழ்க,

ஏந்து முலையார் இனைந்திரங் கக்கொடுங்கோல்

இருள்பரம்ப, ஏஎ, பாவம்!

ஆய்ந்த குருகுலமாம் ஆழ்கடலி னுள்முளைத்த

அறச்செங்கோல் ஆய்கதிரினை,

வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி

மாநாகம் உடன்விழுங்கிற் றன்றே. 72

கட்டியங்காரன் அரசுரிமை எய்துதல்

செங்கண் குறுநரி ஓர்சிங்க வேற்றைச்

செகுத்தாங்கு அதனிடத்தைச் சேர்ந்தா லொப்ப,

வெங்கண் களியானை வேல்வேந்தனை

விறலெரியின் வாய்ப்பெய் தவன்பெயர்ந் துபோய்,

பைங்கண் களிற்றின்மேல் தன்பெயரினால்

பறையறைந்தான் வேல்மாரி பெய்தா லொப்ப,

எங்க ணவரும் இனைந்திரங்கினார்

இருள்மனத்தான் பூமகளை எய்தி னானே. 73

சீவகன் பிறப்பு

இனி, மயிலூர்தி இவர்ந்து சென்ற விசயை கட்டியங்காரனது பறையோசை கேட்டதும் திடுக்கிட்டு மனம் கலங்கி, அறிவு சோர்ந்து அப் பொறிமீதே சாய்ந்தனள், அப்பொறியும் மேலே பறத்தலை விட்டு மெல்ல இறங்கி நிலத்தையடைந்தது, அவ்விடம், அந் நகர்ப் புறத்துச் சுடுகாடாகும்.

ஆயினும், அவ்விடத்தை யடைந்த விசயைக்கு மகப்பெறு வேதனை யுண்டாயிற்று; சிறிது போழ்தில் ஓர் ஆண் மகவு பிறந்தது. வருத்தம் சிறிது நீங்கியதும், விசயை அக் குழந்தையைக் காண்கின்றாள்.

பூங்கழல் குருசில் தந்த

புதல்வனைப் புகன்று நோக்கித்

தேங்கம ழோதி திங்கள்

வெண்கதிர் பொழிவ தேபோல்

வீங்கிள முலைகள் விம்மித்

திறந்துபால் பிலிற்ற ஆற்றாள்,

வாங்குபு திலகம் சேர்த்தித்

திலகனைத் திருந்த வைத்தாள். 74

கிடத்திய மகனது நிலை நினைந்து விசயை புலம்புதல்

அரும்பொற் பூணும் ஆரமும் இமைப்பக் கணிகள் அகன்கோயில்

ஒருங்கு கூடிச் சாதகம்செய் தோகை யரசர்க் குடன்போக்கி

கருங்கைக் களிறும் கம்பலமும் காசும் கவிகள் கொளவீசி

விரும்பப் பிறப்பாய்; வினைசெய்தேன் காண இஃதோஒ பிறக்குமா. 75

வெவ்வாய் ஓரி முழவாக, விளிந்தார் ஈமம் விளக்காக,

ஒவ்வாச் சுடுகாட் டுயர்அரங்கில் நிழல்போல் நுடங்கிப் பேயாட,

எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட

இவ்வா றாகிப் பிறப்பதோ? இதுவோ! மன்னர்க் கியல்,வேந்தே! 76

பற்றா மன்னர் நகர்ப்புறமால்; பாயல் பிணம்சூழ்சுடுகாடால்;

உற்றார் இல்லாத் தமியேனால்; ஓதுங்க லாகாத் தூங்கிருளால்;

மற்றுஇஞ் ஞால முடையாய்! நீ, வளரு மாறும் அறியேனால்;

எற்றே இதுகண் டேகாதே, இருத்தி யால்,என் இன்னுயிரே. 77

பிறந்த நீயும் பூம்பிண்டிப் பெருமா னடிகள் பேரறமும்

புறந்தந் தென்பால் துயர்க்கடலை நீந்தும் புணைமற் றாகாக்கால்,

சிறந்தா ருளரேல் உரையாயால்; சிந்தாமணியே கிடத்தியால்

மறங்கூர் நுங்கோன் சொற்செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ. 78

ஒரு தெய்வம் சண்பகமாலை யென்னும் கூனியது

வடிவில் வந்து துணை செய்தல்

விம்முறு விழும் வெந்நோய் அவணுறை தெய்வம் சேரக்

கொம்மென உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க;

எம்மனை! தமியை யாகி இவ்விடர் உற்ற தெல்லாம்

“செம்மலர்த் திருவின் பாவாய்! யான்செய்த பாவம்” என்றாள். 79

பூவினுள் பிறந்த தோன்றற்

புண்ணியன் அனைய நம்பி

நாவினுள் உலக மெல்லாம்

நடக்கும்;ஒன் றாது நின்ற

கோவினை அடர்க்க வந்து

கொண்டுபோம் ஒருவன்; இன்னே

காவியங் கண்ணி னாய்! யாம்

மறைவது கருமம் என்றாள். 80

கேட்ட பின்பு, விசயை அக் குழந்தையை ஓரிடத்தே செவ்வி தாக வைத்து, அரசன் பெயர் பொறித்த மணியாழியை அதனோடு சேர்த்து, கண் கலுழ, உள்ளம் துடிக்க உடல் பனிப்ப, கூனி வடிவில் நின்ற தெய்வத்தோடு ஒரு பக்கத்தே மறைந்து நிற்கலானாள்.

கந்துக்கடன் வரவு

இவன் இராசமாபுரத்தே அரசரால் சிறப்புற மதிக்கப் பெற்ற பெருவணிகன். அன்று பிறந்து இறந்த தன் மகனை வைத்தற்குச் சுடுகாட்டிற்கு வருகின்றான்.

நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடூர்

கோளொடு குளிர்மதி வந்து வீழ்ந்தெனக்

காளக வுடையினன் கந்து நாமனும்

வாளொடு கனையிருள் வந்து தோன்றினான். 81

வந்தவன் தன் மகனைப் புதைத்துவிட்டு நீங்குங்கால், அச் செறியிருளில் கிடந்த அரசக் குழவியைக் கண்ணுற்றான்.

கந்துக்கடன் சீவகக் குழவியைக் காண்டல்

அருப்பிள முலையவர்க் கனங்க னாகிய

மருப்பிளம் பிறைநுதல் மதர்வை வெங்கதிர்

பரப்புபு கிடந்தெனக் கிடந்த நம்பியை

விருப்புள மிகுதியின் விரைவின் எய்தினான். 82

சீவகனது அடையாள மோதிரத்தை மறைத்துக்கொண்டு குழவியை எடுத்தல்

புனைகதிர்த் திருமணிப் பொன்செய் மோதிரம்

வனைமலர்த் தாரினான் மறைத்து வண்கையால்

துனைகதிர் முகந்தென முகப்பத் தும்மினான்

சினைமறைந் தொருகுரல் சீவ என்றதே. 83

விசயை மகனை வாழ்த்தல்

என்பெழுந் துருகுபு சோர ஈண்டிய

அன்பெழுந் தரசனுக் கவலித் தையனை

நுன்பழம் பகைதவ நூறு வாயென

இன்பழக் கிளவியின் இறைஞ்சி யேத்தினாள். 84

கந்துக்கடன் குழவியைத் தான் கொண்டேகுதல்

ஒழுக்கிய லருந்தவத் துடம்பு நீங்கினார்

அழிப்பரும் பொன்னுடம் படைந்த தொப்பவே

வழுக்கிய புதல்வனங் கொழிய மாமணி

விழுத்தகு மகனொடும் விரைவின் ஏகினான். 85

கந்துக்கடன் மகவிழந்து வருந்தும் தன் மனைவி சுநந்தைக்குக் குழந்தையைத் தந்து அவள் உளம் களிப்பித்தல்

பொருந்திய உலகினுள் புகழ்கள் கூடிய

அருந்ததி அகற்றிய ஆசில் கற்பினாய்;

திருந்திய நின்மகன் தீதின் நீங்கினான்

வருந்தல்நீ, எம்மனை! வருக என்னவே. 86

கள்ளலைத் திழிதரும் களிகொள் கோதைதன்

உள்ளலைத் தெழுதரும் உவகை யூர்தர

வள்ளலை வல்விரைந் தெய்த நம்பியை

வெள்ளிலை வேலினான் விரகின் நீட்டினான். 87

கந்துக்கடன் தனக்குப் புதல்வன் பிறந்தனனென மங்கலம் முழங்க, பெருஞ் சிறப்புச் செய்ய, அரசனாகிய கட்டியங்காரன் கேட்டுத் தானும் அக் கந்துக்கடனுக்குப் பெரு நிதி நல்கிச் சிறப்பித்தான். கந்துக்கடன் மனையில் அக் குழந்தை வளர்ந்து வரலானான்.

தெய்வம் தண்டாரணியத்துக்கு விசயையைக் கொண்டேகக் கருதி யுரைத்தல்

மகப் பிரிவாற்றாது தளரும் விசயைக்குத் தெய்வம் அக் குழந்தைக்கு எதிர்வில் நிகழவிருக்கும் சிறப்புக்களைக் கூறித் தேற்றித் தாம் செல்லவிருக்கும் நெறியின் இயல்பு கூறலுற்றது.

மணியறைந் தன்ன வரியறல் ஐம்பால்

பணிவரும் கற்பின் படைமலர்க் கண்ணாய்!

துணியிருட் போர்வையில் துன்னுபு போகி,

அணிமணற் பேர்யாற் றமரிகை சார்வாம். 88

அமரிகைக் கோசனை ஐம்பது சென்றால்,

குமரிக் கொடிமதில் கோபுர மூதூர்

தமரிய லோம்பும் தரணி திலகம்

நமரது மற்றது நண்ணல மாகி. 89

வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்

கண்டார் மனம்கவர் காவும் கஞலிய

தண்டா ரணியத்துத் தாபதப் பள்ளியொன்று

உண்டு, ஆங் கதனுள் உறைகுவம் என்றாள். 90

அவட்கு விசயை உடன்படவே, இருவரும் அமரிகையாற்றில் தங்கி மறுநாள் புறப்பட்டுத் தண்டாரணியஞ் சென்று ஆங்கே இருந்த தவமகளிர் பள்ளியை எய்தினார்.

தவமகளிர் விசயையைத் தவத்திற் படுத்தல்

வாளுறை நெடுங்க ணாளை மாதவ மகளி ரெல்லாம்

தோளுறப் புல்லு வார்போல் தொக்கெதிர் கொண்டு புக்குத்

தாளுறு வருத்த மோம்பித் தவநெறிப் படுக்க லுற்று

நாளுறத் திங்க ளூர நல்லணி நீக்கு கின்றார். 91

பூணொழித்துத் தவநெறி பூண்ட விசயையின் நிலை

பாலுடை யமிர்தம் பைம்பொன் கலத்திடைப் பாவை யன்ன

நூலடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்காச்

சேலடு கண்ணி காந்தள் திருமணித் துடுப்பு முன்கை

வாலட கருளிச் செய்ய வனத்துறை தெய்வ மானாள். 92

தவநெறி நிற்புழியும், விசயை தன் மகன்

நினைவு அறாதிருத்தல்

மெல்விரல் மெலியக் கொய்த குளநெல்லும் விளைந்த ஆம்பல்

அல்லியும் உணங்கும் முன்றில் அணில்விளித் திரிய ஆமான்

புல்லிய குழவித் திங்கள் பொழிகதிர்க் குப்பை போலும்

நல்லெழிற் கவரி ஊட்ட நம்பியை நினைக்கு மன்றே. 93

கூனி வடிவில் நின்றொழுகிய தெய்வம் விசயையைத் தவ மகளிர்பால் அடைக்கலமாக வைத்துத் தான் நீங்கிப் போகலுற்றது.

தெய்வம் விடை பெறுதல்

பெண்மைநாண் வனப்புச் சாயல் பெருமட மாது பேசின்

ஒண்மையின் ஒருங்கு கூடி உருவுகொண் டனைய நங்கை

நண்ணிய நுங்கட் கெல்லாம் அடைக்கலம் என்று நாடும்

கண்ணிய குலனும் தெய்வம் கரந்துரைத் தெழுந்த தன்றே. 94

கூனிக்கு விசயை விடை யீதல்

உறுதி சூழ்ந்தவண் ஓடலின் ஆயிடை

மறுவில் வெண்குடை மன்னவன் காதலஞ்

சிறுவன் தன்மையைச் சேர்ந்தறிந் திவ்வழிக்

குறுக வம்மெனக் கூனியைப் போக்கினாள். 95

கூனிவடிவிற் போந்த தெய்வம் இராசமாபுரத்தே வந்து அடைந்தது. அதன் வரவை நினைந்து விசயையும் தவப்பள்ளியில் இருந்து வருவாளாயினள்.

கந்துக்கடன் குழந்தைக்குச் சீவகன் எனப் பெயரிடல்

கூற்றம் அஞ்சும் கொன்நுனை யெஃகின் இளையானும்

மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்

போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச்

சீற்றத் துப்பின் சீவகன் என்றே பெயரிட்டார். 96

சீவகன் வளர்ந்து வருதல்

மேகம் ஈன்ற மின்னனை யாள்தன் மிளிர்பைம்பூண்

ஆகம் ஈன்ற அம்முலை யின்பால் அமிர்தேந்தப்

போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையேபோல்

மாகம் ஈன்ற மாமதி யன்னான் வளர்கின்றான். 97

சீவகனுக்குக் கல்வி கற்பித்தல்

முழவெனத் திரண்ட திண்டோள் மூரிவெஞ் சிலையி னானும்

அழலெனக் கனலும் வாட்கண் அவ்வளைத் தோளி னாலும்

மழலையாழ் மருட்டுந் தீஞ்சொல் மதலையை மயிலஞ் சாயல்

குழைமுக ஞானமென்னும் குமரியைப் புணர்க்க லுற்றார். 98

அரும்பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி யாகப்

பரந்தெலாப் பிரப்பும் வைத்துப் பைம்பொன்செய் தவிசி னுச்சி

இருந்துபொன் ஓலை செம்பொன் ஊசியா லெழுதி யேற்பத்

திருந்துபொற் கண்ணியாற்குச் செல்வியைச் செலுத்தி னாரே. 99

ஆசிரியனாகிய அச்சணந்தியென்பவன் சீவகற்கு அறமும் பிறப்பு வரலாறும் கூறல்

நூனெறி வகையி னோக்கி நுண்ணிதி னுழைந்து தீமைப்

பானெறி பலவும் நீக்கிப் பரிதியங் கடவு ளன்ன

கோனெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ

நானெறி வகையில் நின்ற நல்லுயிர்க் கமிர்தம் என்றான். 100

அறிவினாற் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற

நெறியினைக் குறுகி இன்ப நிறைகட லகத்து நின்றார்;

பொறியெனும் பெயர ஐவாய்ப் பொங்கழ லரவின் கண்ணே

வெறிபுலங் கன்றி நின்றார் வேதனைக் கடலுள் நின்றார். 101

இவ்வகையால் அறம்பலவும் பொதுவாய்க் கூறி, வீடு பேற்றுக்கு உரிய அறமும் இல்வாழ்வுக்குரிய அறமும் சிறப்புறச் சொல்லி, சீவகனைத் தனியிடத்தே கொண்டு சென்று, ஆசிரியன் அவன் பிறப்பு வரலாறு கூறுகின்றான். நாட்டரசனான சச்சந்தன் விசயை பால் ஆராக்காதலில் அழுந்தியதும், கட்டியங்காரன் எழுச்சியும், அரசன் வீழ்ச்சியும், விசயை சீவகனை ஈன்றதும், வணிகன் அச்சிறு வனைக் கொண்டு சென்று வளர்த்ததும் பிறவும் கூறப்பட்டன.

சீவகன் அச் சிறுவன் யாவன் என அறிய விழைதல்

கரியவன் கன்னற் கன்று

பிறப்பினைத் தேற்றி யாங்கப்

பெரியவன் யாவன்? என்ன

நீஎனப் பேச லோடும்

சொரிமலர்த் தாரும் பூணும்

ஆரமும் குழையும் சோரத்

திருமலர்க் கண்ணி சிந்தத்

தெருமந்து மயங்கி வீழ்ந்தான். 102

மயங்கி வீழ்ந்த சீவகன், ஆசிரியன் தேற்றத் தேறல்

இனையைநீ யாய தெல்லாம் எம்மனோர் செய்த பாவம்;

நினையல்நீ; நம்பி! என்று நெடுங்கண்நீர் துடைத்து நீவிப்

புனையிழை மகளிர் போலப் புலம்பல்;நின் பகைவன் நின்றான்,

நினைவெலாம் நீங்குகென்ன நெடுந்தகை தேறினானே. 103

தேறிய சீவகன் சினம் மிகுந்து கட்டியங்காரனை இன்னே சென்று பொருது அழிப்பேன் எனக் கிளர்ந்து நிற்க, அச்சணந்தி யாசிரியன் அவனை மெல்லத் தடுத்துவிட்டான்.

சீவகன் ஆசிரியன் ஆணை மேற்கொள்ளல்

“வேண்டுவன, நம்பி, யான்ஓர்

விழுப்பொருள்" என்று சொல்ல,

“ஆண்டகைக் குரவிர்! கொண்மின்:

யாதுநீர் கருதிற்" றென்ன,

”யாண்டுநேர் எல்லை யாக

அவன்திறத் தழற்சி யின்மை

வேண்டுவல்" என்று சொன்னான்.

வில்வலான் அதனை நேர்ந்தான். 104

அச்சணந்தி தன் பிறப்பு வரலாறு கூறல்

வெள்ளிவெற்பைச் சார்ந்த வாரணவாசி என்னும் பேரூரி லிருந்து அரசுபுரிந்த உலோகபாலன் என்னும் வேந்தன், தன் மகனுக்கு அரசு தந்து தான் தவவேடம் பூண்டு துறவறம் செய்யத் தலைப்பட்டான். சின்னாளில் அவனுக்குப் பாவம் வந்து சேர, அதன் பயனாக அவன் யானைத் தீ என்னும் நோய்வாய்ப்பட்டுச் சோறு வேண்டி நாடெங்கும் திரிந்து இவ்வூரை .யடைந்தான்; (உடனே சீவகன், அப்பெரியவன் யாவன்? என்று வினவ, ஆசிரியன், “யானே” என்றான், என்றலும் மகிழ்ச்சி மிக்க சீவகன், “மேலே சொல்லுக” என்றான். அச்சணந்தி நகை மகிழ்ச்சி முகத்திற் கொண்டு சொல்லலுற்றான்.) அவ்வாறு போந்த யான் இக் கந்துக்கடன் பெருமனையை அடைகின்ற போது, அவன் உண்டற்கிருந்தான். என்னைக் கண்டதும், அவன் எனக்கும் பெருஞ்சோறு படைக்கு மாறு பணித்தான். எனக்கும் இட்டனர்.

அச்சணந்தி கந்துக்கடன் மனையில் தான் அமுதுண்டது கூறல்

கைகவி நறுநெய் பெய்து

கன்னலங் குடங்கள் கூட்டிப்

பெய்பெய்என் றுரைப்ப யானும்

பெருங்கடல் வெள்ளிக் குன்றம்

பெய்துதூர்க் கின்ற வண்ணம்

விலாப்புடைப் பெரிதும் வீங்க

ஐயன தருளி னால்யான்

அந்தணர் தொழிலே னானேன். 105

தான் சீவகனைக் கண்டது கூறல்

நிலம்பொறுக் கலாத செம்பொன் நீள்நிதி நுந்தை யில்லம்

நலம்பொறுக் கலாத பிண்டி நான்முகன் தமர்கட் கெல்லாம்

உலம்பொறுக் கலாத தோளாய்! ஆதலா லூடு புக்கேன்,

கலம்பொறுக் கலாத சாய லவருழை நின்னைக் கண்டேன். 106

தான் யானைத் தீ நீங்கப்பெற்றது கூறல்

ஐயனைக் கண்ணிற் காண யானைத்தீ அதகம் கண்ட

பையணல் நாகம் போல வட்கயான் பெரிதும் உட்கித்

தெய்வம்கொல் என்று தேர்வேற் கமிர்துலாய் நிமிர்ந்த தேபோல்

மொய்குரல் முரசம் நாணும் தழங்குரல் முழங்கக் கேட்டேன். 107

கோளியங் குழுவை யன்ன கொடுஞ்சிலை யுழவன் கேட்டே,

“தாளியல் தவங்கள் தாயாத் தந்தைநீ யாகிஎன்னை

வாளியங் குருவப் பூணோய், படைத்தனை, வாழி” என்ன,

“மீளியங் களிற னாய்! யான் மெய்ந்நெறி நிற்பல்,” என்றான். 108

சீவகன் விடையளித்தல்

மறுவற மனையின் நீங்கி மாதவம் செய்வல் என்றால்

பிறவறம் அல்ல பேசார் பேரறி வுடைய நீரார்;

துறவறம் புணர்க என்றே தோன்றல்தாள் தொழுது நின்றான்;

நறவற மலர்ந்த கண்ணி நன்மணி வண்ணன் அன்னான். 109

அச்சணந்தி பின் கந்துக்கடனுக்கும் அவன் மனைவி சுநந்தைக்கும் சீவகனது கல்வியும் தீக்கையும் சொல்லித் தான் துறவு மேற் கொண்டதையும் உரைத்து விடை வேண்டினன்.

சுநந்தை விடையளித்தல்

அழலுறு வெண்ணெய் போல

அகம்குழைந்து உருகி யாற்றாள்

குழலுறு கிளவி சோர்ந்து

“குமரனைத் தமிய னாக

நிழலுறு மதியம் அன்னாய்!

நீத்தியோ?" எனவும் நில்லான்,

பழவினை பரிய நோற்பான்

விஞ்சையர் வேந்தன் சென்றான். 110

நாமகள் இலம்பகம் முற்றும்

கோவிந்தையா ரிலம்பகம்

(கோவிந்தையார் இலம்பகம் : இது சீவகன் தோழர்களில் ஒருவனான பதுமுகன் என்பான் கோவிந்தை என்னும் ஆயர்மகளை மணந்துகொண்டதைக் கூறும் இலம்பகம்)

இதன்கண், இராசமாபுரத்துக்கு அருகிருந்த குன்றுகளில் வாழ்ந்த வேட்டுவர், நகரத்து ஆயருடைய ஆனிரைகளைக் கவர்ந் தேகியதும், ஆயர் முறையீடு கேட்டுக் கட்டியங்காரன் தன் வீரரை விடுப்ப அவர் நிரைமீட்க ஆற்றாது புறமிட்டோடியதும், பின்பு நிரைமீட்டானுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுப்ப தாக நந்தகோன் வெளியிடுவதும், சீவகனும் தோழரும் சென்று வேடர்க்குச் சிறிதும் தீங்கு நிகழாத வகையில் வென்று நிரை மீட்டதும், பதுமுகனுக்கு அந்த நந்தகோன் தன் மகள் கோவிந் தையைத் திருமணம் செய்விப்பதும், பிறவும் உரைக்கப்படுகின்றன.

அச்சணந்தி யாசிரியன் தேவனாதல்

ஆர்வ வேர்அரிந் தச்ச ணந்திபோய்

வீரன் தாள்நிழல் விளங்க நோற்றபின்

மாரி மொக்குளின் மாய்ந்து விண்தொழச்

சோர்வில் கொள்கையான் தோற்றம் நீங்கினான். 111

இப்பால் சீவகன் கலைநலம் பலவும் கொண்டு விளங்குதல்

கலையின தகலமும் காட்சிக் கின்பமும்

சிலையின தகலமும் வீணைச் செல்வமும்

மலையினின் அகலிய மார்ப னல்லதுஇவ்

வுலகினில் இலையென ஒருவ னாயினான். 112

இராசமாபுரத்துக்குப் புறம்பே யிருந்த குன்றுகளில் உறையும் வேடர், இந்நகரத்து ஆயர்களின் ஆனிரைகளைக் கவர்வது குறித்து ஒருங்குகூடிச் சூழ்வாராயினர்.

ஒருவன் புள் நிமித்தம் கண்டு கூறல்

“அடைதும் நாம்நிரை, அடைந்த காலையே

குடையும் பிச்சமும் ஒழியக் கோன்படை

உடையும்; பின்னரே ஒருவன் தேரினால்

உடைதும், சுடுவில்தேன் உடைந்த வண்ணமே.” 113

வேடர் கூறல்

என்று கூறலும், “ஏழை வேட்டுவீர்!

ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே

என்று கூறினும், ஒருவன் என்செயும்?

இன்று கோடும்நாம்? எழுக” என் றேகினார். 114

இராசமாபுரத்து ஆயர் கூட்டத்து, நிமித்தம் நிகழ்தல்

பூத்த கோங்குபோல் பொன்சு மந்துளார்

ஆய்த்தி யர்நலக்கு ஆசெல் தூணனான்;

கோத்த நித்திலக் கோதை மார்பினன்

வாய்த்த அந்நிரை வள்ளு வன்சொனான்; 115

நிமித்தம் கூறல்

“பிள்ளை யுள்புகுந் தழித்த தாதலால்

எள்ளன் மின்நிரை இன்றுநீர்” என,

வெள்ளி வள்ளியின் விளங்கு தோள்நலார்

முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார். 116

நிரையொடு சென்ற ஆயர் வேடர்க்கு ஆற்றாது

நிரையிழந்து பின்னிடல்

காய மீன்எனக் கலந்து கான்நிரை

மேய வெந்தொழில் வேடர் ஆர்த்துடன்

பாய மாரிபோல் பகழி சிந்தினார்,

ஆயர் மத்தெறி தயிரி னாயினார். 117

தாயிழந்தலறும் கன்றினங்களைக் கண்டு

ஆயர் மகளிர் அழுது அரற்றுதல்

எம்மனை மார்!இனி எங்ஙனம் வாழ்குவீர்?

நும்மனை மார்களை நோவவ துக்கி,

வெம்முனை வேட்டுவர் உய்த்தனர் ஓஎனத்

தம்மனைக் கன்றொடு தாம்புலம் புற்றார். 118

அரசனுக்கு நிரையிழந்தமை தெரிவித்துவரும் ஆயர் நகரவர்க்கும் தெரிவித்தல்

கொடுமா எயினர் ஈண்டிக் கோட்டிமில் ஏறு சூழ்ந்த

படுமணி நிரையை வாரிப் பைந்துகில் அருவி நெற்றி

நெடுமலை அத்தஞ் சென்றார் என்றுநெய் பொதிந்த பித்தை

வடிமலர் ஆயர் பூசல் வளநகர் பரப்பி னாரே. 119

ஆயர் முறையீடு கேட்ட கட்டியங்காரன் நிரைமீட்க

எனத் தன் வீரர்களை ஏவுதல்

கூற்றின் இடிக்கும் கொலைவேலவன் கோவலர்வாய்

மாற்றம் உணர்ந்து, மறங்கூர்கடல் தானைநோக்கி

காற்றின் விரைந்து தொறுமீட்கஎனக் காவல்மன்னன்

ஏற்றை யரிமான் இடிபோல இயம்பினானே. 120

சென்ற தானையின் சிறப்பு

கார்விளை மேக மன்ன கவுளழி கடாத்த வேழம்,

போர்விளை இவுளித் திண்டேர் புனைமயிர்ப் புரவி காலாள்

வார்விளை முரசம் விம்ம வானுலாப் போந்த தேபோல்

நீர்விளை சுரிசங் கார்ப்ப நிலம்நெளி பரந்த வன்றே. 121

வேந்தன் தானையும் வேடர் கூட்டமும் தம்மிற் கலந்து பெரும்போர் செய்தன. முடிவில், வேந்தன் தானை வேடர்க் காற்றாது பின்னிடலாயிற்று, வேடர் ஆனிரைகளைத் தம்மோடு கொண்டே போயினர்.

செய்தியறிந்த கட்டியங்காரன் சோர்ந்து அமைதல்

பல்லினால் சுகிர்ந்த நாரில்

பனிமலர் பயிலப் பெய்த

முல்லையங் கண்ணி சிந்தக்

கால்விசை முறுக்கி யாயர்

ஒல்லென வொலிப்ப ஓடிப்

படையுடைந் திட்ட தென்ன,

அல்லலுற் றழுங்கி நெஞ்சிற்

கட்டியங் காரன் ஆழ்ந்தான். 122

அரசன் வாளா விருப்பது கண்டு நந்தகோன் முரசறைவித்தல்

மன்னிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க, வாட்கண்

பொன்னிழை சுடரு மேனிப் பூங்கொடி யனைய பொற்பின்

கன்னியைத் தருதும், என்று கடிமுர சியம்பக் கொட்டி

நன்னகர் வீதி தோறும் நந்தகோன் அறைவித் தானே. 123

சீவகன் கேட்டுத் தான் நிரைமீட்பான் தேர்பண்ணிப்

புறப்பட்டுப் போதல்

போர்ப்பண் ணமைத்து நுகம்பூட்டிப் புரவிபண்ணித்

தேர்ப்பண் ணமைத்துச் சிலைகோலிப் பகழியாய்ந்து

கார்க்கொண்மு மின்னின் நிமிர்ந்தான் கலிமான் குளம்பின்

பார்க்கண் ணெழுந்த துகளால்பகல் மாய்ந்ததன்றே. 124

சீவகன் தேர் வரக்கண்ட வேடர்கூட்டத்துள் முன்பு

நிமித்தங் கூறியவன் இது பொழுதன்று என்று விலக்க,

விலகாத வேடர் கூறுதல்

மோட்டும் முதுநீர் முதலைக்கு வலியதுண்டேல்

காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும்நாம், என்று

ஏட்டைப் பசியின் இரைகவ்விய நாகமேபோல்

வேட்டந் நிரையை விடலின்றி விரைந்ததன்றே. 125

சீவகன் சென்ற தேர் முழக்கமும், துகட்படலமும் மிகுந்து வேடர் கூட்டத்தைத் திகைப்பிக்கவே, அவர்கள் வேறொரு புறத்தே கூடி அம்புகளை மழைபோல எய்தனர். அவற்றையெல்லாம் விலக்கி, அவர்களுள் ஒருவர்க்கும் உயிரிறுதி எய்தாவகையில் சமர் செய்து சீவகன் வெருட்டவே, அவர்கள் ஆனிரைகளைக் கைவிட்டு நீங்கினர்.

வேடர் சிதறி யோடுதல்

ஐந்நூறு நூறு தலையிட்ட ஆறா யிரவர்

மெய்ந்நூறு நூறு நுதிவெங்கணை தூவி வேடர்

கைந்நூறு வில்லும் கணையும் மறுத்தான், கணத்தின்

மைந்நூறு வேற்கண் மடவார்மனம் போல மாய்ந்தார். 126

சீவகனது வெற்றி கேட்ட கட்டியங்காரன் உள்ளத்தே

பகைமை கொள்ளுதல்

ஆளற்ற மின்றி யலர்தாரவன் தோழ ரோடும்

கோளுற்ற கோவன் நிரைமீட்டனன் என்று கூற,

வாளுற்ற புண்ணுள் வடிவேலெறிந் திட்ட தேபோல்

நாளுற்றுலந்தான் வெகுண்டான்; நகர் ஆர்த்த தன்றே. 127

வெற்றித் திருவுடன் மீளும் சீவகனைக் கண்ட

நகரமகளிர் பேசிக்கொள்ளுதல்

கொடையுளும் ஒருவன், கொல்லும் கூற்றினும்

கொடிய வாட்போர்ப்

படையுளும் ஒருவன் என்று பயங்கெழு

பனுவல் நுண்ணூல்

நடையுளார் சொல்லிற் றெல்லாம் நம்பிசீ

வகன்கட் கண்டாம்,

தொடையலங் கோதை யென்று சொல்லுபு

தொழுது நிற்பார். 128

விண்ணகத் துளர்கொல் மற்றிவ் வென்றிவேற் குருசில் ஒப்பார்,

மண்ணகத் திவர்கள் ஒவ்வார், மழகளி றனைய தோன்றல்,

பண்ணகத் துறையும் சொல்லார் நன்னலம் பருக வேண்டி

அண்ணலைத் தவத்தின் தந்தார் யார்கொலோ அளியர் என்பார். 129

சீவகனைக் கந்துக்கடனும் சுநந்தையும் வரவேற்றல்

தாயுயர் மிக்க தந்தை வந்தெதிர் கொண்டு புக்குக்

காய்கதிர் மணிசெய் வெள்வேல் காளையைக் காவ லோம்பி

ஆய்கதிர் உமிழும் பைம்பூண் ஆயிரச் செங்க ணான்தன்

சேயுயர் உலகமெய்தி யன்னதோர் செல்வ முற்றார். 130

நந்தகோன் போந்து சீவகற்குச் சச்சந்தன் வரலாறு

கூறித் தன் வரலாறு கூறுதல்

கோலிழுக் குற்ற ஞான்றே

கொடுமுடி வரையொன் றேறிக்

காலிழுக் குற்று வீழ்ந்தே

கருந்தலை களைய லுற்றேன்,

மால்வழி யுளதன் றாயின்

வாழ்வினை முடிப்பல் என்றே

ஆலம்வித் தனைய தெண்ணி

அழிவினுள் அகன்று நின்றேன். 131

குலத்தொடு முடிந்த கோன்தன் குடிவழி வாரா நின்றேன்

நலத்தகு தொறுவி னுள்ளேன், நாமம்கோ விந்த னென்பேன்,

இலக்கண மமைந்த கோதா வரிஎன இசையிற் போந்த

நலத்தகு மனைவி பெற்ற நங்கைகோ விந்தை யென்பான். 132

நந்தகோன் தன் மகள் நலம்கூறிச் சீவகனை மணம்

செய்து கொள்ளுமாறு வேண்டல்

வெண்ணெய்போன் றூறினியள், மேம்பால்போல் தீஞ்சொல்லள்,

உண்ண உருக்கிய ஆனெய்போல் மேனியள்

வண்ண வனமுலை மாதர் மடநோக்கி,

கண்ணும் கருவிளம்போ திரண்டே கண்டாய். 133

சேதா நறுநெய்யும் தீம்பால் சுமைத்தயிரும்

பாதால மெல்லாம் நிறைத்திடுவல், பைந்தாரோய்,

போதார் புனைகோதை சூட்டுஉன் அடித்தியை,

யாதாவ தெல்லாம் அறிந்தருளி என்றான். 134

குலம்நினையல் நம்பி, கொழுங்கயற்கண் வள்ளி

நலன்நுகர்ந்த னன்றே நறுந்தார் முருகன்,

நிலமகட்குக் கேள்வனும் நீள்நிரை நப்பின்னை

இலவலர்வாய் இன்னமிர்தம் எய்தினா னன்றே. 135

கோவிந்தை பதுமுகனுக்குத் தக்கவள் எனத் தன் மனத்தில் எண்ணிய சீவகன் நந்தகோனிடம் இரட்டுறமொழிந்து மணவினைக்கு இசைவு கூறிவிடல்

கோட்டிளங் களிறு போல்வான்

நந்தகோன் முகத்தை நோக்கி,

மோட்டிள முலையி னாள்நின்

மடமகள் எனக்கு, மாமான்

சூட்டொடு கண்ணிய யன்றே

என்செய்வான் இவைகள் சொல்லி

நீட்டித்தல் குணமோ என்று

நெஞ்சகம் குளிர்ப்பச் சொன்னான். 136

நந்தகோன் கோவிந்தையை மங்கல நீராட்டி மணவணி புனைந்து கொணர்ந்து, ஆயரும் பிறரும் சூழநின்று சீவகன் கையில் பதுமுகனுக்காக நீர் பெய்து கொடுத்தல்.

கோவிந்தையைப் பதுமுகனுக்குத் திருமணம் செய்வித்தல்

ஏறங்கோள் முழங்க ஆயர்

எடுத்துக்கொண் டேகி மூதூர்ச்

சாறெங்கு மயரப் புக்கு

நந்தகோன் தன்கை யேந்தி

வீறுயர் கலச நன்னீர்

சொரிந்தனன், வீரன் ஏற்றான்,

பாறுகொள் பருதி வைவேல்

பதுமுக குமரற்கு என்றே. 137

பதுமுகன் மகிழ்தல்

கள்வாய் விரிந்த கழுநீர்ப்பிணைந் தன்னவாகி

வெள்வேல் மிளிர்ந்த நெடுங்கண்விரை நாறுகோதை

முள்வாய் எயிறூ றமிர்தம்முனி யாது மாந்திக்

கொள்ளாத இன்பக் கடற்பட்டனன், கோதை வேலான். 138

கோவிந்தையார் இலம்பகம்

முற்றும்.

காந்தருவதத்தையார் இலம்பகம்

(காந்தருவதத்தையார் இலம்பகம் : சீவகன் காந்தரு வதத்தை யென்பாளைக் கூடின இலம்பகம் என விரியும்.)

(இதன்கண், இராசமாபுரத்து வணிகருள் ஒருவனான சீதத்தன் என்பான், கெட்ட தன் பொருளை ஈட்டுதற்பொருட்டு, மரக்கல மமைத்துத் திரைகடலிற் சென்றதும், தரன் என்னும் விஞ்சையன் சூழ்ச்சியால் மயங்கிக் கலுழ வேகன் என்னும் விஞ்சை வேந்தன் பால் அவன் செல்லுதலும், கலுழவேகன் மகள் காந்தருவதத்தைக்கு இராசமாபுரத்தே திருமணம் நடக்குமெனச் சோதிடர் கூறக் கேட்டிருந்தைமயின், சீதத்தன்பால் அவளை யொப்புவித்து அவளை வீணையில் வெல்வானுக்கு மணம் செய்து தருமாறு பணித்து மணியும் பொன்னும் மிதப்ப நல்கி விடுத்ததும், தரனால் அச் சீதத்தன் தன் கலத்தையும் தோழரையும் கண்டு அவருடன் திரும்பப் போந்து அரசன் உடன்பாடு பெற்று வீணைப்போர் வெளியிடலும், மன்னர் பலர் அப்போரில் வென்றி யெய்தமாட்டா தொழியச் சீவகன் வெல்லுதலும், கட்டியங்காரன் பொறாமைக் கொண்டு சீவகனை அடர்க்குமாறு மன்னர்க்குப் பணிப்ப அவரும் பொருது தோற்றோடியதும், சீவகன் தத்தையைத் திருமணம் செய்துகோடலும், பிறவும் விரித்துக் கூறப்படுகின்றன.

இராசமாபுரத்து வணிகருள் யவதத்தன் என்பானது வழியின் சீதத்தன் என்றொரு வணிகன் பதுமை யென்பாளை மணந்து இல்லிருந்து அறம் செய்துவரும் நாளில், தன்பால் பொருள் கெட்டதாக, தன் குடி கெட்டதென்னும் சொல் நிகழாமைப் பொருட்டுத் திரைகடலோடிச் செல்வம் ஈட்டிவரக் கருதினான்.

சீதத்தன் போதல்

தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன

ஓங்குகுலம் நைய,அத னுட்பிறந்த வீரர்,

தாங்கல்கட னாகும், தலை சாய்க்கவரு தீச்சொல்

நீங்கல்மட வார்கள்கடன் என்றெழுந்து போந்தான். 139

சீதத்தனது மரக்கலம் கடலிற் செல்லுதல்

திரைகள்தரும் சங்குகலம் தாக்கித்திரள் முத்தம்

கரைகடலுட் காலக்கணை பின்னொழுக முந்நீர்

வரைகிடந்து கீண்டதெனக் கீறிவளர் தீவின்

நிரையிடறிப் பாய்ந்திரிய ஏகியது மாதோ. 140

அவனது கலம் பொன்விளைதீப மடைதல்

மின்னுமிளிர் பூங்கொடியு மென்மலரு மொப்பார்,

அன்னமொடு தோகைநடை சாயலமிர் தன்னார்

துன்னியினி தாகவுறை துப்புரவின் மிக்க

நன்மையுடை நன்பொன்விளை தீபமடைந் தஃதே. 141

இத் தீபத்தின்கண் ஆறு திங்கள் இருந்து தான் கொண்டு போந்த பண்டங்களை மிக்க பொன்னுக்கும் மணிக்குமாக மாறி, பின்பு அத் தீபத்து அரசன்பால் விடைபெற்றுத் தன்னூர்க்கு வரவேண்டித் தன் வங்கத்தைச் செலுத்திக் கொண்டு வருவானாயினன். அத் தீபத்தை நீங்கி ஐஞ்ஞூறு யோசனை கடந்ததும், பெருமழையும் இடியும் விரவிப் பெரும் புயல் வந்து மோதுவதாயிற்று; கலமும் நிலை கலங்க, கலத்தவர் உளம் கலங்கலாயினர். சீதத்தன் அவர்கட்குத் தேறுதல் கூறலுற்றான்.

சீதத்தன் தெளியத்தகுவன கூறல்

இடுக்கண்வந் துற்ற காலை எரிகின்ற விளக்குப்போல

நடுக்கமொன் றனு மின்றி நடுகதாம், நக்க போழ்துஅவ்

விடுக்கணை அரியும் எஃகாம், இருந்தழுது யாவர் உய்ந்தார்

வடுப்படுத் தென்னை யாண்மை, வருபவந் துறுங்கள் அன்றே. 142

சீதத்தன் அருகனை நினைந்து அஞ்சாமை

மேற்கொண்மின் என்றல்

வினையது விளைவின் வந்த

வீவருந் துன்ப முன்னீர்க்

கனைகட லழுவம் நீந்திக்

கண்கனிந் திரங்கல் வேண்டா

நனைமலர்ப் பிண்டி நாதன்

நலங்கிளர் பாத மூலம்

நினையுமின் நீவி ரெல்லாம்

நீங்குமின் அச்சம் என்றான். 143

கலம் சிதைந்து கடலுள் மறைதல்

பருமித்த களிற னானும் பையெனக் கவிழ்ந்து நிற்ப,

குருமித்து மதலை பொங்கிக் கூம்பிறப் பாய்ந்து வல்லே

நிருமித்த வகையி னோடி நீர்நிறைந் தாழ்ந்த போதில்

உருமிடித் திட்ட தொப்ப உள்ளவர் ஒருங்கு மாய்ந்தார். 144

சீதத்தன் கூம்பின் துண்டத்தைப்பற்றி மிதந்து சென்று மணல்திட்டு ஒன்றைச் சேர்தல்

நாவாய் இழந்து நடுவாருமில் யாமம் நீந்திப்

போவாய், தமியே, பொருளைப்பொரு ளென்று கொண்டாய்;

வீவாய் என்முன் படையாய் படைத்தாய் வினையென்

பாவாய், எனப்போய்ப் படுவெண்மணல் திட்டைச் சேர்ந்தான். 145

சீதத்தன் மணல் திட்டையின் நன்னிமித்தம்

கண்டு உள்ளம் தெளிதல்

ஓடுந் திரைகள் உதைப்ப உருண்டுருண்டு

ஆடும் அலவனை அன்னம் அருள்செய,

நீடிய நெய்தலங் கானல் நெடுந்தகை

வாடி யிருந்தான் வருங்கலம் நோக்கா. 146

இவ்வாறிருக்கையில், தோள்வலி படைத்த காளையொருவன் அங்கே தோன்றச் சீதத்தன் அவனைக் கண்டு, அவன்பால் தனக்கு உற்ற தீங்குகளை யுரைத்தான். அது கேட்ட தரன் என்னும் பெயரை யுடைய அவ்வீரன் உரைக்கலுற்றான்.

தரன் உரைத்தல்

விஞ்சைகள் வல்லேன், விளிந்தநின் தோழரோடு

எஞ்சிய வான்பொருள் எல்லாம் இமைப்பினுள்

வஞ்சமொன் றின்றி மறித்தே தருகுவன்,

நெஞ்சிற் குழைந்து நினையன்மின் என்றான். 147

என்றவன், மேலும் தகுவன சில கூறிச் சீதத்தனைத் தெளிவித்துத் தன்னோடு வருமாறு கூட்டிக்கொண்டு சேணில் தோன்றிய மலைச்சாரலுக்குக் கொண்டேகினான்.

சீதத்தன் பசிநீங்கிக் குளிர்தல்

கண்டால் இனியன, காண்டற் கரியன,

தண்டா மரையவள் தாழும் தகையன

கொண்டான் கொழுங்கனி, கோட்டிடைத் தூங்குவ

உண்டான் அமிழ்தத்து உடம்பு குளிர்ந்தான். 148

அவ்விடத்திற்கு ஒரு காதத்தில் தோன்றிய அழகிய நகரத்தே அத்தரனுடைய பெருமனையிருந்தமையின், அதனை இருவரும் சென்றடைகின்றனர்.

தரன் விருந்து செய்தல்

நன்னகர் நோக்கி நாய்கன் நாகம்கொல் புகுந்த தென்னப்

பொன்னகர் பொலியப் புக்குப் பொங்குமா மழைகள் தங்கும்

மின்னவிர் செம்பொன் மாடத் திருவரும் இழிந்து புக்குப்

பின்னவன் விருந்து பேணிப் பேசினன் பிறங்கு தாரான். 149

விருந்துண்டு இனிதிருந்த சீதத்தனுக்குத் தான், இந் நகரத்தரசனான கலுழவேகனுக்குக் காந்தருவதத்தை யென்றொரு மகள் உளள். அவள் பிறந்த நாளில், சாதகம் கணித்த கணிகள், அவட்கு எய்தக் கடவ நல்வினைப் பயன்களெல்லாம் இராசமா புரத்தேயாம் என்று கூறியுளர், அதனால், அரசனையடைந்து அவன் திறம் அறியலாம், வருக என, அவனைக் கலுழவேகன் கோயிலுக்கு அழைத்தேகினான், அரசன் சீதத்தனை வரவேற்று, அவனது தந்தை, தாய், மனைவி, மக்கள் முதலியோர் நலம் வினவி மகிழ்வித்தான்.

கலுழவேகன் மேலும் கூறல்

இன்றைய தன்று கேண்மை

எமர்நுமர் எழுவர் காறும்

நின்றது கிழமை, நீங்கா

வச்சிர யாப்பி னூழால்

அன்றியும் அறனும் ஒன்றே

அரசன்யான், வணிகன் நீயே

என்றிரண் டில்லை, கண்டாய்

இதுநின தில்லம் என்றான். 150

சீதத்தன் இதுவே என் தந்தைக்குத் தந்தை கூறினான்

என்று அவன் கூறிய துரைத்தல்

வெள்ளிவே தண்டத் தங்கண்

வீவில்தென் சேடிப் பாலில்,

கள்ளவிழ் கைதை வேலிக்

காசில்காந் தார நாட்டுப்

புள்ளணி கிடங்கின் விச்சா

லோகமா நகரிற் போகா

வெள்ளிவேற் கலுழ வேகன்

வேதண்ட வேந்தர் வேந்தன். 151

சங்குடைந் தனைய வெண்டா

மரைமலர்த் தடங்கள் போலும்

நங்குடித் தெய்வம், கண்டீர்,

நமரங்காள் அறிமின் என்னக்

கொங்குடை முல்லைப் பைம்போ

திருவடம் கிடந்த மார்ப

இங்கடி பிழைப்ப தன்றால்

எங்கும் என்று சொன்னான். 152

இது கேட்டு உவகை மிக்க கலுழவேகன் சீதத்தனுக்குத் தன் மனைவி தாரணியையும், மகள் காந்தருவதத்தையையும் காட்டிச் சிறப்பித்துப் பின்பு, தன் மகள் பிறப்பு வரலாற்றைக் கூறினான்.

கலுழவேகன் சீதத்தன்பால் காந்தருவதத்தையின்

பொருட்டுச் செய்யவேண்டுவன கூறல்

நின்மகள் இவளை நீயே

நின்பதி கொண்டு போகி,

இன்னிசை பொருது வெல்வான்

யாவனே யானு மாக

அன்னவற் குரிய ளென்ன

அடிப்பணி செய்வல் என்றான்,

தன்னமர் தேவி கேட்டுத்

தத்தைக்கே தக்க தென்றாள். 153

தாரணி இவ்வாறு செய்வதே தக்கது என்றது கேட்ட கலுழ வேகன் மீட்டும் சில கூறுகின்றான்.

கலுழவேகன் தத்தை திருமணம் குறித்துச் சொல்லுதல்

முனிவரும் போக பூமிப் போகமுட்டாது பெற்றும்

தனியவ ராகிவாழ்தல் சாதுய ரதனில்லை

கனிபடு கிளவி யார்தம் காதலர் கவானில் துஞ்சின்

பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான். 154

கலுழவேகன் தன் உட்கோள் கூறுதல்

நூற்படு புலவன் சொன்ன நுண்பொருள் நுழைந்தி யானும்

வேற்கடல் தானை வேந்தர் வீழ்ந்திரந் தாலும் நேரேன்,

சேற்கடை மதர்வை நோக்கின் சில்லரித் தடங்கண் நங்கை

பாற்படு காலம் வந்தால் பான்மையார் விலக்கு கிற்பார். 155

பின்பு தந்தையைச் சீதத்தனுடன் இராசமாபுரத்துக்குச் செலுத்தக் கருதிய கலுழவேகன், தந்தைக்குத் தோழியாகிய வீணாபதி யென் பாளையும் உடன்செல்ல விடுக்கின்றான்.

விடுப்பவன் வீணாபதிக்குக் கூறல்

உடம்பினோ டுயிரிற் பின்னி யொருவயின் நீங்கல் செல்லா

நெடுங்கணும் தோளும் போலும் நேரிழை யரிவை, நீநின்

தடங்கணி தனிமை நீங்கத் தந்தையும் தாயு மாகி,

அடங்கல ரட்ட வேலான் ஆணையி ராமின் என்றான். 156

சீதத்தனுக்கு அளவிறந்த பொன்னும் மணியும் தந்து, தந்தைக்கு வேண்டும் வீணைகள் பலவும் பிறவும் கொடுத்து மிக்க சிறப்புடன் விடுப்ப, விடைபெற வணங்கிய தத்தையின் பிரிவாற்றாத தாரணிக்குக் கலுழவேகன் தேற்றரவு கூறிநின்றான்.

கலுழவேகன் தன் மனைவிக்குக் கூறுதல்

வலம்புரி யீன்றமுத்தம் மண்மிசை யவர்கட் கல்லால்

வலம்புரி பயத்தை யெய்தாது, அனையரே மகளிர் என்ன

நலம்புரிந் தனைய காதல் தேவிதன் நவையை நீங்கக்

குலம்புரிந் தனைய குன்றிற் கதிபதி கூறினானே. 157

தத்தையுடன் பெருஞ் செல்வமும் பெற்றுவரும் சீதத்தனோடு தரன் என்பான் வந்தான். கடற்கரையை நெருங்கியபோது அவன் சீதத்தனுக்கு முன்பு அவன் கலம் கவிழ்ந்து துன்புற்றது தன் வஞ்ச மென்று கூறி நிகழ்ந்தது சொல்லலுற்றான். “காந்தருவதத்தையின் பொருட்டு நாளும் பல மன்னர் வந்து இரத்தலால் கலுழவேகன் மனம் அலைப்புண்டு, கணி சொன்ன வண்ணமே இராசமா புரத்திற்கே அவளை அனுப்பிவிடத் துணிந்திருக்கையில் நீ கடலின் கண் வந்துகொண்டிருப்பதை யுணர்ந்து நின்னைக்கொணர்க என என்னைப் பணித்தான், யான் என் விஞ்சையால் நின் தோழர்களை இன்புறுத்தி நின்னைத் துன்புறுத்திப் பற்றினேன்,” என்றான்.

தரன் கூறுதல்

துன்ப முற்ற வர்க்கலால்

இன்ப மில்லை யாதலின்,

அன்ப மற்று யான்நினைத்

துன்பத் தால்தொ டக்கினேன். 158

ஆழ்ந்த மரக்கலத்தைச் சீதத்தனுக்குக் காட்டுதல்

பீழை செய்து பெற்றனன்

வாழி யென்று மாக்கடல்

ஆழ்வித் திட்ட அம்பியைத்

தோழர்ச் சுட்டிக் காட்டினான். 159

பின்பு சீதத்தன் தன் துணைவரைக் கலத்தோடு கண்டுமிக்க மகிழ்ச்சிகொண்டு அவர்களிடம் நிகழ்ந்தது கூறினான், அவர்கள் அறிவு மயங்கியிருந்தமையால் நிகழ்ந்தது உணராராய், “நாங்கள் கண்டது நாடகம்” எனக் கைகொட்டி மகிழ்ந்தனர். விரைவில் அவர் சென்ற வங்கமும் இராசமாபுரத்தை யடைந்தது. சீதத்தன் தத்தை யுடன் தன் பெருமனையடைந்து நிகரற்ற செல்வமுடையவனாய்த் திகழலுற்றான். சீதத்தன் மனைவியும் தந்தையைத் தன் மகளே போல் காதலித்து ஓம்பினாள். மறுநாளே சீதத்தன் கட்டியங்காரனைச் சிறப்புடன் கண்டு, காந்தருவதத்தையின் மணம் குறித்துக் கன்னி மாடம் சமைத்துக்கொள்ளக் காப்பு விடை பெற்றுப் போந்து, நன்னாளில் மாடம் புனைவித்து, அரிய காவலும் ஏற்படுத்தி அதன்கண் தத்தையை இனிதிருக்கச் செய்து நகரமாந்தர் அறிய முரசறைவித்தான்.

வள்ளுவன் முரசறைதல் - வாழ்த்து

வான்தரு வளத்த தாகி வையகம் பிணியில் தீர்க,

தேன்தர கிளவி யாரும் கற்பினில் திரித லின்றி,

ஊன்றுக, ஊழி தோறும் உலகினுள் மாந்த ரெல்லாம்

ஈன்றவர் வயத்த ராகி இல்லறம் புணர்க நாளும். 160

அறவுரை

தவம்புரிந் தடக்கி நோற்கும் தத்துவர்த் தலைப்பட் டோம்பிப்

பவம்பரி கெமக்கு மென்று பணிந்தவ ருவப்ப வீமின்,

அவம்புரிந் துடம்பு நீங்கா தருந்தவம் முயல்மின் யாரும்

சிவம்புரி நெறியைச் சேரச் செப்புமிப் பொருளும் கேண்மின். 161

முரசு மொழியும் பொருள்

அம்மல ரனிச்சத் தம்போ தல்லியோ டணியின் நொந்து

விம்முறு நுசுப்பு நைய வீற்றிருந் தணங்கு சேர்ந்த

வெம்முலைப் பரவை யல்குல் மிடைமணிக் கலாபம் வேய்த்தோள்

செம்மலர்த் திருவின் சாயல் தேமொழி தத்தை யென்பாள். 162

மற்றவள் தந்தை நாய்கன், வண்கைச்சீ தத்தன் என்பான்,

கொற்றவன் குலத்தின் வந்தான், கூறிய பொருள்இ தாகும்,

முற்றவ முடைய ளாகிமூரிநூற் கலைக ளெல்லாம்

கற்றவள் கணங்கொள் நல்யாழ் அனங்கனைக் கனிக்கும் நீராள். 163

தீந்தொடை மகர வீணைத் தெள்விளி எடுப்பித் தேற்றிப்

பூந்தொடி யிரிவை தன்னிற் புலமிகுத் துடைய நம்பிக்கு

ஈந்திடும், இறைவ ராதி மூவகைக் குலத்து ளார்க்கும்,

வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை தாதை என்றான். 164

இச்செய்தி நாடெங்கும் பரவவே, அத்தினபுரத்து அரச குமரன், காம்பீவி நாட்டுப் பாலகுமரன், வாரணவாசி மன்னன் முதலாக அயோத்தி யரசன் ஈறாகப் பல அரசகுமரர் இராசமா புரத்தே வந்து நிரம்பினர், ஏனைச் செல்வமக்கள் எண்ணிறத் தோரும் ஈண்டினர்.

காந்தருவதத்தை இசையரங்குக்கு வருதல்

பைம்பொன் இமிர்க்கொடி பாவை வனப்பென்னும்

தளிரை ஈன்று,

செம்பொன் மலர்ந்து இளையார் கண்ணென்னும்

சீர்மணி வண்டுழலச் சில்லென்று

அம்பொன் சிலம்பரற்ற அன்னம்போல் மெல்லவே

ஒதுங்கி யம்பூஞ்

செம்பொற் புரிசை யடைந்தாள்செந் தாமரைமேல்

திருவொ டொப்பாள். 165

அவைப் பரிசாரம் பாடுதல்

பட்டியன்ற கண்டத் திரைவளைத்துப்

பன்மலர்நன் மாலை நாற்றி

விட்டகலாச் சாந்தின் நிலமெழுகி

மென்மலர்கள் சிதறித் தூமம்

இட்டுஇளைய ரேத்த இமையார்

மடமகள்போல் இருந்து நல்யாழ்

தொட்டெழீஇப் பண்ணெறிந்தாள் கின்னரரும்

மெய்ம்மறந்து சோர்ந்தா ரன்றே. 166

பாட்டு

புன்காஞ்சித் தாதுதன் புறம்புதையக் கிளியெனக்கண்டு

அன்புகொள் மடப்பெடை அலமந்துஆங் ககல்வதனை

என்புருகு குரலழைஇ இருஞ்சிறகர் குலைத்துகுத்துத்

தன்பெடையைக் குயில்தழுவத் தலைவந்த திளவேனில். 167

தண்காஞ்சித் தாதாடித் தன்நிறம் சுரந்ததனைக்

கண்டானா மடப்பெடை கிளியெனப்போய்க் கையகல,

நுண்தூவி யிளஞ்சேவல் நோக்கோடு விளிபயிற்றித்

தண்சிறகால் பெடைதழுவத் தலைவந்த திளவேனில் 168

குறுத்தாட் குயிற்சேவல் கொழுங்காஞ்சித் தாதாடி

வெறுத்தாங்கே மடப்பெடை விழைவகன்று நடப்பதனை

மறுத்தாங்கே சிறகுளர்ந்து மகிழ்வானாக் கொளத்தேற்றி

உறுப்பினா லடிபணியத் தலைவந்த திளவேனில். 169

திரைக்குள்ளேயிருந்து, தத்தைஇப் பாட்டைப் பாடி முடித்ததும், வீணாபதி யென்னும் பேடி அரங்கில் நின்று, “இங்கே வீற்றிருக்கும் வீரர் இனி யாழ்வகையைப் பாடுவார்களாக, அதற்கு இயையாராயின், இக் காந்தருவதத்தை யாழ் இசைப்ப, அதற்கேற்ப பாடுவார்களாக” என்று முன்மொழிந்து திரைக்குட் சென்றாள். சிறிது போதில், தத்தை திரையை நீக்கி, வெளியே அரங்கிற் போந்து, ஓரிடத்தே யமர்ந்து பாடத் தொடங்கினாள்.

பாட்டின் பயன்

சிலைத்தொழில் சிறுநுதல் தெய்வப் பாவைபோல்

கலைத்தொழில் படஎழீஇப் பாடினாள் கனிந்து

இலைப்பொழில் குரங்கின, ஈன்ற தூண்தளிர்

நிலத்திடைப் பறவைமெய்ம் மறந்து வீழ்ந்தவே. 170

கருங்கொடிப் புருவ மேறா, கயல்நெடுங் கண்ணுமாடா?

அருங்கடி மிடறும் விம்மாது, அணிமணி எயிறும்தோன்றா

இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ!

நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார். 171

இசைப்போர்

இசைதிறத் தனங்கனே யனைய நீரினார்

வசைத்திற மிலாதவர் வான்பொன் யாழ்எழீஇ

இசைத்தவர் பாடலின் வெருவிப் புள்ளெலாம்

அசிப்பபோன் றிருவிசும் படைந்த என்பவே. 172

மாதர்யாழ் தடவர வந்த, மைந்தர்கைக்

கீதத்தால் மீண்டன கேள்விக் கின்னரம்

போதரப் பாடினாள், புகுந்த போயின,

தாதலர் தாரினார் தாங்கள் பாடவே. 173

இவ்வகையால் முதற்கண் அரசரும், பின்பு மறையவரும், முடிவில் வணிகரும் பாடித் தோல்வி எய்தினர்.

கட்டியங்காரன் கூறல்

தேனுயர் மகர வீணைத் தீஞ்சுவை யிவளை வெல்வான்,

வானுயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காம னாகும்,

ஊனுயர் நுதிகொள்வேலீர்! ஒழிக;ஈங் கில்லை என்றான்,

கானுயர் அலங்கல் மாலைக் கட்டியங் காரன் என்பான். 174

இவ்வாறு, இவ்விசைப்போர் ஆறுநாள்காறும் நடந்தது. இச்செய்தி சீவகனுக்கு எட்டவே அவன் தன் தோழருள் ஒருவனான புத்திசேனன் என்பானைக் கந்துக்கடன்பால் செலுத்தித் தன் கருத்தைத் தெரிவித்துவரச் சொன்னான். புத்திசேனன் அவ்வாறே கந்துக்கடன்பால் தெரிவிப்ப, அப்போழ்தில் அவன் மனம் இசை யானாக, நாகமாலை யென்பாள் ஒருத்தி ஓலை கொணர்ந்தாள். அதன்கண், “சீவகன்பால் கட்டியங்காரன் பெருஞ் சினங்கொண்டு அவனைக் கொல்லுதற்குக் கருதியிருக் கின்றான், ஆதலால் அவனைக் காத்துக்கோடல்வேண்டும்” என்றொரு குறிப்பிருந்தது. நாகமாலை முகத்திலும் ஏதோ உரைக்கலுறும் குறிப்பும் இருந்தது. அதனை யுணர்ந்த கந்துகன் புத்திசேனனுக்கு அதனைச் சொல்லெனப் பணிக்க, அவள் உரைக்கத் தொடங்கி, முன்பொருநாள் அனங்க மாலை என்னும் நாடகமகள் அரங்கேறியபோது, அவ்வரங்கிற்கு, அரசர் குலத்தவனாதலின் சீவகனும் வந்திருந்தான். அனங்க மாலைக்குச் சீவகன்பால் காதல் பிறந்தது, அதனைச் சீவகன் அட்டிதிலன், கட்டியங்காரன் அவள்பால் வேட்கை மிகக்கொண்டு அவட்குத் தன்பால் காதலின்மை யுணர்ந்தும் வலிதிற்கொண்டு சென்று கன்னியழித்தான். அக்காலத்தே அவள் “சீவக சாமியோ” என்று வாய்வெருவினாள். அருகிருந்தவர் அவனது அருளும், வலியும், அழகும் எடுத்தோதிப் பாராட்டினர், அதுமுதல் அவன் சீவகன்பால் கறுவு கொண் டுள்ளான், என்று சொல்லி முடித்தாள். கந்துக்கடன் அவட்கு வேண்டும் பொன்னும் மணியும் பெருகத் தந்து, பின்பு நிகழ்வதையும் ஒற்றிருந்து அறிந்துவருமாறு விடுத்தான்.

கந்துக்கடன் புத்திசேனற் குரைத்தல்

இன்னன் என்ன இன்புறான், இழந்த னன்அ ரசுஎன

என்னை வௌவும் வாயில்தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான்

அன்ன தாதல் அரில்தப அறிந்து கூத்தி கூறினாள்,

இன்ன தால்ப டையமைத்து எழுமின் என்றியம்பினான். 175

இது கேட்டுச் சீவகன் முதற்கண் நகைத்துப் பின்பு தந்தை சொற்படி, புலிக்குழாம் போலத் தோழரும் வீரரும் சூழ்வர அழகிய யானை மீதேறி இசையரங்கிற்குச் சென்றான்.

சீவகனைக் கண்ட மகளிர் தம்முட் பேசிக்கொள்ளுதல்

தோற்றனள் மடந்தை நல்யாழ் தோன்றலுக் கென்று நிற்பார்,

நோற்றனள் நங்கை மைந்தன் இளநலன் நுகர்தற் கென்பார்

கோற்றொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையு மின்ன

ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணு மாயினாரே. 176

இசையரங்கில் சீவகன் வந்திருந்ததைக் கண்ட காந்தருவதத்தை காதல் மிகல்

கண்ணெனும் வலையி னுள்ளான் கையகப் பட்டி ருந்தான்,

பெண்ணெனும் உழலை பாயும் பெருவனப் புடைய நம்பி,

எண்ணின்மற்று யாவ னாங்கொல், என்னிதிற் படுத்தஏந்தல்

ஒண்ணிற உருவச் செந்தீயுருவு கொண்டனைய வேலான். 177

யாவனே யானு மாக அருநிறைக் கதவம் நீக்கிக்

காவல்என் நெஞ்ச மென்னும் கன்னிமா டம்புகுந்து

நோவஎன் உள்ளம் யாத்தாய், நின்னையும் மாலையாலே

தேவரிற் செறிய யாப்பன் சிறிதிடைப் படுக என்றாள். 178

பின்பு தத்தை தோழிவாயிலாக யாழொன்றைச் சீவகனிடம் கொடுத்தாள். அவன் அதன்கண் குற்றம் காட்டினான், இவ்வாறே பல யாழ்கள் தரப்பட்டன, அவனால் அவை குற்றமுடையவை என காட்டப்பட்டன. முடிவில் நல்ல யாழொன்றை நல்கினாள் தத்தை, அதனிடையும் குற்றமுண்டெனக் காட்டுவான். சீவகன் அதனை யுடைத்து, அதனுள் மயிர் இருத்தலைக் காட்டினான். இறுதியாக அவன் தன் தம்பி நவுலன் வைத்திருந்த நரம்பு கொண்டு யாழைத் திருந்தி இசைக்கலுற்றான்.

சீவகன் பாட்டு

கன்னி நாகம் கலங்க மலங்கி

மின்னும் இரங்கு மழையென் கோயான்

மின்னு மழையின் மெலியும் அரிவை

பொன்னாண் பொருத முலையென் கோயான். 179

கருவி வானம் கான்ற புயலின்

அருவி யரற்று மலையென் கோயான்

அருவி யரற்று மலைகண் டழுங்கும்

மருவார் சாயல் மனமென் கோயான். 180

வான மீனின் அரும்பி மலர்ந்து

கானம் பூத்த காரென் கோயான்

கானம் பூத்த கார்கண் டழுங்கும்

தேனார் கோதை பரிந்தென் கோயான். 181

பாட்டின் பயன்

விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பியேத்த,

மண்ணவர் மகிழ வான்கண் பறவைமெய்ம் மறந்துசோர,

அண்ணல்தான் அனங்கன் நாணப் பாடினான், அரசரெல்லாம்

பண்ணமைத் தெழுதப் பட்ட பாவைபோ லாயினாரே. 182

காந்தருவதத்தை பாடத் தொடங்குதல்

கோதை புறந்தாழக் குண்டலமும் பொற்றோடும்

காதி னொளிர்ந்திலங்கக் காமர் நுதல்வியர்ப்ப

மாதர் எருத்தம் இடம்கோட்டி மாமதுர

கீதம் இடையிலாள் பாடத் தொடங்கினாள். 183

பாட்டு

இலையார் எரிமணிப்பூண் ஏந்து முலையும்

சிலையார் திருநுதலும் செம்பசலை மூழ்க,

மலையார் இலங்கருவி வாள்போல மின்னும்

கலையார்தீஞ் சொல்லினாய்! காணார்கொல் கேள்வர். 184

பிறையார் திருநுதலும் பேரம ருண்கண்ணும்

பொறையார் வனமுலையும் பூம்பசலை மூழ்க,

நிறைவாள் இலங்கருவி நீள்வரைமேல் மின்னும்,

கறைவேலுண் கண்ணினாய், காணார்கொல் கேள்வர். 185

அரும்பேர் வனமுலையும் ஆடமைமென் றோளும்

திருந்தேர் பிறைநுதலும் செம்பசலை மூழ்க

நெருங்கார் மணியருவி நீள்வரைமேல் மின்னும்

கரும்பார்தீஞ் சொல்லினாய், காணார்கொல் கேள்வர். 186

காந்தருவதத்தை இசையில் தோல்வியுறல்

பண்ணொன்று பாட லதுவொன்று; பல்வளைக்கை

மண்ணொன்று மெல்விரலும் வாணரம்பின் மேல்நடவா,

விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி

எண்ணின்றி மாதர் இசைதோற் றிருந்தனளே. 187

இச்செய்தி கண்டு யாவரும் வியப்புற்றிருக்க, தத்தை பொன் மாலையொன்றை யெடுத்துச் சீவகற்குச் சூட்டி அவன் அடியில் வீழ்ந்து இறைஞ்சினாள். சீவகன் அவளது வடிவழகு முற்றும் பருகுவான்போல நோக்கிப் பெருவேட்கையெய்தினான்.

தோழியர் திரை வீழ்த்தல்

கோதையும் தோடு மின்னக்

குண்டலம் திருவில் வீச

மாதரம் பாவை நாணி

மழைமினின் ஒசிந்து நிற்பக்

காதலந் தோழி மார்கள்

கருங்கயற் கண்ணி னாளை

ஏதமொன் றின்றிப் பூம்பட்டு

எந்திர வெழினி வீழ்த்தார். 188

கட்டியங்காரன் பொறாமையுற்று அரசகுமரர்க்கு உரைத்தல்

வடதிசைக்குன்ற மன்னவான்குலம் மாசு செய்தீர்

விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்க மொத்தீர்,

வடுவுரை யென்று மாயும் வாளமர் அஞ்சி னீரேல்

முடிதுறந் தளியிர்போகி முனிவனம் புகுமின்என்றான். 189

திருமக ளிவனைச் சேர்ந்தாள் தெண்திரை யாடை வேலி

இருநில மகட்கும் செம்பொன் நேமிக்கும் இறைவ னாகும்,

செருநிலத் திவனை வென்றீர், திருவினுக் குரியீர் என்றான்,

கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங் காரன் அன்றே. 190

அதுகேட்டுச் சினம் மூண்ட அரசர்கள் தத்தம் பெருஞ் சேனையுடன் சீவகனோடு பொருதற் கெழுந்தனர். இதனை முன்னரே எண்ணிச் சீவகன் தோழர் பலரும் வந்திருந்தினர். அவருள் பதுமுகன் என்பான் அரசர்கட்குச் சில சொல்லலுற்றான்.

பதுமுகன் நெடுமொழி

இசையினில் இவட்குத் தோற்றாம் யானையால் வேறும் என்னின்

இசைவதொன் றன்று,கண்டீர், இதனையான் இரந்து சொன்னேன்,

வசையுடைத் தரசர்க் கெல்லாம், வழிமுறை வந்தவாறே

திசைமுகம் படர்க வல்லே, தீத்தொட்டால் சுடுவதன்றே. 191

மத்திரிப் புடைய நாகம் வாய்வழி கடாத்த தாகி

உத்தமப் பிடிக்கண் நின்றால் உடற்றுதல் களபக் காமோ?

பத்தினிப் பாவை நம்பி சீவகன் பால ளானால்,

அத்திறம் கருதியூக்கல் அரசிர்காள், நுங்கட் காமோ? 192

இச் சொற்களைக் கேட்டும் அடங்காத அரசர் தானை நன்கு சூழ்ந்துகொண்டது. அதுகண்ட சீவகன் காந்தருவதத்தையைத் தேற்றி அவள் தோழியுடன் இருத்திவிட்டு அவளுக்குக் காவலாகப் பதுமுகனை நிறுத்தினான். ஏனைப் புத்திசேனன் முதலிய தோழரும், நபுல விபுலர் என்ற தம்பிமாரும் தன்னோடு வரச் சீவகன் போர்க்களம் புகுந்தான்.

அரசர்கள் சீவகனை எள்ளுதல்

வாணிக மொன்றும் தேற்றாய், முதலொடும் கேடு வந்தால்,

ஊணிகந் தீட்டப் பட்ட வூதிய வொழுக்கின் நெஞ்சத்து

ஏணிகந் திலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார்

சேணிகந் துய்யப் போகின் செறிதொடி யொழிய வென்றார். 193

சீவகன் மாற்றம் கூறல்

தம்முடைப் பண்டந் தன்னைக் கொடுத்துஅவ ருடைமைகோடல்

எம்முடை யவர்கள் வாழ்க்கை, எமக்குமஃ தொக்குமன்றே;

அம்முடி யரசிர்க் கெல்லாம் என்கையில் அம்புதந்து

நும்முடைத் திருவும் தேசும் நோக்குமின் கொள்வல்என்றான். 194

போர்த் திறம்

கலந்தது பெரும்படை கணைபெய்ம் மாரிதூய்,

இலங்கின வாட்குழாம், இவுளி ஏற்றன,

விலங்கின தேர்த்தொகை, வேழம் காய்ந்தன,

சிலம்பிய இயமரம், தெழித்த சங்கமே. 195

தேவதத்தன், நபுல விபுலர், சீதத்தன் முதலியோர் ஒருபுடை நின்று போர் செய்யப் புத்திசேனனும் அவருடன் கலந்து பெரும்போ ருடற்றினன். மற்றொரு பக்கத்தே சீவகன் நந்தட்டனுடன் கூடிப் போர் செய்யுங்கால், அவனுக்கு வீரமந்திரம் இரண்டு கற்பித்துப் போர்க்குச் செலுத்தினான். அவன் தேர் ஒருபுறம் செல்ல, சீவகன் தேரும் கறங்கெனத் திரிந்து அம்புகளைச் சொரியலுற்றது.

சீவகன் போர்

நுங்களை வீணை வென்ற நூபுர வடியினாள்தன்

வெங்களித் தடங்கண் கண்டீர் விருந்தெதிர் கொண்மின் என்னா,

அங்களி யரசர்க்கெல்லாம் ஓரொன்றும் இரண்டுமாகச்

செங்களிப் பகழி யொப்பித் துள்ளவா றூட்டினானே. 196

நன்மன வேந்தர் தங்கள் நகைமணி மார்பம்நக்கிப்

புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசம் கீறி

இன்னுயிர் கவர்ந்து தீமை யினிக்கொள்ளு முடம்பினாலும்

துன்னன்மின் என்பவேபோல் சுடுசரம் பரந்த வன்றே. 197

இவ்வாறு நிகழ்ந்த இப்போரின்கண் அனைவரும் தத்தமக்கு இயன்ற திறமெல்லாம் இடையீடின்றிப் போர் செய்து, எதிர்த்த அரசர் தானையைக் கொன்று அவ்வரசர்களையும் பிறக்கிட் டோடச் செய்தனர்.

போர் முடிவு

குழையுடை முகத்தி னாள்கண் கோணைப்போர் செய்த மன்னர்

மழையிடை மின்னின் நொய்தா மறைந்தனர், விஞ்சை வேந்தர்

முழையிடைச் சிங்கமன்னான் மொய்யம ரேத்தி யார்த்தார்,

விழவுடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்த தன்றே. 198

பின்பு சீவகன் காந்தருவதத்தையை யழைத்துச் சென்று மனையகம்புக்கான், தோழரும் தம்பியரும் உடன் போந்தனர். பதுமுகன் புண்ணுற்ற தன் மார்பில் சிலையிட்டு எலி மயிர்ச் சட்டை யணிந்துகொண்டான். மனைக்கட்புகுந்த சீவகன், போர்ச் செயலால் பிறந்த பாவம் போக, பொன்னால் உருவம் செய்து தானம் செய்தான், பின்பு கோயிற்குச் சென்று வழிபட்டு மனையடைந்தான்.

சீவகன் தத்தையை மணத்தல்

இன்னிய முழங்கி யார்ப்ப ஈண்டெரி திகழ வேதம்

துன்னினர் பலாசிற்செய்த துடுப்பின்நெய் சொரிந்து வேட்ப,

மின்னியல் கலச நன்னீர் சொரிந்தனன், வீர னேற்றான்,

முன்னுபு விளங்கு வெள்ளி முனைத்தெழு முருக னன்னான். 199

கலுழவேகன் ஓலை விடுத்தல்

சீவகன் தத்தையுடன் கூடி இனிதிருக்கும் நாளில் ஒரு நாள் அவளுடன் அவன் இளமரக்கா ஒன்றிற்குச் செல்ல, அங்கே ஒருவன் தோன்றி, சீவகன்பால் ஓலையொன்றை நீட்டினான். அதன்கண் சீவகன் தத்தையை வீணையால் வென்றதும், கட்டியங்காரனால் போர்நிகழ்ந்ததும், பின்பு மணம் நடந்ததும் தரன் என்பானால் தனக்குச் சொல்லப்பட்டன எனக் கலுழவேகன் பாராட்டி எழுதி யிருந்தான். மேலும்,

எள்ளுநர்கள் சாயஎன தோளிரண்டும் நோக்கி

வெள்ளிமுழு துங்கொடி எடுத்ததுஇக லேத்தி

கள்செய்மலர் மார்பன்உறு காப்பிகழ்த லின்றி

உள்ளுபொருள் எம்முணர்த்தி யன்றியுள வேண்டா. 200

ஆம்பொருள் ளாகும்அது யார்க்குமொழிக் கொண்ணா

போம்பொருள்கள் போகுமவை பொறியின்வகை வண்ணம்

தேம்புனலை நீர்க்கடலும் சென்றுதர லின்றே,

வீங்குபுனல் யாறுமழை வேண்டியறி யாதே. 201

என்று இவ்வாறு எழுதியிருந்த ஓலையைப் படித்த சீவகன் மிக மகிழ்ந்து அக் கலுழவேகனான மாமன் அடியைத் திசை நோக்கி வணங்கி, அன்பு மிகவுடையனாய் நின்ற தரனுக்கு விடை கொடுத் தான், பின்பு கலுழவேகன் விடுத்த இனிய பொருள் பலவற்றையும் சீவகன் காந்தருவதத்தைக்குத் தந்து களிப்பித்தான்.

காந்தருவதத்தையார் இலம்பகம்

முற்றும்

குணமாலையார் இலம்பகம்

(குணமாலையார் இலம்பகம் : இது குணமாலையைச் சீவகன் மணந்துகொண்ட செய்தியைக் கூறும் இலம்பகம். குண மாலையும் சுரமஞ்சரியும் நீர்விளையாடச் சென்றதும், அவர்கள் இருவரும் சுண்ணம் காரணமாகப் பிரிந்து நீங்கியதும், குணமாலை நீராடி வருங்கால் அசனிவேகம் என்னும் அரசுவா மதம் கொண்டு அவளைக் கொல்லச் சென்றதும், சீவகன் அதனையடர்த்து அவளைக் காத்ததும், அதுவே வாயிலாக அவன் சீவகன்பால் கருத்தைப் போக்கியதும், கிள்ளையைத் தூதுவிட, சீவகன் மணத்துக்கு இசைந்ததும், குணமாலை மணமும், கட்டியங்காரன் சினம் கொண்டு சீவகனைப் பற்றி வருமாறு மதனனை ஏவியதும், மதனன் முதலாயினார் அவனைக் கொண்டேகுங்கால் தேவன் இடியும் மழையும் காற்றும் வருவித்து மயக்கி, சீவகனைக் கொண் டேகியதும், பிறவும் இதன்கண் கூறப்படுகின்றன.

இராசமாபுரத்தே சீவகன் காந்தருவதத்தையுடன் இனிது இருந்து வருநாளில் வேனிற்காலம் வந்தது.

காசறு துறவின் மிக்க கவுடளர் சிந்தை போல

மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண முன்னி

ஆசற நடக்கும் நாளுள் ஐங்கணைக் கிழவன் வைகிப்

பாசறைப் பரிவுதீர்க்கும் பங்குனிப் பருவம் செய்தான். 202

பொழில்களில் மரமும் செடியும் கொடியும் இனிய பூக்களைப் பூத்து நறுமணம் கமழ்ந்தன. புதுத் தளிரும் இலையும் தழைத்து இனிய நீழல் செய்தன, தென்றல் பொழில்களில் நுழைந்து போந்து வேனில் வெப்பத்தை மாற்றித் தண்மை பயந்து மெல்லென வீசலுற்றது. குயிலோசையும், வண்டிசையும் மாலைப் போதில் மக்கட்குப் பேரின்பம், தந்தன.

நகர மக்கள் பொழிற் கேகுதல்

நாக நாண்மலர் நாறு கடிநகர்

ஏக வின்பத் திராச புரத்தவர்,

மாக நந்து மணங்கமழ் யாற்றயல்

போக மேவினர் பூமரக் காவினே. 203

வாச வெண்ணெயும் வண்டிமிர் சாந்தமும்

பூசு சுண்ணமும் உண்ணும் அடிசிலும்

காசில் போகக் கலப்பையும் கொண்டவண்

மாசில் மாசனம் வாயில் மடுத்தவே. 204

பாட லோசையும் பண்ணொலி .யோசையும்

ஆட லோசையும் ஆர்ப்பொலி யோசையும்

ஓடை யானை யுரற்றொலி யோசையும்

ஊடு போய்உயர் வானுல குற்றவே. 205

மகளிர் இருந்த பொழிற் சிறப்பு

குவளையும் தாமரையும் நிரம்பித் தெளிந்த நீர் பொருந்திய குளம் ஒருபுறம் விளங்க, பூவும் தளிரும் சுமந்து புதர்கள் அழகு செய்ய, வாழையும் பலாவும் மாவும் பிறவும் இனிய கனிகளைச் சுமந்து இன்பம் செய்ய, நகர மகளிர் பொழில் உள்ளும் புறமும் நிறைந்திருந்தனர்.

கூறப் பட்டவக் கொய்ம்மலர்க் காவகம்

ஊறித் தேன்துளித் தொண்மது வார்மணம்

நாறி நாண்மலர் வெண்மணல் தாய்நிழல்

தேறித் தெண்கயம் புக்கது போன்றதே. 206

குணமாலையும் சுரமஞ்சரியும் மேவியிருத்தல்

காவிற் கண்டத் திரைவளைத் தாயிடை

மேவி விண்ணவர் மங்கையர் போன்றுதம்

பூவை யும்கிளி யும்மிழற் றப்புகுந்து

ஆவி யந்துகி லாரமர்ந் தார்களே. 207

பௌவ நீர்ப்பவ ளக்கொடி போல்பவள்

மௌவ லங்குழ லாள்சுர மஞ்சரி

கொவ்வை யங்கனி வாய்க்குண மாலையோடு

எவ்வந் தீர்ந்திருந் தாள்இது கூறுவாள். 208

குணமாலை, குபேரமித்திரன் என்னும் நாய்கனுக்கு அவன் மனைவி விநயமாலை என்பாட்குப் பிறந்த மகள், சுரமஞ்சரி என்பவள் குபேரதத்தன், சுமதி என்ற இருவர்க்கும் பிறந்த மகள், இவளும் குணமாலை மரபைச் சேர்ந்தவள், குணமாலையும் சுரமஞ்சரியும் இளமை தொட்டே பிரியா நண்பர்கள், வேனில் விளையாட்டுக்குறித்து, இருவரும் சுண்ணம் செய்து கொணர்ந் துள்ளனர்.

சுரமஞ்சரி குணமாலை கண்ணத்தை இகழ்தல்

சுண்ண மென்பதோர் பேர்கொடு சோர்குழல்

வண்ண மாலை நுசுப்பு வருத்துவான்

எண்ணி வந்தன கூறிவை யோவென

நண்ணி மாலையை நக்கன ளென்பவே. 209

குணமாலை உளம் கொதித்துக் கூறல்

பைம்பொன் நீளுல கன்றியிப் பார்மிசை

இம்ப ரென்சுண்ணம் ஏய்ப்ப உளவெனில்

செம்பொற் பாவையன், னாய்!செப்பு நீஎனக்

கொம்ப னாளும் கொதித்திது கூறினான். 210

சுரமஞ்சரி சினந்து கூறல்

சுண்ணம் தோற்றனம் தீம்புன லாடலம்

எண்ணில் கோடிபொன் ஈதும்வென் றாற்கென

வண்ண வார்குழ லேழையர் தம்முளே

கண்ணற் றார்கமழ சுண்ணத்தின் என்பவே. 211

இருவர் தோழியரும் தனித்தனியே இருவர் சுண்ணத்தையும் எடுத்துக்கொண்டு, இவற்றுள் நல்லது தெரிதல் வேண்டி ஆடவர் இருக்கும் சூழலுக்குச் சென்று காட்டுகின்றனர். அவர்கள் அத்துறை யில் புலமை மிக்கவன் சீவகனே, அவன்பாற் காட்டுமின் என விடுக்க, அவனைச் சென்றடைகின்றனர்.

சீவகன் தேர்ந்து குணமாலை சுண்ணம் நன்றென உரைத்தல்

“சுண்ணம் நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக்கு

அண்ணல்! கூறடி யேம்குறை” என்றலும்,

கண்ணிற் கண்டு, இவை நல்ல, கருங்குழல்

வண்ண மாலையி னீர்எனக் கூறினான். 212

சுரமஞ்சரியின் தோழி கூறல்

“மற்றிம் மாநகர் மைந்தர்கள் யாவரும்

உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்திவை

பொற்ற சுண்ணம் எனப்புகழ்ந் தார், நம்பி

கற்ற தும்அவர் தங்களொ டேகொலோ. 213

ஐய னேஅறி யும்என வந்தனம்

பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ

நொய்தின் தேர்ந்துரை, நூற்கடல்" என்றுதம்

கையி னால்தொழு தார்கமழ் கோதையார். 214

சீவகன் அவர்களைத் தெளிவித்தல்

நல்ல சுண்ணம் இவை, இவற் றிற்சிறிது

அல்ல சுண்ணம், அதற்கென்னை யென்றிரேல்,

புல்லு கோடைய, பொற்புடையப் பூஞ்சுண்ணம்,

அல்ல சீதம்செய் காலத்தி னாயவே. 215

சுரமஞ்சரி தோழி மீட்டும் கூறல்

“வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம்,

தீரக் காய்ந்துழி நல்லவும் தீயவாம்,

ஓரும் வையத் தியற்கையன் றோ?”என

வீர வேல்நெடுங் கண்ண விளம்பினாள். 216

சீவகன் மறுபடியும் வண்டுண்ணக் காட்டிச்

சுண்ணம் தெரிவித்தல்

மங்கை நல்லவர் கண்ணும் மனமும்போன்று

எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்!

வண்டு காள்!மகிழ் தேனினங் காள்மது

உண்டு தேக்கிடும் ஒண்ஞிமி றீட்டங்காள்! 217

சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமும்

மாலை யென்னும் மடமயில் சுண்ணமும்

சால நல்லன தம்முளும் மிக்கன

கோல மாகக்கொண் டுண்மின் எனச்சொன்னான். 218

இவ்வாறு சொல்லிச் சீவகன் இருவர் சுண்ணத்தையும் அள்ளி விண்ணிலே தூவினான். சுரமஞ்சரி சுண்ணம் கீழே வீழ்ந்தொழிய, குணமாலை சுண்ணத்தை வண்டினம் உண்டொழிந்தன. அதைக் கண்டதும் சீவகன் சுரமஞ்சரியின் தோழியை நோக்கி, இதனைச் சென்று நும் தலைவியர்க்கு உரைமின், என்றான். இச்செய்தி கேட்ட சுரமஞ்சரி பெரிதும் அவலமுற்று வேறு உரையொன்றும் ஆடாது வாளா இருந்தொழிந்தாள். அவள் துயரங்கண்ட குணமாலை மனம் பொறாது, அச் சுரமஞ்சரியைத் தேற்ற நினைந்து தகுவது செய்யலுற் றாள்.

குணமாலை இரத்தல்

திங்க ளங்கதிர் செற்றுழக் கப்பட்ட

பங்க யப்பட்டு வொத்துளை, பாவாய்!

நங்கை யென்னொ டுரையாய், நனியொல்லே

இங்கண் என்றடி வீழ்ந்திரந் திட்டாள். 219

சுரமஞ்சரி கூறல்

மாற்ற மொன்றுரை யாள்,“மழை வள்ளல்என்

ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்றசொல்

தோற்று வந்தென் சிலம்படி கைதொழ

நோற்பன், நோற்றனை நீ”என ஏகினாள். 220

இவ்வாறு சென்ற சுரமஞ்சரி தன் மனையகத்தே வாடி யிருந்தனள், அவள் வாட்டத்துக்குக் காரணமாராய்ந்த பெற்றோர் செய்வது யாதென ஆராயுமளவில், சுரமஞ்சரி தனக்கோர் கன்னி மாடமமைத்து அதனருகே ஆடவர் எவரும் குறுகாதவாறு காவல மைத்தல் வேண்டும் என வேண்டினள். இதைக்கேட்ட குபேரதத் தனும், கட்டியங்காரனது ஆணைபெற்று, அவள் விரும்பிய வண்ணமே ஆடவர் குறுகா அருங்கடியமைந்த கன்னிமாடம் கடிதிற் சமைத்துத் தந்தான்.

சுரமஞ்சரி நோன்பு

சென்று காலம் குறுகினும் சீவகன்

பொன்துஞ் சாகம் பொருந்தில் பொருந்துக

அன்றி என்நிறை யார்அழிப் பாரெனா

ஒன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள். 221

குணமாலை சுரமஞ்சரி பிரிவாற்றாது வருந்துதல்

இன்பக் காரண மாம்விளை யாட்டினுள்

துன்பக் காரண மாய்த்துறப் பித்திடும்

என்ப தேநினைந் தீர்மலர் மாலைதன்

அன்பி னால்அவ லித்தழு திட்டாள். 222

குணமாலை, பிரிவாற்றாமையால் தன் தீவினைக்குக்

கழுவாய் செய்தல்

தண்ணம் தீம்புன லாடிய தண்மலர்

வண்ண வார்தளிர்ப் பிண்டியி னானடிக்கு

எண்ணி யாயிர மேந்துபொற் றாமரை

வண்ண மாமலர் ஏற்றி வணங்கினாள். 223

இஃதிங்ஙனமிருக்க, வேனில் விருப்பால் பொழில் விளை யாடப் புகுந்த நகரமக்கள், பொழில் விளையாட்டிற்பொழுது போக்கி, நீர் விளையாடலைக் கருதினர். பலர் பலவகைத் தானங் களைச் செய்தனர். நந்தட்டன், புத்திசேனன் முதலியோர், தம்மிடையே இருந்த சீவகனைத் தனிப்பவிட்டு, விளையாட்டுக் காண விரும்பி வேறிடங்கட்குச் சென்றனர். ஒரு பக்கத்தே மைந் தரும் மகளிரும் பொழிலிலும் நீரிலும் விளையாட்டயர்கையில், ஒரு பக்கத்தே அந்தணர்பொருட்டு வேதியர் சிலர் சோறு சமைத்து வைத்திருந்தனர். அதனை ஒரு நாய் வந்து தொட்டதாக, அவர்கள் அதனைத் துரத்தி அடித்துக்கொண்டோடினார். அஃது அவர்களால் தாள்முறிந்து கயத்துநீரில் விழுந்தது. அம் மூர்க்கர் அதனை வளைத்துக்கொண்டனர்.

களிமகன் வரவு

மட்குடம் அல்லன மதியின் வெள்ளிய

கட்குடக் கன்னியர் இருவ ரோடுடன்

துட்கென யாவரும் நடுங்கத் தூய்மையில்

உட்குடைக் களிமகன் ஒருவன் தோன்றினான். 224

களிமகன் கூறல்

புடைத்தென் நாயினைப் பொன்றுவித் தீர்,உயிர்

சுடுக்கப் பேர்த்தனிர், தம்மின், கலாய்க்குறின்

தடக்கை மீளிமை தாங்குமின், அன்றெனின்

உடைப்பென் கட்குடம் என்றுரை யாடினான். 225

இவ்வாறு இவன் வருத்தக்கண்டதும், சீவகன் விரைந்து அவனிடம் போந்து நாயிழந்து நிற்கும் அவனது துயரைத் தேற்றி, அந்தணர்க்குத் துணைசெய்து அகற்றினான். பின்பு அச் சீவகன் தன் தோழருடன் நாய் கிடந்தவிடம் அணுகி, அதன் மனத்தே மறம் இல்லாமை யுணர்ந்து, அதன் செவியில் மந்திரமோதலுற்றான்.

நாய் தேவனாதல்

“நாயுடம் பிட்டிவண் நந்திய பேரொளிக்

காய்கதிர் மண்டலம் போன்றொளி கால்வதோர்

சேயுடம் பெய்துவை, செல்கதி மந்திரம்

நீயுடம் பட்டுநி னைமதி” என்றான். 226

இது கூறக்கேட்ட அந்த நாய் வால்குழைத்துத் தன் உள்ளத்து உவகையைப் புலப்படுத்திற்று. அதன் செவியில் ஐந்து மொழி களாலாகிய மந்திரத்தை ஓதிப் பின்வருமாறு கூறினான்.

உறுதிமுன் செய்த தின்றி

யொழுகினேன் என்று நெஞ்சின்

மறுகல்நீ, பற்றொடு ஆர்வம்

விட்டிடு, மரண அச்சத்து

இறுகல்நீ, இறைவன் சொன்ன

ஐம்பத அமுத முண்டால்

பெறுதிநற் கதியை என்று

பெருநவை அகற்றி னானே. 227

மனத்திடைச் செறும்பு நீங்கி மறவலை யாகி ஐந்தும்

நினைத்திடு, நின்கண் நின்ற நீனிற வினையின் நீங்கி,

எனைப்பகல் தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றற்கு

அனைப்பத வமிர்தம் நெஞ்சின் அயின்றுவிட்டகன்ற தன்றே. 228

நாயுடம்புவிட்டு நீங்கித் தேவவடிவு பெற்றதும், அத்தேவன் சீவகன் முன்னே தோன்றித் தன் நன்றி கூறுமுகத்தால் தான் சுதஞ் சணன் என்னும் தேவன் என்றும், தன்னுலகும் உலகிற் போகமும் சீவகன் அடியில் வைப்பதாகவும் சொன்னான். அவனைக் கண்டும் உரையைக் கேட்டும் வியப்பும் நன்மதிப்பும் கொண்டு சீவகன், தனக்குப் பிறவாற்றால் ஒரு குறையும் இல்லையென்றும், ஒருகால் தன்னைப் பகைவர் வளைத்துக்கொள்ளுமிடத்துத் தனக்குத் துணை செய்வது அமையும் என்றும் விடையிறுத்தான்.

தேவன் விடைபெற்றேகல்

இன்னிழல் இவரும் பூணான் இருவிசும் பிவர்த லுற்றுப்

பொன்னெழு வனைய தோளாற் புல்லிக்கொண் டினிய கூறி

“நின்னிழல் போல நீங்கேன், இடர்வரின் நினைக்க” என்று

மின்னெழூஉப் பறப்ப தொத்து விசும்பிவர்ந் தமரன் சென்றான். 229

தேவன் சென்றதும் சீவகனும் அவனுடைய தோழரும் அவ்விடத்து நின்றும் போய்விட்டனர். நகரமக்கள் நீர் விளை யாட்டு முடிந்ததும் நகரத்திற்குச் செல்லலுற்றனர். சீவிகையூர்ந்து செல்வார் பலர், தேர்மீது செல்வார் பலர், வேறு பலர் ஏனை ஊர்தி இவர்ந்தும் ஏகலுற்றனர். செல்லும்பொழுது அரசனது பட்டத்து யானையாகிய அசனிவேகம் என்பதும் மதம்பட்டுப் பாகர் அடக்க அடங்காது பிளிறிக்கொண்டு ஓடலுற்றது. கூடியிருந்த ஆடவரும் மகளிரும் நாற்றிசையும் வீற்று வீற்றாக ஓடி உயிர் தப்புவாராயினர். அவ் யானை குணமாலையும் அவளது தோழியும் இருந்த பக்கத்தை நோக்கி வரத்தொடங்கி விரைந்து நெருங்குவதாயிற்று. இந் நெருக்கடியில் விரைந்தோட மாட்டாது குணமாலை நெஞ்சு கலங்கினாள்.

குணமாலையின் தோழி யானைமுன் நிற்றல்

கருந்தடங் கண்ணி தன்மேல் காமுகர் உள்ளம்போல

இருங்களி றெய்த வோடச் சிவிகைவிட் டிளையரேக

அரும்பெற லவட்குத் தோழி, “ஆடவர் இல்லை” யோஎன்று

ஒருங்கை யுச்சிக் கூப்பிக் களிற்றெதிர் இறைஞ்சி நின்றாள். 230

நின்றவளது கருத்து இதுவென்றல்

“என்னைக்கொன் றிவள்க ணோடும்

எல்லையில், ஒருவன் தோன்றி

இன்னுயிர் இவளைக் காக்கும்,

அன்றெனில் என்கண் மாய்ந்தால்

பின்னைத்தான் ஆவ தாக”

என்றெண்ணிப் பிணைகொள் நோக்கி,

மின்னுப்போல் நுடங்கி நின்றாள்,

வீததை கொம்பொ டொப்பாள். 231

குணமாலை நிலையைச் சீவகன் காண்டல்

மணியிரு தலையும் சேர்த்தி வான்பொனின் இயன்ற நாணால்

அணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து

தணிவரும் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப்

பணிவரும் குரிசில் செல்வான் பாவையது இடரைக் கண்டான். 232

சீவகனது உட்கோள்

பெண்ணுயிர் அவலம் நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாதல்

எண்ணினன் எண்ணி நொய்தா இனமலர் மாலைசுற்றா,

வண்ணப்பொற் கடகம் ஏற்றா, வார்கச்சில் தானை வீக்கா,

அண்ணலங் களிற்றை வையா ஆர்த்துமேல் ஓடினானே. 233

குணமாலைமேலும் அவள் தோழிமேலும் பார்வைவைத்துச் செல்லும் யானை வேறுபக்கம் திரும்புமாறு அதன் மத்தகத்திற் பாய்ந்து அவர்களைச் சீவகன் உய்வித்தல்

படம்விரி நாகம் செற்றுப் பாய்தரு கலுழன் போல

மடவர லவளைச் செற்று மதக்களிறு இறைஞ்சும் போழ்தில்,

குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத்து

உடல்சினம் கடவக் குப்புற்று உருமென உரறியார்த்தான். 234

<div class="poem">

கூற்றென முழங்கிக் கையால்

கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து

காற்றென வுரறி நாகம்

கடாம்பெய்து கனலின் சீறி

ஆற்றலங் குமரன் தன்மேல்

அடுகளி றோட, அஞ்சான்,

கோற்றொடிப் பாவை தன்னைக்

கொண்டுய்யப் போமின் என்றான். 235

சீவகன் யானையொடு பொருது அதனைக் கொல்லாது நெடுந்தொலைவு செல்லவிடுத்தல்

மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே

பதியமை பருதி தன்மேல் படம்விரித் தோடி யாங்குப்

பொதியவிழ் கோதை தன்மேல் பொருகளி றகன்று பொற்றார்க்

கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே. 236

கையப் படுத்த லோடும்

கார்மழை மின்னி னொய்தா

மொய்கொளப் பிறழ்ந்து முத்தார்

மருப்பிடைக் குளித்துக் காற்கீ

ழையென அடங்கி வல்லான்

ஆடிய மணிவட் டேய்ப்பச்

செய்கழற் குரிசி லாங்கே

சுரந்துசேண் அகற்றி னானே. 237

இங்ஙனம் யானை சேணிற் சென்றதும், சீவகன் குண மாலையை நேரிற் கண்டு அவளது அழகில் தன் கருத்தையிழந்து தனியே உய்யானத்தை யடைந்தான். இப்பால் குணமாலையையும் அவள் தோழியர் தம் கடி மனைக்குக் கொண்டேகினர். அவள் மனத்தும் சீவகன்மேல் பெருங் காதல் எழுந்து வாட்டலுற்றது. இதன் உண்மை

யறியாத அவள் தாய் விநயமாலை, நெடிது விளையாடியதனால் இவட்கு இம்மெலிவு உளதாயிற்றுப்போலும் என்று நினைந்து தகுவன பல கூறி, குணமாலை வளர்த்த கிளியை அவட்குக் காட்டி, நின்னை நின் கிளி அழையாநின்றது, சென்று பாலூட்டுக என்று சொல்லிவிட்டுச் சென்றாள். தனித்திருந்த குணமாலை யுள்ளத்தே சீவகன் பொருட்டு எழுந்த வேட்கைத் தீ அவளது உள்ளத்தையும் உயிரையும் உடலையும் வெதுப்ப, அவள் பெரிதும் ஆற்றாளாயினள். பின்பு அவள் தனக்குள்ளே பலவாறு நினைக்க லுற்றாள்.

குணமாலை பெண் பிறப்பைப் பழித்தல்

கையி னால்சொலக் கண்களிற் கேட்டிடும்

மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன்,

செய்த வம்புரி யாச்சிறி யார்கள்போல்

உய்ய லாவதோர் வாயிலுண் டாங்கொலோ. 238

கண்ணும் வாள்அற்ற, கைவளை சோருமால்

புண்ணும் போன்றும் புலம்பும்என் நெஞ்சரோ

எண்ணில் காமம் எரிப்பினும் மேற்செலாப்

பெண்ணின் மிக்கது பெண்ணலது இல்லையே. 239

இவ்வாறு எண்ணமிட்டுக்கொண்டிருந்த இக்குணமாலைக்கு ஒரு நினைவு தோன்றிற்று. தன் கிளியைச் சீவகன் பால் தூதுவிட நினைத்தாள். அதனை அக் கிளியிடம் உரைப்ப, அதுவும் அதற் குடன்பட்டு அவன் இருக்குமிடம் சென்றது. ஆங்கே, சீவகன் அரசுவாமுன் அஞ்சி நடுங்கித் துவண்ட குணமாலை வடிவே அவன் முதன்முதலாகப் பெற்ற காட்சியாதலால், அதனையே மனக்கண்ணிற் கண்டு பெருவேட்கையுற்று, மேனி மெலிந்து, அவ்வுருவினைத் தானே ஒரு கிழியில் எழுதி அதன் அழகிடை யீடுபட்டிருந்தான். அது போது அவன்பால் அழகொழுகும் வடிவினளாய காந்தருவதத்தை வந்தாள். அவளைக் கிளி கண்டது.

கிளி தனக்குள் எண்ணுதல்

சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனினம்

அலங்கலுண்டு யாழ்செயும் அம்பொற் பூங்கொடி

நலம்பட நன்னடை கற்ற தொக்கும்இவ்

விலங்கரித் தடங்கணாள் யாவ ளாங்கொலோ. 240

யாவளே யாயினு மாக, மற்றிவள்

மேவிய பொருளொடு மீண்ட பின்னலால்

ஏவலாற் சேர்கலேன் என்று பைங்கிளி

பூவலர் சண்பகம் பொருந்திற் றென்பவே. 241

காந்தருவதத்தை சீவகன் எழுதி மகிழும் ஓவியத்தைக்

கண்டு புலந்து அவனோடு உரையாடுதல்

இதுஎன உரு?என, இயக்கி என்றலும்,

புதிதுஇது, பூந்துகில் குழல்கள் சோர்தலால்

மதுவிரி கோதையம் மாலை நின்மனம்

அதுமுறை இயக்கலின் இயக்கி யாருமே. 242

சீவகன் அவள் சினம் தணிவிப்பான் கூறுதல்

பாவைநீ புலவியில் நீடல், பாவியேற்கு

ஆவியொன்று இரண்டுடம் பல்லது, ஊற்றுநீர்க்

கூவல்வாய் வெண்மணல் குறுகச் செல்லுமே

மேவிப் பூங் கங்கையுள் விழைந்த அன்னமே. 243

அக் கூற்றால் அவள் புலவி மிகுதல்

பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவாள்,

நேர்மலர்ப் பாவையை நோக்கி, நெய்சொரி

கூரழல் போல்வதோர் புலவி கூர்ந்ததே,

ஆர்வுறு கணவன்மாட் டமிர்தின் சாயற்கே. 244

இது கண்டு சீவகன் ஆற்றாது பல பணிமொழிகள் இரந்து கூறினான். அவள் சினம் தணியாது அவனைத் தனிப்பவிட்டுத் தன் உறையுளை யடைந்தாள். “இதுவே தக்க காலம்” என வுணர்ந்த அக் கிளி அவனை யடைந்தது, அவனும் அதனை அன்போடு வரவேற்று, வரவின் காரணம் வினவினான்.

கிள்ளை விடையிறுத்தல்

மையலங் களிற்றோடு பொறாத வண்புகழ்

ஐயனைச் செவ்விகண் டறிந்து வம்மெனப்

பையர வல்குலெம் பாவை தூதொடு

கையிலங் கெஃகினாய்! காண வந்ததே. 245

சீவகன் வினவுதல்

வெஞ்சின வேழமுண்ட வெள்ளிலின் வெறியமாக

நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி

அஞ்சனத் துவலை யாடி நடுங்கினாள் நிலைமை யென்னை?

பைஞ்சிறைத் தத்தை! என்னப் பசுங்கிளி மொழியுமன்றே. 246

குணமாலையின் வேட்கைமிகுதியும் ஆற்றாமையும்

சொல்லி, மேலும் அக் கிளி கூறல்

கன்னிய ருற்றநோய் கண்ண னார்க்கும் அஃது

இதின்னதென் றுரையலர், நாணி னாதலான்

மன்னும்யான் உணரலேன், மாதர் உற்றநோய்

துள்ளிநீ அறிதியோ தோன்றல் என்றதே. 247

சீவகன் கூறுவது கேட்டுக் கிளி கூறல்

“சொல்ம ருந்துதந் தாய்! சொல்லும் நின்மனத்து

என்அ மர்ந்தது உரைத்துக்கொள் நீ” என,

வில்நி மிர்ந்தநின் வீங்கெழில் தோள்,அவட்கு

இன்ம ருந்துஇவை வேண்டுவல் என்றதே. 248

சீவகன் தன் உடன்பாடு உரைத்தல்

பொற்குன் றாயினும், பூம்பழ னங்கள்சூழ்

நெற்குன் றாம்பதி நேரினும் தன்னையான்

கற்குன் றேந்திய தோளிணை கண்ணுறீஇச்

சொற்குன் றாபுணர் கேன்சொல்லு போ என்றான். 249

கிளி ஓலை பெற்றுப் போதல்

சேலை வென்றகண் ணாட்குஇவை செப்பரிது,

ஓலை யொன்றுஎழு திப்பணி நீஎன,

மாலை மார்பன் கொடுப்பத் தினைக்குரல்

ஓலை யோடுகொண் டோங்கிப் பறந்ததே. 250

கிளி நீங்கிய பின் சீவகன் தத்தையிருந்த பெருமனைக்குச் சென்று காண, அவள் பூம்புடவை யொன்றால் தன் மேனி முழுதும் போர்த்துக்கொண்டு புலவியால் கண்மூடாது விழித்துக் கிடந்தான். அவன் அவளது புலவி தீர்த்து மகிழ்வித்தான். இப்பால்,

கிளியைத் தூதுவிடுத்துக் குணமாலை வருந்தி நிற்றல்

தன்துணைவி கோட்டியினில் நீங்கித் தனியிடம்பார்த்து

இன்துணைவற் சேர்வான் இருந்ததுகொல்! போந்ததுகொல்!

சென்றதுகொல்! சேர்ந்ததுகொல்! செவ்வி யறிந்துஉருகும்

என்துணைவி மாற்றம்இஃது என்றதுகொல்! பாவம்! 251

செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கோர் இன்னுரைதான்

தந்தாரேல் தந்தார்என் இன்னுயிர்தாம் தாராரேல்

அந்தோ குணமாலைக்கு ஆ!தகாது என்றுஉலகம்

நொந்துஆங்கு அழமுயன்று நோற்றானும் எய்துவனே. 252

கூடலிழைத்தல்

சென்றார் வரைய கருமம் செருவேலான்

பொன்தாங் கணியகலம் புல்லப் பொருந்துமேல்,

குன்றாது கூடுகஎனக் கூறிமுத்த வார்மணல்மேல்

அன்றுஆங்கு அணியிழையாள் ஆழியிழைத் தாளே. 253

கிளி வருதல்

பாகவரை வாங்கிப் பழுதாகில் பாவியேற்கு

ஏகுமால் ஆவி, எனநினைப்பப் பைங்கிளியார்

மாகமே நோக்கி மடவாளே அவ்விருந்தா

ளாகும்யான் சேர்வல் எனச்சென் றடைந்ததே. 254

கிளியை இனிது வரவேற்றவள் அது கொணர்ந்த

ஓலையைக் காண்டல்

தீம்பா லமிர்தூட்டிச் செம்பொன் மணிக்கூட்டில்

காம்பேர் பணைத்தோளி மென்பறவை கண்படுப்பித்து

ஆம்பால் மணிநாம் மோதிரந்தொட் டையென்னத்

தேம்பா எழுத்தோலை செவ்வனே நோக்கினாள். 255

சீவகன் விடுத்த ஓலை

கொடுஞ்சிலையான் ஓலை, குணமாலை காண்க!

அடுந்துயரம் உள்சுடவெந்து ஆற்றாதேன் ஆற்ற

விடுந்த சிறுகிளியால் விம்மல்நோய் தீர்ந்தேன்,

நெடுங்கணாள் தானும் நினைவகல்வா ளாக. 256

ஈட்டஞ்சால் நீள்நிதியும் ஈர்ங்குவளைப் பைந்தடஞ்சூழ்

மோட்டு வளம்சுரக்கும் ஊரும் முழுதீந்து

வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்மென்றோள்

பூட்டார் சிலைநுதலாட் புல்லா தொழியனே. 257

குணமாலை மனந்தேறித் தெய்வம் பரவுதல்

“பாலவியும் பூவும் புகையும் படுசாந்தும்

காலவியாப் பொன்விளைக்கும் தந்தும்மைக் கைதொழுவேன்;

கோலவியா வெஞ்சிலையான் சொற்குன்றா னாகஎனவே

நூலவையார் போல்நீங்கள் நோக்குமினே” என்றாள். 258

இஃது இவ்வாறாக, குணமாலையின் பெற்றோர், அவளது தாய்க்கு மூத்த தமையன் மகனுக்கு அவளை மணம் புணர்க்கக் கருதினர். இச் செய்தியை யறிந்த செவிலித்தாய் குணமாலைக்குக் கூறினள். இதனைக் கேட்கப்பெறாத குணமாலை தன் இருகை யாலும் இருகாதுகளையும் பொத்திக்கொண்டு வருந்தினாள்.

குணமாலை மறுத்துரைத்தல்

“மணிமதக் களிறு வென்றான் வருத்தச்சொற் கூலியாக

அணிமதக் களிறனானுக்கு அடிப்பணி செய்வ தல்லால்,

துணிவதென்? சுடுசொல் வாளால் செவிமுதல் ஈரல்” என்றாள்,

பணிவரும் பவளப் பாவை பரிவுகொண் டனையதொப்பாள். 259

“கந்துகப் புடையிற் பொங்கும் கலினமா வல்லன் காளைக்கு

எந்தையும் யாயும் நேரா ராய்விடின் இறத்தல் ஒன்றோ

சிந்தனை பிறிதொன் ராகிச் செய்தவம் முயறல் ஒன்றோ

வந்ததால் நாளை” என்றாள் வடுவெனக் கிடந்த கண்ணாள். 260

குணமாலையின் முதுக்குறைவு கேட்ட செவிலி, மகளின் கற்பு நலத்தை வியந்து மகிழ்ந்து அவளது பெற்றோர்க்குச் சொல்ல அவர்களும் அவள் விரும்பியவாறே சீவகனுக்குக் குணமாலையை மணம்புரிவிக்கத் தொடங்கிச் சான்றோர் நால்வரை மகட்கோள் உரைத்தற்குக் கந்துக்கடன்பால் விடுத்தனர். கந்துக்கடன் முதற்கண் அவர்களை இனிது வரவேற்று மிக்க சிறப்புச் செய்தான்.

சான்றோர் மகட்கொடை நேர்ந்து உரைத்தல்

“யாம்மகள் ஈதும், நீர்மகட் கொண்மின் எனயாரும்

தாம்மகள் நேரார், ஆயினும் தண்ணென் வரைமார்பில்

பூமகள் வைகும் புண்ணியப் பொற்குன் றனையானுக்கு

யாம்மகள் நேர்ந்தோம் இன்று” என நாய்கற் கவர்சொன்னார். 261

கந்துக்கடன் மகிழ்ந்துரைத்தல்

“சுற்றார் வல்வில் சூடுறு செம்பொன் கழலாற்குக்

குற்றேல் செய்தும் காளையும் யானும், கொடியானை

மற்சேர் தோளான் தன்மரு மானுக் கருள்செய்யப்

பெற்றேன்” என்னப் பேசினன் வாசம் கமழ்தாரான். 262

பின்பு அச்சான்றோர் கந்தூகனுக்குச் சீவகன் யானையை அடர்த்துக் குணமாலையைக் காத்தலும், அவள் அவன்பால் கருத்துற்றதையும் விளங்கக்கூறி விடைபெற்றுக் குபேரமித்திரனை யடைந்து நிகழ்ந்தவனைத்தும் மொழிந்தனர். பின்பு மணம் நேர்ந்த செய்தி சீவகற்கும் குணமாலைக்கும் தெரியவரவே, இருவரும் பெருமகிழ்வெய்தினர். மண நாள் குறிக்கப்பெற்றது.

திருமணம்

கரைகொன் றிரங்கு கடலின்கலி கொண்டுகல்லென்

முரசும் கறங்க முழவிம்மவெண் சங்கமார்ப்பப்

பிரசம் கலங்கிற் றெனமாந்தர் பிணங்கவேட்டான்

விரைசென் றடைந்த குழலாளைஅவ் வேனிலானே. 263

புலவி நுணுக்கம் சீவகன் மகிழ்ந்துரைத்தல்

பூவார் புனலாட்டி னுள் பூநறுஞ் சுண்ணம்

பாவாய் பணைத்தோள் சுரமஞ்சரி தோற்றாள்;

காவாதவள் கண்ணறச் சொல்லிய வெஞ்சொல்

ஏவோ அமிர்தோ எனக்குஇன்று? இது சொல்லாய். 264

குணமாலை புலத்தல்

நற்றோ ளவள்சுண் ணநலம் சொலுவான்

உற்றீர், மறந்தீர், மனத்துள் உறை கின்றாள்,

செற்றால்அரி தால்சென்மின், போமின் தீண்டாது;

எற்றேஅறி யாதஓர் ஏழையெ னோயான்? 265

தூமம்கமழ் பூந்துகில் சோர அசையாத்

தாமம்பரிந் தாடுதண் சாந்தம் திமிர்ந்திட்டு

ஏமன்சிலை வாணுதல் ஏற நெருக்காக்

காமன்கணை யேர்கண் சிவந்து புலந்தாள். 266

சீவகன் புலவி தீர்த்தல்

மின்னேர் இடையாள்அடி வீழ்ந்தும் இரந்தும்

சொல்நீர்அவள் அற்பழ லுட்சொரிந் தாற்ற,

இந்நீரன கண்புடை விட்டகன்று இன்பம்

மன்னார்ந்து மதர்ப்பொடு நோக்கினள் மாதோ. 267

அன்று நீர்விளையாட்டுக்காலத்தே மதம் மிக்குக் குண மாலையைக் கொல்லப்போந்த அசனிவேகம் என்னும் அரசுவா, தான் சீவகனுக்குத் தோற்றோடி வந்த மானத்தால், மதம் தணிந்து, உணவு கொள்ளாது நாளும் மெலிவதாயிற்று, அதனையறிந்த வேந்தனாகிய கட்டியங்காரன், உற்றது என்? என்று பாகரை வினவ, அவன் குறிப்பறிந்து அப் பாகர், நீர் விளையாடிய நாளில் சீவகன் இதற்குச் சினமுண்டாக்கி யடர்த்தான். அன்றுமுதல் இஃது இவ்வாறு மெலிவதாயிற்று என்றனர். வேடுவரை வெருட்டி அவர் கவர்ந்து சென்ற ஆனிரையைச் சீவகன் மீட்டதுமுதல் கட்டியங்காரனுக்குச் சீவகன்பால் பகைமையுண்டாயிருந்தமையின், தன் வீரரை விளித்துச் சீவகனை இன்னே பிணித்துக் கொணர்மின், என்று பணித்தான். வீரர் பலர் சீவகன் இருந்த மனையை நோக்கி வந்தனர்.

வீரர் வரவைச் சீவகன் அறிதல்

திங்கள்சேர் முடியி னானும்

செல்வியும் போன்றும் செம்பொன்

இங்குவார் கழலி னானும்

கோதையும் இருந்த போழ்தில்

சிங்கவே றெள்ளிச் சூழ்ந்த

சிறுநரிக் குழாத்திற் சூழ்ந்தார்

அங்கது கண்ட தாதி

ஐயனுக் கின்ன தென்றாள். 268

சீவகன் வீரரை வினாதல்

கடுகிய இளையர் நோக்கும் கண்ணிய பொருளும் எண்ணி

அடுசிலை யழல வேந்தி ஆரூயிர் பருகற் கொத்த

விடுகணை தெரிந்து தானை வீக்கற விசித்து வெய்தாத்

தொடுகழல் நரல வீக்கிச் “சொல்லுமின் வந்தது” என்றான். 269

வீரர் தலைவனான மதனன் தான் வந்தது சொல்லுதலும்

அது கேட்டுச் சீவகன் சினந்துரைத்தலும்

“அடிநிழல் தருக என்றெம் ஆணைவேந் தருளிச் செய்தான்

வடிமலர்த் தாரி னாய்நீ வரு”கென, வானின் உச்சி

இடியுரு மேற்றின் சீறி யிருநிலம் சுடுதற்கொத்த

கடிமதில் மூன்று மெய்த கடவுளின் கனன்று சொன்னான். 270

வாளிழுக் குற்ற கண்ணாள்

வருமுலை நயந்து வேந்தன்

கோளிழுக் குற்ற பின்றைக்

கோத்தொழில் நடாத்து கின்றான்;

நாள்இழுக் குற்று வீழ்வ

தின்றுகொல்? நந்த! திண்தேர்

தோள்இழுக் குற்ற மொய்ம்ப!

பண்ணெனச் சொல்லி னானே 271

இவ்வாறு சொல்லக் கேட்ட நந்தட்டன் முதலிய தோழர்கள் சீவகனைக் காத்தற்குச் சிங்கவேறுபோலப் படைபண்ணலுற்றனர். இதனைப் பார்த்திருந்த கந்துக்கடன் தன் மனத்தே வேறு நினைக்க லானான்.

கந்துக்கடன் உட்கோள்

வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் செயல தாகும்,

காய்ந்திடு வெகுளி நீக்கிக் கைகட்டி இவனை யுய்த்தால்,

ஆய்ந்தடும் அழற்சி நீங்கும், அதுபொருள் என்று நல்ல

சாந்துடை மார்பன் தாதை தன்மனத் திழைக்கின் றானே. 272

இக் கருத்தைச் சீவகற்குரைப்ப, அவன் உட்கொண்ட போது, அச்சணந்தி யாசிரியன் உரைத்ததும் நினைவிற்கு வந்தது. பின்பு சீவகன் வீரர்கைப் படுவதே தக்கதென வுணர்ந்து அடங்கி நின்றான்.

சீவகன் வீரர்கை யகப்படல்

ஈன்றதாய் தந்தை வேண்ட இவ்விட ருற்ற தென்றால்

தோன்றலுக்கு ஆண்மை குன்றாது என்றசொல் இமிழிற் பூட்டி

மூன்றனைத் துலக மெல்லாம் முட்டினு முருக்கு மாற்றல்

வான்தரு மாரி வண்கை மதவலி பிணிக்கப்பட்டான். 273

கண்டிருந்த மக்கள் புலம்புவதொருபுறமாக,

சுநந்தை வருந்துதல்

தோளார் முத்தும் தொன்முலைக் கோட்டுத் துயல்முத்தும்

வாளார் உண்கண் வந்திழி முத்தும் இவைசிந்தக்

காளாய்! நம்பி! சீவகசாமி! எனநற்றாய்,

மீளாத் துன்ப நீள்கடல் மின்னின் மிசைவீழ்ந்தாள். 274

குணமாலை துயருறுதல்

பாலா ராவிப் பைந்துகி லேந்திப் படநாகம்

போலா மல்குற் பொற்றொடி பூங்கண் குணமாலை

“ஏலாது ஏலாது எம்பெரு மானுக்கு இஃது” என்னா

நூலார் கோதை நுங்கெரி வாய்ப்பட்ட டதுஒத்தான். 275

கந்துக்கடன் மகளிரைத் தெளிவித்தல்

கண்துயி லனந்தர் போலக் கதிகளுள் தோன்று மாறும்,

விட்டுயிர் போகு மாறும் வீடுபெற் றுயரு மாறும்

உட்பட வுணர்ந்த யானே யுள்குழைந் துருகல் செல்லேன்;

எட்பக வனைத்தும் ஆர்வம் ஏதமே, இரங்கல் வேண்டா 276

சீவகன் செல்வதனைக் கண்டோர் கூறிக்கொள்ளுதல்

வினையது விளைவு காண்மின் என்றுகை விதிர்த்து நிற்பார்,

இனையனாய்த் தெளியச் சென்றால் இடிக்குங்கொல் இவனை யென்பார்;

புனைநலம் அழகு கல்வி பொன்றுமால் இன்றொடென்பார்

வனைகலத் திகிரிபோல் மறுகும்எம் மனங்கள் என்பார். 277

நோற்றிலர் மகளிர் என்பார்;

நோம்கண்டீர் தோள்கள் என்பார்;

கூற்றத்தைக் கொம்மை கொட்டிக்

குலத்தொடு முடியும் என்பார்;

ஏற்றதொன் றன்று தந்தை

செய்தஇக் கொடுமை என்பார்,

ஆற்றலள் சுநந்தை என்பார்;

ஆதகாது அறனே என்பார். 278

சீவகன் வீரரிடையே அவருடன் போதல்

நீரகம் பொதிந்த மேக

நீனிற நெடுநல் யானைப்

போர்முகத் தழலும் வாட்கைப்

பொன்னெடுங் குன்ற மன்னான்,

ஆர்கலி யாணர் மூதூர்

அழுதுபின் செல்லச் செல்வான்,

சீருறு சிலம்பி நூலால்

சிமிழ்ப்புண்ட சிங்க மொத்தான். 279

கந்துக்கடன் விரைந்து அரசனையடைந்து பன்னிரு கோடிப் பசும்பொன்னைத் தந்து அவனது சீற்றத்தைத் தணிக்க முயல் வானானான்.

கந்துக்கடன் அரசற்குக் கூறல்

மன்னவ, அருளிக் கேண்மோ

மடந்தையோர் கொடியை மூதூர்

நின்மதக் களிறு கொல்ல

நினக்கது வடுவென் றெண்ணி,

என்மகன் அதனை நீக்கி

இன்னுயி ரவளைக் காத்தான்,

இன்னதே குற்ற மாயின்,

குணமினி யாது? வேந்தே! 280

நாண்மெய்க்கொண் டீட்டப் பட்டார்

நடுக்குறு நவையை நீக்கல்

ஆண்மக்கள் கடனென் றெண்ணி

யறிவின்மை துணிந்த குற்றம்

பூண்மெய்க்கொண் டகன்ற மார்ப

பொறுமதி என்று பின்னும்

நீண்மைக்கண் நின்று வந்த

நிதியெலாம் தருவல் என்றான். 281

இதனோடமையாது, வேட்டுவரை வெந்நிட்டோடச் செய்து அவர் கவர்ந்து சென்ற ஆனிரைகளை மீட்டு அரசற்கு நிகழவிருந்த வடுவைச் சீவகன் மாற்றியதையும் கந்துகன் விதந்தோதினான்.

கட்டியங்காரன் சினம் தணியாது செய்வது கூறல்

ஆய்களிற் றசனி வேகம் அதன்மருப் பூசியாகச்

சீவகன் அகன்ற மார்பம் ஓலையாத் திசைகள் கேட்பக்

காய்பவன் கள்வரென்ன எழுதுவித் திடுவல், இன்னே

நீபரி வொழிந்து போய்நின் அகம்புகு, நினையல், என்றான். 282

இச் சொற்களால் மனம் புண்பட்டு ஆற்றானாய்க் கந்துகன் தன் மனைக்கு மீண்டான். அவன் முயற்சி பயன்தாராமை கண்டு சுநந்தையும் ஆறாத் துயருறுவாளாயினள். அப்போழ்தில், கந்துகண் பண்டு நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியைக் கூறலுற்று, “சுநந்தாய் பண்டு உனக்குப் பல குழந்தைக்கள் பிறந்து பிறந்து இறந்தன. ஒருகால், யான் கருக்கொண்டிருக்கும் இம்மகவு இறப்பின் யான் உயிர் தரியேன் என்று உட்கொண்டனை, அப்போது ஒரு முனிவன் வந்தான். அவற்குப் பசி தீர உணவளித்து உற்ற குறையைத் தெரிவிக்க அவன்,” நீவிர் கவலல் வேண்டா, நீவிர் ஒரு மகனைப் பெறுவீர். அவனை ஒரு காலத்தே அருளிலான். ஒருவன் கைக்கொண்டு செல்வன், அதுகண்டு ஊரவர் அஞ்சுவர், நீவிரும் வருந்துவீர், ஆனால், அவனை ஓர் இயக்கன் கொண்டு சென்று காப்பான், சில பகல் கழிந்தபின் அவனைக் காண்பீர் என்று கூறினன். ஆதலால், நின் மனக்கவலை நீங்குவாயாக,’ என்று சொன்னான்.

பதுமுகன் முதலிய தோழர் செய்தியறிந்து

செய்வது சூழ்தல்

நட்டவற் குற்ற கேட்டே பதுமுகன் நக்குமற்றோர்

குட்டியைத் தின்ன லாமே கோட்புலி புறத்த தாக,

கட்டியங் காரனென்னும் கழுதைநம் புலியைப் பாய்

ஒட்டியிஃ துணர லாமேபுரைவல்லை அறிக என்றான். 283

சென்ற ஒற்றன் முன்பு சீவகற்கு நிகழ்ந்த வனைத்தும் ஒன்று விடாது அறிந்துவந்துரைத்தான். சீவகன் வீரர் கைப்படுதற்குக் கந்துக்கடனும் ஓராற்றால் துணையானான் என்றறிந்து மதிமயங் குகையில், புத்திசேனன் என்பான் ஒரு சூழ்ச்சி சொல்லலுற்றான்.

புத்திசேனன் கூறல்

நிறைத்திங்கள் ஒளியொ டொப்பான்

புத்திசேன் நினைந்து சொல்லும்,

மறைத்திங்கள் நகரை வல்லே

சுடுதும்நாம், சுடுதலோடும்,

இறைக்குற்றேல் செய்த லின்றி

எரியின்வாய்ச் சனங்கள் நீங்கச்

சிறைக்குற்றம் நீக்கிச் செற்றாற்

செகுத்துக்கொண் டெழுதும் என்றான். 284

இவன் இவ்வாறு கூற, இதனைத் தக்கதெனத் துணிந்த ஏனையோரும் மேலே செய்யக் கடவவற்றைப் பேசிக்கொண் டிருக்குமளவையில், நந்தட்டனும் நபுல விபுலர்களும், குபேரமித் திரனும், அவன் பகுதியினரும் பிறரும் வந்து ஈண்டினர். பதுமுகன் அவரவர் இருக்க வேண்டும் இருப்பும் வகுப்பும் காட்ட, எல்லோரும் அவ்வாறே இருந்தனர். இச்செய்தி காந்தருவதத்தைக்குத் தெரிந்தது.

தத்தை தனக்குப் பாதுகாவலாகத்

தெய்வங்களை வருவித்தல்

பொன்னணி மணிசெ யோடை நீரின்வெண் சாந்துபூசித்

தன்னுடை விஞ்சை யெல்லாம் தளிரியல் ஓதலோடும்,

மின்னுடை வாளும் வேலும் கல்லொடு தீயும் காற்றும்

மன்னுட னேந்தித் தெய்வம் மாதரைச் சூழ்ந்த வன்றே. 285

தத்தை தன் விஞ்சையால் சீவகனைச் சிறைமீட்பின்

வரும் பழி நினைந்து இரங்குதல்

மன்னன் செய்த சிறைமா கடலுட் குளித்தாழ்வுழித்

தன்னை யெய்திச் சிறைமீட்டனள் தன்மனை யாள்எனின்,

என்னை யாவது இவன்ஆற்றலும் கல்வியு மென்றுடன்

கொன்னும் வையம் கொழிக்கும் பழிக்கு என்செய்கோ, தெய்வமே. 286

ஆவ தாக;புகழும் பழியும் எழுநாள் அவை

தேவர்மாட் டும்உள;மக்களுள் இல்வழித் தேர்கலேன்,

நோம்என் நெஞ்சம் எனநோக்கி நின்றாள் சிறைப்பட்டதன்

காவற் கன்றின் புனிற்றாவன கார்மயிற் சாயலே. 287

சீவகன் நினைவு

இனி, வீரர் குழாத்திடையே மதனனுடன் செல்லும் சீவகன் தன் உள்ளத்தே வெகுளித் தீப் பொங்கப் பல பொருள்களை நினைக்கலுற்றான்.

மாநகர் சுடுதலொன்றோ, மதனனை யழித்த லொன்றோ,

வானிக ரில்லா மைந்தர் கருதியது, அதுவும் நிற்க

வேய்நிக ரில்லதோளி விஞ்சையால் விடுத்துக் கொள்ளப்

போயுயிர் வாழ்தல் வேண்டேன் எனப்பொருள் சிந்திக் கின்றான். 288

கட்டியங்காரனைக் கோறற்கு இது காலமன்றெனத்

தெளிந்து சுதஞ்சணனை நினைத்தல்

மின்னிலங் கெயிற்று வேழம்

வேழத்தாற் புடைத்துத் திண்தேர்

பொன்னிலங் கிவுளித் தேரால்

புடைத்துவெங் குருதி பொங்க

இன்னுயி ரவனை யுண்ணும்

எல்லைநாள் வந்த தில்லை

என்னைஇக் கிருமி கொன்று?என்

தோழனை நினைப்ப லென்றான். 289

இடியும் மின்னும் முழக்கமும் கலந்த பெருமழையுடன் சுதஞ்சணன் வந்து சீவகனைக் கொண்டேகல்

விண்ணும் மண்ணும் அறியாது விலங்கொடு மாந்தர்தம்

கண்ணும் வாயும் இழந்தாம் கடல்கொண்டது காண்கெனப்

பெண்ணும் ஆணும் இரங்கப் பெருமான்மகன் சாமியை

அண்ண லேந்தி யகலம் புலிக்கொண்டெழுந் தேகினான். 290

அதனைத் தன் விஞ்சையால் காந்தருவதத்தை யுணர்ந்து அவற்கு நன்றுண்டாக என வாழ்த்தினளாயினும், அவனை மறுவலும் காணும் நாள் என்றோ எனக் கலக்கமுற்றாள். பின்பு ஒருவாறு தேறி, தனக்குத் துணைசெய்த தெய்வங்கட்கு அவள் விடை கொடுத் தனுப்பினள்.

சீவகன் மறைந்தது கண்ட மதனன் முதலாயினர்

செய்வது சூழ்தல்

மலைத்தொகை யானை மன்னன்

மைத்துனன் மதனன் என்பான்

கொலைத்தொகை வேலி னானைக்

கொல்லிய கொண்டு போந்தான்

நலத்தகை யவனைக் காணான்

நஞ்சுயிர்த் தஞ்சி நோக்கி

சிலைத்தொழில் தடக்கை மன்னற்கு

இற்றெனச் செப்பு கின்றான். 291

மன்னனாற் சீறப் பட்ட

மைந்தனைக் கொல்லப் போந்தாம்

என்னினிச் சொல்லிச் சேறும்,

என்செய்தும் யாங்க ளெல்லாம்

இன்னது பட்ட தென்றால்

எரிவிளக் குறுக்கும் நம்மைத்

துன்னுபு சூழ்ந்து தோன்றச்

சொல்லுமின் செய்வ தென்றான். 292

அவர்கள் தங்களுள் ஒருவனைக் கொன்று, கட்டியங்காரனிடம் சீவகனைக் கொன்றதாகப் பொய்யே சொல்லிவிடத் துணிந்து சென்றனர்.

மதனன் அரசற்குக் கூறல்

காய்சின வெகுளி வேந்தே

களிற்றொடும் பொருத காளை,

மாசனம் பெரிது மொய்த்து

மழையினோ டிருளும் காற்றும்

பேசிற்றான் பெரிதும் தோன்றப்

பிழைத்துய்யப் போத லஞ்சி

வாசங்கொள் தாரி னானை

மார்புபோழ்ந் துருட்டி யிட்டேம். 293

அரசன் அதுகேட்டு மகிழ்ந்து சிறப்புச் செய்தல்

அருள்வலி யாண்மை கல்வி

அழகறி விளமை யூக்கம்

திருமலி ஈகை போகம்

திண்புகழ் நண்பு சுற்றம்

ஒருவர்இவ் வுலகில் யாரே

சீவகன் ஓக்கும் நீரார்

பெரிதரிது இவனைக் கொன்றாய்

பெறுகஎனச் சிறப்புச் செய்தான். 294

குணமாலையார் இலம்பகம்

முற்றும்

பதுமையார் இலம்பகம்

(பதுமையார் இலம்பகம் : சீவகன் பதுமையை மணந்து கொண்ட செய்தியைக் கூறும் இலம்பகம். இதன்கண், சீவகன் தேவனுடன் சில நாளிருந்து பின் பல நாடுகளையும் காண்டற்கு விரும்பி, அவன் காட்டிய நெறியைக் கடைப்பிடித்துப் பல்லவ தேயத்தையடைந்து அரசகுமரனான உலோகபாலனைக் கண்டதும், அவன் தங்கை பதுமையென்பாள் பூக்கொய்யுமிடத்து அரவு தீண்டப்பெற்று உயிர் சோர்ந்ததும், அரசன் மகள் விடந் தீர்த் தார்க்கு அவளை மணம் செய்து கொடுப்பேனெனத் தெரிவித்ததும், சீவகன் விடந் தீர்த்ததும், அவளை மணந்து சின்னாள் தங்கியிருந்து, அவட்கு அறிவியாமலே நீங்கிச் சென்றதும், பதுமை தோழி யொருத்தி தேற்றத் தேறியிருந்ததும், பிறவும் உரைக்கப்படுகின்றன.

சுதஞ்சணனால் சிறை வீடு பெற்ற சீவகனது மன நிலை

விலங்கிவில் லுமிழும் பூணான்

விழுச்சிறைப் பட்ட போழ்தும்

அலங்கலந் தாரி னான்வந்

தருஞ்சிறை விடுத்த போழ்தும்

புலம்பலும் மகிழ்வு நெஞ்சில்

பொலிதலும் இன்றிப் பொன்னார்ந்து

உலம்கலந் துயர்ந்த தோளான்

ஊழ்வினை யென்று விட்டான். 295

சுதஞ்சணன் சீவகனைச் சுமந்துகொண்டு தன் மலைக்குக் கொண்டு சென்று, தூய நீராட்டி, மங்கலவணியணிந்து தன்னுரிமை மகளிர் முன் நிறுத்தி, “இவன் ஒரு பவித்திர குமரன் என்று கூறிப் பாராட்டினன். அவர்களும் சீவகன்பால் பேரன்பு காட்டி அவனை மகிழ்வித்தனர். இந்நிலையில், அவர்கள் சுதஞ்சணனை நோக்கி, நினக்கும் இவற்கும் எவ்வாறு தொடர்புண்டாயிற்று” என்று வினவ, அவன்தான் கொண்டிருந்த நாயுடம்பு நீங்குதற்குச் சீவகன் செய்த மந்திரவுதவியைச் சொல்லிப் பாராட்டினான்.

தெய்வ மகளிர் கூறல்

கடற்சுற வுயரிய காளை யன்னவன்

அடற்கரும் பகைகெடுத் தகன்ற நீணில

மடத்தகை யவளொடும் வதுவை நாட்டிநாம்

கொடுக்குவம் எனத் தெய்வ மகளிர் கூறினார். 296

சீவகன் அம் மகளிர்க்குக் கூறல்

செருநிலத் தவனுயிர் செகுத்து மற்றெனக்கு

இருநிலம் இயைவதற் கெண்ணல் வேண்டுமோ?

திருநிலக் கிழமையும் தேவர் தேயமும்

தரும்நிலத் தெமக்கெனில் தருகும் தன்மையீர். 297

அவன் சுதஞ்சணற்குத் தன் கருத்தையுரைத்தல்

மண்மிசைக் கிடந்தன மலையும் கானமும்,

நண்ணுதற் கரியன நாடும் பொய்கையும்,

கண்மனம் குளிர்ப்பன ஆறும் காண்பதற்கு

எண்ணமொன் றுளதெனக்கு, இலங்கு பூணினாய். 298

“ஊற்றுநீர் கூவலுள் உறையும் மீனனார்

வேற்றுநா டதன்சுவை விடுத்தல் மேயினார்,

போற்றுநீ போவல்யான்” என்று கூறினாற்கு

ஆற்றின தமைதியங் கறியக் கூறினான். 299

சீவகன் செல்லுதற்கு நெறி கூறலுற்ற சுதஞ்சணன், இம்மலைக்கு இரண்டு காதம் செல்லின் அரணபாதமென்றொரு மலை தோன்றும். அதனடிவாரத்தில் சாரணர் பலர் உளர். அவரை வழிபடின், இயக்கி யொருத்தி தோன்றி இனிய விருந்தூட்டுவள், உண்டபின், அச் சாரலிலே செல்க. இருபத்தைங் காதம் மிக்க யானை செறிந்த காடொன்று கங்கைக் கரையில் உண்டு. அதன்கண் இரண்டு காதம் சென்றால் பேய்வனம் ஒன்று காணப்படும். அங்கே பேய்கள் அழகிய மகளிர் உருக்கொண்டு போந்து வஞ்சம் செய்யும், அவ்வஞ்சனைக்கு இடந்தராது மேலே ஒரு காதம் செல்லின், பல்லவதேயம் காணப்படும். அந்நாட்டில் வழி வருத்தம் தீர இருதிங்கள் இருந்து பின், போகலுறின் நெடுஞ்சுரம் கடத்தல் வேண்டும். அதன் கொடுமை பெரிது. அங்கே நெறியின் நீங்கிய தாபதரும் இருப்பர். அதனைக் கடந்து செல்லின், சித்திரகூட மலையைக் காணலாம். அதனருகே அஞ்சனமா நதி யோடுகின்றது. அது மிக இனிய இடமாகும். அங்கே,

இதுபள் ளிஇடம் பனிமால் வரைதான்,

அதுதெள் ளறல்யாறு, உவைதே மரமாக்,

கதிதள் ளியிரா துகடைப் பிடிநீ,

மதிதள் ளியிடும் வழைசூழ் பொழிலே. 300

இவ்விடத்தின் நீங்கிச் சென்றால் பன்னிரு காதப் பரப்பும் விளைநிலமேயாம். அந்த நாடு தக்க நாடு எனப்படும். அதற்குப் பின் பேர் யாறு ஒன்று காண்பாய். அதனை நீந்திச் செல்லின் கானவர் வாழும் பெருங்காடு ஒன்று தோன்றும். அதனுள்ளே நான்கு வாவிகள் உள்ளன. அவற்றைப் பொருள் செய்து நோக்காது, மேலும் ஓர் ஐங்காதம் மிக்க மலர் செறிந்த இனிய காடொன்றைக் காணலாம். அதனைக் கண்டு செல்லின் எதிரே வனகிரி என்னும் மலை தோன்றும். அதனைக் கடத்தற்கு வேண்டிய வழிகள் மிக அரியன வாகும். ஆயினும் கடந்தேகின், கவர்த்த வழிகள் பல காணப்படும். அங்கே, ஒரு சுனை தோன்றும், அதனருகே ஒரு சிலாவட்டம் உண்டு. அதன் மருங்கே வேங்கை மரம் நிற்கும். அதன் பக்கத்தே ஒரு செவ்விய நெறி செல்கின்றது. அதனைத் தொடர்ந்து சென்றால் மத்திம தேயத்தையடைவாய். அவ்வரசன் நினக்குத் தன் மகளைத் தந்து இங்கே உறைக என விழைவன். நின் தோழர்களும் அங்கே வந்து சேர்வர். இவ்வாறு நெறியும், நெறிக்கண் நிகழ்வனவும் கூறி அத் தேவன், இனிய இசைக்குரிய குரல் தருவதும், பாம்பு முதலிய வற்றின் விட மொழிப்பதும், வேற்றுடம்பு தருவதுமாகிய மூன்று மறைமொழிகளை யோதிக் கொடுத்தான். அவன்பால் விடை பெற்றுக்கொண்டு சீவகனும் புறப்பட்டான். புறப்படும்போது அவன் மனத்தே தன் மனைவியரைக் கூடுங் காலம் என்றோ என ஓர் எண்ணந் தோன்ற, அத் தேவன் அதனையுணர்ந்து பன்னிரண்டு திங்களுள் அவர்களை நீ சேர்வை. பகைவனை வென்று அரசுரிமை யும் எய்துவை என்றான்.

தேவன் சீவகனை மலையடிக்குக் கொணர்தல்

அழல்பொதிந்த நீளெஃகின்

அலர்தார் மார்பற் கிம்மலைமேல்

கழல்பொதிந்த சேவடியால்

கடக்க லாகா தெனவெண்ணிக்

குழல்பொதிந்த தீஞ்சொல்லார்

குழாத்தின் நீங்கிக் கொண்டேந்தி

நிழல்பொதிந்த நீண்முடியான்

நினைப்பிற் போகி நிலத்திழிந்தான். 301

அவன்பால் சீவகன் விடைகொண்டேகுதல்

வண்தளிர்ச் சந்தனமும்

வாழையு மாவும் வான்தீண்டி

விண்டொழுகு தீங்கனிகள்

பலவு மார்ந்த வியன்சோலை

மண்கருதும் வேலானை

“மறித்தும் காண்க” எனப் புல்லிக்

கொண்டெழுந்தான் வானவனும்

குரிசில் தானே செலவயர்ந்தான். 302

சீவகன் மலைச்சாரலில் செல்லுதல்

தோடேந்து பூங்கோதை வேண்டேம்

கூந்தல், தொடேல், எம்மில்

பீடேந் தரிவையர்இல் பெயர்கென்

றூடு மடவார்போல்

கோடேந்து குஞ்சரங்கள் தெருட்டக்

கூடா பிடிநிற்கும்

காடேந்து பூஞ்சாரல் கடந்தான்

காலில் கழலானே. 303

சீவகன் வேட்டுவர் தலைவனைக் காண்டல்

காழக மூட்டப் பட்ட

காரிருள் துணியு மொப்பான்

ஆழளை யுடும்பு பற்றிப்

பறித்துமார் பொடுங்கி யுள்ளான்

வாழ்மயிர்க் கரடி யொப்பான்

வாய்க்கிலை யறிதல் இல்லான்

மேழகக் குரலி னானோர்

வேட்டுவன் தலைப்பட் டானே. 304

அவன், தழையுடுத்த பெண்களோடு மரவுரியாடையுடுத்து, காலிற் செருப்பும் தோளில் வில்லும் அம்புக்கூடும் சுமந்துவரக் கண்டு அவனை “நீ எம் மலையில் உறைகின்றாய்” என வினவினன்.

வேடன் விடை

மாலைவெள் ளருவி குடிமற்றிதா தோன்றுகின்ற

சோலைசூழ் வரையின் நெற்றிச் சூழ்கிளி சுமக்க லாற்றா

மாலையந் தினைகள் காய்க்கும் வண்புன மதற்குத் தென்மேன்

மூலையங் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான். 305

வேடன் ஊனும் கள்ளுமே தனக்கும் இனத்தவர்க்கும் உண வென்றும், அவை யில்வழித் தாம் வாழ்தல் அரிதென்றும் கூறக் கேட்டுச் சீவகன், ஊனுணவை விலக்குமாறு கூறலுற்றான்.

ஊன்சுவைத் துடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ?

ஊன்தினா துடம்பு வாட்டித் தேவராய் உறைதல் நன்றோ?

ஊன்றிஇவ் விரண்டி னுள்ளும் உறுதிநீ யுரைத்தி டென்ன,

ஊன்தினா தொழிந்து புத்தே ளாவதே உறுதியென்றான். 306

சீவகன் வேடற்கு உறுதி கூறல்

உறுதிநீ யுணர்ந்து சொன்னாய்

உயர்கதிச் சேறி, ஏடா!

குறுகினாய் இன்ப வெள்ளம்

கிழங்குணக் காட்டுள் இன்றே!

இறைவனூற் காட்சி கொல்லா

ஒழுக்கொடூன் துறத்தல் கண்டாய்;

இறுதிக்கண் இன்பந் தூங்கும்

இருங்கனி இவைகொள் என்றான். 307

வேடன் விடைபெற்று நீங்கியபின், சீவகன் அரணபாதம் என்ற மலையையடைந்து, அதன் அடிக்கண் உறைந்த மாதவர் அடியில் வீழ்ந்து வணங்கினான். பின்பு அங்குள்ள கோயிலுக்குட் சென்று வலம் வந்து கடவுளைப் பரவிப் பாடலுற்றான்.

சீவகன் பாட்டு, இறைவனைப் பாடியது

தேவபாணிக் கொச்சக ஒருபோகு

ஆதி வேதம் பயந்தோய்நீ

அவர்பெய்ம் மாரி யமைந்தோய்நீ

நீதி நெறியை யுணர்ந்தோய்நீ

நிகரில் காட்சிக் கிறையோய்நீ

நாத னென்னப் படுவோய்நீ

நவைசெய் பிறவிக் கடலகத்துன்

பாத கமலம் தொழுவேங்கள்

பசையாப் பவிழப் பணியாயே. 308

இன்னாப் பிறவி யிகந்தோய்நீ

இணையி லின்ப முடையோய்நீ

மன்னா வுலக மறுத்தோய்நீ

வரம்பில் காட்சிக் கிறையோய்நீ

பொன்னார் இஞ்சிப் புகழ்வேந்தே

பொறியின் வேட்கைக் கடலழுந்தி

ஒன்னா வினையி னுழல்வேங்கள்

உயப்போம் வண்ண முரையாயே. 309

உலக மூன்று முடையோய்நீ

ஒண்பொ னிஞ்சி யெயிலோய்நீ

திலக மாய திறலோய்நீ

தேவ ரேத்தப் படுவோய்நீ

அலகை யில்லாக் குணக்கடலே

யாரு மறியப் படாயாதி;

கொலையி லாழி வலனுயர்த்த

குளிர்முக் குடையி னிழலோய்நீ. 310

சாரணரைப் பாடியது

அடியுலக மேத்தி யலர்மாரி தூவ

முடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் யாரே,

முடியுலக மூர்த்தி யுறநிமிர்த்தோன் மூன்று

கடிமதிலும் கட்டழித்த காவலன்நீ யன்றே. 311

முரணவிய வென்றுலக மூன்றினையு மூன்றில்

தரணிமேல் தந்தளித்த தத்துவந்தான் யாரே?

தரணிமேல் தந்தளித்தான் தண்மதிபோல் நேமி

அரணுலகிற் காய அறிவரனீ யன்றே. 312

தீரா வினைதீர்த்துத் தீர்த்தம் தெரிந்துய்த்து

வாராக் கதியுரைத்த வாமன்தான் யாரே?

வாராக் கதியுரைத்த வாமன் மலர்ததைந்த

காரார்பூம் பிண்டிக் கடவுள்நீ யன்றே. 313

பின்பு, அங்கே இருந்த இயக்கி அவனுக்கு விருந்து செய்ய, அதனையேற்றுண்டு விடைபெற்றெழுந்த சீவகன் விரையச் சென்று பல்லவதேயத்தை யடைந்தான். அதன் தலைநகரம் சந்திராபம் என்பது, வழியில் வயலில் களைபறித்துக்கொண்டிருந்த கடைசியர் இருவரை நெறிவினவிச் சீவகன் அந் நகர்க்கண் நுழைந்தான். அங்கே, அழகியதொரு சோலையிலே அமைந்திருந்த நாடகவரங்கில் ஆடவரும் மகளிரும் குழுமியிருந்தனர். உலோகபாலன் என்னும் அரசகுமரன் அவ்வரங்கில் வீற்றிருந்தான். தேசிகப்பாவையென்னும் நாடக மகள் ஆடலுற்றாள்.

தேசிகப்பாவை கூத்தாடல்

பாடலொ டியைந்த வாடல் பண்ணமை கருவி மூன்றும்

கூடுபு சிவணி நின்று குழைந்திழைந் தமிர்த மூற

ஓடரிநெடுங்க ணம்பால் உளங்கிழிந் துருவ வெய்யா

ஈடமை பசும்பொற் சாந்தம் இலயமா ஆடுகின்றாள். 314

அப்பாவை சீவகனைக் கண்டு மனம் திரிதல்

கருஞ்சிறைப் பறவை யூர்திக்

காமரு காளை தான்கொல்,

இருஞ்சுற வுயர்த்த தோன்றல்

ஏத்தருங் குரிசில் தான்கொல்,

அரும்பெறற் குமரன் என்றாங்

கறிவயர் வுற்று நின்றாள்,

திருந்திழை யணங்கு மென்றோள்

தேசிகப் பாவை யன்னாள். 315

உலோகபாலன் சீவகனைக் காண்டல்

போதெனக் கிடந்த வாட்கண்

புடைபெயர்ந் திமைத்தல் செல்லாது

யாதிவள் கண்ட தென்றாங்

கரசனும் அமர்ந்து நோக்கி

மீதுவண் டரற்றும் கண்ணி

விடலையைத் தானும் கண்டான்

காதலில் களித்த துள்ளம்

காளையைக் கொணர்மின் என்றான். 316

இருவரும் தோழராதல்

மந்திரம் மறந்து வீழ்ந்து மாநிலத் தியங்குகின்ற

அந்தர குமர னென்றாங்கு யாவரு மமர்ந்து நோக்கி,

இந்திர திருவற் குய்த்தார்க் கிறைவனு மெதிர்கொண் டோம்பி

மைந்தனை மகிழ்வ கூறிமைத்துணத் தோழனென்றான். 317

தவறிய இலயம் மீட்டும் பொருந்தத் தேசிகப்பாவை யாடல்

போதவிழ் தெரிய லானும்

பூங்கழற் காலி னானும்

காதலி னொருவ ராகிக்

கலந்துட னிருந்த போழ்தில்

ஊதுவண் டுடுத்த மாலை

யுணர்வுபெற் றிலயம் தாங்கிப்

போதுகண் டனைய வாட்கண்

புருவத்தால் கலக்கு கின்றாள். 318

அப்போது, காவலன் ஒருவன் போந்து, அரசன் மகள் பதுமை யென்பாள் தான் பேணி வளர்த்த முல்லைக்கொடி அரும்பீனக் கண்டு, அதற்குச் சிறப்புச் செய்யச் சென்று, சோலையில் விளை யாட்டயரும் காலத்தில், புதரொன்றில் பூத்திருந்த பூவைப் பறிக்கக் கையை நீட்ட, ஆங்கிருந்த விட நாகமொன்று அவளைத் தீண்டிய தனால், அறிவு மயங்கி வீழ்ந்தாள் என்று சொன்னான். அதுகேட்ட அரசகுமரன் திடுக்கிட்டுச் சீவகனை இருக்கப் பணித்துவிட்டுத் தான் தனியே சென்றுவிடம் தீருதற்குரிய மந்திரம் பலவும் செய்தான்.

விடம் மிகுதல்

வள்ளல்தான் வல்ல வெல்லாம்

மாட்டினன், மற்று மாங்கண்

உள்ளவ ரொன்ற லாத

செயச்செய ஊறு கேளாது

அள்ளிலைப் பூணி னாளுக்கு

ஆவிஉண் டில்லை யென்ன

வெள்ளெயிற் றரவு கான்ற

வேகம்மிக் கிட்ட தன்றே. 319

விடம் தீர்த்தாற்கு மகள் தருவேன் என வேந்தன்

முரசறைவிக்க வள்ளுவன் முரசறைதல்

பைங்கதிர் மதிய மென்று

பகையடு வெகுளி நாகம்

நங்கையைச் செற்றது, ஈங்குத்

தீர்த்துநீர் கொண்மின் நாடும்

வங்கமா நிதியும் நல்கி

மகள்தரும், மணிசெய் மான்தேர்

எங்களுக் கிறைவன் என்றாங்

கிடிமுர செருக்கி னானே. 320

விடந்தீர்ப்பான் வந்தோர் தம் முயற்சி பயன்

படாமை கண்டு கூறுதல்

மண்டலி மற்றி தென்பார்,

இராசமா நாக மென்பார்,

கொண்டது நாக மென்பார்,

குறைவளி பித்தொடு ஐயின்

பிண்டித்துப் பெருகிற் றென்பார்,

பெருநவை யறுக்கும் விஞ்சை

எண்தவப் பலவும் செய்தாம்

ஏன்றுகே ளாதி தென்பார். 321

உறவினர் கையற்றுப் புலம்பல்

கையொடு கண்டம் கோப்பார்,

கனைசுடர் உறுப்பின் வைப்பார்,

தெய்வதம் பரவி யெல்லாத்

திசைதொறும் தொழுது நிற்பார்,

உய்வகை யின்றி யின்னே

யுலகுடன் கவிழும் என்பார்,

மையலங் கோயில் மாக்கள்

மடைதிறந் திட்ட தொத்தார். 322

ஒருவன் கணி கூறியது

நங்கைக்கின் றிறத்தல் இல்லை

நரபதி நீயும் கேண்மோ;

கொங்கலர் கோங்கின் நெற்றிக்

குவிமுகிழ் முகட்டி னங்கண்

தங்குதேன் அரவ யாழின்

தான்இருந் தாந்தை பாடும்,

இங்குநம் இடரைத் தீர்ப்பான்

இளையவன் உளன்மற் றென்றான். 323

இதுகேட்டதும், தனபதியின் மகனாகிய உலோகபாலன் சீவகன் வந்திருத்தலை நினைவுகூர்ந்து, ஏவலரை விடுத்துக் கடுக வருவித்தான். அவனும் அவ்விடம் வந்து பதுமையுணர்வின்றிக் கிடப்பது கண்டான். கண்டவன் சித்தராரூடம் என்னும் நூலிற் கண்டவண்ணம் பாம்பின் சாதி, கடிக்கும் திறம், எயிறுகளின் வகை முதலிய பலவும் கூறி, பதுமையைக் கடித்த நாகம் கன்னியென்றும், அஃது அரசர் மரபிற்றென்றும், தைத்தழுந்திய பல் யமதூதி யொழிந்த காளி, காளத்திரி, யமன் என்று மூன்றுமே யென்றும் பிறவும் கூறினன்.

சீவகன் மந்திரம் செய்தல்

குன்றிரண் டனைய தோளான்

கொழுமலர்க் குவளைப் போதங்கு

ஒன்றிரண் டுருவ மோதி

யுறக்கிடை மயிலன் னாள்தன்

சென்றிருண் டமைந்த கோலச்

சிகழிகை யழுத்திச் செல்வன்

நின்றிரண் டுருவ மோதி

நேர்முகம் நோக்கி னானே. 324

பதுமை விடம் நீங்கத் தெளிந்து சீவகனைக் கண்ணுறுதல்

நெடுந்தகை நின்று நோக்க

நீள்கடல் பிறந்த கோலக்

கடுங்கதிர்க் கனலி கோப்பக்

காரிருள் உடைந்த தேபோல்

உடம்பிடை நஞ்சு நீங்கிற்று,

ஒண்டொடி யுருவ மார்ந்து

குடங்கையின் நெடிய கண்ணாள்

குமரன்மேல் நோக்கி னாளே. 325

இவ்வாறு நோக்கிய பதுமைக்கு விட நோய் நீங்கலும் சீவகன் பொருட்டு வேட்கை நோய் எழுந்து வருத்துவதாயிற்று. அதனால் அவள் உள்ளமுடைந்து மறுபடியும் மெலிவுற்றாள். தோழியர் அவனை நோக்கி, “ஐயனே, நீ நின் கையால் இவள் மேனியைத் தீண்டித் தைவருவையேல், இவ்விட மயக்கம் இனிது தெளியும்” என்ன, அவன் அவ்வாறே செய்தல்.

கண்ணிற் காணினும் கட்டுரை கேட்பினும்

நண்ணித் தீண்டினும் நல்லுயிர் நிற்கும்என்று

எண்ணி யேந்திழை தன்னை யுடம்பெலாம்

தண்ணென் சாந்தம்வைத் தாலொப்பத் தைவந்தான். 326

இச் செய்கையால் சீவகனுக்கும் பதுமைபால் காதல் பிறந்தது. இருவரும் தம் காதற் குறிப்பைத் தெரிவித்துக் கொள்வார்போல், ஒருவரையொருவர் சிறப்புற நோக்கி வேட்கையால் வெய்துற லாயினர். சீவகன் விட நோய் நீக்கிய சிறப்புக்கண்டு தனபதி அவனைத் தன் மனைக்கண்ணே கொண்டு சென்று அங்கே இருக்கச் செய்து, உண்டி முதலிய தந்து ஓம்பிவந்தான். சீவகனது சொல்லும் செயலும் கண்ட தனபதி, இச் சீவகன் கலை பலவும் கற்றுத் துறைபோகியவன், இவனுக்கு நிகராவார் இந் நிலவுலகில் எவரும் இல்லை, என்று தேர்ந்து அவன்பால் பேரன்பு காட்டினன். இது நிற்க, சீவகனுக்குப் பதுமை பொருட்டுப் பிறந்த காதல் சிறந்து மிகுவதாயிற்று. இரவுப்போது வந்தது, இருவர்க்கும் வேட்கை நோய் எல்லையின்றிப் பெருகிற்று.

சீவகன் வேட்கை நிலை

போது லாம்சிலை யோபொரு வேற்கணோ

மாது லாமொழி யோமட நோக்கமோ

யாதும் நான்அறி யேன்அணங் கன்னவள்

காத லால்கடை கின்றது காமமே. 327

அண்ணல் அவ்வழி ஆழ்துயர் நோயுற

வண்ண மாமலர்க் கோதையும் அவ்வழி,

வெண்ணெய் வெங்கனல் மீமிசை வைத்ததுஒத்து

உன்நை யாஉரு காஉள ளாயினாள். 328

பதுமை வாய் வெருவுதல்

வணங்கு நோன்சிலை வார்கணைக் காமனோ

மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ

நிணந்தென் நெஞ்சம் நிறைகொண்ட கள்வனை

அணங்கு காள்!அறி யேன்உரை யீர்களே. 329

சீவகன், தான் முதலில் பதுமையை விடம் தீர்த்தபோது கண்ட பூங்காவிற்குச் சென்று, அஃது அவள் பயின்றவிடமாதலின், அதனைக் காணின், அவளைக் கண்டாற் போல்வதோர் இன்பம் செய்யும் என்று கருதினான். அவ்வாறே எழுந்து, ஒரு நாள் மாலைப் போதில் அக்காவிற்குட் சென்று உலவலானான்.

சோலைக் காட்சி

மயிலி னாடலும் மந்தியின் ஊடலும்

குயிலின் பாடலும் கூடி மலிந்துஅவண்

வெயிலின் நீங்கிய வெண்மணல் தண்நிழல்

பயிலும் மாதவிப் பந்தரொன் றெய்தினான். 330

சீவகனைப்போலவே பதுமையும் வேட்கைத் தீயால் வெந்து ஆற்றாளாய் அச்சோலையில் அவ்விடத்தே வந்திருந்தாள். இருவர் வரவும் ஒருவரொருவர்க்குத் தெரியாமே நிகழ்ந்தது. வந்தவள், தோழியர் விளையாட்டுக் குறித்து வேறு வேறிடம் செல்ல, மாதவிப் பந்தர் அருகே தனியே நின்று கொண்டிருந்தாள். சீவகன் அவளைக் காண்கின்றான்.

காட்சி

கறந்த பாலினுட் காசில் திருமணி

நிறம்கி ளர்ந்துதன் நீர்மைகெட் டாங்கவண்

மறைந்த மாதவி மாமை நிழற்றலின்,

சிறந்த செல்வனும் சிந்தையின் நோக்கினான். 331

முன்பே அவளைக் கண்டுளானாயினும், வேட்கை மிகுதியால் சீவகன் அவளைக் கண்டு ஐயுறுதல்

வரையின் மங்கைகொல், வாங்கிருந் தூங்குநீர்த்

திரையின் செல்விகொல், தேமலர்ப் பாவைகொல்,

உரையின் சாயல் இயக்கிகொல், யார்கொல்இவ்

விரைசெய் கோலத்து வெள்வளைத் தோளியே. 332

பதுமையே எனத் தெளிதல்

மாலை வாடின, வாட்கண் இமைத்தன,

காலும் பூமியைத் தோய்ந்தன, காரிகை,

பாலின் தீஞ்சொல் பதுமைஇந் நின்றவள்

சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளியே. 333

இவ்வாறு தெளிந்தவன், அதனையடைந்து கந்தருவமணம் செய்துகொள்ளக் கருதி, அவளருகே சென்று, குறிப்பறிந்து வண் டோச்சுவான்போல மருங்கணைந்து, தன் பெருநயப்புரைத்துக் கூடினன்.

சீவகன் அவளது கோலம் திருத்தித் தன் அன்பை வற்புறுத்துதல்

கண்ணி வேய்ந்து கருங்குழல் கைசெய்து,

வண்ண மாலை நடுச்சிகை யுள்வளைஇச்

செண்ண வஞ்சிலம் பேறு துகளவித்து

அண்ணல் இன்புறுத் தாற்றலின் ஆற்றினாள். 334

திங்க ளும்மறு வும்எனச் சேர்ந்தது

நங்கள் அன்புஎன நாட்டி வலிப்புறீஇ

இங்கொ ளித்திடு வேன்,நுமர் எய்தினார்,

கொங்கொ ளிக்குழ லாய்!எனக் கூறினான். 335

சீவகன் அவளைச் செல்லவிடுத்துத் தான் ஒருபுறத்தே மறைந் தான். பதுமையும், தன்னைத் தனிப்பவிட்டுச் சென்ற ஆயத்தோர் வந்து சேர அவருடன் கூடிச் சிறிது போது விளையாட்டயர்ந்தபின் தத்தம் இருக்கையடைந்தனர். சீவகன் சென்று தன் தோழனான உலோகபாலனையடைந்தான்.

இஃது இங்ஙனமாக, பதுமையின் தந்தையான தனபதி, மதிதரன் என்னும் தன் அமைச்சனை நோக்கித்

தன் கருத்தைத் தெரிவித்தல்

பூமியை யாடற் கொத்த பொறியின னாதலானும்

மாமக ளுயிரை மீட்ட வலத்தின னாதலானும்

நேமியான் சிறுவனன்ன நெடுந்தகை நேருமாயின்,

நாம்அவற்கு அழகிதாக நங்கையைக் கொடுத்தும் என்றான். 336

மந்திரி உடன்பட்டுரைத்தல்

மதிதரன் என்னும் மாசில் மந்திரி சொல்லக் கேட்டே

உதிதர வுணர்வல் யானும் ஒப்பினும் உருவி னானும்

விதிதர வந்த தொன்றே விளங்குபூண் முலையினாளைக்

கொதிதரு வேலினாற்கே கொடுப்பது கருமம் என்றான். 337

பின்பு, மந்திரி சீவனைக் கண்டு அவன் கருத்தறிந்து போந்து, தனபதிக்குக் கூற அவன் மனைவி திலோத்தமையின் இசைவு கண்டு மகிழ்ந்து திருமணத்துக்குரிய நாள் குறிக்குமாறு ஏற்பாடு செய்தான்.

திருமணம்

கணிபுனைந் துரைத்த நாளால்

கண்ணிய கோயில் தன்னுள்

மணிபுனை மகளிர் நல்லார்

மங்கல மரபு கூறி

அணியுடைக் கமல மன்ன

அங்கைசேர் முன்கை தன்மேல்

துணிவுடைக் காப்புக் கட்டிச்

சுற்றுபு தொழுது காத்தார். 338

மழகளிற் றெருத்திற் றந்த

மணிக்குட மண்ணு நீரால்

அழகனை மண்ணுப் பெய்தாங்

கருங்கடிக் கொத்த கோலம்

தொழுதகத் தோன்றச் செய்தார்

தூமணிப் பாவை யன்னார்

விழுமணிக் கொடிய னாளும்

விண்ணவர் மடந்தை யொத்தாள். 339

கயற்க ணாளையும் காமனன் னானையும்

இயற்றி னார்மண மேத்தரும் தன்மையார்

மயற்கை யில்லவர் மன்றலில் மன்னிய

இயற்கை யன்புடை யார்இயைந் தார்களே. 340

மணம் முடிந்தபின், சீவகன் பதுமையுடன் இனி துறைந்து வருகையில், அவன்பால் தன் கருத்தையிழந்து வேட்கை நோய் மிகுந்து மெலிந்துவந்த தேசிகப் பாவையென்னும் பரத்தை ஒருநாள் பூங்காவையடைந்து தன் தனிமை தீர்வது குறித்து இன்பமுறப் பாடிக்கொண்டிருந்தாள்.

சீவகன் அவளைத் தலைப்படல்

வார்தளிர் ததைந்து போது

மல்கிவண் டுறங்குங் காவில்

சீர்கெழு குரிசில் புக்கான்,

தேசிகப் பாவை யென்னும்

கார்கெழு மின்னு வென்ற

நுடங்கிடைக் கமழ்தண் கோதை

ஏர்கெழு மயில னாளை

இடைவயின் எதிர்ப்பட்டானே. 341

தீரா வேட்கையால் மெலிந்து வருந்திய தேசிகப் பாவைக்கும் இன்பம் தந்து மகிழ்வித்து ஒழுகிய சீவகன் பதுமையுடன் இரண்டு திங்கள் கழித்தான்.

சீவகன் பிரிந்து போதல்

தயங்கினர்க் கோதை தன்மேல் தண்ணென வைத்த மென்றோள்

வயங்கிணர் மலிந்த தாரான் வகுத்தறா வகையின் நீக்கி

நயங்கிளர் உடம்பு நீங்கி நல்லுயிர் போவ தேபோல்

இயங்கிடை யறுத்த கங்குல் இருளிடை யேகி னானே. 342

கண் விழித்த பதுமை சீவகனைக் காணாது, தான் வளர்த்த கிளி, பூவை, அன்னம், மயில் முதலியவற்றை வினவி விடை யொன்றும் பெறாது மிகு துயர் உற்றனள். பிறகு, பள்ளியறையில் எரிந்த விளக்கை வினவினாள்.

விளக்கை வினவி நொந்துரைத்தல்

வளர்த்த செம்மையை, வாலியை, வான்பொருள்-

விளக்கு வாய்விளக்கே! விளக்காய் இவண்

அளித்த காதலொ டாடும்என் ஆரூயிர்

ஒளித்தது எங்கு?என ஒண்சுடர் நண்ணினாள். 343

பருகிப் பாயிருள் நிற்பின் அறாதெனக்

கருகி யவ்விருள் கான்றுநின் மெய்யெலாம்

எரிய நின்று நடுங்குகின் றாய்எனக்கு

உரிய தொன்றுரைக் கிற்றியென் றூடினாள். 344

பிரிவாற்றாத பதுமை மேலும் வாய்விட்டுப் புலம்புதல்

நிரைவீ ழருவிந் நிமிர்பொன் சொரியும்

வரையே! புனலே! வழையே! தழையே!

விரையார் பொழிலே! விரிவெண் ணிலவே!

உரையீர் உயிர்க்கார வலன்உள் வழியே. 345

அமரரை நோக்கிப் புலம்புதல்

எரிபொன் னுலகின் உறைவீர்! இதனைத்

தெரிவீர், தெரிவில் சிறுமா னிடரின்

பரிவொன் றிலிரால், படர்நோய் மிகுமால்,

அரிதால் உயிர்காப் பமரீர்! அருளீர். 346

அமரர் மகளிர்க்குச் சொல்லி யரற்றுதல்

புணர்வின் இனிய புலவிப் பொழுதும்

கணவன் அகலின் உயிர்கை யகறல்

உணர்வீர், அமரர் மகளீர்! அருளிக்

கொணர்வீர், கொடியேன் உயிரைக் கொணர்வீர். 347

சீவகனையே நினைந்து அரற்றுதல்

அருள்தேர் வழிநின் றறனே மொழிவாய்

பொருள்தேர் புலன்எய் தியபூங் கழலாய்

இருள்தேர் வழிநின் றினைவேற் கருளாய்

உருள்தேர் உயர்கொற் றவன்மைத் துனனே. 348

மிகவா யதொர்மீ ளிமைசெய் தனனோ?

உகவா வுனதுள் ளமுவர்த் ததுவோ?

இகவா விடர்என் வயின்நீத் திடநீ

தகவா தகவல் லதுசெய் தனையே. 349

இவ்வாறு மிக அரற்றிச் சோர்ந்த பதுமையின் நிலையினைத் தோழியறிந்து போந்து, நிகழ்ந்தது உணர்ந்து அவளைத் தெளிவித்தற் பொருட்டுச் சில கூறலானாள்.

மக்கட் பிறப்பின் சிறுமை கூறித் தேற்றல்

பேதைமை யென்னும் வித்திற் பிறந்துபின் வினைகளென்னும்

வேதனை மரங்கள்நாறி வேட்கைவேர் வீழ்த்து முற்றிக்

காதலும் களிப்பு மென்னும் கவடுவிட் டவலம் பூத்து

மாதுயர் இடும்பை காய்த்து மரணமே கனிந்து நிற்கும். 350

காதலன் பொருட்டுக் கவலலாகாமை கூறித் தேற்றல்

பிரிந்தவற் கிரங்கிப் பேதுற்

றழுதநம் கண்ணின் நீர்கள்

சொரிந்தவை தொகுத்து நோக்கின்

தொடுகடல் வெள்ள மாற்றா

முரிந்தநம் பிறவி மேனாள்,

முற்றிழை இன்னும் நோக்காய்

பரிந்தழு வதற்குப் பாவாய்

அடியிட்ட வாறு கண்டாய் 351

அன்பினின் அவலித் தாற்றா

தழுவதும் எளிது நங்கள்

என்பினின் ஆவி நீங்க

இறுவதும் எளிது, சேர்ந்த

துன்பத்தால் துகைக்கப் பட்டார்

துகைத்தவத் துன்பம் தாங்கி

இன்பமென் றிருத்தல் போலும்

அரியதிவ் வுலகில் என்றாள். 352

மேலும் தோழி நிமித்தம் கண்டு தெளிவித்தல்

முத்திலங் காகம் தோய்ந்த

மொய்ம்மலர்த் தாரி னான்நம்

கைத்தலத் தகன்ற பந்தின்

கைப்படும், கவல வேண்டா

பொத்திலத் துறையு மாந்தை

புணர்ந்திருந் துரைக்கும் பொன்னே

நித்தில முறுவ லுண்டான்

நீங்கினான் அல்லன் கண்டாய். 353

வடிமலர்க் காவின் அன்று

வண்தளிர்ப் பிண்டி நீழல்

முடிபொருள் பறவை கூற

முற்றிழை நின்னை நோக்கிக்

கடியதோர் கௌவை செய்யும்

கட்டெயிற் றரவி னென்றேன்,

கொடியனாய்! பிழைப்புக் கூறேன்,

குழையலென் றெடுத்துக் கொண்டாள். 354

பதுமை ஒருவாறு தேறியிருந்தாளாக, பொழுது விடிந்தது. அவள் தாயாகிய திலோத்தமையும் பிறரும் வந்து சூழ்ந்துகொண்டு உற்றது கேட்டு வருந்தினர். திலோத்தமை, நெருநல் இரவில் சீவகன் கூறியது என்னை என்று வினவப் பதுமை நிகழ்ந்தது கூறல்.

வினைக்கும் செய்பொருட் கும்வெயில் வெஞ்சுரம்

நினைத்து நீங்குதல் ஆண்கடன், நீங்கினால்,

கனைத்து வண்டுணும் கோதையர் தம்கடன்

மனைக்கண் வைகுதல் மாண்பொடு எனச்சொனான். 355

விரைசெய் தாமரை மேல்விளை யாடிய

அரைச வன்னம் அமர்ந்துள வாயினும்

நிரைசெய் நீலம் நினைப்பில என்றனன்

வரைசெய் கோல மணங்கமழ் மார்பினான். 356

இவ்வாறு பதுமை கூறக் கேட்டுத் திலோத்தமை

மகிழ்ந்து தேற்றுதல்

அன்னம் தான்அவன்; தாமரைப் போதுநீ;

நின்னை நீங்கினன், நீங்கலன் காதலான்;

இன்ன தாலவன் கூறிற்று எனச்சொனாள்,

மன்னா னாருயிர் மாபெருந் தேவியே. 357

இது சொல்லித் தேற்றிய திலோத்தமை சொல்லால், “சீவகன் வருவன்” என்று உட்கொண்ட பதுமை உள்ளத்தே உவகை மிகுந்து தனக்குள்ளே கூறிக்கொள்ளுகிறாள்.

பதுமையின் உட்கோள்

நஞ்சினை யமுத மென்று

நக்கினும் அமுத மாகாது,

அஞ்சிறைக் கலாப மஞ்ஞை

யணங்கர வட்ட தேனும்

அஞ்சிறைக் கலுழ னாகும்

ஆட்சியொன் றானுமின்றே,

மஞ்சனுக் கினைய நீரேன்

வாடுவ தென்னை யென்றாள். 358

ஞாயிறு தோன்றுதல்

பொய்கையுள் கமலத் தங்கண்

புள்ளெனும் முரச மார்ப்ப

வெய்யவன் கதிர்க ளென்னும்

விளங்கொளித் தடக்கை நீட்டி

மையிருட் போர்வை நீக்கி

மண்ணக மடந்தை கோலம்

பையவே பரந்து நோக்கிப்

பணிவரை நெற்றி சேர்ந்தான். 359

இரவு நிகழ்ந்த நிகழ்ச்சி முற்றும் அரசன் அறிந்து மிக்க வருத்தமுற்று ஏவலர் பலரை விடுத்துச் சீவகனைத் தேடியறிந்து வருமாறு விடுத்தான்.

சீவகன் புதுவடிவு கொண்டு வடதிசை நோக்கிச் செல்வானை, அரசன் ஏவலர் கண்டு வினவல்

வேந்தனால் விடுக்கப் பட்டார்

விடலையைக் கண்டு சொன்னார்

ஏந்தலே பெரிதும் ஒக்கும்

இளமையும் வடிவும் இஃதே,

போந்ததும் போய கங்குல்

போம்வழிக் கண்ட துண்டேல்

யாம்தலைப் படுதும் ஐய,

அறியின்ஈங் குரைக்க என்றார். 360

சீவகன் விடையிறுத்தல்

நெய்கனிந் திருண்ட வைம்பால்

நெடுங்கணாள் காத லானை

ஐயிரு திங்க ளெல்லை

யகப்படக் காண்பிர், இப்பால்,

பொய்யுரை யன்று காணீர்,

போமினம், போகி நுங்கள்

மையலங் களிற்று வேந்தன்

மைந்தனுக் குரைமின் என்றான். 361

பதுமையார் இலம்பகம்

முற்றும்

கேமசரியார் இலம்பகம்

கேமசரியாரிலம்பகம் - கேமசரியென்பவளைச் சீவகன் மணந்துகொண்ட செய்தியைக் கூறும் இலம்பகம்.

(சீவகன் பலவிடங்கட்கும் சென்று சித்திரகூடம் அணைந்து தாபதர் சிலரைக் கண்டு அவர்கட்கு நன்னெறி காட்டித் திருத்தி யதும், தக்கநாடு சென்றதும் கேமமாபுரத்துச் சுபத்திரனென்னும் வணிகன் மகள் கேமசரியென்பவள் நலம் கனிந்திருந்ததும், அவ்வணிகன் தன் மகட்குரிய கணவனைப் பெறும்பொருட்டு நாளும் விருந்தாற்றிவந்ததும், சீவகன் அவளைக் கண்டு வேட்கை கொண்டதும், அவளை மணந்து இரு திங்கள் தங்கியிருந்து வேறிடம் செல்லக் கருதி அவள்பால் சொல்லாது பிரிந்ததும், எதிரே போந்த ஒருவனுக்குச் சீவகன் அறவுரை கூறித் தான் அணிந்திருந்த கலன் களை ஈந்து அப்பாற் சென்றதும், பிறவும் கூறப்படுகின்றன.)

வடக்கு நோக்கித் தனியே காலால் நடந்தேகும் சீவகன் சுதஞ்சணன் முன்பு கூறிய சித்திரகூடத்தைக் குறித்துச் சென்று கொண்டிருந்தான். வழியில் காடுகளும் குன்றுகளும் அவனுக்கு இனிய காட்சி வழங்கின. அவற்றைக் கண்டு செல்பவன், எதிரில் நின்ற குன்றில், சுனை நீராடி இனிய பூக்களைக் கொண்டு, அங்கேயிருந்த அருகன் கோயிலையடைந்து வழிபட்டு, அதற்கு முன்னே இருந்த சித்திர கூடத்தையடைந்தான். அங்கே வாழ்ந்த தாபதர் அவனை வரவேற்றனர்.

சித்திரகூடத் தாபதர் இயல்பு

அரிய கொள்கையர் ஆரழ லைந்தினுள்

மருவி வீடு வளைக்குறு மாட்சியர்,

விரிய வேதம் விளம்பிய நாவினர்,

தெரிவில் தீத்தொழில் சிந்தையில் மேயினர். 362

விருந்தோம்பல்

வள்ளி யின்னமு தும்வரை வாழையின்

தெள்ளு தீங்கனி யும்சில தந்தபின்

வெள்ள மாரிய னாய்விருந் தார்கென

உள்ள மாட்சியி னாருவந் தோம்பினார். 363

தாரபதர் சீவகனை அளக்கக் கருதுதல்

பாங்கின் மாதவர், “பான்மதி போன்றிவன்

வீங்கு கல்வியன், மெய்ப்பொருட் கேள்வியின்

ஆங்கு நாமும் அளக்குவம்” என்றுதம்

ஓங்கு கட்டுரை ஒன்றிரண் டோதினார். 364

சீவகன் கூறுதல்

ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான்,

சையம் பூண்டு சமுத்திரம் நீந்துவான்

உய்யு மேல்தொடர்ப் பாட்டின்இங்கு யாவையும்

எய்தி னார்களும் உய்ப்பஎன் றோதினான். 365

தாபதர் வினவல்

ஏம நன்னெறி எம்நெறி, அல்நெறி

தூய்மை யில்நெறி, யாமும் துணிகுவம்

காமன் தாதை நெறியின்கட் காளைநீ

தீமை யுண்டெனில் செப்பெனச் செப்பினான். 366

சீவகன் அவர்களைத் தெருட்டுதல்

நீட்டிய சடைய மாகி

நீர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து

வாட்டிய வுடம்பின் யாங்கள்

வரகதி விளைத்து மென்னிற்

காட்டிடைக் கரடி போகிக்

கயமூழ்கிக் காட்டி னின்று

வீட்டினை விளைக்க வேண்டும்,

வெளிற்றுரை விடுமின் என்றான். 367

நோய்முதிர் குரங்கு போல

நுகர்ச்சிநீர் நோக்கல் வேண்டா

காய்முதிர் கனியி னூழ்த்து

வீழுமிவ் யாக்கை யின்னே

வேய்முதிர் வனத்தின் வென்றான்

உருவொடு விளங்க நோற்றுப்

போய்முதிர் துறக்கத் தின்பம்

பருகுவ புரிமின் என்றான். 368

மெய்வகை தெரிதல் ஞானம்

விளங்கிய பொருள்கள் தம்மைப்

பொய்வகை யின்றித் தேறல்

காட்சியைம் பொறியும் வாட்டி

உய்வகை யுயிரைத் தேயா

தொழுகுதல் ஒழுக்க மூன்றும்

இவ்வகை நிறைந்த போழ்தே

யிருவினை கழியு மென்றான். 369

இது கேட்டுத் தெளிவு கொண்ட அத் தாபதர் மகிழ்ந்து அவ்வாறே யொழுகி மேம்படலாயினர், சீவகனும் அன்றிரவு அவர் பள்ளியிடத்தே தங்கி மறுநாட்காலையே புறப்பட்டுச் சென்று தக்க நாட்டை யடைந்தான். அந்நாட்டின் தலைநகரமான கேமமா புரத்தைச் சீவகன் சென்று சேர்ந்தான். அந்த நாட்டை நரபதி தேவன் என்பவன் ஆட்சி புரிந்து வந்தான்.

கேமசரி வரலாறு

அந்நகர்க் கரசனே யனைய ஆண்டகை

மெய்ந்நிக ரிலாதவன், வேத வாணிகன்,

கைந்நிக ரமைந்தவேல் கமழுந் தாரினான்,

மைந்நிகர் மழைக்கணார் மருட்ட வைகுவான். 370

வார்சிலை வடிப்ப வீங்கி

வரையெனத் திரண்ட தோளான்

சோர்புயல் தொலைத்த வண்கைச்

சுபத்திரன் மனைவி பெற்ற

சீர்நலம் கடந்த கேம

சரியெனத் திசைக ளெல்லாம்

போநலம் பொறித்த பெண்மைப்

பெருவிளக் காகி நின்றாள். 371

கேமசரியின் தந்தையான சுபத்திரன் விருத்தோம்பும்

கடமை மேற்கொள்ளுதல்

மாசிலாள் பிறந்த ஞான்றே

மதிவலான் விதியின் எண்ணிக்

காசிலாள் கண்ட போழ்தே

கதுமென நாணப் பட்டான்

தூசுலாம் அல்கு லாட்குத்

துணைவனாம், புணர்மின் என்று

பேசினான், அன்று கொண்டு

பெருவிருந் தோம்பு கின்றான். 372

கேமசரி தன்னை மணத்தற்குரிய காதலனை நோக்கி நிற்றல்

தாழ்தரு பைம்பொன் மாலைத்

தடமலர்த் தாம மாலை

வீழ்தரு மணிசெய் மாலை

இவற்றிடை மின்னின் நின்று

சூழ்வளைத் தோளி செம்பொன்

தூணையே சார்ந்து நோக்கும்

ஊழ்படு காத லானை

யொருபிடி நுசுப்பி னாளே. 373

இவ்வாறு பன்னிரண்டு யாண்டுகள் கழிந்தன. கேமசரியும் மணத்துக்குரிய செவ்வி யெய்தி நலம் கனிந்து விளங்குவாளாயினள். அவளைப் பெற்ற தாயாகிய நிப்புதியென்பாள், தன் மகட்குரிய கணவன் வந்திலனே எனக் கவன்றாளாக, அவளைச் சுபத்திரன் தேற்றி வந்தான். கேமசரியின் கண்ணெதிரே விருந்துண்ணப் போந்த ஆடவரனைவரும் பேடிகளாகவே தோன்றி நின்றனர்.

சீவகன் இக் கேமமாபுரத்தைச் சேரவந்து ஓர்

ஆலமரத்தின் நிழலில் இருத்தல்

பொன்னிலத் தெழுந்ததோர் பொருவில் பூங்கொடி

மின்னுவிட் டெரிவதோர் நலத்தள் வீங்கிருள்

பின்னிவிட்ட டனகுழல் பெருங்கண் பேதையூர்

துன்னினன் தொடுகழல் குரிசில் என்பவே. 374

தென்றிசை முளைத்ததோர் கோலச் செஞ்சுடர்

ஒன்றிமற் றுத்தரம் வருவ தொத்தவண்

மன்றல்கொள் மார்பினான் வந்துஓர் ஆல்நிழல்

நன்றுவந் திருந்தனன் நாதற் சிந்தியா. 375

சீவகனை நெடுந் தொலைவிலே கண்டான் சுபத்திரன். அவனது வடிவழகு கண்டு முதற்கண் திருமாலோ என ஐயுற்று, அருகே சென்று, மகனெனத் தெளிந்து இன் சொற்கள் பல சொல்லி, அவனைத் தன் தேர்மீது கொண்டு தன் பெருமனை நோக்க வரலானான். அதுபோழ்து, கேமசரி வீணையை யிசைத்துக் கடவுளைப் பரவத் தொடங்கினாள்.

கேமசரி பாட்டு

வீங்கோத வண்ணன் விரைததும்பு பூம்பிண்டித்

தேங்கோத முக்குடைக்கீழ்த் தேவர் பெருமானைத்

தேவர் பெருமானைத் தேனார் மலர்சிதறி

நாவின் நவிற்றாதார் வீட்டுலகம் நண்ணாரே. 376

அடல்வண்ண வைம்பொறியும் அட்டுயர்ந்தோர் கோமான்

கடல்வண்ணன் முக்குடைக்கீழ்க் காசின் றுணர்ந்தான்,

காசின் றுணர்ந்தான் கமல மலரடியை

மாசின்றிப் பாடாதார் வானுலகம் நண்ணாரே. 377

பூத்தொழியாப் பிண்டிப் பொங்கோத வண்ணனை

நாத்தழும்ப வேத்தாதார் வீட்டுலகம் நண்ணாரே

வீட்டுலகம் நண்ணார் வினைக்கள்வர் ஆறலைப்ப

ஓட்டிடுப எண்குணனும் கோட்பட் டுயிராவே. 378

இப்பாட்டிசை கேட்டுப் பரிவுமிக்க, நிப்புதி, “இத்துணைக் கடவுட்பற்றும் இயல் நலமும் உடைய இவட்கு ஏற்ற கணவன் வந்திலனே” என ஏங்கி, அத்தகையோன் ஒருவன் விரைய வருதல் வேண்டுமெனத் தானும் கடவுளைப் பரவினாள். அக்காலை யில் சுபத்திரன் சீவகனுடன் தன் மனைக் கண் வந்தடைந்தான்.

கேமசரியும் சீவகனும் ஒருவரையொருவர் நோக்குதல்

நிலந்தினக் கிடந்தன நிதிய நீள்நகர்ப்

புலம்பறப் பொலிவொடு புக்க காலையே,

இலங்குபூங் கொடியன ஏழை நோக்கமும்

உலங்கொள்தோ ளுறுவலி நோக்கும் ஒத்தவே. 379

கேமசரியின் காதல் நிகழ்ச்சி

கண்ணுறக் காளையைக் காண்டலும் கைவளை

மண்ணுறத் தோய்ந்தடி வீழந்தன மாமையும்

உண்ணிறை நாணும் உடைந்தன வேட்கையும்

ஒண்ணிறத் தீவிளைத் தாள்,உருக் குற்றாள். 380

சீவகன் மன நிகழ்ச்சி

வாக்கணங் கார்மணி வீணைவல் லாற்கவள்

நோக்கணங் காய்மனம் நோய்செய நொந்தவன்

வீக்கணங் கார்முலை வேய்நெடுந் தோளியொர்

தாக்கணங் கோ?மக ளோ?எனத் தாழ்ந்தான். 381

கேமசரியின் காதற் குறிப்பறிந்த தோழியர் சீவகனது மெய் வனப்பு நோக்கி அவனைச் சூழ்ந்துகொண்டனர். இது தெரிந்து நிப்புதி ஆங்கே போந்து அவனது அழகு கண்டு மனமகிழ்ந்தாள்.

நிப்புதி சீவகனைக் காண்டல்

நினைப்பரு நீணிறை நிப்புதி சேர்ந்தாங்கு

இனத்திடை யேறனை யான்எழில் நோக்கிப்

புனக்கொடி பொற்பொடு பண்ணிய நம்பி

வனப்பிடை யேகண்டு வாட்கண் அகன்றாள். 382

பின்பு நிப்புதியும் சுபத்திரனும் சீவகனுக்கு இனிய விருந்தூட்டி மகிழ்வித்தனர். விருந்துண்டு தனித்திருந்த சீவகற்குக் கேமசரியின் பொருட்டெழுந்த வேட்கை அவனுள்ளத்தை மிகுதியும் அலைக்கத் தொடங்கிற்று, அவன் அவளை நினைந்து பெரிதும் வருந்தலுற்றான்.

சீவகன் வேட்கையுற்றுரைத்தல்

காதன்மை கண்ணுளே யடக்கிக் கண்ணெனும்

தூதினால் துணிபொரு ளுணர்த்தித் தான்தமர்க்கு

ஏதின்மை படக்கரந் திட்ட வாட்கணோக்கு

ஓதநீ ரமுதமும் உலகும் விற்குமே. 383

திருவிற்கும் கற்பகத் தெரியல் மாலையார்

உருவிற்கோர் விளக்கமாம் ஒண்பொற் பூங்கொடி

முருகற்கும் அனங்கற்கும் எனக்கும் மொய்சடை

ஒருவற்கும் பகைத்தியால் ஒருத்தி வண்ணமே. 384

கேமசரிக்கும் சீவகற்கும் திருமணம் செய்விக்கக் கருதிய சுபத்திரன் தன் கருத்தை அரசற்குத் தெரிவிக்க நினைத்தான்.

சுபத்திரன் அரசர்க்குத் தெரிவித்தல்

கலைத்தொகை நலம்பல கடந்த காளைதான்

நலத்தகை யவள்நலம் நினைப்ப, நாய்கனும்

மலைத்தொகை மதம்தவழ் யானை மன்னவன்

நிலத்தவர்க் கறிவுற நெறியிற் செப்பினான். 385

திருமணம்

இடியுமிழ் எறிதிரை முழக்கிற் பல்லியம்

கொடியணி வியனகர்க் குழுமி யார்த்தெழக்

கடிமணம் இயற்றினார் கடவுள் நாளினால்

வடிமலர்க் கோதையை மைந்தற் கென்பவே. 386

திருமணம் புணர்ந்த சீவகன் கேமசரியுடன் இரண்டு திங்கள் இன்பத்துறையில் எளியனாய் இனிதிருந்து, இனி அவளைவிட்டு நீங்கிச் செல்லக் கருதினான். இக்கருத்தை அவட்கோ பிறர்க்கோ வெளிப்படக் கூறல் தகாது என்று நினைந்து குறிப்பாக அவள்பால் தன் பிரிவுக் குறிப்பை வெளியிட நினைத்தான்.

சீவகன் தன் பிரிவை வண்டிற்குரைப்பான் போலக் கேமசரி கேட்கக் கூறல்

திங்களங் குழவி செவ்வான் இடைக்கிடந் திமைப்ப தேபோல்

குங்கும மார்பிற் பூண்ட குளிர்கதிர் ஆர மின்ன,

மங்கையோ டிருந்த போழ்தோர் மணிவண்டு கண்டு சொன்னான்

கங்குல்தான் நீங்க லுற்றுக் கமழ்மல ரணிந்த தாரான். 387

மணிவண்டு! இம் மாதர் கோதை

மதுவுண வந்த போழ்துஅங்கு

இணைவண்டங் கிறந்து பாடின்

றிருக்குமே இரங்க லின்றாய்த்

துணைவண்டு துஞ்சின் நீயும்

துஞ்சுவை யென்று நின்கண்

பணிகொண்ட தின்மை யாற்றான்

பரிவொடும் இருக்கு மன்றே. 388

இவ்வண்ணம் இனிய சொல்லாட்டுக்களால் கேமசரியை மகிழ்வித்த சீவகன் அவள் அயர்ந்து உறங்குவது கண்டான். உடனே அவன் மெல்ல எழுந்து பவழத் தாழையுடைய பள்ளியறையின் மணிக்கதவைத் திறந்துகொண்டு இரவில் தனியே போகலுற்றான்.

சீவகன் கேமசரியை விட்டுப் போதல்

அல்லியுட் பாவை யன்னாள்

அறிவுறா வகையின் ஒற்றி

மெல்லவே திறந்து நீக்கி

மின்னுவிட் டிலங்கு பைம்பூண்

கொல்சின மடங்க லன்னான்

கொழுநிதி மாடம் நீந்திப்

பல்கதிர்ப் பருதி போலப்

பாயிரு ளேகி னானே. 389

அவன் நீங்கினதும் ஏதோ கனவுகண்ட கேமசரி அக்கனவின் கண் தன் காதற் கேள்வனைக் காணாளாய்த் திடுக்கிட்டெழுந்தான். அருகிருந்த சீவகனைப் பார்த்தாள். அவன் இன்மையை யுணர்ந் தாள். அவ்வறையிலிருந்த மணிவிளக்கின் ஒளி பரவிய எல்லை யளவும் அவனைத் தேடிக் காணாளாயினாள்.

கேமசரி சீவகனைத் தேடிக் காண்டல்

திருமணி குயின்ற செம்பொன்

திருந்துபூங் கொம்ப னாள்தன்

கருமணிப் பாவை யன்னான்

கரந்துழிக் காண்டல் செல்லாள்

எரிமணி விளக்க மாடத்

திருளறு காறு மோடி

அருமணி யிழந்தோர் நாகம்

அலமரு கின்ற தொத்தாள். 390

கேமசரி புலம்புதல்

யாண்டை யாயைய அஞ்சினென் ஆருயிர்

ஈண்டு டம்பொழித் தேக வலிக்குமால்,

நீண்ட தோளவ னேநிறை யானிலேன்,

தீண்டு வந்துஎனத் தேனின் மிழற்றினாள். 391

சுழலும் நெஞ்சொடு கைவளை சோருமால்,

சுழலும் கண்களும், சூடுறு பொன்னென,

அழலும் மேனியும், ஆற்றலென் ஐயவோ!

நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ? 392

திருந்து மல்லிகைத் தேங்கமழ் மாலையான்

புரிந்து சூடினும், “பூங்கொடி நுண்ணிடை

வருந்து மால்,மட வாய்,” எனும் வஞ்சம்நீ

கரிந்து யான்நையக் காண்டலும் வல்லையோ? 393

இவ்வாறு பலவாறு வாய்வெருவிப் பெருந்துயருழந்து வருந்திய கேமசரி உயிர்விடத் துணிந்தாள். துணிந்தவழி, அவள் இருந்த மனைத்தெய்வம் சீவகன் வண்டின் செய்தியை நினைப்பித்தது. அதனை நினைத்து அவள் உயிர்விடாது தாங்கியிருத்தற்கு நினைத்தனள்.

கேமசரி இறந்து பாடுதவிர்தல்

முயங்கினான் சொன்ன வண்டாய்

முகிழ்முலைத் தெய்வம் சேர

உயங்குவாள் உணர்ந்து கேள்வற்

கூனமும் பிரிவு மஞ்சி

இயங்குவான் நின்று ஆவி

தாங்கினள் என்ப போலும்

வயங்குபொன் ஈன்ற நீல

மாமணி முலையி னாளே. 394

கேமசரி வண்டுகட் குரைத்தல்

“வஞ்சவாய்க் காமன் சொன்ன

மணிநிற வண்டு காள்!நீர்

துஞ்சுவேன் துயரம் தீரத்

தொழுதகு தெய்வ மாவீர்;

மஞ்சுதோய் செம்பொன் மாடத்

தென்மனை தன்னுள்” என்றாள்

பஞ்சிமேல் மிதிக்கும் போதும்

பனிக்கும்சீ றடியி னாளே. 395

இவ்வண்ணம் புலம்புவதும், தேர்வதும், தெளிவதுமாய்க் கேமசரி உழந்து கொண்டிருக்கையில், வெள்ளி முளைத்தது. கேமசரியின் அழுகுரலைக் கேட்ட அம் மனையகத்து மகளிர் பலரும் திரண்டுவந்து கேமசரியை யடைந்தனர். அவள் நற்றா யாகிய நிப்புதியும் அங்கே வந்து சேர்ந்து மகட்குற்றது கேட்டு மிகவருந்தி, ஒருவாறு தெளிந்து தக்க ஆறுதல் கூறலுற்றாள்.

நிப்புதி தேற்றுதல்

விழுத்திணைப் பிறந்து வெய்ய வேட்கைவே ரரிந்து மெய்ந்நின்று

இழுக்கமொன் றானுமின்றி யெய்திய தவத்தின் வந்து

வழுக்குத லின்றி விண்ணோன் வச்சிர நுதியின் இட்ட

எழுத்தனான் தந்த இன்பம் இன்னும்நீ பெறுதி யென்றாள். 396

எரிதலைக் கொண்ட காமத் தின்பநீர்ப் புள்ளி யற்றால்,

பிரிவின்கண் பிறந்த துன்பம் பெருங்கட லனைய தொன்றால்

உருகிநைந் துடம்பு நீங்கின இம்மையோ டும்மையின்றி

இருதலைப் பயனும் எய்தார் என்றுயாம் கேட்டு மன்றே. 397

மன்னுநீர் மொக்கு ளொக்கும் மானிட ரிளமை யின்பம்

மின்னின்ஒத்து இறக்கும் செல்வம், வெயிலுறு பனியின் நீங்கும்

இன்னிசை கறங்கும் நல்யாழ் இனியினும் இனிய சொல்லாய்

அன்னதால் வினையி னாக்கம், அழுங்குவ தென்னை யென்றாள். 398

கேமசரி தேறியிருத்தல்

வாசமிக் குடைய தாரான் வண்டினுக் குரைத்த மாற்றப்

பாசத்தா லாக்கப் பட்ட ஆவியன், அல்லதெல்லாம்

பேசின்ஓர் பிணையல் மாலை பிசைந்திடப் பட்டதொத்தாள்,

தூசுலாம் பரவை யல்குல் மணிப் பாவை யன்னாள். 399

சீவகனைத் தேடிக் காணாமையால் ஒருவாறு

தெளிந்திருத்தல்

பையர விழுங்கப் பட்ட பசுங்கதிர் மதிய மொத்து

மெய்யெரி துயரின் மூழ்க விதிர்விதிர்த் துருகி நையும்

மையிருங் குழலி னாள்தன் மைந்தனை வலையிற் சூழ்ந்து

கையரிக் கொண்டும் காணாள், காளையும் காலிற் சென்றான். 400

நள்ளிருளில் சீவகன் சென்று கொண்டிருக்கையில், அவ்விருள் புலந்து கெடுமாறு திங்கள் வானத்தில் தோன்றிற்று. அதன் ஒளியால் இனிதே அவன் நெறியறிந்து சென்றான். பின்பு சில நாழிகை கழிந்ததும் பொழுது விடிந்தது. ஞாயிறு எழுந்து தன் ஒள்ளொளியைப் பரப்பிற்று.

சீவகனை வழிப்போவான் ஒருவன் கண்டு வினவுதல்

எவ்வூரீர் எப்பதிக்குப் போந்தீர்நும்

மனைவியர்தாம் எனைவர்? மக்கள்

ஒவ்வாதார் தாம்எனைவர்? ஒப்பார்மற்

றெனைவர்?நீர் உரைமின் என்றற்கு

இவ்வூரேன், இப்பகுதிக்குப் போந்தேன்என்

மனைவியரும் நால்வர், மக்கள்,

ஒவ்வாதார் தாம்இல்லை; ஒப்பான்

ஒருவன்என உரைத்தான் சான்றோன். 401

அதுகேட்ட அவன் மனைவியர் நால்வர் வயிற்றில் ஒரு மகன் பிறந்துளான் என்ற சொல்லால் வியப்புக்கொண்டு, அஃது எங்ஙனம் கூடுமென்று கேட்டான்.

சீவகன் தனக்கு மனைவியர் முதலாயினார் இவர் என வுரைத்தல்

நல்தானம் சீலம் நடுங்காத்

தவம்அறிவர் சிறப்பு இந்நான்கும்

மற்றாங்குச் சொன்ன மனைவியர்;இந்

நால்வர்அவர் வயிற்றுள் தோன்றி

உற்றான் ஒருமகனே, மேற்கதிக்குக்

கொண்டுபோம் உரவோன் தன்னைப்

பெற்றார் மகப்பெற்றார், அல்லாதார்

பிறர் மக்கள் பிறரே கண்டீர். 402

தானம், சீலம், தவம், இறைவர் வழிபாடு என்ற நான்குமே மனைவியர் என்றும், நல்வினையே மகன் என்றும் சொல்லி, சீவகன் மேலும் தானம் முதலிய நான்கினையும் அவ்வழிப்போக்கனுக்கு எடுத்து விளக்கினன். அதன்பின் அவனுக்கே, மகன் என்றுரைத்த நல்வினையின் இயல்பினைச் சீவகன் எடுத்து மொழியலுற்றான்.

சீவகன் வழிப்போக்கனுக்கு நல்வினையின்

இன்றியமையாமை கூறித் தெருட்டுதல்

மட்டார் பூம்பிண்டி வளங்கெழு

முக்குடைக்கீழ் மாலே கண்டீர்

முட்டாத இன்பப் புதாத்திறக்கும்

தாளுடைய மூர்த்தி பாதம்,

எட்டானும் பத்தானும் இல்லாதார்ந்

கிவ்வுலகில் இன்ப மேபோல்

ஒட்டாவே கண்டீர் வினை,அவனைத்

தேறாதார்க் குணர்ந்தீ ரன்றே. 403

வேற்றுவ ரில்லா நுமரூர்க்கே

செல்லினும், வெகுண்டீர் போல

ஆற்றுணாக் கொள்ளா தடிபுறத்து

வைப்பீரே? அல்லீர் போலும்

கூற்றம்கொண் டோடத் தமியே

கொடுநெறிக்கண் செல்லும் போழ்தில்

ஆற்றுணாக் கொள்ளீர் அழகலால்

அறிவொன்றும் இலிரே போலும். 404

அறங்கேளாதாரது புன்மை யறிவு கூறல்

இழுதன்ன வெண்ணிணத்த செந்தடிக்கே

ஏட்டைப்பட் டிரும்பிற் போர்த்த

பழுதெண்ணும் வன்மனத்தார் ஓட்டை

மரச்செவியர் கேளார் பால்போன்று

ஒழுகி யமுதூறும் நல்லறத்தை

யோர்கிலர்ஊன் செய்கோட்ட டக்குக்

கழுகுண்ண வள்ளூர மேசுமந்து

புள்ளிற்கே புறம்செய் கின்றார். 405

சாக்காட்டின் கொடுமை காட்டி அறஞ் செய்யுமாறு வற்புறுத்தல்

கையாற் பொதித்துணையே காட்டக்

கயற்கண்ணாள் அதனைக் காட்டாள்,

“ஐயா விளாம்பழமே யென்கின்றீர்,

ஆங்குஅதற்குப் பருவ மன்று;என்

செய்கோ! எனச்சிறந்தாள் போல்சிறவாக்

கட்டுரையால் குறித்த எல்லாம்

பொய்யோ, பொருளுரையா முன்னே

கொடுத்துஉண்டல் புரிமின் கண்டீர். 406

காமம் பிறவிக்கு ஏதுவாம் என்றல்

பனிமதி யின்கதிர் பருகு மாம்பல்போல்

முனிமதி முகத்தியர் முறுவல் நம்பினார்

துணிவளர் கதிகளுள் தோன்றி நாடகம்

கனியநின் றாடுவர் கடையில் காலமே. 407

இவ்வண்ணம் வழிப் போவானுக்கு அறமுரைத்த சீவகன்

தன் அணிகலன்களை அவற்குக் கொடுத்தல்

இன்னவா றுறுதி கூறி

எரிமணி வயிர மார்ந்த

பொன்னவிர் கலங்க ளெல்லாம்

பொலிவொடு புகன்று நீட்டிச்

“சென்மின்நீர்” என்று கூற

வலங்கொண்டு தொழுது சென்றான்

வில்மரீஇ நீண்ட தோளான்

வெயிற்கடம் நீந்த லுற்றான். 408

கேமசரியார் இலம்பகம்

முற்றும்

கனகமாலையார் இலம்பகம்

(சீவகன் மத்தியதேயத்து ஏமமாபுரத்தை யடைந்ததும், அங்கு அந்நாட்டு அரசனால் வரவேற்கப்பட்டு அவன் மக்கட்குப் படைக் கலப் பயிற்சி செய்வித்ததும், அவ்வரசன் புதல்வி கனகமாலையை மணந்ததும், இடையே இராசமாபுரத்திலிருந்த காந்தருவதத்தை தன் விஞ்சையால் சீவகன் இருப்பிடந் தெரிந்து நந்தட்டன் முதலியோரை அனுப்ப அவனும் அவனுக்குப்பின் சீவகன் தோழர்களும் ஏமமாபுரத்தை அடைந்ததும், பின்வந்த தோழர்களால் சீவகன் தன் தாயாகிய விசயையின் இருப்பிடந் தெரிந்து மனமுருகி, அவளைக் காணும்பொருட்டுப் புறப்பட்டதும், பிறவுங் கூறப்படுகின்றன.)

கேமமாபுரத்தை விட்டு நீங்கிய சீவகன் அதன் எல்லைக்கு அப்பால் குறிஞ்சியும் முல்லையும் விரவிக்கிடந்த நாட்டை அடைந் தான்.

அந்நிலத்து வழியியல்பு

யானை வெண்மருப் புலக்கை

யறையுரல் ஐவனம் இடித்த

தேனெய் வாசவற் குவவித்

தீங்கனி வாழையின் பழனும்

ஊனை யுண்டவர் உருகும்

பசுந்தினைப் பிண்டியு மொருங்கே

மானின் நோக்கியர் நோக்கி

வழிதொறும் ஈவதவ் வழியே. 409

குறிஞ்சி யெல்லையின் நீங்கிக்

கொடிமுல்லை மகள்மொழிந் தாடச்

செறிந்த பொன்னிதழ்ப் பைந்தார்க்

கொன்றையஞ் செல்வற்குக் குரவம்

அறிந்து பாவையைக் கொடுப்பத்

தோன்றி யஞ்சுட ரேந்த

நிறைந்த பூங்குருந் துகுதேன்

நீர்பெய் தார்த்தன கரும்பே. 410

சீவகன் இக்காட்சியைக் கண்டு மகிழ்ச்சி மிகுந்து செல்ல, அவனெதிரே, வானுலகிற்குச் செல்லும் வழி காட்டுவதுபோல, வனகிரி யென்னுமொரு மலை தோன்றிற்று. அதனடியில், தாமரையும், கழுநீரும், நீலமும், ஆம்பலும் நிறைந்த நீர்நிலையொன்றை அகத்தே யுடைய பொழிலொன்றிருந்தது. சீவகன் அதன்கட் சென்று தங்கினான்.

அநங்கமாவீணை அவ்விடத்திற்கு வருதல்

கானத்தி னேகு கின்றான்

கடிபொழில் கவின்கண் டெய்தித்

தானத்தி லிருத்த லோடும்

தையலாள் ஒருத்தி தானே

வானத்தின் இழிந்து வந்த

வானவர் மகளு மொப்பாள்

நானமும் பூவும் சாந்தும்

நாறவந் தருகுநின்றான். 411

சீவகன் அவளைக் காண்டல்

அணிகல வரவத் தாலும்

அமிழ்துறழ் நாற்றத் தாலும்

பணிவரும் சிங்க நோக்கின்

பணையெருத் துறழ நோக்கி,

மணிமலர் நாகம் சாந்து

வழையொடு மரவ நீழல்

துணிவருஞ் சாயல் நின்றாள்

தோன்றல்தன் கண்ணிற் கண்டான். 412

அநங்கமாவீணை அவன்மேல் வேட்கை கொளல்

முறுவல்முன் சிறிய தோற்றா

முகைநெறித் தணைய வுண்கண்

குறுநெறி பயின்ற கூந்தல்

குறும்பல்கா லாவிக் கொள்ளாச்

சிறுநுதற் புருவ மேற்றாச்

சேர்துகில் தானை சோர

அறியுநர் ஆவி போழும்

அனங்கன்ஐங் கணையு மெய்தாள். 413

சீவகன் அவள் செயலைக் கண்டு மனத்தே அருவருப்புற்றுப் பெண்பிறப்பின் இயல்பையே வெறுத்தவனாய், மகளிர் மணம் வேறுபடுந் திறத்தைத் தனக்குள்ளே எண்ணியிருந்தான். அவன் கருத்தை யுணரமாட்டாத அவள், அவன் தன் வரலாற்றை யறியும் கருத்தால் வெளிப்பட வினவமாட்டாது தடுமாறுகின்றான் எனப் பிறழ நினைந்து அதனைக்கூறலுற்றாள்.

அநங்கமாவீணை தன் வரலாறு கூறல்

தோன்றலே, யான் என் தோழியருடன் வனத்திலே விளையாடு கையில், விஞ்சைய னொருவன் போந்து என்னைத் தன்பாற் படுத்திக்கொண்டு சென்றான். ஆங்கே, அவன் மனைவி என்னைப் போகவிட, யான் இங்கே வந்தடைந்தேன். என் பெயர் அநங்கமா வீணை யென்பது.

தாயிலாக் குழவி போலச்

சாதுய ரெய்து கின்றேன்

வேயுலாம் தோளி னார்தம்

விழுத்துணைக் கேள்வ! நிற்கண்டு

ஆயினேன் துறக்கம் பெற்றேன்

அளித்தரு ளாது விட்டால்

தீயினுள் அமிர்தம் பெய்தாங்

கென்னுயிர் செகுப்ப லென்றாள். 414

அதுகேட்ட சீவகன் அவள் கருத்தை மாற்றக் கருதி, மக்களுடம் பின் புன்மையைப் பலவகையால் விளக்கிக் கூறி, அவள் செயலில் அவட்கே அருவருப்புப் பிறக்குமாறு பேசினான்.

அந்நிலையில் அவள் கணவனான பவதத்தன் அவளைத் தேடிக்கொண்டு வருதல்

காதல் மாமன் மடமகளே

கருங்குழல்மேல் வண்டிருப்பினும்

ஏத முற்று முரியும்நுசுப்

பென்றுன்னியல் பேத்துவேன்,

ஓதம் போல உடன்றுடன்று

நைய நீ,ஒண் தாமரைக்

கோதை போல்வாய், ஒளித்தொழிதல்,

கொம்பே! குண னாகுமே.? 415

இவ்வாறு அழுதுகொண்டு போந்த பவதத்தனை எதிர்சென்று கண்ட சீவகன், நீ யார்? நினக்கு உற்றது என்னை? என்று வினவ, அவன் நிகழ்ந்தது கூறலுற்றான்.

பவதத்தன் கூறல்

“என்னை கேளீர்? என்னுற்றீர்

என்ன பெயரீர்" என்றாற்குப்

பொன்னங் குன்றிற் பொலிந்ததோள்

நம்பி! ஒருபொற் பூங்கொடி

யென்னும் நீரா ளைஈங்கே

கெடுத்தேன்என் பாவத்தால்,

பன்னூற் கேள்வி யுடையேன்,யான்

பவதத் தன்என் பேன் என்றான். 416

இப் பவதத்தன், யான் மத்திமதேயத்துப் பதுமபுரத்தில் கீர்த்திதத்தன் என்பானுக்கும் சினதத்தையென்பாளுக்கும் மகனா வேன். என் மாமன் சீமானுக்கும் மாமி சித்திரை மாலைக்கும் பிறந்த மகள் என் மனைவி, அவள் தன் ஆயத்தோடு பந்தாடக் கண்டு அவள் அழகில் ஈடுபட்ட யான் அயர்ந்தேன். என் அயர்ச்சி யறிந்த அவளும் உடன்வர இருவேமும் இங்கே வந்தேம். அவள் உண்ணு நீர் வேட்டாள். கொண்டுவருதற்கு யான் சென்றேன். சென்ற யான் தாமரையிலையை வளைத்து நீர் கொணர்ந்தேன். அவளைக் காணேன், என் செய்வேன், என்று மேலும் கூறினான்.

பன்னூற் கேள்வியுடையேன் யான் என்றதுகொண்டு பவதத்தற்குச் சீவகன் கூறல்

கைப்பொருள் கொடுத்தும் கற்றல்

கற்றபின் கண்ணு மாகும்

மெய்ப்பொருள் வினைக்கும் நெஞ்சின்

மெலிவிற்கோர் துணையு மாகும்,

பொய்ப்பொருள் பிறகள், பொன்னாம்,

புகழுமாம், துணைவி யாக்கும்,

இப்பொருள் எய்தி நின்றீர்!

இரங்குவ தென்னை? என்றான். 417

இவ்வாறு கூறிய சீவகன் தீயமகளிர், நன்மகளிர் என்ற இரு திறத்தாரது இயல்பு கூறி அவளைத் தெருட்ட நினைந்தான்.

தீப்பெண்டிர் இயல்புகூறல்

அன்புநூ லாக இன்சொல்

அலர்தொடுத் தமைந்த காதல்

இன்பம்செய் காமச் சாந்தின்

கைபுனைந் தேற்ற மாலை

நன்பகற் சூட்டி விள்ளா

தொழுகினும், நங்கை மார்க்குப்

பின்செலும் பிறர்கண் உள்ளம்

பிணையனார்க் கடிய தன்றே. 418

நற்பெண்டிர் இயல்பு கூறல்

சாமெனில் சாதல், நோதல்,

தன்னவன் தணந்த காலைப்

பூமனும் புனித லின்றிப்

பொற்புடன் புலம்ப வைகிக்

காமனை யென்றும் சொல்லார்

கணவற்கை தொழுது வாழ்வார்

தேமலர்த் திருவோ டொப்பார்

சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார். 419

“இக்கூறிய நற்பெண்டிர் இயல்பே என் மனையாளும் உடையள், அவளை இழந்து யான் எவ்வாறு வாழ்வேன்,” என்று பவதத்தன் சொல்லிப் புலம்பினான்.

சீவகன் அநங்கமாவீணையைக் காணும் திறம் கூறக்கேட்டு, அவன் அவளைச் சென்று காண்டல்

“இனையல் வேண்டா, இம்மந்

திரத்தை யொருவில் லேவளவு

அனைய எல்லை சென்றால்

இயக்கிக் கொணர்ந்த ருளும்நீ

புனைசெய் கோல்வளை யைக்கைப்

படுதி" என்றுஆங் கவன்போதலும்

அனைய மாதரைக் கண்டாங்கு

அடிபுல்லி வீழ்ந்த ரற்றினான். 420

சீவகன் கற்பித்த மந்திரத்தை யோதியவதனால் பவதத்தன்பால் அநங்கமாவீணை நீங்காக் காதலுடையளாதல்

பட்ட வெல்லாம் பரியா

துரைத்தான் அவளும் கேட்டாள்

விட்டா னார்வம் அவன்கண்,

இவன்மேல் மைந்து றவினால்

மட்டார் கோதை மனைது

றந்தாள் மைந்தனும் மங்கைமேலே

ஒட்டி விள்ளா ஆர்வத்த

னாகி யுருவம் ஓதினான். 421

பின்பு, சீவகன் வனகிரியை யடைந்து ஆங்குள்ள அருகக் கடவுளின் திருவடியை வணங்கிப் பாடுதல்

முனிமை முகடாய் மூவா முதல்வன்

தனிமைத் தலைமை தனதுதான் என்ப;

தனிமைத் தலைமை தனதுதான் என்றால்

பனிமலர் தூய்நின்று பழிச்சாவா றென்னே. 422

இவ்வாறு பாடிப் பரவிய சீவகன் மேலும் செல்லத் தொடங்கி, எதிரே தோன்றிய நெடுஞ்சுரமொன்றைக் கண்டு, அதனையும் விரைவில் கடந்து, மருதவளம் நிறைந்த மத்திம நாட்டு ஏமமாபுரம் என்னும் நகரத்தை முரசறையும் நல்லோரையில் சென்று சேர்ந்து ஒரு பொழிலகத்தையடைந்தான். அங்கே அவன் மணமகன் ஒருவனைக் கண்டு, அந்த நாட்டின் பெயரும் நகரத்தின் பெயரும் அறிந்து கொண்டான். அம்மகன் சீவகனை உண்டற்கழைப்ப, சீவகன் பின்னர்க் காண்பதாகச் சொல்லி ஆங்கிருந்த பொய்கைக் கரையை யடைந்தான்.

சீவகன் பொய்கையிற் கண்டகாட்சி பெடையன்னம் ஊடுதல்

வண்சிறைப் பவளச் செவ்வாய்ப்

பெடையன்னம் மடமை கூரத்

தண்கய நீருட் கண்ட

தன்னிழல் பிறிதென் றெண்ணிக்

“கண்டனம் கள்வ மற்றுன்

காதலி தன்னை நீர்க்கீழ்ப்

பண்டைய மல்லம், வேண்டா

படுக்க" என்று ஊடிற் றன்றே. 423

சேவலன்னம் ஊடல் தீர்த்தல்

செயிர்ப்பொடு சிவந்து நோக்கிச்

சேவலின் அகலச் சேவல்

“அயிர்ப்பதென்? நின்னை யல்லால்

அறியலேன், அன்றி மூக்கின்

உயிர்ப்பதுன் பணியி னாலே

ஊடல்நீ" என்று பல்கால்

பயிர்ப்பறச் சிறகாற் புல்லிப்

பணிந்துபாண் செய்த தன்றே. 424

இவ்வண்ணங்களைக் கண்ணுற்ற சீவகனுக்கு அவற்றின் செய்கை, அவன் தத்தையை நினைப்பித்தது. அவன் அவளை நினைத்து வேட்கையால் உள்ளம் மெலிந்து பலபட வருந்தலுற்றான்.

வண்டு வாழ்பயில் கோதை மணமுதல்

கண்ட ஞான்றுதன் கண்ணெனும் கைகளால்

நொண்டு கொண்டு பருகிய நோக்கமொன்று

உண்டெ னாவி யுருக்கி யிடுவதே. 425

தத்தை தன் பிரிவாற்றியிருப்பள் எனச் சீவகன் தெளிதல்

காத லாளுடல் உள்ளுயிர் கைவிடின்

ஏத மென்றுயிர் எய்தி யிறக்கும், மற்று

ஆத லால்,அழி வொன்றிலள், அல்லதூஉம்

மாதர் விஞ்சையும் வல்லளு மல்லலோ? 426

தான் வேட்கை நினைந்து மெலிதல் தகாது என்று

தெளிந்து சீவகன் தன் கல்வியறிவை நோதல்

காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா

ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்;

தாது துற்றுபு தங்கிய வண்டனார்க்கு

ஏதம் இற்றென எண்ணும்என் நெஞ்சரோ. 427

மெலிந்த தன் நெஞ்சினைச் சீவகன் தன் வயமாக்கிக் கொளல்

வேட்கை யூர்தர விம்முற வெய்திய

மாட்சி யுள்ளத்தை மாற்றி மலர்மிடை

காட்சிக் கின்பொய்கைக் காமர் நலனுண்டு

மீட்டும் அங்கிருந் தான்விடை யேறனான். 428

அப்போழ்து அந்நாட்டரசனான தடமித்தனுக்கும் அவன் மனையாட்டி நளினைக்கும் தலைமை நலம் கனியப்பிறந்த விசயனென் பான், அரண்மனைச் சோலைக்குச் சென்றான். வழியில் பொய்கைக் கரையில் சீவகன் இருக்கக் கண்டு அவன்பால் வந்து நின்றான்.

விசயன் சீவகனை வரலாறு வினவி யறிதல்

இந்நாட் டிவ்வூர் இவ்விட

மெய்தார் இவண்வாழ்வார்

எந்நாட் டெவ்வூர்? எப்பெய

ராய்நீ உரை என்றாற்கு

அந்நாட் டவ்வூர் அப்பெய

ரல்லாப் பெயர்சொன்னான்,

பொய்ந்நாட் டேனும் பொய்யல

வாற்றால் புகழ்வெய்யோன். 429

சீவகனது உரையாலும் உடல் வனப்பாலும் விசயன் உள்ளம் கவரப்பட்டான். சீவகனது தோழமையைப் பெறுதற்கு அவனுக்கு விருப்பமுண்டாயிற்று.

விசயன் சீவகனைத் தோழமை கொள்ளல்

பூங்கழ லானைப் புண்ணிய

நம்பி முகம்நோக்கி

ஈங்கிது நின்னாடு, இப்பதி

நின்னூர், இதுநின் இல்,

வீங்கிய திண்டோள் வெல்புக

ழாய்!நின் கிளை என்றாற்கு

ஆங்கது எல்லாம் அண்ணலும்

நேர்ந்துஆங்கு அமைக என்றான். 430

பின்பு, விசயன் அருகிலிருந்த மாமரத்தில் பழுத்திருந்த கனியொன்றை வீழ்த்த எண்ணி, அம்பு எய்தானாக, அது தவறி விட்டது. சீவகன் அதனை வாங்கி, தான் இருந்த விடம் பெயராதே எய்தான். அக் கனியும் தவறின்றி, காம்பு அறுப்புண்டு அவன் கையெட்டும் எல்லைக்கண் வர, சீவகன் அதனைக் கையில் ஏந்தி விசயன்பால் தந்தான். அவனது விற்றிறத்தைக் கண்ட விசயன் மிக்க வியப்புற்றான்.

விசயன் வியந்து சீவகனைத் தன் அரண்மனைக்குக் கொண்டேகுதல்

“மராமரம் ஏழும் எய்த

வாங்குவில் தடக்கை வல்வில்

இராமனை வல்லன் என்பது

இசையலால் கண்ட தில்லை

உராமனம் இவன்க ணின்றி

யுவக்குமா செய்வல்" என்று

குராமலர்க் காவின் நீங்கிக்

கோயிலே கொண்டு புக்கான். 431

அங்கே, விசயன் தன் தந்தைபால் சீவகன் திறத்தை இனி தெடுத்துக் கூறினான். அரசனும் சீவகனது உருவவிலக்கணங்களை உற்று ஆராய்ந்து இவன், “ஏவினுக்கு அரசன், வில்வன்மையில் துரோணனுக்கு நிகராவார் விஞ்சையருலகத்தும் மண்ணுலகத்தும் ஒருவரும் இலர் என்பார் வாய்மடங்க இவன் வந்துளான்,” என்று துணிந்து பெரு மகிழ்வு கொண்டான்.

தடமித்தன் தன் மக்கட்கு விற்பயிற்சி நல்குமாறு சீவகனை வேண்டுதல்

விற்றிறல் நம்பி தேற்றான்

விருந்தினன் இவனும் அன்றி

மற்றுமோர் நால்வ ருள்ளார்

மாண்பினால் வளர்ந்த தில்லை

கொற்றம்நீ கொடுக்கல் வேண்டும்

குறைஎனக் குரிசில் நேர்ந்தான்

அற்றைநா ளாதி யாக

அவர்களும் பயிற்று கின்றார். 432

சீவகன் அரசகுமரற்கு, வில்லாசிரியனாக இருந்து விற் பயிற்சியும், யானை, குதிரை, தேர் முதலிய ஏறும் பயிற்சியும், பிற படைக்கலப் பயிற்சியும் நல்கிவந்தான். வருங்கால், ஒருநாள், கோயிற் சோலைக்குச் சென்றான். அங்கே, வேங்கை, அழிஞ்சில், புன்கு, மகிழ், சண்பகம், பாதிரி, முல்லை, காந்தள், குரவம், தளவம், பிறவும் இனிது மணங்கமழ மலர்ந்திருந்தன. அவற்றைக் கண்ட சீவகன் அழகியதொரு மாலைதொடுத்தான். அத் தொடுப்பு ஓர் ஓலைப் பாசுர மாலையாக அமைந்தது. அப்போது அங்கே போந்த கூனியொருத்தி அவனை வணங்கினாள். அவனும் அதனை அவட்கு ஈந்தான். அதனைப் பெற்றுச் சென்று, அவள் அரசன் மகளான கனகமாலையிடம் அதனைத் தந்தாள். அவள் அத் தொழிலில் வல்லுநளாதலின், அதனை நோக்கினாள். அதன்கண், மனக்கினிய மகளிரொடு கூடி இன்புற்று வாழாத வாழ்வு ஆடவர்க்கு வேடர் வாழ்வு போல்வதாகும். இவ்வாழ்வைப் பெறாதார், அது பெறுவது குறித்துத் தவம் செய்வதே அவரது ஆண்மைக்கு அழகாம், என்ற கருத்தமைந்த பாசுரம் அமைந்திருந்து. அதனைப் படித்தறிந்த அக் கனகமாலையின் உள்ளம் அவன்பாற் படுவதாயிற்று.

கனகமாலை வேட்கைமிக் கிருத்தல்

பின்னி விட்ட பிடித்தடக்கை

யிரண்டு போன்று திரண்டழகார்

கன்னிக் கலிங்க மகிலார்ந்து

கவவிக் கிடந்த குறங்கினாள்

மின்னுக் குழையும் பொற்றோடும்

மிளிர எருத்தம் இடம்கோட்டி

என்னும் இமையாள் நினைத்திருந்தாள்

இயக்கி யிருந்த எழில்ஒத்தாள். 433

இந்நிலையில் பொழுது மறைவதாயிற்று. வேனிற்கால மாதலின், தீவிய மணம் விரவித் தென்றல் வந்துலவும் மாலைப் போது வந்தது. வேட்கை நோயுற்றார்க்கு மிக்க துயர் செய்யும் காலம் அதுவாதலால், கனகமாலைக்கு வேட்கை மிகுவதாயிற்று.

கனகமாலை நெஞ்சுகலுழ்ந்து வருந்துதல்

ஒன்றே யெயிற்ற தொருபெரும்பேய்

உலகம் விழுங்க அங்காந்து

நின்றாற்போல, நிலவுமிழ்ந்து

நெடுவெண் திங்கள் எயிறிலங்க

இன்றே குருதி வானவாய்

அங்காந் தென்னை விழுங்குவான்

அன்றே வந்தது இம்மாலை!

அளியேன் ஆவி யாதாங்கொல்? 434

குயிலொடு நொந்து கூறல்

வருந்தி யீன்றாள் மறந்தொழிந்தாள்

வளர்த்தாள் சொற்கேட் டில்கடிந்தாள்

முருந்தின் காறும் கூழையை

முனிவார் நின்னை யென்முனிவார்

பொருந்திற் றன்றால் இதுஎன்னாய்

பொன்றும், அளித்து,இவ் வுயிர்என்னாய்

திருந்து சோலைக் கருங்குயிலே!

சிலம்ப விருந்து கூவுதியால். 435

தனக்கு உற்றன கண்டு தானே புலம்புதல்

வேம்என் நெஞ்சம் மெய்வெதும்பும்

விடுக்கும் ஆவி வெய்துயிர்க்கும்

பூமென் குழலார் புறநோக்கி

நகுவார் நகுவ தாயினேன்

தாம மார்பன் தான்புனைந்த

தண்ணென் மாலை புணையாக

யாமக் கடலை நீந்துவேன்

யாரு மில்லாத் தமியேனே. 436

இவ்வாறு வருந்தியவள், தன் கிளி தேற்றத் தேறித்தானும் ஒரு மாலை தொடுத்து மறுநாளே தன் தோழியாகிய அனங்கவிலாசினி யென்பாளிடம் கொடுத்தனுப்பினாள். அவள் சென்று அதனைச் சீவகற்கு நீட்டினாள். அவன் அதனை முதற்கண் ஏற்க மறுத்தான். உடனே, என் தலைவிக்கு மாலை தொடுப்பவனும் நீயே, அவள் தோள் மெலிவிற்கு மருந்தும் நீயே, உயிரும் நீயே, ஏல் என்று சொன்னாள்.

சீவகன் மாலையை ஏற்றல்

“மன்னர் கோயில் உறைவார்

பொறிசெறித்த மாண்பினரே“

என்ன, “அஞ்சினாய்” என்று அவனை

நக்காட்கு”அஃதன்று, கோதாய்

இன்ன கொள்கையேற்கு ஏலாது“

என்னஇலங் கெயிற்றினாள்,

”அன்னம் அன்ன நடையினாள்

தான்வருந்தும்" எனநேர்ந்தான். 437

பின்பு அநங்கவிலாசினி கனகமாலைபாற் சென்று நிகழ்ந்தது கூறி மகிழ்வித்தாள். கனகமாலைக்கு வேட்கை பெருகி அவளை வருத்தத் தொடங்கிற்று. தோழியர் தேற்றத்தேறி, அவள் ஒருவாறு ஆற்றியிருப்பாளாயினள்.

இது நிற்க, அரசனாகிய தடமித்தன் தன் மக்கட்குப் படைக்கலப் பயிற்சி நிரம்பிவிட்டதெனச் சீவகனால் தெரிந்தான். ஒரு நாள் அவரது பயிற்சிச் சிறப்பை அறிய விரும்ப, அவ்வண்ணமே அவர்களும் தங்கள் விற்றிற முதலாய படைப்பயிற்சித் திறத்தை யாவரும் வியப்பக்காட்டினர். அது கண்டோர் அவர்களைப் புகழ்ந்து பாராட்டினர்.

பாராட்டுரை

“விசயனே விசயன் விற்போர்க்

கதம்பனே முருகன் வேற்போர்த்

திசையெலாம் வணக்கும் வாட்போர்க்

கந்தணன் செம்பொ னாமன்

அசைவிலான் யானைத் தேர்ப்போர்க்

கசலனே அசல கீர்த்தி

வசையிலான் புரவிச் சேனென்

றியாவரும் புகழப் பட்டார். 438

இது கண்டு பெருமகிழ்வு கொண்ட வேந்தன், “இவ்வாசிரியன் ஒன்று அரசனாதல் வேண்டும். இன்றேல் அந்தணனாதல் வேண்டும், ஏனையோர்க்கு இவ்வுண்மை யுண்டாகாது. ஆதலால் இவனை நீங்காச் சிறையிடல் வேண்டும். இவனைக் கொணர்மின்” என ஏவினான். அவன் கருத்தறியாத அவன் பரிசனத்தாரும் பிறரும் அவன் கூறியது கேட்டு மிகவும் வருத்தமுற்றனர். ஏவலர் சென்று சீவகனை அரசன்பால் கொண்டுவந்தனர். சீவகன் வந்ததும் அவனை அரசன் வரவேற்றுத் தனியே ஓரிடத்திற்குக் கொண்டு சென்றான்.

தடமித்தன் சீவகற்குக் கூறல்

புள்முழு திறைஞ்சுங் கோட்டுப்

பொருகளி றனைய தோன்றல்

மண்முழு தன்றி வானும்

வந்துகை கூடத் தந்தாய்

கண்முழு துடம்பிற் பெற்றேன்

காளை! கைம் மாறு காணேன்

பண்முழு துடற்றும் தீஞ்சொல்

பாவைநின் பால ளென்றான். 439

சீவகன் மறுப்பு அவன் மேலும் கூறல்

முடிகெழு மன்னன் சொல்ல

மொய்கொள்வேற் குரிசில் தேற்றான்

வடிவமை மனன்ஒன் றாக

வாக்கொன்றா, மறுத்த லோடும்

தடிசுவைத் தொளிறும் வேலான்

தன்கையால் முன்கை பற்றி

இடிமுர சனைய சொல்லால்

இற்றென விளம்பு கின்றான். 440

கணிகள் கூறியது கூறிச் சீவகனை மணம் நேர்வித்தல்

பூவியல் கோயில் கொண்ட

பொன்னனாள் அனைய நங்கை

காவியங் கண்ணி வந்து

பிறத்தலும் கணிகள் ஈண்டி

மூவியல் திரித லின்றிச்

சாதக முறையிற் செய்தார்

ஏவியல் சிலையி னாய்க்கே

உரியள்என் றுரைப்ப நேர்ந்தான். 441

பின்பு சான்றோர் குறித்த நாளில், மண்ணவர் அறிய விண்ண வர் காப்ப, சீவகன் கனகமாலைக்கு மாலை சூட்டி மணம் புரிந்து கொண்டான்.

மணமக்களின் இன்ப நிலை

திரையிடைக் கொண்ட இன்னீ

ரமுதுயிர் பெற்ற தென்னும்

உரையுடைக் கோதை மாதர்

ஒளிநல நுகர்ந்து நாளும்

வரையுடை மார்பன் அங்கண்

வைகின னென்ப மாதோ

கரைகட லனைய தானைக்

காவலன் காத லானே. 442

இஃது இவ்வாறாக, இராசமாபுரத்தே சீவகனைப் பிரிந்த நந்தட்டன் முதலிய தம்பிமார்கள் அவனைக் காணாமையால் மிகவும் வருந்திக் குணமாலையின் மனையை யடைந்து அவளை வினவினர். அவளால் ஒன்றும் உணர முடியாது போகவே, அவர்கள் காந்தருவதத்தையின் மனையையடைந்து சீவகனைப் பற்றிய குறிப்புக்களை யறிதற்குச் சென்றனர். அப்போது காந்தருவதத்தை தன் வீணையைப் பண்ணிச் சீவகனை நினைந்து பாடிக் கொண்டிருந்தாள்.

காந்தருவதத்தையின் பாட்டு

இறுமருங்குல் போதணியின் என்றினைந்து கையில்

நறுமலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார்,

நண்ணார் துறப்ப நனிவளையும் தோள்துறப்பக்

கண்ணோவா முத்துறைப்பத் தோழி! கழிவேனோ. 443

இவ்வாறு பாடியிருந்தவள் சீவகன் பிரிவுநோய் தன்னை மிக வருத்த ஆற்றாளாய், இனித் தான் அவனைக்கூடும் நாள் என்றோ என ஏங்கி வாடியிருந்தாள். அவள் மனைக்குப் போந்த நந்தட்டன் மிக்க அன்பும் நன்மதிப்பும் உடையனாய் மூன்றுவில் தொலைவில் நின்று, வாய்புதைத்துக் கைகட்டிப் பணிவாய், நம் அடிகளாகிய சீவகனார் எங்குள்ளார், என்று வினவி மேலும் சில மொழிகளை விளம்பலுற்றான்.

நந்தட்டன் விளம்புதல்

“பொறிகுலாய்க் கிடந்த மார்பின்

புண்ணியன் பொன்றி னானேல்

வெறிகுலாய்க் கிடந்த மாலை

வெள்வளை முத்தம் நீக்கி

நெறியினால் நோற்ற லொன்றோ,

நீளெரி புகுத லொன்றோ,

அறியலென், கொழுநன் மாய்ந்தால்

அணிசுமந் திருப்ப தென்றான்." 444

அவன் கருத்தை யுய்த்துணர்ந்த காந்தருவத்தை கூறல்

மதுமுகத் தலர்ந்த கோதை மாற்றம்மைந் தற்கு ரைப்பாள்;

கொதிமுகக் குருதி வைவேல் குரிசிலோ நம்மை யுள்ளான்;

விதிமுக மணங்கள் எய்தி வீற்றிருந் தின்பம் உய்ப்ப

மதிமுக மறியும் நாமே வாடுவ தென்னை யென்றாள். 445

தத்தை ஒரு விஞ்சையை யோதித் தன் முகத்தைத் தன் கையால் தடவிக்கொண்டு, நந்தட்டன் சீவகனைக் காணுமாறு செய்தாள்.

நந்தட்டன், விஞ்சையால் சீவகனைக் காண்டல்

பொற்புடை யமளி அங்கள் பூவணைப் பள்ளி மேலால்

கற்பக மாலை வேய்ந்து கருங்குழற் கைசெய் வானை,

முற்படக் கண்டு நோக்கி முறுவல்கொள் முகத்த னாகி

விற்படை நிமிர்ந்த தோளான் தொழுதுமெய் குளிர்ந்து நின்றான். 446

பின்பு காந்தருவதத்தை தன் விஞ்சையை மாற்றினாள். நந்தட்டன் தெளிந்து அன்னாய், யான் சீவகன் திருவடியைச் சென்று கூடக் கருதுகின்றேன். விடைகொள்வேன், என வேண்டி நின்றான். அதற்கு உடன்பட்ட தத்தை நந்தட்டன் கிடந்த பள்ளியை மெழுகி மாலைநாற்றிப் புகையிட்டு விஞ்சையொன்றை யோதினாள். உடனே ஒரு தெய்வம் போந்து நந்தட்டனை அவன் கிடந்த அப் பள்ளியுடன் கொண்டுசென்று ஏமமாபுரத்து அரசன் கோயிலுக்குள் வைத்தகன்றது. பொழுதுவிடிந்தது. ஞாயிறு வானத்தே கீழ்க் கடலிலே எழுந்தது. இதற்குள் நந்தட்டன் துயிலுணர்ந்தெழுந்தான். அவன் வடிவம் சீவகன் வடிவுபோல் தோன்றக் கண்ட வசுந்தரி யென்னும் தோழி, விசயற்குத் தெரிவிப்ப, அவன் போந்து, நந்தட்டனை நோக்கி, “நீ யார்” என்று வினவ, அவன் ஒரு விடையும் கூறானாயினன். இச்செய்தியை விசயன் சென்று சீவகற்குத் தெரி வித்தான். அவன், வந்தவன் நந்தட்டனே யாகும் என்று கருதி, நந்தட்டன்பால் வந்தான். நந்தட்டன் சட்டென எழுந்து சீவகன் திருவடியில் வீழ்ந்து வணங்கினன்.

சீவகன் நந்தட்டனை ஏற்றுக்கோடல்

தாமரைத் தடக்கை கூப்பித்

தாள்முதற் கிடந்த தம்பி

தாமரைத் தடத்தை யொத்தான்

தமையனும் பருதி யொத்தான்

தாமரைக் குணத்தி னானை

மும்முறை தழுவிக் கொண்டு

தாமரைச் செங்க ணானும்

தன்னுறு பரிவு தீர்ந்தான். 447

சீவகன் சொல்லுதல்

என்னுறு நிலைமை யோராது

எரியுறு தளிரின் வாடிப்

பொன்னுறு மேனி கன்றிப்

போயினீர், பொறியி லாதேன்,

முன்னுற இதனை யோரேன்,

மூரிப்பே ரொக்க லெல்லாம்

பின்னுறு பரிவு செய்தேன்,

பேதையேன், கவலல் என்றான். 448

இவ்வாறு சீவகன் வருந்திக் கூறக்கேட்டதும் நந்தட்டன் ஆற்றாது புலம்ப, அவனைத் தேற்றிக் கனகமாலையிடம் கொண்டு சென்று அவனை அவற்குச் சீவகன் காட்டினன். நந்தட்டன் அவள் தாளில் வீழ்ந்து வணங்க, அவள் சீவகனை இவன் யார்? என்று வினவ, சீவகன் இவன் நினக்கு மைத்துனன் அனையன் என்னலும், அவள் இருவர்க்கும் விருந்து செய்தாள். விருந்துண்டபின் இருவரும் தனித்ததோர் இடத்திலிருந்து, சீவகன் சுதஞ்சணனால் கொண்டு போகப்பட்டபின் இராசமாபுரத்து நிகழ்ந்தவற்றைப் பற்றிப் பேசலாயினர்.

“அண்ணலே, மதனன் வீரர் நின்னைச் சூழ்ந்து கொண்ட அளவில் வந்த பெருங்காற்று மழையடங்க, பொழுதும் மறைந்தது. பதுமுகன், புத்திசேனன் முதலானோருடன் யாங்கள் அனைவரும் நகர்ப்புறத்தே கூடினோம். அக்காலை, பதுமுகன் உளங்கொதித்து, இனி செய்வது கூறுமின்’ என்ன புத்திசேனன் யாம் சீவகனைக் காணோமாயின், கட்டியங்காரனைக் கொன்று, நகரத்தையும் அழித்துவிட்டுச் சீவகனையடைதல் வேண்டும், என்றான். தேவதத்தன் எழுந்து” இக் கூறியது செய்தல் எளிது, சீவகன் உயிரோடிருப்பதும் இல்லாமையும் முதற்கண் அறிதல் வேண்டும் என்றானாக, சீதத்தன் “புத்திசேனன் சொல்லியவாறே செய்க” என்றான். பதுமுகன் என்னை நோக்கி, நீ இங்கேயிருந்து “நம் குரவர்க்குக் கடன் செய்க, யாங்கள் இம் முயற்சிக்கண் செல்கின்றேம்” என்றான், யான் அதற்குடன்படேனாயினேன். அக்காலை, பருவமன்றென்று தலைவியை யாற்றுவித்துத் தூது செல்கின்ற பாணன் கூற்றாக அமைந்த பாட்டொன்றையொருவன் பாடயாங்கள் அனைவரும் நன்னிமித்தமாகக் கேட்டோம். அதன்பின் தேவதத்தன் கூறியவண்ணமே செய்யக் கருதி நாடெங்கும் தனித்தும் தொக்கும் நின்னைத் தேடிக் காணாது அலமந்தேம். யான் குண மாலை மனைக்குச் சென்றேன். அவள் எனக்கு விருந்து நல்கினபின், ‘அடிகளை இன்றி நீரே உண்ணவும் வல்லீரானீர், கடியிர் நீர்’ என்று சொல்லிப் புலம்பினள். பின்பு தத்தை மனைக்குச் சென்றேன். அவள் பிரிவாற்றாமல் வருந்திப் பாடியிருந்ததைப் பிறழக்கொண்டு கடிந்து கூறினேன். அற்றைப்போது மறையவே, அன்றிரவு தன் விஞ்சையால் என்னை இங்கே எய்துவித்தாள் என்று கூறி முடித்தான். பின்பு சீவகன் தான் சுதஞ்சணனை நினைத்ததும், அவனோடு சென்றதும் முதலாகக் கனகமாலையை மணந்திருப்பதுவரை நிகழ்ந்தவை யனைத்தையும் ஒன்றுவிடாது நிரல்பட உரைத்தான். மேலும், சீவகன் ‘நாம் நம் குரவரை நெடுநாளாய்க் கண்டிலமே’ எனக் கருதி வருந்த, நந்தட்டனும் சீவகன் பொருட்டு அழத் தொடங்கினான்.

சீவகன் நந்தட்டனைத் தேற்றல்

“திண்பொருள் எய்த லாகும்

தெவ்வரைச் செகுக்க லாகும்,

நண்பொடு பெண்டிர் மக்கள்

யாவையும் நண்ண லாகும்

ஒண்பொரு ளாவ தையா

உடன்பிறப்பு ஆக்க லாகா

எம்பியை ஈங்குப் பெற்றேன்

என்எனக் கரியது?" என்றான். 44

இருவர்க்கும் இங்கே நாட்கள் பல கழிந்தன. இராசமாபுரத்தே சீவகனது தோழர் பெரிதும் உளம் வருந்தி, காந்தருவதத்தை வருத்தமுறாது இருத்தலையறிந்து அவள் பாலடைந்து, சீவகன் வேற்றுருக்கொண்டு கனகமாலையுடன் இருத்தலை அறிந்து கொண்டனர்.

அவர்கள், அது கேட்டுச் சீவகனைத் தாம் காண்டல் கூடும் என்ற உவகையால், தத்தையை வணங்கிக் கூறல்

“ஐயனை யாமவண் எய்துவம், ஆயிழை,

நொய்தின் உரைபொருள் உண்டெனின் நொய்து என,

மையெழுத் தூசியின் மாண்டதொர் தோட்டிடைக்

கைவளர் கோதை கரந்தெழுத் திட்டான்.” 450

அதன்மேல் அவள் தன் பொறி யொற்றித் தர,

அவர்கள் பெற்று ஏகுதல்

ஆங்குருக் காரரக் கிட்டுஅதன் மீமிசைப்

பூங்குழை யாற்பொறி யொற்றுபு நீட்டத்

தேங்குழ லாள்தொழு தாள்திசை, செல்கெனப்

பாங்கர்அங் குப்படர் குற்றன ரன்றே. 451

சீவகன் தாய் விசயமாதேவி தவம் பூண்டிருந்த

பொழிலின் சிறப்பு

வண்டுதுயில் கொண்டுகுயி லாலிமயி லகவி

விண்டுமது விட்டுவிரி போதுபல பொதுளிக்

கொண்டுதளிர் வேய்ந்துசினை தாழ்ந்துநனை யார்ந்தொன்று

உண்டுபொழில் இமையவர்க ளுலகமுறு வதுவே. 452

அப்பொழிலிடத்தே தங்கிய (சீவகன்) தோழர்கள்

விசயையைக் காண்டல்

ஐயருறை பள்ளியிடம் ஆண்டு அழகர் காணச்

செய்கழலர் தாரரவர் எங்கும்திரி கின்றார்,

கொய்தகைய பூம்பொதும்பர்க் குளிருமரப் பலகைச்

செய்யவளிற் சிறிதுமிகை சேயவளைக் கண்டார். 453

விசயையின் நோன்புச் சிறப்பு

மாசொடு மிடைந்துமணி நூற்றனைய வைம்பால்

பூசுதலு மின்றிப்பிணி கொண்டுபுறந் தாழ

வாசமலர் மறைந்தவழி வாமனடிக் கேற்றித்

தோசமறத் துதிகள்மனத் தோதித்தொழு திருந்தாள். 454

அவளைக் கண்ட தோழர்கள், இன்னாரென

அறியாது திகைத்தல்

வரையுடுத்த பள்ளியிட மாகஅதில் மேயோள்

விரையுடுத்த போதுறையும் வேல்நெடுங்க ணாள்கொல்?

உரையுடுத்த நாவுரையும் ஒண்ணுதல்கொல் அன்றித்

திரையுடுத்த தேமொழிகொல்? என்றுதெரி கல்லார். 455

விசயையை அண்மி வினவுதல்

“மங்கல மடிந்ததிரு மாமகளை யொப்பீர்!

இங்குவர வென்னை? குலம் யாது? அடிகட்கு?” என்ன

“எங்குலமும் எவ்வரவும் வேண்டில்எளி தன்றே

நுங்குலமும் நும்வரவும் நீர்உரைமின்” என்றாள். 456

அவளுக்குத் தேவதத்தன், தம் வரலாறு கூறத்தொடங்கித் தாம் ஏமாங்கத நாட்டு இராசமாபுரத்தவர் என்று மொழிந்து பின்பு, “இவன் சீதத்தன், சாகரன் என்னும் அமைச்சன் மகன், சச்சந்த வேந்தனது அந்தணனாகிய அச்சலன் மகன் இப் புத்திசேனன், இவன், அரசனுக் குரிய செட்டியாகிய தனபாலன் மகனான பதுமுகன், சச்சந்தனால் சிறப்புப் பட்டம் பெற்று அவற்கு ஒரு கவசமாக இருந்த விசயதத்தன் மகனான தேவதத்தன் யான் என்று சொல்லி முடித்தான்.

இவர்கள் சீவகற்குத் தோழரானமை கூறல்

எங்கள்வினை யால்இறைவன் வீடியவஞ் ஞான்றே

எங்களுயிர் நம்பியொடு யாங்கள்பிறந் தேமா

எங்கள்தமர், “நம்பிக்கிவர் தோழர்” என ஈந்தார்

எங்கெழில்என் ஞாயிறென இன்னணம் வளர்ந்தேம். 457

இவ்வாறு கூறியவர், கந்துக்கடன் மக்களான நந்தட்டன், நபுலவிபுலர்களையும் கூறி உடன்வந்து, கல்வியும் படைக்கலமும் பயின்று தேர்ந்தமை தெரியச் சொல்லி முடிவில் சீவகற்கு நேர்ந்ததும், தாங்கள் வந்த வரலாறும் சொல்லத் தொடங்கினர். சொல்லுகையில், சீவகனை ஒரு நாள் கட்டியங்காரன் கொல்லற்கெனத் தன் வீரரை யேவி அவனைப் பற்றிக் கொண்டு செல்ல என்று கூறி முடிப்ப தற்குள் விசயை “ஆ” எனக் கதறி வீழ்ந்து அறிவு சோர்ந்தாள். சீதத்தன் முதலியோர் திகைத்து ஒன்றும் அறியாராய் அவளை ஒருவாறு தேற்றினர். ஆனால், அவர் மனத்தே அவளொரு அருள் மிக்கவள் என்றே கொண்டனர்.

விசயை புலம்புதல்

“கைம்மாண் கடற்படையுள் காவலனை யாண்டொழியப்

பொய்ம்மா மயிலூர்ந்து போகிப் புறங்காட்டுள்

விம்மாந்தி யான்வீழ வீழ்ந்தேன் துணையாகி

எம்மானே தோன்றினாய், என்னை யொளித்தியோ”! 458

“முன்னொருகால் என் மகனைக்

கண்டேன்என் கண்குளிரப்

பின்னொருகால் காணப்

பிழைத்ததென்? தேவிர்காள்!

என்னொப்பார் பெண்களிர்

இவ்வுலகில் தோன்றற்க என்று

அன்னப் பெடைநடையாள்

ஆய்மயில்போல் வீழ்ந்தனளே." 459

இவள் அழுகையால், தாம் சீவகன் வரலாறு அறிந்து கொண்டதேயன்றி அவனது தாயையும் காணப்பெற்ற பேறு குறித்து, அவர்கள் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டு, அவளையும் இனிது தேற்றி, சீவகன் தேவனால் காக்கப்பட்டதை விளங்கக் கூறி மகிழ்வித்தனர்.

அவர்கள் மேலும் கூறுதல்

“பூவுடைத் தெரியலான் போர்வை நீத்துஇனிக்

கோவுடைப் பெருமக னாதல் கொண்டனம்

சேவடி சேர்ந்தனம் தொழுது சென்றுஎன

மாவடு நோக்கியுள் மகிழ்ந்திது சொல்லுவாள்.” 460

விசயை சொல்லுதல்

தரணி காவலன் சச்சந்த னென்பவன்

பரணி நாட்பிறந் தான்பகை யாவையும்

அரணி லான்,என்கண் தங்கிய அன்பினால்;

இரணி யன்பட்ட தெம்மிறை யெய்தினான். 461

விசயை யென்றுல கோடிய வீறிலேன்

பசையி னால்துஞ்சி யான்பட்ட தீதெலாம்

இசைய நம்பிக் கெடுத்துரைத் தென்னுழை

அசைவின் றையனைத் தம்மின் எனச் சொன்னாள். 462

இச் செய்தியைச் சீவகற் கன்றிப் பிறர் எவர்க்கும்

உரையன் மின் என அவள் விளம்புதல்

கோதை வேல்நம்பிக் கல்லதை யிப்பொருள்

யாதும் கூறன்மின், யாரையும் தேறன்மின்

ஏதம் இன்னன இன்னணம் எய்தலால்

பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்மின். 463

அவர்கள் விசயைபால் விடைபெற்றுப் போதல்

“வணக்கருஞ் சிலையி னானை

யொருமதி யெல்லை நாளுள்

குணத்தொடு மலிந்த பாதம்

குறுகயாம் கொணர்ந்த பின்றைப்

பணித்ததே செய்து பற்றார்

பகைமுதல் அடர்த்தும் என்றார்;

மணிக்கொடி மாசுண் டன்னாள்

“மற்றதே துணிமின்” என்றாள். 464

பின்பு, அவர்கள் விசயை இட்ட விருந்துண்டு, குன்றும் காடும் மிடைந்த நாடுகளைக் கடந்து சீவகன் இருந்த மத்திம தேசத்துக் கேமமாபுரத்துப் புறத்தேயிருந்த இனியதொரு பொழிலில் தங்கிச் சீவகன் உண்மையை அறிவதற்குரிய நெறியை நாடலாயினர். மூன்று ஒற்றர்களை நகர்க்குள் விடுத்துச் செய்தியறிந்துவர விட்டனர். ஒற்றர் சென்றபின் பதுமுகன் எழுந்து, “முதற்கண் இந் நகரத்துக் கோவலருடைய ஆனிரையை நாம் கவர்வோம். போர் தொடரும், அதன்கண் சீவகனைக் காண்டல் கூடும்” என்றான். அது கேட்ட புத்திசேனன், “சீவகன் இல்லையேல், இச் செயல் குற்ற மில்லாத பலர் உயிர்க்குக் கேடாய் முடியும். இதனை ஆராய்ந்து செய்யுமின்” என்று உரைத்தான். அப்போது ஒற்றர் போந்து, சீவகன் அந் நகரிடத்தே வளையசுந்தரம் என்னும் யானையொன்றை அடக்கிய செய்தியைக் கூறலுற்றனர்.

வளையசுந்தரம் என்னும் யானை மதம் படுதல்

வளையசுந் தரமெனும் வாரணம், மால்வரை

முளையிளந் திங்கள்போல் முத்துடைக் கோட்டது

கிளையினம் பிடிகள்ஐந் நூற்றிடை கேழரக்கு

அளையவஞ் சனவரை யனையதுஅக் களிறரோ. 465

கடுமதக் களிப்பினால் காரென முழங்கலின்

விடுகலார் பாகரும், வெருவரக் கொன்றிடப்

பிடியொடுங் கந்தனை வின்றிநீர் உருள்பிளந்து

அடுகளி றந்தப்போ திகைபரிந் தழன்றதே.  466

யானையைச் சீவகன் அடக்குதல்

கண்ணுமிழ் தீயினால் சுடநிறங் கரிந்தபோல்

பண்ணுமிழ் வண்டுலாய்ப் பரத்தரா நின்றசீர்

அண்ணலங் களிற்றனை யடக்கினான் சீவகன்

வண்ணமே கலையினார் மனமெனப் படிந்ததே. 467

அது கண்ட அரசன் பெரு மகிழ்ச்சியுடன் சீவகனை வரவேற்க, சீவகன் தன் தம்பியான நந்தட்டனுடன் அரசன் கோயிலையடைந் தான். பின்பு அரசன் மொழிந்த அன்பு மொழிகளை ஏற்றுத் தங்கட் கென வகுக்கப்பெற்றிருந்த மனையை இருவரும் அடைந்தனர்.

சீவகன் மனையடைந்ததை ஒற்றர் கூறல்

பிண்டமுண் ணும்பெருங் களிறுபூட் டிய்யவண்

வண்டரும் மோவரும் பாடமா நகர்தொழக்

கொண்டதன் தம்பியும் தானும்கோ யில்புகக்

கண்டனம் கண்ணினே யென்றுகண் டவர்சொனார். 468

சீவகன் இருப்பதையுணர்ந்த அவன் தோழர் நிரைகோடல் குறித்து எழுந்தனர். கோவலரும் தம் ஆனிரைகளைக் காத்தற்கு வேண்டுவனவற்றைச் செய்யலுற்றனர். ஒரு பூசல் நிகழ்ந்தது. கோவலர் தம் ஆனிரையைக் காக்க மாட்டாராய் அரசற்குத் தெரிவிக்க ஓடினார். அப்போழ்து, அரசனாகிய நரபதி, நந்தட்டனை யழைத்து, அவனுடைய நாடு முதலியவற்றைக் கேட்டிருந்தான்.

நரபதி நந்தட்டனை வினாதல்

தேர்த்தொகைத் தானை மன்னன்

சீவகற் கிளைய நம்பி

வார்த்தொகை முழவம் விம்ம

மல்லுறழ் தோளி னானை,

நீர்த்தொகைக் கழனி நாடு

நெடுநகர்ப் பெயரும் நுங்கள்

சீர்த்தொகைக் குலனு மெல்லாம்

தெரிந்தெமக் குரைமோ என்றான். 469

அவன் நரபதிக்குத் தன் ஏமாங்கத நாட்டையும், இராசமா புரத்தையும் கூறித் தன் குல முறை கூறத் தொடங்குகையில், ஆனிரையிழந்த கோவலர், நிகழ்ந்தது முற்றும் அரசற்கு உரைத்தனர்.

நரபதி நிரை மீட்கவென ஆணையிடல்

நாற்கடல் பரப்பும் வந்து

நன்னகர்க் கண்ணுற் றென்ன

வேற்கடல் தானை பாய்மா

விளங்கொளி யிவுளித் திண்டேர்

கூற்றென முழங்கு மோடைக்

குஞ்சரக் குழாத்தோ டேகிப்

பாற்கடல் பரப்பின் வல்லே

படுநிரை பெயர்க்க வென்றான். 470

நந்தட்டனுடன் தேரேறிய சீவகன் வஞ்சினம் கூறம்

மன்னவன் நிரைகொண் டாரை

வளநகர்த் தந்து மன்னன்

பொன்னவிர் கழலில் தங்கள்

புனைமுடி யிடுவி யேனேல்

இன்னிசை யுலகந் தன்னுள்

என்பெயர் சேற லின்றாய்க்

கன்னிய மகளிர் நெஞ்சிற்

காமம்போல் சுரக்க என்றான். 471

இப்பால், திரை கவர்ந்து கொண்டாருள்

பதுமுகன் சிலை யெடுத்தல்

பார்மலி பரவைத் தானைப்

பரப்பிடைப் பறப்ப தேபோல்

நீர்மலி கடாத்த கொண்மூ

நெற்றிமேல் மின்னின் நொய்தாத்

தார்மலி மார்பன் திண்டேர்

தோன்றலும் தறுகண் மைந்தன்

சீர்மலி பகழி யேந்திப்

பதுமுகன் சிலைதொட் டானே. 472

பதுமுகன் தங்கள் வரவு குறிக்கும் குறிப்பெழுதிய

ஓலை விடுத்தல்

குடைநிழற் கொற்ற வேந்தன்

ஒருமகற் காணக் குன்றா

அடிநிழ லுறைய வந்தேம்,

அடியம்யாம் என்ன எய்த

விடுகணை சென்று தேர்மேல்

பின்முனா வீழ்த லோடும்

தொடுகழல் குரிசில் நோக்கித்

தூத்துகில் வீசி னானே. 473

போர் நின்றது. சீவகன் பதுமுகன் முதலிய தன் தோழர் பலரையும் கண்டு பெருமகிழ்வு கொண்டு அவரவர் தகுதிக்கேற்பச் சிறப்புச் செய்தான். தோழரும் சீவகனைக் காணாமையால் கொண்டிருந்த அவல நோய் தீர்ந்தனர்.

சீவகன் தன் தோழருடன் நரபதியூர்க்குச் செல்லுதல்

கழலவாய்க் கிடந்த நோன்றாட்

காளைதன் காத லாரை

நிழலவா யிறைஞ்சி நீங்கா

நெடுங்களிற் றெருத்த மேற்றி

அழலவாய்க் கிடந்த வைவேல்

அரசிளங் குமரர் சூழக்

குழலவாய்க் கிடந்த கோதை

தாதையூர் கொண்டு புக்கான். 474

சீவகனுடன் அரசன் கோயிலையடைந்த அவன்

தோழர் அரசன் முன் சென்று பணிதல்

வல்லான் புனைந்த வயிரக்குழை

வார்ந்து வான்பொன்

பல்லூ ணெருத்தின் பரந்தஞ்சுடர்

கால மன்னன்

மல்லார் திரடோள் மருமான்முக

நோக்க, மைந்தர்

எல்லாம் அடிகள்! எனக்கின்னுயிர்த்

தோழ ரென்றான். 475

பின்பு, அரசன் பணித்தவாறு தோழர்கள்

கனகமாலையை வணங்குதல்

தழுமுற்றும் வாராத் திரள்தாமங்கள்

தாழ்ந்த கோயில்

முழுமுற்றும் தானே விளக்காய் மணிக்

கொம்பின் நின்றாள்

எழுமுற்றும் தோளார் தொழுதார்,

இன்ன ரென்று நோக்கக்

கழுமிற்றுக் காதல் கதிர்வெள்வளைத்

தோளி னாட்கே. 476

கனகமாலை அவர்கட்கு விருந்து செய்தல்

துறக்கம் இதுவே யெனும் தொன்னகர்

மன்னன் மங்கை

“தொறுக் கொண்ட கள்வர்

இவரோ?" எனச் சொல்லிநக்காங்கு

“ஒறுக்கப் படுவார் இவர்” என்று

அசதி யாடி

வெறுக்கைக் கிழவன் மகளென்ன

விருந்து செய்தாள். 477

பின்பு, சீவகன் தனித்திருப்பது கண்டு புத்திசேனன் தான் காந்தருவதத்தை கொடுப்பக் கொணர்ந்த ஓலையைத் தந்தான். அதனைச் சீவகன் வாங்கிப் படித்தான்.

காந்தருவதத்தையின் ஓலை

மற்றடிகள் கண்டருளிச் செய்க,மல ரடிக்கீழ்ச்

சிற்றடிச்சி, தத்தையடி வீழ்ச்சி, திருவடிகட்கு

உற்றடிசில் மஞ்சனத்தை யுள்ளுறுத்த காப்பும்

பொற்புடைய வாகவெனப் போற்றியடி வீழ்ந்தேன். 478

வெள்ளி மலையிலிருந்து கலுழவேகன் மணிக்கலன், கற்பக மாலை, எலிமயிர்ப் போர்வை முதலியவற்றைத் தரன்பால் வர விட்டான். அவனுக்கு, “ஏழு திங்கட்குமுன் அடிகள், ஏமமாபுரத்தே அகன்றாய்” என்று கூறினேன். மேலும்,

பட்டபழி வெள்ளிமலை மேற்பரத்த லஞ்சித்

தொட்டுவிடுத் தேனவனைத் தூதுபிற சொல்லிப்

பட்டபழி காத்துப்புக ழேபரப்பி னல்லால்

விட்டலர்ந்த கோதையவ ரால்விளைவ துண்டோ. 479

குணமாலை திறம் கூறல்

அல்லதுவும் எங்கைகுண மாலையவ ளாற்றாள்

செல்லுமதி நோக்கிப்பக லேசிறியை யென்னும்

பல்கதிரை நோக்கிமதி யேபெரியை யென்னும்

எல்லியிது காலையிது என்பதறி கல்லாள். 480

நாளைவரு நையலென நன்றென விரும்பி

நாளையெனு நாளணிமைத் தோபெரிதும் சேய்த்தோ

நாளையுரை யென்றுகிளி யோடுநகச் சொல்லும்

நாளினும்இந் நங்கைதுயர் நாளினுமற் றிதுவே. 481

காந்தருவத்தை தன் திறம் கூறல்

நோக்கவே தளிர்த்து நோக்கா

திமைப்பினும் நுணுகு நல்லார்

பூக்கம ழமளிச் சேக்கும்

புதுமண வாள னார்தாம்

நீப்பிலார் நெஞ்சி னுள்ளார்,

ஆதலால் நினைத்தல் செய்யேன்,

போக்குவல் பொழுதும் தாம்தம்

பொன்னடி போற்றி யென்றாள். 482

இவ்வோலையைப் படித்து மகிழ்ச்சி மிக்கவனாய்ச் சீவகன் போந்து தோழரொடு கூடினவளவில், அவன் தோழர்களை நோக்கி, என் திறத்தை எங்கே கேள்வியுற்றீர்? என்று கேட்டான்.

தோழர்கள் தாம் விசயையைக் கண்ட செய்தி கூறல்

எங்கோமற் றென்திறம்நீர் கேட்ட

தென்றாற் கெரிமணிப்பூட்

செங்கோன் மணிநெடுந்தேர்ச் செல்வன்

காதற் பெருந்தேவி

தங்காத் தவவுருவம் தாங்கித்

தண்டா ரணியத்துள்

அங்காத் திருந்தாளைத் தலைப்பட்டு,

ஐய! அறிந்தோமே. 483

சீவகன் அது கேட்டுக் கண்ணீர் சிந்தி

மனம் வருந்தி மேலும் கூறல்

அஃதேயெம் மடிகளும் உளரோ

என்றாற் கருளுமாறு

இஃதா இருந்தவா றென்றாற்

கென்னைப் பெறவல்லார்க்கு

எய்தா இடருளவே, எங்கெங்

கென்றத் திசைநோக்கி,

வெய்தா அடிதொழுது வேந்தன்

கோயிற் கெழுந்தானே. 484

அரசன் நந்தட்டனால் சீவகனுடைய நாடும் ஊரும் அறிந்து தோழரால் குலமும் பிறவும் அறிந்து இன்புறச் சீவகன் தன் தாயைக் காணவேண்டியிருத்தலைக் கூறி விடைபெற்றுச் சென்று கனக மாலையைக் கண்டான். அவளும் அவனைப் பிரிய ஆற்றாது வருந்த அவட்குத் தகுவன கூறித் தேற்றிவிட்டுப் புறப்பட்டான்.

கனகமாலையார் இலம்பகம்

முற்றும்

விமலையார் இலம்பகம்

(சீவகன் தண்டாரணியஞ் சென்று விசயையைக் கண்டதும், இராசமாபுரஞ் சென்று விமலையை மணந்ததுங் கூறுகின்றது.)

கனகமாலையை நீங்கித் தண்டாரணியத்தை நோக்கிப் புறப்பட்ட சீவகன் சீரியதொரு குதிரையேறிச் செல்ல, அவன் தம்பியாகிய நந்தட்டனும், பதுமுகன் முதலிய தோழர்களும் தாம்தாம் ஒவ்வோர் ஊர்தியில் சென்றனர். அப்போழ்து, நந்தட்டன் பதுமுகனைச் சீவகனுக்கு மெய் காவலனாயிருந்து பாதுகாக்க வேண்டிச் சில கூறலுற்றான்.

சீவகன் வரலாறு வெளியாய் விட்டமையின், அவனைப் பாதுகாக்கும் செயலின் சிறப்புரைத்தல்

விழுமணி மாசு மூழ்கிக்

கிடந்ததிவ் வுலகம் விற்பக்

கழுவினீர், பொதிந்து சிக்கக்

கதிரொளி மறையக் காப்பின்

தழுவினீர் உலக மெல்லாம்

தாமரை யுறையும் செய்யாள்

வழுவினார் தம்மைப் புல்லாள்,

வாழ்கதும் கண்ணி மாதோ. 485

பகைவரைத் தெளியும் அருமை கூறல்

தொழுததம் கையி னுள்ளும்

துறுமுடி யகத்தும் சோர

அழுதகண் ணீரி னுள்ளும்

அணிகலத் தகத்து மாய்ந்து

பழுதுகண் ணரிந்து கொல்லும்

படையுட னொடுங்கும் பற்றாது

ஒழிகயார் கண்ணும் தேற்றம்,

தெளிகுற்றார் விளிகுற் றாரே. 486

உண்டிக்கண் வேண்டும் பாதுகாவல் கூறல்

வண்ணப்பூ மாலை சாந்தம்

வாலணி கலன்க ளாடை

கண்முகத் துறுத்தித் தூய்மை

கண்டலால் கொள்ள வேண்டா,

அண்ணலம் புள்ளோ டெல்லா

ஆயிரம் பேடைச் சேவல்

உண்ணுநீ ரமிழ்தம் காக்க

யூகமோ டாய்க என்றான். 487

பகை சிறிதெனக் கண்டு எள்ளலாகாது என்றல்

அஞ்சனக் கோலி னாற்றா

நாகம்ஓர் அருவிக் குன்றிற்

குஞ்சரம் புலம்பி வீழக்

கூர்நுதி எயிற்றிற் கொல்லும்,

பஞ்சியின் மெல்லி தேனும்

பகைசிறி தென்ன வேண்டா,

அஞ்சித்தற் காத்தல் வேண்டும்

அரும்பொரு ளாக என்றான். 488

பாதுகாத்து ஒழுகும் திறம் கூறுதல்

பொருந்தலால் பல்லி போன்றும்

போற்றலால் தாய ரொத்தும்,

அருந்தவர் போன்று காத்தும்,

அடங்கலால் ஆமை போன்றும்,

திருந்துவேல் தெவ்வர் போலத்

தீதற வெறிந்தும், இன்பம்

அருந்தினால் மனைவி யொத்தும்

மதலையைக் காமின் என்றான். 489

அது கேட்டுப் பதுமுகன் இருத்தற்கு ஒருப்பட்டான். சீவகனும் தன் தோழன்மாரை முறைப்படியே நெஞ்சால் ஆராய்ந்து, அப் பதுமுகனையே தனக்கு மெய் காவலனாகக் கொண்டான். அவனும் அவ்வண்ணமே ஒழுகலானான். அனைவரும் வழியில் பல இனிய காட்சிகளைக் கண்டு மகிழ்வுற்றுத் தண்டாரணியத்தை யடைந்தனர்.

சீவகன் விசயையைக் காணலாம் செவ்வியறிந்து

வரப் பதுமுகனை விடுத்தல்

பொறிமயி லிழியும் பொற்றார்

முருகனிற் பொலிந்து மாவின்

நெறிமையி னிழிந்து மைந்தன்,

மணிக்கைமத் திகையை நீக்கி

வெறுமையி னவரைப் போக்கி

வெள்ளிடைப் படாத நீரால்

“அறிமயி லகவுங் கோயில்

அடிகளைச் செவ்வி" யென்றான். 490

பதுமுகன் தேவிக்கு உரைத்தல்

“எல்லிருட் கனவிற் கண்டேன்

கண்ணிட னாடும், இன்னே,

பல்லியும் பட்ட பாங்கர்,

வருங்கொலோ நம்பி" யென்று

சொல்லினள் தேவி நிற்பப்

பதுமுகன் தொழுது சேர்ந்து,

நல்லடி பணிந்து,”நம்பி

வந்தனன், அடிகள்" என்றான். 491

சீவகன் விசயையைக் காண்டல்

“எங்கணான் ஐயன்?” என்றாட்கு

“அடியன்யான், அடிகள்” என்னப்

பொங்கிவில் லுமிழ்ந்து மின்னும்

புனைமணிக் கடக மார்ந்த

தங்கொளித் தடக்கை கூப்பித்

தொழுதடி தழுவி வீழ்ந்தான்,

அங்கிரண் டற்பு முன்னீர்

அலைகடல் கலந்த தொத்தார். 492

விசயை சீவகனைத் தழுவிக் கொள்ளுதல்

காளையாம் பருவ மோராள்,

காதல்மீக் கூர்த லாலே,

வாளையா நெடிய கண்ணாள்

மகனைமார் பொடுங்கப் புல்லித்

“தாளையா முன்பு செய்த

தவத்தது விளைவி லாதேன்,

தோளயாத் தீர்ந்த" தென்றாள்

தொழுதகு தெய்வ மன்னாள். 493

விசயை சீவகற்குக் கூறல்

“வாட்டிறல் குரிசில் தன்னை

வாளம ரகத்துள் நீத்துக்

காட்டகத் தும்மை நீத்த

கயத்தியேற் காண வந்தீர்,

சேட்டிளம் பரிதி மார்பின்

சீவக சாமி யீரே!

ஊட்டரக் குண்ட செந்தா

மரையடி நோவ" என்றாள். 494

சீவகன் உரைத்தல்

“கெடலருங் குரைய கொற்றம்

கெடப்பிறந் ததுவு மன்றி

நடலையுள் அடிகள் வைக,

நட்புடை யவர்கள் நைய,

இடைமகன் கொன்ற இன்னா

மரத்தினேன் தந்த துன்பக்

கடலகத் தழுந்த வேண்டா,

களைகஇக் கவலை" என்றான். 495

விசயை நந்தட்டன் முதலியோரைக் குறித்துப் பேசுதல்

“யானலன் ஒளவை யாவாள்

சுநந்தையே யையற் கென்றும்

கோனலன் தந்தை, கந்துக்

கடன்" எனக் குணத்தின் மிக்க

மானிலத் துறையுந் தீந்தேன்

அனையவா யமிர்த மூற

மானலங் கொண்ட நோக்கி

மகன்மன மகிழச் சொன்னாள். 496

“எனக்குயிர்ச் சிறுவ னாவான்

நந்தனே, ஐய னல்லை,

வனப்புடைக் குமரன் இங்கே

வரு”கென மருங்கு சேர்த்திப்

புனக்கொடி மாலை யோடு

பூங்குழல் திருத்திப் பொற்றார்

இனத்திடை யேற னானுக்

கின்னளி விருந்து செய்தான். 497

அவரனைவரும் அங்கே விருந்துண்டு இனிதிருந்தனர். ஆறு நாட்கள் சென்றன. அக்காலத்தே விசயை தன் மகனுக்கு அரச நீதிகள் சிலவற்றை உரைக்கலானாள்.

விசயை சீவகனை, “இனி நீ செய்யலுற்றது என் ?”

என வினவுதல்

3நிலத்தி னீங்கி நிதியினும் தேய்ந்துநங்

குலத்திற் குன்றிய கொள்கையம் அல்லதூஉம்

கலைக்க ணாளரு மிங்கில்லை காளைநீ

வலித்த துஎன்?என வள்ளலும் கூறுவான். 498

சீவகன் விடை யிறுத்தல்

எரியொடு நிகர்க்கு மாற்றல்

இடிக்குரற் சிங்க மாங்கோர்

நரியொடு பொரு தென்றால்

சூழ்ச்சிநற் துணையொ டென்னாம்

பரிவொடு கவல வேண்டா

பாம்பவன், கலுழ னாகும்

சொரிமதுச் சுரும்புண் கண்ணிச்

சூழ்கழல் நந்தன் என்றான். 499

விசயை நந்தட்டனை வியந்து கூறல்

கெலுழனோ நந்த னென்னாக்

கிளரொளி வனப்பி னானைக்

கலுழத்தன் கையாற் றீண்டிக்

காதலிற் களித்து நோக்கி,

வலிகெழு வயிரத் தூண்போல்

திரண்டுநீண் டமைந்த திண்டோள்

கலிகெழு, நிலத்தைக் காவா

தொழியுமோ காளைக் கென்றாள். 500

இவ்வாறு நந்தட்டனைச் சிறப்பித்துரைத்துப் பின் சீவகன் தோழர்கள் அறியுமாறு வீரமொன்றையே பொருளாகக் கொள்ளாது வினை செய்தற்கு வேண்டும் வலி, இடம், காலம் முதலியவற்றை நன்கு அறிந்து செய்தல் வேண்டுமென உரைத்தனன். அதுகேட்ட பதுமுகன் முதலியோர் பிறர் துணையின்றி தாம் எவ் வினையையும் வென்றியெய்த முடிந்தும் விறலுடையரென விளங்கவுரைத்தனர்.

விசயை சீவகனை அவன் மாமன் கோவிந்தராசன் துணைபெற்று வினை செய்யுமாறு பணித்தல்

கார்தோன்ற வேமலரு முல்லை,

கமலம் வெய்யோன்

தேர்தோன்ற வேமலரும், செம்மல்நின்

மாமன் மற்றுன்

சீர்தோன்ற வேமலரும், சென்றவன்

சொல்லி னோடே

பார்தோன்ற நின்றபகை யைச்செறற்

பாலை யென்றாள். 501

சீவகன் விசயையைத் தன் மாமனிடம் சென்று இருத்தல் வேண்டுமென இரந்து உரைத்தல்

நன்று;அப் பொருளே வலித்தேன்; மற்

றடிகள் நாளைச்

சென்றப் பதியு ளெமர்க்கேயென

துண்மை காட்டி

யன்றைப் பகலே அடியேன்வந்

தடைவன், நீமே

வென்றிக் களிற்றானுழைச் செல்வது

வேண்டு மென்றான். 502

விசயை அதற்குடன்படலும் சீவகன் அவட்குக் காவலாக ஒரு படையை விடுப்ப, அவளும் தனக்கு மெய் காவலாகத் தன்னோ டொப்ப நோற்கும் தவ மகளிர் நூற்றுவரோடு சென்றாள். பின்பு சீவகன் குதிரையிவர்ந்து தோழர் உடன்வர இராசமாபுரத்தை நோக்கிச் செல்வானாயினன். சென்றவர்கள் ஏமாங்கத நாட்டை யடைந்து இராசமாபுரத்துக்கு அருகேயுள்ளதொரு சோலையில் இளைப்பாறி உணவு கொண்டனர். இரவுப்போது வந்தது. சீவகன் தனக்கென அமைந்த இருக்கையில் கண் வளர்ந்தான். பொழுது விடிந்தது.

சீவகன் வழிபாடு செய்தல்

கனைகதிர்க் கடவுள்கண் விழித்த காலையே

நனைமலர்த் தாமரை நக்க வண்கையால்

புனைகதிர்த் திருமுகம் கழுவிப் பூமழை

முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான். 503

வேற்றுருக் கொண்டு நகர்க்குட் செல்லுதல்

நாட்கடன் கழித்தபின் நாம வேலினான்

வாட்கடி யெழினகர் வண்மை காணிய

தோட்பொலி மணிவளைத் தொய்யின் மாதரார்

வேட்பதோர் வடிவொடு விரைவி னெய்தினான். 504

சீவகன் நகர் வண்மையை வீதிதோறும் சென்று மகிழ்ந்து வருகையில், அவனது வனப்பைக் கண்டு மகளிர் பலரும் வியப் புற்றனர். அவ்வேளையில் விமலை பந்தாடிக் கொண்டிருந்தாள். சாகரதத்தன் என்னும் வணிகனுக்கு அவ்விமலை இனிய மகளா வாள்.

விமலை பந்தாடுதல்

வேனெடுங் கண்க ளம்பா

விற்படை சாற்றி யெங்கும்

தேநெடுங் கோதை நல்லார்

மைந்தனைத் தெருவில் எய்ய

மானெடு மழைக்க ணோக்கி

வானவர் மகளு மொப்பாள்

பானெடுந் தீஞ்சொ லாளோர்

பாவைபந் தாடு கின்றாள். 505

பந்தின் சுழற்சி

மாலை யுட்க ரந்த பந்து

வந்து கைத்த லத்தவாம்

ஏல நாறி ருங்கு ழற்பு

றத்த வாண்மு கத்தவாம்

நூலி னேர்நு சுப்பு நோவ

வுச்சி மாலை யுள்ளவாம்

மேலெ ழுந்த, மீநி லத்த

விரல, கைய வாகுமே. 506

பந்து ஓடிவர அதன் பின்னே அவள் போந்து ஆங்குவந்த சீவகனைக் கண்டு வேட்கை கொள்ளல்

மந்தார மாலைமலர் வேய்ந்து மகிழ்ந்து தீந்தேன்

கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாடப்

பந்தார்வஞ் செய்து குவளைக்கண் பரப்பி நின்றாள்

செந்தா மரைமேல் திருவின்னுரு வெய்தி நின்றான். 507

விமலை வேட்கையால் வேறுபாடெய்தல்

நீர்தங்கு திங்கண்மணி நீணிலந் தன்னு ளோங்கிச்

சீர்தங்கு கங்கைத் திருநீர்த்தண் துவலை மாந்திக்

கார்தங்கி நின்றகொடி, காளையைக் காண்ட லோடு

பீர்தங்கிப் பெய்யா மலரிற்பிறி தாயினாளே. 508

சீவகனும் வேட்கை மிகுதல்

பூவுண்ட கண்ணாள் புருவச்சிலை கோலி யெய்ய

ஏவுண்ட நெஞ்சிற் கிடுபுண்மருந் தென்கொ லென்னா

மாவுண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கிக்

கோவுண்ட வேலான் குழைந்தாற்றல னாயினானே. 509

சீவகன் வேட்கை மிக்கு ஆற்றானாய் மேலே செல்லமாட்டாது சாகரதத்தன் கடையில் இருந்துகொண்டு, விமலையை நினைந் திருந்தான்.

சீவகனது வேட்கைப் பெருக்கம்

பைங்கண் மணிமகர குண்டலமும் பைந்தோடும்

திங்கண் முகத்திலங்கச் செவ்வா யெயிறிலங்கக்

கொங்குண் குழல்தாழக் கோட்டெருத்தம் செய்தநோக்கு

எங்கெங்கே நோக்கினும் அங்கங்கே தோன்றுமே. 510

சாகரதத்தன் சீவகனைக் கண்டு அன்புற்றுத் தன்

மனைக்கண் கொண்டேகுதல்

“திருமல்க வந்த திருவே” யெனச்

சேர்ந்து நாய்கன்,

“செருமல்கு வேலாய்க்கிட மாலிது”

என்று செப்ப,

வரிமல்கி வண்டுண் டறைமாமலர்க்

கண்ணி மைந்தன்

எரிமல்கு செம்பொன்நிலம் மாமனொ

டேறி னானே. 511

பின்பு சாகாரதத்தன் சீவகனை நோக்கி, “நம்பி, இது கேள், என் மனைவி கமலைக்குப் பிறந்த மகள் விமலையாவாள். இவள் பிறந்த நாள் போந்த அறிவர், இவட்குக் கணவன் வருநாள் வரையும் நின் பண்டம் விலையாகாது. தூம்பில்லாத குளத்துட்பட்ட நீர்

போலத் தேங்கி நிற்கும் என்றனர். அவர் கூறியவாறே இன்று நீ என் கடையேறலும் விலையாகாது கிடந்த பண்டமுற்றும் விலையாகி விட்டன. ஆதலால் நீ என்மகள் விமலையை மணந்துகொள்க. இவட்கும் அகவை பதினொன்றற்றுப் பன்னிரண்டாயிற்று என்றான்.

சீவகன் அவன் சொல்லைத் தேறி மணத்துக்குடன்பட விமலையும் அவனைக் கண்டு தெளிதல்

ஏற்ற கைத்தொடி வீழ்ந்தென, ஏந்தலைத்

தேற்றி னான்திரு மாநலம் செவ்வனே;

தோற்ற மாதரும் தோன்றலைக் காண்டலும்

ஆற்றி னாள்தன தாவியும் தாங்கினாள். 512

சீவகன் விமலையை மணத்தல்

அம்பொற் கொம்பனை யாளையும் வார்கழற்

செம்பொற் குன்றனை யானையும் சீர்பெறப்

பைம்பொ னீணகர்ப் பல்லிய மார்த்தெழ

இம்ப ரில்லதொ ரின்ப மியற்றினார். 513

திருமண வாழ்க்கை

கட்டி லேறிய காமரு காளையும்

மட்டு வாயவிழ் மாமலர்க் கோதையும்

விட்டு நீங்குத லின்மையின் வீவிலார்

ஒட்டி யீருடம் போருயி ராயினார். 514

இவ்வாறு சில நாட்களைக் கழித்த சீவகன் விமலைபால் விடைபெற்றுப் பிரிதல்

பூவினுள் தாழ்குழற் பொன்செய் ஏந்தல்குல்

மாவினுள் தாழ்தளிர் மருட்டு மேனியாய்

காவினுள் தோழரைக் கண்டு போதர்வேன்

ஏவினுள் தாழ்சிலை யெறிந்த கோலினே. 515

பிரியாவிடை பெற்றுப் பிரிதல்

என்றவன் உரைத்தலும் எழுது கண்மலர்

நின்றநீ ரிடைமணிப் பாவை நீந்தலின்

மன்றல்நா றரிவையைத் தெருட்டி மாமணிக்

குன்றனான் கொடியவள் குழைய வேகினான். 516

விமலையார் இலம்பகம் முற்றும்

சுரமஞ்சரியார் இலம்பகம்

(சீவகன் சுரமஞ்சரியை மணந்த வரலாறு கூறுவது)

விமலையிற் பிரிந்து போந்த சீவகன் சோலைக்கண் புத்தி சேனன் முதலிய தோழரைச் சேர்ந்தான். நாட்கள் இரண்டு சென்றன. விமலைக்கு அவன் பிரிவு மிக்க நோய் செய்து வருத்திக் கொண்டிருந்தது. சீவகனது மணக்கோலத்தைக் கண்ட தோழர் நீ மணந்து கொண்ட நங்கையின் பெயர் யாது, என்று வினவ சீவகன், அவள் பெயர் விமலையென்பது என்று அவர்கட்குக் கூறினான்.

புத்திசேனன் நகையாடிக் கூறல்

அம்பொ ரைந்து டைய்ய காம

னைய்ய னென்ன வந்தணன்

நம்பு நீர ரல்லர் நன்கு

ரங்கு நீர ராயினும்

தங்கு ரவ்வர் தாங்கொ டுப்பின்

நெஞ்சு நேர்ந்து தாழ்வர்தாம்

பொங்க ரவ்வ வல்கு லார்எ

னப்பு கன்று சொல்லினான். 517

சீவகன் உரைத்தல்

அற்று மன்று கன்னி யம்ம

டந்தை மார ணிநலம்

முற்றி னாரை நீடு வைப்பின்

மூள்கும் வந்து பாவமும்

குற்ற மற்று மாகு மென்று

கோதை சூழ்ந்து கூறினார்க்

குற்ற டுத்த யாவுயிர்த்

தொழிதல் யார்க்கு மொக்குமே. 518

இவ்வாறு சொல்லி, இதுவே முறையாகத் தான் விமலையை மணந்ததாகச் சீவகன் கூறக்கேட்ட புத்திசேனன் முதலியோர், “நீ செல்லும் ஊர்தோறும் புதுமணம் செய்து வருகின்றனை, ஆயினும் இவ்வூரிடத்தே சுரமஞ்சரி என்றொரு நங்கையுள்ளாள்” என்று சொல்லினர்.

புத்திசேனன் சுரமஞ்சரியின் இயல் கூறல்

ஆடவர் தனதிடத் தருகு போகினும்

நாடிமற் றவர்பெயர் நயந்து கேட்பினும்

வீடுவ லுயிரென வெகுளும் மற்றவள்

சேடியர் வழிபடச் செல்லும் செல்வியே. 519

புத்திசேனன் சீவகனை நோக்கி, மேலும் சொல்லத் தொடங்கி, “நீ இச் சுரமஞ்சரியை மணப்பின், நின்னை யாங்கள் அநங்கதிலகன் என்று உரைப்பேம்,” என்று கூறல்.

காமனே செல்லினும் கனன்று காண்கிலாள்

வேம்எனக் குடம்பெனும் வேய்கொள் தோளியை

ஏமுறுத் தவள்நலம் நுகரின் எந்தையை,

யாமெலாம் அநங்கம் திலக னென்றுமே. 520

அதுகேட்ட சீவகன், யான் அவ்வண்ணமே செய்வேன், அது தப்பின், சிறிதும் அன்பில்லாத ஒருத்தியைக் கூடிய குற்ற முடை யேனாவேன், என்று சூள் செய்து மேலும் சொல்லலுற்றான்.

சீவகன் உரைத்தல்

“வண்டுதேன் சிலைகொ ணாணா

மாந்தளிர் மலர்க ளம்பாக்

கொண்டவன் கோட்டந் தன்னுட்

கொடியினைக் கொணர்ந்து நீல

முண்டது காற்றி யாண்பே

ரூட்டுவ லுருவக் காமன்

கண்டபொற் படிவன் சார்ந்து

கரந்திரு நாளை" யென்றான். 521

சீவகன் சுரமஞ்சரி மனைக்கு ஓர் அந்தண முதியோன்

உருவிற் செல்ல நினைத்தல்

“சில்லரிக் கிண்கிணி சிலம்புஞ் சீறடிச்

செல்விதன் திருநலம் சேரும் வாயில்தான்

அல்லலங் கிழவனோ ரந்த ணாளனாய்ச்

செல்லல்யான், தெளிதக வுடைத்” தென் றெண்ணினான். 522

சீவகன் வேதியனுருக் கொளல்

அணங்கர வுரித்ததோ லனைய மேனியன்

வணங்குநோன் சிலையென வளைந்த யாக்கையன்,

பிணங்குநூல் மார்பினன் பெரிதொர் பொத்தகம்

உணர்ந்துமூப் பெழுதின தொப்பத் தோன்றினான். 523

சீவக வேதியன் சுரமஞ்சரி மனையடைதல்

நற்றொடி மகளிரும் நகர மைந்தரும்

ஏற்றிவன் மூப்பென இரங்கி நோக்கவே,

பொற்றொடி வளநகர் வாயில் புக்கனன்

பற்றிய தண்டொடு பைய வென்பவே. 524

காவலர் தடுப்ப அவர்க்குச் சீவகன் கூறல்

தண்டுவலி யாகநனி தாழ்ந்துதளர்ந் தேங்கிக்

கண்டுகடை காவலர்கள் கழறமுகம் நோக்கிப்

“பண்டையிளங் காலுவப்பன் பாலடிசில், இந்நாள்

கண்டுநயந் தார்தருவ காதலிப்பன்,” என்றான். 525

இவன் செவி கேளாத முதியோன், பசி

மிகவுடையன் என இரங்கி விடுப்ப, சீவகன்,

மகளிர் காக்கும் வாயிலை யடைதல்

கோதையொடு தாழ்ந்துகுழல் பொங்கிஞிமி றார்ப்ப

ஓதமணி மாலையொடு பூண்பிறழ வோடி

“ஏதம்இது போமின்” என என்றுமுரை யீயான்

ஊதவுகு தன்மையினொ டொல்கியுற நின்றான். 526

வேறு சில மகளிர் அவனைச் சூழநின்று கடிய சொற்களைச் சொல்லி அச்சுறுத்த, அவருட் சிலர் கூறல்

“பாவமிது, நோவவுரை யன்மின் முது பார்ப்பார்

சாவர்தொடி னேகடிது, கண்டவகை வண்ணம்

ஓவியர்தம் பாவையினோ டொப்பரிய நங்கை

ஏவல்வகை கண்டறிது” மென்றுசிலர் சொன்னார். 527

இச் செய்தியறிந்த சுரமஞ்சரி மேல் மாடத்திலிருந்து

இழிந்து சீவகன் எதிரே வருதல்

சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப

வேறுபடு மேகலைகள் மெல்லென மிழற்றச்

சேறுபடு கோதைமிசை வண்டுதிசை பாட

நாறுமலர்க் கொம்பர்நடை கற்பதென வந்தாள். 528

இருவரும் சொல்லாடல்

“வந்தவர வென்னை” யென, “வாட்கண்மட வாய்,கேள்”

சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட

“அந்திலதி னாயபய னென்னைமொழி” கென்றாள்

“முந்நிநலி கின்றமுது மூப்பொழியு” மென்றான். 529

நறவிரிய நாறுகுழ லாள்பெரிது நக்குப்

“பிறருமுள ரோபெறுநர் பேணிமொழி” கென்னத்

“துறையறிந்து சேர்ந்துதொழு தாடுநரில்” என்றாற்கு

“அறிதிர்பிற நீவிர்” என “ஐயமிலை” யென்றான். 530

சுரமஞ்சரி சீவகனையொரு பித்தனெனக் கருதி மேன்மாடம் கொண்டு சென்று, அடிசில் கொணருமாறு தோழியர்க்குப் பணித்தல்

“வடிவமிது, மூப்பளிது, வார்பவள வல்லிக்

கடிகைதுவர் வாய்கமலங் கண்ணொடடி வண்ணம்

கொடிதுபசி கூர்ந்துளது கோல்வளையி னீரே!

அடிசில்கடி தாக்கியிவ ணேகொணர்மி” னென்றாள். 531

பின்பு சீவக வேதியனை நறிய நீர்கொண்டு நீராட்டி, நல்ல வெள்ளிய உடை தந்து, புதிய பூணூாலணிவித்து ஓர் ஆசனத்தில் இருத்தினர். அடிசில் கொணர்ந்ததும், அவனுக்குப் பொற் கலத்தையும் பக்கத் தட்டும் பரப்பி அறுசுவை யுண்டி வட்டிக்க, அவன், இத்தகைய சுவைமிக்க உணவு எங்கும் இல்லை, என்று சொல்லி அயன்று, வாய்பூசி யமர்ந்து அவர் தந்த வெற்றிலைச் சுருளை மென்று வாயில் ஒரு பக்கத்தே அடக்கிக் கொண்டான்.

மேலும் சிறிது சொல்லாடல்

“வல்லதெனை” யென்ன, “மறை,

வல்லன்" மட வாய்யான்

“எல்லையெவ” னென்னப் பொரு

ளெய்திமுடி காறும்,

”சொல்லுமினு நீவிர்கற்ற

கால“மெனத்”தேன்சோர்

சில்லென்கிளிக் கிளவி! யது

சிந்தையில" னென்றான். 532

சீவகன் தன்னை வெளியே போமாறு அவர்கள்

கூறாதபடி உறங்கி விழுதல்

“இன்னவர்க ளில்லைநிலத்” தென்றுவியந் தேத்தி

அன்னமென மென்னடையி னாளமர்ந்து நோக்கப்,

பின்னையிவள் போகுதிறம் பேசுமென வெண்ணித்

தன்னஞ்சிறி தேதுயின்று தாழஅவள் நக்காள். 533

நகைத்த சுரமஞ்சரிக்குச் சீவகன் மொழிதல்

கோலமணி வாய்க்குவளை வாட்கண்மட வாளைச்

சாலமுது மூப்புடைய சாமிமுக நோக்கிக்

“காலும்மிக நோம்சிறிது கண்ணும்துயில் குற்றேன்

ஏலங்கமழ் கோதையிதற் கென்செய்குரை” யென்றான். 534

அதுகேட்ட சுரமஞ்சரி தான் கிடந்துறங்கும் கட்டிலிலே அவனைக் கிடந்து உறங்குமாறு பணித்தாள். அவனும் அதன் மேல் கிடந்து மெல்ல உறங்குவான் போன்றான். இரவுப் போது வந்தது. மகளிர் தாமும் உணவுண்டு இனிய பாட்டுக்களைப் பாடி மகிழ்தலுற்றனர்.

சீவகன் பாடுதல்

பொன்னறையுள் இன்னமளிப் பூவணையின் மேலான்,

முன்னியதன் மன்றலது முந்துற முடிப்பான்,

மன்னுமொரு கீதமது ரம்பட முரன்றாற்கு,

இன்னமிர்த மாகஇளை யாருமது கேட்டார். 535

கேட்ட மகளிர் அவனது இசைச் சிறப்பை நினைந்து வியப் பெய்தி, இது சீவகன் இசைபோலுளது என எண்ணி மகிழ, சீவகன் மேலும் ஒரு பாட்டை இனிது பாடினன்.

மகளிர் அவன்பால் ஓடி வருதல்

கள்ள மூப்பின் அந்தணன்

கனிந்த கீத வீதியே

வள்ளி வென்ற நுண்ணிடை

மழைம லர்த்த டங்கணார்

புள்ளு வம்ம திமமகன்

புணர்த்த வோசை மேற்புகன்று,

உள்ளம் வைத்த மாமயிற்

குழாத்தின் ஓடி எய்தினார். 536

அவருடன் சுரமஞ்சரியும் ஓடிவரக் கண்ட சீவக வேதியன், பெரிதும் மூப்புடைய என்பால் போந்து நீவிர் பெறுவது என்னை என்று சொல்ல, சுரமஞ்சரி நாணித் தன் தோழியின் பின்னே மறைந்து நின்றாள்.

சீவகன் சொல்லாடல்

“இளையவற் காணின் மன்னோ

என்செய்வீர், நீவிர்" என்ன,

”விளைமதுக் கண்ணி மைந்தர்

விளி“கெனத் தோழி கூற,

”முளையெயிற் றிவளை யாரும்

மொழிந்தன ரில்லை யென்றோ,

உளைவது பிறிது முண்டோ

ஒண்டொடி மாதர்க்" கென்றான். 537

தோழியர் விடைவிளம்பல்

“வாய்ந்தஇம் மாதர் சுண்ணம்

சீவகன் பழித்த பின்றைக்

காய்ந்தன" ளென்று கூற,

“காளைமற் றிவட்குத் தீயான்

மாய்ந்தனன் போலு" மென்ன,

மாதரா ரொருங்கு வாழ்த்தி

”ஆய்ந்தனம் ஐய னுய்ந்தான்

அறிந்தனம் அதனை" யென்றார். 538

பின்னர் அவர்கள் சீவகன் உயிருய்ந்த செய்தியைத் தத்தை பால் கிளியைத் தூதனுப்பித் தெரிந்தவற்றைச் செப்பினர்.

தோழியர் சீவகனைப் பாடுமாறு வேண்டல்

“அன்பொட்டி யெமக்கோர் கீதம்

பாடுமின், அடித்தி யாரும்

முன்பட்ட தொழிந்து நுங்கண்

முகவியர் முனிவு தீர்ந்தார்,

பொன்தொட்டேம், யாமும் நும்மைப்

போகொட்டேம் பாடல் கேளாது

என்பட்டு விடினு" மென்றார்

இலங்குபூங் கொம்பொ டொப்பார். 539

சீவகன், “யாம் பவை பொற்பையே பாடுவேம், அவளை நமக்கு நல்குவதாக ஒட்டுமின்” என்னும் கருத்தை யுள்ளுறுத்துக் கவர்பொரு ளெய்தப் பேசினன். அஃதுணராத அப் பேதையர் “பொற்பாவை தருதும்” என ஒட்டினர். பின்பு அவன் சுரமஞ்சரி முகநோக்கி, மாலைப்போது கண்டு ஆற்றாத தலைவி கூற்றாகத் தாழிசைகள் மூன்று பாடினன்.

பாட்டிசையால் சீவகனை நினைத்த சுரமஞ்சரி காமனை வணங்கி வரம்பெறக் கருதுதல்

பாடினான் தேவ கீதம்

பண்ணினுக் கரசன், பாடச்

சூடக மகளிர் சோர்ந்து

செருக்கிய மஞ்ஞை யொத்தார்;

ஆடகச் செம்பொற் பாவை

அந்தணற் புகழ்ந்து “செம்பொன்

மாடம்புக் கநங்கற் பேணி

வரங்கொள்வல் நாளை" யென்றாள். 540

இதற்குள் இரவுப்போது நெடிது கழிந்தது. திங்கள் எழுந்து மிக்க ஒளியைச் செய்யலுற்றது. சுரமஞ்சரி காமன் கோட்டம் செல்ல எழுந்தாள்.

சுரமஞ்சரி வண்டி யேறுதல்

பொன்னியன் மணியுந் தாரும்

கண்ணியும் புனைந்து, செம்பொன்

மின்னியற் பட்டஞ் சேர்த்தி,

ஆனெய்யால் வெறுப்ப வூட்டி,

மன்னியற் பாண்டில் பண்ணி

மடந்தைகோல் கொள்ள, வையம்

இன்னியற் பாவை யேற்பத்

தோழியோ டேறி னாளே. 541

உடன் வந்த சீவகனை அக் கோட்டத்தில் ஒருபுறத்தே மறையவைத்துத் தான் உள்ளே செல்லுதல்

ஆடவ ரிரிய ஏகி யஞ்சொல்லார் சூழக் காமன்

மாடத்து ளிழிந்து மற்றவ் வள்ளலை மறைய வைத்துச்

சூடமை மாலை சாந்தம் விளக்கொடு தூப மேந்திச்

சேடியர் தொழுது நிற்பத் திருமகள் பரவு மன்றே. 542

சுரமஞ்சரி காமனை வழிபட்டு, இட முழந்தாளை நிலத்தே ஊன்றி, தன் தலையை வலத்தே சாய்த்து, இருகையும் கூப்பி வணங்கி நின்றாள்.

சுரமஞ்சரி வரம் வேண்டல்

“தாமரைச் செங்கட் செவ்வாய்த் தமனியக் குழையி னாய்ஓர்

காமமிங் குடையேன், காளை சீவகனகலம் சேர்த்தின்

மாமணி மகரமம்பு வண்சிலைக் கரும்பு மான்றேர்

பூமலி மார்ப!ஈவ லூரொடும்பொலிய” என்றாள். 543

புத்திசேனன் உள்ளிருந் துரைத்தல்

“மட்டவிழ் கோதை! பெற்றாய் மனமகிழ் காதலானை;

இட்டிடை நோவ நில்லாதெழு” கெனவேந்தல் தோழன்

பட்டிமை யுரைத்த தோராள் பரவிய தெய்வந் தான்,வாய்

விட்டுரைத் திட்ட தென்றே வேற்கணாள் பரவி மீண்டாள். 544

மீண்டவள் எதிரே சீவகன் தன் உண்மைவடிவுடன்

நிற்கக் காண்டல்

அடியிறை கொண்ட செம்பொ னாடகச் சிலம்பி னாள்அக்

கடியறை மருங்கி னின்ற மைந்தனைக் கண்டு நாணி

வடியுறு கடைக்க ணோக்க நெஞ்சுதுட் கென்ன வார்பூங்

கொடியுற ஒசிந்து நின்றாள் குழைமுகத் திருவோ டொப்பாள். 545

சுரமஞ்சரி வேட்கைமிக்கு உருகி நிற்றல்

இலங்குபொன் னோலை மின்ன இன்முகஞ் சிறிது கோட்டி

அலங்கலும் குழலுந் தாழ அருமணிக் குழையோர் காதிற்

கலந்தொளி கான்று நின்று கதிர்விடு திருவில் வீச

நலங்கனிந் துருகி நின்றாள் நாமவேற் காமர் கண்ணாள். 546

சீவகன் சுரமஞ்சரியை நயந்து கோடல்

“தேறினேன் தெய்வ மென்றே, தீண்டிலே னாயினுய்யேன்

சீரடி பரவ வந்தே னருளெனத் தொழுது சேர்ந்து,

நாறிருங் குழலினாளை நாகணை விடையிற் புல்லிக்

கோல்தொடுத் தநங்க னெய்யக் குழைந்துதார் திவண்ட தன்றே. 547

சீவகன் சுரமஞ்சரியைத் தேற்றி அவள் மனைக்குச் செல்ல விடுத்தல்

இறங்கிய மாதர் தன்னை யெரிமணிக் கடகக் கையால்

குறங்கின்மேல் தழுவி வைத்துக் கோதையங் குருதி வேலான்

அறந்தலை நீங்கக் காக்கு மரசன்யா னாகநாளைச்

சிறந்தநின் நலத்தைச் சேரே னாய்விடின்செல்க என்றான். 548

சுரமஞ்சரி செல்லுதல்

வில்லிடு மணிசெய் ஆழி மெல்விரல் விதியிற் கூப்பி

நல்லடி பணிந்து நிற்ப, “நங்கை”நீ நடுங்க வேண்டா

செல்!கெனச் சிலம்பு செம்பொற் கிண்கிணி மிழற்ற ஒல்கி

அல்குற்கா சொலிப்ப ஆயம் பாவைசென் றெய்தி னாளே. 549

சீவகன் சென்று தன் தோழரைக் கூடினன். அவர்களும் முன்பு மொழிந்தவாறே சீவகனைக் காம திலகன் எனப் பாராட்டினர். பின்பு, மகள் பேசுதற்குரியாரைச் சுரமஞ்சரியின் தந்தையான குபேரத்தன்பால் விடுத்தனர். சென்ற சான்றோரும் அவளைச் சீவகற்கு மகட்கொடை நேருமாறு வேண்டினர். குபேர தத்தனுக்குச் சுரமஞ்சரியின் நோன்பு, வருத்தம் செய்யலுற்றது.

குபேரதத்தன் சுரமஞ்சரியின் கருத்தறிய நினைத்தல்

ஐயற்கென் றுரைத்த மாற்றங்

கேட்டலு மலங்க னாய்கன்

வெய்யதேன் வாய்க்கொண் டாற்போல்

விழுங்கலோ டுமிழ்தல் தேற்றான்,

“செய்வதென் நோற்றி லாதேன்

நோற்றிலாள் திறத்தின்" என்று

மையல்கொண் டிருப்ப அப்பாற்

குமரிதன் மதியிற் சூழ்ந்தாள். 550

இஃது இங்ஙனமிருக்கச் சுரமஞ்சரி தான் சீவகனை மணக்க விரும்பிய விருப்பத்தைத் தன் தோழிக்குரைத்தாள். அவள் அதனைத் தன் அன்னைக்குச் சொன்னாள். அவ்வன்னையாகிய செவிலித்தாய், சுரமஞ்சரியின் நற்றாயாகிய சுமதிக்கு உரைத்தாள். அவள் குபேரதத் தனுக்குக் கூற, அவனும் உளம் மகிழ்ந்து சீவகற்கு மகட்கொடை நேர்ந்தான்.

திருமணம் செய்தல்

கேட்பது விரும்பி நாய்கன்

கிளைக்கெலா முணர்த்தி யார்க்கும்

வேட்பன அடிசி லாடை

விழுக்கலன் மாலை சாந்தம்

கோட்குறை வின்றி யாக்கிக்

குழுமியங் கறங்கி யார்ப்ப

நாட்கடி மாலை யாற்கு

நங்கையை நல்கி னானே. 551

சீவகன் சுரமஞ்சரியுடன் இன்புற்றிருக்கையில் ஒருநாள் தான் அவளிற் பிரிந்து செல்லவேண்டி யிருத்தலைத் தெரிவித்தான்.

சுரமஞ்சரி பிரிவிற்குடன்படல்

“கருமம்நீ கவல வேண்டா

கயற்கணாய்! பிரிவல் சின்னாள்

அருமைநின் கவினைத் தாங்க

லதுபொருள்" என்று கூறப்

”பெருமநீ வேண்டிற் றல்லால்

வேண்டுவ பிறிதொன் றுண்டோ?

ஒருமைநின் மனத்திற் சென்றே

னுவப்பதே யுவப்ப" தென்றாள். 552

சீவகன் பிரிந்து சென்று தன் மனையை யடைதல்

நாணொடு மிடைந்த தேங்கொள்

நடுக்குறு கிளவி கேட்டே

பூண்வடுப் பொறிப்பப் புல்லிப்

புனைநலம் புலம்ப வைகேன்

தேன்மிடை கோதை யென்று

திருமக னெழுந்து போகி

வாண்மிடை தோழர் சூழத்

தன்மனை மகிழ்ந்து புக்கான். 553

சீவகன் வரவு கண்ட சுநந்தை பெரிதும் வருந்தி மெலிந்தாள். கந்துக்கடன் ஒருவாறு ஆற்றினான். சீவகன் பிரிவாலுண்டாய துன்பத்தை நினைந்து சுற்றத்தார் பலரும் புலம்பித் தேறினர். இந்த ஆரவாரத்தால் சீவகன் வரவு அரசனுக்குப் புலனாகிவிடும் என்று அஞ்சிய கந்துக்கடன் இன்று என் தந்தை இவ்வுலகு நீத்த நாள் என்று வெளியார்க்குத் தெரிவித்தான். பின்பு அனைவரும் மகிழ்ச்சி யெய்தினர். முதற்கண் சீவகன் காந்தருவதத்தை யிருந்த மனையை யடைந்து அவளைக் கண்டான். அவனுக்கு அவள் குணமாலையின் ஆற்றாமையினை எடுத்து இயம்பினாள். உடனே, சீவகன் குண மாலையைச் சென்று எய்தினான்.

குணமாலை தன்னை நொந்துரைத்தல்

தீவினை யுடைய வென்னைத்

தீண்டன்மின் அடிகள் வேண்டா

பாவியேன் என்று நொந்து

பரிந்தழு துருகி நையக்

காவியங் கண்ணி யொன்றுங்

கவலல்யான் உய்ந்த தெல்லாம்

நாவியே நாறு மேனி

நங்கைநின் தவத்தி னென்றான். 554

சீவகன் அவளைத் தேற்றிவிட்டுப் பிரிதல்

இளையவள் மகிழ்வ கூறி

இன்றுயி லமர்ந்து பின்னாள்

விளைபொரு ளாய வெல்லாம்

தாதைக்கே வேறு கூறிக்

கிளையவர் சூழ வாமான்

வாணிக னாகிக் கேடில்

தளையவிழ் தாம மார்பன்

தன்னகர் நீங்கி னானே. 555

சுரமஞ்சரியார் இலம்பகம்

முற்றும்

மண்மகள் இலம்பகம்

மண்மகள் இலம்பகம் : ஏமாங்கத நாட்டை விட்டுக் குதிரை வாணிகன் உருக்கொண்டு விதைய நாடு அடைந்து, தன் மாமன் கோவிந்தராசனைக் கண்டு வணங்கி, நிகழ்ந்தது கூறி இனிதிருந் தான். கோவிந்தராசன் தன் மகன் சீதத்தனுக்கு அரசளித்து, தான் எல்லோரோடுமிருந்து, கட்டியங்காரனது சூழ்ச்சி யறிந்து அவனை வஞ்சனையால் விதைய நாட்டிற்கு வருவிக்க எண்ணி, தன்பா லுள்ள திரிபன்றி எந்திரத்தை எய்து வீழ்ப்பவனுக்குத் தன் மகள் இலக்கணையை மணம் செய்து தருவதாக ஓலை போக்கினன். பல நாட்டிலுமிருந்து அரசகுமாரர் போந்து அப் பன்றியை எய்ய மாட்டாது இளைத்தனர். கட்டியங்காரனும் அப்போழ்து தன் மக்களுடன் வந்திருந்தான். முடிவில் சீவகனே அப் பன்றியை எய்து யாவரும் புகழும் ஏற்றம் எய்தினான். அவன் இன்னானென்று கோவிந்தராசன் ஆங்கிருந்த அரசர்க்கு அறிவிப்ப, வானில் இயக்க னொருவன் தோன்றி, “கட்டியங்காரனாகிய கரியைச் சீவக னென்னும் கரிமா கொல்லும்” என்றுரைத்துப் போயினன். உடனே கட்டியங்காரன் போருக்கு எழுந்தான். இருதிறத்தார் தானையும் கடும்போர் புரிந்தன. கட்டியங்காரன் சீவகன் அம்பால் உயிர் துறந்தான். அவன் மக்களும் போரில் பட்டனர். விசயை இச் செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டாள்.

இராசமாபுரத்தை விட்டு நீங்கிய சீவகனும் அவன் தோழரும் பலவகை நிலங்களையும் கடந்து ஆங்காங்கே தோன்றும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்வுற்று விதைய நாட்டை யடைந்து யாற்றங் கரையில் தங்கி இளைப்பாறலாயினர்.

விதையநாட்டரசனான கோவிந்தராசனுக்குச் சீவகன் தன் வரவைத் தெரிவித்தல்

அள்ளிலைப் பலவி னளிந்துவீழ் சுளையும்

கனிந்துவீழ் வாழையின் பழனும்

புள்ளிவா ழலவன் பொறிவரிக் கமஞ்சூல்

நெண்டினுக் குய்த்துநோய் தணிப்பான்

பள்ளிவாய் நந்து மாமையும் பணித்துப்

பன்மலர் வழிபடக் குறைக்கும்

வெள்ளநீர்ப் படப்பை விதையம்வந் தடைந்தே

வேந்தனுக் குணர்த்தமுன் விடுத்தார். 556

சீவகனது வரவறிந்த கோவிந்தராசன் நகரத்தை அணிசெய்து சீவகனைச் சிறப்பாக வரவேற்குமாறு நகரமக்கட்குப் பணித்தான். நகர மக்கள் அவ்வண்ணமே நகரத்தைத் தேவருலகுபோல அணி செய்து சிறப்பித்தனர்.

நகரமக்கள் சீவகனை வரவேற்றல்

மின்தோய் வரைகொன்ற வேலோன் புகுதக;

இன்தேன் கமழ்தார் இயக்கன் புகுதக;

வென்றோன் புகுதக, வீரன் புகுதக,

என்றே நகரம் எதிர்கொண் டதுவே. 557

சீவகன், யானை யிவர்ந்து சென்று மன்னன்

கோயிலை யடைதல்

விளங்குபாற் கடலிற் பொங்கி

வெண்டிரை யெழுவ வேபோல்

துளங்கொளி மாடத் துச்சித்

துகிற்கொடி நுடங்கும் வீதி

உளங்கழிந் துருவப் பைந்தார்

மன்னவன் கோயில் சேர்ந்தான்

இளங்கதிர்ப் பருகி பௌவத்

திறுவரை யிருந்த தொத்தான். 558

சென்ற சீவகன், வழியில் அரசன் மகள் இலக்கணையிருந்த கன்னி மாடத்தைக் கடந்து வருகையில் அவளைக் கண்டு நீங்கினான். இலக்கணையும் அவனைக் கண்டு கருத்திழந்து நின்றாள்.

இலக்கணை சீவகனைக் காண்டல்

தாமரைப் போதிற் பூத்த தண்ணறுங் குவளைப் பூப்போல்

காமரு முகத்திற் பூத்த கருமழைத் தடங்கண் தம்மால்

தேமலர் மார்பி னானை நோக்கினாள், செல்வன் மற்றப்

பூமலர்க் கோதை நெஞ்ச மூழ்கிப்புக் கொளித்திட்டானே. 559

சீவகன் தன் மாமனைக் கண்டு வணங்குதல்

மைதோய் வைரிய னிழியும்புலி போல மைந்தன்

பெய்தாம மாலைப் பிடியின்னிழிந் தேகி மன்னர்

கொய்தாம மாலைக் கொழும்பொன்முடி தேய்த்தி லங்கும்

செய்பூங் கழலைத் தொழுதான் சென்னி சேர்த்தினானே. 560

கோவிந்தராசன் சீவகனைத் தழீஇக் கொளல்

பொன்னங் குவட்டிற் பொலிவெய்தித் திரண்ட திண்டோள்

மன்னன் மகிழ்ந்து மருமானை விடாது புல்லித்

தன்னன்பு கூரத் தடந்தாமரைச் செங்கண் முத்தம்

மின்னும் மணிப்பூண் விரைமார்பம் நனைப்ப நின்றான். 561

கோயிலவர் சச்சந்தனை நினைந்து புலம்பல்

ஆனாது வேந்தன் கலுழ்ந்தானெனக் கோயி லெல்லாம்

தானாது மின்றி மயங்கித்தடங் கண்பெய் மாரி

தேனார் மலரீர்த் தொழுகச் சிலம்பிற் சிலம்பும்

கானார் மயிலின் கணம்பொற் கலுழ்வுற்ற தன்றே. 562

விசயை போந்து தேற்றுதல்

பகைநரம் பிசையுங் கேளாப்

பைங்கதிர்ப் பசும்பொன் கோயில்

வகைநலம் வாடி யெங்கும்

அழுகுரல் மயங்கி முந்நீர்

அகமடை திறந்த தேபோல்

அலறக்கோக் கிளைய நங்கை

மிகைநலத் தேவி தானே

விலாவணை நீக்கி னாளே. 563

பின்பு கோவிந்தராசன் தன் அமைச்சருடன் சீவகன் உடனிருப்பத் தன் மகன் சீதத்தனுக்கு முடி சூட்டல்

உலந்தநா ளவர்க்குத் தோன்றா

தொளிக்குமீன் குளிக்கும் கற்பிற்

புலந்தவே னெடுங்கட் செவ்வாய்ப்

புதவிநாட் பயந்த நம்பி

சிலம்புநீர்க் கடலந் தானைச்

சீதத்தற் கரசு நாட்டிக்

குலந்தரு கொற்ற வேலான்

கொடிநகர் காக்க வென்றான். 564

கோவிந்தராசன் சீவகன் தோழர்க்குச் சிறப்புச் செய்தல்

மாற்றவ னொற்ற ரொற்றா

வகையினின் மறைய நம்பிக்கு

ஆற்றின தோழர்க் கெல்லா

மணிகல மடிசி லாடை

வேற்றுமை யின்றி வேண்டூட்

டமைத்தன னருளி யிப்பால்

ஏற்றுரி முரச நாண

எறிதிரை முழக்கிற் சொன்னான். 565

அரசன் பணிப்ப, விரிசிகன் என்னும் அமைச்சன் கட்டியங்காரன் விடுத்திருந்த ஓலையைப் படித்தல்

விதையத்தார் வேந்தன் காண்க,

கட்டியங் கார னோலை,

புதையவிப் பொழிலைப் போர்த்தோர்

பொய்ப்பழி பரந்த தென்மேற்

கதையெனக் கருதல் செய்யான்

மெய்யெனத் தானுங் கண்டான்

சிதையவென் னெஞ்சம் போழ்ந்து

தெளிப்பினும் தெளிநர் யாரே. 566

இவ்வாறு முன்னுரை மொழிந்துகொண்ட கட்டியங்காரன், சச்சந்தனைத் தான் கொன்றதை மறைத்து, அசனிவேகமெனும், அரசுவா மதம்பட்டுப் பாகர் நூற்றுவரைக்கொன்று திரிய, அரசன் சச்சந்தன் அதனையடக்கிக் கந்திற் பிணிக்குங்கால் அவனை அது வீழ்த்துக்கொன்றது. இனி, நீயே போந்து இவ்வரசுரிமையை ஏற்று என்மீது படரும் பழியைப் போக்குதல் வேண்டும். நின் பொருட்டு யான் என் உயிரையும் ஈகுவன் என்று எழுதியிருந்தான்.

சீவகன் உரைத்தல்

ஓலையுட் பொருளைக் கேட்டே

யொள்ளெயி றிலங்க நக்குக்

காலனை யளியன் தானே

கையினால் விளிக்கு மென்னா

நூல்வலீர்! இவனைக் கொல்லும்

நுண்மதிச் சூழ்ச்சி யீதே

போல்வதொன் றில்லை யென்றான்

புனைமணிப் பொன்செய் பூணான். 567

கோவிந்தராசன் கூறல்

கள்ளத்தால் நம்மைக் கொல்லக்

கருதினான், நாமும் தன்னைக்

கள்ளத்தா லுயிரை யுண்ணக்

கருதினோம், இதனை யாரும்

உள்ளத்தா லுமிழ வேண்டா,

வுறுபடை வந்து கூட

வள்ளுவர் முரச மூதூர்

அறைகென அருளி னானே. 568

போர்க் குறிப்பின்றி நட்பு முறையில் பெரும்படை திரள்க என்று அரசன் பணித்தவாறே பதினாயிரத்து நூறு யானைப் படையும், அறுபதினாயிரம் குதிரைப் படையும், இருபதினாயிரத் தறுநூறு தேர்ப்படையும், நான்கு நூறாயிரம் காலாட்களுமாகிய பெரும் படை திரண்டது. இங்ஙனம் எழுந்த இக் கடல் போலும் தானை இராசமாபுரத்தை நோக்கிச் சென்று, அந் நகர்ப்புறத்தே இருத்தது. கோவிந்தராசனும் புரிசைப்புறமே தனக்குக் கோயிலாகக் கொண்டான்.

கட்டியங்காரன் கோயிலில் துந்நிமித்தம் தோன்றல்

போக மகளிர் வலக்கண்கள் துடித்த;

பொல்லாக் கனாக்கண்டார்,

ஆக மன்னற் கொளிமழுங்கிற்று,

அஞ்சத் தக்க குரலினால்

கூகை கோயிற் பகற்குழறக்

கொற்ற முரசம் பாடவிந்து

மாக நெய்த்தோர் சொரிந்தெங்கும்

மண்ணும் விண்ணும் அதிர்ந்தவே. 569

இதனை யறியாத கட்டியங்காரன், கோவிந்தன் வரவு கேட்டு இவனையும் கொன்றுவிட்டதாகவே மகிழ்ந்து நட்புக்குறியாக, இருநூறு யானைகளையும், ஆயிரம் குதிரைகளையும், நூறு தேரும் விடுப்ப, கோவிந்தனும், வாரி மணாளனென்னும் யானையும், விசயமென்னும் தேரும், பவன வேகமென்னும் குதிரையும் கட்டியங் காரனுக்கு விடுத்தான். இவ்வகையால் இருவரும் நட்புடையராய் இருந்து வரலாயினர்.

கோவிந்தராசன் தன்பாலுள்ள திரிபன்றி வென்றியுற எய்தார்க்கு என் மகள் இலக்கணையுரியள் என முரசறைவித்தல்

“பெருமகன் காதற் பாவைப் பித்திகைப் பிணையல் மாலை

யொருமகள், நோக்கி னாரை யுயிரொடும் போகொடாத

திருமகள் அவட்குப் பாலான், அருந்திரி பன்றி யெய்த

அருமக னாகு” மென்றாங் கணிமுர சறைவித் தானே. 570

இச்செய்தி ஏனையரசர் பலர்க்கும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு நாட்டு அரசகுமரர் அனைவரும் நகரத்திடத்தே வந்து நிறைந்தனர். கட்டியங்காரனும் ஆங்கே வந்திருந்தான். அரசகுமரர் அனைவரும் அத் திரிபன்றியை எய்வதற்கு முயன்று தம் முயற்சி முற்றாராயினர். இவ்வாறு ஆறுநாட்கள் சென்றன.

சீவகன் யானையிவர்ந்து அங்கே வருதல்

காரின் முழங்குங் களிறும் கடலின் முழங்குந் தேரும்

போரின் முழங்கும் புரவிக் கடலும் புகைவாட் கடலும்

சீரின் முழங்கும் முரசும் அலறுஞ் சிறுவெண் சங்கும்

நீரின் முழங்க முழங்கும் நீல யானை யிவர்ந்தான். 571

கட்டியங்காரன் சீவகனைக் கண்டு துணுக்குறல்

கல்லார் மணிப்பூண் மார்பிற் காமனிவனே யென்ன

வில்லார் கடலந் தானைவேந்தர் குழாத்துட் டோன்றப்

புல்லான் கண்ணி னோக்கிப் புலிகாண் கலையிற் புலம்பி

ஒல்லா னொல்லா னாகியுயிர்போ யிருந்தான் மாதோ. 572

சீவகன் திரிபன்றி யெய்து வீழ்த்தல்

அருந்தவக் கிழமை போல இறாதவில் லறாத நாண்வாய்த்

திருந்தினார் சிந்தை போலும் திண்சரம் சுருக்கி மாறாய்

இருந்தவன் பொறியும் பன்றி யியற்றரும் பொறியு மற்றாங்கு

ஒருங்குட னுதிர வெய்தா னூழித்தீ யுருமோ டொப்பான். 573

கோவிந்தன் எல்லாருமறியச் சீவகனது

குலமுறை எடுத்துக் கூறல்

இலங்கெயிற் றேனமேவுண் டிருநிலத் திடித்துவீழக்

கலங்குதெண் டிரையும் காருங் கடுவளி முழக்கு மொப்ப

உலம்புபு முரசங் கொட்டி யொய்யெனச் சேனை யார்ப்பக்

குலம்பகர்ந் தறைந்து கோமான் கோவிந்தன் கூறினானே. 574

வானிடத்தே இயக்கன் தோன்றிக் கூறல்

வானிடை யொருவன் தோன்றி மழையென முழங்கிச் சொல்லும்

தேனுடை யலங்கல் வெள்வேல் சீவக னென்னுஞ் சிங்கம்

கானுடை யலங்கல் மார்பிற் கட்டியங் காரனென்னும்

வேன்மிடை சோலைவேழத் தின்னுயிர் விழுங்கு மென்றான். 575

கட்டியங்காரன் சினந்து கூறல்

விஞ்சையர் வெம்படை கொண்டுவந் தாயென

அஞ்சுவ லோவறி யாயென தாற்றலை

வெஞ்சம மாக்கிடின் வீக்கறுத் துன்னோடு

வஞ்சனை வஞ்ச மறுத்திடு கென்றான். 576

மதனன் வெகுளுதல்

சூரியற் காண்டலுஞ் சூரிய காந்தமஃது

ஆரழ லெங்ஙனங் கான்றிடும் அங்ஙனம்

பேரிசை யானிசை கேட்டலும் பெய்ம்முகிற்

காரிடி போன்மத னன்கனன் றிட்டான். 577

கட்டியங்காரன் மக்கள் நூற்றுவரும் எழுதல்

காற்படை யுங்களி றுங்கலி மாவொடு

நூற்படு தேரும் நொடிப்பினிற் பண்ணி

நாற்படை யுந்தொகுத் தான்மக்கள் நச்சிலை

வேற்படை வீரரொர் நூற்றுவர் தொக்கார். 578

சீவகனது படைத் தொகை

பார்நனை மதத்த பல்பேய் பருந்தொடு பரவச் செல்லும்

போர்மதக் களிறு பொற்றேர் நான்கரைக் கச்சமாகும்;

ஏர்மணிப் புரவி யேழாமிலக்கமேழ் தேவகோடி,

கார்மலி கடலங் காலாள் கற்பகத் தாரினாற்கே. 579

கட்டியங்காரனது படைத் தொகை

நிழன்மணிப் புரவித் திண்டேர் நிழறுழாய்க் குனிந்து குத்தும்

அழல்திகழ்க் கதத்த யானை யைந்தரைக் கச்ச மாகும்;

எழின்மணிப் புரவி யேழா மிலக்கமேழ் தேவ கோடி

கழன்மலிந் திலங்குங் காலாள் கட்டியங் காரற் கன்றே. 580

விசயனொடு பொருது மதனன் வீழ்தல்

.காளமா கிருளைப் போழ்ந்து

கதிர்சொரி கடவுட் டிங்கள்

கோளரா விழுங்க முந்நீர்க்

கொழுந்திரைக் குளித்த தேபோல்

நீளம ருழக்கி யானை

நெற்றிமேற் றத்தி வெய்ய

வாளின்வாய் மதனன் பட்டான்

விசயன்போர் விசயம் பெற்றான். 581

மதனன் தம்பியாகிய மன்மதன் பொருது மடிதல்

தோளினா லெஃக மேந்தித் தும்பிமே விவரக் கையால்

நீளமாப் புடைப்பப் பொங்கி நிலத்தவன் கவிழ்ந்து வீழக்

கீளிரண் டாகக்குத்தி யெடுத்திடக் கிளர்பொன் மார்பன்

வாளினாற் றிருகிவீசி மருப்பின்மேற் றுஞ்சினானே. 582

தேவதத்தன் மகத வேந்தனை வெல்லுதல்

செண்பகப் பூங்குன் றொப்பான் தேவமா தத்தன் வெய்தா

விண்புக வுயிரைப் பெய்வான் வீழ்தரு கடாத்த வேழ

மண்பட இடிக்குஞ் சிங்க மெனக்கடாய் மகதர் கோமான்

தெண்கடற் றானை யோடநாணிவேல் செறித்திட்டானே. 583

சீதத்தன் கலிங்கர் கோனை வீழ்த்துதல்

சின்னப்பூ அணிந்த குஞ்சிச் சீதத்தன் சினவு பொன்வாள்

மன்னருட் கலிங்கர் கோமான் மத்தகத் திறுப்ப மன்னன்

பொன்னவிர் குழையும் பூணும் ஆரமும் சுடர வீழ்வான்

மின்னவிர் பருதி முந்நீர்க் கோளொடும் வீழ்வ தொத்தான். 584

கோவிந்தன் மாரட்டனென்னும் வேந்தனை வீழ்த்துதல்

கொடுஞ்சிலை யுழவன் மான்தேர்க்

கோவிந்த னென்னும் சிங்கம்

மடங்கருஞ் சீற்றத் துப்பின்

மாரட்ட னென்னும் பொற்குன்று

இடந்துபொற் றூளி பொங்கக்

களிற்றோடு மிரங்கி வீழ

அடர்ந்தெரி பொன்செய் அம்பின்

அழன்றிடித் திட்ட தன்றே. 585

இவ்வாறே நபுலன் மகதையார் வேந்தனோடு பொருங்கால், அவன் அஞ்சிக் கண் இமைப்ப, அவனோடு பொருதற்கு நாணி மீண்டான். அது கண்டு வீறுகொண்டு சென்ற விபுலன் தன்னொத்த வீரன் ஒருவனோடு பொருது அவனை விண்ணுலகேற்றினான். பதுமுகன் காமுகன் என்பானோடு போர்செய்து அவனை வீழ்த்தி, அவன் தம்பி கோமுகன் என்பானையும் வென்று மீண்டான். இவ்வண்ணம் சீவகன் தோழரும் தம்பியரும் பிறரும் கட்டியங் காரனுடைய தானைத் தலைவர் முதலாயினாருடன் பொருது வென்றி யெய்தினார்.

சீவகன் தேரேறுதல்

எரிமணிக் குப்பைபோல இருளற விளங்கு மேனித்

திருமணிச் செம்பொன் மார்பிற் சீவகன் சிலைகை யேந்தி

அருமணி யரசராவி அழலம்பிற் கொள்ளை சாற்றி

விரிமணி விளங்கு மான்தேர் விண்தொழ ஏறினானே. 586

சீவகன் வில் குனித்துப் போருடற்றல்

அரசர்தம் முடியும் பூணும் ஆரமும் வரன்றி யார்க்கும்

முரசமும் குடையுந் தாரும் பிச்சமுஞ் சுமந்து மாவும்

விரைபரித் தேரு மீர்த்து வேழங்கொண்டொழுகி வெள்ளக்

குரைபுனற் குருதி செல்லக் குமரன்விற் குனிந்த தன்றே. 587

இதுகண்டு அஞ்சியோடிய வீரர்க்குக் கட்டியங்காரன் அமைச்சனாகிய அரிச்சந்தன் கூறுதல்

தற்புறந் தந்து வைத்த தலைமகற் குதவி வீந்தார்

கற்பக மாலை சூட்டிக் கடியர மகளிர்த் தோய்வர்;

பொற்றசொன் மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கன்மேல்

நிற்பர்தம் வீரம் தோன்ற நெடும்புகழ் பரப்பி யென்றான். 588

அதுகேட்டு வீரத் தீ யெரியப்போந்த வீரர் மாண்டொழிய, கட்டியங்காரன் மைந்தர் நூற்றுவரும் போரிடை எதிர்தல்

திங்க ளோடுடன் குன்றெலாந்

துளங்கி மாநிலஞ் சேர்வபோல்

சங்க மத்தகத் தலமரத்

தரணி மேற்களி றழியவும்

பொங்கு மானிரை புரளவும்

பொலங்கொள் தேர்பல முறியவும்

சிங்கம் போற்றொழித் தார்த்தவன்

சிறுவர் தேர்மிசைத் தோன்றினார். 589

நூற்றுவரும் மடிதல்

கங்கை மாக்கடற் பாய்வதே போன்று காளைதன் கார்முகம்

மைந்த ரார்த்தவர் வாயெலாம் நிறைய வெஞ்சரம் கான்றபின்

நெஞ்சம் போழ்ந்தழ லம்புண நீங்கி னாருயிர் நீண்முழைச்

சிங்க வேறுகள் கிடந்தபோல் சிறுவர் தேர்மிசைத் துஞ்சினார். 590

தாமரைப்படை வகுத்திருந்த கட்டியங்காரன்மேல்

சீவகன் செல்லுதல்

பொய்கை போர்க்களம் புறவிதழ்

புலவு வாட்படை புல்லிதழ்

ஐய கொள்களி றகவித

ழரச ரல்லிதன் மக்களா

மையில் கொட்டையம் மன்னனா

மலர்ந்த தாமரை வரிசையால்

பைய வுண்டபின் கொட்டைமேல்

பவித்தி ரத்தும்பி பறந்ததே. 591

வந்த சீவகனை நோக்கி அசனி வேகத்தின்மே

லிருந்த கட்டியங்காரன் கூறல்

நல்வினை யுடைய நீரார் நஞ்சுணி னமுத மாகும்

இல்லையே லமுதும் நஞ்சாம், இன்னதால் வினையி னாக்கம்

கொல்வல்யா னிவனை யென்றும் இவன்கொல்லும் என்னையென்றும்

அல்லன நினைத்தல் செல்லா ரறிவினாற் பெரிய நீரார். 592

அகப்படு பொறியி னாரை யாக்குவா ரியாவ ரம்மா

மிகப்படு பொறியினாரை வெறியராச் செய்ய லாமோ

நகைக்கதிர் மதியம் வெய்தா நடுங்கச்சுட் டிடுதலுண்டே

பகைக்கதிர்ப் பருதி சந்து மாலியும் பயத்த லுண்டே. 593

புரிமுத்த மாலைப் பொற்கோல்

விளக்கினுள் பெய்த நெய்யும்

திரியுஞ்சென் றற்ற போழ்தே

திருச்சுடர் தேம்பி னல்லால்

எரிமொய்த்துப் பெருக லுண்டோ

இருவினை சென்று தேய்ந்தால்

பிரிவுற்றுக் கெடாமற் செல்வம்

பற்றியா ரதனை வைப்பார். 594

இவ்வாறு பேசும் இவற்குச் சினம்பிறத்தல் வேண்டிச்

சீவகன் நீ அஞ்சினாய் என்றல்

நல்லொளிப் பவளச் செவ்வாய்

நன்மணி யெயிறு கோலி

வில்லிட நக்கு வீரன்

“அஞ்சினாய்” என்ன, வேந்தன்

“வெல்வது விதியி னாகும்,

வேல்வரி னிமைப்பே னாயிற்

சொல்லிநீ நகவும் பெற்றாய்,

தோன்றல்மற் றென்னை" யென்றான். 595

கட்டியங்காரன் வஞ்சின முரைத்தல்

இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்ற நெஞ்சின்

புல்லாள னாக மறந்தோற்பி னெனப்புகைந்து

வில்வா ளழுவம் பிளந்திட்டு வெகுண்டு நோக்கிக்

கொல்யானை புந்திக் குடைமேலுமோர் கோல்தொடுத்தான். 596

அவ்வம்புகளைச் சீவகன் அறுத்துக்கெடுத்தல்

தொடுத்தாங்க அம்பு தொடைவாங்கி விடாதமுன்ன

மடுத்தாங்க அம்புஞ் சிலையும் மதனாணு மற்றுக்

கடுத்தாங்கு வீழக் கதிர்வான்பிறை அம்பி னெய்தான்

வடித்தாரை வெள்வேல் வயிரம்மணிப் பூணினானே. 597

கட்டியங்காரன் சினந்து சீவகன் தேர்மேற் பாய்தல்

அம்புஞ் சிலையு மறுத்தானென் றழன்று பொன்வாள்

வெம்பப் பிடித்து வெகுண்டாங்கவன் தேரின் மேலே

பைம்பொன் முடியான் படப்பாய்ந்திடு கெனஅறு பாய்வான்

செம்பொன் னுலகினிழிகின்ற வொர் தேவனொத்தான். 598

கட்டியங்காரன் வீழ்தல்

மொய்வார் குழலார் முலைப்போர்க்கள மாய மார்பிற்

செய்யோன் செழும்பொற் சரம்சென்றன, சென்ற தாவி,

வெய்தா விழியா வெருவத் துவர்வாய் மடியா

மையார் விசும்பின் மதிவீழ்வது போல வீழ்ந்தான். 599

வெற்றி முரசு முழங்குதல்

கட்டியங் கார னென்னும்

கலியர சழிந்தது, ஆங்குப்

பட்டவிப் பகைமை நீங்கிப்

படைத்தொழி லொழிக வென்னாக்

கொட்டினார் முரசம், மள்ளர்

ஆர்த்தனர், குருதிக் கண்ணீர்

விட்டழு தவன்க ணார்வ

மண்மகள் நீக்கி னாளே. 600

வென்றி யெய்திய சீவகன் நிலை

ஒல்லைநீ ருலக மஞ்ச வொளியுமிழ் பருதிதன்னைக்

கல்லெனக் கடலி னெற்றிக் கவுட்படுத் திட்டுநாகம்

பல்பகல் கழிந்த பின்றைப் பன்மணி நாகந்தன்னை

வல்லைவாய் போழ்ந்து போந்தோர் மழகதிர் நின்ற தொத்தான். 601

விசயை கண்டு கண் குளிர்தல்

கோட்டுமீன் குழாத்தின் மன்ன

ரீண்டினர், மன்னர் சூழ்ந்தார்,

மோட்டுமீன் குழாத்தி னெங்குந்

தீவிகை மொய்த்த, முத்தம்

ஆட்டுநீர்க் கடலி னார்த்த

தணிநகர், வென்றி மாலை

கேட்டுநீர் நிறைந்து கேடில்

விசயைகண் குளிர்ந்த வன்றே. 602

பூமகள் இலம்பகம்

(பூமகள் இலம்பகம் : வென்றி யெய்திய சீவகன் தனக்குரிய இராசமாபுரத்தை யடைந்து, கட்டியங்காரன் உரிமை மகளிர்க்கு வேண்டுவன நல்கினான். அவனுக்குரியார்க்கு அடைக்கலம் உதவிப் பிற உதவிகளும் புரிந்தான். அரசர்க்குரிய முறைப்படி, இடம் பலவற்றிலும் இலச்சினையும் காப்புமிட்டுப் போர் வீரர்க்கு ஓய்வு நல்கி இளைப்பாறுவித்தான். பின்பு வேத்தவை யடைந்து நல்லோரையில் சீவகன் அரசு கட்டில் ஏறினன். கட்டியங்காரனால் துன்புற்றவர்களை இன்புறுவித்து அரசியலை இனிது நடத்தி வருவானாயினன்.)

கட்டியங்காரனையும் அவன் மக்களையும் கொன்று வென்றி யெய்திய சீவகன் தன் பரிசனங்கள் பின்தொடர, மைத்துனவரசர் உடன்வர நகருக்குட் சென்றான். நகரமக்கள் மிக்க சிறப்புடன் அவனை வரவேற்றனர். அக்காலத்தே கட்டியங்காரனுடைய உரிமை மகளிர் அஞ்சி நடுங்கி, புலியைக் கண்ட மான்போல் மருண்டனர். அவனது பட்டத்தரசியும் இறந்துபட்டாள். இச் செய்தியைக் கேள்வியுற்றதும் சீவகன், கட்டியங்காரன் உயிர் போகியதும் என் வெகுளியும் போய்விட்டது. இனி, நீவிர் அஞ்ச வேண்டா என்று அம் மகளிரைத் தேற்றினான்.

சீவகன் அம் மகளிர்க்குக் கூறல்

“என்னுங்கட் குள்ள மிலங்கீர்வளைக் கையினீரே!

மன்னிங்கு வாழ்வு தருதும்அவற் றாலும் வாழ்மின்;

பொன்னிங்குக் கொண்டு புறம்போகியும் வாழ்மி” னென்றான்

வின்னுங்க வீங்கு விழுக்கந்தென நீண்ட தோளான். 603

அதுகேட்ட மகளிர் தம் பதிசென்று கைம்மை

வாழ்க்கை மேற்கொள்ளல்

தீத்தும்மு வேலான் திருவாய்மொழி வான்மு ழக்கம்

வாய்த்தங்குக் கேட்டு மடமஞ்ஞைக் குழாத்தி னேகிக்

காய்த்தெங்கு சூழ்ந்த கரும்பார்தம் பதிகள் புக்கார்

சேய்ச்செந் தவிசு நெருப்பென்றெழுஞ் சீறடியார். 604

காதார் குழையும் கடற்சங் கமும்குங் குமமும்

போதா ரலங்கற் பொறையும் பொறையென்று நீக்கித்

தாதார் குவளைத் தடங்கண்முத் துருட்டி விம்மா

மாதார் மயிலன்னவர் சண்பகச் சாம்ப லொத்தார். 605

இதற்குள் வீரர்கள் அரண்மனையை ஆராய்ந்து தூய்மை செய்து, சீவகற்குப் பள்ளியிடத்தை அணிசெய்து வைத்தனர். சீவகன் பள்ளி புகுவதன் முன் தன் மாமனை வணங்கிப் புண்பட்ட வீரரைப் போற்றுமாறு வேண்டிக்கொண்டான்.

சீவகன் பள்ளி கொள்ளல்

எண்கொண்ட ஞாட்பி னிரும்பேச்சிற்

படுத்த மார்பர்

புண்கொண்டு போற்றிப் புறஞ்செய்கெனப்

பொற்ப நோக்கிப்

பண்கொண்ட சொல்லார் தொழப்பாம்பணை

யண்ணல் போல

மண்கொண்ட வேலா னடிதைவர

வைகி னானே. 606

வீரர் அயாவுயிர்த்தல்

வாள்க ளாலே துகைப்புண்டு

வரைபுண் கூர்ந்த போல்வேழம்

நீள்கால் விசைய நேமித்தேர்

இமைத்தார் நிலத்திற் காண்கலாத்

தாள்வல் புரவி, பண்ணவிழ்த்த

யானை யாவித் தாங்கன்ன

கோள்வா யெஃக மிடம்படுத்த

கொழும்புண் மார்ப ரயாவுயிர்த்தார். 607

சீவகன் கண் துயிறல்

கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியுங்

கூந்தன் மகளிர் குழைசிதறி

அழுவா ரழுகைக் குரலொலியும்

அதிர்கண் முரசின் முழக்கொலியும்

குழுவாய்ச் சங்கின் குரலொலியுங்

கொலைவல் யானைச் செவிப்புடையும்

எழுவார் யாழு மேத்தொலியு

மிறைவன் கேளாத் துயிலேற்றான். 608

பொழுது விடிந்தது. சீவகன் தம்பியும் தோழரும், கோவிந்த ராசனும் நகரத்தவரும் வந்து கோயிலுள் நிறைந்தனர். சிறிது போதில், வெள்ளி மலையில் வாழும் கலுழவேகனொழிய விஞ்சையர் பலரும் வந்து ஈண்டினர்.

சீவகற்குத் திருமுடி சூட்டுதற்கு அமைச்சர் சூழநின்ற அனைவரும் தகுவன செய்தல்

எண்ண மென்னினி யெழில்முடி யணிவது துணிமின்

கண்ண னாரொடு கடிகையும் வருகென வரலும்

பண்ணி னார்முடி பழிச்சிய மணிபொனிற் குயிற்றி

அண்ண லாய்கதி ரலம்வரப் புலமகள் நகவே. 609

சுதஞ்சணன் வருதல்

விரியு மாலையன் விளங்கொளி முடியினன் துளங்கித்

திருவில் மால்வரைக் குலவிய தனையதோர் தேந்தார்

அருவி போல்வதோ ராரமு மார்பிடைத் துயல

எரியும் வார்குழை யிமைய னொருவன்வந் திழிந்தான். 610

பின்னர், அவனுடைய தேவியர் பலரும் வந்து சேர்ந்தனர். விஞ்சையர் ஆடவரும் பெண்டிருமாய் மிகப் பலர் வந்து நகரத்தை யடைந்தனர். நகர் முழுவதும் பேரணி திகழ்ந்தது.

சுதஞ்சணன் சீவகற்கு முடி சூட்டுதல்

வெருவி மாநகர் மாந்தர்கள் வியந்துசை விதிர்ப்பப்

பருதி போல்வன பாற்கட னூற்றெட்டுக் குடத்தாற்

பொருவில் பூமழை பொன்மழை யொடுசொரிந் தாட்டி

எரிபொ னீண்முடி கவித்தனன் பவித்திரற் றொழுதே. 611

சுதஞ்சணன் விடைபெற்றுப் போதல்

திருவ மாமணிக் காம்பொடு திரள்வடந் திளைக்கும்

உருவ வெண்மதி யிதுவென வெண்குடை யோங்கிப்

பரவை மாநில மளித்தது, களிக்கயல் மழைக்கண்

பொருவில் பூமகட் புணர்ந்தனன், இமையவ னெழுந்தான். 612

முடி சூடிக்கொண்ட சீவகவேந்தன் திருநிலமிதித்தல்

வேண்டித் திருவுலா வருதல்

மின்னுங் கடற்றிரையின் மாமணிக்கை

வெண்கவரி விரிந்து வீசப்

பொன்னங் குடைநிழற்றப் பொன்மயமாம்

உழைக்கலங்கள் பொலிந்து தோன்ற

மன்னர் முடியிறைஞ்சி மாமணியங்

கழலேந்தி அடியீ டேத்தச்

சின்ன மலர்க்கோதைத் தீஞ்சொலார்

போற்றிசைப்பத் திருமால் போந்தான். 613

சீவகன் அரியணைக்கண் அமர்ந்திருத்தல்

பைங்கண் உளையெருத்தின் பண்மணி

வாளெயிற்றுப் பவள நாவிற்

சிங்கா சனத்தின்மேல், சிங்கம்போல்

தேர்மன்னர் முடிகள் சூழ,

மங்குல் மணிநிற வண்ணன்போல்,

வார்குழைகள் திருவில் வீசச்

செங்கட் கமழ்பைந்தார்ச் செஞ்சுடர்போல்

தேர்மன்ன னிருந்தா னன்றே. 614

வேந்தன் திருவுள்ளத்தே குறித்துரைத்த வண்ணம்

நகர்க்கண் முரசறைவித்தல்

“ஒன்றுடைப் பதினை யாண்டக்

குறுகட னிறைவன் விட்டான்;

இன்றுளீ ருலகத் தென்று

முடனுளீ ராகி வாழ்மின்.

பொன்றுக பசியும் நோயும்

பொருந்தலில் பகையு" மென்ன

மன்றல மறுகு தோறு

மணிமுர சார்த்த தன்றே. 615

பூமகள் இலம்பகம்

முற்றும்

இலக்கணையார் இளம்பகம்

(இலக்கணையார் இலம்பகம் : அரசுகட்டிலேறி ஆட்சி புரியலுற்ற சீவகன், பதுமை முதலிய தன் மனைவியரை வருவித்து அவர்கட்குத் தலையளி செய்தான். கோவிந்தராசன் தன் மகள் இலக்கணையைச் சீவகற்கு மணம் செய்விக்கக் கருதி நல்லோரை தெளிந்து அதன்கண் திருமணம் செய்வித்தான். மணம் முடித்ததும் சீவகன் ஊருலாப் போந்து ஸ்ரீ கோயிலையடைந்து, அருகனை வணங்கி, அக் கடவுட்கு நூறு ஊர்களை இறையிலியாகத் தந்து தன் மாளிகையடைந்து தன்னை வளர்த்த கந்துக்கடன், தாயான சுநந்தை முதலியோர்க்கு அரசுரிமை வழங்கிச் சிறப்பித்தான். நந்தட்டனை இளவரசனாக்கி, இவ்வண்ணமே ஏனைத் தோழன் மார்க்கும் தம்பியர்க்கும் அவரவர்க்கேற்ற வரிசையும் சிறப்பும் நன்கு வழங்கினன். தன்னை அளித்து உதவிய சுதஞ்சணனுக்குக் கோயிலெடுத்து, அவன் வரலாற்றை நாடகமாக எழுதி இன்புற்றான். அவன் இளமைப் போதில் விளையாடற்கு நிழல் பயந்த ஆலமரத்திற்கும் மேடையும் ஏனைய சிறப்பும் செய்தான் எனின், வேறு கூறுவது மிகையாம்.

அரசு கட்டிலேறி இனிதிருந்த சீவகன் தன் தம்பியரையும் தோழரையும் நோக்கி, நீவிர் விரைந்து சென்று என் ஏனை மனைவியரைக் கொண்டு வருக என பணித்தனன். அவரும் அவ்வண்ணமே சென்று அவர்களைக் கொணர்ந்தனர்.

மனைவிமார் வந்து அவன் அடிவீழ்ந்து வணங்குதல்

அன்று சூடிய மாலைய ராடிய சாந்தர்

பொன்றிய வாடிய மேனியர், பொன்நிறை சுருங்கார்,

சென்று காதலன் திருவிரி மரைமல ரடிமேல்

ஒன்றி வீழ்ந்தனர் குவளைக்கண் உவகைமுத் துகவே. 616

சீவகன் அவர்களது பிரிவுத்துயர் நீக்கி

இன்புறக் கூடியிருத்தல்

நஞ்ச மேய்ந்திளங் களிக்கயன் மதர்ப்பன போல

அஞ்சி வாட்கண்கள் மதர்த்தன அலர்ந்துடன் பிறழப்

பஞ்சு சூழ்மணி மேகலை பரிந்தவை சொரிய

வஞ்சி நுண்ணிடை கவின்பெற வைகினன் மாதோ. 617

இவ்வாறு சின்னாட்கள் கழிந்ததும், சீவகற்கும் இலக்கணைக்கும் திருமணம் நிகழ்த்தல் வேண்டி, பெருங்கணி போந்து, இற்றை ஏழாம்நாள் மணவினை யாற்றுதல் வேண்டு மெனக் கணித்துரைத் தான். உடனே, இச்செய்தி நகரமாக்கட்கு முரசு முழக்கித் தெரிவிக்கப் பெற்றது. ஏனை நாட்டவர்க்கும் மணவோலை செல்வதாயிற்று. நகரமெங்கும் பெருவிழா பொலிவுற்றது.

ஆறுநாள் கழிதல்

முரச மார்ந்தபின் மூவிரு நாள்கள்போய்

விரைவொ டெங்கணும் வெள்வளை விம்மின;

புரையில் பொன்மணி யாழ்குழல் தண்ணுமை

அரவ வானி னதிர்ந்த அணிமுழா. 618

விழாவணி விளங்கும் நகரச் சிறப்பு

சுந்த ரத்துகள் பூந்துகள் பொற்றுகள்

அந்த ரத்தெழு மின்புகை யாலரோ

இந்தி ரன்னகர் சாறயர்ந் திவ்வுழி

வந்தி ருந்தது போன்மலி வுற்றதே. 619

மணவணி திகழும் கோயிற் சிறப்பு

கொடியெழுந் தலமருங் கோயில் வாயில்கள்

மடலெழுந் தலமருங் கமுகும் வாழையும்

மடியிருந் துகிலுடை மார்க்க ணாடியும்

புடைதிரள் பூரண குடமும் பூத்தவே. 620

கடிமலர் மங்கையர் காய்பொற் கிண்கிணி

உடைமணி பொற்சிலம் பொலிக்குங் கோயிலுள்

குடைநிழன் மன்னர்தங் கோதைத் தாதுவேய்ந்து

அடிநிலம் பெறாததோர் செல்வ மார்ந்ததே. 621

மணவினை தொடங்குதல்

மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான்

மங்கல மன்னவன் வாழ்த்த வேறலும்

மங்கல வச்சுதம் தெளித்து வாய்மொழி

மங்கலக் கருவிமுன் னுறுத்தி வாழ்த்தினார். 622

இலக்கணையாருக்கு மயிர்வினைத் திருமணம் செய்தல்

பாற்கடன் முளைத்ததோர் பவளப் பூங்கொடி

போற்சுடர்ந் திலங்கொளிப் பொன்செய் கோதையை

நாட்கடி மயிர்வினை நன்பொற் றாமரைப்

பூக்கடி கோயிலாள் புலம்ப வாக்கினார். 623

சீவகனை நெய் முழுக்காட்டுதல்

இழைத்தபொன் னகரின் வெள்ளி

யிடுமணை மன்ன ரேத்தக்

குழைப்பொலிந் திலங்கு காதிற்

கொற்றவ னிருந்த பின்றை

மழைக்கவின் றெழுந்த வார்கொண்

மணிநிற வறுகை நெய்தோய்த்

தெழிற்குழை திருவில் வீச

மகளிர்நெய் யேற்று கின்றார். 624

நெய்யேற்றிய மகளிர் வாழ்த்துதல்

“மின்னுமிழ் வைரக் கோட்டு

விளங்கொளி இமய மென்னும்

பொன்னெடுங் குன்றம் போலப்

பூமிமேல் நிலவி வையம்

நின்னடி நிழலின் வைக

நேமியஞ் செல்வ னாகி

மன்னுவாய் திருவோ" டென்று

வாழ்த்திநெய் யேற்றி னாரே. 625

இவ்வாறு சீவகனைத் திருமுழுக்காட்டியபின்,

மங்கல மணவணி யணிந்து சிறப்பித்தல்

அறுகு வெண்மல ரளாய வாசநீர்

இறைவன் சேவடி கழுவி யேந்தி

மறுவின் மங்கலங் காட்டி னார்மணக்

குறைவில் கைவினைக் கோல மார்ந்ததே. 626

இவ்வண்ணமே மகளிர் யானைமேற் கொணர்ந்த தூநீரும் நறுநெய்யும் கொண்டு இலக்கணையை நெய் முழுக்காட்டினர். மங்கலவணி கொணர்ந்து அழகு திகழ அணிந்து ஒப்பனை செய்தார்.

இலக்கணை வேள்விச் சாலைக்கு வரக்கண்ட வேந்தர்

தம்முட் கூறிக் கொள்ளல்

அரத்தக மருளிச் செய்த

சீறடி யளிய தம்மாற்

குரற்சிலம் பொலிப்பச் சென்னிக்

குஞ்சிமேன் மிதிப்ப நோற்றான்

திருக்குலாய்க் கிடந்த மார்பிற்

சீவகன், நாங்க ளெல்லாம்

தரித்திலந் தவத்தை யென்று

தார்மன்ன ரேமுற் றாரே. 627

இலக்கணை வேள்விச் சாலை யடைதல்

கோவிந்த னென்னும் செம்பொற்

குன்றின்மேற் பிறந்து, கூர்வேற்

சீவக னென்னுஞ் செந்நீர்ப்

பவளமா கடலுட் பாய்வான்

பூவுந்தி யழுத யாறு

பூங்கொடி நுடங்கப் போந்து

தாவிரி வேள்விச் சாலை

மடுவினுள் தாழ்ந்த தன்றே. 628

வேள்விக்கண் தீயோம்புதல்

தண்டிலத் தகத்திற் சாண்மே

லெண்விரற் சமிதை நானான்கு

எண்டிசை யவரு மேத்தத்

துடுப்புநெய் சொரித லோடும்

கொண்டழற் கடவுள் பொங்கி

வலஞ்சுழன் றெழுந்த தென்ப

தெண்டிரை வேலி யெங்குந்

திருவிளை யாட மாதோ. 629

தீயோம்பியபின் நீரேற்றலும் முறையாதலால்

சீவகன் நீரேற்றல்

கரையுடைத் துகிலிற் றோன்றுங் காஞ்சன வட்டின் முந்நீர்த்

திரையிடை வியாழந் தோன்றத் திண்பிணி முழவுஞ் சங்கும்

முரசொடு முழங்கி யார்ப்ப மொய்கொள்வேன் மன்ன ரார்ப்ப

அரசரு ளரச னாய்பொற் கலசநீ ரங்கை யேற்றான். 630

இலக்கணையின் கைப்பற்றிச் சீவகன்

தீ வலம்வந்து கட்டிலேறல்

குளிர்மதி கண்ட நாகங் கோள்விடுக் கின்ற தேபோல்

தளிர்புரை கோதை மாதர் தாமரை முகத்தைச் சேர்ந்த

ஒளிர்விளைக் கையைச் செல்வன் விடுத்தவ ளிடக்கை பற்றி

வளரெரி வலங்கொண் டாய்பொற் கட்டில்தா னேறினானே. 631

அருந்ததி காட்டி மணவறைபுக்கு மணவமளி

ஏறியிருத்தல்

விளங்கொளி விசும்பிற் பூத்த அருந்ததி காட்டி யான்பால்

வளங்கொளப் பூத்த கோல மலரடி கழீஇய பின்றை

இளங்கதிர்க் கலத்தினேந்த அயினிகண் டமர்ந்தி ருந்தான்

துளங்கெயிற் றுழுவை தொல்சீர்த் தோகையோ டிருந்த தொத்தான் 632

நாலாம் நாள் சீவகனுக்கு மயிர்வினைத் திருமணம் செய்தல், சீவகன் இலக்கணையோடு இருத்தல்

பானுரையி னொய்யவணைப் பைங்கதிர்கள் சிந்தித்

தானிரவி திங்களொடு சார்ந்திருந்த தேபோல்

வேனிரைசெய் கண்ணியொடு மெல்லென விருந்தான்

வானுயர வோங்குகுடை மன்னர்பெரு மானே. 633

அழகு திகழும் மணக் கூடத்தே சீவகன் இலக்கணை யோடிருப்ப, மங்கல மகளிரும் மங்கலம் கொண்டு தென்மேற்கிலும் தென்கிழக்கிலும் நின்றனர்.

நாவிதனது பழம் பிறப்பு

குளநென் முன்றிற் கனிதேன்சொரி சோலைக் குளிர்மணி

வளமை மல்கி யெரியம்மட மந்திகை காய்த்துவான்

இளமை யாடி யிருக்கும்வனத் தீர்ஞ்சடை மாமுனி

கிளையை நீங்கிக் கிளர்சாபத்தின் நாவித னாயினன். 634

அவனது சிறப்பு

ஆய்ந்த கேள்வி யவன்கான் முளையாய்த் தோன்றினான்

தோய்ந்த கேள்வித் துறைபோயலங் காரமும் தோற்றினான்

வேந்தன் றன்னாற் களிற்றூர்தி சிறப்பொடு மேயினான்

வாய்ந்த கோல முடையான் மஞ்சிதர்க் கேறனான். 635

அந்த நாவிதன் முதற்கண், ஒரு நங்கை நீர்வார்க்க, அதனால் தன் வாய்பூசி அரசனை வணங்கினான். பின்பும் அறுகும் அரிசியும் கொண்டு அரசன் திருவடியிலும் திருமுடியிலும் தெளித்து வாழ்த்தி, இலக்கணை முடியிலும் தெளித்தான்.

மயிரொதுக்குதல்

வாக்கினிற் செய்த பொன்வாண் மங்கல விதியி னேந்தி

ஆக்கிய மூர்த்தத் தண்ணல் வலக்கவு ளுறுத்தி யார்ந்த

தேக்கணின் னகிலி னாவி தேக்கிடுங் குழலி னாளை

நோக்கல னுனித்து நொய்தா இடக்கவு ளுறுத்தி னானே. 636

சீவகற்கு மயிரொதுக்கு மணம் முடித்தல்

ஆய்ந்தபொன் வாளை நீக்கி

யவிர்மதிப் பாகக் கன்மேற்

காய்ந்தவாள் கலப்பத் தேய்த்துப்

பூநிறீஇக் காமர் பொன்ஞாண்

தோய்ந்ததன் குறங்கில் வைத்துத்

துகிலினிற் றுடைத்துத் தூய்தா

வாய்ந்தகைப் புரட்டி மாதோ

மருடகப் பற்றி னானே. 637

சீவகன் முக விளக்கம்

ஏற்றி யுமிழித் துமிடை யொற்றியும்

போற்றிச் சந்தனம் பூசுகின் றானெனக்

கூற்ற னான்முகக் கோலஞ்செய் தான்கடற்

றோற்றுஞ் செஞ்சுடர் போலச் சுடர்ந்ததே. 638

இலக்கணை புருவமொதுக்கப் படுதல்

உருவச் செங்கய லொண்ணிறப் புள்வெரீஇ

இரிய லுற்றன போன்றிணைக் கண்மலர்

வெருவி யோட விசும்பிற் குலாவிய

திருவிற் போற்புரு வங்கள் திருத்தினான். 639

நாவிதன் போதல்

ஆர மின்னவ ருங்குயந் தான்களைந்து

ஒரு மொண்டிறற் கத்திரி கைத்தொழில்

நீரிற் செய்தடி யேத்துபு நீங்கினான்

தாரன் மாலைத் தயங்கிணர்க் கண்ணியான். 640

சீவகன் இலக்கணையோடு கூடி இனிது உறைகையில் ஊட லொன்று நிகழ்கின்றது.

இலக்கணை வெகுளுதல்

மாதர்தன் வனப்பு நோக்கி

மகிழ்ந்துகண் ணிமைத் தல் செல்லான்

காதலித் திருப்பக் கண்கள்

கரிந்துநீர் வரக்கண் “டம்ம

பேதைமை பிறரை யுள்ளி

யழுபவர்ச் சேர்த" லென்றாள்

வேதனை பெருகி வேற்கண்

தீயுமிழ்ந் திட்ட வன்றே. 641

அதுகண்டு ஆற்றாது வணங்கிக் கிடந்த சீவகனைக் கண்ட அவளது கண்களில் நீர் உகுதல்

“இற்றதென் னாவி” யென்னா எரிமணி யிமைக்கும் பஞ்சிற்

சிற்றடிப் போது புல்லித் திருமகன் கிடப்பச் சேந்து

பொற்றதா மரையிற் போந்து கருமுத்தம் பொழிய வேபோல்

உற்றுமை கலந்து கண்கள் வெம்பனி யுகுத்த வன்றே. 642

சீவகன் வண்டுகளை இரந்து நிற்றல்

“கொண்டபூ ணின்னைச் சார்ந்து

குலாய்க்கொழுந் தீன்ற கொம்பே

கண்டுகண் கரிந்து நீராய்

உகுவது காக்க லாமே?

பண்டுயான் செய்த பாவப்

பயத்தையார்க் குரைப்பன், தேன்காள்

வண்டுகாள்! வருடி நங்கை

வரந்தர மொழிமின் என்றான். 643

பூவையும் கிளியும் தம்முட் கூறிக்கொள்ளல்

பூவையும் கிளியுங் கேட்டுப் புழைமுகம் வைத்து நோக்கிக்

“காவலன் மடந்தை யுள்ளம் கற்கொலோ இரும்பு கொல்லோ?

சாவம்யாம் உருகி யொன்றும் தவறிலன்; அருளு நங்கை,

பாவையென் றிரத்து” மென்ற பறவைகள் தம்முள் தாமே. 644

பூவை கிளியை வாயடக்குதல்

பெற்றகூ ழுண்டு நாளும் பிணியுழந் திருத்தும், பேதாய்

முற்றிமை சொல்லி னங்கை மூன்றுநா ளடிசில் காட்டாள்

பொற்றொடி தத்தை யீரேபொத்துநும் வாயை யென்றே

கற்பித்தார் பூவையார்தம் காரணக் கிளவி தம்மால். 645

அடங்காது கிளி கூறக் கேட்டுச் சீவகன்

அவள் நலம் பாராட்டல்

“ஈன்றதா யானுமாக இதனைக் கண் டுயிரை வாழேன்,

நான்றியான் சாவ”லென்றே நலக்கிளி நூலின் யாப்ப

மான்றவள் மருண்டு நக்காள் வாழிய வரம்பெற்றேனென்று

ஆன்றவ னாரப்புல்லி யணிநலம் பரவினானே. 646

இலக்கணை கூட்டத்துக் கிசைதல்

பாண்குலாய்ப் படுக்கல் வேண்டா, பைங்கிளி பூவையென்று

மாண்பிலா தாரை வைத்தா ரென்னுறார் என்று நக்கு

நாண்குலாய்க் கிடந்த நங்கை நகைமுக வமுத மீந்தாள்,

பூண்குலாய்க் கிடந்த மார்பிற் பொன்னெடுங் குன்றனாற்கே. 647

இவ்வாறு இலக்கணையுடன் இன்புற்றிருந்த சீவகன், சூளா மணியென்னும் பட்டத்து யானையின் மீதேறி நகர வீதிக்கண் திருவுலாச் செய்யலுற்றான். சிற்றரசர் பலர் அவனைப் பின் தொடர்ந்தனர். நால்வகைப் படைகளும் சூழவந்தன. பல்வகை இயங்கள் முழங்கின. தெருக்களிலே மகளிர் கூட்டம் மிகுந்திருந்தது. அவர்களுள் வேட்கை பிறவாதாரும், பிறக்கின்றவரும், பிறந்தவரும் என மூவகைச் செவ்வியையுடையார் இருந்தனர். இவர் பரத்தைய ரினத்தைச் சேர்ந்தவராவர்.

சீவகனைக் கண்ட மகளிருள் வேட்கை பிறவாத பேதை மகளிரின் நிலைமை கூறல்

வெள்ளைமை கலந்த நோக்கிற் கிண்கிணி மிழற்றி யார்ப்பப்

பிள்ளைமை காதல் கூரப் பிறழ்ந்துபொற் றோடுவீழத்

துள்ளுபு செலீஇய தோற்றந் தொடுகழற் காமன் காமத்து

உள்ளுயி ரறியப் பெண்ணாய்ப் பிறந்ததோர் தோற்ற மொத்தார். 648

வேட்கை பிறக்கின்ற மகளிர் நிலைமை

அணிநிலா வீசு மாலை யரங்குபுல் லென்னப் போகித்

துணிநில, வீசு மாலைப் பிறைநுதல் தோழி சேர்ந்து

மணிநிலா வீசு மாலை மங்கையர் மயங்கி நின்றார்

பணிநிலா வீசும் பைம்பொற் கொடிமணி மலர்ந்த தொத்தார். 649

வேட்கை பிறந்த மகளிர் நிலைமை

குறையணி கொண்ட வாறே

கோதைகால் தொடர வோடிச்

சிறையழி செம்பொ னுந்தித்

தேன்பொழிந் தொழுக வேந்திப்

பறையிசை வண்டு பாடப்

பாகமே மறைய நின்றார்

பிறையணி கொண்ட வண்ணல்

பெண்ணொர்பால் கொண்ட தொத்தார். 650

கற்புடை மகளிர் பூமழை தூவி வாழ்த்துதல்

பெண்பெற்ற பொலிசை பெற்றார்

பிணையனார் பெரிய யாமும்

கண்பெற்ற பொலிசை பெற்றா

மின்றெனக் கரைந்து முந்நீர்

மண்பெற்ற வாயுள் பெற்று

மன்னுவாய் மன்ன என்னாப்

புண்பெற்ற வேலி னான்மேல்

பூமழை தூவி னாரே. 651

இவ்வாறு நகரத்து மகளிரும் ஆடவரும் நெருங்கித் தெருவில் உலாவரும் சீவகனைப் பாராட்டியும் வாழ்த்தியும் மகிழ்ச்சி மீக்கூர்ந்தனர்.

சீவகன் பெற்றோரை வியத்தல்

கொழித்திரை யோத வேலிக்குமரனைப் பயந்த நங்கை

விழுத்தவ முலக மெல்லாம் விளக்கிநின் றிட்டதென்பார்;

பிழிப்பொலி கோதை போலாம் பெண்டிரிற் பெயரியள் நோற்றாள்

சுழித்துநின்ற றாதகற்பின் சுநந்தையே யாக என்பார். 652

அவன் மெய் யழகை வியத்தல்

இடம்பட அகன்று நீண்ட

இருமலர்த் தடங்க ணென்னும்

குடங்கையி னொண்டு கொண்டு

பருகுவார் “குவளைக் கொம்பின்

உடம்பெலாங் கண்க ளாயி

னொருவர்க்கு மின்றி யேற்ப

அடங்கவாய் வைத்திட் டாரப்

பருகியிட் டீமி" னென்பார். 653

சீவகனது தவம் நினைந்து வியத்தல்

இந்நகரப் புறங்காட்டி லிவன்பிறந்த வாறும்

தன்னிகரில் வாணிகனில் தான்வளர்ந்த வாறும்

கைந்நிகரில் வேந்தர்தொழப் போந்ததுவும் கண்டால்

என்னைதவம் செய்யா திகழ்ந்திருப்ப தென்பார். 654

மேலைத் தவமுடையார்க்கே செல்வமாம் என்றல்

பெருமுழங்கு திரைவரைக ணீந்திப்பிணி யுறினும்

திருமயங்க லில்லையெனின் இல்லைபொரு ளீட்டம்

ஒருமுழமுஞ் சேறலில ரேனும்பொரு ளூர்க்கே

வரும்வழிவி னாயுழந்து வாழ்கதவ மாதோ. 655

இவ்வண்ணம் நகரத்தின் மாடவீதியில் உலாப்போந்தவன் அருகன் கோயிலுக்குச் செல்லாவெழுந்தான். படைகளும் உடன் வந்த வனவன்றோ. அவற்றைச் சோலையிலே நிறுத்திவிட்டுத் தான் மட்டும் கோயிற்குச் சென்றான்.

சீவகன் அருகனைத் தொழுதல்

திறந்த மணிக்கதவம், திசைக்

ளெல்லாம் மணம்தேக்கி

மறைந்த அகிற்புகையான் மன்னர்

மன்னன் வலஞ்செய்து

“பிறந்தேன் இனிப்பிறவேன்

பிறவா தாயைப் பெற்றேன்" என்று

இறைஞ்சி முடிதுளக்கி யேத்திக்

கையால் தொழுதானே. 656

சீவகன் பாட்டு

மறுவற வுணர்ந்தனை, மலமறு திகிரியை,

பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வனை

பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வநின்

நிறைவிரி மரைமலர் நகுமடி தொழுதும். 657

பின்பு அவன் அருகனுக்கு விளக்குப் புறமாக நூறூரையும், பூசனைக்கு நான்குகோடி பொன்னும் கொடுத்துச் சேவித்தற் சிறப்பாக நூறுகளிறும் நூறு தேரும் சேர்த்தினான்.

சீவகன் அரண்மனையடைந்து திருவோலக்க மிருத்தல்

உலமரு நெஞ்சி னொட்டா மன்னவ ரூர்ந்த யானை

வலமருப் பீர்ந்து செய்த மணிகிளர் கட்டி லேறி

நிலமகள் கணவன் வேந்தர் குழாத்திடை நிவந்தி ருந்தான்

புலமகள் புகழப் பொய்தீர் பூமகட் புணர்ந்து மாதோ. 658

இங்ஙனம் திருவோலக்க மிருந்த சீவகன் தன்னைப் புறந்தந்து ஓம்பிய கந்துக்கடனுக்கு அரசுரிமை தந்து நாடும் தந்து சிறப்பித் தான். அவன் மனைவியும் தன்னை வளர்த்தாளுமாகிய சுநந்தைக்கு அரசமாதேவி யென்னும் பட்டமும் தந்தான். நந்தட்டனை இளவர சனாக்கினன். ஏனைத் தம்பியரான நபுல விபுலர்க்குக் குறுநில மன்னர் மகளிரை மணம் செய்வித்து, இனிதுறைக என நாடு பல நல்கினான். தன்னோடு உடனுழைத்த தோழர்கட்கும் பழைய அரசையும் ஏனாதி முதலிய பட்டமும் தந்து சீர் செய்தான். ஏனையோர்க்கு நிதியும் நாடும் பிறவும் நிரம்பக் கொடுத்தான். இம்முறையே தன் மைத்துனன்மார்க்கும் தக்காங்குப் பெருஞ்சிறப்புச் செய்த சீவகன் தன் மாமன் கோவிந்தனுக்குக் கட்டியங்காரனுடைய செல்வ முழுதும் தந்தான்.

சீவகன் சுதஞ்சணற்குச் சிறப்புச் செய்தல்

பேரிடர் தன்க ணீக்கிப் பெரும்புணை யாய தோழற்கு

ஓரிடஞ் செய்து பொன்னா லவனுரு வியற்றி யூரும்

பாரிடம் பரவநாட்டி யவனது சரிதை யெல்லாம்

தாருடைய மார்பன் கூத்துத் தான்செய்து நடாயினானே. 659

சீவகன் தான் சிறுபோதில் இருந்து விளையாடிய ஆலமரத்திற்குச் சிறப்புச் செய்தல்

ஊன்விளை யாடும் வைவே

லுறுவலி சிந்தித் தேற்பத்

தான்விளை யாடிமேனா

ளிருந்தததோர் தகைநல் லாலைத்

தேன்விளை யாடு மாலை

யணிந்துபொற் பீடஞ் சேர்த்தி

ஆன்விளை யாடு மைந்தூ

ரதன்புற மாக்கி னானே. 660

பின்பு தன் மனைவியர் எண்மர்க்கும் அரசமாதேவியர் எனும் பட்டமளித்து நாட்டை இனிதே சீவகன் ஆண்டு வருவானாயினன்.

நாடு நலமெய்திய சிறப்பு

ஆனை மும்மத மாடிய காடெலாம்

மானை நோக்கியர் வாய்மது வாடின,

வேனல் மல்கிவெண் டேர்சென்ற வெந்நிலம்

பானல் மல்கிவெண் பாலன்னம் பாய்ந்தவே. 661

ஆட்சி நலம்

வலையவர் முன்றிற் பொங்கி

வாளென வாளை பாயச்

சிலையவர் குரம்பை யங்கண்

மானினஞ் சென்று சேப்ப

நிலைதிரிந் தூழி நீங்கி

யுத்தர குருவு மாகிக்

கொலைகடிந் திவற லின்றிக்

கோத்தொழில் நடத்து மன்றே. 662

(பதுமையார் இலம்பகத்தில், சீவகன் தேசிகப்பாவை யென்பாள் கூத்தாடியபோது ஆடரங்கிற்குச் செல்ல, அவள் அவனைக் கண்டு வேட்கைமிக்குக் கருத்திழந்தான் எனக் கண்டோமன்றோ, அவள் சீவகன் தன்னை மறந்தானெனக் கருதி ஈண்டுத் தானே வந்தாள். வந்தவள், கட்டியங்காரனால் வலிதில் கலந்துய்க்கப் பெற்றும், சீவகன்பால் வேட்கை குன்றாது அவனையே நினைந்து சாம்பியிருந்த அநங்கமாலையென்பாளைக் கண்டு அவட்குத் தோழியாகியிருந் தாள். அவள், சீவகனைக் காண வரும் செய்தி, இனிக் கூறப்படுகிறது.)

தேசிகப்பாவை சீவகனைக் காணக் கோயில் வாயிலில் வந்து நின்று காவலர் வழியாக அவனுக்குத் தெரிவிக்க, அவனும் அவளை உடனே வரவிடுக என்றான்.

தேசிகப்பாவை அநங்கமாலை தந்த

ஓலையைக் கொடுத்தல்

அருவிலைய நன்கலஞ்செய் போர்வை

அன்னநாண அடியொதுங்கிச்சென்று

உருவ மொவ்வா நொசியு நுசுப்

பொல்கிக் கோமா னடிதொழுதபின்

மருவின் சாயல் மணிமெல்விரல்

கூப்பி யோலை மரபினீட்ட

இரவி யென்ன விளங்குமொளி

யிறைவன் கொண்டாங் கதுநோக்குமே. 663

அவ்வோலையில், அநங்கமாலை, தன்னைக் கட்டியங்காரன் வலிதிற் கொண்டு சென்று வைத்திருப்பவும் தான் சீவகனையே நினைந்து புலம்பி வாய்வெருவக் கண்டு அவன் விடுத்தவாறும், தான் சீவகன் திருவுரு வெய்தி வழிபட்டு வந்தவாறும், தான் இப்போது கண் துயிலின்றிக் கலுழ்தலும், வளையிழத்தலும், மேனி பசத்ததலு மெய்தி வருந்துமாறும், ஓலை கொணரும் தன் தோழி வாமலேகை (இது தேசிகப்பாவை தானே வைத்துக்கொண்ட பெயர்) வருந்தாமல் இனிது கூறி விடுமாறும் எழுதியிருந்தாள். ஓலையுடன் அது கொணர்ந்த தோழியையும் உணர்ந்துகொண்ட சீவகன் உவகை மிகுந்து தேசிகப் பாவையைத் தன் தோளாற்புல்லிச் சிறப்புச் செய்தான்.

**தேசிகப் பாவைக்குச் சீவகன் கூறல்

“அருளுமா றென்னை, யநங்கமாலை

யடித்தி தோழி யன்றோ“என,

”தெருளலான் செல்வக் களிமயக்கினால்,

திசைக்குமென்னறி வளக்கிய கருதி

மருளிற் சொன்னாய், மறப்பேனோ

யானின்னை" யென்ன மகிழைங்கணை

உருளு முத்தார் முகிழ்முலையினா

ளுள்ளத் துவகை தோற்றினாளே. 664

சீவகற்கு இன்பந்தந்த தேசிகப்பாவை

நாடகத்தாலும் இன்பம் தருதல்

நரம்புமீ திறத்தல் செல்லா

நல்லிசை முழவும் யாழும்

இரங்குதீங் குழலு மேங்கக்

கிண்கிணி சிலம்பொ டார்ப்பப்

பரந்தவா ணெடுங்கட் செவ்வாய்த்

தேசிகப் பாவை கோல

அரங்கின்மே லாடல் காட்டி

யரசனை மகிழ்வித் தாளே. 665

சீவகன் இன்ப வாழ்வு சிறத்தல்

இளமையங் கழனிச் சாய

லேருழு தெரிபொன் வேலி

வளைமுயங் குருவ மென்றோள்

வரம்புபோய் வனப்பு வித்திக்

கிளைநரம் பிசையுங் கூத்துங்

கேழ்த்தெழுந் தீன்ற காம

வினைபய னினிதிற் றுய்த்து

வீணைவேந் துறையு மாதோ. 666

இலக்கணையார் இலம்பகம்

முற்றும்

முத்தியிலம்பகம்

(முத்தியிலம்பகம் : சீவகனது ஆட்சிக்காலத்தில், அவன் தாயான விசயை தண்டாரணியத்துத் தவப்பள்ளியிலிருந்து துணை செய்து போந்த தாபத மகளிர்க்குத் தான் அருகன் கோயிலொன்று எடுப்பித்து நல்ல பூசனை செய்து, அதன் பயனை நல்கினள். சுடுகாட்டில் தனக்குத் தோழியாய் வந்து துணைபுரிந்த தெய்வத் துக்கும் ஒரு கோயில் சமைப்பித்தாள். சுடுகாட்டை அறக்கோட்ட மாக்கி நாடோறும் ஐந்நூற்றைந்து பிள்ளைகட்குப் பாலும் சோறும் அளிக்குமாறு செய்தாள். தான் உறையுமிடத்தே மயிற்பொறியின் வடிவமெழுதி மனம் மகிழ்ந்தாள். முடிவில் அவள் துறவு பூணற் கெண்ணி, சீவகன்பால் விடைபெற்றுப் பம்மை யென்னும் அடிகளை யடைந்து, துறவறம் மேற்கொண்டாள். சின்னாள் கழிந்ததும், சீவகன் தன் மனைவியருடன் துறவியாகிய விசயையைக் கண்டு பணிந்து தன் நகரம் போந்து, சோலை நுகர்வு, நீர் விளையாட்டு முதலிய பல இன்பத் துறைகளில் எளியனாய் இனிதிருந்து வந்தான். அவன் மனைவியரும் முறையே சச்சந்தன், சுதஞ்சணன், தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிந்தன் என்ற மக்களைப் பெற்று மகிழ்ச்சி மிகுந்தனர்.)

மேலே கூறியவாறு சீவகன் இனிதே நாடாட்சி செய்துவரும் நாளில் விசயை அவனை, அருகனுக்கு மிகச் சீரியதொரு கோயிலை எடுக்குமாறு பணிக்க, அவனும் அத்தகைய கோயிலொன்றை எடுப்பித்தான்.

அருகன் கோயிற் சிறப்பு

விண்பாற் சுடர்விலக்கி மேகம் போழ்ந்து விசும்பேந்தி

மண்பாற் றிலகமாய் வான்பூத் தாங்கு மணிமல்கிப்

பண்பால் வரிவண்டுந் தேனும் பாடும் பொழிற்பிண்டி

எண்பால் இகந்துயர்ந்தாற் கிசைந்த கோயி லியன்றதே. 667

கோயிலெடுத்த நல்வினைப்பயனை விசயை தனக்குத் துணைசெய்து உதவிய தவமகளிர்க்கு நல்கல்

அல்லி யரும்பதமும் அடகுங் காயுங் குளநெல்லும்

நல்ல கொழும்பழனுங் கிழங்குந் தந்து நவைதீர்த்தார்க்கு

இல்லையே கைம்மாறென் றின்ப மெல்லா மவர்க்கீந்தாள்

வில்லோன் பெருமாட்டி விளங்கு வேற்கண் விசயையே. 668

சுடலையில் தனக்குத் துணைசெய்த தெய்வத்துக்கும் தன்னைச் சுமந்து செய்த மயிற்கும் சிறப்புச் செய்தல்

தனியே துயருழந்து தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டுள்

இனியா ளிடம்நீக்கி யேமஞ் சேர்த்தி யுயக்கொண்ட

கனியார் மொழியாட்கு மயிற்குங் காமர் பதிநல்கி

முனியாது தான்காண மொய்கொண் மாடத் தெழுதுவித்தாள். 669

சுடுகாட்டை ஆன்பால் அளிக்கும் அறச்சாலை யாக்குதல்

அண்ணல் பிறந்தாங் கைஞ்ஞூற் றைவர்க் களந்தான்பால்

வண்ணச் சுவையமுதம் வைகநாளுங் கோவிந்தன்

வெண்ணெய் உருக்கிநெய் வெள்ள மாகச் சொரிந்தூட்டப்

பண்ணிப் பரிவகன்றாள் பைந்தார் வேந்தற் பயந்தாளே. 670

பின்பு தன்பால் வந்து அடிபணிந்த சுநந்தையை நோக்கி, “சீவகனைப் பயந்த செல்வியே, வருக” என இனியன கூறிச் சிறப்பித்த விசயை, காந்தருவத்தை முதலிய எண்மரும் வந்து பணிந்து நிற்க, அவர்களையும் புல்லியருகிருத்தி, “உலகாளும் சிறுவரைப் பயந்து தெளிவீர்களாக,” என்று சிறப்பித்து, முடிவில் சீவகனைத் தன்பால் வருமாறு பணித்தாள்.

சீவகன் வந்து பணிந்து இருத்தல்

சிங்க நடப்பதுபோற் சேர்ந்து பூத்தூய்ப் பயிர்வாழ்த்தத்

தங்கா விருப்பிற்றம் பெருமான் பாத முடிதீட்டி

எங்கோ பணியென்னா அஞ்சா நடுங்கா இருவிற்கண்

பொங்க விடுதவிசி லிருந்தான் போரே றனையானே. 671

விசயை சீவகனுக்குச் சச்சந்தன் மாண்ட செய்தியைத் தானே தன் வாயாற் கூறலுற்று, அவன் பெண்ணின்பமே பெரிதெனக் கருதி அமைச்சர் சொல்லைக் கேளாதொழிந்ததும், கட்டியங்காரனால் கொடுமை செய்யப் பெற்றதும், மயிற்பொறியில் தன்னை விண்ணிற் போக்கியதும் பிறவும் கூறி முடித்தாள். சீவகன் அது கேட்டு மயங்கி உணர்வற்றுக் கீழே வீழ்ந்தான். அருகிருந்தவர் பின்பு தெளிவிக்கத் தெளிய, அவனுக்கு விசயை செல்வம், இளமை, யாக்கை முதலிய வற்றின் நிலையாமையை எடுத்து மொழிந்தாள்.

இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த சுநந்தையும் உள்ளத்தே துறவுணர்வு போதர, இவையனைத்தும் தனக்குக் கூறிய உறுதியாகத் தேர்ந்து துறவுபூணத் துணிந்தாள். இதனைச் சீவகற்கும் அவள் சொல்லிவிட்டாள். சீவகன் உற்ற துயர்க்கு அளவில்லை.

இருவரும் பம்மை யென்னும் துறவி இருந்த

சூழலுக்குச் செல்லுதல்

ஓருயி ரொழிந்திரண் டுடம்பு போவபோல்

ஆரிய னொழியவங் கௌவை மார்கடாஞ்

சீரிய துறவொடு சிவிகை யேறினார்

மாரியின் மடந்தைமார் கண்கள் வார்ந்தவே. 672

விசயை சுநந்தையுடன் பம்மையைப் பணிதல்

அருந்தவக் கொடிக்குழாஞ் சூழ வல்லிபோல்

இருந்தறம் பகர்வுழி யிழிந்து கைதொழுது

ஒருங்கெமை யுயக்கொண்மின் அடிகள் என்றனள்

கருங்கய னெடுந்தடங் கண்ணி யென்பவே. 673

பம்மை கூறல்

“ஆரழன் முளரி யன்ன அருந்தவ மரிது, தானஞ்

சீர்கெழு நிலத்து வித்திச் சீலநீர் கொடுப்பிற் றீந்தேன்

பார்கெழு நிலத்து ணாறிப்பல்புக ழீன்று பின்னால்

தார்கெழு தேவரின்பம் தையலாய் விளைக்கு” மென்றாள். 674

இதுகேட்ட விசயை மீட்டும் வணங்கி, “யாம் அறவுரை பின்னர்க் கேட்போம். இப்போது எமக்குத் துறவு தந்தருள்க” என வேண்டினள். அவளும் அதனை யிசையத் தவமகளிர் துறவுக் குரியன செய்யலுற்று முதற்கண், விசயை, சுநந்தையாகிய இரு வருடையையும் மாற்றி, பாலால் அடி கழுவி நூலானாகிய வெண் கோடி யுடுப்பித்தனர்.

இருவரும் மயிர் பறிப்புண்டல்

மணியியல் சீப்பிடச் சிவக்கும் வாணுதல்

அணியிருங் கூந்தலை யௌவை மார்கடாம்

பணிவிலர் பரித்தனர் பரமன் சொன்னநூல்

துணிபொருள் சிந்தியாத் துறத்தல் மேயினார். 675

தவத்திற்குரிய குணம் பலவும் நிறைதல்

பொற்குடந் திருமணி பொழியப் பெய்தபோல்

எற்புடம் பெண்ணிலாக் குணங்க ளால்நிறைத்து

உற்றுட னுயிர்க்கருள் பரப்பி யோம்பினார்

முற்றுட னுணர்ந்தவ னமுத மோம்பினார். 676

இருவரும் தவத்தால் மேம்படுதல்

புகழ்ந்துரை மகிழ்ச்சியும் பொற்பில் பல்சனம்

இகழ்ந்துரைக் கிரக்கமு மின்றி யங்கநூல்

அகழ்ந்து கொண்டரும் பொருள்பொதிந்த நெஞ்சினார்

திகழ்ந்தெரி விளக்கெனத் திலக மாயினார். 677

இவ்வண்ணம் இவர்கள் தவத்தால் மேம்படவே, இவர் களைக் காண்டல் வேண்டிச் சீவகன் தன் மனைவியர் உடன் வரப் போந்து இவர்கள் அடிவீழ்ந்து வணங்கினன். இவர்கள் அவனு டைய வணக்கத்தையோ வாழ்த்தையோ பொருள் செய்திலர். விசயை பாவைபோன்றிருந்தாள்.

பம்மை சீவகற்குக் கூறல்

“காதல னல்லைநீயும், காவல! நினைக்கி யாமும்

ஏதிலம் என்று கண்டாய் இருந்தது நங்கை”யென்னத்

தாதலர் தாம மார்ப னுரிமையுந் தானு மாதோ

போதவிழ் கண்ணியீர்த்துப் புனல்வரப் புலம்பினானே. 678

அதுகண்டு பம்மை முதலிய தவமகளிர், சீவகனுடன் பேசு மாறு விசயையை வற்புறுத்தினர். அதன்மேல் அவள் கண் திறந்து நோக்கினாள்.

விசயை கூறல்

திரைவளை இப்பி யீன்ற திருமணி யார மார்பின்

வரைவளர் சாந்த மார்ந்த வைரக்குன் றனைய திண்டோள்

விரைவளர் கோதை வேலோய் வேண்டிய வேண்டி னேம்என்று

உரைவிளை வித்து ரைப்பக் காளையுள் ளகம்கு ளிர்ந்தான். 679

சீவகன் சுநந்தைக்குச் சொல்லுதல்

அடிகளோ துறக்க வொன்று முற்றவர் யாது மல்லர்;

சுடுதுய ரென்கட் செய்தாய், சுநந்தைநீ யௌவை யல்லை;

கொடியைநீ கொடிய செய்தாய் கொடியையோ கொடியை யென்னா

இடருற்றோர் சிங்கந் தாய்மு னிருந்தழு கின்ற தொத்தான். 680

சுநந்தை விடை யிறுத்தல்

“சென்றதோ செல்க, விப்பால்

திருமக ளனைய நங்கை

இன்றிவ டுறப்ப யானின்

னரசுவந் திருப்பே னாயின்

என்றெனக் கொழியு மம்மா

பழி”யென விலங்கு செம்பொற்

குன்றனான் குளிர்ப்பக் கூறிக்

கோயில்புக் கருளு கென்றாள். 681

பின்பு நந்தட்டன் அடிபணிந்து வணங்க, அவனை நோக்கி, “நும்மையாம் துறந்திலம். அதனாலே நீ மனம் நொந்து வெறுக்க வேண்டா” என்று மொழிய, அவனும் மனம் தேறிச் சென்றான். அனைவரும் கோயிலையடைந்தனர். இருவரும் தவநெறியில் நின்று இலகுவாராயினர்.

இந்நிகழ்ச்சிகளைக் கண்டிருந்த அமைச்சர், சீவகனும் துறவு மேற்கொள்வானோ என்ற அச்சத்தால், அவன் மனத்தை அரச போகத்திலே அமிழ்த்தற் கெண்ணி, நீர் விளையாடற் கேற்ப, அரசுரிமையும் அரசனும் படிந்தாடற்குரிய இனிய நீர் வாவிகளைப் பண்ணி, அவற்றைக் கண்டருளுமாறு அரசனை வேண்டினர். அவனும் அதற்கிசைந்தான்.

நீர்விளையாட்டு

கணமலை யரசன் மங்கை கட்டியங் காரனாகப்

பணைமுலை மகளி ரெல்லாம் பவித்திரன் படையதாக

இணைமலர் மாலை சுண்ண மெரிமணிச் சிவிறி யேந்திப்

புணைபுறந் தழுவித் தூநீர்ப் போர்த்தொழில் தொடங்கி னாரே. 682

தத்தையின் போர்த்திறம்

அரக்குநீர்ச் சிவிறி யேந்தி யாயிரந் தாரை செல்லப்

பரப்பினாள் பாவை தந்தை, பைந்தொடி மகளிரெல்லாம்

தரிக்கில ராகித் தாழ்ந்து தடமுகிற் குளிக்கு மின்போல்

செருக்கிய நெடுங்கண் சேப்பச் சீதநீர் மூழ்கினாரே. 683

சீவகன் சேனையுடைய அவன் சிவிறியேந்திப் பொருதல்

கூந்தலை யொருகை யேந்திக்

குங்குமத் தாரை பாயப்

பூந்துகி லொருகை யேந்திப்

புகுமிடங் காண்டல் செல்லார்

வேந்தனைச் சரணென் றெய்த

விம்முறு துயரம் நோக்கிக்

காய்ந்துபொற் சிவிறி யேந்திக்

கார்மழை பொழிவ தொத்தான். 684

தத்தையின் சேனையுடைதல்

அன்னங்க ளாகி யம்பூந்

தாமரை யல்லி மேய்வார்

பொன்மயி லாகிக் கூந்தல்

போர்த்தனர் குனிந்து நிற்பார்;

இன்மலர்க் கமல மாகிப்

பூமுகம் பொருந்த வைப்பார்;

மின்னுமே கலையுந் தோடும்

கொடுத்தடி தொழுது நிற்பார். 685

தன் படையுடையக் கண்ட காந்தருவதத்தை சந்தனத்தாரை கொண்டு சீவகன் மேல் பாய்ந்தாள். இடைநின்ற மகளிர் கூட்டம் எதிரே சிவிறி கொண்டு தாரை வீச ஆற்றாராய் உடைந்தோடினர்.

சீவகன் வறிதே நிற்றல்

“மெய்ப்படு தாரை வீழி னோமிவட்” கென்ன வஞ்சிக்

கைப்படை மன்ன னிற்பக் கதுப்பயல் மாலை வாங்கிச்

செப்படை முன்கை யாப்பத் திருமகன் தொலைந்து நின்றான்

பைப்புடை யல்கு லாளைப் பாழியாற் படுக்க லுற்றே. 686

தத்தை தோற்றோடிச் சீவகனைத் தழீஇக் கொளல்

அடுத்தசாந் தலங்கல் சுண்ண மரும்புனல் கவர வஞ்சி

உடுத்தபட் டொளிப்ப வொண்பொன் மேகலை யொன்றும்பேசா

கிடப்பமற் றரசனோக்கிக் “கெட்டதுன் துகில்மற்” றென்ன

மடத்தகை நாணிப் புல்லி மின்னுச்சேர் பருதி யொத்தான். 687

இவ்வாறு நீராட்டயர்ந்து சீவகன் இனிதிருக்கும் நாளில் முதுவேனிற் பருவம் வந்தது. அப்போதில் அவன் மகளிரின் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் மகிழ்வெய்தினான். பின்பு கார்ப்பருவம் வந்து இனிதே கழிந்தது. அதன்பின் கூதிர் வந்தது. அக்காலத்தே ஒருநாள் குணமாலை சீவகற்கென ஒரு வள்ளத்தே தேறல் கொணர்ந்தாள். அதனுள் அவளது முகந்தோன்ற, அதனைத் திங்களெனக் கருதியதோடு நில்லாமல் தன் முகத்துக்குப் பகையா மென நினைத்துப் பருகிவிட்டாள். பின்னர்த் தன் கண்ணைத் திறந்தவள் வானத்தே திங்கள் இருப்பக் கண்டு ஊடலுற்றாள்.

குணமாலை யூடல்

“பருகினேற் கொளித்துநீ பசலை நோயொடும்

உருகிப்போ யின்னுமற் றுளை”யென் றுள்சுடக்

குருதிகண் கொளக்குண மாலை யூடினாள்;

உருவத்தா குறத்தழீஇ யுடற்றி நீக்குவான். 688

சீவகன் ஊடல் தீர்த்துக் கூடல்

“நங்கைநின் முகவொளி யெறிப்ப நன்மதி

அங்கதோ உள்கறுத் தழகிற் றேய்ந்தது,

மங்கைநின் மனத்தினால் வருந்தல்” என்றவள்

பொங்கிள வனமுலை பொருந்தி னானரோ. 689

முன் பனியும் பின் பனியுமாகிய பருவங்களும் இன்பமாகவே கழிந்தன. இவர்களும் கீழ்நிலை மாடத்தேயிருந்து இனிது கழிந்தனர். குளிரும் எலிமயிர்ப் போர்வையால் நீக்கப்பட்டது. முடிவில் இளவேனிற் காலம் வந்தது. எங்கணும் இயற்கை இனிய காட்சி வழங்கத் தொடங்கிற்று. தென்றலும் மலர் மணம் கமழ்ந்து மெல்ல அசைந்து போந்தது.

இயற்கை யழகு

குரவம் பாவை கொப்புளித்துக்

குளிர்சங் கீர்ந்த துகளேபோல்

மரவம் பாவை வயிறாரப்

பருகி வாடை யதுநடப்ப

விரவித் தென்றல் விடுதூதா

வேனி லாற்கு விருந்தேந்தி

வரவு நோக்கி வயாமரங்க

ளிலையூழ்த் திணரீன் றலர்ந்தனவே. 690

இக்காலத்தே சீவகன் மகளிருடன் நாட்டிலுள்ள பல்வேறு இனிய இடங்கட்குச் சென்று இன்பம் நுகர்ந்தான்.

மகளிர் இன்புறுதல்

எண்ணற் கரிய குங்குமச்சேற்

றெழுந்து நான நீர்வளர்ந்து

வண்ணக் குவளை மலரளைஇ

மணிக்கோல் வள்ளத் தவனேந்த

உண்ணற் கினிய மதுமகிழ்ந்தா

ரொலியன் மாலை புறந்தாழக்

கண்ணக் கழுநீர் மெல்விரலாற்

கிழித்து மோந்தார் கனிவாயார். 691

இவ்வண்ணம் சில யாண்டுகள் கழிய மகளிர் அனைவரும் கருவிருந்து ஆண் மக்களைப் பயந்தனர். அவர்கள் பிறப்பிற்குரிய சிறப்புக்கள் பலவும் நிகழ்ந்தன. அவர்கட்கு முறையே சச்சந்தன், சுதஞ்சணன், தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிந்தன் எனப் பெயர்கள் இடப்பட்டன.

சீவகன் மக்கள் கலைபயிறல்

ஐயாண் டெய்தி மையாடி

யறிந்தார் கலைகள் படைநவின்றார்

கொய்பூ மாலை குழன்மின்னும்

கொழும்பொற் றோடும் குண்டலமும்

ஐயன் மார்கள் துளக்கின்றி

யாலுங் கலிமா வெகுண்டூர்ந்தார்

மொய்யா ரலங்கன் மார்பற்கு

முப்ப தாகி நிறைந்ததே. 692

இவ்வாறு இன்புற்றிருக்கும் நாளில் வேனிற் காலம் வந்தது. சோலையெங்கும் பூவும் கனியும் சிறந்து பொற்பு விளங்க நிலவின.

மல்லிகை மாலையென்னும் தோழி சோலை

காண்க என அரசனை வேண்டல்

தடமுலை முகங்கள் சாடிச்

சாந்தகங் கிழிந்த மார்பிற்

குடவரை யனைய கோலக்

குங்குமக் குவவுத் தோளாய்!

தொடைமலர் வெறுக்கை யேந்தித்

துன்னினன் வேனில் வேந்தன்

இடமது காண்க என்றாள்,

இறைவனு மெழுக என்றான். 693

சீவகன் தன்னுரிமை மகளிருடன் சென்று

சோலை யின்பம் நுகர்தல்

இலங்குபொன் னாரமார்பி னிந்திர னுரிமை சூழக்

கலந்தபொற் காவு காண்பான் காமுறப் புக்கதேபோல்

அலங்குபொற் கொம்ப னாருமன்னனு மாடமாதோ

நலங்கவின் கொண்ட காவுநல்லொளி நந்திற் றன்றே. 694

அரசன் விரும்பியவாறு மகளிர் வேறு வேறாகச்

சென்று விளையாட்டயர்தல்

வானவர் மகளிரென்ன வார்கயிற் றூச லூர்ந்தும்

கானவர் மகளிரென்னக் கடிமலர் நல்ல கொய்தும்

தேனிமிர் குன்றமேறிச் சிலம்பெதிர் சென்று கூயும்

கோனமர் மகளிர் கானிற் குழாமயில் பிரிவ தொத்தார். 695

சோலைக் காட்சிகளைக் கண்டுவந்த சீவகன் உள்ளம் துறவின்மேற் செல்லுதல்

இன்கனி கவருமந்தி சுடுவனோ டிரிய வாட்டி

நன்கனி சிலத னுண்ண நச்சுவேன் மன்ன னோக்கி

என்பொடு மிடைந்த காம மிழிபொடு வெறுத்து நின்றான்

அன்புடை யரிவை கூட்டம் பிறனுழைக் கண்ட தொத்தே. 696

“கைப்பழ மிழந்த மந்தி கட்டியங் கார னொத்தது

இப்பழந் துரந்து கொண்ட சிலதனு மென்னை யொத்தான்

இப்பழ மின்று போகத் தின்பமே போலு” மென்று

மெய்ப்பட வுணர்வு தோன்றி மீட்டிது கூறினானே. 697

சீவகன் உள்ளம் துறவின்கண் உறைத்து நிற்றல்

மெலியவர் பெற்ற செல்வம் வேரொடுங் கீழ்ந்து வௌவி

வலியவர் கொண்டு மேலை வரம்பிகந் தரம்பு செய்யுங்

கலியது பிறவி கண்டாங் காலத்தா லடங்கி நோற்று

நலிவிலா வுலக மெய்தல் நல்லதே போலுமென்றான். 698

இவ்வாறு போகநுகர்ச்சிக்கண் சென்ற தன் உள்ளத்தைச் சீவகன் துறவு நெறியிலே செலுத்தி, வினையின் விளைவும் வேட்கை யின் தன்மையும் நினைந்து தனக்கெனச் சமைக்கப்பட்டிருந்த கட்டிலையடைந்தான்.

சீவகன் துறவு நெறியை வியந்து சென்று கட்டிலையடைதல்

“வேட்கைமை யென்னு நாவிற் காமவெந் தேறல் மாந்தி

மாட்சியொன் றானுமின்றி மயங்கினேற் கிருளை நீங்கக்

காட்டினார் தேவ ராவர் கைவிளக் கதனை”யென்று

தோட்டியாற் றொடக்கப் பட்ட சொரிமதக் களிற்றின் மீண்டான். 699

மகளிர் மயக்க அவன் மயங்காது நிற்றல்

மெள்ளவே புருவங் கோலி விலங்கிக்கண் பிறழ நோக்கி

முள்ளெயி றிலங்கச் செவ்வாய் முறுவல்தூ தாதி யாக

அள்ளிக்கொண் டுண்ணக் காமங் கனிவித்தார் பனிவிற் றாழ்ந்த

வள்ளிதழ் மாலை மார்பன் வச்சிர மனத்தனானான். 700

சீவகன் நூற்றுலா மண்டபம் புகுந்து நீராடி உணவுண்டிருத்தல்

நெய்வளங் கனிந்த வாசநிறைந்துவான் வறைக ளார்ந்து

குய்வளங் கழுமி வெம்மைத் தீஞ்சுவை குன்ற லின்றி

ஐவரு ளொருவ னன்ன அடிசில்நூன் மடைய னேந்த

மைவரை மாலை மார்பன் வான்சுவை யமிர்த முண்டான். 701

உணவுண்டு சந்தனம் பூசி முகவாசம் தின்று இனிதிருந்த சீவகன் அருகன் கோயிற்கு மகளிருடன் சென்று வழிபடுதல் பாட்டு

கடிமலர்ப் பிண்டிக் கடவுள் கமலத்து

அடிமலர் சூடி யவர்உலகில் யாரே

அடிமலர் சூடி யவர்உலக மேத்த

வடிமலர் தூவ வருகின்றா ரன்றே. 702

அப்போது ஸ்ரீநாதன் கோயிலை வணங்க வந்த சாரணர் பளிங்கின்மேலிருக்கக் கண்ட சீவகன் அவர்களை வணங்கி வாழ்த்துதல்

இலங்கு குங்கும மார்ப னேந்துசீர்

நலங்கொள் சாரணர் நாதன் கோயிலை

வலங்கொண் டாய்மலர்ப் பிண்டி மாநிழற்

கலந்த கன்மிசைக் கண்டு வாழ்த்தினான். 703

சாரணர் இருவருள் மூத்தவனும் மணிவண்ணனு மாகிய இரத்தினப் பிரபை யென்பான் சீவகற்கு அறமுரைக்கத் தொடங்குதல்

தேனெய் தோய்ந்தன தீவிய திருமணி யனைய

வானி னுய்ப்பன வரகதி தருவன, மதியோர்

ஏனை யாவரு மமுதெனப் பருகுவ, புகல்வ,

மான மில்லுயர் மணிவண்ணன் நுவலிய வலித்தான். 704

தொகுத்துக் காட்டல்

அருமையின் எய்தும் யாக்கையும் யாக்கைய தழிவும்

திருமெய் நீங்கிய துன்பமும் தெளிபொருட் டுணிவும்

குருமை யெய்திய குணநிலை கொடைபெறு பயனும்

பெருமை வீட்டொடும் பேசுவல் கேளிது பெரியோய். 705

மக்கள் யாக்கையின் அருமை

பரவை வெண்டிரை வடகடற் படுநுகத் துளையுள்

திரைசெய் தென்கட லிட்டதோர் நோன்கழி சிவணி

அரச, அத்துளை யகவயிற் செறிந்தென வரிதால்

பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறவே. 706

அவ் யாக்கையின் நிலையாமை கூறலுற்றுக் கருவிற் கெடுவது கூறல்

இன்ன தன்மையி னருமையி னெய்திய பொழுதே

பொன்னும் வெள்ளியும் புணர்ந்தென வயிற்றகம் பொருந்தி

மின்னு மொக்குளு மெனநனி வீயினும் வீயும்

பின்னை வெண்ணெயிற் றிரண்டபின் பிழைக்கவும் பெறுமே. 707

இளமையிற் கெடுவது கூறல்

கெடுத லவ்வழி யில்லெனிற் கேள்விக டுறைபோய்

வடிகொள் கண்ணியர் மனங்குழைந் தநங்கனென் றிரங்கக்

கொடையுங் கோலமுங் குழகுந்தம் மழகுங்கண் டேத்த

விடையிற் செல்வுழி விளியினும் விளியுமற் றறிநீ. 708

முதுமையிற் கெடுவது கூறல்

காமம் பைப்பயக் கழியத்தங் கடைப்பிடி சுருங்கி

ஊமர் போலத்தம் உரையவிந் துறுப்பினி லுரையாத்

தூய்மை யில்குளந் தூம்புவிட் டாம்பொரு ளுணர்த்தி

ஈம மேறுத லொருதலை இகலமர் கடந்தோய். 709

நிறுத்த முறையே நாற்கதித் துன்பம் கூறலுற்று

முதற்கண் நரகதித் துன்பம் கூறுதல்

வெவ்வினை செய்யு மாந்தர் உயிரெனு நிலத்து வித்தி

அவ்வினை விளையு ளுண்ணு மவ்விடத் தவர்க டுன்பம்

இவ்வென வுரைத்து மென்று நினைப்பினும் பனிக்கு முள்ளம்

செவ்விதிற் சிறிது கூறக் கேண்மதி செல்வ வேந்தே. 710

ஊழ்வினை துரப்ப வோடி யொன்றுமூழ்த் தத்தினுள்ளே

சூழ்குலைப் பெண்ணை நெற்றித் தொடுத்ததீங் கனிகளூழ்த்து

வீழ்வன போல வீழ்ந்து வெருவரத் தக்க துன்பத்து

ஆழ்துய ருழப்ப, ஊணு மருநவை நஞ்சு கண்டாய். 711

விலங்குகதித் துன்பம்

எரிநீர வேநரகம், அந்நரகத் துன்பத்து

ஒருநீர வேவிலங்கு தாமுடைய துன்பம்;

பெருநீர வாட்டடங்கண் பெண்ணணங்கு பூந்தார்

அருநீர வேந்தடர்த்த வச்சணங்கு வேலோய்.! 712

மக்கட்கதித் துன்பம்

தம்மை நிழனோக்கித் தாங்கார் மகிழ்தூங்கிச்

செம்மை மலர்மார்ப மட்டித் திளையார்தோள்

கொம்மைக் குழகாடுங் கோல வரைமார்பர்

வெம்மை மிகுதுன்பம் வேந்தே சிலகேளாய். 713

வேட்டன பெறாமை துன்பம், விழைநரைப் பிரித றுன்பம்,

மோட்டெழி லிளமை நீங்க மூப்புவந் தடைத றுன்பம்

ஏட்டெழுத் தறித லின்றி யெள்ளற்பா டுள்ளிட் டெல்லாம்

சூட்டணிந் திலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க் கென்றார். 714

தேவகதித் துன்பம்

தேவரே தாமுமாகித் தேவராற் றொழிக்கப் பட்டும்

ஏவல்செய் திறைஞ்சிக் கேட்டு மணிகமாப் பணிகள் செய்தும்

நோவது பெரிதுந் துன்பம், நோயினுட் பிறத்த றுன்பம்

யாவதுந் துன்பமன்னா! யாக்கைகொண் டவர்கட் கென்றான். 715

நிறுத்த முறையே நால்வகைக் கதித்துன்பம்

கூறியபின் தெளிபொருள் கூறுதல்

மன்றல் நாறு மணிமுடிமேன்

மலிந்த சூளா மேணிபோலும்

வென்றோர் பெருமா னறவாழி

வேந்தன் விரிபூந் தாமரைமேல்

சென்ற திருவா ரடியேந்தித்

தெளியும் பொருள்க ளோரைந்தும்

அன்றி யாறு மொன்பானு

மாகு மென்பா ரறவோரே. 716

அப்பொருளைத் துணியுந் துணிவு கூறல்

பெரிய வின்பத் திந்திரனும்

பெட்ட செய்கைச் சிறுகுரங்கும்

உரிய செய்கை வினைப்பயத்தை

யுண்ணு மெனவே யுணர்ந்தவனை

அரிய ரென்ன மகிழாது

மெளிய ரென்ன விகழாதும்

இருசார் வினையுந் தெளிந்தாரே

யிறைவ னூலுந் தெளிந்தாரே. 717

உறுவர்ப் பேண லுவர்ப்பின்மை

யுலையா வின்பந் தலைநிற்றல்

அறிவர் சிறப்பிற் கெதிர்விரும்ப

லழிந்தோர் நிறுத்த லறம்பகர்தல்

சிறியா ரினத்துச் சேர்வின்மை,

சினங்கை விடுதல் செருக்கவித்தல்

இறைவ னறத்து ளார்க்கெல்லா

மினிய ராத, லிதுதெளிவே. 718

குணநிலை (சீலம்) கூறல்

ஒழுக்கமே யன்றித் தங்க ளுள்ளுணர் வழிக்கு மட்டும்

புழுப்பயி றேனுமன்றிப் பிறவற்றின் புண்ணு மாந்தி

விழுப்பய னிழக்கு மாந்தர் வெறுவிலங் கென்று மிக்கார்

பழித்தன வொழித்தல் சீலம் பார்மிசை யவர்கட் கென்றான். 719

கொடைநிலை (தானம்) கூறல்

ஒன்பது வகையி னோதிற் றுத்தமர்க் காரு மார்ந்த

இன்பத மருளியீத லிடையென மொழிப யார்க்கும்

துன்புற விலங்கு கொன்று சொரிந்துசோ றூட்டி னார்க்கும்

நன்பொருள் வழங்கி னார்க்கும் பயனமக் கறியலாகா. 720

கொடைப் பயன் கூறல்

பூமுற்றுந் தடங்க னாளும் பொன்னொடுங் குன்றனானும்

காமுற்று நினைந்த வெல்லாங் கற்பக மரங்க ளேந்தத்

தாமுற்றுக் கழிப்பர், தான மிடையது செய்த நீரார்

ஏமுற்றுக் கருமபூமி யிருநிதிக் கிழமை வேந்தே. 721

அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினா லலறு முந்நீர்த்

தடங்கட னடுவுட் டீவுபலவுள, அவற்றுட் டோன்றி

உடம்பொடு முகங்க ளொவ்வா ரூழ்கனி மாந்தி வாழ்வர்

மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேன் மன்ன ரேறே. 722

ஏனைச் சீலம் தெளிவு என்ற இரண்டன் பயன் கூறல்

செப்பிய சீல மென்னுந் திருமணி மாலை சூழ்ந்தார்

கப்பத்து ளமர ராவர், காட்சியி னமிர்த முண்டார்

ஒப்பநீ ருலக மெல்லா மொருகுடை நிழற்றி யின்பம்

கைப்படுத் தலங்க லாழிக் காவல ராவர் வேந்தே. 723

வீடுபேறு கூறல்

உள்பொரு ளிதுவென வுணர்தல் நானமாம்;

தெள்ளிதி னப்பொருள் தெளிதல் காட்சியாம்;

விள்ளற விருமையும் விளங்கத் தன்னுளே

ஒள்ளிதிற் றரித்தலை யொழுக்க மென்பவே. 724

கூடிய மும்மையுஞ் சுடர்ந்த கொந்தழல்

நீடிய வினைமர நிரைத்துச் சுட்டிட

வீடெனப் படும்வினை விடுதல் பெற்றதங்கு

ஆடெழிற் றோளினாய் அநந்த நான்மையே 725

கடையிலா வறிவொடு காட்சி வீரியம்

கிடையிலா வின்பமுங் கிளந்த வல்லவும்

உடையதங் குணங்களோ டோங்கி விண்தொழ

அடைதலான் மேலுல கறியப் பட்டதே. 726

இவ்வாறு கூறப்பெற்ற அறவரையைக் கேட்டதும் சீவகற்கு எல்லையில்லாத இன்பமுண்டாயிற்று. அதனால் அவன் அம் மெய்ம்மொழிகளைப் பெறலரும் அமுதெனக் கொண்டு பெரிதும் பேணுவானாயினன். அக்காலை, அவன் தன் பழம் பிறப்பை அறிந்துகொள்ள விரும்பி அச்சாரணர் அடிகளை மீட்டும் வணங்கி வேண்டினான். அவர் அது கூறலுற்று, “நீ முற்பிறப்பில் தாதகி யென்னும் நாட்டின் பூமி திலகமென்ற நகரத்திருந்து ஆட்சிபுரிந்த பவணதேவனென்பானுக்கும் சயமதி யென்பாட்கும் பிறந்த அசோதரன் என்னும் மகனாவாய். நினக்கு மனைவியர் பலருண்டு. ஒரு நாள் அவருடன் நீர் விளையாடச் சென்றபோது, பொய்கைக் கண்ணிருந்த அன்னக்கூட்டம் விண்ணிலே பறக்க, அவற்றுட் சில மேலும் பறக்க மாட்டாவாய் அப் பொய்கைத் தாமரையில் தங்கின. நின் மனைவிமாருள் ஒருத்தி விரும்பியாங்கு ஒன்றைப் பற்றித் தந்தாய். அவள் அதனைக் கூட்டிவிட்டு வளர்த்து வந்தாள். இதனையறிந்த அரசன் நின்னையழைத்து,

பூவைகிளி தோகைபுண ரன்னமோடு பன்மா

யாவையவை தங்கிளையி னீங்கியடி வாங்கிக்

காவல்செய்து வைத்தவர்கள் தாம்கிளையி னீங்கிப்

போவர்புகழ் நம்பியிது பொற்பிலது கண்டாய். 727

என்று சொல்லி மேலும் பல அறங்களையு முரைத்தான். அதுகேட்டு நீ துறத்தற் கெண்ணினை, அரசன் ஒருவாறு விடை யீந்தான். நீ மனையினை நீங்கிப் போய்த் தவம் செய்து முடிவில் சாசாரனென்றும் இந்திரனாகி யின்புற்றிருந்தனை, நீ பிரிந்தபின், பவணதேவனும் சயமதியும் தவம் நோற்றுத் தேவராயினர்" என்று சொல்லி முடித்தான்.

இதைக்கேட்ட சீவகன் முறுவலித்துச் சாரணர்

அடிவீழ்ந்து வணங்குதல்

வாரணி மணித்துடி மருட்டு நுண்ணிடைக்

காரணி மயிலனார் சூழக் காவலன்

ஏரணி மணிமுடி யிறைஞ்சி யேத்தினான்

சீரணி மாதவர் செழும்பொற் பாதமே. 728

அவனுக்கும் பிறர்க்கும் அவர் வாழ்த்துக் கூறிவிட்டு வானத்தே ஞாயிறும் திங்களும் போலச் சென்றனர். எங்கும் அவரது மெய் யொளி விரிந்து விளங்கிற்று. இனி, தம் கணவன் துறவு பூணலுற்றான் என்று காந்தருவதத்தை முதலியோர் மனம் கலங்கி, முகம் பசந்து, கண்கலுழ்ந்து பின்வரச் சீவகன் தன் கோயிலை யடைந்தான். ஆங்கு அவன் மனைவியர் கொண்டிருந்த துயரத் தோற்றம், அவன் மனவுறுதியைச் சிதைக்கும் ஆற்றல் இலதாயிற்று.

சீவகன் அழைப்ப நந்தட்டன் வந்து வணங்குதல்

கொடியணி யலங்கன் மார்பிற்

குங்குமக் குன்ற மன்னான்

அடிபணிந்து, “அருளு, வாழி

யரசரு ளரச" வென்னப்

படுசின வெகுளி நாகப்

பைத்தலை பணித்து மாழ்க

இடியுமிழ் முரச நாண

இன்னண மியம்பி னானே. 729

நந்தட்டனை நாடாட்சி மேற்கொள்ளுமாறு சீவகன் கூறல்

ஊனுடைக் கோட்டு நாகான்

சுரிமுக வேற்றை யூர்ந்து

தேனுடைக் குவளைச் செங்கேழ்

நாகிளந் தேரை புல்லிக்

கானுடைக் கழனிச் செந்நெற்

கதிரனைச் துஞ்சு நாட

வேன்மிடை தானைத் தாயம்

வீற்றிருந் தாண்மோ என்றான். 730

நந்தட்டன் மறுத்துரைத்தல்

கரும்பலாற் காடொன் றில்லாக்

கழனிசூழ் பழன நாடுஞ்

சுரும்புலாங் கண்ணி விண்ணோர்

துறக்கமும் வீடும் வேண்டேன்,

அரும்புலா யலர்ந்த வம்மென்

தாமரை யனைய பாதம்

விரும்பியான் வழிபட் டன்றோ

வாழ்வதென் வாழ்க்கை யென்றான். 731

இதுகேட்ட சீவகன், காந்தருவதத்தை பயந்த மகனான சச்சந்தனை வருவித்து அவற்கு முடிசூட்டக் கருதினான். அவனே அவன் மக்களுள் மூத்தவன்.

சீவகன் சச்சந்தற்கு முடிசூட்டி அரசநீதி பலமொழிந்து பொய்யாமையை வற்புறுத்துதல்

குடிபழி யாமை யோம்பிற்

கொற்றவேன் மன்னர் மற்றுன்

அடிவழிப் படுவர் கண்டாய்

அரும்புகழ் கெடுத லஞ்சி

நொடியலோ ரெழுத்தும் பொய்யை,

நுண்கலை நீத்த நீந்திக்

கொடியெடுத் தவர்க்கு நல்கு

கொழித்துணர் குமர வென்றான். 732

குண மாலை மகனான சுதஞ்சணனை

இளவரசாக்குதல்

சேல்நடந் தாங்கு மோடிச்

சென்றுலாய்ப் பிறழும் வாட்கண்

மான்மட நோக்கின் மாதர்

மாலைநாட் பயந்த மைந்தன்

கானடந் தனைய மான்றேர்க்

காளையைக் காவன் மன்னன்

தானுட னணிந்து தன்போ

லிளவர சாக்கி னானே. 733

பின்பு சச்சந்தனுக்குப் பின் அரசுரிமை கோவிந்தனுக் காதல் வேண்டுமெனப் பணித்து, ஒழிந்த குமரர்க்கு ஏற்றவாறு தேரும் யானையும் நிதியும் நாடும் பெருக நல்கினான். தன் தோழர் மக்கள் அனைவரும் சச்சந்தனுக்கு மந்திரச் சுற்றமாக அமைத்தான்.

சீவகன் கோயிற்குட் சென்று, மனைவியரைத் தருவித்து அவர்கட்குப் பல்வேறு நிலையாமையும், அறநெறியின் உயர்வும், தவத்தின் சிறப்பும் பிறவும் எடுத்தியம்பினான்.

சீவகன் தான் துறவு மேற்கொண்டதை

அவர்கட்கு உரைத்தல்

குஞ்சர மயாவுயிர்த் தனைய குய்கமழ்

அஞ்சுவை யடிசிலை யமர்ந்துண் டார்கடாம்

இஞ்சிமா நகரிடும் பிச்சை யேற்றலால்

அஞ்சினேன் துறப்பல்யான் ஆர்வ மில்லையே. 734

இதுகேட்டதும் மகளிர் வாய்விட்டுப் புலம்புதல்

காதலங் கழிந்தநா ளிதனி னிப்புறம்

ஏதில மென்றசொற் செவிச்சென் றெய்தலும்

மாதரார் மழைமலர்த் தடங்கண் மல்குநீர்

போதுலா மார்பின்வாய்ப் பொழிந்து வீழ்ந்தவே. 735

பின்பு அம்மகளிர், அவன் அடிமுதல் முடிகாறும் ஒவ்வோரு றுப்பனையும் நோக்கி நோக்கிப் பலவாறு நயமொழி கூறிப் புலம்பினர். அவன் நெஞ்சம் துறவு பூண்டமையின் அவரது அழுகுரல் அவற்கு அசைவு பிறப்பிக்கவில்லை.

சீவகன் துறவுக் கோலம் பூண்டு வெளிவரலும் அவன் தேவியர் ஒருவர் ஒருவரைக் காட்டிப் புலம்புவார், காந்தருவதத்தையைக் காட்டிப் புலம்புதல்

விண்ணோர் மடமகள்கொல் விஞ்சைமக ளேகொல்

கண்ணார் கழிவனப்பிற் காந்தருவ தத்தையென்று

எண்ணாய வாணெடுங்கண் மெய்கொள்ள வேமுற்றுப்

பண்ணாற் பயின்றீர் இனியென்பயில் வீரே. 736

குணமாலையைக் காட்டிப் புலம்புதல்

சொல்வே னெடுங்கட் குணமாலை குஞ்சரத்தால்

அல்லனோ யுற்றாளுக் கன்று களிறடர்த்துப்

புல்லிப் புணர்முலையின் பூங்குவட்டின் மேலுறைந்தாய்

எல்லேமற் றெம்பெருமாற் கின்றிவளு மின்னாளோ. 737

பதுமையைக் காட்டிப் பரிதல்

தூம்புடைய வெள்ளெயிற்றுத் துத்தி யழனாகப்

பாம்புடைய நோக்கிப் பதுமை பவழவாய்

தேம்புடைய வின்னமுதாச் சேர்ந்தாய்க் கினியதுவே

ஆம்புடைய நஞ்சடங்கிற் றின்றூறிற் றாகாதே. 738

கேமசரியைக் காட்டிப் புலம்புதல்

தாழ்ந்துலவி மென்முலைமேற் றண்ணாரம் வில்விலங்கப்

போழ்ந்தகன்ற கண்ணினா லேப்பெற்றுப் போகலாய்

தாழ்ந்தமர நின்னமிர்தந் தக்கநாட் டாகாதே

வீழ்ந்ததென வீழ்ந்தாய்நீ யின்றதுவும் விட்டாயோ. 739

கனகமாலையைக் காட்டிப் புலம்புதல்

கண்ணோ கயலோ கழுநீரோ காவியோ

பெண்ணோ வமுதோ பிணையோ வெனப்பிதற்றித்

துண்ணென் சிலைத்தொழிலுங் காட்டிமுன் னின்புற்றீர்

புண்மேற் கிழிபோற் றுறத்தல் பொருளாமோ. 740

விமலையைக் காட்டிப் புலம்புதல்

பொன்னகர வீதி புகுந்தீர் பொழிமுகிலின்

மின்னி னிடைநுடங்க நின்றாடன் வேனெடுங்கண்

மன்ன னகரெல்லாம் போர்ப்பவலைப் பட்டீர்க்கு

இன்னே யொளியிழந்த வின்னோ விடுகினவோ. 741

சுரமஞ்சரியைக் காட்டிப் புலம்புதல்

செங்கச் சிளமுலையார் திண்கறையூர் பல்லினார்

மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தானை நீமகிழ்ந்து

பங்கயமே போல்வாளைப் பார்ப்பானாய்ப் பண்ணணைத்துத்

தங்கினாய் கோவே துறத்தல் தகவாமோ. 742

இலக்கணையைக் காட்டிப் புலம்புதல்

புல்லா ருயிர்செகுத்த பொன்னந் திணிதோளாய்

மல்லா ரகன்மார்ப மட்டேந்தி வாய்மடுத்திட்டு

எல்லாருங் காண விலக்கணையோ டாடினாய்

அல்லாந் தவள்நடுங்க வன்பி னகல்வாயோ. 743

கோயில் புலம்புறுதல்

பண்ணார் பணைமுழவம் பாடவிந்து பன்மணியாழ்

மழலை நீங்கிப்

புண்ணார் புணைகுழலு மேங்கா புனைபாண்டி

லிரங்கா வான்பூங்

கண்ணா ரொலிகவுள கிண்கிணியு மஞ்சிலம்புங்

கலையு மாரா

மண்ணார் வலம்புரியும் வாய்மடங்கிக் கோன்கோயில்

மடிந்த தன்றே. 744

இவ்வாறே நகரத்திடத்தும் இன்ப நிகழ்ச்சிகள் இலவாயின. இன்னிசை முழக்கம் எங்கும் கேட்டிலது. புலம்பு குரலே பொலிந்தது.

சீவகன் துறந்து செல்வது கண்டமகளிரும்

துறவுபூண விரும்புதல்

காதலஞ் சேற்றுட் பாய்ந்த மதியெனுங் கலங்கனீரை

ஊதுவண் டுடுத்த தாரா னுவர்ப்பினி னுரிஞ்சித் தேற்ற

மாதரார் நெஞ்சந் தேறிமாதவஞ் செய்து மென்றார்,

காதலான் காதலென்று நிகளத்தா னெடுங்கணாரே. 745

சீவகன் அவர்கட் குரைத்தல்

தூமஞ்சால் கோதை யீரே தொல்வினை நீத்த நீந்தி

நாமஞ்சால் மதியி னீங்கி நன்பொன்மே லுலகி னுச்சி

ஏமஞ்சா லின்பம் வேண்டி னென்னொடும் வம்மி னென்றான்

காமஞ்சாய்த் தடர்ந்து வென்ற காஞ்சனக் குன்ற மன்னான். 746

துறத்தற்குத் துணித்தமை சொல்லிய அம்மகளிர் தம்

வழிபாடு ஏற்கவேண்டுமெனத் தொழுதல்

சாந்தங் கிழிய முயங்கித் தடமலரால்

கூந்தல் வழிபட்ட கோவேநீ செல்லுலகில்

வாய்ந்தடியேம் வந்துன் வழிபடுநா ளின்றேபோல்

காய்ந்தருளல் கண்டாய் எனத்தொழுதார் காரிகையார். 747

சீவகன் அவர்களை விசயைபால் அடைக்கலம் தந்து துறவு நெறியொழுகச் செய்ய, அவர்களும் தம் அணியும் பட்டுடையும் துறந்து, துறவுக் கோலம் பூண்டு அவ்வற நெறியே யொழுகு வாராயினர்.

சீவகன் துறவு முற்றல்

பூந்துகில் புனைகல மாலை பூசுசாந்து

ஆய்ந்துல குணவுவந் தருளி மாமணி

காந்திய கற்பகக் கான மாயினான்

ஏந்திய மணிமுடி யிறைவ னென்பவே. 748

சீவகன் தேவரொடு செல்லுதல்

தேய்பிறை யுருவக் கேணித்

தேறுநீர் மலர்ந்த தேனார்

ஆய்நிறக் குவளை யஞ்சிக்

குறுவிழிக் கொள்ளும் வாட்கண்

வேய்நிறை யழித்த மென்றோள்

விசயையைத் தொழுது வாழ்த்திச்

சேய்நிறச் சிவிகை சேர்ந்தான்

தேவர்கொண் டேகி னாரே. 749

சீவகன் தேவருடன் சமவசரணம் என்னும்

திருக்கோயிலை யடைதல்

விளங்கொளி விசும்பறுத் திழிந்து மின்னுதார்த்

துளங்கொளி மணிவணந் தொழுது துன்னினான்

வளங்கெழு மணிவரை நெற்றிப் பாற்கடல்

இளங்கதிர்ப் பரிதியொத் திறைவன் தோன்றினான். 750

திருக்கோயில் ஆரவாரம்

பிண்டியின் கொழுநிழற் பிறவி நோய்கெட

விண்டலர் கனைகதிர் வீரன் தோன்றினான்

“உண்டிவ ணறவமீர் துண்மி னோ”வெனக்

கொண்டன கோடணை கொற்ற முற்றமே. 751

சீவகன் கோயிற்குள் அணைதல்

வானவர் மலர்மழை சொரிய மன்னிய

ஊனிவர் பிறவியை யொழிக்கு முத்தமன்

தேனிமிர் தாமரை திளைக்குஞ் சேவடி

கோனமர்ந் தேத்திய குறுகி னானரோ. 752

அப்போது பக்கலிருந்தவர் சீவகன் குருகுலத்தான் காசிப கோந்திரத்தான் என்று கூற, அவனும் துதித்துத் தன் துறவுக் கருத்தைச் சொல்லித் துதித்தான். தேவனும், “நீ துறத்தலே மாட்சி” யென்று சொல்லியருளினான். சீவகன் மறுவலும் அவன் திருவடியில் வீழ்ந்து இறைஞ்சித் துறவு குறித்துச் சுதன்மர் என்னும் கணதரரிருந்த இடத்திற்குப் போந்தான்.

சீவகன் உடை முதலியன துறத்தல்

மணியுறை கழிப்பது போல மங்கலப்

பணிவரு பைந்துகி னீக்கிப் பாற்கடல்

அணிபெற வரும்பிய வருக்க னாமெனத்

திணிநிலத் தியன்றதோர் திலக மாயினான். 753

மயிர் பறித்தல்

திருந்திய கீழ்த்திசை நோக்கிச் செவ்வனே

இருந்ததோ ரிடிகுரற் சிங்கம் பொங்கிமேற்

சுரிந்ததன் உளைமயிர் துறப்ப தொத்தனன்

எரிந்தெழு மினஞ்சுட ரிலங்கு மார்பினான். 754

அவன் பறித்த அளவில் வண்டினம் முரன்றன. சுதஞ்சணன் என்னும் தேவன் அம் மயிரைக் கொண்டு சென்று பாற்கடலில் வீழ்த்திவிட்டுத் தன் கோயிலை யடைந்தான். சீவகனுக்கும் சுருதஞானங்கள் வந்து நிறைந்தன. நந்தட்டனும் தோழர்களும் இவ்வண்ணமே சுருதஞானம் நிறைந்தனர்.

சீவகன் முனிவர் குழாத்துட் புகுதல்

கோமா னடிசாரக் குஞ்சரங்கள் செல்வனபோல்

பூமாண் திருக்கோயிற் புங்கவன்றாள் சேர்ந்தேத்தித்

தாமார்ந்த சீலக் கடலாடிச் சங்கினத்துள்

தூமாண் வலம்புரியின் றோற்றம்போற் புக்காரே. 755

இவ்வாறிருக்கும் நாளில், மகதநாட்டில் நகரமாகிய இராச கிருகத்தில் இருந்து ஆட்சிபுரிந்திருந்த சேணிக மன்னன் ஒருநாள் வெண்பட்டுடுத்துப் பூசனைக்குரிய பலி சுமந்து அயிராவணமேறிச் சமவசரணமடைந்து, முனிவர் கூட்டத்தே அழகும் ஒளியும் திகழ விருந்த சீவகமுனிவனைக் கண்டு வியப்புற்றுக் கணதர முனிவரை வினவி, இம் மாதவனுடைய முற்பிறப்பிற் செய்த தவங்களையும், துறந்த வண்ணத்தையும் அறியவிரும்பினன். ஏனை முனிவரும் அதனையே விழைந்தனர். அவரும் அவர் விரும்பியவாறே சீவகனது பெருமையை எடுத்துக் கூறினார். சேணிகன் முதலிய முனிவர்கள் தாமும் அவ்வண்ணமாதல் வேண்டி நாத்தழும்பேற ஏத்திச் சென்றனர்.

சீவகன் குன்றேறி நிற்றல்

முழுது முந்திரி கைப்பழச் சோலைத்தேன்

ஒழுகி நின்றசும் பும்முயர் சந்தனத்

தொழுதிக் குன்றந் துளும்பச்சென் றெய்தினான்

பழுதில் வாய்மொழிப் பண்ணவ னென்பவே. 756

வெயிற்கும் மழைக்கும் பனிக்கும் அஞ்சாது சீவகன் குன்றின் உச்சியின் நின்று தவம் முற்றுதல்

நளிசிலம் பதனினுச்சி நாட்டிய பொன்செய் கந்தின்

ஒளியொடு சுடரவெம்பி உருத்தெழு கனலி வட்டம்

தெளிகடல் சுடு தொத்துத் தீயுமிழ் திங்கணான்கும்

விளிவருங் குரைய ஞான வேழமேற் கொண்டு நின்றான். 757

இவ்வாறு ஓர் யாண்டு உணவின்றித் தவம் செய்து உயிர் தாங்கிய சீவகன் மேலும் வீடுபேற்றுக்குக் காரணமான தவத்தையும் செய்து முடித்தான். அப்போது தேவர்கள் போந்து அவன் தாளைக் கோயிலாகக் கொண்டு வழிபட்டனர். பின்பு விஞ்சை வேந்தரும் வியனில வேந்தரும் வந்து அவன் திருவடியை வாழ்த்தினர்.

அவனுக்கு ஆசனமும் குடையும் வருதல்

குளித்தெழு வயிர முத்தத் தொத்தெரி கொண்டு மின்ன

அளித்துல கோம்பு மாலை யகன்குடை கவித்த தாங்கு

வளிப்பொர வுளருந் திங்கட் கதிரெனக் கவரிபொங்கத்

தெளித்துவில் லுமிழும் செம்பொ னாசனம் சேர்ந்த தன்றே. 758

இது கண்டு தேவரும் விஞ்சையரும் போந்து முறையே அவன் திருமுன் வணங்கி வாழ்த்தினர்.

தேவியராய்த் துறந்தோர் வாழ்த்துதல்

தீவினைக் குழவி செற்ற மெனும்பெயர்ச் செவிலி கையுள்

வீவினை யின்றிக் காம முலையுண்டு வளர்ந்து வீங்கித்

தாவினை யின்றி வெந்நோய்க் கதிகளுள் தவழுமென்ற

கோவினை யன்றி யெந்நாக் கோதையர்க் கூறலுண்டே. 759

நல்வினைக் குழவி நன்னீர்த்

தயாவெனும் செவிலி நாளும்

புல்லிக்கொண் டெடுப்பப் பொம்மென்

மணிமுலை கவர்ந்து வீங்கிச்

செல்லுமாற் றேவர் கோவா

யெனுமிருள் கழிந்த சொல்லால்

அல்லிமேல் நடந்த கோவே

யச்சத்து ணீங்கி னோமே. 760

அவர்கள் பின்னரும், “இறைவ நின் திருவடி பழவினையை யறுக்கும் வாளாம்” என்று புகழ்ந்தனர்.

சீவகன் அவர்கட்கு உறுதி கூறல்

இன்பமற் றென்னும் பேரா னெழுந்தபுற் கற்றை தீற்றித்

துன்பத்தைச் சுரக்குநான்கு கதியெனுந் தொழுவிற் றோன்றி

நின்றபற் றார்வநீக்கி நிருமலன் பாதஞ் சேரின்

அன்புவிற் றுண்டு போகிச் சிவகதி யடையலாமே. 761

சீவகன் வீடு பெறுதல்

உழவித்தி யுறுதி கொள்வார்

கொண்டுய்யப் போகல் வேண்டித்

தொழுவித்தி யறத்தை வைத்துத்

துளங்கிமி லேறு சேர்ந்த

குழவித்தண் திங்க ளன்ன

விருக்கைய னாகிக் கோமான்

விழிவித்தாய் வீடு பெற்றான்

விளங்கிநால் வினையும் வென்றே. 762

அப்போதில் தேவர்கள் ஊர்திகளிற் போந்து சாந்தணிந்து பூச்சொரிந்து புகையெழுப்பி வணங்கினர். விண்ணவரும் மண்ண வரும் பரிநிர்வாண மென்னும் திருமணத்தை விதிப்படி செய்து வலஞ்செய்து கொண்டு போயினர்.

வீடுபேற்றின்பம்

கேவல மடந்தையென்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கண்

பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்னொரு பாக மாகக்

காவலன் வானோர் கூறாக்கண்ணிமை யாதுபுல்லி

மூவுல குச்சியின்பக் கடலினுள் மூழ்கினானே. 763

சீவகனுடைய தேவிமாராகிய காந்தருவதத்தை முதலியோர் ஓர் எறும்பிற்கும் ஏதம் வாராவகையில் இருந்தும், நடந்தும், கிடந்தும் தாம் மேற்கொண்ட தவம் முற்றினார்.

சீவகன் தேவிமார் பெண்பிறப்பு நீங்க நோற்றல்

சூழ்பொற் பாவையைச் சூழ்ந்து புல்லிய

காழகப் பச்சை போன்று கண்டெறூஉம்

மாழை நோக்கினர் மேனி மாசுகொண்டு

ஏழைப் பெண்பிறப் பிடியச் சிந்தித்தார். 764

அவர்கள் இந்திரராய்த் துறக்க மெய்துதல்

ஆசை யார்வமோ டைய மின்றியே

ஓசை போயுல குண்ண நோற்றபின்

ஏசு பெண்ணொழித் திந்தி ரர்களாய்த்

தூய ஞானமாய்த் துறக்க மெய்தினார். 765

அவர்கள் துறக்க வின்ப மார்தல்

காம வல்லிகள் கலந்து புல்லிய

பூமென் கற்பகப் பொன்ம ரங்கள்போல்

தாம வார்குழற் றைய லார்முலை

ஏம மாகிய வின்ப மெய்தினார். 766

நந்தட்டனும் தோழன்மார்களும் ஐம்பொறியையும் தம் வயமாமாறு நோற்றுத் தவம்செய்தல்

பாவ னைமரீஇப் பட்டி னியொடுந்

தீவி னைகழூஉந் தீர்த்தன் வந்தியாப்

பூவுண் வண்டன கொட்பிற் புண்ணியர்

நாவின் வேட்கையும் நஞ்சி னஞ்சினார். 767

இவர்கள் தேவராதல்

கருவிற் கட்டிய காலம் வந்தென

உருவ வெண்பிறைக் கோட்டி னோங்கிய

அருவிக் குன்றின்மேன் முடித்திட் டைவரும்

திருவின் றோற்றம்போற் றேவ ராயினார். 768

தேவரின்பம் நுகர்தல்

மண்கனிந்த பொன்முழவ மழையின் விம்ம

மாமணியாழ் தீங்குழல்க ளிரங்கப் பாண்டில்

பண்கனியப் பாவைமார் பைம்பொற் றோடுங்

குண்டலமுந் தாம்பதைப்ப விருந்து பாட

விண்கனியக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்ப

முரிபுருவ வேனெடுங்கண் விருந்து செய்யக்

கண்கனிய நாடகங்கண் டமரர் காமக்

கொழுந்தீன்று தந்தவந்தாம் மகிழ்ந்தா ரன்றே. 769

நூலாசிரியர் அவையடக்கம் கூறல்

செந்தா மரைக்குச் செழுநாற்றங் கொடுத்த தேங்கொள்

அந்தா மரையா ளகலத்தவன் பாத மேத்திச்

சிந்தா மணியின் சரிதஞ் சிதர்ந்தேன் தெருண்டார்

நந்தா விளக்குச் சுடர்நன்மணி நாட்டப் பெற்றே. 770

குருக்கள் வணக்கம்

செய்வினை யென்னு முந்நீர்த்

திரையிடை முளைத்துத் தேங்கொள்

மைவினை மறுவி லாத

மதியெனுந் திங்கண் மாதோ

மொய்வினை யிருள்கண் போழு

முக்குடை மூர்த்தி பாதம்

கைவினை செய்த சொற்பூக்

கைதொழு தேத்தி னேனே. 771

சீவக சிந்தாமணி - சுருக்கம்

முடிந்தது.

பாட்டு முதற்குறிப்பகராதி

பக்கம்  பாட்டு

எண்     எண்

அகப்படு 261 593

அசைவிலா 41 33

அஞ்சனக் 221 488

அடங்கல 308 722

அடல்வண்ண 173 377

அடிகளோ 294 680

அடிசில் 36 17

அடிநிழல் 131 270

அடியிறை 243 545

அடியுலக 149 311

அடுத்தசாந் 297 687

அடைதும் 72 113

அணங்கர 235 523

அணிகலவ 186 412

அணிநிலா 280 649

அண்ணல்>அவ் 156 328

அண்ணல்பிற 290 670

அந்தரத் 48 50

அந்நகர்க் 171 370

அமரிகைக் 62 89

அம்புஞ்சிலை 262 598

அம்பொரை 233 517

அம்பொற் 232 513

அம்மலர 92 162

அரக்குநீர் 296 683

அரசர்தம் 259 587

அரத்தக 273 627

அரியகொள் 169 362

அருந்தவக்கி 255 573

அருந்தவக்கொ 292 673

அருப்பிள 60 82

அருமையின் 303 705

அரும்பேர் 100 186

அரும்பொற் 57 75

அரும்பொனு 65 99

பக்கம் பாட்டு

எண் எண்

அருவிலைய 286 663

அருளுமா 287 664

அருள்தேர் 162 348

அருள்வலி 141 294

அல்லதுவும் 218 480

அல்லியரு 290 668

அல்லியுட் 177 389

அழலுறு 70 110

அழல்பொ 145 301

அளந்துதா 44 40

அள்ளிலைப் 249 556

அறிவினாற் 66 101

அறுகுவெண் 273 626

அற்றுமன் 234 518

அன்பினின் 163 352

அன்புநூலா 190 418

அன்பொட்டி 241 539

அன்றுசூடிய 270 616

அன்னங்க 296 685

அன்னம்தா 165 357

அஃதேயெம் 219 484

ஆங்குருக் 207 451

ஆசையார் 324 765

ஆடவரிரிய 242 542

ஆடவர்தன 234 519

ஆடியல் 49 53

ஆதிவேதம் 148 308

ஆம்பொருள் 66 201

ஆய்களிற் 135 282

ஆய்ந்தபொ 277 637

ஆய்ந்தகே 276 635

ஆரமின்ன 277 640

ஆரழன்மு 292 674

ஆரறிவிக 44 39

ஆர்வவேர் 71 111

பக்கம்  பாட்டு

எண்     எண்

ஆவதாக 138 287

ஆளற்றமி 77 127

ஆனாதுவேர் 251 562

ஆனைமும்ம 285 661

இசைதிறத் 95 172

இசையினில் 102 191

இஞ்சிமா 39 25

இடம்பட 282 653

இடியுமிழ் 176 386

இடுக்கண் 84 142

இதுஎனஉரு 122 242

இதுபள்ளி 144 300

இந்நகரப் 282 654

இந்நாட்டி 194 429

இம்பரி 46 44

இலங்குகுங் 302 703

இலங்கு-னோ 243 546

இலங்கு-னார 300 694

இலங்கெயி 255 574

இலையார் 100 184

இல்லாளையஞ் 212 596

இழுதன்ன 182 405

இழைத்தபொ 272 624

இளமையங் 288 666

இளையவள் 247 555

இளையவற் 240 537

இறங்கிய 244 548

இறுமருங் 202 443

இற்றதனா 47 48

இற்றதென் 278 642

இனையல்வே 191 420

இனையைநீ 67 103

இன்கனிகவ 301 696

இன்னதன்மை 303 707

இன்பக்கார 114 222

இன்பமற் 322 761

இன்றைய 87 150

இன்னவர்க 238 533

இன்னவாறு 184 408

பக்கம்  பாட்டு

எண்     எண்

இன்னன்எ 97 175

இன்னாப்பிற 148 309

இன்னியமு 105 199

இன்னிழல் 117 229

ஈடுசால் 35 14

ஈட்டஞ் 126 257

ஈன்றதாயா 279 646

ஈன்றதாய் 132 273

உடம்பினோ 89 156

உரிமைமு 55 70

உருவச்செங் 277 639

உலகமூன் 149 310

உலந்தநா 251 564

உலமரு 284 658

உழவித்தி 323 762

உள்பொரு 308 724

உறுதிசூழ் 64 95

உறுதிநீ 147 307

உறுதிமுன் 116 227

உறுவர்ப்பே 307 718

ஊழ்வினை 304 711

ஊற்றுநீர்க் 144 299

ஊனுடைக் 311 730

ஊன்சுவைத் 146 306

ஊன்விளை 285 660

எங்கணான் 223 492

எங்கள்வினை 209 457

எங்கோமற் 219 483

எண்கொண் 265 606

எண்ணமென் 267 609

எண்ணற்க 299 691

எம்மனை 73 118

எரிதலைக் 180 397

எரிநீரவே 305 712

எரிபொன் 162 346

எரிமணிக் 259 586

எரியொடு 226 499

எல்லிருட் 223 491

எவ்வூரீர் 181 401

பக்கம்  பாட்டு

எண்     எண்

எழுதரு 42 34

எள்ளுநர் 105 200

எனக்கு 43 36

எனக்குயிர்ச் 225 497

என்புநெக் 55 71

என்பெழுந் 60 84

என்றவன் 232 516

என்றுகூற 72 114

என்னலால் 52 62

என்னுங்கட் 264 603

என்னுறுநி 204 448

என்னைகேளீ 189 416

என்னைக்கொ 118 231

ஏமநன் 170 366

ஏறங்கோள் 80 137

ஏற்றகைத் 231 512

ஏற்றியுமி 277 638

ஐந்நூறு 76 126

ஐயருறை 207 453

ஐயர்கூற 169 365

ஐயற்கென் 244 550

ஐயனைக்கண் 69 107

ஐயனேஅறி 111 214

ஐயனையாம 206 450

ஐயாண்டெ 299 692

ஒல்லைநீ 263 601

ஒழுக்கமே 307 719

ஒழுக்கிய 61 85

ஒன்பதுவகை 307 720

ஒன்றுடைப் 269 615

ஒன்றேயெ 197 434

ஓடுந்திரை 85 146

ஓருயிரொ 292 672

ஒலையுட் 253 567

கங்கைமாக் 260 590

கடற்சுற 143 295

கடிமலர்ம 272 621

கடிமலர்ப் 302 702

கடுகிய 131 269

பக்கம்  பாட்டு

எண்     எண்

கடுமதக் 212 466

கடையிலா 309 726

கட்டியங்கார 263 600

கட்டிலேறி 232 514

கணமலை 295 682

கணிபுனைந் 159 338

கண்ணிவே 158 334

கண்டால் 86 148

கண்ணிற்கா 155 326

கண்ணுமிழ் 212 467

கண்ணும் 121 239

கண்ணுறக் 174 380

கண்ணென 34 12

கண்ணெனு 97 177

கண்ணோகய 315 740

கண்துயி 133 276

கந்துகப் 128 260

கந்துமா 39 26

கயற்கணா 160 340

கரியவ 66 102

கருங்கொ 95 171

கருஞ்சிறை 150 315

கருந்தட 117 230

கருமம்நீ 245 552

கரும்பலா 312 731

கரும்பார் 47 49

கரும்புக 35 15

கருவிவா 99 180

கருவிற்கட் 325 768

கரைகொன் 129 263

கரையுடை 274 630

கலந்தது 103 195

கலைத்தொகை 176 385

கலையின 72 112

கல்லார்மணி 255 572

கழலவாய் 215 474

கள்வாய் 81 138

கள்ளத்தா 253 568

கள்ளமூப் 238 536

பக்கம்  பாட்டு

எண்     எண்

கள்ளலை 61 87

கறந்தபா 157 331

கற்பால் 30 4

கனைகதிர்க் 228 503

கன்னிநா 98 179

கன்னிய 123 247

காசறு 107 202

காதலங் 314 735

காதலனல் 294 678

காதலாளு 193 426

காதல்மா 188 415

காதல்மிக் 193 427

காதலஞ் 317 745

காதன்மை 175 383

காதார்குழை 265 605

காமம்பை 304 709

காமவல் 324 766

காமனேசெ 234 520

காயமீன் 73 117

காய்சின 140 293

காய்மாண் 31 5

காரின்மு 255 571

கார்தோன்ற 227 501

கார்விளை 74 121

காவல 43 37

காவிற்கண் 109 207

காழகமூட் 146 304

காளமா 257 581

காளையாம் 224 493

காற்படை 256 578

கானத்தி 186 411

குஞ்சர 313 734

குடிபழி 312 732

குடைநிழற் 215 473

குரவம்பா 298 690

குலத்தொடு 78 132

குலம்நினை 79 135

குழவிவெண் 32 7

பக்கம்  பாட்டு

எண்     எண்

குழையுடை 104 198

குளநென் 276 634

குளித்தெழு 320 758

குளிர்மதி 275 631

குறிஞ்சி 186 410

குறுத்தாட் 94 169

குறையணி 281 650

குன்றிரண் 154 324

கூடியமு 309 725

கூந்தலை 296 684

கூறப்பட் 109 206

கூற்றம் 64 96

கூற்றின் 74 120

கூற்றென 119 235

கெடலருங் 224 495

கெடுதலப் 304 708

கெலுழனோ 226 500

கேட்பது 245 551

கேவலமட 323 763

கைகவி 68 105

கைப்பழமி 301 697

கைப்பொரு 189 417

கைம்மாண் 209 458

கையகப் 120 237

கையாற்பொ 182 406

கையினால் 120 238

கையொடு 153 322

கொடியணி 311 729

கொடியெழு 271 620

கொடுஞ்…யா 126 256

கொடுஞ்சிலை 258 585

கொடுமா 74 119

கொடையுளு 77 128

கொண்டபூ 278 643

கொழித்திரை 282 652

கொழுவாய் 266 608

கோட்சுறா 37 19

கோட்டிள 79 136

கோட்டுமீன் 263 602

பக்கம்  பாட்டு

எண்     எண்

கோதைபுற 99 183

கோதையும் 101 188

கோதையொ 236 526

கோதைவேல் 211 463

கோமான 320 755

கோலமணி 238 534

கோலிழுக் 78 131

கோவிந்த 274 628

கோளியங் 69 108

சங்குடை 88 152

சாதலும் 54 67

காந்தங் 317 747

சாமெனில் 190 419

சிங்கநடப் 291 671

சிலம்பொ 121 240

சிலைத்தொ 95 170

சில்லரிக் 235 522

சின்னப்பூ 258 584

சீறடிய 237 528

சுண்ணமெ 110 209

சுண்ணம்தோ 110 211

சுழலும் 178 392

சுண்ணம்நல் 111 212

சுந்தரத் 271 619

சுற்றார் 128 262

சூரியற் 256 577

குழ்பொற் 324 764

செங்கச்சிள 316 742

செங்கண் 56 73

செண்பக 258 583

செந்தாமரை 325 770

செந்தார்ப் 125 252

செப்பியசீ 308 723

செம்பொன் 29 2

செயிர்ப்பொ 192 424

செய்வினை 326 776

செருநிலை 143 297

சென்றதோ 295 681

சென்றார் 125 253

பக்கம்  பாட்டு

எண்     எண்

சென்றுகா 113 221

சேதாநறு 79 134

சேலைவெ 124 250

சேல்நடந் 313 733

சேறமை 33 11

சொல்ம 124 248

சொல்லரும் 34 13

சொல்வே 314 737

சோலைமஞ்ஞை 112 218

தடமுலை 300 693

தண்காஞ்சி 94 168

தண்டிலத் 274 629

தண்டுவலி 236 525

தண்ணம் 114 223

தம்முடைப் 103 194

தம்மைநிழ 305 713

தயங்கிணர் 161 342

தரணிகாவ 210 461

தருமன் 39 28

தவம்புரி 92 161

தவளைக் 50 56

தழுமுற்றும் 216 476

தற்புறந் 259 588

தனியேது 290 669

தன்துணை 125 251

தன்னமர் 40 30

தன்னையா 50 56

தாமரைச் 250 543

தாமரைத் 204 447

தாமரைப் 242 559

தாயிலாக் 188 414

தாயுயர் 78 130

தார்ப்பொ 51 60

தாழ்தரு 172 373

தாழ்ந்துல 315 739

தானமர் 46 45

திங்களங்க 113 219

திங்களங்கு 176 387

திங்களும்ம 158 335

பக்கம்  பாட்டு

எண்     எண்

திங்களோடு 260 589

திங்கள்முக் 38 23

திங்கள்சேர் 130 268

திண்ணிலை 53 65

திண்பொரு 206 449

திருந்தியகீ 320 754

திருந்துமல் 178 393

திருமக 101 190

திருமணி 178 390

திருமல்க 231 511

திருவமா 268 612

திருவிற்கும் 175 384

திரைகள் 83 140

திரைபொரு 33 9

திரையிடை 201 442

திரைவள 294 679

திறந்தமணி 283 656

தீண்டினா 50 57

தீத்தும்மு 265 604

தீந்தொடை 92 164

தீம்பா 126 255

தீராவினை 149 313

தீவினைக் 322 759

தீவினையுடை 246 554

துறக்கம் 217 477

துறுமலர் 40 31

துன்பமு 90 158

துன்பத்தால் 163 352

தூங்குசி 83 139

தூமஞ்சால் 317 746

தூமம்கம 130 266

தூம்புடை 315 738

தென்றிசை 173 375

தேய்பிறை 318 749

தேர்த்தொகை 213 469

தேவரேதா 305 715

தேறினேன் 243 547

தேனுயர் 96 174

தேனெய் 303 704

பக்கம்  பாட்டு

எண்     எண்

தேன்தலை 38 24

தேன்நிரை 31 6

தொடுத்தாங் 262 597

தொத்தணி 46 46

தொல்லைநம் 54 68

தொழுததம் 221 486

தோடேந்து 146 303

தோய்ந்த 56 72

தோளார் 132 274

தோளினாலெ 257 582

தோளினால் 51 61

தோற்றனள் 97 176

நங்கைக்கின் 153 323

நங்கைநின் 298 689

நங்கைநீ 53 66

நச்சுநா 39 27

நஞ்சமேய் 271 617

நஞ்சினை 165 358

நட்டவற் 136 283

நரம்புமீ 287 665

நல்தானம் 182 402

நல்லசுண் 111 215

நல்லொளி 361 595

நல்வினைக் 322 760

நல்வினையு 261 592

நளிசிலம் 321 757

நறவிரிய 237 530

நறையும் 38 22

நற்றவம் 36 18

நற்றொடி 236 524

நற்றோ 129 265

நன்மன 104 197

நன்முடி 47 47

நன்றுஅப் 227 502

நன்னகர் 86 149

நன்னெறி 49 52

நாகநாண் 108 203

நாட்கடன் 228 504

நாணொடு 246 553

பக்கம்  பாட்டு

எண்     எண்

நாண்மெய் 135 281

நாயுடம் 115 226

நாவாய் 85 145

நாளைவரு 218 481

நாளொடு 59 81

நாற்கடல் 213 470

நிரைகதி 37 20

நிரைவீழ் 162 345

நிலத்தினீ 226 498

நிலந்தினக் 174 379

நிலம்பொ 69 106

நிழன்மணி 257 580

நிறைத்திங் 136 284

நினைப்பரு 175 382

நின்மகள் 88 153

நீட்டியச் 170 367

நீணிலம 53 64

நீரகம் 134 279

நீர்தங்கு 230 508

நுங்களை 104 196

நூற்படு 89 155

நூனெறி 66 100

நெடுந்தகை 155 325

நெய்கனிந் 167 361

நெய்வளங் 302 701

நெறிமருப் 33 10

நோக்கவே 218 482

நோய்முதி 170 368

நோற்றிலர் 133 278

பகைநரம் 251 563

பஞ்சியடி 45 42

படம்விரி 119 234

படுபழி 44 38

பட்டபழி 217 479

பட்டவெல் 191 421

பட்டியன் 93 166

பண்கெழு 46 43

பண்ணார்ப 316 744

பண்ணொன் 100 187

பக்கம்  பாட்டு

எண்     எண்

பரவைவெண் 303 706

பருகிப்ப 161 344

பருகினேற் 298 688

பருமித்த 85 144

பல்கிழி 48 51

பல்லினா 75 122

பற்றாமன் 58 77

பனிமதி 184 407

பன்மாண் 30 3

பாகவரை 126 254

பாங்கின் 169 364

பாடலொ 150 314

பாடலோசை 108 205

பாடினான் 241 541

பாண்குலாய் 279 647

பார்நனை 251 579

பார்மலி 214 472

பாலவியும் 127 258

பாலாராவி 133 275

பாலுடை 63 92

பாவமிது 236 527

பாவனைம 324 767

பாவைநீ 122 243

பாற்கடன் 272 623

பானுரையி 275 633

பிண்டமுண் 212 468

பிண்டியின் 319 751

பிரிந்தவ 163 351

பிள்ளையு 73 116

பிறந்தநீ 58 78

பிறையது 51 59

பிறையார் 100 185

பின்னிவிட் 197 433

பீழைசெய் 91 159

புகழ்ந்துரை 293 677

புடைத்தெ 115 225

புணர்வின் 162 347

புரிமுத்த 261 594

புல்லாரு 316 743

பக்கம்  பாட்டு

எண்     எண்

புள்முழு 200 439

புனைகதிர் 60 83

புன்காஞ்சி 94 167

பூங்கழல்குரு 57 74

பூங்கழலா 195 430

பூத்தகோ 73 115

பூத்தொழியா 174 378

பூந்துகில் 318 748

பூமியையா 159 336

பூமுற்றுந் 308 721

பூவார் 129 264

பூவியல் 201 441

பூவினுள் 232 515

பூவினுள்பிற 59 80

பூவுடைத் 210 460

பூவுண்ட 230 509

பூவைகிளி 310 727

பூவையும் 279 644

பெண்ணுயிர் 118 233

பெண்பெற்ற 281 651

பெண்மைநாண் 64 94

பெரியவின் 306 717

பெருமகன் 254 570

பெருமுழங் 283 655

பெற்றகூ 279 645

பேதைமை 163 350

பேரிடர் 284 659

பேரினும் 122 244

பைங்கண்ம 230 510

பைங்கண்உ 268 614

பைங்கதிர் 152 320

பைம்பொன்நீ 110 210

பைம்பொன்இமி 93 165

பையரவி 181 400

பொய்கைபோ 260 591

பொய்கையு 166 359

பொருந்தலா 222 489

பொருந்திய 61 86

பொறிகுலா 202 444

பக்கம்  பாட்டு

எண்     எண்

பொறிமயி 222 490

பொற்குடந் 293 676

பொற்குன் 124 249

பொற்புடை 203 446

பொன்னகர 315 741

பொன்னங் 250 561

பொன்னணி 137 285

பொன்னறை 238 535

பொன்னியன் 242 541

பொன்னிலத் 173 374

போகமக 254 569

போதவிழ் 151 318

போதுலாம் 156 327

போதெனக் 150 316

போர்ப்பண் 75 124

பௌவநீ 109 208

மங்கலம 208 456

மங்கலப் 272 622

மங்கைநல் 112 217

மட்குடம் 115 224

மட்டவிழ் 243 544

மட்டார் 182 403

மணிமத 127 259

மணியறைந் 62 88

மணியியல் 293 675

மணியிரு 118 232

மணியுறை 319 753

மணிவண்டு 177 388

மண்கனி 325 769

மண்டலி 153 321

மண்ணக 41 32

மண்மிசை 143 298

மதிதரன் 159 337

மதியினுக் 119 236

மதுமுகத் 203 445

மத்திரிப் 102 192

மந்தார 229 507

மந்திரம் 151 317

மயிலினா 157 330

பக்கம்  பாட்டு

எண்     எண்

மராமரம் 195 431

மருமக 40 29

மலைத்தொகை 139 291

மழகளிற் 160 339

மறுவற 283 657

மறுவறமனை 70 109

மற்றடிகள் 217 478

மற்றவள் 92 163

மற்றிம் 111 213

மனத்திடை 116 228

மன்றல்நா 306 716

மன்னிரை 75 123

மன்னர்கோ 199 437

மன்னவஅ 134 280

மன்னவன்ப 49 54

மன்னவன்நி 214 471

மன்னனாற் 140 292

மன்னன் 137 286

மன்னுநீர் 180 398

மாசிலாள் 172 372

மாசொடு 208 454

மாதர்தன் 278 641

மாதர்யாழ் 95 173

மாநகர் 138 288

மாலையுட் 229 506

மாலைவாடி 158 333

மாலைவெள் 147 305

மாற்றமொ 113 220

மாற்றவ 252 565

மிகவாய 163 349

மின்தோய் 249 557

மின்னிலங் 138 289

மின்னுங் 268 613

மின்னுமி 83 141

மின்னுமிழ் 273 625

மின்னேர் 130 267

முடிகெழு 200 440

முத்திலங் 164 353

முயங்கினா 179 394

முரசமார் 271 618

முரணவி 149 312

முழவென 65 98

முழுதுமு 321 756

முறுவல் 187 413

முனிமைமு 192 422

முனிவரு 89 154

முன்னொரு 209 459

மூதித்தே 45 41

மூவாமுத 29 1

மெய்ப்படு 297 686

மெய்வகை 171 369

மெலியவர்பெ 301 698

மெல்விர 63 93

மெள்ளவே 302 700

மேகம்ஈன் 65 97

மைதோய் 250 560

மையலங் 123 245

மொய்வார் 263 599

மோட்டும் 76 125

யாண்டை 178 391

யாம்மகள் 128 261

யாவளே 121 241

யாவனே 98 178

யானலன் 225 496

யானைவெண் 185 409

வஞ்சவாய் 179 395

வடதிசைக் 101 189

வடிமலர் 164 354

வடிவமிது 237 531

வணக்கருஞ் 211 464

வணங்கு 156 359

வண்சிறைப் 192 423

வண்டார் 62 90

வண்ணப்பூ 221 487

வண்தளிர் 146 302

வண்டுதுயி 207 452

வண்டுதேன் 235 521

வண்டுமொ 55 69

வண்டுவாழ் 193 425

வந்தவர 237 529

பக்கம்  பாட்டு

எண்     எண்

வயிரவ 37 21

வருந்தியீன் 198 435

வரையின் 157 332

வரையுடுத்த 208 455

வலம்புரிபொ 42 35

வலம்புரியீ 90 157

வல்லதெ 238 532

வல்லான் 216 475

வலையவர் 285 662

வளர்த்த 161 343

வளையசுந் 212 465

வள்ளல்தா 152 319

வள்ளியின் 169 363

வாக்கணங் 174 381

வாக்கினிற் 276 636

வாசமிக் 180 399

வாசவெண் 108 204

வாட்டிறல் 224 494

வாணிகமொ 102 193

வாய்ந்தஇம் 240 538

வாரணிம 310 728

வாரம்பட் 112 216

வார்சிலை 171 371

வார்தளிர் 160 341

வாளிழுக் 131 271

வாளுறை 63 91

வாள்களா 266 607

வானமீ 99 181

வானவர்மக 300 695

வானவர்மல 319 752

வானிடை 256 575

வான்தரு 91 160

விசயனே 199 438

விசயையெ 210 462

விஞ்சைகள் 86 147

விஞ்சைய 256 576

விண்ணக 77 129

விண்ணவர் 99 182

விண்ணும் 139 290

பக்கம்  பாட்டு

எண்     எண்

விண்ணோர் 314 736

விண்பாற் 290 667

விதையத்தா 252 566

விம்முறு 58 79

விரியுமாலை 267 610

விரைசெய் 165 356

விலக்கில் 35 16

விலங்கி 142 295

வில்லிடு 244 549

விளங்குபா 249 558

விளங்கொளி 275 632

விளங்கொளி விசு 318 750

விளைக 52 63

விழுத்திணை 180 396

விழுமணி 220 485

விற்றிறல் 196 432

வினைக்கும் 165 356

வினையது…கா 133 277

வினையது…வ 84 143

வீங்கோத 173 376

வீடில்பட் 32 8

வெஞ்சின 123 246

வெண்ணெய் 79 133

வெருவிமா 267 611

வெவ்வாய் 58 76

வெவ்வினை 304 710

வெள்ளிவே 87 151

வெள்ளைமை 280 648

வேட்கைமை 301 699

வேட்கையூர் 194 428

வேட்டன 305 714

வேண்டுவ 67 104

வேந்தனால் 166 360

வேந்தொடு 132 272

வேம்என் 198 436

வேலின்ம 50 58

வேற்றுவரில் 183 404

வேனெடுங் 229 506

-   திருத்தக்கதேவர் செய்தவை இரண்டாயிரத்து எழுநூறு என்றே சிந்தாமணியின் ஓம்படைச் செய்யுள் உரை தெரிவிக்கின்றது. மிகுந்த நானூற்று நாற்பத்தைந்து செய்யுட்களும் கந்தியாரால் செய்யப்பட்டவை யென்பர்.

-   PP. 375 Ancient India By Dr. S.K. Iyengar

-   Johnson’s Preface to Shakespeare.

சித்த சரணம் - சித்தனை வணங்குதல், காதி, அகாதி என்ற இருவகைக் கன்மங்களையும் வென்று, உடம்பைத் துறந்து பரிநிர்வானம் பெற்று மூவுலகத்தின் உச்சியில் இருப்பவன்,

1. மூவா முதலா உலகம் - முடிவும் தோற்றமும் இல்லாத உலகம், உலகம் நித்திய மென்பது சமண் சமயக் கருத்து, தாவாத இன்பம் - கெடாத இன்பம். ஓவாது - விட்டு நீங்காது, குணத்து ஒண்ணிதிச் செல்வன் - குணமாகிய ஒள்ளிய நிதியையுடைய அருட்செல்வன், தேவாதி தேவன் - தேவர்களுக்கு ஆதியாகிய தேவன்.

தேவாதி தேவன், தலையாய இன்பம், மூன்றும் ஏத்தத் தன்னின் எய்துதலால், ஓவாது நின்ற குணத்துச் செல்வன் என்ப, அவன் சேவடி சேர்தும் என முடிக்க,

2. அருக சரணம் - அருகனை வணங்குதல், இதுவே முதற்கண் இருக்க வேண்டிய தெனினும், குருக்கள் சித்த சரணப் பாடலை முதற்கண் வைக்க என்றாராகலின், இங்கு இரண்டாவதாக வைக்கப்பட்டது. வரை - மலை, செம்பொன் மலைமேல் பசும்பொன் எழுத்திட்டது போல் என்றது இல்பொருளுவமை, பிதிர்வின் - துகள்போல, மறு - உடம்பிற் கிடக்கும்

புள்ளி, வெம்பும் சுடரின் சுடரும் - மேல் செல்லச் செல்ல வெதுப்பும் ஞாயிற்றினும் மிக விளங்கும், வெம்பும் சுடர் - இள ஞாயிறு.

செம்பொன்மலையில் பச்சை நிறப் பொன்னால் எழுத்திட்டது போல் வண்ண வேறுபாடு கொள்ளக் கூடாதென்பர் நச்சினார்க் கினியர்.

3. துன்னி நின்ற - மேற்கொண்டிருந்த, சொல் - புகழ், குழு - ஆசிரிய உபாத்தியாய சாதுக்கள், தொக்க நன்மாண்பு - சேர்ந்ததனால் உளதாகும் நல்வினைப் பேறு, நாட்டுதல் - கூறுதல், நாட்டுதல் மாண்பு - நாட்டுதலாகிய நல்வினைப் பேறு.

இல்லாதான் கூறிய குணங்கட்கு இடனாய், அறம் துள்ளி நின்ற, குழுவின் சரண் என்று இயையும், பன்மாண் குணமாவன, எண்பத்து நான்கு இலக்கம் குணவிரதம், நூறு கோடி மகா விரதம், ஆயிரத் தொண்ணூா று சீலாசாரம் என்பர்.

4. கற்பால் - கல்வின் பகுதி, உமிழ்ந்த - தந்த, நற்பால் - அதன் நன்மைப் பகுதி, என்றது ஒளி, அழியும் - கெடும், நிறைந்த - கலைநிறைந்த, பொற்பா - அழகாக, இழைத்துக் கொளற்பாலர் - அமைத்துக் கொள்ளுதற்குரியர்.

5.  தெங்கின்பழம் - தெங்கின் முற்றிய காய், வீழ - வீழ்ந்ததனால், கமுகு - பாக்கு மரம், பூமாண்ட தீந்தேன் தொடை - அழகிய மாட்சிமைப்பட்ட தேன்போல இனிய நீரையுடைய தாறு(குலை), கீறி - கிழித்து, வருக்கை - பலாவின் பழம், போழ்ந்து - பிளந்து, என்று - என்று பெயர் கூறப்பட்டு, இசையால் - புகழால், திசை போயது - எல்லாத் திசையிலும் பெயர் பரவியது.

6.  தேன் நிரைத்து - தேன் இறால் வரிசைப்படக் கிடந்து, வரைச்சென்னி - மலையுச்சி, வெள்ளி வெண்கோல் - வெள்ளியால் செய்த வெண்மையான கோல், நிரைத்தனபோல் - வரிசையாக நாட்டியது போல, தாரை - மழைத்தாரை, மணந்து - தம்மில் கூடி, வான் - மழை.

வெண்கோல்களை விசும்புற நிரைத்தனபோல், வான் தாரைகளை நிரைத்து மணந்து மொய்வரைச் சென்னியின்மேல் நிரைத்துச் சொரிந்தன என்க.

7.  குழவி வெண்மதிக் கோடு - பிறைத் திங்களின் கோடு, உழ - கிழிப்பதால், கீண்டு - கிழிப்புண்டு, முழவின் - முழவின் முழக்கம் போல, அதிர் - முழங்கும், மொய்வரை - அடுக்கடுக்காய் நிற்கும் மலைக்கூட்டம், குழுவின் மாடம் - கூட்டமாய் உள்ள மாட மாளிகைகள்.

மலையிலிருந்து இழியும் அருவிகள் யாவும், பிறைத் திங்களால் கிழிப்புண்டு இழியும் தேனருவியும், உயரிய மாடங்களில் தொங்கும் வெண்துகிற் கொடியும் செந்துகிற் கொடியும் போல இருந்தன.

8.  வீடில் பட்டினம் - விடுதல் இல் பட்டினம், குடிகள் விட்டு நீங்குவதில்லாத பட்டினம், வீடு - முதனிலை திரிந்த தொழிற் பெயர், வௌவிய - கொள்ளைகொண்ட, கையரிக் கொண்டு - கையால் அரித்துக் கொண்டு, மோடு கொள் புனல் - பெருமை (மிகுதி, பெருக்கு) கொண்ட அருவி நீர், மூரி - வலிய, முற்றியதோ என - வனைத்துக் கொண்டதோ என்று கண்டோர் சொல்லுமாறு,

பட்டினமொன்றைக் கொள்ளை கொண்ட வேந்தன் ஒருவனைப் போல, காட்டைக் கவர்ந்து, அதனுட் கிடந்த பொருள்களை வாரிக்கொண்டு சென்று, கடல் நாட்டை வளைத்துக்கொண்டதோ என்னுமாறு அருவி நீர் பெருகிச் சென்றது என்க,

9.  திரை - அலை, கனை கடல் - முழங்குங் கடல், செல்வன் - கணவன், சூட்டுவான் - வானீற்று வினையெச்சம், சரயு என்பது சரை என வந்தது, சரையெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக் குரை புனற் கன்னி - சரை யென்னும் பெயரினையும், தடமாகிய விரும்பிய முலையினையுமுடைய ஒலிக்கின்ற புனலாகிய கன்னி, தடம் - மடு, தடம் முலைபோற் சுரத்தலின், முலையாயிற்று, கன்னி யென்னுஞ் சொல்லைப் புனல் என்பது இணைந்து அஃறிணையாக்குதலால், இழிந்தது என அஃறிணை வினை கொடுத்தார், என்ப - அசை.

சரயு என்னும் பெயருடைய புனற்கன்னி, கடற்செல்வனாகிய தன் கணவன் சென்னிமேல் நுரையென்னும் மாலையைச் சூட்டுவதற்காக, அருவிநீர் கொணர்ந்த பொருள்களையும் நுரையையும் சுமந்துகொண்டு சென்றது என்க.

10. நெறிமருப்பு - அறல்பட்ட கொம்பு, ஒருத்தல் - கடா, செறிமருப்பு - நெடிது செறிந்த கொம்பு, ஏற்றினம் - எருதுகளின் கூட்டம், சிலம்ப - முழங்க, பண்ணுறீஇ - ஏரில் பூட்டி, இரிய - நீங்க, வெறி - மணம்.

எருமை யினத்தையும் எருதினத்தையும் ஏரிற் பூட்டிக் கழனியிலே வரால் மீனினம் நீங்கியோட உழுவோர் தொகை வெள்ளமென்னும் எண்ணாம் என்க.

11. சேறமை சேறு - சேறு பதம்பட்ட வயல், வீறோடு விளைக - சிறப்புற விளைக, தொழுது- நிலமகளைத் தொழுது, நாறு - நாற்று நடுதல், நாட் செய்வார் - நாள் பார்த்து நடுவார், கூறிய கடைசியர் - இத்துணை நிலத்திற்கு இத்துணைப் பேர் என்று கொண்டு, முன்னாளே சொல்லி வைத்த நடவுமகளிர்.

வயலில், ‘நன்கு விளைக’ என விதைப்பவர், நடுதற்குப் பதமிது எனத் தெரிந்து பறித்து, நடவுக்குரிய நாள் கருதி வைப்பர், உழவர் மகளிர் கூட்டங் கொண்டு சென்று வயலில் நடுவார் என்க.

12. ஓம்பினார் - நீக்கினார், உள்புகார் - அருகுஞ் செல்லார், வண்ணம் - அழகு, வாள் - ஒளி, பண் - இராகம், இதனை வடநூலார் சம்பூரண ராகம் என்பர். எழுத்தியல் பட - எழுத்தின் வடிவு தோன்ற, கட்டல் - களை .யெடுத்தல்.

கலையெடுக்கச் சென்றவர், குவளை காதலியின் கண்போல் மலர்ந்தமையின் அதனையும், தாமரை அவர்தம் முகம்போல இருந்தமையின் அதனையும் களையாராய்ப், பண்ணை எழுத்தின் வடிவுதோன்ற இனிது பாடினர், உழவர் செய்கை இது என்க.

13. சொல் - நெல், சூல் - கரு, அருஞ் சூல் - சூலுண்டு என்று சொல்லுதற்கு அரிய, தேர்ந்த - மெய்ப்பொருளை யாராய்ந்த, காய்த்த - விளைந்தன.

நெல். சூற்பாம்புபோல் கருத் தாங்கி, செல்வம் பெற்ற கீழோர்போல் தலை நிமிர்ந்து நின்று, கற்ற நல்லோர்போல் விளைந்து வளைந்து கிடந்தன என்க.

14. போர்பு - கட்டுப்போர், ஈடு - இடுதல், போத்து - கடா, மாடு - பக்கம், தெழித்து - உரப்பி, வை - வைக்கோல், கால் உறீஇ - காற்றில் தூற்றி, சேடு - பெருமை, கோடு - உச்சி, குப்பை - குவியல்கள்.

போரிட்ட நெற்சூட்டைத் தள்ளி, எருமையால் புணையடித்து, வைக்கோலைக் களைந்து, காற்றில் தூற்றிக் குவித்த நெற்குவியல் போற்குன்றம் போன்று இருந்தன.

15, கரும்பு உடைப்பவர் - கரும்பைக் கணுவிலே வெட்டிவெட்டி ஆலையிட்டுச் சாறு காண்போர், விஞ்சிய - உண்டது போக மிக்கு நின்ற, அடுவுழி - காய்ச்சுமிடத்தில், தீம் புகை - இனிய புகை, பரந்து - விரிந்து, வீண் புகுந்து பரத்தலின் என இயைக்க, சேந்தது - சிவந்தது.

கரும்பாலைதோறும் வந்தடைந்தவர் பருக, மிக்கு நின்ற சாற்றைப் பாகு செய்யுமிடத்தே எழும் புகை விண்ணிலே சென்று பரத்தலால், ஞாயிறு சிவந்தது என்க.

15. யாவர்க்கும் விலக்கு இல் சாலை - இன்ன சாதியார்க்கே உரியவை என வரையறுத்துப் பிறரை விலக்குவது இல்லாத உணவுச் சாலை, வெப்பு -வெப்பம், சுனைத்தலைத் தண்ணீர் - சுனையிற் கொணர்ந்த தண்ணீர், கொலைத்தலைய வேற்கண்ணார் - கொல்லும் வேல் போன்ற கண்களையுடைய நாடக மகளிர், கூத்து - கூத்தாடுமிடம், துப்பு - நுகர் பொருள், நிறைதுளும்பும் - நிறைந்து ததும்பும்,

யாவர்க்கும் விலக்குதல் இல்லாத அட்டிற் சாலை, தண்ணீர்ப் பந்தர், மகளிர் கூத்தாடு மிடம் என்ற இவை யொழிய, ஏனைய எவ்விடத்தும் ஐம்பொறிகளாலும் நுகரப்படும் பொருள் பலவும் ஊர்களிடத்தே நிரம்பியிருந்தன என்க.

17. வைகல் அடிசில் - எப்போதும் உணவுள்ள உணவுச்சாலை, அறப்புறம் - அறச்சாலை களும், அறத்திற்கு விட்ட இறையிலி நிலங்களும்,கொடியனார் - கொடிபோலும் மகளிர், கோலம் - கோலம் செய்துகொள்ளுமிடம், மடிவில் கம்மியர் - தொழிலில் மடிதல் இல்லாத கம்மியர், மங்கலம் - திருமணம், ஓம்புவாரின் ஓம்ப - பாதுகாப்பார் காத்தலைச் செய்ய, வேறு ஆயிரம், வெறாயிரம் என வந்தது, ஒடிவில்லை - தவிர்தல் இல்லை,

அடிசிற் சாலைகளும், அறச்சாலைகளும், மகளிர் கோலம் செய்துகொள்ளுமிடங்களும், கம்மியரும், திருமணமும், இவை போல்வன வேறும் ஆயிரமாயிரம் ஊர்க்கண் உண்டு என்க.

18. நற்றவம் - வீடு பேறு குறித்த தவம், தவம் - மறுமை குறித்த இல்லறம், நற்பொருள் - நற்பொருளைப் பயக்கும் கல்வி, பொருள் - இம்மையில் பெரும்பயன் பயக்கும் செல்வம், வெற்ற இன்பம் - வெற்றியால் வரும் இன்பம், விண்ணு - விண்ணவருலகம், உவந்து வீழ்ந்தென - மகிழ்ந்து நிலவுலகின் மேலே வீழ்ந்து கிடந்த தென்னுமாறு, வட்டமாக - எல்லையாக, வைகும் - இருந்து விளங்கும், வீழ்ந்ததென - வீழ்ந்தென விகாரமாயிற்று,

விண் உவந்து வீழ்ந்ததென வைகும் நாடு, நற்றவம் முதலியவற்றைச் செய்வார்க்கு இடம் என்க.

19. கோட் சுறா - கொல்லுதலையுடைய சுறாமீன், முதலைக் குப்பை - முதலைக் கூட்டம்,ஆட்பெறா - ஆட்கள் எதிர்ப்படப் பெறாது, திரிதர - திரிவதால், மோட்டு இறா - பெரிய இறால்மீன், உழந்த - கலக்க, ஈட்டறா - கூட்டம் குறையாத, இரற்றும் - ஒலிக்கும்.

20. நிரைகதிர் நித்திலம் - வரிசையுற ஒளிவிட்டு விளங்கும் முத்து, விரை - நறுமணம், விரை கமழ் பாளை என இயைக்க, குரை கிடங்கில் பூத்த மதுக்குவளை - ஒலிக்கின்ற அகழியில் பூத்த தேன் நிறைந்த குவளை, உரையின் - புகழினால், நாறும் - மணம் கமழும்.

21. வயிரவரை - வயிரம் பொருந்திய மலை, மழையுகளும் - மேகம் தவழும், வயிரமணித் தாழ் - வயிரமணியால் செய்த தாழ், வான் பொற்கொடி - வானளாவியசையும் அழகிய துகிற்கொடி, வயிரக் கிடங்கு - வன்மை பொருந்திய கிடங்கு, கவின் - அழகு.

மழையுகளும் வாயில் முகமாக, ஞாயில் முலையாக, பொற்கொடி கந்தலாக, கிடங்கு ஆடையாக, மதிலாகிய கன்னியது கவின் இருந்தது என்க.

22. நறை - நறைக்கொடி, நானம் - புழுகு, விறகின் - நறும்புகை கமழும் விறகுகளால், வெள்ளியடுப்பு - வெள்ளியாலான அடுப்பு, பொற்கலம் - பொன்னாற் செய்யப்பட்ட அட்டிற்கலம், நிறைய - மடைநூல் விதியிற் குறைபடாமல், விருந்தொடும் உண்ப - விருந்து பெறற்கு அருமை தோன்ற நிற்றலின், உம்மை, சிறப்பும்மை.

23. திங்கள் முக்குடையான் - திங்களைப்போலும் குடை மூன்றுடைய அருகன், குடை மூன்றுமாவன, சந்திராதித்தம், நித்திய வினோதம், சகலபாசனம் என்பன, எங்கும் - தெருவெங்கும், இங்கும் - மனையிடத்தும், இடந்தோறும் - நகரின் தக்க இடந்தோறும், நிதியால் - நிதியோடு, நிதியோடு அறாததோர் ஆக்கம் தழைக்கின்றது என்க, சங்கநிதி - சங்கம் என்னும் எண்ணளவான நிதி.

24. தேன்தலைத் துவலைமாலை - தேனைத் தலையிலே துவலையாகவுடைய மாலை, ஞான்ற வயிரமாலை - தொங்குகின்ற வயிரமாலை, கான்று - தோற்றுவித்து, அமிர்து - போகம், அருள் - ஈன்று, செல்வம் சுரந்த இராசமாபுரம் என இயையும்.

இராசமாபுரம் என்னும் பெயரையுடைய இவ்வூர், மாலையும் துகிலும் பொன்னும் பூத்து, வயிரமாலையும் முத்தமாலையும் கான்று, அமிர்தேந்தி நின்ற கற்பகச் சோலையாகும் என்க.

25. இஞ்சி - மதில், மாகம் - விண், எல்லை - விண்ணுலகின் எல்லை, மஞ்சு - மேகம், மாகம் நீண்ட நாகம் - வானுலகத்தே உயர்ந்த நாகருலகம், ஆண்டு நின்று - மேக மண்டலத்திலிருந்தே, நீண்ட கொடிக் கையால் - நீண்ட கொடியாகிய கையால், குஞ்சி மாண் கொடிக் கை - குழியிடத்தே நின்று மாட்சிமைப் பட்ட கொடி, குஞ்சி - மதிலிடத்தே கொடிநாட்டும் குழி, கூவிவிட்டது ஒத்தது - கூவிவிட்ட தன்மையை யொத்தது.

26. கந்து - தூண், சந்து - சந்தனம், தட்டு - நெடுங்கை, தூண் மணித்திரளால் கடையப்படுதலாலும், சுவர் பொன்னாலாகி யிருத்தலாலும் சந்தனத்தைப் பிளந்து நெடுங்கை செய்து, பொன்வேய்ந் திருத்தலாலும், கோயில் வண்ணம், இந்திரன் திருநகர் வந்திருந்தவண்ணம் என்க. உரிமை - இந்திரனுடைய உரிமை மகளிர்.

27. நச்சு நாகம் - நஞ்சையுடைய பாம்பு, ஆர் அழல் - மிக்க வெம்மை, அமிர்து அன்னவன் - அமிர்து போல நலம் செய்பவன், அணங்காகிய - காம வருத்தத்தைச் செய்யும், தாமரைச் செங்கணான் - தாமரைப் பூப்போல இயல்பாகவே சிவந்த கண்ணையுடையவன்,

28. தருமன் - அறக்கடவுள், கூற்று - எமன், உயிர் மாற்றலின் - செற்றார் உயிரைத் தப்பாமல் கொல்லுதலால், வாமன் - அருகன், திருமகன் - திருமகட்கு மகனாகிய காமன், உரை கூறுமிடத்துத் தருமனையொப்பன், வருணனை யொப்பன் என இவ்வாறு கூறுக.

29. மருமகன் - சச்சந்தன், வலந்தது - கூறியது, ஆக்கம் - சச்சந்தன்பால் கொண்டுள்ள அன்பு. அருமதிச் சூழ்ச்சியின் - பிறரால் காணற்கரியவற்றை நுனித்தறியும் அறிவும் ஆராய்ச்சியு

முடைய, கருமம் - விசயையின் உடன் பிறந்தவனான கோவிந்தராசனுக்கு இச் சச்சந்தன் துணையாதல், கலத்தற் பான்மை - பெண் கொடுத்தற்குரிய முறை, பிணை - பெண்மான்.

30. அமர் - விரும்புகின்ற, பொன்னனாள் - திருவை யொக்கும் விசயை, பருகியிட்டான் - பருகினான், ஒரு சொல், மின்னவிர் - ஒளி விளங்கும். பூணினானை - பூண் அணிந்த சச்சந்தனை, மன்னிய மது - மிக்க மது, வாங்கி - அவன் காட்டக் கண்டு.

31. துறுமலர்ப் பிணையல் - பூக்கள் நெருங்கத் தொடுத்த மாலை, சூட்டு - நெற்றிக் கட்டு, ஒருவகை யணி, கண்ணி - முடிமாலை, சாந்தம் - சந்தனம், அறுநிலத் தமிர்தம் - அறுசுவை யமுதம், நாவி - கத்தூரி, பெறுநிலம் - போகம் நுகரும் இடமாகிய ஐம்பொறிகளையும், மிக்க இன்பம் நுகர்தலின், “பெரியர்” என்றார். பெருமை, மிகுதி.

32. காவலின் - காத்தலிலிருந்து, வழுக்கி - தவறி, நாடு காத்தலில் கருத்தைச் செலுத்தாது என்றவாறு, பெண்ணருங்கலம் - விசயை, பிணைந்த - கலந்து மயங்கிக்கிடந்த, பேரருள் - கழிகாமம், விண்ணகம் - வானம், ஒண்ணிற உரோணியோடு - ஒள்ளிய நிறம் படைத்த உரோகிணியோடே கூடி, திங்கள் உரோகிணியோடு கழி காமங் கொண்டொழுகிய காரணத்தால் தேய்வுற்றான் என்பது கதை. உரோகிணி - உரோணியென வந்தது விகாரம்.

33. அரிஞ்சயன் அசைவிலாக் குலத்துள் - அரிஞ்சயன் என்பானது குற்றமற்ற குலத்தில் பிறந்து, அரிஞ்சயன் - விசயையின் பாட்டன், புரவி வெள்ளம் - குதிரைகளை வெள்ளக் கணக்கில் உடைய, வசை - குற்றம், வரத்தின் வந்தாள் - முற் பிறப்பில் என் வேண்டுகோட்கு இரங்கி இப் பிறப்பில் எனக்கு மனைவியாக வந்தாள். இசைபட - புகழ் உண்டாக, இலங்கு பூண் - விளங்குகின்ற பூண்.

34. எழுதரு பருதி மார்பன் - எழுகின்ற ஞாயிறு போன்ற விளக்கமமைந்த மார்பையுடைய சச்சந்தன், இற்றுஎன - தன் கருத்து இன்னது என்று, துன்னலர் - பகைவர், தொலைத்த வேலோய் என்றதனால், தன்பால் அரசு வைப்பின் தான் துள்ளி நின்று நன்றி மறவாது ஒழுகுவதாகக் கட்டியங்காரன் தன் உடன்பாட்டுக் குறிப்பு நன்கு எய்தக் கூறுதல் காண்க. கழிபெரு - ஒரு பொருட் பன்மொழி, இனி, துன்னலர்த் தொலைத்த வேலோய் என்றதற்கு, “பகை யென்று கூறப்படும் பகைவரை யெல்லாம் கொன்ற வேலோய்” என்று நச்சினார்க் கினியர் கூறினார்.

35. வலம்புரி - சங்க ரேகை, பொறித்த - பிறவியிலே பொறிக்கப்பட்ட, மதவலி - மிக்க வலிமையுடைய சச்சந்தன், விடுப்ப - கையாலே காட்டி விடுப்ப, என்ன - என்று அனைவரும் சொல்ல, உலந்தரு தோளினாய் - தூண்போல் உயர்ந்த தோளையுடையாய், கொற்றம் - அரசியல், நிலந்திரு - நிலமும் திருவும், என்றுஓர் - என்று அறிவாயாக என, நெறியின் - நீதியால்.

36. என் அலால் பிறரை இல்லான் - என்னை யொழியப் பிறரை உயிர்த்துணைவராக இல்லாதவன், முனைத் திறம் - பகைவர் போர் முனைக்கண் செய்யும் சூழ்ச்சி வகை, முருக்கி - கெடுத்து, முன்னே - யான் இச் சிறப்பைச் செய்வதற்கு முன்னே, மொய்யமர் - நெருங்கிய போர், தனக்கு - அவன்றனக்கு, அவனுக்கு, செய்வ - செய்யக்கூடியவை, ஒன்றும் - சிறிதும், மனக்கு - மனத்திற்கு, இன்னா - பொறாமை, வாழியர் - நீயும் நின் நிலையில் வாழ்க, ஒழிக - இனி, இவ்வாறு கூறுவதைத் தவிர்க.

37. குறிப்பன்றேனும் - திருவுள்ளமன்றாயினும், கருமம் ஈது - செய்யத்தக்க கருமம் இதுவே, அஃதாவது ஒருவன்மேல் கொற்றம் வைத்தலாகாது, கேண்மோ - கேட்க, நாவலர் - அமைச்சர், நன்கு - நலம், பூவலர் கொடியனார் - பூக்கள் பூத்துள்ள கொடி போலும் மகளிர், போகமே கழுமி - போகத்திலே மூழ்கி மயங்கி, பாவமும் பழியும் உற்றோர் - மறுமையில் பாவமும், இம்மையில் பழியும் கொண்டவர்.

38. படுபழி - காமத்தால் பிறந்த பழி, பஞ்சவர் - பாண்டவர், வடுவுரை - பழிமொழி, ஒருத்தியை ஐவர் மனைவியாக்கிக் கொண்டனர் என்பது, பேர்ப்பார் - நீக்குவார், வாய்ப்பறை யறைந்து - பலரும் நன்கு அறியும்படி வெளிப்படச் சொல்லி, தூற்றியிடுவ தேயன்றி - தூற்றுவதே யன்றி. பின்னும் - மறுமையிலும், இழுக்குடைத்து - நரகம், முதலியவற்றை எய்துவிக்கும் குற்றமுடைத்து, நடுவுநின்று - நடுநிலையில் நின்று, போலும் - ஒப்பில் போலி.

39. ஆர் அறிவு இகழ்தல் செல்லா - பெரிய அறிவுடைமையால் பிறரால் இகழப்படாத, ஆயிரஞ் செங்கணான் - இந்திரன், கூர் அறிவுடைய நீரார் - கூர்த்த அறிவு படைத்த அமைச்சர், நீயும் - இந்திரனைப் போல நீயும் பிணையனாட்கு - விசயைக்கு, அவலம் - பின்னர் நிகழ்வதாகிய துன்பம், தன் கணவன் தன் பொருட்டால் அரச காவலில் இழுக்கினான் என எழும் பழியால் உளதாகும் வருத்தமுமாம், ஓரறிவு - சிறு புல்லறிவு.

40. தாம் அளந்துகொண்டு காத்த அருந்தவம் - தம்மால் இயல்வது என வரைந்துகொண்டு காத்த அரியதவம், அற்றை நாளே - கருவில் பதிகின்ற பொழுதே, அளந்தன – அறுதியிடப்

பட்டு உள்ளன, அது - அந்த நிலையாமை, “நிலந்திரு நீங்கும்” (34) என நிமித்திகன் கூறிய செல்வ நிலையாமையையும், உருத்திரதத்தன் கூறிய யாக்கை நிலையாமையையும் நிலையாமையென ஒருமையாக்கி, அது என்று ஒருமையாற் கூறினான். உரையல் என்றான், நிமித்திகனை நோக்கி, அவன் உரியனாதலின், உரையல் - சொல்லற்க.

41. மூரித் தேந் தாரினாய் - மூரித் தாரினாய் என இயைத்து, வன்மையுடைய தாரினாய் என்று கொள்க. தேந் தார் - தேன் பொருந்திய மாலை, முனியினும் - வெகுளினும், பாரித்தேன் - விரித்துக் கூறினேன். தரும நுண்ணூல் - தருமத்தைச் சொல்லும் நுண்ணிய கருத்துக்களையுடைய நூல், வழக்கு - அமைச்சர் இயல்பு, வேரி - மணம்,

மாதர் இன்பம் உனக்கு விருந்தாக, கொங்கை புணர்க என்று முடிக்க, இன்பம் கூடுந்தோறும் புதிது படுதலின், விருந்தாக என்றான், புணர்ந்தால் புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய், மணந்தாழ் புரி குழலாள் அல்குல்போல வளர்கின்றதே, என்று திருக்கோவையார் கூறுதல் காண்க. பூரித்து - பருத்து, ஏந்து - உயர்ந்த, அரசன் போ என்னாமல், தானே போவே னென்றல் நீதியன்மையின், துறவு உட்கோளாயிற்று.

42. பஞ்சியடி - பஞ்சிபோலும் மெல்லிய அடி, பவளத் துவர் வாய் - பவளம்போற் சிவந்த வாய், அடியையும் வாயையுமுடைய விசயை, கனா மூன்று - கண்ட கனாக்கள் மூன்று, அவை - அம் மூன்றும், தோன்றலின் - நெஞ்சில் நின்று நனவில் தோன்றுதலால், ஆயிடை - அக்காலத்தே, வெஞ்சுடர் - ஞாயிறு, விடிந்ததை - விடிந்தது, வினைத் திரிசொல், விடியலில் தோன்றுங் கனா பயன் செய்யும் என்ப, “இவை பிற்பயக்குங் கனவாதலின், பின்னும் நெஞ்சில் தோன்றின.”

43. பண்கெழு மெல்விரல் - யாழ் பயிலும் மேல்விரல், பண், ஆகு பெயர், பணைத்தோளி - மூங்கில் போலும் தோளையுடைய விசயை, கண்கழூஉச்செய்து - கண்ணைக் கழுவி, கலை - உடை, நல தாங்கி - நல்லவையுடுத்து, வீண் - விண்ணோர்கள், வெல் கதிர் நேமி - தீவினையை வெல்லும் அறவாழி, நேமிய - குறிப்புப் பெயரெச்சம், வண்புகழ் மால் - வளவிய புகழையுடைய அருகன், குலமகளிர் தம் கணவனைத் தவிர வேறு தெய்வம் பரவாராயினும், “தெய்வ மஞ்சல்” என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரம், அதற்கும் ஓராற்றால் விதியாதலால் அமையும் என அறிக.

44. இம்பர் இலா - இவ்வுலகில் நிகரில்லாத, நறும்பூ - மணமிக்க பூ; எம்பெருமான் - விளி, எய்துக - பொருந்துவனவாக, வெம் பரி மான் - கடிய செலவையுடைய குதிரை, அத் தம் பெருமான் - தம்முடைய அப்பெருமானான அரசன், அ - உலகறிகட்டு,

45. தான் அமர் காதலி - தான் மேவுகின்ற காதலி, மாவலி - மிக்க வலி படைத்த சச்சந்தன், அன்மொழித் தொகை, மதவலி என்றாற்போல, வானவர்போல் மகிழ்வுற்றபின் - தேவர் நோக்கத்தால் நுகர்ந்தாற்போல இவனும் கண்ணாலே பார்த்து மனமகிழ்ச்சியுற்ற பின்பு, வார்நறுந்தேன், ஒழுகுகின்ற நறிய தேன், கான் - மணம், கோதை - மாலை, ஈண்டு, அக் கோதை யணிந்த விசயை மேற்று, தேன் - முன்னே இனிமை விளைத்துப் பின் தீங்கு விளைவிப்பது, பால் - தூய்மை காட்டுவது, அமிர்து - உயிர்காப்பது.

46. தொத்து அணி பிண்டி - பூங்கொத்துக்களால் அழகு கொண்ட அசோகமரம், தொலைந்து - கெட்டு, அற வீழ்ந்தது - தானும் நேராக வீழ்ந்தது, எண் மாலை – எட்டு

மாலை, முத்தணி மாலை - முத்துப்போன்ற வெள்ளிய மாலை, முடி இடனாக - முடிக்கு இருப்பிடமாக, ஓங்குபு - ஓங்கி, வைத்தது - நட்டு வைத்தது, பிண்டி, வீழ்ந்தது - இதைச் சொல்லுங்கால் அவள் சொல்லுக்குத் தேன் உவமையாயிற்று, எண் மாலை - இதற்குப் பால் உவமம், சீவகனுக்குப் பின்னுண்டாகும் ஆக்கத்திற்கு அமிர்து உவமையாயிற்று, இதனால் அரசற்கும் சுற்றத்திற்கும் கேடுண்டாதல் எய்திற்று.

பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது. அதன் தாள் வழியே, எண்மாலை முடிக்கிடனாக நட்டு வைத்தது போல ஒரு முளை ஓங்குபு வளர்ந்தது என்க.

47. நின் மகனாம் - நினக்குப் பிறக்கும் மகனாம், அமரப்படும் - காதலிக்கப்படும், ஆக்கமதாம் - ஆக்கமாம், அது, பகுதிப் பொருள் விகுதி, பின்னது - பிண்டி தொலைந்து அறவே வீழ்ந்த செய்தி, பேசலன் - பேசலனாய்.

48. ஏந்திழை - விளி, எனக்கு இன்னே இடையூறு உற்றது - இதன்கண் “இன்னே யென்றது உதாசீனம்போல் நின்றது” உற்றது என இறந்த காலத்தாற் கூறினான், தெளிவுபற்றி, இல்லை, கனா முந்துறாத வினை, என்பது பழமொழி, உரையாடலாய் - ஒன்றும் பேச மாட்டாது. கோதையின் - கோதை போல, மணி மா நிலத்து - மணி நிலத்தில், பொற்றொடி - தொடி, வளை, தொடியையுடைய விசயை.

49. கரும்பார் தோள் - கரும்பு போலும் தோள், கரும்பெழுதிய தோள் என்றுமாம், விளர்த்து - வெளுத்து, பூத்த, வினைமுற்று, விரும்பு ஆர் முலைக்கண் - விரும்புதற்குப் பொருந்திய காரணமான முலைக்கண், பெய்து இருந்த - பெய்து வைத்திருந்த, நுசுப்பு - இடை, கண்ணுக்குப் புலனாகாதிருந்த இடை, இதுபோது கண்ணின் புலனாயிற்று என்க, ஆய்ந்த - நுண்ணியதாய் ஆய்ந்து தொடுத்த, பாரமாய் - பாரமாக, பெரிதும் - மிகவும், சூற் சலஞ்சலம் - சூல் கொண்ட சலஞ்சலம் என்னும் சங்கு.

தோள் கழன்று, வாய் விளர்த்து, கண் பசலை பூத்தன, முலைக்கண் கரிந்து, பால் பரந்து, நுசுப்பும் புலனாயிற்று, நலம் நைந்து தொலைந்தது என முடிக்க,

50. அந்தரத்தோர் மயனே என ஐயுறும் - தேவர்களும், தொழில் கண்டு தம்முலகத்துத் தச்சனாகிய மயனே எனத் துணிந்து, வடிவுகண்டு வேறே எவனோ என ஐயமுறும், தந்திரத்தால் - தொழிலொடு, தமநூல் - தம் தச்சு வேலைக்குரிய நூல், (நூல் - Theory தந்திரம் - Practice.) கரைகண்டவன் - முற்றக் கற்றவன், கூவி - அழைத்து, எந்திரவூர்தி - எந்திரத்தால் வானத்தே செல்லக்கூடிய ஓர் ஊர்தி, இயற்றுமின் - இயற்றுக, ஒருமை பன்மை மயக்கம்.

51. கிழி - சீலை, பயின் - பிசின் (ஒட்டுப்பொருள்), துகில் நூல் - வெள்ளிய நூல், நலஞ்சான்றன - நல்லன, அமைத்து - கூட்டி, எழுநாளிடைச் செய்தனன் - ஏழு நாட்களில் செய்து முடித்தான்.

செய்யப்படு மயில்தானே செல்லாதன்றே, இதுதானே செல்வது ஒன்றற்குச் “செல்வதோர் மாமயில்” என்றார். ஒருத்தரை நன்கு சுமக்க வேண்டியதாகலின் “மாமயில்” எனப்பட்டது, மா, பெருமை,

52. நன்னெறி நூல் - தச்சுத் தொழிற்குரிய நற்பொருளை யுணர்த்தும் நூல், நயம் - நுட்பம், கொல் நெறியிற் பெரியோய் - கொற்றொழிலில் பெரியோனே, மின் ஏறி - மின்னொளியைக் கெடுக்கும், பொன்னறை - பொன் நிறைந்த அறையிற் கிடந்த பொன் முழுதும், புகழ் வெய்யோன் - புகழை விரும்பும் சச்சந்தன்.

53. ஆடு இயல் - பறந்து விளையாடுதற்கு இயன்ற, மாடமும் காவும் அடுத்து - மாடத்துக்கும் காவிற்கும் பறந்து சென்று பயின்று, பாடலின் - பாட்டு மேன்மேல் எழுதல் போல, துரந்து - செலுத்தி.

54. மன்னவன் பகை - மன்னவனுக்குப் பகை, இடங்கொண்டு - இருப்பிடமாகக் கொண்டு, துன்னி - நெருங்கி, எனும் - என்று சொல்லுகின்றது. என்ன - என்று கட்டியங்காரன் அமைச்சரைக் கேட்க,

55. அவ்வண்ணல் - சச்சந்தன், சீறடி - சிறிய அடி, கொழுங்கண்ணாள் - கொழுவிய கண்ணையுடையளாகிய அவ் விசயை, அமிர்தாக - அமிர்தாகக் கொண்டு, உவளகம் - அந்தப்புரம், ஒடுங்கினான் - பிற நாடு காவல் முதலியவற்றில் வேட்கையின்றிச் சுருங்கினான்.

56. தார்ப் பொலி வேந்தன் - தாரால் பொலிவுற்ற வேந்தன் அறிவினால் பொலிவுறுகின்றா னல்லன் என்பது குறிப்பு, வௌவின் - உயிரைக் கவர்ந்தால், பூமகள் - தாமரைப் பூவில் இருக்கும் திருமகள், பிறழ்ந்திடும் - நீங்கிவிடுவாள், அவன் - தன்னை அரசு காவற் குரியனாக்கிய அவ்வேந்தன், பேர்க்குநர் - பெயர்ப்பவர்.

57. ஈண்டும் - திரண்ட, கிளை - சுற்றத்தார், வேண்டில் - அரசன் விரும்புவானாயின், நஞ்சுமாதலால் - விரும்பானாயின், தன் பகைமையாகிய நஞ்சினால் தன்னால் விரும்பப்படாதவரை யழிப்பனாதலால், மாண்டது - மாட்சிமைப்பட்டது, வாய் மொழி தெய்வம் - உறுதி கூறுதலையுடைய தெய்வம்.

58. விண்ணகம் காட்டி - கொன்றுவிட்டு, என்றியேல் - என்று சொல்வாயாயின், வாலிது அன்று - நன்றன்று, வாள் நமற்கு ஓலை வைத்தன்ன ஒண்திறலாற்றலான் - வாள் வன்மையால், “வல்லவனாயினும் வந்து ஒரு கை பார்க்கட்டும்” என்று எமனுக்கும் ஓலை விடுக்கும் ஒள்ளிய திறல் படைத்தவனான தருமதத்தன்,

59. பிறையது வளரத் தானும் வளர்ந்து - பிறைவளர, அது தானும் வளர்ந்து, அது - முயலாகிய களங்கம், குறைபடு மதியம் - தேய்தற்குக் காலமுண்டான முழுத் திங்கள், குறுமுயல் - சிறிய முயலாகிய களங்கம், ஆக்கியவன் - சச்சந்தன், இருளைப் போழும் நிறைமதி என மாற்றி, இருளைப் போக்கும் முழு மதி போல என முடிக்க, அவ்வொழுக்கம் புகழ் விளைக்கும் என்று உரைக்க,

60. தார்ப் பொலி தருமதத்தன் - வாகை மாலையால் பொலியும் தருமதத்தன், தக்கவாறு - அமைச்சர்க்கும் அரசர்க்கும் தக்க முறைப்படி, குன்றில் கார்த்திகை விளக்கிட்டாற் போல என்றது, மதனன் அணிந்திருந்த குவளைப் பைந்தாருக்கு உவமை, குவளைப் பைந்தார் - குவளைப் பூவால் தொடுக்கப்பட்ட பசிய மாலை, போர்த்த - சூடிய, அகலம் - மார்பு, பொள்ளெ வியர்த்து - கடுக வியர்த்து, பொள்ளென - குறிப்பு மொழி, (குறள்.487) நீர்க்கடல் மகரப் பேழ்வாய் மதனன் - நீர் நிரம்பிய கடலில் உள்ள மகர மீனின் பிளந்த வாயிடத்தெழும் முழக்கம் போலும் சொல்லையுடைய மதனன், மகரவாய் போலும் பெரிய வாயை யுடைய மதனன் என்றுமாம்,

61. தொக்கவர் - பலராய்ச் சேர்ந்து வரும் பகைவர், பாற - சிதற, வாளினால் பேசல் - வாளினால் வெட்டி வீழ்த்திச் செய்கையில் காட்டுவதன்றி, தேற்றேன் - அறியேன், இது தன்வினை, தேற்றாய் பெரும பொய்யே (புறம்.19) என்றாற் போல, காளமேகங்கள் சொல்லி - இருண்ட மேகம் போல முழக்கமிட்டுச் சொல்லி, கருனையால் - பொரிக்கறிகளோடு, குழைக்கும் - சோற்றைப் பிசையும், அமர் நீந்தும் போழ்து - போராகிய கடலைக் கடக்கும் காலத்தில், வாள் வழு வழுத் தொழியும் - வாள் வழுக்கி வீழும், இக் கவி முன்னிலைப் புறமொழி, முன்னிற்பாரைப் படர்க்கையில் வைத்துப் பேசுதல்.

62. இன்னவை - கடிய சொற்கள், உற்றவற்கு - சச்சந்தனுக்கு, உறாத - போக நுகர்ச்சிக்குரிய பொன்னுலகைத் தாராது, துன்பத்துக்குரிய மண்ணுலக நுகர்ச்சிகள், ஆக - ஆகுக, பூமியெல்லாம் பொன் விளைந்து பொலிய யான் காப்பல் என இயைக்க.

63. விளைக, பொலிக - நீ கூறியவாறே பொன்னே விளைக, பொலிக, அஃதே - எமக்கு நினைவும் அதுவே, களைகம் எழுகம் - அரசனைக் கொன்று களைதற்கு எழுவேம், அரசன் செய்யும் கொலை, களை கட்டதனோடு நேர் “ஆதலின்,” “களைகம்” என்றான், வளை கய மடந்தை - சங்கு வாழும் குளத்தில் பூக்கும் தாமரையில் இருக்கும் திருமகள், காவலனைக் கொல்லும் கூற்றம் என மாற்றி, மடந்தையாய், பிழைப்பாய், நிதியமாய், அருளாய்க் கொல்லும் என முடிக்க, மடந்தை - விசயை, பிழைப்பு - அரசு காவல் வழுக்கியது, நிதியம் - அரச போகம், அருள் - கட்டியங்காரன்பாற் காட்டிய பேரருள்.

64. கோள் - கொலை, சேண் நிலத்து - சேய்மையான இடத்தே நின்று, செய்ய கோல் - நேரிய கோல், வெய்ய சொல்லான் - வெய்ய சொல்லைக் கூறுதலை யுடைய வாயிலோன். போகத்திலே மூழ்கிக் கிடக்கின்றமை “பூணணி மார்பம்” கூறப்பட்டது. இனி, பகைவர் தம் மார்பிற் கவசமணிதற்குக் காரணமான மார்ப என்றுமாம். இப் போகம் முற் பிறப்பிற் செய்த புண்ணியத்தின் பயனாதலின் “புண்ணிய வேந்தன்” எனப்படுகின்றான். நீணில முதலாக நான்கு கூறியது. நிலத்திற்கும், குலத்திற்கும், வீரத்திற்கும், அறத்திற்கும் நின்னையொழிய இல்லையென்று இரங்கியது என்பர்.

65. திண்ணிலைக் கதவம் - திண்மையான நிலையினையுடைய கதவுகள், தாழ் உறுக்க - தாழிடுக, வல்லே - விரைந்து, கண் அகல் புரிசை - இடமகன்ற தலை யகலமுடைய மதில், உரும் ஏறு - இடி, வெடிபட - வெடித்தலுண்டாக,

66. கனவெலாம் - கனவு முற்றும், விளைந்த - பலிக்கலுற்றன, நன் பொருள் - தனக்குளதாகிய கேடு; மங்கல மொழியாற் கூறினான் விசயை சோர்வு எய்தாமைக்கு, இனி, வயிற்றிலிருக்கும் பிள்ளை என்றுமாம், கொங்கு - தேன், மாழ்கி - மயங்கி, முகம் குழையப் புடைத்து, கோதை - கோதை போல, வெய்ய - விரும்பிய, திருமகற்கு - அரசனுக்கு; இனி, வயிற்றிலிருக்கும் பிள்ளைக்கு என்றுங் கூறுப, அவலம் - வருத்தம்.

67. வினைப்பயத்தினாகும் - வினைப் பயனால் உண்டாம், நோதலும் - அழிவுக்கும் சாதற்கும் வருந்துதலும், பரிதல் - மகிழ்தல், பேதை - அறிந்திலை, பொல்லாய் - அவலம் செய்கின்றாய், பேதை, தோளி இரண்டையும் விளியாக்கலும் உண்டு, அப்போது பொல்லாய் என்றதற்கு அறிவிலியாய் இருந்தாய் என்று பொருள் கூறுக.

68. தொல்லை - பழைய, பிறவி - மக்கட் பிறப்பு, ஆற்றா - எண்ணிடப்பட்டுச் சிறு தொகையாகும், எல்லைய - அளவினவாம், பிறந்தும் ஏதிலம் - பிறந்தும் வேறு பட்டிருந்தோம். நீங்கி - இவ்வுடம்பை நீங்கி, சேரலம் - சேரமாட்டேம், இரண்டு நாள் - சிறிது நாளென்னும் பொருட்டு, சுற்றம் - உறவு.

69. வடித்த - தெளிவுரைக்கப்பட்ட, நுண்ணூா ல் - நூலின் நுண்பொருள், உண்டுவைத்த அனைய - முற்றவும் உணர்ந்துள்ள, நீரையாகி - தன்மையை யுடையளாய், விண்டு - என்னின் வேறுபட்டு, இனையையாதல் - இவ்வாறு அறிவிலார் போல அழும் தன்மை யுடையளாதல்.

70. உரிமை - உரிமைமகளிர், ஒளி - விளக்கம், இது - இப்போது நின்னைப் போக்குதல், எனக்கும் என்ற உம்மையால் விசயைக்கும் போதல் கருமம் என்றானாயிற்று, சமைந்தது - உளது, மற்று - தாழ்ப்பது தீது என்று உணர்த்தி நின்றது. எரி முயங்கு இலங்கு வாள் - நெருப்புக் கலந்து விளங்கும் வாள், எற்றிளஞ் சிங்கம் - இளஞ் சிங்க வேறு; இளைய ஆண் சிங்கம், பிள்ளையால் கதிபெறுதலும், பகை வேறலும் கருதி இருவர்க்கும் கருமமென்றான், கவலை - இருதலைக் கொள்ளியிடத்து எறும்புபோல் கணவனையும் மகனையும் நோக்கிக் கவலுதல்.

71. என்பு நெக்குருகி - எலும்பு குழைந்து உருகும்படி, யாத்த - பிணித்த, ஆற்றாத - பிரிவாற்றாத, கிழத்தி - மனைவியாகிய விசயை, இன்பம் மிக்குடைய சீர்த்தி இறைவன் - அனந்த சுகம் மிகுதலாலே சீர்த்தியையுடைய அருகன், சீர்த்தி - மிகு புகழ், ஆணை - ஓம் நமோ அரஹந்தாணம் என்னும் மறைமொழி, துன்பமில் - துன்பம் பயத்தல் இல்லாத, திடீரென இறங்கினும், “தோகை கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்திருக்கும்.” (சிந்தா. 239) ஆதலின், ‘துன்பமில் பறவை’ யென்றார். இனி, தீதற்ற பறவை என்றுமாம், கூறி - கூற, ஆணை கூறச் சேர்ந்தாள் என்க. சேர்ந்த விரைவு தோன்ற, சேர்ந்த திறம் கூறிற்றிலர்.

72. தோய்ந்த - மக்கள் செறிந்த, விசும்பென்னும் தொன்னாட்டகம் - விண்ணுலகேயெனச் சிறப்பித் துரைக்கப்படும் ஏமாங்கத மென்னும் பழைய நாட்டகத்துச் சான்றோர், ஏந்து முலையார் - கற்புடைய மகளிர், கொடுங்கோல் இருள் - கொடுங்கோலாகிய இருள், பரம்ப - பரவ, அறச்செங்கோல் - அறத்தைச் செய்யும் செங்கோன்மை, ஆய்கதிர் - இள ஞாயிறு, ஆய்கதிர் - இருளை யாய்ந்து கெடுக்கும் ஞாயிறு, ஆய்தல் - சுருங்குதலுமாதலின், இருள் குன்றச் செய்யும் கதிருமாம், மந்திரி மா நாகம் - மந்திரியாகிய கரு நாகம், மா - கருமை, உடன் விழுங்கிற்று - அரசவுரிமையெல்லாம் கொண்டான்; நாகத்திற்கேற்ப “விழுங்கிற்று” என்றார், ஏஎ - குறிப்புமொழி, இதனால் அவன் ஆண்டகைமை குறைந்ததற்கு இரங்கினார்.

73. ஓர் - நிகரில்லாத, செகுத்து - கொன்று, ஆங்கு - அப்பொழுதே, சேர்ந்தால் ஒப்ப - சேர்ந்தால், அச் சிங்கத்தின் தொழிலைச் செய்யாது தன் தொழிலையே செய்வது போல, வெங்கண் களியானை வேல்வேந்தனை - வெவ்விய கண்களையும் மதக் களிப்பினையு முடைய யானைப்படையும் வேற்படையுமுடைய வேந்தனான சச்சந்தனை, பெயர்ந்து போய் - சுடுகாட்டினின்றும் போய், வேல்மாரி - வேலாகிய மழை, எங்கணவரும் - எவ்விடத்து மக்களும், இனைந்து - அழுது, இருள் மனத்தான் - கட்டியங்காரன், பூமகள்- நாட்டரசு.

நரி சிங்கத்தைச் செகுத்து, அதனிடத்தைச் சேர்ந்தா லொப்ப, வேந்தனை எரியின்வாய்ப் பெய்து, பெயர்ந்து போய், பூமகளை யெய்தினான், தன் பெயரினால் பறை சாற்றினான், எங்கணவரும் வேல் மழைக்கு இரங்கினாற் போல இனைந்து இரங்கினார் என முடிக்க.

74. பூங்கழல் - பூத் தொழில் அமைந்த கழல், குருசில் - சச்சந்தன், புதல்வனை - மகனை, புகன்று - விரும்பி, புதல்வன் பொருட்டு இவளைப் போக்குதலின், குருசில் தந்த புதல்வனை யென்றார், ஓதி - கூந்தல், ஈண்டு, ஓதியையுடைய விசயைமேற்று, திங்கள் ஆற்றாள் - முலைகள் திங்களின் கதிரைத் தாம் பொழிவதுபோலப் பால் சொரியும் பருவத்தளவும் பொறாளாய்ப் பாலை வாங்கி யென்க, என்றது, மகப்பெறுவார்க்குப் பெறும்பொழுது பால் சுரவாதாதலால், வாங்குபு - வாங்கி, திலகம் சேர்த்தி - திலகமிட்டு, திலகனை - சிறந்தவனான சீவகக் குழவியை, திருந்த - சீர் செய்து,

75. அரும் பொற்பூண் - பெறற்கரிய பொன்னாலாகிய அணிகள், இமைப்ப - ஒளி செய்ய, கணிகள் - சோதிடர்கள், ஒருங்கு - சேர, சாதகம் செய்து - சாதகம் குறித்தலைச் செய்ய, ஓகை - உவகை, போக்கி - ஓலை போக்கி, கருங்கைக் களிறு - பெரிய கையினையுடைய யானை, காசு - பொற்காசு, கவிகள் - மங்கலம் பாடும் கவிஞர்கள், வீசி - கொடுத்து, விரும்ப - அரசன் மகிழ்ச்சி மிகுந்து இவற்றை விரும்பிச் செய்ய, பிறப்பாய் - பிறக்கும் நீ, வினை செய்தேன் - தீவினை செய்த யான், இஃதோ பிறக்குமா - இதுவோ பிறக்குமாறு, விகாரம் ஓஒ, இரக்கக் குறிப்பு.

76. வெவ்வாய் ஓரி - கொடிய வாயையுடைய நரியின் கூப்பீடு, விளிந்தார் - இறந்தவர், ஈமம் - சுடுகாட்டு எரி, ஒவ்வா - பிறப்பார்க்கு ஒவ்வாத, உயர் அரங்கில் - உயர்ந்த மேட்டிடத்தே, நுடங்கி - அசைந்து, எவ்வாய் மருங்கும் - எவ்விடத்தும், கூகை - பேராந்தை, இவ்வாறு என்றது தந்தை விரும்புமாறு நல்வினையுடைய தன்மையை, இது என்றது செயலின்றித் தாய் வருந்தும்படி தீவினையுடைய தன்மையை.

77. பற்றா மன்னர் - பகை வேந்தர், பாயல் - படுத்துக் கிடக்குமிடம், உற்றார் - உசாவுதற்குத் துணையாவார், இல்லா - இல்லாமல், ஒதுங்கலாகா - நின்னைக் கொண்டுபோகக் கருதின் போகவொண்ணாத, தூங்கிருள் - மிக்க இருள், இஞ்ஞாலம் - இந்த ஏமாங்கத நாடு, இது கண்டு - இச் செய்தி கண்டும், ஏகாது - நீங்காமல், என் - இதற்குக் காரணம் என்னோ, மற்று - வினை மாற்று, எற்றே - இதுவும் அறிந்தே, உயிரொன்று தவிரத் துணை பிறிதின்மையின், அதனை, இன்னுயிரே யென்றாள்.

78. பிறந்த நீயும் - என் வருத்தம் நீக்கப் பிறந்த நீயும், பெருமானடிகள் - அருகன், புறந்தந்து - பாதுகாத்து, நீந்தும் புணை - நீந்துதற்குரிய புணை (தெப்பம்), ஆகாக்கால் - ஆகாதபோது, சிறந்தார் - துணையாவதற்குச் சிறந்தவர், சிந்தாமணியே, விளி, கிடத்தி - உரையாடாது கிடக்கின்றாய், மறம் - வீரம், சொல் - சொல்லிய கருமம், மம்மர் - மயக்கம், வருந்துகுஓ - வருந்துவேன்.

79. விம்முறு - மிகும், விழும் வெந்நோய் - தேவியது விழுமத்தாலே நோயை யுடையதாகிய தெய்வம், கொம்மென - பொருக்கென, கொட்புறு கவலை - கலகத்தைச் செய்யும் கவலை, எம் அனை - எம் அன்னாய், தமியையாகி - தனிமைப்பட்டு, செம்மலர் - செந்தாமரை, நீங்க - வியங்கோள் வினைமுற்று, திருவின் - இன், அசை, தெய்வம் கூனியாய் நிற்றலின் உயர்திணையாற் கூறினார்.

80. பூவினுள் - தாமரைப் பூவில், தோன்றல் - தலைமை, புண்ணியன் - முருகன், நாவினுள் - சொல்லும் சொல்லிலே, ஒன்றாது நின்ற கோவினை - அவ்வாறு நடத்தற்குப் பொருந்தாது நின்ற கட்டியங்காரனை, அடர்க்க - பின்னே கொல்லும்படியாக, காவி - நீலமலர்.

81. நாள் - நாண்மீன், ஊர்கோள் - ஊர்கின்ற (செல்கின்ற) மேகம், கந்து நாமன் - கந்துக்கடன், உம்மை, சிறப்பு, காளகவுடை - கருமையை இடத்தேயுடைய உடை, கனையிருள் - மிக்க இருள்.

திங்கள் நாண்மீன்களோடு நடப்பது விடுத்து, கோளொடு வந்து வீழ்ந்தது போலக் கந்துக்கடன் தோன்றினான் என்க.

82. அருப்பு - அரும்பு, அனங்கன் - மன்மதன், மருப்பு - கோடு, மதர்வை - மயக்கம், வெங்கதிர் - இளஞாயிறு, பரப்புபு - கதிர் தன் கிரணங்களைப் பரப்பாநின்று, கிடந்ததென என்பது கிடந்தென என விகாரமாயிற்று, விருப்பு உளம் மிகுதியின் - விருப்பத்தோடு கூடிய உள்ளத்தின் மிகுதியினால், கண்ட மாத்திரத்தே விருப்பு உள்ளத்தே மிகுந்த தென்க.

83. புனை கதிர்த் திருமணிப் பொன்செய் மோதிரம் - அழகிய கதிர்களையுடைய உயர்ந்த மணி யிழைத்த பொன்னாற் செய்யப்பட்ட மோதிரம், வனை மலர் - கையால் ஒப்பனை செய்த மலர், தாரினான் - கந்துக்கடன், துனை கதிர் - இருளை நீக்குதற்கு விரைகின்ற கதிர், முகப்ப - எடுப்ப, “எல்லாப் புலன்களுக்கும் விருப்பம் சேறலின் முகப்ப என்றார்,” தும்மினான் - “தும்முதல் நன்னிமித்தம்” சினை - ஒரு மரத்தின் கிளையிலே, சீவ - சீவிப்பாயாக, “தேவி அச்சத்தால் தன்னுள்ளே வாழ்த்துதலின் ஒரு குரல்” என்றார்.

84. என்பெழுந் துருகுபு சோர ஈண்டிய அன்பு - எலும்புக் குள்ளே யெழுந்து உடலுருகி அவசமாக வளர்ந்த அன்பு, அரசனுக்கு அவலித்து - அரசனுக்கு மகன் முகங்காணும் நல்வினை யின்மை கண்டு வருந்தி, நுன் - திசைச்சொல், தவ - கெட, மிக என்றுமாம், நூறுவாய் - அழிப்பாய். இன் பழக் கிளவியின் - இனிய பழம் போலும் இனிய சொல்லால். அன்பு எழுந்ததனால், அவலித்து, நூறுவாயென ஏத்தினாள் என்க.

85. ஒழுக்கியல் அருந்தவம் - ஒழுக்கத்தால் இயன்ற அழிக்க முடியாத தவம். அழிப்பரும் - அழியாத, பொன்னுடம்பு - நல்வினையாற் பெற்ற உடம்பு. வழுக்கிய புதல்வன் - இறந்த மகன், மாமணி விழுத்தகு மகன் - மாமணிபோல விழுத்தக்க (மேம்பட்ட) சீவகனாகிய மகன். தவ வுடம்பைக் கந்துக்கடன் மகனுக் குவமை கூறினார். அவனாலே சீவகனைப் பெறுதலின்.

86. பொருந்திய - உலகினுள் பொருந்திய, புகழ்கள் கூடிய - புகழெல்லாம் கூடிய, அகற்றிய - கற்பால் நிகரில்லை யென விலக்கிய, ஆசில் - குற்றமில்லாத, திருந்திய - நல்வினை திருந்திய, தீதின் - சாக்காட்டினின்று, வருந்தல் - வருந்தற்க, எம்மனை - எம்மில்லாளே.

87. கள் அலைத்து இழிதரும் களிகொள் கோதை - தேன் இதழையலைத்து இழிதற்குக் காரணமான களிப்பினைக் கொண்ட மாலையையுடைய சுநந்தை, உள் அலைத்து - உள்ளத்தே நிறைந்து அலைகொண்டு. ஊர்தர - மிக்கு வழிய. வள்ளலை - சீவகனாகிய குழவியை, வல் விரைந்து எய்த - சுநந்தை மிக விரைந்து வாங்கச் செல்ல, நம்பியை - சீவகனை, வெள்ளிலை வேல் - வெள்ளிய இலை வடிவிற்றான வேல், விரகு - தேவியிட்ட திலகத்தை மாற்றினது.

88. மணிவரி அறல் அறைந்தன்ன ஐம்பால் - நீலமணியிலே வரி பொருந்திய கருமணலை அழுத்தினாலொத்த கூந்தல், பணிவரும் கற்பு - உலகெலாம் தனது ஏவலில் வருதற்குக் காரணமான கற்பு, படை மலர்கண் - வேற்படை போலும் மலரொத்த கண். துணியிருள் போர்வை - திரண்ட இருளாகிய போர்வைக்குள் மறைந்து, துன்னுபு - நெருங்கி, பகை நிலமாதலின் இருட் போர்வையில் மறைந்து செல்வாம் என்கின்றாள். அணிமணல் - அழகிய மணல், சார்வாம் - சார்ந்து அயர்ச்சி தீரலாம்.

89. ஓசனை - யோசனை, வடசொற் சிதைவு, குமரிமதில் - பிறரால் பற்றப்படாத மதில், தமர் இயல ஓம்பும் - உலகிற் கெல்லாம் தமராகும் இயல்பைக் கொண்டிருக்கும், நமரது - நம் தமர்க்கு உரியது, தேவி நோற்றற்குத் தாபதப்பள்ளி வேண்டுதலாலும், அரசனை அமரில் நீத்து, புதல்வனைப் புறங்காட்டில் நீத்து, தமரிடத்துச் சேறல் ஆகாமையானும் நண்ணலமாகி என்றாள்.

90. குவளைய - குவளைகளையுடைய, வாவி - ஆற்றில் இருக்கும் ஓடை, பொய்கை - மக்களால் செய்யப்படாத இயற்கை நீர்நிலை, கா - சோலை, கஞலிய - நெருங்கிய, தண்டாரணியம் - தண்டகாரணியம், ஆங்கு - அதனுள் தாபதர் உறைகுவது போல.

91. வாள் உறை நெடுங்கணாள் - வாளின் தன்மை முன்னே தங்கின நீண்ட கண்ணை யுடையளான விசயை, முன்னை தங்கின எனவே, இப்போது இல்லை யென்க. வினைத்தொகை இறந்த காலத்தில் வந்தது, உற - பொருந்த, புல்லுவார் போல் - தழுவுவார் போல, மாதவம் செய்வார்க்குப் புல்லுதல் ஆகாமையின் புல்லுவார் போல் என்றார். தாள் உறுவருத்தம் - நடந்து சென்ற அடிகளுக்கு உண்டான வருத்தம், தவ நெறிப் படுக்கலுற்று - மேல் தவத்தில் சேறற்குரிய நெறியாகிய நோன்பை உண்டாக்கி, தவம் - கணவனை இழந்ததற்கும், புதல்வன் வாழ்தற்கும் பொருந்திய நோன்பு, நாள் உற - நல்ல நாள் வந்து பொருந்த, திங்கள் ஊர - நாடோறும் திங்கள் ஒரு கலை ஏறிவர, நீக்குகின்றார்- தேவி நீக்குகின்றவற்றை அவர் மேலேற்றினார். ஏவினாரைக் கருத்தாவாக, அரசரெடுத்த தேவ குலம் - போல.

92. பாலுடையமிர்தம் - பால் கறந்த அடிசில், நூலடு நுசுப்பு - நூலை வென்ற நுண்ணிய இடை, நேர்ந்து ஏந்தவும் - உணவு மறத்தாளென வலிய எடுத்தேந்தவும், நோக்காத - ஏறிட்டுப் பார்க்காத, சேலடு கண்ணி - சேல் மீனை வென்ற கண்ணையுடையளா யிருந்த விசயை, காந்தள் துடுப்பு கை - காந்தட் பூப்போன்ற கை, காந்தள் மலர் துடுப்புப் போறலின், ‘துடுப்பு’ என்றார். முன் திருமணி கை - முன்பெல்லாம் திருமணி பூண்டிருந்த கை, வால் அடகு - தூய இலைக்கறி, அருளி - அருள, செய்ய - சிவந்த.

93. ஆம்பல் அல்லி - ஆம்பலரிசி, உணங்கும் - உலரும், விளித்திரிய - கத்திக்கொண்டு நீங்கியோட, குழவி - கன்று, கதிர்க் குப்பை போலும் நெல்லெழில் கவரி - கதிர்களின் திரட்சி போலும் நல்ல மயிரால் அழகுபெற்ற கவரிமான். கவரிமான் தன்னைப் புல்லிய (சேர்ந்த) ஆமான் கன்றுக்கு முலையூட்டும் என்க. அதுகண்டு விசயையும் சீவகன் பிறர் முலையுண்டு வளர்தலை நினைக்கின்றாள் என்பது. குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை (தொல், மரபு.சூ.19) என்றதனுள் கொடை யென்றதனால், ஆமான் குழவியும் கொண்டவாறுணர்க என்பர் நச்சினார்க்கினியர்.

94. பெண்மை - அமைதித்தன்மை, நாணம் - இயல்புக்கும் தகுதிக்கும் ஒவ்வாத சொல்லும் செயலும் காணுமிடத்து உள்ளம் சுருங்குதல், வனப்பு - அழகு, சாயல் - மென்மை, மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை, பேசின் - கூற நினைந்தோமாயின், ஒண்மையின் ஒருங்குகூடி, உருவுகொண்டனைய நங்கை - விளக்கம் காரணமாகச் சேரக்கூடி ஒரு வடிவு கொண்டதுபோலும் நங்கை, எல்லாம் நண்ணிய நுங்கட்கு - நற்குணமெல்லாம் பொருந்திய நுங்கட்கு, கண்ணிய - கருதிய, கரந்து உரைத்து - மறைத்து வேறு பெயர் படக் கூறிவிட்டு.

95. உறுதி சூழ்ந்து - விசயைக்கு உறுதியானவற்றை அத்தெய்வத்தின் உள்ளம் ஆராய்ந்து செய்து, அவண் ஓடலின் - இவ்விடத்தை விட்டுத்தான் உறையுமிடத்துக்குச் செல்லுதலால், ஆயிடை - இராசமாபுரத்தில், மறு - குற்றம், மன்னவன் - சச்சந்தன், தன்மையை - செய்தியை, குறுகவம்மென - சுருக்காக வருக என்று, சேடியை வம்மென்று உயர்த்துக் கூறினாள், தான் நிற்கின்ற தவநிலைக்கு அது தகுதியாகலின்.

96. கொல் நுனை எஃகின் - எதிர்த்தாரைக் கொல்லுகின்ற நுனையையுடைய வேல், வாளுமாம். இளையான் - கந்துக்கடன், மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பு - சொல்லப்புகின் சொல்லும் ஒன்று சொல்லற்கு அஞ்சக்கூடிய நிலைபெற்ற கற்பு, மடவாள் - இளை யாளாகிய சுநந்தை, போற்றித் தந்த - விரும்பி யழைத்துப் போந்த, புகழோன் - புகழையுடையவன், சீற்றத் துப்பு - சீற்றமும் வலியும், சீவகன், சீவித்தலையுடையவன் என்று தெய்வம் வாழ்த்தினமையின், அதுவே பெயராயிற்று.

97. மேகம் ஈன்ற மின் - மேகம் தான் பயந்த மின்னற்கொடி, ஆகம் - மார்பு, இன் பால் - இனிய பாலாகிய, போகம் ஈன்ற புண்ணியன் - தான் சத்தியும் சிவனுமாய் உலகத்துக் கெல்லாம் போகத்தை யுண்டாக்கின சிவபெருமான், புண்ணியன் என்றார். திரிபுரத்தை யழித்தும் அலைகடல் நஞ்சுண்டும் பல்லுயிர்களையும் காத்தலின், எய்த கணை - எய்த அம்பாகிய திருமால் கணை வளருமாறு வளர்கின்றானெனவே, அவன் ஆய்ப்பாடியிலே நந்தகோன் மனையிலே மறைய வளர்ந்தது உவமையாம், மாகம் - விசும்பு, மா மதி - அழகிய பிறைத்திங்கள்.

98. முழவென - முழவுபோல, சிலை - வில், சிலையினான் - கந்துக்கடன், அழல் எனக் கனலும் வாட்கண் - அழல்போல் நெருப்புக் கக்கும் வாளைப் போன்ற கண், அழலெனக் கனலும் - வாளுக்கு அடை, யாழ் மருட்டும் மழலைத் தீஞ்சொல், மருட்டும் - ஒக்கும், மழலை - நிரம்பாமொழி, மதலை - சீவகன், மதலைபோல் குடியைத் தாங்குதலின் மகனை மதலை யென்றார். குழைமுக ஞானமென்னும் குமரி - குழையப் பண்ணுகின்ற முகமுடைய ஞானமென்னும் குமரி, வேறு தன் கருத்தை யறியாரின்றி இவனே தன் கருத்தறியத் தான் அழியாதிருத்தலின் குமரியென்றார்.

99. காணம் - பொற்காசு, குறுணியாக - குறுணியளவாக, பிரப்பு - பிரப்பரிசி, வைத்து - வைக்க, பரந்து - பரந்த, விகாரம், தவிசின் உச்சியிலிருந்து - ஆசிரியன் தவிசின்மேல் இருந்து, ஓலை - ஓலையிலே, பொன்னூசி - எழுத்தாணி, ஏற்ப - பொருந்தும்படி, செல்வியை - கல்வியாகிய நாமகளை.

100. நூல்நெறி - ஆகமம் கூறிய வழி, வகை - நன்மை தீமை, நுண்ணிதின் நுழைந்து, கூரிய பொருளிடத்தே நெஞ்சு சென்று, தீமைப்பால் நெறி - தீய வழி, பருதியங் கடவுள் - ஞாயிறு, நிறத்தாலும் இருள் நீக்கத்தாலும் உவமை, கோன் - அருகன், குணம் - நன்ஞானம், நற்சாட்சி, நல்லொழுக்கம், நால்நெறி - நால்வகைக் கதி, நரகர், விலங்கு, மக்கள் தேவர்.

101. நீரார் - தன்மையுடையவர், அருவினை கழிய நின்ற நெறி - தீவினை கழிய நின்ற நெறி, சன்மார்க்கம், இன்ப நிறைகடல் - அனந்த சுகம், பொறி….கன்றி நின்றார் - வேட்கையாகிய நஞ்சையுடைய உடம்பென்னும் பாம்பிடத்தில் பொறியென்னும் பெயரையுடையவாகிய ஐந்து வாயிடத்தே களிப்பைச் செய்கின்ற விடயங்களிலே அடிப்பட்டு நின்றார். நின்றார் எனவே, அவர் துன்பத்திலிருந்து நீங்குதலின்மை பெற்றாம்.

102. கரியவன் - கண்ணன், தேற்றியாங்கு - உணர்த்தியது போல, அப்பெரியவன் - அறிவாற் பெரிய அச் சிறுவன், என்ன - என்று சீவகன் வினவ, எனப் பேசலோடும் –

என்று ஆசிரியன் கூறியவுடன் - இது உடனிகழ்ச்சி, சொரிமலர் - தேனைச் சொரியும் மலர், குழை - காதணி, சோர - வீழ, திரு - அழகு, கண்ணி - தலைமாலை, தெருமந்து - கலங்கி.

103. நீ இனையையாயது - நீ இத் தன்மையனாகியது, எம்மனோர் - எம்போல்வார், செய்த பாவம் நீங்குவது காரணமாக ஆகும். நம்பி - விளி, இவைபுனை மகளிர்போல - இழையால் தம்மைப் புனைந்து கொள்ளும் மகளிரைப் போல, புலம்பல் நினையல் - புலம்புவதை இனி நினையாதே, நின் பகைவன் நின்றான் - நின் பகைவனான கட்டியங்காரன் கெடாது இன்னமும் உள்ளான். நீவி - உடம்பைத் தடவி, நெடுந்தகை - சீவகன், நீர் துடைத்து என்றது அரற்று என்னும் மெய்ப்பாடு, நினைவெலாம் என்றது அவலம்.

104. விழுப்பொருள் - இடும்பையைத் தருவதொரு காரியம், வேண்டுவல் - அல்லீற்றுத் தன்மைச்சொல், சந்தியால் னகரம் வந்தது, குரவீர் என வரற்குரியது, குரவிர் என இர் ஈறு கொண்டது, கேளிர் வாழியோ, (குறுந்.280) என்றாற்போல, ஆண்டகைமை கூறிற்று, கொலையை விலக்குவரோ என்று உணர்ந்தான், அவன் திறத்து - கட்டியங்காரனது குலத்தின்பால், அழற்சி - வெளிப்படத் தோன்ற நிற்கும் வெகுளி, இன்மை - இல்லா, தான் போல ஒழுகுந் தன்மை, வில்வல்லான் - விற் போரில் வல்லுநனாகிய சீவகன், நேர்ந்தான் - நேர்தற்கரிய அதனை நேர்ந்து உடன்பட்டான்.

105. கைகவி நெய்பெய்து - அமையும், இனியும் வேண்டா எனக் கையை விரித்துக் கவிக்கு மளவு நெய்யைச் சொரிந்து, கன்னல் - சருக்கரை, கண்ட சர்க்கரை, தேவர் காலத்தே, பாகுபோல் இளகி மணல்போல் இருக்கும் குழைபாகு குடங்களில் வைத்திருக்கும் வழக்கு உண்டு என்க. என்று உரைப்ப - என்று கந்துக்கடன் கூற, வெள்ளி….வண்ணம் - வெள்ளிமலையை அள்ளியெறிந்து கடலைத் தூர்க்கின்றது போல, விலாப்புடை - விலாப்பக்கம், வீங்க - பெருக்க, ஐயனது அருளினால் - ஐயனாகிய நின்னருளாலே, அந்தணர் - அறவோர், தொழிலோனானேன் - தொழிலையுடைய வனாயினேன்.

106. பொறுக்கலாத - சுமக்கமாட்டாத, நீள்நிதி - நீண்டதிரள், இல்லம் - பெரிய மனை, நலம் பொறுக்கலாத - தன் நலத்தையே தானே பொறுக்கமாட்டாத, எல்லா மூர்த்தமும் இவனாதலின், நான்முகன், என்றார். ஆதி வேதம் பயந்தோய் நீ (சீவக.1242) மலரேந்து சேவடிய மாலென்ப (1610) என்ப மேலும், தமர் - துறந்தவர், உலம் - தூண், ஊடு - உள்ளே, கலம் - அணிகலம், சாயலவர் - சாயலையுடைய மகளிர், உழை - ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வந்த இடைச்சொல்.

107. ஐயனை - ஐயனாகிய நின்னை, காண - கண்டேனாக, அதகம் - மருந்து, பையணல் நாகம் - படத்தை யுயர்த்தும் பாம்பினது நஞ்சு, நாகம், ஆகுபெயர், வட்க - முற்றவும் கெடுதலால், உட்கி - அஞ்சி, தேர்வேற்கு - மனத்தின்கண்ணே ஆராயும் எனக்கு, அமிர்து நிமிர்ந்த போல் உலாய் என இயையும். உலாய் - உலாவப்பட்டு, மொய் குரல் முரசம் - நெருங்கிய குரலையுடைய முரசு, தழங்கு குரல் - ஒலிக்கின்ற குரலோசை, தழங்கு குரல், தழங் குரல் என விகாரம்.

108. கோள் இயங்கு உழுவை - கொலைத் தொழிலிலே நடக்கின்ற புலி, சிலையுழவன் - வில்வல்லுநனாகிய சீவகன், தான் இயல் தவங்கள் - முயற்சியால் பிறந்த தவங்கள், நீ தந்தையாகி என மாறுக, வாள் - ஒளி, படைத்தனை - நல்வினையால் இக் கலைகளைக் கற்றுத் தான் வேறொரு பிறப்பானமை கூறினான், என்ன - என்று சீவகன் கூற, மீளி - வலிமை, மெய்ந்நெறி - தவநெறி.

109. மறு - குற்றம், நீங்கி - நீங்கிச் சென்று, அறமல்ல பிற - அறமல்லனவாகிய பிறவற்றை, செலவு விலக்கும் சொற்களை, துறவறம் புணர்க - துறவறத்தைக் கூடுக, தோன்றல் - சீவகன், நறவு அறமலர்ந்த கண்ணி - நறுமணம் அறவே தன்னிடத்துக் கொண்ட கண்ணி.

110. குழலுறு கிளவி - குழல் போலும் இனிய சொற்களைப் பேசும் சுநந்தை, தமியனாக - தனிமைப்படும், நிழலுறு மதியம் - குளிர்ந்த ஒளி முழுதுமுடைய திங்கள், கலை முழுதும் நிரம்பிய முழுத் திங்கள், தன் மகனுக்குக் கற்பித்த கலைத் தொகை கண்டும் கேட்டு முள்ளாதலின், ஆசிரியனை இவ்வாறு கூறினான், நீத்தியோ - நீங்கிச் செல்கின்றாய் போலும், நில்லான் - அச்சணந்தி யாசிரியன் நில்லானாகி, பரிய - கெடும்படி, நோற்பான் - தவம் செய்ய வேண்டி, விஞ்சையர் வேந்தன் - அச்சணந்தி யாசிரியன்.

111. ஆர்வவேர் - ஆசை யென்கிற பிறவி வேர், அரிந்து - நீக்கி, வீரன் - ஸ்ரீவர்த்தமான சுவாமிகள், தாள் நிழல் - சமவசரவணம், மாரி மொக்குளின் - மாரிக் காலத்தே மழை பெய்யுங்கால் நீரில் உண்டாகும் குமிழிபோல, வீடு பெறுங்கால் திருமேனியுடனே மறைவதற்கு மொக்குள் மறைதல், மாய்ந்து - மறைந்து, சோர்வில் கொள்கையான் - வழுவுதல் இல்லாத நோன்புடையவன், தோற்றம் - பிறவி.

112. கலையினது அகலம் - கல்வி காரணமாகப் பிறக்கும் ஞானம், காட்சிக்கு இன்பம் - அப்பருவத்தில் பிறக்கும் அழகு, சிலையினது அகலம் - படைக்கலம் பயின்றதனால் அப்போது பிறக்கும் வீரம், வீணை - தாளத்தோடு கண்டத்திலும் கருவியிலும் பிறக்கும் பாட்டு, இசை நாடகம் காமத்தை விளைத்தலின், அவற்றால் பிறக்கும் காமத்தை வீணைச் செல்வம் என்றார். மலையினின் - மலைபோல, அகலிய - விரிந்த, இலை - இந்நான்கிற்கும் உறைவிடம் வேறே இல்லை, என - என்னும்படி.

இதனால் சீவகனுக்குப் பதினைந்தாண்டு சென்றபின் நல்வினையால் பிறக்கின்ற குணங்களைக் கூறுகின்றார்.

113. நாம் நிரை அடைதும் - நாம் ஆனிரையை அடித்துக் கவர்ந்துகொள்வோம். அடைந்த காலை, கோன் படை வந்து பொருது, குடையும் பிச்சமும் ஒழிய உடையும் என இயைக்க, கோன் - அரசன், குடை - கொற்றக்குடை, பிச்சம் - பீலியால் கட்டுவது, உடையும் - தோற்றோடும், உடைதும் - தோல்வியடைவோம், சுடுவில் - சுடுதலால், நெருப்பு மூட்டிப் புகையெழுப்புதலால், தேன் உடைதல் - தேனையீட்டியிருந்த ஈக்கள் தேனடையை விட்டு நீங்குவது, வண்ணம் - போல, சுடு - முதனிலைத் தொழிற்பெயர், தேனினம்போலக் கெடுவோம். எனவே வேடுவராகிய தமக்குப் பாடின்மை கூறினான்.

114. ஏழை வேட்டுவீர் - இகழ்ச்சிக் குறிப்பு, ஒன்று தேர் - ஒற்றைத் தேர், ஒருவன் கூற்றமே என்று கூறினும் - ஒருவனை எமன் என்றே உலகத்தார் உறுவதாயிருப்பினும், கோடும் - ஆனிரையைக் கொள்வோம்.

115. பூத்தகோங்கு - பூக்களை நிரம்பப் பூத்திருக்கும் கோங்குமரம், பொன் - பொன்னாலாகிய பணிகள், நலக்கு - நலம் நுகர்தற்கு, ஆ செல்தூண் - ஆ தீண்டுகுற்றி, ஆனினம் தினவு தேய்த்துக் கோடற்காக நாட்டப்படும் தூண், நித்திலம் - முத்து, கோதை - பூமாலை, நித்திலமார்பன், கோதைமார்பன் என இயையும், இவன் - நந்தகோன், வாய்த்த - தப்பாத.

116. பிள்ளை - காரியென்னும் பறவை, அழித்தது - தீங்குண்டெனத் தெரிவித்து மனவமைதியைக் கெடுத்தது. எள்ளன்மின் - மிக்க விழிப்புடனேயிருந்து காப்பீராக. வெள்ளி வள்ளி - வெள்ளியாற் செய்த வளைகள், நல்லார் - மகளிர், முள்கும் ஆயர் - கூடும் புதுமணவாளப் பிள்ளைகள்.

117. காயமீன் - ஆகாயத்திலுள்ள மீன்கள், கான் - காட்டில், இரைமேய - இரையை ஆனிரைகள் மேய்ந்து கொண்டிருக்கவே, வெந்தொழில் வேடர் - வெவ்விய கொலைத் தொழிலையுடைய வேடர், பாயமாரி - பரந்த மழைத்தாரை, பகழி - அம்பு, மத்துஎறி தயிரின் - மத்தால் கடையப்பட்ட தயிர்போல, ஆயினார் - சிதறியோடினர்.

118. எம் அனைமார் - எம் அன்னைமாரே (கன்றுகளை விளித்துக் கூறுதல்) நும் அனைமார் - நும்முடைய தாய்மாரை, நோவ அதுக்கி - நோவும்படி அடித்துக்கொண்டு, வெம்முனை வேட்டுவர் - வெவ்விய போரைச் செய்யும் வேடர், உய்த்தனர் - கொண்டுய்த்துச் சென்றனர். மனைக்கன்று - மனையிடத்தேயுள்ள ஆன்கன்று, உவப்பின்கண் அஃறிணையை உயர்திணையாற் கூறினார்.

119. கொடுமரம் - வில், எயினர் - வேடர், கோட்டு இமில் ஏறு - கொம்பும் கொண்டையுமுடைய ஆனேறு, படுமணி நிரை - ஒலிக்கின்ற மணிகட்டிய ஆனிரையை, வாரி - சேரக் கொண்டு, பைந்துகில் அருவி நெற்றி - பசிய துகில் போன்ற அருவி யிழியும் உச்சியையுடைய, அத்தம் - சுரத்துவழி, பித்தை - தலைமயிர், வடிமலர் - அழகிய பூ, பூசல் - ஆனிரையிழந்த பூசல்.

120. இடிக்கும் - வெருளும், மாற்றம் - நிரையிழந்த செய்தி, மறம்கூர் கடல்தானை - வீரம் மிகுந்த கடல் போன்ற தானை, காற்றின் - காற்றினும் கடுக, தொறு - ஆனிரை, காவல் மன்னன் - கட்டியங்காரன், ஏற்றையரிமான் - சிங்கவேறு, இடி - முழக்கம்.

121. கார்விளை மேகம் - கார் காலத்தில் உண்டாகும் மேகம், கவுள் அழி கடாத்த - கன்னம் மறையும்படி ஒழுகும் மதத்தையுடைய யானைகள், இவுளி - குதிரை, இவுளி பூட்டிய, புனை மயிர்ப் புரவி - அணி செய்யப்பட்ட பிடரியினையுடைய குதிரை, வார் விளை முரசம் - வாரால் கட்டப்பட்ட முரசம், நீர் - கடல் நீர், சுரி சங்கு - முறுக்கிய சங்கு, நெளி பரந்த - நெளியும் பரந்து சென்றன. நெளிய - நெளியென விகாரம்.

122. பல்லினால் சுகிர்ந்த நார் - பல்லினால் கிழித்த நாரிலே, மலர் பயிலப் பெய்த - பூக்களை நெருங்கத் தொடுத்த, கால் விசை முறுக்கி - காலில் விசையுண்டாக முறுக்கி, கால்களை விசையாக வைத்து என்பதாம், உடைந்திட்டது - தோற்றுவிட்டது, அழுங்கி - இரங்கி, ஆழ்ந்தான் - அழுந்தி யொடுங்கினான்.

123. மன்நிரை - பெரிய ஆனிரையை, வாட்கண் - வாள்போன்ற கண், பொன் இவை சுடரும் மேனி - பொன்னாற் செய்த இழைகள் கிடந்து விளங்கும் மேனி, பொற்பு - அழகு, கடி முரசு - ஒலி மிக்க முரசு, கொட்டி - முழக்கி.

கொடுப்போரும் கொள்வோருமாகிய இருகுலத்தோரும் உயர்வு தாழ்வு கருதாதிருத்தற்குக் “கொள்க” என்றும், “தருதும்” என்றும் கூறினான். படை நான்கும் மிகப் படைத்துப் பல்லுயிர்க்கும் அருள்புரிவோர் உளராதலாலும், கன்னியை விரும்புவோர் உளராதலாலும் முரசு கொட்டி யறைவித்தான் என்க.

124. போர்ப் பண்ணமைத்து - போர்த் தொழிலுக்கு ஏற்றவாறு தகுதி பண்ணி, நுகம் - குதிரையைப் பூட்டும் கால், பண்ணமைத்து - செவ்வை செய்து, கார்க் கொண்மு - கார் மேகம், கொண்மூ, கொண்மு என விகாரம், நிமிர்ந்தான் - செலுத்தினான், குளம்பின் - குளம்பினால், மான் - குதிரை, பார்க்கண் - நிலத்தில், பகல் - ஞாயிறு, மாய்ந்தது - மறைந்தது.

125. மோட்டு முதலை - பெரிய முதலை, முதுநீர் - ஆழ்ந்த நீர்நிலை, வலியது - வன்மை, உண்டேல் - உண்டென்றால், வலியாரையும் காண்டும் - காட்டுள் நமக்கு வலியுண்டு, நம்மின் வலியாரையும் உளரேல் காண்போம். ஏட்டைப் பசி - தளர்ச்சிதரும் பசி, வேட்டு - வேடர் கூட்டம், அந் நிரையை - தாம் கவர்ந்துகொண்ட அந்த ஆனிரையை, விரைந்தது - போர் செய்தற்கு விரைந்து வந்தது.

126. ஐந்நூறு நூறு தலையிட்ட ஆறாயிரவர் - ஐம்பத்தாறாயிரம் பேர், மெய்நூறு நூறும் - நூறு பேர் மெய்யை ஒரு தொடுப்பில் அழிக்கும். நுதி - கூர்மை, கணை - அம்பு, தூவி - அவ்வாறு நூறாதபடி எய்து, மிகச் சொரிந்து, கை நூறு வில்லும் - கையிடத்தே யிரந்து பிறரை யழிக்கும் வில்லும், அறுத்தான் - அற்றுவிழச் செய்தான். மைந்நூறு வேற்கண் - மை தீட்டிய வேல் போன்ற கண்; மையாகிய நூறு, (நூறு - பொடி) மனம்போல என்றார். நிலை நில்லாது கெடுதலின், மாய்ந்தார் - ஓடி யொளித்தனர்.

தம் உயிர்க்கு ஊறு செய்யாது, அம்பு எய்தமை கண்டு கீழே போட்டுவிடுதலின், தூவுதலால் அறுத்தான், என்றார்.

127. அற்றமின்றி - உயிரிழத்தலின்றி, தோழர்க்குப் போர் இல்லையாயினும் கூட நின்றதனால் “தோழரோடும்” என்றார். கோள் உற்ற - வேடரால் கொள்ளப்பட்ட, கோவன் - ஆயனாகிய நந்தகோன், வாளுற்ற புண் - வாளால் உண்டான புண், வடிவேல் - வடித்த வேல், வடிவேல் கூறியது ஆழமாகப் பாயும் என்றற்கு, தான் தோற்றதன்மேல் சீவகன் வெற்றி நிலைநின்றது. கட்டியங்காரனுக்குப் புண்ணுள் வடிவேலெறிந்திட்டது போல் ஆயிற்று, நாளுற்றுலந்தான் - கட்டியங்காரன், சீவகன் அரசவுரிமை எய்தும் நாள்வந்துறுதலால், அவனை அவ்வாறு கூறினார். வெகுண்டது - கேட்டிற்கு அறிகுறி.

128. கூற்றினும் - கூறுபாட்டிலும், எமனிலும் என்றுமாம், படையுள் - படுக்கும் வீரருள், பயம் கெழு - பயன் பொருந்திய, பனுவல் - ஆராய்ச்சி, நடை - ஒழுக்கம், ஒன்றல்லனவெல்லாம் பலவாதல்பற்றி எல்லாம் என்றார். தொடையலங்கோதை - கட்டுதலையுடைய அழகிய மாலையுடையாய், மகடூஉ முன்னிலை, நூலார் கூற்று.

கொடையிலும் ஒருவனே கொடுப்பன், படையிலும் ஒருவனே கெடுப்பன், இவ்விரண்டும் ஒருவனிடத்தே நில்லா, ஆயினும் இவையிரண்டும் சீவகனிடத்தே கண்டேம் என்று சொல்லித் தொழுது நிற்பாராயினர். உம்மை, சிறப்பு.

129. குருசில் - தோன்றலாகிய சீவகன், விண்ணகம் - தேவருலகம், மற்று, வினைமாற்று, இவர்கள் - மக்களாய்ப் பிறந்தார், மழகளிறு - இளைய களிறு, பண்ணகத் துறையும் சொல்லார் - பண்போல இனிய சொற்களைச் சொல்லும் மகளிர், நன்னலம் - இவனது பெறுதற்கரிய நலம், தவத்தின் - தவத்தால், யார் கொலோ அளியர் - அவர் யாவராயினும் அளிக்கத் தக்காராவர்.

130. உயர் மிக்க தந்தை - பிள்ளையுயர்ச்சி மிகுதற்குக் காரணமான தந்தை - கந்துக்கடன், காய் - விளங்குகின்ற, நாவல் ஓம்பி - ஆலத்தி முதலியவற்றால் கண்ணேறு கழித்து, ஆய்கதிர் - இனிய ஒளி, ஆயிரச் செங்கணான் - இந்திரன், சேய் உயர் உலகம் - மிக்க சேய்மையிலுள்ள துறக்கம், எய்தியன்னது - அடைந்தாற் போல்வது, ஓர் - சிறந்த.

131. கோல் இழுக்குற்ற ஞான்றே - செங்கோல் வேந்தனான சச்சந்தன் இறந்த அன்றே, கொடுமுடி - நெடிய உச்சி, கால் இழுக்குற்று வீழ்ந்து - கால் சரிந்து வீழ்ந்தேனென்று பிறர் கூறுமாறு தலைகீழாக வீழ்ந்து, கருந்தலை - பெரியதலை, அரசனோடு இறவாமையால் பயனில்லாத என் தலையை, களையலுற்றேன் - போக்கிக் கொள்ளலுற்ற யான், மால்வழி - அரசற்கு வழித் தோன்றல், உளதன்றாயின் - இருப்பது இன்றாகுமாயின், தேவிக்குப் பிள்ளையுண்மை யறிவானாகலின் இது கூறினான். முடிப்பல் - அழிப்பேன். ஆலம் வித்தனையது - ஆலம் விதை போல்வதொரு சிறு நினைவு, அழிவினுள் அகன்று - உயிர் விடுத்தலிலிருந்து விலகி,

132. நலத்தகு தொறுவின் - நலம்பொருந்திய இடையரிடையே இலக்கணம் - பெண்மைக்குரிய இலக்கணங்கள், இசையிற் போந்த - கற்பால் எய்தும் புகழ் பரவிய, நலத்தகு நங்கை - நலத்துக்குத் தக்க நங்கை.

குலம் தோன்றுத லருமை பற்றிப் பின்னும் “முடிந்த” என்றான். தன் குலமெல்லாம் தானாய் நிற்றலின், வாராநின்றேன் என்றான்.

133. ஊறு இனியன் - பரிசத்தால் இனியவள், மேம் பால் - உண்டற்கு மேவும் இனிய பால், உண்ண - சிவக்கக் காய்ச்சிய, வண்ணம் - அழகு, கருவிளம் போது - கருவிளம் பூக்களை நிகர்க்கும்.

134. சேதா - செம்மையான ஆ. சுமைத் தயிர் - ஆடைத் தயிர், பாதாலமெல்லாம் - பாதாளமட்டும், போது - பூ, கோதை சூட்டு - மணமாலையைச் சூட்டுக. அடித்தி - அடியான், யாது ஆவது - இதனால் வரும் குறை என்னை?

135. நிலமட்குக் கேள்வன் - கண்ணன், கேள்வன் - கணவன், நீள்நிரை நப்பின்னை - மிக்க ஆனிரைகளையுடைய நப்பின்னை என்பவள், பிள்ளை, அவள் பெயர், ந, சிறப்புப் பொருளுணர்த்துவதோர் இடைச் சொல், நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல, இலவு அலர் - இலவம் பூ.

136. கோட்டிளங்களிறு - கொம்புகளையுடைய இளைய யானைமோடு - பெருமை, மடமகள் - இளையவள், மாமான் - விளி, மாமன் - பெயர், சூட்டொடு கண்ணியன்றே என்பது. இடுந்தன்மையன்றிச் சூட்டுந்தன்மையோடு கூடிய கண்ணியல்லவோ என்றும், நெற்றிச் சூட்டும் கண்ணியுமல்லவோ என்றும் இரண்டு பொருளுணர்த்தும், உணர்த்தவே, மார்பிற்கு மாலையிடுக என்றும், தலைக்கு மாலை சூட்டுக என்றும் பெரும்பான்மையும் வழக்கு நடத்தலின், தலைமேல் வைக்கப்படும் கண்ணியென்றானாக நந்தகோன் கருதினானாம். நெற்றிச் சூட்டு ஆடவர்க் காகாத தன்மையும், கண்ணி ஆடவர்க்கு ஆம் தன்மையும் போல, தன்குலத்திற்கு ஆகாமையின் சூட்டின் தன்மையும், பதுமுகன் குலத்திற்குச் சிறிது பொருந்துதலின் கண்ணியின் தன்மையும், உடையனென்று சீவகன் கூறினானாம். இடையரினும் வாணிகம் செய்பவர் உண்டு. செய்வான் என் என்று மாறுக. நீட்டித்தல் - காலம் கடத்தல், விரையப் பதுமுகனுக்கு மணம் செய்வாம் என்றானாயிற்று.

இனி, மாமான் எனக்குச் சூட்டோடு கண்ணியன்றே என்றது, தனக்கு ஆகாமையின் புலாலும், பதுமுகற்கு ஆதலின் பூவுமாகக் கருதினானென்றுமாம், இனி, ஆமான் சூட்டுமாம், இனி, மா, வட சொல்லாக்கி ஆகாதென்றும் உரைப்பர்.

137. ஏறங்கோள் - ஏறுகோட் பறை, எடுத்துக்கொண்டு - கோவிந்தையை எடுத்துக்கொண்டு, சாறு - உலா, புக்கு - கந்துக்கடன் மனையிற் புகுதலால், வீரன் ஏற்றான் - வீரனாகிய சீவகனும் பதுமுகனுக்கு என்று ஏற்றான். “வீறு - வேறொன்றற்கில்லா அழகு.”

138. கள்வாய் விரிந்த - தேன் வாயிலே பரந்த, பிணைந்தன்னவாகி - சேர்ந்தாற் போன்ற தன்மையுடையவாய், வேல் மிளிர்ந்த - வேல்போல் பிறழ்ந்த, விரை - மணம், முள்வாய் எயிறு - முள்ளைப்போல் கூறிய பற்கள், முனியாது - வெறுப்பின்றி, மாந்தி - உண்டு, கொள்ளாத இன்பக்கடல் - உள்ளிடம் கொள்ளாது கரை புரண்டோடுகின்ற இன்பக்கடல்.

139. தூங்கு வாவல் - தலை கீழாகத் தொங்கும் வௌவால், தொன்மரம் - பழைமையுடைய ஆலமரம், ஓங்கு குலம் - உயர் குலம், நைய - தளர, அதனுள் - அக்குடியில், தாங்கல் கடனாகும் - ஆல் தான் தளர, அதன் விழுது தாங்குவதுபோலக் குடியைத் தாங்குவது கடனாகும். தலை சாய்க்க - நாணத்தால்தலை கவிழ, தீச்சொல் - இவன் பிறந்து இக்குடி கெட்டது என்னும் பழமொழி. நீங்கல் - நைந்த குடியைத் தாங்காது போய்விடுதல், மடவார்கள் - பேதைகள், கடன் - செயல், என்று பொருள் வயிற் செல்வதே கடன் என்று நினைந்து.

140. திரைகள் தரும் சங்கு - அலையிடத்தே மிதக்கும் சங்குகள், கலம் தாக்கி - மரக்கலம் தாக்குவதால், கரை கடலுள் திரள் முத்தம் கால - ஒலிக்கின்ற கடலில் அச் சங்குகள் தம்மிடத்தே திரண்டு முத்துக்களைச் சொரிய, கவண - கலத்தின் பின்னே கதவுபோல் நின்று நெறிப்படுத்தும் கவணயம், (Rudder) கடற்கரையில் வாழ்நர் இன்னும் இதனைக் கவணயம் என்றே வழங்குகின்றார். கணையொழிய என்று கொண்டு, மேலிருந்து எய்த அம்பு பின்னே கழியக் கலம் முன்னே சென்றது. இதனால் கடுகின விசை கூறினார் என்பர் நச்சினார்க்கினியர். வரை முந்நீர் கிடந்து நீண்டது என - மலையானது கடலிடத்தே நில்லாதே கிடந்து கிழித்த தென்னும்படி, தீவின் நிரை இடறிப் பாய்ந்து - சிதறிக் கிடக்கும் தீவுகளின் ஒழுங்கை இடறிக் குதித்து, இரிய - பிற்பட்டு நீங்க, மாது, ஓ அசை.

141. மின்னும் மிளிர்பூங் கொடியும் மென் மலரும் ஒப்பார் - மின்னல் விளக்கத்துக்கும், கொடி அசைதற்கும், மலர் மென்மைக்கும் உவமை, தோகை - மயில், அன்ன நடை, மயில் போன்ற சாயல், துன்னி - நெருங்கி, துப்புரவு - நுகர்தற்குரிய பொருள்கள், அடைந்தஃது - அடைந்து, செய்வஃதே முறை (குறள்) என்றாற்போல.

142. விளக்குப்போல - விளக்கு அசைவதுபோல, ஒன்றானும் - சிறிதும், தாம் - அசை, இடுக்கணை அரியும் எஃகு ஆம் - துன்பமாகிய வலையை அரிந்து தள்ளும் வாளாகும். இருந்து - நகாமல் இருந்து, உய்ந்தார் - இடுக்கண் நீங்கினவர். ஆண்மை வடுப்படுத்து என்னை - இருந்தழுது ஆண்மைக்கு மாசு தேடிக் கொள்வதால் உண்டாகும் பயன் யாது, வருப - வருபவை, வந்துறுங்கள் - வந்தே தீரும். கள், விகுதிமேல் விகுதி, அசையென்றும் கூறுப.

143. விளைவின் - பயனாகி; வீவரும் துன்பம் - நீக்குதற்கரிய துன்பம். முன் நீர்க்கனை கடல் அழுவம் - பழைய நீரையுடைய ஒலிக்கின்ற கடற்பரப்பு, கண் கனிந்து - கண் குழைந்து, நனை - தேன், அரும்புமாம். நலம் கிளர் பாத மூலம் - நலம் பயக்கும் பாதமாகிய மூலப்பொருளை, துன்பம் நீங்குதற்குக் காரணமாதலின், மூலம் என்றார்.

குறிப்பு :- கலம் படுவதாகவும், அவர் வருந்துவதாகவும் சீதத்தனுக்குத் தோன்றியதன்றி, உண்மையன்று, “அச்சமே கீழ்களது ஆசாரம்” (குறள்) என்பவாகலின், “அச்சம் நீங்குமின்” என்றான்.

144. பருமித்த - ஆயத்தம் செய்யப்பட்ட, பையென - மெல்லென, குருமித்து - முழங்கி, ஒடிந்துவிழும் ஓசை குருமித்தல் எனப்படும், கூம்பு - பாய்மரம், இற - முறிய, நிருமித்த - ஏற்படுத்தின, மாய்ந்தார் - மறைந்தனர். உரும் - இடி.

145. நாவாய் - மரக்கலம், ஆரும் இல் நடுயாமம் - துணையாரும் இல்லாத நள்ளிரவில், பொருளைப் பொருள் - பொருளை உறுதிப்பொருள், கொண்டாய் வீவாய் என முன் படையாய் படைத்தாய் - கொண்ட நீ இறப்பாயாக என முன்னே படைக்காமல் இப்போது படைத்தாய். வினையென்பாவாய் - வினையென்று சொல்லப்படும் பாவையே. படு மணல் திட்டை - கொழிக்கின்ற மணல் மேடு, இது கடலலையால் ஒதுக்கப்பட்டுக் கிடந்த கரையின் மேடு.

146. ஓடும் திரைகள் - கரையை மோதிவிட்டு நீங்கும் அலைகள், ஒன்றன்பின் ஒன்றாய்ச் சுருண்டோடும் அலையுமாம், உதைப்ப - தள்ள, ஆடும் - அலைக்கப்படும், அலவன் - நண்டு, நீடிய - நெடிதாய்க் கிடந்த, நெய்தல் அம் கானல் - நெய்தல் நிலத்துக் கானற் சோலை, வாடி - வருந்தி, வருங்கலம் - அவ்வழியே கலமேதேனும் வரும் என, நோக்கா - நோக்கி, காணாமையால் வாடியிருந்தான் என்க. “அன்னம் கொல்லா திருந்தமை, தான் பற்றுக்கோடாக வாழ்வாரைக் காலால் உதைத்துக் கடல் நம்முன்னே தள்ளவும், போக்கற்றுப் பின்னும் அதனிடத்தே செல்லா நின்றதென்று நோக்கி அதற்கு அருளினாற்போலே யிருந்ததென்க,” அன்னத்தின் செயல் நன்னிமித்தமாகக் கருதிச் சீதத்தன், வரும் கலம் நோக்கியிருந்தான்.

147. விஞ்சை - வித்தை, விளிந்த - மாய்ந்த, எஞ்சிய - ஒழிந்த, வான்பொருள் - மிக்க பொருள், மறித்து - உண்டான கெடுதியை நீக்கி, குழைந்து - பலகாலும் நினைந்து கலங்கி, நினையன்மின் - ஒருவரைக் கூறும் பான்மை.

148. தாமும் தகையன - விரும்பும் தன்மையுடையன, கோட்டிடை அமிழ்து ஒத்துத் தூங்குவ - கொம்பிலே அமிழ்தின் திரள்போல் தொங்குகின்ற கனிகள், பசியாலும் வருத்தத்தாலும் உடம்பு வெதும்பியிருந்தமையின், உண்டான் உடம்பு குளிர்ந்தான் என்றார்.

149. நாய்கன் - மரக்கல வணிகனான சீதத்தன், நாகம் கொல் - தேவருலகத்து அமராவதியோ, என்ன - என்று தரனைக் கேட்க, பொன்னகரோ என ஐயுற்றவன், இது பொன்னகர் போல்வதன்று, பொன்னகரே எனக் கருதினமை தோன்ற, நன்னகரென்றவர், பொன்னகர் என்றார். இனி, வாளா சுட்டாக்கினுமாம், மழைகள் தங்கும் மாடம் - மேகம் தங்கும் உயரிய மாடம், “வெள்ளி மலை மேகபதத்துக்குமேல் என்றாரேனும், மேகம் எங்கும் உளது,” மழைகள் தங்கும் இருவர் என இயைத்து, “தரன் கதியால் தங்குதலும், சீதத்தன் கொடையால் தங்குதலும்” எனக் கொள்ளலும் ஒன்று, பின் - பின்பு, அவன் - தரன், பேணி - செய்து, பிறங்குதார் - உயர்ந்த மாலையணிந்த தரன், பேசினன் - ஒரு மொழி உரைத்தான்.

150. இன்றையது - இன்று உண்டானது, கேண்மை - நட்பு, எழுவர் - ஏழு தலை முறையினர், கிழமை - நட்புரிமை, வச்சிரயாப்பின் நீங்கா ஊழால் - என இயைக்க, வச்சிரயாப்பு - வச்சிரத்தால் தலையில் இட்ட எழுத்து, அறன் - சமயம் (Religion), என்று இரண்டு இல்லை - என்று உயர்வு தாழ்வு இல்லை.

151. வெள்ளி வேதண்டம் - வெள்ளி மலை, வீவில் - கெடுதல் இல்லாத, தென்சேடி - தென்பகுதியிலுள்ள சேடிக்கூற்று, இக்கூற்றில் உள்ளது காந்தார நாடு, புள்ளணி கிடங்கு - புள்ளினம் நீங்காமையால் அழகு பொருந்திய அகழி, போகா - நகரினின்று நீங்காது நிலைபெற்றுள்ளன.

152. சங்கு உடைந்தனைய வெண்டாமரை - சங்கு பாதியாக உடைந்தாற்போல மலரும் வெண்டாமரை, சங்கு தாமரைக்கும், தாமரையோடு கூடிய தடம் குடிக்கும் உவமை, அடுத்துவர லுவமையன்று, இனி உரைகாரர் தடங்களிலே உடைந்த தன்மையவாகிய மலரும் சங்கும் போலும் நம்குடி, இது தூய்மைக்கு உவமை, இனி, சங்கு சுட்டாலும் நிறம் கெடாததுபோலக் கெட்டாலும் தன் தன்மை கெடாத குடியுமாம். நத்தம்போற் கேடும் (குறள்.235) என்ப - என்பர். நமரங்காள் - நம்மவர்களே, இது சீதத்தன் பாட்டன் கூற்று, கொங்கு - தேன், இருவடம் - அரசமுல்லையும் காவல்முல்லையுமாகிய இருமாலை, அடி - நின் திருவடி, சொன்னான் சீதத்தன் என்க.

153. யாவனேயானுமாக - யாவனாயினுமாக, உரியன் என்ன - உரியவளாவள் என்று கலுழவேகன் சொல்ல, அடிப்பணி - அடிமைப்பணி, என்றான் - என்று சீதத்தன் சொன்னான். தன்னமர் தேவி - கலுழவேகனால் காதலிக்கப்பட்ட தாரணியென்னும் மனையாட்டி, தத்தைக்கே தக்கது - தத்தைக்குத் தக்கதே என ஏகாரம் பிரித்துக் கூட்டுக.

154. முனிவு அரும் - யாவரும் வெறுத்தற்கரிய, போக பூமிப்போகம் - போக பூமியில் பெறுகின்ற பெரும் போகம், முட்டாது - குறையாது, பெற்றும் - பெற்ற வழியும், தனியவராகி - மணமின்றித் தனித்து, சா துயர் - (மகளிர்க்கு) இறக்கும்போதுண்டாகும் நோய், “சாதலின் இன்னாததில்லை” என்பர் திருவள்ளுவர். அதனின் இல்லை - அச் சா துயரும் மகளிர் தனித்து வாழ்தல்போலத் துயர் தருவதில்லையாம். கனிபடுகிளவியார் - இனிமை நிறைந்த சொற்களைப் பேசும் மகளிர், கவான் - துடை, துஞ்சின் - துஞ்சுதலைப் பெறுவாராயின், பனி - குளிர்ச்சி, இருவிசும்பு - பெரிய வானம், வானத்தில் உயரச் செல்லச் செல்லக் குளிர்ச்சி மிகுதலின், பனியிரு விசும்பு என்றார். தேவர் பான்மையிற்று - மகளிர்க்கு அவ்வாறு துஞ்சுதலால் பிறக்கும் இன்பம் தேவரின்பத்தின் பகுதியையுடைத்து.

155. நூற்படுபுலவன் - சோதிட நூலிலே கண்ணும் கருத்தும் உள்ளவனாகிய புலவன், நுழைந்து - கருத்தைச் செலுத்தித் துணிந்தமையின், வேற்கடல் தானை - கடல்போல வேலேந்திய தானை, வீழ்ந்து - அடியில் வணங்கி, நேரேன் - மகள் கொடுத்ததற்கு உடன்படேனாயினேன். சேற்கடை மதர்வை நோக்கின் சில்லரித் தடங்கண் - சேலின் கடைபோன்ற கடையினையும், மதர்த்த நோக்கினையும், சிலவாகிய அரிகளையுமுடைய கண், நங்கை - காந்தருவதத்தை, பாற்படுகாலம் - ஒருவன் பகுதியிலே படும்காலம், பான்மை - விதி.

156. உடம்பினோடு உயிரின் பின்னி - உடம்போடு உயிர் பின்னுமாறு பின்னி, ஒருவயின் - ஓரிடத்தும், நீங்கல் செல்லா அரிவை - நீங்காத அரிவையே, அரிவையே - விளி, கண்ணும் தோளும் போலும் அரிவை. அறிவால் கண்ணும், உதவியால் தோளும் போலும் அரிவை, தடங்கணி - பெரிய கண்ணையுடைய தத்தை, ஆதி - ஆகுக, அடங்கலர் - பகைவர், ஆணைக்கு அடங்காமையின், பகைவர் அடங்கலர் எனப்பட்டனர், அட்டவேலான் - அழித்த வேலையுடையனான சீதத்தன், ஆணையீராமின் - ஆணைவழி நிற்பீராக.

157. வலம்புரி - வலம்புரி யென்னும் ஒருவகைச் சங்கு, மண்மிசையவர் - மண்ணில் வாழும் மக்கள், வலம்புரிச் சங்கு கடலில் வாழ்வது, வலம்புரி - அந்த வலம்புரிச் சங்கு, பயத்தை - சங்கினாலாகும் பயனை, மகளிர் அனையர் - பெண்களும் தம்மைப் பெற்ற தாயருக்கு அம் முத்துப் போல்வர், நலம் புரிந்தனைய தேவி - நலமெல்லாம் திரண்டு வடிவு கொண்டாற்போன்ற தேவி, குலம் புரிந்தனைய அதிபதி - குலம் வடிவு கொண்டாற் போன்ற அதிபதி (கலுழவேகன்).

158. துன்ப முற்றார்க்கு அலால் இன்பமில்லை - தொடக்கத்தில் துன்பம் அடைப வர்க்குப் பின்பு இன்பமுண்டாகும். ஆதலால் - இந்த உலகுரைப்படியே, நினைத் துன்பத்தால் தொடக்கினேன் - உனக்குத் துன்பம் செய்து பிணித்தேன். உன்னை யொழிந்தவர்க்கு இன்பமே செய்துள்ளேன் என்க.

159. பீழை - துன்பம், பெற்றனன் - நின் நட்பைப் பெற்றேன். அம்பியை - மரக்கலத்தை, தோழர் - தோழர்களையும், உம்மை தொக்கது, ஆழ்வித்திட்ட - சீதத்தனுடைய கண்ணிற்கு ஆழ்ந்துவிட்டது போலத் தோன்றுமாறு மறைத்திருந்த, சுட்டி - இதோ மரக்கலம், இவர்கள் நின் தோழர்கள் என்று.

160. வான்தரு வளத்ததாகி - மழைதரும் எல்லா வளங்களையும் உடையதாகி, பிணியில் தீர்க - பிணி முதலியவற்றினின்று நீங்குக. தேன் தரு கிளவியார் - தேன்போல் இனிய சொற்களையுடைய மகளிர், ஊன்றுக - நிலைபெறுக, ஈன்றவர் வயத்தராகி - பெற்றோர் சொல்வழி நின்று.

161. அடக்கி - புலன்களை யடக்கி, தத்துவர் தலைப்பட்டு - தத்துவ வுணர்வுடைய பெரியோர்களை யடுத்து, எமக்குப் பவம் பரிசு - எங்கட்கும் பிறப்பு அறுதல் வேண்டும், உவப்ப ஈமின் - அவர் விரும்புவனவற்றை நல்குக. அவம் புரிந்து - பிறப்பு அறாமைக்குரிய வீண் செயல்களைச் செய்து, நீங்காது - கெடாது, உடம்பு அருந்தவம் முயல்மின் - உடம்பைக்கொண்டு அரிய தவத்தைச் செய்க. சிவம்புரி நெறி - வீடுபேற்றைத் தரும் நன்னெறி.

162. அம்மலர் - அழகிய மலர்களையுடைய, அல்லியோடு அணிந்து - உள்ளிதழ் உதிராவண்ணம் அணிந்து, விம்முறு நுசுப்பு - மிக வருந்தும் இடை, அணங்கு வீற்றிருந்து சேர்ந்த வெம்முலை - அழகுத் தெய்வம் சிறப்பாக வீற்றிருந்தருளும் விருப்பத்தைச் செய்யும் முலை, பரவை - பரந்த, கலாபம் - மேகலை, செம்மலர் - செந்தாமரை, தத்தை - காந்தருவதத்தை.

163. கொற்றவன் - கலுழவேகனுடைய, முற்றவம் - முற்பிறப்பில் செய்த தவம், மூரி நூல் கலைகள் - பெரிய இசைநூலில் கூறப்பட்ட கலைகள், கணங்கொள் நல்யாழ் - நரம்புகளின் கூட்டம் கொண்ட நல்ல யாழ், யாழ் - யாழால், அனங்கனையும் - உம்மை வருவிக்க.

164. தீந்தொடை - இனிய இசையைச் செய்யும் நரம்பு, மகர வீணை - பத்தொன்பது நரம்பு கட்டின மகர யாழ், தெள் விளி - தெளிந்த இசை, எடுப்பி - எழுப்பி, பூந்தொடி யரிவை - பூத்தொழில் சிறந்த வளையை அணிந்த தத்தை, புலம் மிகுத்துடைய நம்பி - அறிவு மிகவுடைய ஆடவனுக்கு, இறைவராதி மூவகைக் குலத்துள்ளார் - அரசர், அந்தணர், வணிகர் என்ற மூவகைக் குலத்துட் பிறந்தவர், வேந்தடு குருதி வேல் - பகை வேந்தரைக் கொல்லும் குருதிபடிந்த வேலைப் போன்ற, விளங்கு இழை - விளங்குகின்ற இழையணிந்த தத்தை.

165. பொன் இமிர் கொடி - பொன்னாய் வளர்ந்த ஒரு பூங்கொடி, உழல - உலவ, அரற்ற - ஒலிக்க, ஒதுங்கி - நடந்து, புரிசை - மதிற்புறம், கொடி, தளிரை யீன்று, பொன்மலர்ந்து, வண்டு உழல, சிலம்பு அரற்ற ஒதுங்கி, புரிசையடைந்தாள், திருவொடு - ஒடு என்னொடு, கொடியொடும், பாவையொடும், திருவொடும் ஒப்பாள் என இயையும்.

166. பட்டு இயன்ற - பட்டாலாகிய, கண்டத்திரை - பல்வகை வண்ணமுடைய திரை, விட்டகலா சாந்து - மனம் விட்டு நீங்குதல் இல்லாத சந்தனம், தூமம் - அகிற்புகை, தொட்டு எழீஇ - எடுத்துப் பண்ணையெழுப்பி, அவைப் பரிசாரம் - கூடியிருக்கும் அவைக்கு முகமனாகப் பாடும் பாட்டு.

167. புறம் - முதுகு, புதைய - மறைதலால், காஞ்சியின் பச்சைத் தாது படிதலால், குயில் கருமை மறைந்து பச்சை நிறத்தால் கிளியெனத் தோன்றிற்று, அலமந்து - அறிவு மருண்டு, என்புருகு குரல் - என்புருகு எழுந்த அன்பு கனிந்த குரலால், அழைஇ - அழைத்து, சிறகர் குலைத்து - சிறகை யசைத்து, உகுத்து - காஞ்சித் தாதுகளை யுதிர்த்து.

168. சுரந்ததனை - மறைந்த குயிற் சேவலை, ஆனா - பொறாத, கையகல - கைவிட்டு நீங்கவே, நோக்கோடு - இனிய பார்வையுடன், விளிபயிற்றி - அன்பு குழைய அழைத்து.

169. குறுத் தாள் - குறுகிய கால், விழைவு - கூடற்கினிய அன்பு, மறுத்து - தடுத்து, உளர்ந்து - உதறி, மகிழ்வு ஆனாகொள - மகிழ்ச்சி குன்றாமல் கொள்ளுமாறு, உறுப்பினால் - தலையால்.

இம்மூன்றும் நிலையென்னும் இசை வகையைச் சேர்ந்தவை. மணத்துக்குரிய காலவரவும், தலைவியது வேறுபாடும் சுட்டித் தோழி தலைவனை வரைவு கடாவுதற் பொருளில் வந்த கொச்சக வொருபோகு.

170. சிலைத்தொழில் சிறுநுதல் - அம்பு ஏற்றிவிட்ட வில்லைப் போன்ற சிறு நெற்றி, தெய்வப்பாவை - தெய்வத்தால் செய்யப்பட்ட கொல்லிப்பாவை, கலைத்தொழில் - பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்ற எட்டு, இலைப்பொழில் - இலைகள் செறிந்த சோலை, குரங்கின - வளைந்தன, தூண் தளிர் ஈன்றன - தூண்களும் துளிர்த்தன, பறவை - கின்னர மிதுனங்கள்.

171. கொடிப்புருவம் - ஒழுங்குடைய புருவம், ஏறா - நெறியா, அருங்கடி மிடறு - அரிய விளக்கம் அமைந்த கழுத்து, விம்மா - பெருக்காது, வீணை நரம்பொடு நாவின் நவின்றதோ - யாழே தனக்குரிய நரம்போடே சாரீர வீணைக்குரிய நாவாலும் பாடிற்றோ, நைந்தார் - வருந்தினார்.

172. இசைத்திறத்து - இசைபாடும் துறையில், நீரினார் - தன்மையுடையவர், வசைத்திறம் இலாதவர் - குற்றமில்லாதவர், நீரினாராகிய வசையில்லாதார், வான் - பெருமை, இசைந்து அவர் பாடவே, அப்பாட்டிசையால், புள் - கின்னர மிதுனம், வெருவி - அஞ்சி, அசிப்பபோன்று - சிரிப்பதுபோல, பரிகசிப்பதுபோல என்றுமாம், அசித்தல் - வடசொற் சிதைவு.

173. மாதர் - காந்தருவதத்தை, தடவர - இசைக்க, வந்த - வந்தன, மீண்டன - திரும்பப் போய்விட்டன, போதா - திரும்ப வருமாறு, புகுந்த - அவள் பாடலால் உள்ளே புகுந்த அப் பறவைகள், தாதலர் தார் - தேனுடைய பூவால் தொடுத்த மாலை.

174. தேன் உயர் மகரவீணைத் தீஞ்சுவை யிவளை - தேனினும் மிக்க இன்பம் தரும் மகர வீணையால் தீவிய இசையமுது வழங்கும் இத்தத்தை யென்பவளை, வான் உயர் மதுகை - வானோரது உயர்ந்த அறிவு வன்மை, வாட்டும் - கெடுக்கும், வார் சிலை - நீண்ட வில், ஊனுயர் நுதிகொள் வேளிர் - பகைவர் தசை மிக்க நுனியைக் கொண்ட வேல் ஏந்தும் வீரர்காள், கான் - மணம், அலங்கல் மாலை - அலங்கலாகிய மாலை.

175. இன்னன் என்ன - சீவகன் மிக்க வலியன், உதவியும் செய்தான் என்று பலரும் கட்டியங்காரனுக்குச் சொல்ல, அவன் இன்புறான் - அவன் அதனால் இன்புறானாய், என - என்று நினைத்துக்கொண்டு, வௌவும் வாயில்தான் என்னை - சீவகன் உயிரைக் கவரும் வழிதான் யாது, சூழ்ச்சிதன் னுளான் - ஆராய்ச்சிக்கண்ணே யாழ்ந்திருக்கின்றான், அன்னது ஆதல் - அவன் கருத்து அதுவாதலை, அரில் தப - குற்றமற, இன்னதால் - இக்காரியம் இத்தன்மையாக இருக்கின்றது. எனவே, இசைப்போரில் தோற்றோரும் கட்டியங்காரனும் பகைப்பார்போலவே இருந்தது என்றானாம், படையமைத்து - போர்க்குரிய படையமைத்துக் கொண்டு, எழுமின் - செல்க.

176. மடந்தை - காந்தருவதத்தை, சீவகனது கல்வியுணர்வு மிகுதி யாவரும் அறிந்ததா தலால், தோற்றனள் எனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறினார், தோன்றல் - சீவகன், நோற்றனள் - முற்பிறப்பில் தவம் செய்துள்ளாள், கோல் தொடி - திரண்ட வளையணிந்த, செம்பொன் குழையும் கோதையும் மின்ன என இயையும், ஏற்றன - தங்கள் தங்கள் மனதுக்கு ஒத்தவற்றை.

177. கண்ணெனும் வலையினுள்ளான் - ஞானக்கண் என்கின்ற வலையை வீசிக்குல முதலியவெல்லாம் நோக்கும்படி அவ் வலைக்குள்ளேயிருந்தான், அந்த ஞானத்தால் எல்லாம் உணர்தலின், கையகப்பட்டிருந்தான் என்றாள், பெண்ணெனும் உழலை பாயும் - பெண்மை யென்னும் உழலை மரத்தைக் கடந்து உள்ளே பாயும், உழலை - கிட்டி வழிகளில் குறுக்கே இடப்பெறும் மரம். எண்ணின் - ஆராயின், என் இதிற்படுத்த ஏந்தல் - என்னை இவ் வருத்தத்திலே அகப்படுத்தின உயர்ந்தோனாகிய இவன், ஒள் நிற உருவச் செந்தீ - ஒள்ளிய நிறத்தையுடைய சிவந்த நெருப்பு, தீ உருவு கொண்டனைய வேலான் - நெருப்பு வேலின் வடிவு கொண்டாற்போன்ற வேலையுடையவன்.

178. யாவனேயானும் - யாவனாயினும், தேவனாயினும் மகனாயினுமாக, அருநிறைக் கதலம் - திறப்பதற்கு அரிய நிறைவென்னும் கதவு, நாவல் நெஞ்சம் - காக்கப்படும் நெஞ்சம், யாத்தாய் - பிணித்து விட்டாய், தேவரிற் செறிய யாப்பன் - தேவரைப்போல இமையாது நோக்கும்படி செறியப் பிணிப்பேன், சிறிது இடைப்படுக - சிறிது பொழுது கழிக.

179. கன்னி நாகம் - கன்னியாகிய நாகம், மலங்கி - மயங்கி, மழை மின்னும் - மழை மேகம் மின்னாநிற்கும், இரங்கும் - முழங்கும், பொன்நாண் - பொற்கச்சு, மின்னு மழையின் - மின்னலொடு கூடிய மழையால், மெலியும் - மெலிவாள்.

இதுமுதல் மூன்றும், கூதிர்ப்பருவங் குறித்துப் பிரியக்கருதிய தலைவனைத் தோழி செலவழுங்குவித்தல்.

180. கருவி வானம் - ஒருங்கு தொக்க மேகங்கள், கான்ற புயல் - பெய்த மழை, அருவியரற்றும் - அருவிகள் முழங்கும், மருவார் சாயல் மனம் அழுங்கும் - மருவுதல் நிறைந்த சாயலையுடைய தலைவி மனமழுங்குவாள்.

181. வான் மீனின் - வானத்து மீன்களைப்போல, கார் - கார்வரவால், கானம் - காட்டிடத்தே பூக்கள், பூத்துள்ளன, தேனார் கோதை - தேன் சொரியும் பூவாலாகிய மாலைபோல்வாள், பரிந்து - வருந்தி, அழுங்கும் - வருந்துவள்.

182. விஞ்சை வீரர் - வித்தியாதரர், வான்கண் பறவை - வானத்திற் படிந்துகொண்டிருந்த கின்னர மிதுனங்கள், பண்ணமைத் தெழுதப்பட்ட பாவை - எழுதும்படி அமர்வித்து எழுதப்பட்ட பாவைபோல.

183. புறந் தாழ - முதுகிடத்தே கிடந்தசைய, ஒளிர்ந்திலங்க - மிக விளங்க, காமர் - அழகிய, வியர்ப்ப - வேர்வையரும்ப, மாதர் - தத்தை, எருத்தம் இடம் கோட்டி - கழுத்தை இடப்பக்கத்தே வளைத்து, இடையிலாள் - ஒப்பில்லாத அவள்.

184. இலையார் பூண், எரிமணிப் பூண், இலையார் பூண் - இலைத்தொழில் செய்யப்பட்ட பூண், எரிமணிப் பூண் - விளங்குகின்ற ஒளியினையுடைய மணிகள் வைத்து இழைக்கப்பெற்ற பூண், செம்பசலை - செவ்விய பசலை, மலையார் இலங்கு அருவி - மலையிடத்தே விளங்கும் அருவிகள், மின்னும் - ஒளிவிடும், கலையார் தீஞ்சொல் - இசைக்கலை நிறைந்த சொல்.

தலைமகன் குறித்த இளவேனில் வரவு கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறியது பொருளாக இதுமுதல் மூன்று பாட்டுக்களும் வருகின்றன.

185. பிறையார் - பிறைபோல், உண்கண் - மைதீட்டிய கண், பொறையார் - கனம் பொருந்திய, வாள் நிறை இலங்கருவி - ஒளி நிறைந்த விளங்குகின்ற அருவி, கறைவேல் - குருதிக்கறை படிந்தவேல்.

186. அரும்பேர் - அரும்பு போன்ற, ஆடமை மென்றோள் - அசைகின்ற மூங்கில் போன்ற மெல்லிய தோள், திருந்து ஏர் பிறை நுதல் - திருந்திய அழகிய பிறைபோன்ற நுதல், நெருங்கு ஆர்மணி அருவி - நெருங்கக் கோத்த முத்துமாலை போலும் அருவி, கரும்பார் தீஞ்சொல் - கரும்பு போல் தீவிய சொல்.

187. பண்ணொன்று பாடல் ஒன்று - அவள் பாடின பாட்டும் அதற்கேற்ற யாழும் ஒரு திறம், அதுவொன்று - அவன் பாடின பாட்டும் யாழும் வேறொன்று, மண்ணொன்று மெல்விரல் - யாழ் இசைத்தற்குப் பொருந்தப் பண்ணிய மெல்விரல், வாள் நரம்பு - ஒளியுடைய நரம்பு, நடவா - யாழும் பாட்டும் இசைய நடந்தில, விண்ணின்று - விண்ணிலே நின்று, மிடறு நடுநடுங்கி - கழுத்திலே கம்பித்தலால், எண் இன்றி - கருத்தை யிழந்து, இசைதோற்று - இசையிலே சிறிது குறைந்து தோற்று.

188. தோட்டின் ஒளி கோதையிலே விளங்குதலால், கோதையும் தோடும் மின்ன என்றார், திரு வில் - அழகிய ஒளி, மாதரம்பாவை - மாதராகிய பாவைபோலும் காந்தருவதத்தை, மழை மின்னின் - முகிலிடத்தே தோன்றும் மின்னலைப்போல, ஒசிந்துநிற்ப - நுடங்கி நிற்க, ஏதம் ஒன்று இன்றி - இறந்துபடுவது இன்றி, எந்திர எழினி - எந்திரத்தால் விழும் திரை.

189. வடதிசைக் குன்றமன்ன வான் குலம் - வடதிசைக் கண்ணதாகிய மேருமலைபோல் நிலைகுலையாத பெரிய அரசகுலம், அரசன் மகளை வணிகன் கொண்டான் என்ற குற்றம், விடுகதிர்ப் பருதி - மிக்க ஒளிவிடும் கதிர்களையுடைய ஞாயிறு, வடுவுரை - இகழ்ச்சி பயந்த சொல், அளியிர் - அளிக்கத் தக்கீர், விளி, முனி வனம் புகுமின் - முனிகளாய்க் காட்டிலே சென்று வாழ்மின்.

190. திரு - கண்டார் விரும்பும் அழகு, தென்திரை ஆடை வேலி - தெளிந்த அலைகளையுடைய கடலைச் சூழவுடைய, நேமி - நேமிமால்வரை, (சக்கரவாள மலை) செரு நிலத்து - போர்க்களத்தில், திருவினுக்கு - திருமகளாகிய இக் காந்தருவதத்தைக்கு, கருமனம் - கொடிய மனம், நச்சு வெஞ்சொல் - நஞ்சாகிய கொடுஞ்சொல்.

191. தோற்றாம் - தோற்ற நாம், யானையால் வேறும் - இசைக்குத் தோற்கும் யானையால் வெல்லுவோம், என்னின் - என்று கருதின் வசை - பிறர்க்கு உரியவளாகிய இவளை இனி நீவிர் விரும்புவதாகிய குற்றம், வழிமுறை - அடைவே, வல்லே படர்க - விரையச் சென்று சேர்க.

192. மந்திரிப்பு - செற்றம், நாகம் - யானை, உத்தமப் பிடிக்கண் - உயர்ந்த பிடியானைகட்கு இடையே, உடற்றுதல் - அதனைக் கெடுப்பது, களபக்கு - யானைக் கன்றிற்கு, அத் திறம் - அவளைப் பெறுமாறு, கருதியூக்கல் - கருதிப் போர் முயலுதல், ஆமோ - தருமோ, அரசராதலின் இவளைப் பெறுதற்குரியீ ராயினும் கலைகளாலும் ஆண்மை முதலிய வற்றாலும் குறைபாடுடைமையின் பெறவந்து என்றான்.

193. வாணிகம் - வணிகன் சிறுவனாகிய நினக்குரிய வாணிக முறை, ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் - நல்ல உணவும் கொள்ளாது ஈட்டப்படும் ஊதியத்தையே

கருதிய ஒழுக்கமுடைய, நெஞ்சத்து, எண் இகந்து - நெஞ்சின் திண்மையைக் கைவிட்டு, இலேசு - சிறு ஊதியம், இரு முதல் - பெரிய முதல், ஊதியத்துக்கேயன்றி முதலுக்கும் கேடுவந்தால், ஊதியத்தைக் கருதும் கருத்தை முதல்மேல் ஊன்றி அது கெடாதவாறு பாதுகாப்பது வணிகமுறை, “ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை, ஊக்கார் அறிவுடையார்” (குறள். 463) உடம்பு, முதல், ஊதியம், தத்தை, ஊதியமாகிய தத்தையைக் கைவிட்டு, முதலாகிய உடம்பைக்கொண்டு உய்ந்து போ என்றார் என்பது.

194. எம்முடையவர்கள் - எம்குலத்தோர், வாழ்க்கை - வாழ்க்கைமுறை, அம்முடியர சிர்க்கு எல்லாம் - அழகிய முடிசூடிய அரசராகிய நுங்கட்கெல்லாம், திரு - வீரத்திரு, தேசு - புகழ், நோக்குமின் - வன்மையிருப்பின் உங்களைக் காத்துக்கொண்மின்.

195. கணை தூய் - அம்புகளைச் சொரிந்து, வாட் குழாம் - வாளினது கூட்டம், இவுளி ஏற்றன - குதிரைகள் ஒன்றையொன்று போரேற்றன. விலங்கின - குறுக்கிட்டுத் தடுத்தன, இயமரம் - ஒருவகை இசைக்கருவி, தெழித்த - ஒலித்தன.

196. வீணை - வீணையால், நூபுரம் - சிலம்பு, வெங்கனித் தடங்கண் - யான் விடும் இவ்வம்புகள் அம்பல்ல, வெவ்விய களிப்புமிக்க பெரிய கண்களாம், விருந்து எதிர் கொண்மின் - இவற்றை விருந்தாக வந்து ஏற்றுக் கொண்மின், என்னா - என்று சொல்லி, செங்களிப் பகழி - சிவந்த செருக்கிவரும் அம்புகளை, ஒப்பித்து - விழுக்காடிட்டு, ஊட்டினான் - உடலில் பட்டு ஊடுருவச் செலுத்தினான்.

“விருந்து” என்றதற்கேற்ப “ஊட்டினான்” என்றார்.

197. பிறர்மனை நயத்தல் நன்மனவேந்தர் தங்கட்கு நகையாம், இவர் பிறர்மனை நயக்கும் புன்மன வேந்தரைக் கண்டு எள்ளி நகையாடுவர் என்பதாம், நல்வேந்தர்க்கு நகையாய்த் தோன்றலின், இனிக்கொள்ளும் உடம்பிலும் இத் தீமை துன்னன்மின் என்பது போல், சீவகன் விட்ட சுடுசரம், புன்மன வேந்தரது மணிமார்பம் நக்கி, கவசம் கீறி, உயிர் கவர்ந்து பரந்தோடின, நக்கி - தீண்டி, துன்னன்மின் - பொருந்தாதீர்கள், சுடுசரம் - சுடுகின்ற தீயைக் கக்கிவரும் அம்புகள், புன்மனம் - பிறர் மனையை நயக்கும் இழிநினைவு கொண்ட மனம், நன் மனம் அஃதில்லாத நல்ல மனம்.

198. முகத்தினாள் கண் - முகத்தினையுடைய காந்தருவதத்தை பொருட்டாக, கோணைப் போர் - மாறுபாட்டையுடைய போர், மழை - முகில், நொய்தர மறைந்தனர் - புகுந்தவிடந் தெரியாதவாறு மறைந்தனர், முழையிடைச் சிங்கம் - முழைஞ்சில் வாழும் அரிமா, மொய்யமர் - நெருங்கிச் செய்யும் போர்த்திறம், மூதூர் - மூதூரிலுள்ளவர், விருப்பொடு - சீவகனைக் காணும் விருப்பத்துடன்.

199. இன் இயம் - இனிய மண இயங்கள், எரி திகழ - வேள்வித் தீ எரிய, வேதம் துள்ளினர் - வேத முணர்ந்த பார்ப்பனர், பலாசிற் செய்த துடுப்பு - பலாசக் கொம்பினால் செய்த வேள்வித் துடுப்பு, மின்னியல் கலசம் - மின் போல் ஒளிவிடும் கலம், சொரிந்தனன் - சீதத்தன் நீர் வார்த்தான், வீரன் - சீவகன், முன்னுபு - கருதி, வெள்ளி - வெள்ளியாகிய கோள்.

200. எள்ளுநர்கள் - இகழ்ந்திருக்கும் பகைவர், சாய - கெடும்படி, இகல் ஏந்தி - போரைப் பாராட்டி, கொடி எடுத்தது - விழா எடுத்தது, கள்செய் மலர்மார்பன் - சீவகனுக்கு விளி, உறுகாப்பு - மிக்க காவல், இகழ்தல் இன்றி - சோர்ந்திருப்பதின்றி, உள்ளு பொருள் - கருதும் பொருள், எம் உணர்த்தியன்றி உளவேண்டா - எமக்கு முன்னர் உணர்த்தியன்றிச் செய்யக் கருதவேண்டா.

201. அது - அழிக்க வொண்ணாது ஆகும் தன்மை, அவை - ஆவனவும் போவனவுமாகிய அவை, பொறியின்வகை வண்ணம் - இருவினையின் கூறாகிய இயல்பு, தேம்புனலை… இன்றே - உப்பு நீரையுடைய கடல் இனிய நீரைத் தானே உலகிற்குப் போந்து கொடுப்பதில்லை, என்றது தீயோர் பிறருக்கு இனிமை செய்யார் என்பது, வீங்குபுனல் யாறு… அறியாதே - மேகம் யாற்றுக்கு மிக்க நீரைக்கொடுக்க விரும்பி யறியாது, என்றது, உவர்த்த நீரை நன்னீராக்கி யாற்றுக்குக் கொடுப்பே ளென்னும் கருத்து முகிலுக்கு இல்லாமை அதற்கு இயல்பு.

202. காசறு துறவு - குற்றமற்ற துறவறத்தில் சிறந்த முனிவரர், மாசறு விசும்பின் - மாசற்ற வானத்தில், வெய்யோன் - ஞாயிறு, வடதிசை அயனம் - வடதிசைச் செலவு (உத்தரா யணம்), முன்னி - கருதி, ஆசற - குற்றமற, ஐங்கணைக் கிழவன் - காமன், வைகி - வைக, தங்கும்படி, பாசறைப் பரிவு - பாசறைக்கண் தங்கும் வருத்தம், கூதிர் தொடங்கிப்பாடி வீட்டிலிருந்து இளவேனிற்கண் இன்ப நுகர்தற்கு மீள்வராதலின் பாசறைப் பரிவு தீர்க்கும் என்றார், பங்குனிப் பருவம் - இளவேனில்.

203. நாகம் - புன்னை, நாறும் - மணம் கமழும், ஏக இன்பத்து இராசமாபுரத்தவர் - இணையிலா வின்பத்தையுடைய இராசமாபுரத்து மக்கள், மாகம் நந்தும் - வானளாவும், மாகநந்து பூமரக்கா என இயையும். போகம் மேவினர் - போக நுகர்ச்சியை மனத்தால் பொருந்தினர்.

204. வாச வெண்ணெயும் - நறுமணம் ஊட்டிய எண்ணெயும், இமிர் - ஒலிக்கும், சாந்தம் - சந்தனம், அடிசில் - சோறு, போகக் கலப்பை - போகத்திற்குரிய யாழ் முதலியவற்றைப் பெய்த பெட்டி, மாசனம் - மிக்க மக்கள், காசு, மாசு - குற்றம்.

205. பாடலோசை - பாடுதலால் பிறந்த ஓசை, பண்ணொலி - யாழ்ஓசை, ஆர்ப்பொலி - ஆரவாரம், ஓடையினை - முகப்பட்ட மணிந்த யானை, உரற்றொலி - பிளிறும் ஓசை, ஊடுபோய் - தம்மிற் கலந்து போய்.

206. கூறப்பட்ட - முன்னே கூறிய, கொய்ம்மலர் - கொய்யப்படும் மலர், காவகம் - நாவின் உள்ளாகிய இடம், தேன் ஊறித் துளித்து - தேன் சுரந்து துளியாகச் சொரிந்து, வார் ஓண் மது - ஒழுகுகின்ற ஒள்ளிய தேன்; மணல் தாய் - மணல் பரவி, காவகம், கயம்புக்கது போன்றது என்க.

207. காலில் - அக் காவகத்தில், கண்டத் திரை - பல்வண்ணத்திரை, ஆயிடை - அந்த உள்ளாகிய காலிலே, மிழற்ற - பேச, ஆவியர் துகிலார் - பாலாவி போலும் துகிலையுடைய மகளிர், இவர்கள் சுரமஞ்சரியும் குணமாலையுமாவர், துகிலார், காலில், திரைவளைத்து ஆயிடைமேவி, மிழற்ற, புகுந்து, மங்கையர் போன்று அமர்ந்தார்கள் என்க.

208. பவளக்கொடி போல்பவளும், மல்லிகை மலர் சூடிய குழலாளுமான சுரமஞ்சரி என்க, எவ்வம் தீர்ந்திருந்தாள் - முன்பு ஒரு வெறுப்பும் இன்றியிருந்தவள், இது - இதனை மேற்கூறுகின்றார்.

209. பேர் கொடு - பெயரை ஏறட்டுக்கொண்டு, நக்கனள் - இகழ்ந்தாள். சோர் முழல் வண்ண நுசுப்பு மாலை, விளி, சோர் குழல் - தாழ்ந்த கூந்தலும், வண்ண நுசுப்பு மாலை- அழகிய இடையுமுடைய மாலையே, என்ப - அசை, நக்கனள் சுரமஞ்சரி.

இவை சுண்ணம் என்பதோர் பேர்கொடு வருத்துவான் எண்ணி வந்தனவோ கூறு என நண்ணி நக்கனள் என்க.

210. பைம்பொன் நீளுலகு - தேவருலகு, பொன் என்றதற்கேற்பப் பைம்பொன் என விசேடிக்கப்பட்டது. இம்பர் - இவ்விடத்தே, ஏய்ப்ப - ஒப்பன, உள - வேறு சில உண்டு. எனில் - அறிவுடையோர் கூறுவாராயின், என - என்று குணமாலை சொல்ல, கொம்பனாள் - பூங்கொம்பு போன்றவளாகிய சுரமஞ்சரி, பொற்பாவை - பொன்னாற் செய்த கொல்லிப்பாவை.

211. தோற்றனம் - தோற்போமாயின், புனல் ஆடலம் - நீரில் விளையாடக் கடவேமல்லேம், வென்றாற்கு - புலன்களை வென்றோனாகிய அருகன் கோயிலுக்கு, கோடி பொன் - கோடியென்னும் எண்ணளவாகிய பொன். எண்ணில் - மாற்றில்லாத, என - என்று சுரமஞ்சரி கூறியமைந்தாளாக, வார்குழல் - நீண்ட கூந்தல், ஏழையர் - மகளிர், சுண்ணத்தின் - சுண்ணம் காரணமாக, கண்ணற்றார் - நட்புக் குலைந்தனர், தோற்றனம் - முற்றெச்சம்.

212. சூழ்ந்து - ஆராய்ந்து, கூறு - கூறுக, அடியேம் குறை - இதுவே அடிச்சிமார்களாகிய எமது வேண்டுகோள். கண்டு - கூர்ந்து நோக்கி, இவை நல்ல - (குணமாலையினுடைய) இச் சுண்ணம் நல்லனவாம், மாலையினீர் - மாலையினையுடையீர்.

213. உற்றும் - மெய்யால் தொட்டும், நாறியும் - மணம் பார்த்தும், இவை - (சுரமஞ்சரியினுடைய) இச் சுண்ணத்தையே, பொற்ற சுண்ணம் - சிறந்த சுண்ணம், நம்பி - நம்பியாகிய நீ, அவர் தங்களொடே கொலோ - அவர்களோடேயன்றோ, அவரின் வேறுபடுவ தென்னை என்பதாம்.

214. அறியும் - வேறுபாட்டை யறிகுவன், ஐயன் - ஐயனாகிய சீவகன், என - என்று பிறர் சொல்லக் கேட்டு, பொய்யதன்றி - பொய்யாகாமல் மெய்யாமாறு, புலமை நுணுக்கி - அறிவைக் கூரிதாக்கி, நொய்திட - விரைவாக, நூற்கடல் - விளி, நூற்பொருள் பலவும் நிரம்பிய கனல் போன்றவனே, கோதையார் - கோதையணிந்த தோழியர்.

215. என்னை யென்றிரேல் - காரணம் என்னை என்று கேட்பீராயின், புல்லு கோடைய - சுண்ணமிடித்தற்குப் பொருந்திய கோடைக் காலத்தில் இடித்தவையாகும். அல்ல - நல்லவல்லாத இச் சுண்ணம், சீதம் செய் காலம் - மாரிக்காலம், சீதம் - குளிர்.

216. வாரம் பட்டுழி - ஒருவர்மேல் அன்புற்ற காலத்தே, தீரக்காய்ந்துழி - அன்பு இலதாகிய வழி, ஓரும் - நீரே நினைந்து பாரும், ஓரும் என்னும் முற்றுச்சொல் நிகழ்கால

உம்மீறன்றி - எதிர்காலமுணர்த்தும் முன்னிலைப் பன்மை, இஃது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி, வீரவேல் - வீரம் பொருந்திய வேல் போன்ற.

217. மங்கை நல்லவர், சுரும்புகாள் - கண்ணும் மனமும்போன்று சேர்ந்து எங்கும் கடிதாக ஓடித் தட்டித் திரியும் சுரும்புகளே, சுரும்பு - வண்டு, தேன், மிஞிறு - வண்டின்வகை, மகிழ்தேன் - கள்ளால் மயங்கிய தேன் வண்டு, மது உண்டு தேக்கிடும் ஒள்ஞிமிறு - மதுவை நிரம்பவுண்டு தேக்கெறியும் ஒள்ளிய ஞிமிறுகளே, ஈட்டம் - கூட்டம்.

218. மஞ்ஞை - மயில், சுரமை - சுரமஞ்சரி, மஞ்ஞைபோன்ற சுரமஞ்சரி என்க, மாலை - குணமாலை, சால நல்லன - மிகவும் நல்லவேயாயினும், தம்முளும் - இவற்றிலும், கோலமாக - நன்றாக வேறாதிருத்தற்கு இருவரையும் மயில் என்றான்.

219. செற்றுழக்கப்பட்ட - பகைத்துக் கலக்கப்பட்ட, பங்கயப்படு - தாமரைமடு, ஒத்துளை - போல உள்ளாய், ஒல்லே - கடுக, இங்கண் - இவ்விடத்து, இனி, ஒத்துளை பாவாய் - போல வருந்துகின்ற பாவையே என்றுமாம்.

220. மாற்றம் - மறுமாற்றம், மழை வள்ளல் - மழை போல வன்மையினைச் செய்யும் சீவகன், ஏற்ற சுண்ணம் - நல்ல சுண்ணம், ஏற்பில - நல்லவையல்ல, கைதொழ - கைதொழுது ஏத்தும்படியாக, நோற்றனை - முன்னே நோற்றிருக்கின்றாய்.

221. காலம் சென்று குறுகினும் - வாழ்நாள் எல்லை முற்றிக் குறைந்த போழ்தும், பொன் துஞ்சு ஆகம் - திருமகள் தங்குகின்ற மார்பு, அன்றி - அவளையன்றி, ஒன்று சிந்தையளாகி - ஒரு மனத்தையுடையளாய், ஒடுங்கினாள் - அமைந்தொழிந்தாள்.

222. துறப்பித்திடும் - கெடுத்தொழித்துவிடும், இன்பக் காரணம் - இன்பத்துக்கு முதலாகிய கடுநட்பு, விளையாட்டினுள் - சிறு வினையாட்டு வாயிலாக, துன்பக்காரணம் - பகை, ஆய் - தோன்றி, என்பதே - கடுநட்புப் பகைகாக்கும் என்ற பழமொழியையே, விளையாட்டே வினையாம் என்ற பழமொழி கொண்டு அமைக்கினுமாம், ஈர் மலர் - குளிர்ந்த மலர், அவலித்து - வருந்தி.

223. தண்ணம் தீம்புனல் - குளிர்ந்த இனிய நீர், ஆடிய - ஆடவேண்டி, வார் தளிர் - ஒழுகிய தளிர், எண்ணி - சுரமஞ்சரியுடன் தன்பால் இருந்த நட்பினைப் பிரித்த தீவினை நீங்கும் வழி இது என்று எண்ணி, ஆயிரம் தாமரை, ஏந்து பொற்றாமரை - உயர்ந்த பொற்றாமரைப்பூ, வண்ண மாமலர் - அழகிய பூ, இவை, ஆயிரத்தின் ஒழிந்த பூக்கள், ஏற்றி - தூவி.

224. மதியின் வெள்ளிய குடம் - திங்கள்போல் வெண்ணிறத்தனவாகிய வெள்ளியாற் செய்த குடம், இக் குடம் கட்குடம், இவை மட்குடமல்ல, கள்ளின் கடுமை பொறுத்தற்கு வெள்ளியாற் சமைத்த குடம், குடக்கன்னியர் - குடம் தாங்கிய மனைவியர், யாவரும் துட்கென நடுங்க - காண்போர் அனைவரும் துண்ணென அஞ்சி நடுங்க, தூய்மையில் உட்குடை - தூய்மையில் உள்வாங்கிய, தூய்மையில்லாத, தூய்மையில்லாத உருவினையுடைய என்றுமாம்.

225. புடைத்து - அடித்து, பொன்றுவித்தீர் - உயிர்போக்கினீர், பேர்த்தனிர் தம்மின் - மீட்டுத் தருவீராக, கலாய்க்க உறின் - கலாம் செய்ய நினைக்கின், தடக்கை மீளிமை - பெரிய கையினது வலி, கட்கட்கும் உடைப்பென் - கட்குடத்தைப் போட்டு உடைப்பேன்.

226. இட்டு - நீங்கி, நந்திய - வளர்ந்த, காய்கதிர் மண்டலம் - நிலவு காயும் கதிர்களையுடைய திங்கள், கால்வது ஓர் - விளங்குவதாகிய ஒரு, சேயுடம்பு - பெரியவுடம்பு, செல்கதி - மந்திரம் - உயர்கதிக்கு உய்ப்பதொரு மந்திரம், உடம்பட்டு - ஒருப்பட்டு.

227. முன் உறுதி செய்ததின்றி - முன்பு உயிர்க்கு உறுதி தரும் வினை செய்யாதே, மறுகல் மனத்தே கலக்கம் கொள்ள வேண்டா, பற்று - உள்ள பொருள்மேற் செல்லும் ஆசை, ஆர்வம் - பெறக்கடவ பொருள்மேற் செல்லும் ஆசை, விட்டிடு - விட்டொழிக, மரணவச்சத்து இறுகல் - இறத்தற்கண் உள்ள நோய்வாய் வீழ்ந்து நிலைபெறாதே, இறைவன் - அருகன், ஐம்பத வமிர்தம் - ஐந்து பதமாகிய அமிர்தம், பஞ்சாஸ்திகாயம் என்னும் மந்திரம், பெறுதி - பெறுக, நவை - துன்பம்.

228. செறும்பு - செற்றம், நீங்கி, நீக்கி, மறவலையாகி - மறவாமல், நீனிற வினை - கரிய தீவினை, எனப் பகல்தோறும் - உள்ளநாள் எத்துணை அத்துணை நாளெல்லாம்,

விள்ளா - நீங்காத, அனைப் பத வமிர்தம் - அந்த ஐந்து பதமாகிய மந்திரம், அயின்று - நினைத்து, விட்டு - நாயுடம்பை விட்டு.

229. இன்நிழல் இவரும் பூணான் - இனிய ஒளி திகழும் பூண்களை யணிந்து தோன்றும் சுதஞ்சணன், இது தேவவுடம்பின் பொலிவு, இவர்தலுற்று - போகக் கருதி, பொன் எழு அனைய தோளான் - பொற்றூண் போலும் தோளையுடைய சீவகன், நினைக்க - என்னை நினைக்க, எழூஉப்பறப்பது - மறையாமல் எழுந்து பறப்பது, இவர்ந்து - உயர்ந்து.

230. கருந்தடங் கண்ணி - கரிய பெரிய கண்களையுடைய குணமாலை, எய்தஓட - அணுகச் சென்றதாக, இனையர் - சிவிகை சுமந்து வந்த ஆட்கள், விட்டு - கீழே வைத்துவிட்டு, அரும்பெறல் அவட்கு - சீவகனையன்றிப் பிறர்க்குப் பெறுதற்கரியவளாகிய அக் குணமாலைக்கு, என்று - என்று கூப்பாடு இட்டு, இறைஞ்சி - தலை கவிழ்ந்து.

231. இவள்கண் ஓடும் - இவளிடத்தே யோடும், எல்லையில் - அமயத்தில், இன் உயிர் இவளைக் காக்கும் - இனிய உயிர்போலும் இக்குணமாலையைக் காப்பான். என் கண் மாய்ந்தால் - என் உயிர் மாயுமாயின், ஆவதாக - ஆவது ஆகுக, அதுபற்றிக் கவலை யில்லை, பிணைகொள் நோக்கி - மான்பிணைபோலும் பார்வையையுடைய தோழி, நுடங்கி - நடுங்கிக்கொண்டு, வீ ததை கொம்பு - பூக்கள் நிறைந்த கொம்பு.

232. இருதலையும் மணிசேர்த்தி - இருபக்கத்திலும் மணியழுத்தி, வான்பொனின் இயன்ற நாண் - உயர்ந்த பொன்னால் செய்யப்பட்ட கயிறு, குஞ்சி - தலைமயிர், ஏறக் கட்டி - தூக்கிக் கட்டி, தணிவரும் தோழர் - அன்பு குறையாத தோழர், வில் - ஒளி, பணிவரும் குரிசில் - பிறரால் வணக்கலாகாத சீவகன்.

233. பெண் உயிர் அவலம் - பெண்ணொருத்தி உயிர் இழப்பது நோக்கி, வாழ்வின் சாதல் எண்ணினன் - பார்த்துப்பின் இருந்து வாழ்தலினும் தான் சாவதே பெருந்தகைமை என எண்ணினான். அவன் பெருந்தகையாதலின், நொய்தா - உடனே (விரைவாக), பொற்கடகம் - ஆடவரணியும், பொன்னால் செய்த ஒருவகைத் தொடி, வார் கச்சின் - நீண்ட கச்சினால், தானை - உடை, வீக்கா - இறுகக் கட்டிக்கொண்டு, வையர் - வைதுகொண்டு, ஆர்த்து - ஆர்ப்பரித்து, மேல் - களிற்றின்மேல்.

234. நாகம் - நாகப்பாம்பு, செற்று - சிதைந்து, கலுழன் - கருடன், மடவரலவளை - இளையளாகிய தோழியை, செற்று - செறுத்து, இறைஞ்சும் போழ்தில் - சிறிது தலை குனியும்

பொழுது, குடவரை - ஞாயிறு மேற்றிசையில் மறையும் மலை, நெற்றி - உச்சி, கோளரி - சிங்கம், உடல் சினம், வினைத்தொகை, குப்புற்று - குதித்து, உரும் - இடி, உரறி - முழங்கி.

235. கோட்டிடைப் புடைப்ப - இரு கொம்புகட்கும் இடையே கையால் புடைக்க, காய்ந்து - (களிறு) சினந்து, காற்றென - குறைக்காற்றுப்போல, நாகம் - யானை, கடாம் - மதநீர், கனலின் - நெருப்புப் போல, ஆற்றல் அம் குமரன் - வவிமிக்க இளையனான சீவகன், அஞ்சான் - அஞ்சானாய், முற்றெச்சம், கோற்றொடிப் பாவை - குணமாலை.

தோழிமேலும் குணமாலைமேலும் செல்கின்றதென்று அஞ்சினவன், அக் களிறு தன்னை நோக்கித் திரும்பிவிட்டமையின், அஞ்சானாயினன், குணமாலையைக் கொண்டு செல்வார் அவள் தோழியையும் உடன்கொண்டு போவராதலின், கோற்றொடிப் பாவையைக் கூறினான்.

236. மதியினுக்கு - திங்களைக் கையகப்படுத்தற்கு, இவர்ந்த - விரும்பிய, மாமணி நாகம் - கரும்பாம்பு, வல்லே - சட்டென, பதியமை பகுதி - போகின்ற ஞாயிறு, இருத்தல் தவிர்ந்த பகுதி, பொதியவீழ் கோதை - அரும்பவிழ்ந்த பூவால் தொடுத்த மாலையணிந்த குணமாலை, அகன்று - போவது நீங்கி, கதி அமை தோளினான் - வன்மைக்கு இடமாய் அமைந்த தோளினையுடைய சீவகன், கையகப்படுத்தது - கைக்குள்ளே அகப்படுத்திற்று.

237. கார்மழை மின்னின் நொய்தா - கார் முகிலில் மறையும் மின்னைப்போல விரைவாக, மொய்கொளப் பிறழ்ந்து - உடம்பு மென்மைகொண்டு வளைந்து புரிந்து, மருப்பிடைக் குளித்து - கொம்புகளின் இடையே நுழைந்து, ஐயென அடங்கி - கண்டோர் வியப்பெய்துமாறு ஒடுங்கி, வல்லான் - வட்டாடுவதில் வல்லவன், ஏய்ப்ப - ஒப்ப செய்கழல் குரிசில் - செவ்விய கழலணிந்த குரிசிலாகிய சீவகன், ஆங்கே - அப்பொழுதே, சேண் - தொலைவிலே, வட்டேய்ப்பச் சுரந்து போய்ச் சேணகற்றினான் என்க.

238. கையினால் சொல்ல - கையாற் காட்டும் சைகையால் மனக்குறிப்பை வெளிப்படுத்த, அவற்றைக் கண்ணாற் கண்டே அறிய வேண்டுதலால், கண்களில் கேட்டிடும் என்றார். மொய் கொள் சிந்தை - குறையெல்லாம் செறிவு கொண்ட மனம், மூங்கை - ஊமை,

செய்தவம் புரியா - செய்தற்குரிய தவத்தைச் செய்யாத, சிறியார் - சிறுமையுடையவர், சிறியார்கள்போல் மூங்கையுமாயினேன் என முடிக்க, வாயில் - நெறியுணர்த்தித் துணை செய்பவர்.

239. வாள் அற்ற - ஒளியிழந்தன, புண்ணும் போன்று புலம்பும் - நெஞ்சம் புண்ணுற்றது போல வருந்தும், எண்ணில் - ஆராய்ந்து பார்க்குமிடத்து, எரிப்பினும் - முழுக்க நின்று சுட்டுக் கொளுத்தினாலும், மேற் செலாத - மேலொன்றும் செய்தற்கில்லாத, பெண்ணின் மிக்கது - பெண் பிறப்பினும் நொடியது. பெண் பிறப்பின் கொடுமைக்கு ஒப்பதும் மிக்கதும் வேறொன்றும் இல்லை என்பதாம்.

240. மிழற்ற - ஒலிக்க, தேன் இனம் - வண்டினம், அலங்கல் உண்டு - மாலையிலுள்ள தேனைக் குடித்து, யாழ் செயும் - யாழ்போல் முரலும், பூங்கொடி நடை கற்றது போல நடந்தேறும் இத் தடங்கணாள் யாவளோ என்பது, விலங்கு அரித் தடங்கணாள் - குறுக்கிட்டுப் பரந்த செவ்வரிகளையுடைய பெரிய கண்ணினையுடையாள்.

241. மேவிய பொருளொடு - வந்த செய்தியை முடித்துக்கொண்டு, பின்னலால் - பின்னேயன்றி, ஏவலால் - குணமாலை ஏவியவாறே உடனே, பூவலர் சண்பகம் - பூமலர்ந்துள்ள சண்பக மரம்.

242. என உரு என - என்ன உருவம் என்று காந்தருவதத்தை கேட்க, என்றலும் - இயக்கியின் உருவம் என்று சீவகன் சொன்னவுடன், புதிது - புதுமையுடையதாக வுளது, இயக்கிக்குத் துகிலும் குழலும் சோர்வது கிடையாது. மது - தேன், அம் மாலை - அக் குணமாலை, மனம் முறை இயக்கலின் - மனத்தை முறையே ஆற்றாமை மிகும்படி இயக்குதலால், இயக்கியாகுமே - இயக்கியே யாகும். ஆகும் - ஆவாள், சீவகன் கூறிய இயக்கி என்னும் சொல் வடசொற் சிதைவு, யக்ஷி தேவதை, தத்தை கூறியது தமிழ்ச்சொல்.

243. புலவியில் நீடல் - புலத்தலை நீட்டியாதே, பாவியேற்கு - பாவியாகிய எனக்கு, ஆவியொன்று - நின் உயிரே எனக்கும் உயிராவது, நம்மிருவர்க்கும் உயிரொன்று, உடம்பு இரண்டு, கங்கையுள் மேவி விழைந்த அன்னம் - கங்கை யாற்றை மேவி அதனை விரும்பி யுறையும் அன்னம், கூவல்வாய் வெண்மணல் ஊற்று நீர் - குளத்திடத்து வெண்மணலில் சுரந்து நிற்கும் ஊற்று நீர், செல்லுமே - ஏகாரம் வினா.

244. பெண்டிரைப் பேரினும் - வேறு பெண்டிரின் பெயர் சொன்னாலும், சீறுவாள் - சீறுகின்றவளாகிய தத்தை, நேர் மலர்ப்பாவையை - ஒத்த மலர் சூடிய பாவை போன்ற குணமாலை வடிவத்தை, நோக்கி - பார்த்ததனால், நெய் சொரி கூரழல் - நெய் சொரிவதால் மிக்கு எழும் நெருப்பு, ஆர்வுறு கணவன் - மிக்க காதலனுடைய கணவனாகிய சீவகன், அமிர்தின் சாயல் - அமிழ்தம் போலும் மென்மையினையுடைய காந்தருவதத்தை.

245. மையலங்களிறு - மதம்பட்டு மயங்கிப் போந்த யானை, வண்புகழ் ஐயன் - வளவிய புகழ் படைத்த சீவகன், செவ்வி - காலம், வம்என - வருக என்று, பை அரவு அல்குல் - படத்தையுடைய பாம்பின் படம் போன்ற அல்குல், அலங்கு எஃகினாய் - விளங்குகின்ற வேலையுடையாய்.

246. வேழமுண்ட… வெறியமாக - யானைத்தீ யென்னும் நோயுற்ற விளாம்பழம் உள்ளகம் வெறுவிதாவதுபோல நெஞ்சம் நிறை முதலியன இன்றி வெறுவிதாமாறு, நீலம் - கருமை, பிறர் அறியாமல் கண்ணினால் கவர்ந்துகொண்டாளாதலின் கள்வி யென்றான், யானை முன் குணமாலை நடுங்கி நின்ற காலத்தில், அவள் கண் கலுழ்ந்து நீர் அரும்ப மெய் வியர்வை பொடிப்பக் கண்டது நினைவில் இருப்பதால், அஞ்சனத் துவலையாடி நடுங்கினாள் என்றான், பைஞ்சிறைத் தத்தை - பசிய சிறகுகளையுடைய கிளியே.

247. உற்ற நோய் - தாம் உற்ற காம நோயை, கண்ணனார்க்கும் - கண்போன்ற தோழியர்க்கும், இன்னது - இத்தன்மைத்து, நாணின் ஆதலால் - உயிரினும் சிறந்த நாணம் தோன்றித் தடுப்பதனால், மன்னும் - மிகவும், துள்ளி - நெருங்கிச் சென்று, அறிதியோ - அறிவாயோ.

248. சொல் மருந்து - சொல்லாகிய மருந்து, குணமாலை சொல்லும் சொல்லை மருந்தென்றான். சீவகனும் வேட்கையுற்று மெலிந்திருக்கின்றானாதலின், அமர்ந்தது என் உரைத்துக்கொள் - பொருந்தியது எதுவோ அதனை உரைத்துக்கொள், என - எனஅறு சீவகன் மொழியவே, வில் நிமிர்ந்த நின்வீங்கு எழில் தோள் - வில் சுமந்துயர்ந்த நின்னுடைய பெரிய அழகிய தோளே, இவை வேண்டுவல் - சொல் வேண்டா, இத் தோள்களையே அவட்கு வேண்டுமென வேண்டுவேன்.

249. பொற்குன்று - குன்றளவாகிய பொன், பூம் பழனங்கள் - பூக்கள் நிரம்பிய நீர் நிலைகள், நெல் குன்றம் பதி - நெல் குன்றளவாகக் குவியுமாறு விளையும் ஊர், நேரினும் - தரவேண்டுமெனினும், கற்குன்று ஏந்திய தோள் இணை - மலைபோல் உயர்ந்த இரு தோள்கள், கண்ணுறீஇ - சேர்த்தி, புணர்கேன் - புணருவேன், சொல்குன்றா - இச் சொற்கள் தவறமாட்டா.

கிழவி முன்னர்த் தற்புகழ்க் கிளவி, கிழவோன் வினைவயின் உரியவென்ப (தொல்.கற்பு,40) என்பதன் கருத்தால், சீவகன் தன் தோளைக் கற்குன்றேந்திய தோள் என்றது அமையும்.

250. சேலை வென்ற - சேல் மீனை ஒத்த, செப்பு அரிது - கூறுதல் முடியாது. எழுதிப் பணி - எழுதித் தந்தருள்க, என - என்று கிளி கேட்கவே, தினைக்குரல் ஓலையோடு - தினைக்கதிரில் வைத்துச் சுருட்டித் தந்த ஓலையுடன், ஓங்கி - உயர்ந்து.

251. கோட்டியினில் - கடியிருக்கும் இருப்பிலிருந்து, சேர்வான், இடம் பார்த்து இருந்ததுகொல் என இயையும், துணைவி - காந்தருவதத்தை, போந்தது சொல் - செவ்வி பெறாமையால் வறிதே வந்து விட்டதோ, சென்றது கொல் - காலம் பார்த்துப் பொறுத்துச் சென்றதோ, உருகும் - காமத்தீயால் உருகும், துணைவி - ஈண்டுக் குணமாலை மேற்று, பாவம் - என் கிளிப்பிள்ளையும் யானும் பட்டது என் என்றும் குறிப்பு.

252. செந்தார் - கிளியின் கழுத்தில் தோன்றும் வரைகள், கிளியார், உயர்த்தற்கண் வந்தது, என் இன் உயிர் தந்தார் - நீங்கும் நிலையிலுள்ள என் இனிய உயிர் நீங்கா வகையைத் தந்தாராம். தகாது - குணமாலைக்கு இவ் விறந்துபாடு தகாதே என்று, நொந்து அழ - உளம் வருந்திஅழ இறப்பேன், ஆங்கு முயன்று நோற்றானும் எய்துவன் - சுரமஞ்சரிபோல முயன்று தவஞ்செய்தாயினும் அவரை எய்துவேன்.

253. சென்றார் வரைய கருமம் - ஒரு வினையின் விளைவு அதனை முடிக்கப் போனாருடைய அறிவின் அளவாயிருக்கும், செருவேலான் - சீவகன், பொன் தாங்கு அணி - பொன்னாற் செய்த பூண், அகலம் - மார்பு, புல்லப் பொருந்துமேல் - தழுவுதல் கூடுமாயின், முத்த வார் மணல் - முத்துக்களாகிய ஒழுகிய மணல்மேல், அன்று ஆங்கு - அன்றே அப்பொழுதே, ஆழி - வட்டம் (கூடல் வட்டம்).

254. பாகவரை வாங்கி - வட்டத்தில் பாதியளவில் கீறி, பழுதாகில் - இக் கூடல் கூடாதாயின், நினைப்ப - குணமாலை நினைக்கையில், மாகம் - வானம், நோக்கி அவ்விருந்தாள் - பார்த்துக்கொண்டிருந்த அவள், மடவாளே - மடப்பம் பொருந்திய குணமாலையே, தான் நீங்கிய காலத்தினும் திரும்ப வருங்காலத்தில் அவள் மேனி மிக வேறுபட்டிருந்தமையின், இனி இவ்வாறு ஐயுற்றடைவதாயிற்று.

255. தீம்பால் - இனிய பால், காம்பு ஏர் பணைத்தோளி - மூங்கில் போலும் பருத்த தோளையுடைய குணமாலை, ஆம் பால் - ஆகும் பகுதியினையுடைய, நாம மோதிரம் - சீவகன் பெயர் பொறித்த கணையாழி, ஐயென்ன - விரைவாக, தேம்பா எழுத்து ஓலை - தேம்பாமைக் (வருந்தாமைக்) கேதுவாகிய எழுத்துக்களையுடைய ஓலை.

256. கொடுஞ்சிலையான் - இவ்வாறு சீவகன் தன்னைக் கூறுதற்கு அமைதி “பொற்குன் றாயினும்” (செய். 249) என்புழிக் கூறினாம். இன்னார் ஓலை இன்னார் காண்க என்றல் முறை. அடுந்துயரம் - வருத்தும் காம நோய். ஆற்றாதேன் - ஆற்றேனாகியான். விடுந்த - விடுத்த; விகாரம். விம்மல் மிக்க நினைவு - மிக்க வருத்தம்.

257. ஈட்டம்சால் - அறநெறியே ஈட்டுதற்கமைந்த, நீள்நிதி - மிக்க செல்வம், ஈர்ங் குவளை - குளிர்ந்த குவளைகள், பைந்தடம் - பசிய நீர்நிலை, மோட்டு வளம் - பெரிய வளம், முழுது ஈந்து - விரும்புமாறே குறைவறக் கொடுத்து, வேட்டார்க்கு…. மென்றோள் – அரிய

பொருள்களை விரும்பினாருக்கு விரும்பியவாறே அவற்றைப் பெற்றாற்போல இனியவாகி மெல்லிய தோள், பூட்டார் சிலைநுதல் - நாணால் பூட்டப்பட்ட வில்போலும் நுதல்.

258. பாலவி - பாற் பொங்கல், சாந்து - சந்தனக் கலவை, கால் அவியா விளக்கு - காற்றால் அவியாத விளக்கு, மணி விளக்கு, உம்மை - எழுத்துக்களாகிய தெய்வங்களை, கோல் அவியர் வெஞ்சிலை - அம்பு இடைவிடாமல் எய்கின்ற கொடிய வில், சொற் குன்றானாக - எழுத்துக்களாகிய தஞ்சொல் தவறானாயினும், நூலவையார்போல் - அற நூல்களை யோதிய பெரியோர்போல, நோக்குமின் - இடையூறின்றிச் சொல்லியவாறே செய்வானாகவென்று கருதி நோக்குமின், நீங்கள் என்றது எழுத்துக்களை அவற்றின் தன்மையும் வடிவும் ஆசிரியர்க்கல்லது உணரலாகாமையின், நூலில் (இலக்கண நூலில்) விளங்கக் கூறிற்றிலரேனும், சமய நூல்களிற் கூறுதலின், அவ்வெழுத்துக்களைத் தெய்வமென்றே கொள்க, இவ்வெழுத்துக்கள் - சீவகன் ஓலையில் எழுதிய எழுத்துக்கள், அவற்றைப் பார்த்தே இது கூறுகின்றாள்.

259. மணி மதக் களிறு - பக்கத்தே மணி கட்டிய மத யானை, வென்றவன் - வென்ற சீவகன், வருத்தச் சொல் கூலியாக - யானையை அடர்ந்த காலத்தில் இவனைக் கொண்டுய்யப் போமின் (செய்.235) என்ற சொல்லிற்குக் கூலியாக, அடிப்பணி - தாழ்ந்து ஏவல் செய்வது, சுடுசொல்வாள் - சுடு சொல்லாகிய வாளால், செவி முதல் ஈரல் - செவியிடத்தே அறுக்க வேண்டா, பணி… ஒப்பாள் - சீவகனைத் தவிரப் பிறர் எவரையும் பணிதல் இல்லாத, பவளத்தாற் செய்த பாவை வருத்தம் கொண்ட தன்மையை யொத்தவளான குணமாலை.

260. கந்துகப் புடையில் - பந்தினது புடைத்தல் போன்று, கலின மா - வார் கட்டிய குதிரை, வல்லன் வல்லுநனான, நேராராய் விடின் - மணம் செய்து தாராராயின், பிறிதொன்று - வேறொன்று, ஆகி - ஆக, வந்ததால் - இரண்டில் ஒன்று எய்திவிட்டது, வடு - மாவடு, பிறிது ஒன்றாதலாவது பெற்றோர் நினைவு கைகூடாது வேறாய்ப் போவது, தவம் முயறல், தான் சீவகனைப் பெறுதற்கு.

261. மகட்கொண்மின் - என் மகளை மணம் செய்து கொண்மின். நேரார் - வலியக் கொடுப்பது இல்லை, தாம் மகள் - தம் மகள், விகாரம், வரைமார்பு - மலைபோல் உயர்ந்த மார்பு, பூமகள் - திருமகள், புண்ணியக்குன்று - புண்ணியமாகிய மலை, இன்று நேர்ந்தேம் - இன்று புது முறையாகத் தந்தேம், நாய்கன் - கந்துக்கடன், அவர் - சென்ற சான்றோர், அவர் கூறியவாறே இச் செய்யுள் கூறுகின்றது.

262. கற்றார் வல் வில் - வரிந்து கட்டப்பெற்ற வலிய வில், குடுறு - நன்கு காய்ச்சப்பட்ட, குற்றேல் - குற்றேவல், செய்தும் - செய்யக் கடவேம், கொடியாளை - கொடிபோன்ற குணமாலைய, மல் சேர் தோளான் - மற்போர் பயின்ற தோளையுடைய குபேரமித்திரன், அருள் செய்யப் பெற்றேன் - கொடுக்கப் பெற்றேன், வாசம் - நறுமணம், தாரான் - தாரையுடைய கந்துக்கடன்.

குபேரமித்திரன் தானே மகட்கொடை நேர்தலாலும், கொள்வார் தாழவே வேண்டுதலாலும் இங்ஙனம் கூறினார்.

263. கரைகொன்று இரங்கும் - கரையை யலைத்து முழங்கும். கவிகொண்டு - ஆரவாரம் கொண்டு, கறங்க - முழங்க, முழவிம்ம - முழவோசை மிக, வெண் சங்கம் - தவளச் சங்கு, இது மங்கல முழக்கம், பிரசம் கலங்கிற்றென - வண்டின் கூட்டம் கலங்கியது போல, பிணங்க - நெருங்க, விரை - மணம், அவ்வேனிலான் - நுதல் விழிக்கு அழியாத காமன் போன்ற சீவகன், அழிந்த காமனுக்கு உருவில்லையாதலின் இங்ஙனம் கூறினார்.

264. பூவார் புனல் - பூக்கள் மிதக்கும் தண்ணீர், பூ - அழகிய, பணை - மூங்கில், நாவாது- சொற்பயன் நோக்காது, கண் அற - இரக்கமின்றி, வெஞ்சொல் - வெவ்விய சொல், ஏவோ - துன்பம் தருவதோ, அமிர்தோ - இன்பம் தருவதோ,

வென்றவரே புனலாடுக என்றதனால் குணமாலை புனலாடியதும், யானை யெதிர்ப் பட்டதும், சீவகனைக் காண்பதும், பின்பு கூட்டமும் பெறுதலின், காவாது அவள் சொல்லிய என்றான்.

265. நற்றோளவள் - நல்ல தோளையுடைய சுரமஞ்சரி, சொலுவான் உற்றீர் - சொல்லுதற்கே முதற்கண் கருதினீர், உறைகின்றாள் - இருக்கின்றாள், செற்றால் அரிது - அவள் சினங்கொண்டால் அதனைத் தீர்ப்பது அரிது, சென்மின் - இவ்விடத்தைவிட்டுச் செல்லுமின், இவ்வாறு சொன்னதும் சீவகன் அவளைத் தீண்டலுற்றமையின், தீண்டாது போமின் என்றாள், எற்றே - என்னே, அறியாத - நுமக்கு வரும் வருத்தம் நினைந்து வருந்தாத, ஏழை - அறிவிலீ.

266. தூமம் - அகிற்புகை, சோர - சிறிது நெகிழ, அசையா - இறுகவுடுத்து, தாமம் - மாலை, பரிந்து - அறுத்து, ஆடு சாந்தம் - பூசிய சாந்தம், ஏமன் சிலை - அம்பு தொடுக்கப்படும் வில், நுதல் - ஈண்டுப் புருவத்தின் மேற்று, காமன் கணையேர் - மலர் அம்பு போலும்.

267. இரந்தும் - வேண்டியும், சொல்நீர் - சொல்லாகிய தண்ணீர், அன்பு அழலுள் - அன்பாகிய நெருப்பிடத்தே, ஆற்ற - ஆறும்படி செய்ய, இந்நீரன - இத்தன்மையான புலவிகளை, கண்புடை விட்டகன்று - கண்களின் மதர்ப்போடு பக்கத்தே நோக்கிக் கைவிட்டு, கண் மதர்ப்போடு கைவிட்டு என இயைக்க, மன் ஆர்ந்து - மிக நிறைதலால்.

268. திங்கள் சேர் முடியினான் - பிறைத் திங்களைச் சூடிய முடியுடைய சிவன், செல்வி - பார்வதி, பொன் இங்கு கழல் - பொன்னாலாகிய கழல், எள்ளி - மதியாது இகழ்ந்து, குழாத்தின் - கூட்டம்போல இன்னது - இவ்வாறு சூழ்ந்து கொண்டனர்.

269. கடுகிய இளையர் - அரசனேவலால் கடுகி வந்த வீரர், கண்ணிய பொருளும் - அரசன் எண்ணிவிடுத்த செய்கையும், எண்ணி - சீவகன் தான் எண்ணிட, அடு சிலை - பகைவரைத் தப்பாது கொல்லும் வில், அழல - சினந்து, தானை வீக்கற விசித்து - இறுகாதென்னும் உடையைக் கட்டிட, வெய்தா - வெய்தாக, நரல - ஒலிக்க, வீக்கி - கட்டி.

270. அடிநிழல் தருக - வீரர் தம் அரசன் கொணர்க என்றானென்கின்றமையின் அடி நிழல் என்றனர். ஆணையருளிச் செய்தான் - ஆணையிட்டுள்ளான், வடிமலர் - தேன் சொரியும் மலர், இடியுருமேறு - இடியேறு, சுடுதற் கொத்த - வானத்தே பறந்து திரிந்து சுடுவதற்குப் பொருந்தின, கடவுளின் - சிவனைப்போல், கனன்று - வெகுண்டு.

271. வாள் இழுக்குற்ற கண்ணாள் - தன் ஒளி மிகுதியால் வாள் ஒளியின்றி இழுக்குறுமாறு அமைந்த கண்ணையுடைய விசயை, நயந்து - விரும்பி, கோள் இழுக்குற்ற பின்றை –

சூழ்ந்து கொள்ளப்பட்டு உயிரிழந்த பின்பு, கோத் தொழில் - அரசாட்சி, நடாத்துகின்றான் - நடத்தும் கட்டியங்காரன், நாள் இழுக்குற்று - வாழ்நாள் முடிந்து, நந்த - விளி, நந்தட்டன் சீவகன் தம்பி, சுநந்தைக்கு மகன், தோள் இழுக்குற்ற - இனிக்கட்டியங்காரன் தோள்கள் கெட்டன, பண் - தேர் பண்ணமைப்பாயாக.

272. மாறுகோடல் - பகைத்துக்கொண்டு மாறுபடுதல், விளிகுற்றார் - கெடுதலுற்றோர், கைகட்டி யுய்த்தால் - கையைப் போர்த் தொழில் செய்யாதபடி விலக்கிப் போக விட்டால், ஆய்ந்து அடும் அழற்சி - வேந்தன் ஆராய்ந்து வருத்துதற்குரிய வெகுளி, பொருள் - செய்யத் தக்கது, மார்பன் - சீவகன், இழைக்கின்றான் - நுணுகி யெண்ணினான்.

273. வேண்ட - கேட்டுக்கொள்ள, இடர் - வீரர் கையகப்படுத்தல், தோன்றலுக்கு - சீவகனுக்கு, சொல்லிமிழிற் பூட்டி - சொல்லாலே கயிறுபோலப் பிணிக்கப்பட்டு, மூன்றனைத் துலகம் - மூன்றாகிய உலகமநைத்தும், முட்டினும் - எதிர்த்தாலும், எல்லாம் முருக்கும் - அவற்றையெல்லாம் கெடுக்கும், வான் தரும் மாரி - மழையைப் பொழியும் முகில், மதவலி - சீவகன்.

274. தோளார் தொன்முத்து - தோளிடத்தே எய்தும் முத்து, மகளிர் கழுத்திடத்தும் முத்துப்பிறக்கும் என்ப, கோடு - முனை, துயல் - அசையும், இழிமுத்து - இழிகின்ற கண்ணீர்த் துளியாகிய முத்து, காளாய் - காளையே, நற்றாய் - நல்ல தாயாகிய சுநந்தை, மின்னின் - மின்னற்கொடி போல,

275. பாலாராவிப் பைந்துகில் - பாலாவி போன்ற பசிய துகில், நாகபடம் போலாம் - நாகத்தின் படம்போல வுள்ள, என்னா - என்று கூறி, நூல் ஆர் கோதை - நூலால் கோக்கப்பட்ட மாலை, நுங்கு எரி - விழுங்குகின்ற நெருப்பு, குணமாலை, கோதை, எரிவாய்ப்பட்டது ஒத்தான் என்க.

276. கண்துயில் அனந்தர்போல - கண்ணுறக்கமும் உணர்வும் போல, கதி - பிறப்பு, உள் குழைந்து - மனம் கசிந்து, உருகல் செல்லேன் - உருகுதலின் செல்லேன், எட்பக வனைத்தும் - எள்ளின் ஒருபாதி யளவும், ஆர்வம் - பற்றுவைத்தல், ஏதம் - குற்றம்.

277. வினை - தீவினை, கைவிதிர்த்து - கைம்முறித்து, இனையனாய் - கையகப்பட்டுச் சென்றான்போலப் போகுந்தன்மையனாய், தெளிய - அரசன் தெளியுமாறு, இடிக்கும் கொல் - கொல்லுவானோ, புனைநலம் - செயற்கையழகு, பொன்றும் - கெடும், வனைகலத் திகிரி - மட்கலம் செய்யும் சக்கரம், மறுகும் - மயங்குகின்றது.

278. கொம்மைகொட்டி - தட்டியழைத்து, ஏற்றது - தக்கது, தந்தை - கந்துக்கடன், ஆற்றலள் - பொறுக்கமாட்டாள். ஆ, அறனே தகாது - ஆ அறமே, இத நினக்குத் தக்கதன்று.

279. நீர் அகம் பொதிந்த மேகம் - நீரை முகந்துகொண்டுள்ள கருமுகில், நீல் நிற யானை - கரிய நிறத்தையுடைய யானை, யானையும் வாட்கையுமுடைய குன்றம் போல்வானாகிய சீவகன், போர் முகத்து அழலும் வாட்கை - போர்க்களத்தே நெருப்பென விளங்கும் வாளேந்திய கை, ஆர்கவி - மிக்க ஆரவாரம், யாணர் - புதுவருவாய், சிலம்பி - சிலந்தி, சிமிழ்ப்புண்டது - கட்டுண்டது.

280. மடந்தை ஓர் கொடியை - மடந்தையாகிய ஒரு கொடி போன்ற குணமாலை யென்பவளை, கொல்ல - கொல்வதற்குச் செல்ல, வடு - பழியாம், அவளை இன்னுயிர் காத்தான் - அவளை உயிர் தப்புவித்தான், இன்னது - இது.

281. நாண்மெய்க் கொண்டு ஈட்டப்பட்டார் - நாணம் முதலாகியவற்றால் மெய்யும் உருவுமாகச் சமைக்கப்பட்ட மகளிர், நவை - துன்பம், எண்ணி - களிற்றினைத் தான் பெயர்த்த ஆனிரைபோலக் கருதி, அறிவின்மை - அறியாமையால், மெய்க்கொண்டு - மெய்யிலே யணிந்து, நின்மைக்கண் நின்று வந்த நிதி - தொன்றுதொட்டு வந்த நிதியனைத்தும்.

282. ஆய் களிறு - வருந்திய யானை, ஊசி - எழுத்தாணி, திசைகள் கேட்ப - எல்லாத்திசையினுமுள்ள அரசரும் வெள்ளிமலையி லுள்ளாரும் கேட்குமாறு, கள்ள ரென்னக் காய்பவன் - கள்வர் கொல்லப்படுமாறுபோல என்னால் கொல்லப்படு வோனாவன், பிரிவு - வருத்தம், நினையல் - இதனை நினையாதே, கொல்லுதலை எழுதுவிப்பேன் என்றான், இதனால் தனக்குப் புகழ் நெடுங்காலம் நிற்குமென்று கருதி.

283. நட்டவற்கு உற்ற - நட்புச் செய்தவனாகிய சீவகனுக்கு நேர்ந்தவற்றை, நக்கு - சிரித்து, புலிபுறத்ததாக, கழுதை, புலிக்குட்டியைத் தின்னல் ஆமே என்க, புறத்ததாக - புறத்தேயிருக்க, ஆமே - ஆகாது என்க. மற்று, வினைமாற்று, தான் பாதுகாக்கும் தொழிலுடைமையின் சீவகனைக் குட்டியென்றான், நம் புலியைப் பாய - நம் புலியைப் பாய்தற்கு, இஃது ஒட்டியுணரலாமே - சீவகன் வீரர்கைப்பட்டான் என்னும் இச்சொல் உண்மையாகாது, இதனை ஒற்றினால் ஒற்றியறியலாம், வல்லையறிக - இது ஒற்றற்குக் கூறுவது, விரைவில் இவ்வுரையின் உண்மையையறிந்து வருக.

284. நிறைத் திங்கள் - கலைநிரம்பிய திங்கள், ஒப்பான் புத்திசேனன் - ஒப்பவனாகிய புத்திசேனன், இங்கண் மறைத்து - இங்கே மறைந்திருந்து, சுடுதும் - சுடுவேம், இறைக் குற்றேல் செய்தலின்றி - இறைவனுக்குக் குற்றேவல் செய்வதை விடுத்து, எரியின்வாய் - எரியினிடம் அதனை அவித்தற்கு, செற்றான் - சிறையாகப்பற்றிய மதனன், செகுத்து - கொன்று, சிறைக்குற்றம் நீக்கிக் கொண்டெழுதும் என முடிக்க, மறைந்து, மறைத்தென விகாரம்.

285. பொன் அணிமணி செய் ஓடை - பொன்னாலும் அழகிய மணியாலும் செய்த சாந்து மடல், நீரின் - நீருடன், தளிரியல் - தளிரினது இயலை (அழகை) யுடைய காந்தரு வதத்தை, மின் அடு வாள் - மின்னலையும் தகர்க்கும் வாள், கல் - ஆலங்கட்டி, மன் - மிகுதி, தெய்வம் - தெய்வங்கள்.

286. சிறைமாகடல் - கைப்படுதலாகிய பெரிய கடல், முற்றவும் பற்றப்படுதலின், குளித்தாழ்வுழி யென்றார், எய்தி - சேர்ந்து, தன் மனையாள் - ஈண்டுக் காந்தருவதத்தை, என்னையாவது என்பதனைத் தனித்தனியே கூட்டி ஆற்றல் என்னையாவது, கல்வி யென்னையாவது என முடிக்க, என்னை, ஐ அசை, என்று வையம் கொன்னும் கொழிக்கும் - என்று உலகத்தார் பெரிதும் தூற்றும், செய்கோ - செய்வேன்.

287. இல்வழித் தேர்கலேன் - இல்லாதாரைக் காண்கிலேன், சிறைப்பட்ட காவற்கன்றின் புனிற்றா - ஒரு சிறையிலேயுள்ள தன் காவலையுடைய கன்றை ஈன்றிளமை தீராத ஆ, அனகார் மயிற்சாயல் - அந்த ஆவின் நோக்கினைப் போன்ற நோக்கினையுடைய, சாயலால் மயிலொத்த காந்தருவதத்தை, ஆ விடுவிக்க நோக்கிநின்றாற் போல நின்றாள், இது பயவுவமம்.

288. வான் நிகர் இல்லா மைந்தர் - வானமும் நிகர்க்கமாட்டாத வீரரான தோழன்மார், நிற்க - தாழ்வில்லை, வேய் - மூங்கில், இல்ல - இல்லாத, போய் - பிழைத்துப் போய், பொருள் - வேறே செய்யத் தக்கது.

289. மின் இலங்கு எயிறு - ஒளிதிகழும் கொம்பு, வேழம் வேழத்தால் புடைத்து - யானையை யானையால் மோதித் தாக்கி, பொன்னிலங்கு இவுளித் தேர் – பொன்னணி

யணிந்த குதிரை பூட்டிய தேர், எல்லைநாள் - கட்டியங்காரனுக்கு இறுதிக் காலமாகிய நாள், இக் கிருமி - சிறு பூச்சிகளையொத்த இப் படைவீரர்களை, கொன்று பெறுவது என்னை என முடிக்க, மக்கள் என்கிற கருத்தின்மையின் கிருமி என்றான், தோழன் - சுதஞ்சணன்.

290. அறியாது - அறியாதவாறு, இழந்து - இழப்ப, ஆம் கடல் - மேல் ஊழிக்காலத்தே வரும் கடல், விலங்குகள் மேயாமையின், வாயிழந்தன காண்க என - காண்கென, பெருமான் - சச்சந்தன், சாமி - சீவகன், சீவகனைச் சீவகசாமியென்றும் வழங்குப, அண்ணல் - பெருமையையுடைய சுதஞ்சணன், அகலம் புலிக்கொண்டு - மார்பில் தழுவிக்கொண்டு, எழுந்து - மேனோக்கி யெழுந்து.

291. கொலைத் தொகை வேலினான் - பல கொலைகளைச் செய்து சிறந்த வேலையுடைய சீவகன், கொல்லிய - கொல்லுதற்கு, நலத்தகையவன் - நல்ல அழகையுடைய சீவகன், நஞ்சுயிர்த்து - வெய்துயிர்த்து, சிலைத்தொழில் தடக்கை - விற்றொழிலில் வல்ல பெரிய கை, இற்று - இத்தன்மைத்து.

292. மைந்தனை - சீவகனை, போந்தாம் - கைக்கொண்டு போந்தநாம், சொல்லிச்சேறும்- சொல்லிச் செல்வேம், பட்டது இன்னது - நேர்ந்தது இது, பட்டதுன்பம் இது என்றுமாம், எரி விளக்கு உறுக்கும் - நடைவிளக்கு நம்மை எரிக்கும், நடைவிளக்கு - தலையிலும் தோளிலும் விளக்கேற்றி வைத்து, கைகளிலே துகிலைச் சுற்றி நெய்யில் தோய்த்து எரித்தல், இது கல்வெட்டுகளில் காணப்படுவது, துன்னுபு - நெருங்கி, சூழ்ந்து - ஆராய்ந்து, தோன்ற- சூழ்ச்சி விளங்க.

293. மாசனம் - மிக்க மக்கள் கூட்டம், மொய்த்து - மொய்த்த அளவிலே, பெரிதும் தோன்ற - மிகத் தோன்றுதலாலே, பிழைத்து உய்யப்போதல் அஞ்சி - எங்களைத் தப்பி அவன் உய்யப்போய் விடுவனென்று அஞ்சி, போழ்ந்து - பிளந்து, உருட்டியிட்டோம் - தள்ளிவிட்டோம்.

294. வலி - மெய்வலி, ஆண்மை - ஆளுந்தன்மை, அறிவு - இயற்கையறிவு, திருமலி யீகை - செல்வம் மிகுகின்ற கொடை, போகம் - எல்லாவற்றையும் நுகரவல்லனாதல், ஒக்கும் நீரார் ஒருவர் யாரே என்க, ஏகாரம் எதிர்மறை, பெரிது அரிது - சீவகனைக் கொல்வது மிகவும் அரிது, பெறுக - யான் தரும் இவற்றைப் பெறுக.

295. விலங்கி வில் உமிழும் பூண் - ஒளி குறுக்கிட்டு ஒளிரும் ஆணி, விழுச்சிறை - நீக்குதற்கரிய சிறை, சீவகன் முற்பிறவியில் அன்னத்தைச் சிறைசெய்த நிகழ்ச்சியை யுட்கொண்டு, இது விழுச்சிறை எனப்பட்டது என்பர், அலங்கலாகிய தாரினான், அம், அவ்வழிக்கண் வந்தது, தாரினான் - சுதஞ்சணன், பொலிதலும் இன்றி - தோன்றுதல் இன்றி, உலம் கலந்து - தூண் போன்று, என்று விட்டான் - என்றே கருதி மனத்தில் கொள்ளா னாயினான்.

296. கடற்சுறவு உயரிய காளை - கடலிடத்தே வாழும் சுறாமீனின் கொடியையுடைய காமன், அடற்கு அரும்பகை - வெல்லுதற்கு அரிய பகைவனான கட்டியங்காரனை, நீள் நில மடத் தகையவன் - நிலமாகிய பெண்ணை, நிலத்தை மகளாக உருவகம் செய்யலின், மடத்தகையவள் என்றார், மடம், இளமை, தகை - அழகு, வதுவை நாட்டி - திருமணம் செய்து, இனி, நிலத்தோடும், திருமகளாகிய மடத்தகையாளொடும் என்றும் கூறலாம்.

297. நிலக்கிழமையும், தேயமும் நிலத்தே தாரும் என்னில் தரத்தக்கதன்மையுடையீர், விளி, செருநிலம் - போர்க்களம், அவன் கட்டியங்காரன், இருநிலம் - ஏமாங்கதநாட்டு அரசியல், அரிதாயினன்றோ எண்ணல் வேண்டும், அரிதன்று என்பான், எண்ணல் வேண்டுமோ என்றான், தாரும் என்பது தரும் என்றும், தரும் என்றது தருகும் என்றும் வந்தது விகாரம்.

298. கிடந்தன - உள்ளனவாகிய, கண் மனம் குளிர்ப்பன ஆறும் - காண்பார் கண்ணும் மனமும் குளிரச் செய்யும் யாறுகளும், எண்ணம் - விருப்பம்.

299. ஊற்று நீர்க் கூவல் - பிறிதோரிடத்தே ஊறி வருதலால் நிரம்புதலின்றி நிலையூற்றால் நிரம்பிய நீரையுடைய குளம், நாடது - அது பகுதிப்பொருள் விகுதி, விடுத்தல் மேயினார் - விரும்புவதிலர், போற்று - இவ்விடத்தே காத்துக்கொண்டிரு, ஆறு - வழி, அமைதி - இயல்பு, அறிய - விளங்க.

300. பள்ளி - தவப்பள்ளி, இடம் - இடப்பக்கம், மால்வரை - பெரிய மலை, தெள் அறல் - தெளிந்த நீர், உவை - முன்னும் பின்னும், கதி - செல்கை, தள்ளியிராது - தாமதிக்காது, மதி தள்ளியிடும் - அறிவைக் கெடுத்துவிடும், வழை - சுரபுன்னைமரம்.

301. அழல் பொதிந்த நீர் எஃகின் - நெருப்பின் வெம்மை நிரம்பப் பொதிந்த நீண்ட வாளையுடைய, கழல்பொதிந்த சேவடி - வீரகண்டை யணிந்த சேவடி, குழல் பொதிந்த தீஞ்சொல்லார் - குழல்போலும் இனிமை பொருந்திய மகளிர், நிழல் - ஒளி, நினைப்பின் போகி - நினைவு போல விரைந்து சென்று.

302. வண்தளிர்ச் சந்தனம் - வளவிய தளிர்களையுடைய சந்தனம், வான்தீண்டி - வானளாவ, விண்டு - விரிந்து, ஒழுகு தீங்கனி - தேனொழுகும் கனிகள், ஆர்ந்த - நிறைந்த, மண்கருத்தும் வேலானை - ஏமாங்கத நாட்டை யெய்துதற்குரிய வேற்படையுடைய சீவகனை, மறித்தும் - மீட்டும், சீவகன் வீடுபெற்ற காலத்தே சுதஞ்சணனைக் காண்பது முத்தியிலம்பகத்தே காண்க. கொண்டு - விடைகொண்டு, எழுந்தான் - வானத்தே சென்றான், இதற்குமுன் சீவகன் தனியே போனது இன்மையின், தானே செலவயர்ந்தான் எனத் தேவர் இரங்கிக் கூறுகின்றார்.

303. தோடு - பூவிதழ், தொடேல் - தீண்டாதே, பீடு - பெருமை, அரிவையர் இல் பெயர்க - மகளிர் வீட்டிற்குச் செல்க, கோடு - கொம்பு, குஞ்சரம் - களிறு, தெருட்ட - ஊடல் தணிவிக்க, கூடா - கூடாவாய், பீடி - பெண் யானைகள், நிற்கும் - ஊடிநிற்கும், காடேந்து பூஞ்சாரல் - காடு செறிந்த அழகிய மலைச்சாரல், காலில் - கால்களால் நடந்து.

304. காழகம் - கருமை, காரிருள் துணி - கரிய இருள்துண்டம், ஆழ்அளை - ஆழ்ந்த வளையிலே வாழும், பறித்து - பறித்தலால், ஒடுங்கி - உட்குழிந்து, இலையறிதல் இல்லான் - வெற்றிலை மென்றறியாதான், மேழகக்குரலினான் - ஆட்டின் குரல் போலும் குரல் உடையவன், தலைப்பட்டான் - எதிர்ப்பட்டான்.

305. வெள்ளருவி மாலை சூடி - தெளிந்த நீர் சொரியும் அருவியை மாலைபோலக் கொண்டு, இதர - எதிரிலே, நெற்றி - உச்சி, சுமக்கலாற்றா - சுமக்கமாட்டாதவாறு கனக்கக் காய்த்த, வண்புனம் - வளவிய தினைப்புனம், மூலையங் குவடு - மூலையிலுள்ள உச்சியில்.

306. சுவைத்து - உண்டு, வீக்கி - பெருக்கவைத்து, வாட்டி - மெலிவித்து, ஊன்றி - நன்கு ஆராய்ந்து, உறுதி - தக்கது, புத்தேள் - தேவர்.

307. சொன்னாய் - சொன்னாயாதலால், சேறி - செல்வாய், காட்டுள் கிழங்கு உண, இன்றே இன்ப வெள்ளம் குறுகினாய் - காட்டிலுள்ள கிழங்கு முதலியவற்றை உண்ணத் தலைப்படவே, இன்றே இன்பவெள்ளத்தைச் சேர்ந்தாயாம். இறைவன் நூல் காட்சி - இறைவனாகிய அருகன் கூறிய நூல் முடிவு, ஒழுக்கு - ஒழுக்கம், இவை இன்பம் தூங்கும் இருங்கனி - இவ்வொழுக்கங்களே பேரின்பம் செறியும் பெரிய கனிகளாகும்.

308. ஆதிவேதம் - கொலை முதலியன இல்லாத வேதம், அலர்மாரி - பூமழை, நீதிநெறி - சன்மார்க்கம், காட்சி - ஞானம், பசையாப்பு அவிழ - பற்றாகிய கட்டு நீங்க, பணியாய் - அருள்வாய்.

309. இகந்தோய் - கடந்தோய், இணையில் இன்பம் - கடையிலாவின்பம், மறுத்தல் - அதில் பெறும் இன்ப நுகர்ச்சியைத் தவிர்த்தல், பொன்னார் இஞ்சி - பொன்னெயில் வட்டம், பொறியின் - ஐம்பொறிகளால், ஒன்னாவினை - பொருந்தாத தீவினை, உய - உய்ய, மன்னா - நிலைபெற்ற.

310. திலகமாய திறல் - கடையிலா வீரம், அலகை - அளவு, அறியப்படா யாதி - அறியப்படுவாயாக, செய்யா யென்னும் சொல் செய்யென் கிளவியாய் நின்றது கொலையில் ஆழி - அறவாழி, வலனுயர்த்த - கொடியாக உயர்த்திய.

311. முடியுலகமூர்த்தி - முடிந்த உலகத்தின் மூர்த்தி, உற - உறும்படி, நிமிர்ந்தோன் - முத்தியடைந்தவன், மூன்று கடிமதில் - காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று மதில், கட்டு - காவல்.

312. முரண் - காமம் முதலியவற்றின் மாறுபாடு, மூன்றில் - அங்கம், பூர்வம், ஆதியென்ற மூன்று ஆகமத்தாலும், தரணி - நிலவுலகம், நேமி - அறவாழி, உலகிற்கு அரணாய அறிவரன் என்க, அறிவரன் அறிவுக்கு வரனாயுள்ளவன்.

313. தீராவினை - நீங்காத தீவினை, தீர்த்தம் - ஆகமம், வாராக்கதி - மேல் வருதல் இல்லாத வீடு, காரார் பிண்டி - கார்காலத்தே மலரும் அசோகமரம்.

314. பண்ணமை கருவி - பாடலாடல்கட்கு அமைந்த இசைக்கருவி, கூடுபு சிவணி - கூடிப் பொருந்தி, குழைந்து இசைந்து அமிர்தம் ஊற மெல்கிக் கலங்கி இனிமை மிக, ஓடரி நெடுங்கண் - அரிபரந்த நெடியகண், உருவ எய்யா - ஊடுருவிச் செல்லுமாறு எய்து, ஈடு அமை - இடுதல் அமைந்த, இலயமா - அழிய.

315. கருஞ்சிறைப் பறவை - கரிய சிறகுகளையுடைய மயில், சுறவுயிர்த்த தோன்றல் - சுறாமீன் கொடியையுடைய காமன் தோன்றலாகிய குரிசில், குமரன் - இளையனாகிய சீவகன், அயர்வுற்று - சோர்ந்து, அன்னாள் - அத்தன்மையுடையவள், தேசிகப் பாவை - பெயர்.

316. போது எனக் கிடந்த வாட்கண் - பூப்போல் உள்ள பொருந்திய கண், இமைத்தல் செல்லா - இமைப்பதில்லை, கண்ணிவிடலை - கண்ணியணிந்த விடலையாகிய சீவகன், காதலில் - அன்பினால், உள்ளம் - அரசன் உள்ளம்.

317. மந்திரம் - வானத்திலே இயங்கும் மந்திரம், அந்தர குமரன் விஞ்சையன், அமர்ந்து நோக்கி - பொருந்திப் பார்த்து, இந்திரன் திருவற்கு - இந்திரன் திருவைப்போன்ற திருவையுடைய உலோகபாலனுக்கு, உய்த்தார்க்கு - தெரிவிப்ப என்றற்கு, இறைவன் - அவ்வுலோகபாலன், மைந்தனை - சீவகனுக்கு, மைத்துனத் தோழன் - விளையாடும் முறைமையையுடைய தோழன்.

318. போதவிழ் தெரியல் - அலர்ந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை, ஊது வண்டு உடுத்த மாலை - ஒலிக்கின்ற வண்டு சூழ்ந்த தேசிகப்பாவை, மாலை - பெண், இலயம் தாங்கி - நீங்கின இலயத்தைத் தப்பாமல் தாங்கி, வாட்கண் புருவத்தால் - வாட் கண்ணாலும் புருவத்தாலும்.

319. வள்ளல் - உலோக பாலன், மாட்டினன் - செலுத்தினான், ஒன்றலாத செயச் செய - பொருந்தாதவற்றைச் செய்யச்செய்ய, ஊறு - விட நோய்க்கு இடையூறாகிய மந்திரமும் மருந்தும், அள்ளிலைப் பூணினாள் - கூரிய இலைத்தொழிலமைந்த பூண்களையணிந்த பதுமை, வெள்ளெயிற்றரவு - வெள்ளிய பற்களையுடைய பாம்பு, வேகம் - நஞ்சு.

320. பைங்கதிர்…..சென்றது, நங்கையின் முகத்தை மதியமென்று கருதி, அம் மதி தனக்குப் பகையாதலின், அதனைத் தாக்கற்குக் கொண்ட வெகுளியால் நாகம் இவளைத் தீண்டிற்று, வங்கமாநிதி - மரக்கலங்களில் வந்த பெருநிதி, மான் தேர் - குதிரை பூட்டிய தேர், எருக்கினான் - முழக்கினான்.

321. மண்டலி - சீதமண்டலி, இராசமாநகாம் - கருவழலையென்னும் பாம்பு, வளிபித்தொடு ஐயில் பிண்டித்துப் பெருகிற்று - வாதமும் பித்தமும் சிலேத்துமத்தினும் திரண்டு பெருகின, பெருநவை - பெருந்துன்பம், அறுக்கும் என்று - நீக்குமென்று கருதி, எண் தவ - எண் இறக்க, இது கேளாது - இது நீங்காது.

322. இதன் பொருள், கையையும் கண்டத்தையும் உழலை கோப்பார், மருமங்களிலே விளக்கையெரிப்பார், தொழுது நிற்பார், இது காரணத்தான் அரசன் இறந்துபடின் உலகு இன்னே கவிழுமென்பாராய், மாக்கள் ஆரவாரத்தாலே மடைதிறந்த தன்மையை யொத்தாரென்க. மக்கட்கு உரிய மனனின்றி அறிவுகெட்டமையின், ஐயறிவுடையா ரென்று மாக்கள் என்றார்.

323. நங்கைக்கு - பதுமைக்கு, நரபதி - அரசே, விளி, கொங்கலர் கோங்கு - தேன் சொரிகின்ற மலரையுடைய கோங்கமரம், நெற்றி - உச்சி, முகிழ்கட்டில் - அரும்பின் தலையில், அரவயாழ் - இசையினைச் செய்யும் யாழ், ஈண்டு மிதுனராசிமேற்று, ஆந்தையாடும் - ஆந்தை யலறுகிறது, மிதுனராசி யுச்சமுற்றிருக்கும் இந்நேரத்தே ஆந்தை அலறுகிறது என்பது, இளையவன் உளன் - இளையவன் ஒருவன் இங்கு உளன்.

324. குவளைப்போது - குவளைப்பூ, ஒன்றிரண்டு உருவமோதி - ஒன்றும் இரண்டுமாகிய உருவோதி, உறக்கு இடை - உறக்கத்திடத்தே, இருண்டு அமைந்த கோலச் சிகழிகை - கரிதாய் அமைந்த அழகிய முடி, அழுத்தி - வைத்து, நின்று - சிறிது நீங்கிநின்று, முகம் நேர் நோக்கினான் என்க.

325. நெருந்தகை - சீவகன், கோலக் கடுங்கதிர்க் கனலி - அழகிய மிக்க கதிர்களையுடைய ஞாயிறு, கோப்ப - கதிர்களைச் செலுத்தி யெதிர்க்க, உருவம் ஆர்ந்து - அழகைக் கண்ணாரக் கண்டு மகிழ, குடங்கையின் - உள்ளங்கை போல, குமரன் - சீவகன்.

326. கண்ணில் காணினும் - காதலித்தோரைக் கண்ணில் காணினும், ஏந்திழை தன்னை - பதுமையை, தைவந்தான் - தடவிக் கொடுத்தான்.

327. சிலை - காமன் வில்போலும் நுதல், வேற்கண் - வேல் போன்ற கண், மாது உலாம் மொழி - பதுமை சொல்லும் சொல், மடநோக்கம் - மடப்பம் பொருந்திய பார்வை, அணங்கன்னவள் - கண்டார்க்கு வருத்தம் செய்யும் அணங்கு போல்பவள், கடைகின்றது - மிகுகின்றது.

328. அண்ணல் - சீவகன், ஆழ் துயர் நோய் உற - அழுந்துதல் உறுகின்ற வருத்த நோய் மிகுதிப்பட, கோதை - பதுமை, மீமிசை - மேலே, உள் கையர் - உள்ளம் வருந்தி, உருகா - உருகி.

329. வணங்கு நோன் சிலை - எல்லாரும் மனம் குழைதற்குக் காரணமான வலிய சிலை, மைவரை மைந்தன் - முருகன், நிணந்து - பிணித்து, அணங்குகாள் - தெய்வங்களே, ஏகாரம், வினா.

330. கூடி மலிந்து - கூடிமிகுந்து, வெயிலின் - வெயிலினின்று, நிழல் பயிலும் மாதவிப் பந்தர் - நிழல் பரந்த குருக்கத்திக் கொடி படர்ந்த பந்தர்.

331. கறந்த பால் - ஆனிடத்தே கறந்து கொண்ட ஆன்பால், காசு - குற்றம், திருமணி - அழகிய நீலமணி, கிளர்ந்து - கிளர, கெட்டாங்கு - கெட்டாற்போல, மாமை நிழற்றலின் - மாமை நிறம் ஒளிவிடுதலால், மாதவி - மாதவிப் பூ, சிந்தையின் நோக்கினான் - மனத்தால் ஆராய்ச்சியோடே பார்த்தான்.

332. வரையின் மங்கை - வரையரமகள், வாங்கு இரும் தூங்கு நீர்த் திரையின் செல்வி - வளைந்த பெரிய அசைகின்ற நீர் பொருந்திய கடலில் வாழும் நீரரமகள், மலர்ப்பாவை - திருமகள், உரையின் சாயல் - உரைத்தற்கினிய சாயலையுடைய, விரை செய் கோலம் - மணம் கமழும் கோலம்.

333. காரிகை - அழகு, பாலின் தீஞ்சொல் பதுமை - பால்போல் இனிய தீவிய சொற்களையுடைய பதுமை, மருள் - உவமவுருபு, வேய், தோளிற்கு உவமம்.

334. கைசெய்து - ஒப்பனை செய்து, மாலை - பூமாலை, நடுச்சிகையுள் - பின்னிய கொண்டை நடுவே, வளைஇ - வளையமாகவைத்து, செண்ண அஞ்சிலம்பு - நுண்ணிய வேலைப்பாடமைந்த சிலம்பு, ஏறு துகள் அவித்து - படிந்த பூந்தாதுகளாகிய துகளைத் துடைத்து.

335. திங்களும் அதன்பாலுள்ள மறுவும்போல அன்பு சேர்ந்தது, எனவே, வாழ வாழ்தலும், சாவச் சாதலும் செய்யும் உழுவலன்பு கூறி வற்புறுத்தியவாறு, எய்தினராகலின் ஒளித்திடுவேன், நீ செல்க என்றானாம், ஒளிக்குழல் - ஒளியையுடைய கூந்தல்.

336. ஆடற்கொத்த - ஆளுதற்குரிய, பொறி - உயரிய இலக்கணம், வலத்தினன் - வெற்றியுடையான், நேமியான் - திருமால், சிறுவன் - காமன், நேருமாயின் - உடன்படுவானாயின், அழகிது - நன்று.

337. மாசில் மந்திரி - குற்றமில்லாத மந்திரி, குற்றம் - அமைச்சர்க்கு ஆகாவென விலக்கிய குற்றங்கள், உதிதர வுணர்வள் - விளங்க உணர்வேன். உதிதரல் - அறிவில் தோன்றல், ஒப்பு - பிறப்பு, குடிமை, ஆண்மை யாண்டு, உரு முதலியன, உரு - உட்கு, அது விடந்தீர்த்தார்க்குக் கொடுப்பேம் என்ற மொழி பிறழாமல் காக்க வேண்டுமென்னும் அச்சம், கொதிதருவேல் - வெம்மை யால் பகைவரை வெதுப்பும் வேல்.

338. கணி - சோதியுடன், கண்ணிய கோயில் - நன்றென்று கருதிய கோயில், மங்கல மரபு - மங்கல வாழ்த்து முறை, அணியுடைக் கமலம் - வளை முதலிய அணிபுனைந்த தாமரை, துணிவுடைக் காப்பு - மணநூலுள் துணிபாகக் கூறப்படுதலையுடைய காப்புநாண், கட்டி - கட்ட.

339. மழகளிற்றெருத்தின் - இளங்களிற்றின் கழுத்தின்மேல் ஏற்ற, மண்ணுநீர் - மங்கலநீர், நீராட்டற்கு வேண்டியது, மண்ணுப்பெய்து - நீரால் குளிப்பாட்டி, கடி - திருமணம், தொழுதக - கண்டோர் நன்கு மதிக்குமாறு, தூமணிப் பாவையன்னார் - தூயமணியாற் செய்த பாவை யொத்த மகளிர், விழுமணி - உயரிய மணி, விண்ணவர் மடந்தை - தேவர் மகள்.

340. கயற்கண் - கயல்மீன் போலும் கண், மணம் இயற்றினார் - திருமணம் செய்தனர், ஏத்தரும் தன்மை - யாவரும் பாராட்டும் தன்மை, இவர், பெற்றோர் முதலாயினார், மயற்கையில்லவர் - மயக்கமில்லாத இருவரும், மன்னிய - முன்பே நிலைபேறு கொண்ட, இயற்கையன்பு - இயற்கைப் புணர்ச்சியால் கொண்ட அன்பு.

341. ததைந்து - நிறைந்து, போது - பூக்கள், கா - சோலை, சீர்கெழு குரிசில் - சீவகன், நுடங்கு இடை - நுண்ணியதாய் அசையும் இடை, ஏர்கெழு - அழகு திகழும், இடைவயின் - சோலையிடத்தே பாவையென்னும் இடையும் கோதையுமுடைய மயிலன்னாள் என்க.

342. தயங்கிணர்க்கோதை - விளங்குகின்ற பூங்கொத்துக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த பதுமை, தன்மேல் - சீவகன் தோள்மேல், மென்றோள் - மெல்லிய கை, ஆகுபெயர், கோதையென்றதற்கேற்பத் தாரான் என்றார். வருத்துறா வகை - பிணங்கி வருந்தா வண்ணம், நயங்கிளர் உடம்பு - விருப்பம் செய்யும் உடம்பு, துன்பம் உழத்தொறும் காதற்றுயிர் (குறள்) நல்லுயிர் - ஆன்மா, அது கனவிடைப்போய் நுகர்ந்து பின்பு கூடுவன் என்று உணர்க, இயங்கு இடையறுத்த - இயங்குதலைச் செய்யாதபடி கெடுத்த.

343. பிள்ளைகளுக்கு விளக்கைக் காவலாக இடுபவாதலின், எங்களை வளர்த்த மனக்கோட்டம் இன்மையுடைய என்பாள், வளர்த்த செம்மையை என்றாள், செம்மை - செப்பம், வாலியை - தூய்மையுடையை, வான்பொருள் - நல்ல பொருள், விளக்காய் - கண்ணிற் காணக்காட்டுவாய், ஆடும் - நடந்து திரியும், ஆரூயிர் - பெறற்கரிய உயிராகிய சீவகன், நண்ணினாள் - நெருங்கி வினவினாள்.

344. பாயிருள் பருகி - பரந்த இருளைப் பருகி, நிற்பின் - வயிற்றிலே நிற்பின், அறாதுஎன - அறாதுஎன்று கருதி, கருகி - முகம் கருகி, நடுங்குகின்றாய் - அசைகின்றாய், உரைக்கிற்றி - உரைக்க மாட்டுவை, ஊடினாள் - சினந்தாள், விளக்காமையின் அதனை இழித்துக் கூறுகின்றாள், உரைக்கிற்றி, இகழ்ச்சி.

345. நிரை - வரிசை, உயிர்க் காவலன் - உயிரை நீங்காமற் காக்கும் சீவகன், அவன் உயிர் நீங்கின் - இவள் உயிர் நீங்குமாதலின், உயிர்க் காவல னானான்.

346. எரி - விளங்குகின்ற, உறைவீர் - உறையும் தேவர்களே, தெரிவீர் - தெரிந்திருப்பீர், பரிவொன் றிலிரால் - அருளின்றியுள்ளீர், உயிர்காப்பு - உயிரைக் காத்துக்கொள்வது, அமரீர் - காவாத் தன்மையுடைய தேவர்களே.

347. புணர்வின் இனிய - புணர்தலினும் இனிய, உயிர் கையகறல் உணர்வீர் - உயிர் கைவிட்டு நீங்குவதுபோலக் கொள்வர் நன்மகளிர் என்பது.

348. பொருள் தேர் புலன் எய்திய நின்று - தத்துவத்தை யாராயுமறிவைப் பெறவேண்டி நின்று, அறனே மொழிவாய் - வேண்டி நின்ற அவர்கட்கு அறத்தையுரைப்பாய், எய்திய - செய்யியவென்னும் வினையெச்சம், அருள்தேர் வழி - தனபதி, உலகபாலன் என்பாரிடத்து நின்அருள் இருக்கும் திறத்தை ஆராயுமிடத்து, இருள் தேர் வழி - இருள் செறிந்தவிடத்தே, கொற்றவன் - தனபதி, உலோகபாலனுமாம்.

349. மிகவாயதோர் மீளிமை - பிறரிடத்துச் செல்லாதே என்னிடத்தே மிகச் செய்ய வேண்டி மிக்கதொரு வன்மை, உகவா - அன்பு மிகுந்து, உவர்த்தது - வெறுத்து, இகவா இடர் - பொறுக்கலாகாத இடர், நீத்திட - பெருகிட, தக - தகும்படி, வா - வந்து முயங்குக.

350. வேதனை மரங்கள் - துன்பமாகிய மரங்கள், நாறி - தோன்றி, மாதுயர் இடும்பை - மிக்க வருத்தத்தைச் செய்யும் துன்பம்.

351. நீர்கள் - கள், அசை, மாற்றா - உறையிடவும் ஆற்றாது, முரிந்த - கெட்ட, முற்றுஇழை - தொழிற்பாடு முற்றவுமுடைய இழையுடையாய், பரிந்து - வருந்தி, அடியிட்டவாறு - தொடங்கினவாறு.

352. என்பினின் - உடம்பிலிருந்து, இறுவதும் - இறப்பதும், துகைக்கப்பட்டார் - வருத்தப்பட்டவர், இன்பம் என்று - இவ்வருத்தம் நமக்கு இன்பமாம் என்று கருதி.

353. பந்தின் - பந்துபோல, பொத்து இலம் - பொந்தாகிய இல்லம், ஆந்தை புணர்ந்து இருந்து - ஆந்தை பெடையோடு கூடியிருந்து, உரைக்கும் - அவன் வரவைக் கூறும்.

354. முடிபொருள் - முடியும் செய்கை, முற்றிழை - விளி, கடியதோர் கௌவை செய்யும் - அச்சந்தரும் ஒரு கௌவையைச் செய்யும், கட்டெயிறு - வலிய பற்கள், பிழைப்பு - பொய், குழையல் - வருந்தாதே.

355. வெயில் வெஞ்சுரம் நீங்குதல் - வெயில் மிக்கு வருத்தும் கொடிய சுரத்தைக் கடந்து போகுதல், நினைத்து - பிரிவருமை நினைத்து வருந்திப் பின் வினை மாண்பும், செய்பொருட் சிறப்பும் நினைத்து, களைத்து - ஒலித்து, வைகுதல் - இறந்துபடாது இருத்தல்.

356. அரைசவன்னம் - அரச அன்னம், அமர்ந்து உளவாயினும் - நீல மலர்கள் பயின்று உளவாயினும், நினைப்பில - நினையா, வரை மார்பினான் - மாலைபோன்ற மார்பன், செய்கோலம் - செயற்கையழகு, தாமரை குலமகளிரையும், நீலம் பரத்தையரையும் உள்ளுறுத்து நின்றன. எனவே, குலமகளிரையே நுகர்வேன் எனச் சீவகன் கூறினான் என்றாளாயிற்று.

357. நீங்கினன் - செய்வினையுண்மையால் இப்போது நீங்கினன் நீங்கலான் - நின்பால் குன்றாக் காதல் உண்மையான் அற நீங்குவா னல்லன், மாபெருந் தேவி - பதுமையின் நற்றாயாகிய திலோத்தமை, இவன் இறந்துபடுவன் என்று திலோத்தமை நீலத்தின் கருத்தைக் கூறவில்லை.

358. நக்கினும் - உண்டாலும், அணங்கு அரவு - வருத்தும் பாம்பு, கலுழனாகும் மாட்சி - கருடனாகும் தன்மை, ஒன்றாலும் - சிறிதும், மஞ்சன் - மைந்தன், சீவகன், மைந்து - வலிமை, இளைய நீரேன் - நஞ்சும் மயிலும்போலும் நீர்மையை யுடையயான்.

359. கமலத் தங்கண் - தாமரைப்பூவிடத்தே, புள் - வண்டு, தடக் கை - பெரிய கை, மையிருட் போர்வை - மிகக் கரிய இருளாகிய போர்வை, பனிவரை நெற்றி - ஞாயிறெழும் கிழக்கு மலையுச்சி, சேர்ந்தான் - தோன்றினான்.

360. விடுக்கப்பட்டார் - தேடுமாறு விட்ட ஏவலர், விடலை - காளையாகிய சீவகன், ஏந்தலே - ஏந்தலாகிய நின்னையே, இஃதேயென்பதை இளமைக்கும் கூட்டுக. போய கங்குல் - போன இரவே, ஈங்கு - இவ்விடத்தே எமக்கு.

361. நெடுங்கணாள் - பதுமை, ஐயிரு திங்கள் எல்லை யகப்பட - பத்துத் திங்களுள் ஒன்று குறைய ஒன்பதாந் திங்களிலே, இன்பால் காணீர், இது பொய்யுரையன்று என்க, போமின் - அம், சாரியை, மையல் அங் களிறு - மதம்பட்ட யானை, வேந்தன் மைந்தனுக்கு - வேந்தனுக்கும் மைந்தனுக்கும்.

362. அரிய கொள்கையர் - பிறரால் கொள்ளற்கரிய எண் வகைத்தாபத ஒழுக்கம், அவை நீர் பலகால் மூழ்கல், நிலத்திருத்தல், தோலுடுத்தல் முதலாக வரும் எட்டு, அழல் ஐந்து - ஐவகை வேள்வி, அவை, தென்புலத்தார் முதலாகவுள்ள ஐவரையும் ஓம்புதல், மருவி - பொருந்தி, வீடு வளைக்குறு மாட்சியர் - வீடுபெறுதற்கு முயலும் முயற்சியினர், தீத்தொழில் - காமவேட்கை.

363. வள்ளி இன்னமுது - வள்ளிக் கிழங்கு, தெள்ளிய - முதிரக் கனிந்த, வெள்ள மாரியனாய் - பெருநீர் பொழியும் மழைபோலப் பலர்க்கும் பயன்படுகின்றவனே, ஆர்க - உண்க.

364. பாங்கு - நல்லிடம், பால்மதி - முழுமதி, வீங்கு - விரிந்த, மெய்ப்பொருள் - தத்துவம், அளக்குவம் - அறிவின் திட்பத்தைக் காண்பேம்.

365. சையம் பூண்டு - கல்லைக் கட்டிக்கொண்டு, தொடர்ப்பாட்டின் - காம நுகர்ச்சியாகிய கட்டுடன், யாவையும் - எல்லா நுகர்ச்சிகளையும்.

366. ஏம நன்னெறி - அழிவில் இன்பந்தரும் நல்வழி, அல் நெறி - யாம் கொண்டுள்ள தல்லாத நீ கூறிய நெறி, துணிகுவர் - தெளிந்துள்ளோம், காமன் தாதை நெறியின்கண் - காமனுக்குத் தந்தையாகிய திருமால் கூறிய இந் நெறியின்கண், செப்பு என - கூறுக என்று கேட்க.

367. வாட்டிய உடம்பின் - வருத்திய உடம்பினாலே, வர கதி - மேலான கதி, விளைத்தும் - பெறமுயல்கின்றேம், வீட்டினை விளைக்க - வீடுபேறு எய்த, வெளிற்றுரை - பயனில்லாத சொல்.

368. நுகர்ச்சி - காம நுகர்ச்சி, காய் முதிர் கனியின் - காய் முற்றிப் பழுத்து விழும் பழம்போல, வேய் முதிர் வனம் - மூங்கிற்காடு, வென்றான் - அருகன், உருவொடு - வேடத்தை மேற்கொண்டு, பருகுவ - நுகர்தற்குரிய தவங்களை.

369. ஞானம் - உண்மையறிதல், காட்சி - பொய்யின்றாகத் தெளிதல், ஒழுக்கம் - உயிர் உய்யும்வகையொழுகுதல், தேயா - கெடாமலே.

370. மெய் நிகர் இல்லாதவன் - வடிவால் ஒப்பில்லாதவன், வேத வாணிகன் - வேதத்தையுடைய வாணிகன், கைநிகர் அமைந்த வேல் - கைக்கு ஒப்பு அமைந்த வேல்.

371. வடிப்ப - பயிலுவதால், வரையென - மலைபோல, சோர்புயல் தொலைத்த - பெய்யும் முகிலை யொத்த, தோளான் - சுபத்திரன், மனைவி - நிப்புதி, நலம் கடந்த - நலம் மிகுந்த, பேர்…நின்றாள் - பெயரையும் அழகையும் எழுதினதொரு பெண்மை யையுடைய விளக்கெனவாகி நின்றாள்.

372. மதிவலான் - சோதிடன், விதியின் - நூல்களைக் கொண்டு, காசு - குற்றம், கதுமென நாணப்பட்டான் - சட்டென இவள் நாணமெய்தப் பண்ணுவோன், நாணப்பட்டவன் எவன் அவன் துணைவனாம் என்க, துணைவன் - கணவன், புணர்மின் - அவனுக்கு மணம்செய்ம்மின்.

தனக்குக் கணவராகும் பான்மையில்லாதார் அவளுக்கு ஆடவராய்த் தோன்றார். அதனால் அவள் பலரையும் காண்பள், அக் காட்சியால் குற்றமிலன் என்றற்கு, “மாசிலாள்” “காசிலாள்” என்று கூறினார்.

373. தாமம் - மாலை, பொன்மாலை, பூமாலை, மணிமாலை என்ற இவற்றிடை என இயையும், ஊழ்படு காதலானை - தனக்குத் தொன்றுபட்டு வருகின்ற காதலானை, பிடி நுசுப்பு - பிடியளவிற்றாகிய இடை.

374. பொன்நிலம் - பொன்னுலகம், பொருவில் பூங்கொடி - ஒப்பில்லாத காமவல்லிக் கொடி, மின்னுவிட்டு - ஒளிவிட்டு, வீங்கிருள் பின்னு விட்டு அனகுழல் - மிக்க இருளைப் பின்னிவிட்டது போலும் குழல், பேதையூர் - பேதையாகிய இக் கேமசரி வாழும் ஊர், என்ப - அசை.

375. கோலச் செஞ்சுடர் - அழகிய ஞாயிறு, உத்தரம் - வடதிசை, மன்றல் - நறுமணம், ஆல் நிழல் - ஆலமரத்தின் நீழலில், நன்று உவந்து - மிக மகிழ்ந்து, நாதன் - அருகன், சிந்திய - நமோ அரஹந்தாணம் என்று கூறி மந்திரத்தைச் சிந்தித்து.

376. ஓதவண்ணன் - கடல் நிறம் கொண்ட நேமிநாதசாமி, விரை - நறுமணம், தேங்கு ஓதம் - தேங்கி நிற்கும் கடல்போல.

377. அடல்வண்ண ஐம்பொறி - உயிரை வருத்துவதே இயல்பாகவுடைய பொறிகள் ஐந்து, அட்டு - வென்று, காசின்று - குற்றமின்றி, மாசு - நெஞ்சில் அழுக்கு.

378. பூத்து ஒழியா - பூத்து மாறாத, தழும்ப - தழும்பேறும்படி, ஆறலைப்ப - வழிபறித்தலாலே, எண்குணம் - கடையிலா அறிவு முதலிய எண்குணம்.

இவனை வணங்காதார்க்கு நுகரப் பெறாமையால் உளதாம் பற்று ஒழிவின்றாய் வருவதின்றி நுகர்ச்சி யெய்திப் பற்றற்று வீடுபெறுதல் கூடாதாயிருந்தது என்பது கருத்து.

379. நிலம் தினக்கிடந்த நிதி - மண் தினக்கிடந்தனவாகிய நிதி, புலம்பு அற - தனிமை வருத்தம் நீங்கும்படி, ஏழை - கேமசரி, உறுவலி - மிக்க வலியுடையனான சீவகன்.

380. கண்ணுறக் காண்டலும் - கண் நோக்கம் பொருந்தப் பார்த்ததும், தோய்ந்து - செறிந்து, ஒண்ணிறத் தீ விளைத்தாள் - ஒள்ளிய நிறம் கொண்ட வேட்கைத் தீயும் வளர்த்துக் கொண்டாள், உருக்குற்றாள் - அத் தீயினால் உருகலானாள்.

381. வாக்கு அணங்கார் மணி வீணை வல்லான் - திருத்தத்தையுடைய தெய்வத் தன்மை நிறைந்த அழகிய யாழ் வல்லுநனான சீவகன், நோக்கு அணங்காய் - நோக்கம் வருத்தம் செய்வதாய், நொந்து - நோய் செய்வதால், வீக்கு - கச்சணிந்த, தாக்கணங்கோ - தன்னாற் காணப்பட்டாரைத் தீண்டி வருத்தும் தெய்வமகளோ, மகளோ - மண்ணவர் மகளோ.

382. நினைப்பரும் நீள்நிறை - நினைத்தற்கரிய மிக்க நிறையையுடைய, நிப்புதி - நிஸ்ப்ருதி என்னும் வடசொற் சிதைவு, இனத்திடை ஏறு - சிங்கக்கூட்டத்தின் இடையே நின்ற ஆண் சிங்கம், புனக்கொடி - முல்லைக்கொடிபோலும் கேமசரி, பொற்பொடு ஏறனையான் எழில் நோக்கி என்று இயைக்க, வனப்பு - அழகு மிகுதி, கண் அகன்றாள் - உடம் பெல்லாம் கண்ணாயினாள்.

383. காதன்மை - காதல், துணிபொருள் - காதற்கருத்து, ஏதின்மை படக் கரந்திட்ட - மனத்தே காதற்குறிப்பு இல்லாதாள் போல மறைத்துக்கொண்டு, ஏதின்மை - அயலாந்தன்மை, ஓதநீர் அமுதம் - கடலிடத்தைக் கடைந்துபெற்ற அமுதம்.

நோக்கத்துக்கு அமுதமும் உலகும் விலையாம் என்பது கருத்து.

384. திருவிற்கும் - திருமகட்கும், தெரியல் மாலையார் - மாலைசூடிய தேவர் மகளிர், உருவிற்கு - உருவத்துக்கும், பூங்கொடி - பூங்கொடிபோலும் கேமசரி, முருகனது வேலையும், காமனது வில்லையும், எனது அறிவையும், ஒருவனது பிறையையும் முறையே கண்ணும் புருவமும், நுதலுமாக வாங்கிக் கொண்டமையின், பகைத்தி என்றான், பகைவன் பகைத்தி, ஒருத்தி வண்ணம் இருந்தவாறு.

385. கலைத்தொகை - கலைகளின் தொகுதி, நலத்தகையவள் - பெண்மை நலமும் அழகும் உடைய கேமசரி, மலைத்தொகை - மலைபோலத்தொக்க, மன்னவனுக்கும் நிலத்தவர்க்கும் செப்பினான் என்க.

386. இடியுமிழ் முழக்கின் - இடியிடித்த முழக்கம்போல, பல்லியம் - பலவாய இசைக்கருவி, கடவுள் நாள் - மனத்திற்குரிய நன்னாள், வடிமலர் - அழகிய பூ.

387. திங்களங்குழவி - பிறைத்திங்கள், இமைப்பது - விளங்குவது, குளிர்கதிர் ஆரம் - குளிர்ந்த கதிர்களையுடைய முத்துமாலை.

388. இணைவண்டு - பெடைவண்டு, இறந்துபாடு இன்று - இறவாமல், இருக்குமே - ஏகாரம் வினா, துஞ்சின் - இறந்தால், பணிகொண்ட திண்மையால் - நீ மேற்கொண்டிருக்கும் பணியறியும் அறிவு வன்மையால், பரிவு - அன்பு, இருக்கும் - ஆற்றியிருக்கும், பணியாவது, மகளிர் மலைக்கண் இருந்து இல்லறத்தை நிகழ்த்துதற்கு வேண்டியன தேடிவருதல் ஆடவர்க்குப் பணியாம் என்பது.

389. அல்லியுட்பாவை - தாமரைப் பூவில் உள்ள திருமகள், ஒற்றி - தேர்ந்து, கொல்சினமடங்கல் அன்னாள் - கொல்லுகின்ற சினத்தையுடைய சிங்கம்போன்ற சீவகன், கொழுநிதி - மிக்க செல்வம், பருதி - ஞாயிறு, பாயிருள் - பரந்த இருள்.

390. மணிகுயின்ற - மணிவைத்திழைத்த, திருந்து - செய்யப்பட்ட, கருமணிப் பாவையன்னான் - கண்ணிலுள்ள கருமணியில் காணும் பாவையொத்த சீவகன், கரந்துழி - மறைந்தவிடம், காண்டல் செல்வாள் - காணாளாய், விளக்கம் அறுகாறும் இருள் ஓடி - விளக்கின் ஒளியுள்ளனவும் இருளில் ஓடி, அலமருகின்றது - வருந்துவது.

391. யாண்டையாய் - எவ்விடத்தே உள்ளாய், யான் நிறையிலேன் - யான் நிறையழிந்தேன், வந்து தீண்டு - உடனே வந்து என்னைத் தீண்டுக, தீண்டு வந்து என்றாள், கண்டேன் சீதையை என்றாற்போல, ஒளிக்கிறேன், கண்டுகொள் என்று முன்பெல்லாம் விளையாடுபவாகலின் இப்பொழுதும் அதுவாக நினைந்து, யாண்டையாய் என்றும் அஞ்சினேன் என்றும் கூறினாள். உயிர் உடம்பினீங்க முற்படுகிறது என்க.

392. கழலும் நெஞ்சு - நிறையழிந்து மெலிந்து செயலுறும் நெஞ்சம், சூடு உறுபொன் என - உருகுகின்ற பொன்போல, அழலும் - வெதும்பும், ஆற்றலென் - ஆற்றேனாயினேன், நிழலின் நீப்பரும் - நிழல்போல நீக்குதற்கரிய.

393. திருந்து - அழகிய, யான்புரிந்து சூடினும் - யான் விரும்பியணிந்து கொள்ளினும், நுண்ணிடைவருந்துமால் - நுண்ணிய இடையானது முரிந்துவிடும், எனும் வஞ்சம் - என்று பொய்யாகப் பாராட்டும் வஞ்சனை, கரிந்து நைய - கருகிவருந்த.

394. முயங்கினான் - முயங்கியவனான சீவகன், முகிழ் - கோங்கரும்பு, உயங்குவாள் - வருந்துபவள், உணர்ந்து - துணை வண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை, என்று முன் கூறியதை நினைத்து, ஊனம் - பழி, பிரிவு - இறந்துபாடு, இயங்குவான் நின்ற - போவதற்கு ஒருப்பட்டு நின்ற; தாங்கினள் - போகாதே தடுத்துக் கொண்டாள், பொன் - பசலை.

395. வஞ்சவாய்க் காமன் - வஞ்சம் கலந்த சொல்லையுடைய காமன், மணிநிறம் - நீல மணியின் நிறம், ஆவீர் - ஆவீர்களாக, மஞ்சு - மேகம், பனிக்கும் - வருந்தும், சீறடி - சிறிய அடி.

396. விழுத்திணை - உயர்ந்த குடி, வேட்கைவேர் - ஆசையாகிய பிறவியின் வேரை, மெய் - சன்மார்க்க நெறி, இழுக்கம் - தப்பு, எய்திய தவம் - முற்பிறவியில் செய்த தவம், விண்ணோன் - அயன், வச்சிரநுதி - வச்சிரவூசி, எழுத்தனான் - எழுத்துப்போலத் தவறாதவன்.

397. எரிதலைக் கொண்ட - வெதுப்புதலையுடைய, நீர்ப்புள்ளி - நீர்த்துளி, அற்று - போல்வதாம், காமத்தின்பம் - கூட்டத்தால் பிறக்கும் இன்பம், உருகிசைந்து - பிரிவாற்றாது நெஞ்சுருகி வருந்தி, இம்மையோடு உம்மையின்றி - இம்மை மறுமை யின்பம் இன்றி, இருதலைப்பயனும் - இரண்டன் உறுதிப் பயனும்.

398. மன்னும் - மிகவும், இறக்கும் - கெடும், வெயில் உறு பனியின் - வெயிலைக் கண்ட பனி போல, இசைகறங்கும் நல்யாழ் இனியினும் - இசையைச் செய்யும் நல்லயாழின் இனியென்னும் நரம்பினும், வினையின் ஆக்கம் - தீவினையின் செயல்வன்மை, அழுங்குவது - வருந்துவது.

399. வாசம் - நறுமணம், மாற்றப் பாசத்தால் - சொல்லாகிய பிணிப்பாலே அன்பு மிகுதலால், ஆக்கப்பட்ட - உண்டாக்கப்பட்ட அல்லதெல்லாம் பேசின் - உயிரொழிந்த உடம்பின் தன்மையெல்லாம் சொல்லின், பிணையல் மாலை - பிணையலாகிய மாலை, பூமாலை, பரவை - பரந்த.

400. பையர - படத்தையுடைய பாம்பு, அரா என்பதன் விகாரம், எரி துயரின் மூழ்க - எரியுந் துயரத்திலே மூழ்கி, வலையிற் சூழ்ந்து - வலையால் வளைத்துக்கொண்டு, கையரிக் கொண்டும் - கையால் அலைத்து அரித்துத் தேடியும்.

401. போந்தீர் - வந்தீர், எனைவர் - எத்துணைபேர், ஒவ்வாதார் - ஒழுக்கமில்லாதவர், ஒப்பர் - ஒழுக்கமுடையவர், சீவகன் தன் உடம்பை ஊர் என்றும் பதியென்றும் குறித்து, இவ்வுடம்பிடத்தேன் - இவ்வுடம்பெடுத்தற்குப் போந்தேன் என்றும் கூறினான், சான்றோன் - உணர்வுடைய சீவகன்.

402. அறிவர் சிறப்பு - இறைவர் பூசனை, நடுங்காத் தவம் - அசைவில்லாத் தவம், தானம் முதலிய நான்கும் மனைவியர், உற்றான் - உற்றவனாகிய நல்வினை, ஒருமகன் - ஒப்பற்ற மகன், உரவோன் - திண்ணியோன், அல்லாதார் பிறர் - நல்வினையாகிய மகனைப் பெறாதார் மகப்பெறாராவர், மக்கள் பிறரே - நல்வினையில்லாதார் பெற்ற மக்களும் மக்களாகார்.

403. மட்டார் பூ - தேன் பொருந்திய பூ, பிண்டி - அசோகமரம், மால் - அருகன், முட்டாத - குறையாத, இன்பப் புதா - இன்பக் கதிக்குச் செல்லும் கதவு, தாள் பாதம் உடைய மூர்த்தி - தாளாகிய திருவடியையுடைய மூர்த்தி.

மூர்த்தி, மாலே கண்டீர் என்று முடிக்க, இன்பமேபோல் - இன்பமில்லாதவாறுபோல, பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை என்பர் திருவள்ளுவரும், தேறாதார்க்கு வினை ஒட்டாவே - இம் மூர்த்தியைத் தெளியாதார்க்கு நல்வினைகள் வந்து கூடா.

404. வெகுண்டீர்போல - அவருடனே வெகுண்டு அவர்பால் செல்லாதீர் போல, ஆற்றுணா - வழிச்சோறு, வைப்பீரே - வைப்பீரோ, அல்லீர் - வைக்கமாட்டீர், தமியே - சுற்றத்தாரில்லாத நமனுடைய ஊர்க்கு நல்வினையாகிய துணையின்றித் தனியாக, அழகு அல்லால் - அலகு ஒன்றன்றி.

405. வெண்ணிணத்த செந்தடி - வெள்ளிய நிணமாகிய தசை, ஏட்டைப்பட்டு - இளைத்து, பழுது எண்ணும் - தீது நினைக்கும், ஓட்டை மர செவியர் - உள்ளொன்றுமில்லாத மரத்துளைபோல உட்கொள்ளாத செவியினையுடையர், ஊன் செய் கோட்டம் - ஊனாலாகிய உடம்பு, கோட்டத்துக்கு - கோட்டக்கு என வந்தது, வள்ளூரம் - ஊன்.

406. பொதித்துணை - பொருளின் திரளை, அப் பொருளைக் காட்டற்கு விரும்பாமையின், காட்டாளாய் என்றார், ஆங்கு - அது நுகர்தற்கு, சிறவாக் கட்டுரை - பொய்யால் புனைந்த உரை, பொய்யே பொருள் உரையா முன்னே - பொய்யே மெய்போலக் கூறுதற்கு முன்பே.

407. முறுவல் - முறுவலையுடையவாய், மதி முனி முகத்தியர் - திங்களைப்போலும் முகத்தையுடைய மகளிர், நம்பினோர் - விரும்பினவர், துனிவளர் கதி - துன்பம் தரும் தீக் கதிகள், நாடகம் ஆடுவர் - வேறு வேறியாக்கை கொண்டு தோன்றி மறைதல்.

408. எரிமணிவயிரம் - விளங்குகின்ற மணியும் வயிரமணியும், வயிரமணி என்றுமாம், பொன்னவிர் கலம் - பொன்னாலாகிய அணிகலம், புகன்று - விரும்பி, நீட்டி - கொடுத்து, வில் மரீஇ நீண்ட தோளான் - வில் கிடந்து உயர்ந்த தோளையுடைய சீவகன், வெயிற்கடம் - வெயில் வெதுப்பும் சுரம்.

409. மருப்புலக்கை - மருப்பாகிய உலக்கை, அறை - பாறை, ஐவனம் - மலைநெல், வாசவல் - பசிய அவல், குவவி - தொகுத்து, தினைப்பிண்டி - தினைமா, உருகும் - ஊனுருகும், கனிவாழை - ஒரு பெயர், ஊனை - ஐ, அசை, பாசவல், விகாரம், வழியிடத்தவர் தொழில் வழிமேல் நின்றது.

410. மகள் மொழிந்தாட - மகட்பேசிச் செல்லுதலால், பைந்தார்க்கொன்றை - கொன்றை மாலைபோல மலர்வதால், பைந்தார்க் கொன்றையென்றார். குராமரத்தின் பூந்துணர் பாவையெனப்படுதலின், பாவை கொடுப்ப என்றார். தோன்றி - தோன்றிமரத்தின் ஒளிதிகழும் வெண்பூ, குருந்து குருந்தமரம், தேன்நீர் - தேனாகிய நீர், கரும்பு தேனீர்பெய்து ஆர்த்தன என்க.

411. கானத்தி னேகுகின்றான் - சீவகன், தானத்தில் - ஓரிடத்தே, மகளும் - உம்மை, இசைநிறை, நானம் - புழுகு, நாற - மணம் கமழ.

412. அரவம் - ஓசை, பணிவரும் - பிறரால் வணங்குதற்கரிய, நோக்கின் - நோக்கு வதைப்போல, பணையெருத்து உறழ - பருத்த கழுத்து மாறுபட, மணிமலர் - மணிபோலும் பூ, வழை - சுரபுன்னை, மரவம் - கடம்புமரம், துணிவரும் சாயல் - வானவர் மகளோ மண்ணவர் மகளோ எனத் தெளிதற்கரிய சாயல், உறழநோக்கி, மரவநீழலில் நாகத்தைச் சார்ந்து நின்ற அநங்கவீணையைக் கண்டான் என்க.

413. தோற்றா - தோற்றி, முகை நெறித்தனைய உண்கண் - அரும்பை அலர்த்தினாலொத்த மைதீட்டிய கண், குறும்பல்கால் ஆவிக்கொள்ளா - அணுகிப் பல்கால் ஆவிக்கொண்டு, சேர்துகில் தானைசோர - மேற்போர்த்த துகிலோடு உடுத்த தானை (முந்தானை) நெகிழ, அனங்கண்…. எய்தாள் - வேட்கை கிளரச் செய்தாள்.

414. சாதுயர் - சாதற்குரிய வருத்தம், விழுத்துணைக் கேள்வ - சீரிய துணைவனாகிய கேள்வனே, பெய்தாங்கு - சொரிந்து கெடுப்பது போல, செகுப்பல் - கெடுப்பேன், வேயுலாம் - உலாம், உவமவுருபு.

415. குழல்மேல் வண்டு இருப்பினும் நுசுப்பு முரியும் என்று இயல்பு ஏத்துவேன் என இயைக்க, ஏதம் - துன்பம், ஓதம் - கடல், உடன்று உடன்று நைய - மறுகி நையும்படி, நீ ஒளித்தொழிதல் குணனாகுமே என்க, ஏகாரம் வினா, தாமரைக் கோதை - திருமகள்.

416. என்றாற்கு - என்று வினவிய சீவகனுக்கு, பொன்னங் குன்றின் - பொற்குன்றுபோல, கொடி யென்னும் நீராளை - கொடிபோலும் தன்மையுடையவளை, பாவத்தால் கெடுத்தேன் என்க.

417. கைப்பொருள் - தனக்கு இடுக்கண் நேர்ந்தால் உதவும் பொருள், கண்ணும் ஆகும் - கல்வியறிவால் ஞானக்கண்ணும் உண்டாகும், மெய்ப்பொருள் - தத்துவவறிவு, பிறகள் - கல்வியல்லாத பிறபொருள்கள், பொன்னாம் - பொருளை எய்துவிக்கும், புகழுமாம் துணைவி - புகழாகிய திருமகள், எய்தி - பெற்று, இரங்குவது - அறியாதாரைப்போல வருந்துவது.

418. இன்சொல் அலர் - இனிய சொற்களாகிய பூ, காமச் சாந்தின் - காதலாகிய சாந்தாலே, ஏற்ற இன்பம் செய் மாலை - ஏற்ற இன்பத்தைச் செய்கின்ற காமமாகிய மாலை, பகல் குட்டி - பகற் காலத்திலும் அணிந்து, வின்னாது - நீங்காது, கண் உள்ளம் பிறர் பின் செல்லும் - கண்ணும் மனமும் பிறர்பால் செல்லும், பிணை - பெண்மான், அடியதன்றே - மனத்தின் அடியிலே யுள்ளதன்றோ.

419. தன்னவன் - தன் கணவன், தணந்த காலை - நீங்கினால், பூமனும் - மிகவும் பூவும், புலம்ப வைகி - தனிப்ப இருந்து, காமனை யென்னும் சொல்லார் - காமன் என்று பெயரும் கூறாராய், செல்லல் - துன்பம், காமனை - ஐ, அசை.

420. இனையல் - வருந்துதல், ஒரு வில் ஏ அளவு அனைய எல்லை - ஒரு வில்லினது அம்பு சென்ற அளவை யொத்த எல்லை, கொணர்ந்தருளும் - கொண்டு வந்து தரும். கைப் படுதி- காண்பாய், அனைய மாதரை - சீவகனைக் கண்டு வேட்கை மிக்கு வருந்திநின்ற அவளை, கண்டாங்கு - ஆங்குக் கண்டு, மந்திரம் - மகளிர் மனத்தைக் கவர்வதொரு மந்திரம்.

421. பட்டவெல்லாம் - பட்ட வருத்தமெல்லாம், பரியாது - வருந்தாமல், அவன்கண் ஆர்வம் விட்டாள் - சீவகனாகிய வழிப்போக்கன்மேல் செலுத்திய வேட்கையை விடுத்தாள், இவள் - பவதத்தன், மைந்துறவினால் - வலியுற்றபடியினால், மனை துறந்தாள் - மனைக்குரிய அறத்தைக் கெடுத்துக் கொண்டவள், ஒட்டி - ஒன்றி, விள்ளா - நீங்காத.

மனைதுறந்தாள், ஆர்வம் விட்டாள், உருவமோதினான் உரைத்தான் கேட்டான்.

422. முனிமை - முனிவனாம் தன்மை, முகடாய - மேலாகிய, தனிமைத் தலைமை - ஒப்பில்லாத தலைமை, பழிச்சாவாறு - துதிக்காதவாறு.

423. மடமை கூர - அறியாமை மிகுதலால், பிறிது - வேறொரு பெடையன்னம், கள்வ - (சேவலன்னதத்தை நோக்கிக்) கள்வனே நீர்க்கீழ் கண்டனம் என்க, பண்டையமல்லம் - யாம் முன்புபோல் தேற்றினும் தேறோம், படுக்க வேண்டா - அகப்படுக்க வேண்டா.

424. செயிர்ப்போடு - குற்றத்தோடு, சேவலின் - சேவலன்னத்தின் நீங்கி, அயிர்ப்பது - ஐயுறுவது, அறியலேன் - வேறொன்றையறியேன், மூக்கின் உயிர்ப்பது - மூக்கினால் உயிர்த்து உயிர்தாங்கியிருப்பது, ஊடல் - ஊடுதலைச் செய்யாதே, பயிர்ப்பு - அருவருப்பு, அற - நீங்க, பாண் செய்தது - தாழ்ந்து நின்றது.

425. வண்டுவாழ் பயில்கோதை - வண்டு வாழ்க்கை பயின்ற கோதையையுடைய காந்தருவதத்தை, மணமுதல் - கூடுதற்கு முன்னே, நொண்டுகொண்டு - முகர்ந்துகொண்டு, பருகிய நோக்கம், ஆவியுருக்குவதாகிய நோக்கம் என்க, அந்த நோக்கம் இப்பொழுதும் உண்டு.

426. உடல் உள் உயிர் - உடலிடத்தேயிருக்கும் உயிர், காதலான் உயிர் கைவிடின் என் உயிர் ஏதம் எய்தி இறக்கும் என்க, விஞ்சை - வித்தை, அல்லதூஉம் - அன்றியும்.

427. மிக்குழி - மிக்கவிடத்து, கைகொடாவாதல் - கைகொடுத்து உதவாதொழிதல், கண்ணகத்து அஞ்சனம் போலும் - கண்ணிடத்தே கிடந்த அஞ்சனம் அதற்குப் பயன்கொடாதது போல, (கல்வி நெஞ்சிற் கிடந்தும் பயன் தந்ததில்லை) தாது துற்றுபு - தாது உண்டு, ஏதம் இற்று - காதலால் வரும் ஏதம், இன்று, இற்றென விகாரம்.

428. ஊர்தர - மேலிடுதலால், மாட்சியுள்ளம் - மாய்தலையுடைய உள்ளம், மாற்றி - கெடுத்து, பொய்கைக் காமர் நலம் - பொய்கையின் அழகிய நலம்.

வருத்தத்திற்குக் காரணமாகின்றவிடத்து இருத்தலருமை தோன்ற மீட்டும் என்றார்.

429. வாழ்வார் - வாழ்பவர், என்றாற்கு - என்று கேட்ட விசயனுக்கு, பொய்ந் நாட்டேனும் - சொல்லால் பொய்யாக காட்டிக்கொள்ளப்பட்டதாயினும், பொய்யலவாற்றால் பெயரல்லாப் பெயர் சொன்னான் - பொருளால் பொய்யல்லாததொரு வழியாலே ஏமாங்கதமென்னும் நாட்டில் இராசமாபுரத்தில் சீவகனென்னும் பெயரையன்றிப் பொருளால் அப்பெயரேயாகக் கூறினான்.

430. வீங்கிய திண்தோள் - உயர்ந்த திண்ணிய தோள், அது எல்லாம் - உபசாரம் பலவும், அண்ணல் - சீவகன், இவனை யெதிர்ப்படுதிலின், விசயனைப் புண்ணிய நம்பி என்றார்.

431. வாங்கு - தேவி பொருட்டு வளைத்த, இசையலால் சொல்லாலன்றி, உராமனம் - நீங்கிப் போகும் உள்ளம், இன்றி - இல்லையாக, குராமலர்க் காலின் நீங்கி - குரவம் பூ நிறைந்த சோலையிலிருந்து நீங்கி.

432. விற்றிறல் - வில்லின் வன்மை, தேற்றான் - அறியான், நம்பி - விசயன், மற்றும் - வேறும், மாண்பினால் - மாட்சியோடு, கொற்றம் - கல்வி, குறை - பொருள், பயிற்றுகின்றார் - பயிலுகின்றார்.

433. பின்னிலிட்ட - சேர்த்துவிட்ட, பிடித்தடக்கை - பெண் யானையினுடைய பெரிய கை, போன்று - ஒத்து, கன்னிக் கலிங்கம் - கணவன் தீண்டாத உடை, கவலி - விரும்பி, இடங்கோட்டி - இடப்பக்கம் சாய்த்து, இயக்கியும் தனக்கு மேலாய இறைவனைத் தியானித்து இமையா திருப்பாளென்றுணர்க.

434. ஒன்றே எயிற்றது ஒரு பெரும் பேய் - ஒரே பல்லையுடையதொரு பெரிய பேய், அங்காந்து - வாயைத் திறந்துகொண்டு, திங்கள் எயிறு - திங்களாகிய பல், குருதி வான வாய் - செவ்வானமாகிய வாய், இம்மாலை, எயிறிலங்க, அங்காந்து, விழுங்குவான் வந்தது அன்றே, அளியேன் - அளிக்கத்தக்க என்.

435. ஈன்றாள் - ஈன்றெடுத்த தாய்க்குயில், மறந்து - உறவைக் கைவிட்டு, வளர்த்தாள் - வளர்த்த காக்கை, சொல் - குயிலின் ஓசை, முருந்து - எலும்பு, கூழையை - மயிர் நிரம்பியுள்ளாய், முனிவார் - வெறுப்பவர், என் - பிறப்பு, வளர்ப்பு, வடிவு - இவற்றுள் எதனை? பொன்றும் - சாகும், திருந்து - அழகிய, சிலம்ப - முழங்க.

கருங்குயிலே யென்றது சோலைக்கு மறுவே என்ற தன்மைத்து, இது செறலின்கண் திணைமயக்கம்.

436. வேம் - வேகும், விடுக்கும் ஆவி - உடம்பைக் கைவிட்டுப் போகும். புறம்நோக்கி - பொல்லாங்கைப் பார்த்து, நடுவதாயினேன் - நகப்படும் பொல்லாங்கின் வடிவேயாயினேன். அவன் கையால் புனைதலின், அது கொண்டு நீந்தலாமோ என நினைத்து அதனை மறுத்தாள்.

437. பொறி செறித்த மாண்பினர் - ஐம்பொறியையும் அடக்கியாள வேண்டும். என்ன - என்று சீவகன் சொல்ல, நக்காட்கு - இகழ்ந்து நகைத்த தோழிக்கு. இன்ன கொள்கையாற்கு - இவ்வாறு ஆசிரியனாம் தம்மையில் நின்ற எனக்கு. எயிற்றினாள் - தோழி, நடையினாள் - கனகமாலை, என - என்று சொல்லவே, நேர்ந்தான் - மாலையை ஏற்றான். வருந்தும் (இறந்துபடும்) எனவே, அதற்கஞ்சி ஏற்றானாயிற்று.

438. விற்போர்க்கு விசயன் விசயனே - விற்போரில் இவ்விசயனென்பான். அருச்சுனனை நிகர்ப்பன், கதம்பன் முருகனை யொப்பன், அசல கீர்த்தியென்பான் அசலனை நிகர்ப்பன், புரவிசேனன், வசையிலானாகிய நகுலனை நிகர்ப்பன், யாவரும் - யாவராலும்.

439. புள்முழுது இறைஞ்சும் கோட்டுப் பொருகளிறு - பறவைகளெல்லாம் வந்து படியும் கோட்டையுடைய யானை, மண்…. தந்தாய், மண் முழுதும் வந்து கைகூடுதலேயன்றி மறுமையில வானும் வந்து கைகூடும்படி ஞான நெறியையும் தந்தாய். கண் பெற்றேன் - நல்வினை செய்தவருடைய உடம்பிலுள்ள கண்போலக் கண் முழுதும் பெற்றேன். அஃதாவது, இவர் போர்த் தொழில் காண்பதால் ஊனக்கண்ணும், இவரை நன்னெறியில் சேர்வித்தலின் ஞானக்கண்ணும் பெற்றேன் என்பது. பண்முழுது உடற்றும் - பண்ணெல்லாம் முழுதும் ஒக்கும்.

440. மொய் கொள் வேல் குரிசில் தேற்றான் - வலிமை பொருந்திய வேலையுடைய குரிசிலாகிய சீவகன் தெளிவிக்கானாய். வடிவமை மனன் - கனகமாலையின் வடிவு பொருந்திய மனம், ஒன்றாக - வேட்கை வயத்ததாக, வாக்கு ஒன்றா - வாய்ச்சொல் வேட்கை யில்லாதான் போலாக, தடிசுவைத்து ஒளிறும் வேல் - ஊன் படிந்து விளங்கும் வேல், இடி முரசு - இடி முழக்கத்தையுடைய முரசு.

441. பூவியல் கோயில் கொண்ட பொன்னனாள் - தாமரைப் பூவைக் கோயிலாகக் கொண்ட திருமகள், நங்கையாகிய கண்ணி என்க, காவி - நீலமலர், மூவியல் - சிரோதயம், பூபதனம், தெரியுங்காலம், திரித்தல் இன்றி - தப்பில்லாதபடி, முறையில் - நினக்கேயுரிய முறைமையால், சாதகம் செய்தார் என்க. ஏவியல் சிலை - அம்பு தொடுக்கும் வில்.

442. திரை - கடல், இன்னீர் அமுது - இனிய தன்மையுடைய அமிர்தம். உயிர் பெற்றது என்னும் உரை - தனக்கு ஓர் உயிரைப் பெற்றது என்று கூறும் உரை, வரையுடை மார்பன் - மலை தோற்கின்ற மார்பனான சீவகன், அங்கண் - அவ்விடத்தே, காதலான் - காதலால், காதலால் வைகினன் என்க.

443. மருங்குல் இறும் - இடை முரியும், இனைந்து - வருந்தி, வளைதோள் துறப்ப - வளைகள் கையினின்றும் கழன்று நீங்க, கண் ஓவாமுத்து உறைப்ப - கண்கள் நீங்காது நீர்த்துளியைச் சொரிய.

444. பொறிகுலாய்க் கிடந்த மார்பின் புண்ணியன் - ஆணிலக்கணமான மூன்று வரிகள் பொருந்திய மார்பினையுடைய சீவகன், பொன்றினானேல் - இறந்துவிட்டானாயின், வெறி - மனம் மாலையும் வளையும் முத்தமும் நீக்கி நோற்றலோ, எரி புகுதலோ இரண்டி லொன்று செய்யத் தக்கதாம். அறியலென் - (மகளிர் அணிசுமந்திருப்பது உண்டு என) யான் கேட்டறியேன்.

445. மது… கோதை - தேன் வழிய மலர்ந்த பூவால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த காந்தருவதத்தை, மாற்றம் - மறுமொழி, கொதிமுகக் கருதி வைவேல் குரிசில் - கொதிக்கின்ற குருதி படிந்த கூரிய வேலையுடைய சீவகன், உள்ளான் - நினையான், விதிமுக மணம் - விதிப்படி செய்யும் திருமணம், மதிமுகம் அறியும் நாமே - மதிமுகம் என்னும் மந்திரத்தை யறிந்திருக்கின்ற நாமே, வாடுவது - அவனுக்குத் தீங்குண்டாமென்று வருந்துவது.

446. பொற்பு - அழகு, பள்ளியாகிய அமளி யென்க. அழகிய கள்ளையுடைய பூவணைப் பள்ளியாகிய பொற்புடையமளியென விசேடித்து நின்ற இருபெயரொட்டு, கற்பகம் - தேவர்நாட்டுக் கற்பகம், மண்ணுலகத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, தேவர் சாபத்தால் பூமலர்வதன்றிப் பிற தன்மைகளை யிழந்தது. இப் பூமாலை, கற்பகமாலை எனப்பட்டது. கைசெய்வான் - ஒப்பனை செய்யும் சீவகனை, விற்படை - வில்லாகிய படை, தோளான் - நந்தட்டன்.

447. தாமரைத் தடக்கை - தாமரைப் பூப்போலும் பெரிய கை, தாள்முதல் - காலடியில், கண்ணும் வாயும், முகமும் கையும் தாமரையொத்தலின், தாமரைத்தடம் என்றார். தாமரைக் குணத்தினான் - தாமரை யென்னும் எண்ணாகிய குணம் உடையவன். தாமரைச் செங்கணான் - சீவகன், பரிவு - வருத்தம், யான் போந்த பின்பு இருமுது குரவர் உற்றது என்னென்று தனக்கு உற்றுக் கிடந்த வருத்தத்தை இவன் வாய்க் கேட்டுத் தீர்ந்தான் என்க.

448. என்னுறு…. ஓராது, யான் தேவனால் கொண்டுபோகப்பட்ட நிலைமையை யறிந்தும் உண்மையென்று உணராமல், எரியுறு - நெருப்பில் இட்ட, கன்றிப் போயினீர் - வாடினீர். பொறியிலாதேன் - பிரியாதேயிருந்து இருமுது குரவர் முதலாயினார்க்குத் தொண்டு செய்யும் நல்வினையில்லாத யான். முன்னுற - தீவினை வந்து முன் நிற்றலால், இதனை - குணமாலையின் ஓருயிர்க்காகப் பல உயிருக்கும் தீங்கு வருகின்ற இதனை, ஒக்கல் - உறவினர். பின்னுறு பரிவு - பின்பு முடிய நுகரும் துன்பம், கவலல் - வருந்தாதே.

449. திண் பொருள் - அழியாச்செல்வம், தெவ்வர் - பகைவர், ஒண் பொருளாவது உடன்பிறப்பு - ஒள்ளிய பொருளாவது உடன்பிறப்பு, ஆக்கலாகா - வேறே எவ்வாற் றாலும் செய்து கொள்ளலாகாத அவ்வொண்பிறப்பாகிய.

450. நொய்தின் - கடிது சென்று கண்டவிடத்து, பொருள் உண்டெனின் கொய்து உரை - யாம் கூறத்தக்க பொருள் உண்டாயின் விரைவிற் கூறுக. என - என்று வேண்ட, மாண்டதொர் தோட்டிடை - அழகியதோர் ஓலையில், கைவளர் கோதை - கையால் புனைந்த மாலையையுடைய தத்தை, சுரந்து - எழுத்துத் தெரிந்தாலும் பிறர் படித்தறிய லாகாவண்ணம்.

451. ஆங்கு - அவ்வோலையில்; உருக்கு ஆர் அரக்கு - உருக்கிய அரக்கு, பொறி ஒற்றுபு நீட்ட - குறி (முத்திரை)யிட்டுக் கொடுக்க, திசை தொழுதாள் - அவன் இருக்கும் திசை நோக்கித் தொழுது, செல்க என - இத்திசையே நோக்கிச் செல்க என்று ஏவ, பாங்கர் - தோழன்மார், படர்குற்றனர் - செல்லலுற்றனர்.

452. துயில்கொண்டு - உறங்க, ஆவி - கூவ, அகவி - அகவ, விண்டு - சொரிய, விட்டு விரிபோது - முறுக்குவிட்டு மலர்ந்த பூக்கள், பொதுளி - செறிந்து, தளிர்வேய்ந்து - தளிர்களைப் பரப்பி, கனை - அரும்பு, உலகம் உறுவது - உலகத்தை யொப்பது, இடத்து நிகழ்பொருளின்வினை இடத்தின் மேலும், சினைவினை முதன்மேலும் நின்றன.

453. ஐயர் - தாபதர், இருடிகள், இடம் காண, அழகராகிய சீவகன் தோழன்மார் கழலும் தாரும் உடையராய் எங்கும் திரிகின்றனர் என்க. கொய்தகை - கொய்யப்படும் அழகு, பொதும்பர் - சோலை, குளிரும் - இருக்கும், திசைச்சொல், செய்யவளின் சிறிது மிகை - திருமகளினும் சிறிது மேம்பட்டவளான, சேயவள் - விசயை.

454. மாசு - புழுதி, மணி நூற்றனைய ஐம்பால் - நீலமணியைக் கம்பியாக்கினாற்போன்ற தலைமயிர், பூசுதல் - கழுவுதல், பிணி கொண்டு - சிக்குற்றுச் சடையாகி வாசமலர் அடிக்கேற்றி, தோசமற, மறைந்த துதிகள் வனத்தே ஓதித் தொழுது இருந்தாள் என்க. வாமன் - அருகன், வழி - நன்னெறி, தோசம் - குற்றம், சிதை, அவள் கருத்து சீவகன் வாழ்வே கருதலின் மறைந்த என்றார்.

455. உடுத்த - அருகேயுள்ள, மேயோள் - இருந்தவள், விரை - மணம், போது - தாமரைப்பூ, உரை - உரைத்தல், ஒண்ணுதல் - கலைமகள், திரை - கடல், தேமொழி மண்மகள்.

456. மடிந்த - கெட்ட, என்ன - என்று தோழன்மார் வினவ, எளிதன்றே - கூறல் எளிதாயினும் இவ்வேடத்தோடு கூறல் ஆகாது. என்றாள் - என்று விசயை கேட்டாள்.

457. இறைவன் - சச்சந்தன், வீடிய - இறந்த, உயிர் நம்பி - உயிர்போன்ற நம்பியாகிய சீவகன், பிறந்தேமா - பிறந்தேமாக, எங்கு எழில் என் ஞாயிறு என - ஒரு குறையும் கவலையுமின்றி.

458. கைம்மாண் கடற்படை - அணிவகுப்பால் மாட்சிமைப்பட்ட கடல்போலும் படை, காவலனை - ஐ, அசை, ஒழிய - இறந்து படவே, பொய்ம்மயில் - மயிலாகிய எந்திரம், விம்மாந்து - பொருமி, துணையாகித் தோன்றினாய் என்க, என்னை - யான் காணாதவாறு.

459. கண்குளிரக் கண்டேன் - கண்குளிரப் பெய்தக் கண்ட யான், காணப்பிழைத்ததென் - காணாதபடி செய்த தீவினை யாது? நடையால் அன்னப்பெடை யொப்பவள் வருந்தின. மயில்போல வீழ்ந்தாள் என்க. ஆய் - வருந்தின.

460. தெரியலான் - மாலையையுடைய சீவகன், போர்வை - வணிகனென்று தன்னை மறைத்த போர்வை, கோவுடைப் பெருமகன் - அரசுரிமையுடைய சச்சந்தன் மகன், தொழுது சென்று - தொழுது செல்வதற்கு, நோக்கி - கண்களையுடைய விசயை.

461. சச்சந்தென்பவன் பரணி நாளிலே பிறந்தவன், அன்பினால் அரணிலான் - அன்பினால் தன்னைக் காவானாய், இரணியன் பட்டது - இரணியன், இடிக்கும் துணையாராகிய சான்றோர் அமைச்சர் முதலாயினார் கூறிய அறிவுரைகளை ஏலாது கெட்டது.

462. வீறு - நல்வினை, ஓடிய - பரந்த, பசையினால் - பற்றினால், யான் பட்டது ஈதெலாம் - யான் உற்ற தீங்கெல்லாம், அசைவின்று - வருந்தாதபடி, தம்மின் - அழைத்து வருக.

463. தேறன்மின் - தெளியாதீர், இன்னன - யான் பிறப்புணர்த்திய இதனை, இன்னணம் - தன் நினைவின்றி அரற்றியபோது கூறிய அதனை, பேதையார் - அறிவிலாதார்.

464. குணத்தொடு மலிந்த பாதம் - குணம் பலவும் நிறைந்த திருவடி, பணித்தது - தாங்கள் அருளிச்செய்யும் செய்கை, முதல் அடர்த்தும் - முற்பட அழிப்பேம். மாசுண் டன்னாள் - மாசு படிந்தாற்போன்ற விசயை, பற்றார் பகை - அடிப்பட்ட பகை, கட்டியங்காரன்.

465. வாரணம் - யானை, முளையிளந் திங்கள் - பிறைத் திங்கள், கேழ் அரக்கு அளைய - செவ்வரக்குப் பூசிய, அஞ்சனவரையனையது - அஞ்சனமலை போன்றது.

466. கடுமதக் களிப்பினால் - மதம் மிகுந்தெழுந்த மயக்கத்தால் - விடுகலார் - விடாராய், பிடியொடும் கந்து அணைவின்றி - பிடியும் தூணும் நெருங்காது, நீரிருருள் - வட்டமாகப் பண்ணித் தண்ணீர் ஏற்றி யுருட்டுவ தொன்று, அந்தப் போதிகை - பின்னங்கால் சங்கிலி, பிரிந்து - அறுத்து.

467. கரிந்த போல் - நிறம் கரிதாயதுபோல், பண்ணுமிழ்வண்டு - பண்பாடும் வண்டு, உலாய் - உலாவ, பரத்தராநின்ற நீர் - பரந்த சீரையுடைய , மனமென - மனம் தாழ்ந்து படிவது போல.

468. பிண்டம் - கவளம், பெருங்களிறு எனவே, பட்டத்துயானை யென்பது பெற்றாம். பூட்டி - கம்பத்தில் சேர்த்துக் கட்டி, வண்டர் - கடிகையார், ஓவர் - ஏத்தாளிகள், கொண்ட - தனக்கென வகுக்கப்பட்ட, கொண்ட கோயில் என்க. கண்டவர் - ஒற்றுக் கண்டவர், கண்ணினே - கண்ணாலே.

469. தேர்த்தொகைத் தானை - எண்ணிறந்த தேர்முதல் படை பலவும் தொக்க தானை, வார்த்தொகை முழவம் - வார்க்கட்டமைந்த முழவு, மல் உறழ் தோள் - மற்போரில் மேம்படும் தோள், தெரிந்து - தெரிய.

470. கண்ணுற்றென்ன - கூடின என்னும்படி, பாய்மா - குதிரை, இவுளித் திண்டேர் - குதிரை பூட்டிய வலிய தேர், ஓடைக் குஞ்சரம் - பட்டம் அணிந்த யானை, பாற்கடல்…. படுநிரை - பாற்கடல் பரப்புப் போலப் பாலுண்டான மிக்க ஆனிரை.

471. நிரைகொண்டாரை - நிரைகவர்ந்த பகைவரை, தந்து - கொண்டு வந்து, இன்னிசை யுலகம் - இனிய புகழ் நிலைபெறுதற்கு இடமாகிய, சேதலின்றாய் - நிலைபெறாமல், கன்னிய மகளிர் - கன்னியராகிய மகளிர், சுரக்க - மறைக.

472. பார்மலி பரவைத் தானை - நிலத்திலே நிறைந்து பரந்த தானை, நீர்மலி… தோன்றலும் - கடல்போல் நிறைந்த மதத்தையுடைய மேகத்தின் தலையில் தோன்றுவதொரு மின்னினும் கடிதாகத் தேர் தோன்றிற்று. மேகம் - யானை, பகழி - அம்பு, தொட்டான் - எடுத்தான்.

473. கொற்ற வேந்தன் - சச்சந்தன், ஒரு மகற் காண - ஒப்பற்ற மகனாகிய நின்னைக் காணவே, எய்த விடுகணை - எழுதி விடுத்த ஓலை சென்று சீவகனை எய்துமாறு விட்ட

அம்பு, பின்முனா - மாறாக, தூத்துகில் வீசினான் - போரை நிறுத்தவேண்டி வெள்ளிய துகிற்கொடியை வீசிப் படையைப் போர் செய்யாதவாறு விலக்கினான்.

474. கழல் அவாய்க் கிடந்த நோன்றாள் காளை - கழல் பொருந்திக் கிடந்த வலிய தாளையுடைய சீவகன், நிழல் அவாய் இறைஞ்சி - தன் நிழலைப் பகையென்று அவாவித் தாழ்ந்து, அழல் அவாய்க் கிடந்த வைவேல் - கொல்லன் உலையை விரும்பின வேல், குழலவாய்க் கிடந்த கோதை - மொழியை வங்கியமென்னும் இசைக்கருவி விரும்பிக் கிடத்தற்குக் காரணமான கனகமாலை, தாதை - நரபதி.

475. வார்ந்து - விளங்க, வான் பொன் பூண் பரந்து சுடர்கால என்க. சுடர்கால - ஒளி திகழ, முகம் நோக்க - இவர் யார் என்னும் குறிப்புப்படப் பார்க்க, மைந்தர் எல்லாம் - இவ் வீரர் எல்லாரும்.

476. முற்றும் தழுவாரா - முற்றவும் தழுவவொண்ணாத, தாமம் - மாலை, தாழ்ந்த - தொங்கவிடப்பட்ட, முழு முற்றும் - முழுதும் முற்றும், ஒருபொருட் பன்மொழி, இனி, முழுதும் தானே விளக்காய், முற்று மணிக் கொம்புபோல என இயைப்பினுமாம், எழுமுற்றும் - தூண்போலும், கனகமாலை நோக்க, இன்னரென்று சீவகன் குறிக்க, காதல் கழுமிற்று என்க, கழுமிற்று - நிறைந்தது.

477. மங்கை - மகளாகிய கனகமாலை, தொறு - ஆனிரை, ஆங்கு - அப்பொழுது, அசதியாடி - நகையாடி, வெறுக்கைக் கிழவன் - அளகைக்கோன் (குபேரன்), என்ன - போல.

478. சிற்றடிச்சி - சிறியளாகிய அடியேன், அடிவீழ்ச்சி, அடியிலே வீழ்பவள், உள்ளுறுத்த காப்பு - உள்ளிட்ட ஏனைக் காப்புக்களும், நுகருவனவற்றைக் காப்பு என்றல் மரபு. கண்டருளிச் செய்க - நெஞ்சாலே கண்டருளுக.

479. பட்ட பழி - கட்டியங்காரன் சிறை செய்தான் என்று பிறந்த பழி, பரத்தல் - வெள்ளிமலையில் பரவுவதற்கு, தொட்டுவிடுத்தேன் - எவர் பாலும் சொல்லாதபடி சூளுறவு பெற்றுக்கொண்டு விட்டேன். அவன் - தான், பழிகாத்து - பழியை மறைத்து, விட்டலர்ந்த - முறுக்கவிழ்ந்து மலர்ந்த, கோதையவரால் - மகளிரை மணந்துகொண்டு போதலால், விளைவது - விளையக்கூடியதொரு புகழ்.

480. அல்லதுவும் - அன்றியும், ஆற்றாள் - பின்னும் ஒரு பழி விளைப்பாள் போல ஆற்றாளாயினாள். திங்களை ஞாயிறென்றும், ஞாயிற்றைத் திங்களென்றும், பகலிது இரவிது என்றறியாமலும் திகைக்கின்றான் என்பது.

481. வரும் - சீவகன் வருவன், என - என்று கிளி சொல்ல, கிளியோடு நகச் சொல்லும் - கிளிகேட்டு நகுமாறு வினவுகின்றாள். நாளினும் - நாடோறும்.

482. நோக்காது இமைப்பினும் - பார்க்காதே கண்ணை இமைத்தாலும், நுணரும் - மெலிகின்ற, புதுமணவாளனார் - நாளும் புது மணம் புணரும் காதலர். நீப்பிலர் - நீங்குதலின்றி, நெஞ்சின் - நெஞ்சிடத்தே, தாம் தாம் பொன்னடி போற்றி - தாம் தம்மைப் பாதுகாப்பாராக.

483. என்றாற்கு - என்று வினவிய சீவகற்கு, செங்கோலும் நெடுந்தேருமுடைய செல்வனாகிய சச்சந்தன் தேவியென்க. தங்காத் தவவுருவம் - தனக்கு ஏலாத தவவடிவம், ஆங்கு ஆத்து இருந்தாளை - ஆசையால் பிணிக்கப்பட்டுத் துறவிகள் உறையும் அவ்விடத்தே இருந்த அவளை, இனி, தண்டாரணியத்து உளம் காத்து இருந்தாளை என்றும் கூறுப, உளம் - உயிர், “அறிவிக்க அன்றி அறியா உளங்கள்” என்றாற் போல.

484. என்றாற்கு - என்று வீனவிய சீவகனுக்கு, அருளுமாறு இஃதா இருந்தவாறு - நல்வினையாகிய தெய்வம் நமக்கு அருளும் நெறி இருந்தவாறு இத் தன்மைத்து என எய்தா இடர் உளவே - அடையாத துன்பம் வேறே இல்லை, வெய்தா - விரைவாக.

485. மணிமாசு மூழ்கி உலகம் விற்பக் கிடந்தது கழுவினீர் - உலகை விலையாகப் பெறுவதொரு பெருமணி மாசுபடிந்து கிடந்தது, அதனைக் கழுவி வெளியாக்கினீர். சிக்கப் பொதிந்து - அகப்படப் பொதிந்து, தழுவினீர் - கைக்கொண்டீராவீர், வழுவினார் - காவாது இகழ்ந்தவர்.

486. கையினுள்ளும், முடியகத்தும், கண்ணீரினுள்ளும் கலந்தகத்தும் கொல்லும் படை உடனொடுங்கும் என்க. பழுது ஆய்ந்து - பழுதுண்டோ என ஆராய்ந்து, தேற்றம் பற்றாது ஒழிக - தெளிதலைச் செய்யா தொழிக. கண் அரிந்து - அன்பு அறவேயின்றி, விளிகுற்றாரே - உயிரிழந்தாரேயாவர்.

487. பூமாலையைப் புள்ளின் கண்ணிலும், சாந்தத்தைச் சேவலின் முகத்தும் உறுத்தித் தூய்மை கண்டபின்னன்றிக் கொள்ளவேண்டா என்க. உண்ணும் நீரிலும் அமிழ்தத்திலும் தீங்குண்டாகாதவாறு காக்க வேண்டின் கருங்குரங்கிற்கு இட்டு ஆராய்க. அண்ணலம்புள் - அரசவன்னம், குற்றமுளதாயின், அன்னம் கண் குருதி காலும், சேவல் - சக்கரவாகம், இது முகம் கடுக்கும், கருங்குரங்கு உண்ணாது.

488. அஞ்சனக்கோலின் ஆற்றாநாகம் - அஞ்சனக்கோலால் தாக்கினும் உயிர் தாங்குதலாற்றாத சிறு நாகப்பாம்பு, குன்றின் - குன்றுபோல, என்ன

வேண்டா - என்று கருதி இகழவேண்டா. அரும்பொருளாக அஞ்சி - வேறற்கரிய பொருளாகக் கருதி யஞ்சி.

489. பொருந்தலால் - விடாது சேர்ந்திருத்தலால், காத்தும் - இவன்பாலும் சீலம் முதலியன கெடாமல் காத்தும், தீது அற எறிந்தும் - தீதுண்டாயின் அது வேரறக் கெடும்படி இடித்தும், அருந்தினால் - உணவு நுகர்விப்பதில், மதலை - பற்றுக்கோடான சீவகன்.

490. பொறி மயில் - புள்ளிகளையுடைய மயில், இழியும் - இறங்கும், முருகனின் - முருகன் போல, நெறிமை - இழிதற்குரிய முறைமை, மத்திகை - மாவைச் செலுத்தும் கோல்,

வெறுமையினவர் - அறிவில்லாதவர், வெள்ளிடைப்படாத நீரால் - தான் இன்னா னென்பது பிறர்க்குப் புலனாகாத முறையால், அடிகளைச் செவ்வி அறி என்றான்.

491. எல் இருள் - விடியற்காலத்தே, பாங்கர் - நல்ல இடம், பட்ட - ஒலித்தன, சொல்லினள் - முற்றெச்சம், சேர்ந்து தொழுது அடிபணிந்து என்க, நம்பி - சீவகன், நம்பி, நம் என்னும் முதனிலையாக நமக்கு இன்னானென்னும் பொருள்பட வருவதோர் உயர்ச்சிச் சொல்.

492. எங்கணான் - எவ்விடத்தே யுள்ளான், என்ன - என்று சீவகன் சொல்லி, வில் - ஒளி, கடகம் - வீரரணியும் கையணி, முன்னீர் - முன்னைய தன்மை, அஃதாவது பிறர்க்கு இன்னாரென்பது புலப்படாத வகையில் ஒழுகும் தன்மை, அற்பு அலைகடல் - அன்பாகிய அலைகடல்.

493. காதல் - மகன்பாற் சென்ற அன்பு, வாளை ஆம் நெடிய கண்ணாள் - வாளை நிகர்க்கும் நெடிய கண்களையுடைய விசயை, ஐயா - ஐயனே, முன்பு தாள் செய்த - முற்பிறப்பிலே முயன்று செய்த, விளைவு - பயன், தோள் அயா - தோள் வருத்தம், அரசனைக் கோறலின் வாளையொக்கும் நெடிய கண்ணாள் என்று விசயைக்குப் பெயராயிற்று. வயிற்றிற் சுமந்த வருத்தம் உண்டு, பெற்றபின் தோளிற் சுமக்கும் வருத்தம் நுகராமையின், தோள் அயாத் தீர்ந்தது என்றாள்.

494. வாள் திறல் - வாட்போர் வன்மை, குரிசில் - சச்சந்தன், காட்டகத்து - சுடுகாட்டில், கயத்தியேன் - கொடியேன், சேடு - பெருமை, பருதி மார்பு - பருதிபோலும் மார்பு, ஊட்டாக்கு….தாமரை - இயல்பாகவேயுள்ள செம்மை நிரம்பாமையின் செவ்வரக்கு ஊட்டப்பட்டதொரு தாமரைப் பூ. அடிநோவ, கயத்தியேற் காணவந்தீர் என இயைக்க.

495. கெடலருங் குரைய கொற்றம் - கெடாத கொற்றம், (அரசன்), குரைய - அசை, நடலையுள் - மிக்க வருத்தத்திலே, நட்புடையவர்கள் - சச்சந்தன் நண்பரும், சீவகன்

தோழன்மார்களுடைய தந்தையருமாகியவர், இடை…. மரத்தினேன் - இடையன் தழை கழித்த துன்புற்ற மரத்தின் தன்மையுடைய யான், (பழமொழி.314 பார்க்க) உயிருட னிருந்தும் பகைமை வென்றேனுமில்லை, உயிரை நீத்தேனுமில்லை என்றற்கு இன்னா மரத்தினேன் என்றான்.

496. ஒளவை - அன்னை, பால் நிலத்துறையும் தீந்தேன் அனையவாய் - பாலிடத்தே சொரிந்து கலந்த தேன்போன்றனவாகிய, அமிர்தம் ஊற - இனிமையூறும் சொற்களை, நலம் - அழகு, நோக்கி - கண்களையுடைய விசயை.

497. சிறுவன் - மகனாவான், ஐயன், அண்மைவிளி, மருங்கு - பக்கம், புனக்கொடி - விசயை, இனத்திடையேறு - ஆனினத்தின் இடையே நின்ற காளை, இன் அளிவிருந்து - இனிய தண்ணளியாகிய விருந்து.

498. நிலத்தின் நீங்கி - நமக்குரிய நாட்டிலிருந்து நீங்கி, தேய்ந்து - குறைந்து, குன்றிய - தாழ்ந்த, கொள்கையம் - நிலையில் உள்ளோம், கலைக்கணாளரும் - அமைச்சரும், வலித்தது - துணிந்த செயல்.

499. இடிக்குரல் - இடிபோன்ற முழக்கம், பொருவதென்றால் - போர் செய்யலுறின், ஆங்கு சூழ்ச்சியும் துணையும் என்னாம்? வேண்டா என்பது கருத்து, பரிவு - வருத்தம், அவன் பாம்பு, கலுழன் நந்தட்டனாரும், சொரிமதுச் சுரும்புண் கண்ணி - சொரிகின்ற தேனை வண்டுண்ணும் கண்ணி, கண்ணியும் கழலுமுடைய நந்தன் என்க.

500. கிளரொளி வனப்பினானை - விட்டு விளங்குகின்ற ஒளி பொருந்திய அழகிய நந்தட்டனை, கலுழ - மனமுருகும்படி, கவிகெழு நிலத்தை - துன்பம் செய்யும் கட்டியங்காரனாளும் ஏமாங்கத நாட்டை (நினக்குத் தந்து), காளை - சீவகன்.

501. செம்மல் - விளி, உன் சீர் தோன்றவே நின் மாமன் அகம் மலரும் என்க, சொல்லினோடு - சொல்லும் வகைப்படியே, பார் தோன்ற - பார் நின்னாலே விளங்க, நின்ற - நிலைபெற்று நின்ற செறற்பாலை - கொல்லும் பான்மையுடைய, சொல்வாயாக என்பது.

502. நன்று - கூறியது நன்று, வலித்தேன் - துணிந்தேன், அப்பதியுள் சென்று - இராசமாபுரத்திற்குச் சென்று, எமர்க்கு - என் சுற்றத்திற்கு, உண்மை - இருந்தபடி, நீம் - நீயிர், நும் என்னும் சொல் நீயிர் என முழுவதும் திரியாது மகரம் நிற்பத் திரிந்து நீள் என நின்றது, ஏகாரம், பிரிநிலை, வென்றிக் களிற்றானுழை - மாமனாகிய கோவிந்தரா சனிடத்து.

503. கனைகதிர்க் கடவுள் - ஞாயிறு, கண் விழித்த - உலகம் கண்விழித்த, தாமரை நக்க - தாமரைப் பூவை யொத்த, பூ மழை பெய்து என்க, பூவால் அருச்சித்து என்றவாறு, முனைவன் - அருகன்.

504. நாட் கடன் - நாட் காலத்தே செய்யும் கடன்கள், வாள்கடி - ஒளிமிக்க, வண்மை - வளம், காணிய - காண்பதற்கு, தொய்யில் மாதரார் - தொய்யிலணிந்த மகளிர், வேட்பது - விரும்புவது.

505. வேல் நெடுங் கண்கள் - வேல்போல் நீண்ட கண்கள், விற்படை சாற்றி - புருவமாகிய வில்லை அமைத்து, தேம் - தேன், எய்ய - கண் பார்வையாகிய அம்மை எய்ய, பார்க்க என்றவாறு, மான் நெடும் மழைக்கண் நோக்கி - மான்போன்ற நீண்ட குளிர்ந்த கண்ணும் பார்வையுமுடைய விமலை, பால் நெடுந் தீஞ்சொல் - பால்போலும் பெருமை பொருந்திய தீவிய சொல், நோக்கியும், ஒப்பாளும் சொல்லாளுமாகிய ஓர் பாவையென்க.

506. கரந்த - மறைந்த, கைத்தலத்தவாம் - கையிடத்தவாம் முகத்திடத்தே வந்த பந்து குழற் புறத்தவாம், நூலின் நேர் நுசுப்பு - நூல் போல நுண்ணிதாகிய இடை, உச்சி மாலையுள்ளவாம் - உச்சியிற் போன பந்து மீண்டும் மாலைக்குள்ளதாம், மீ நிலம் - மேல் நிலம்.

507. களிவண்டு, மாலையை மொய்த்து, தீந்தேனை யுண்டு மகிழ்ந்து, காந்தாரம் செய்து, முரன்று பாட, பந்திலே ஆர்வம் செய்து, திருவின் உருவெய்தி நின்ற விமலை, சீவகனைக் காண்டலால், கண் பரப்பி நின்றாள் என்க. முரன்று - இசைத்து, திருவின் உரு - திருமகளின் வடிவு.

508. திங்கள் மணி - சந்திர காந்தக் கல், ஓங்கி - வளர்ந்து, தண்துவலை மாந்தி - குளிர்ந்த நீர்த் துளியையுண்டு, கார் - பசுமை, கொடி - கொடியையொத்த விமலை, காண்டலோடு - கண்டவுடனே, பீர் தங்கி - பசலை பூத்து, பெய்யா மலரின் - பழம் பூப் போல (வாடிய பூ), பிறிதாயினள் - உள்ளமும் மேனியும் வேறுபட்டாள்.

509. பூவுண்ட கண் - பூப்போலும் கண், எய்ய - கண்ணாகிய அம்பை எய்ய, ஏவுண்ட நெஞ்சு - அம்பால் தைப்புண்டு புண்ணுற்ற நெஞ்சு, மாவுண்ட நோக்கின் - வண்டொத்த கட்பார்வையால், மறித்து - மீண்டும், கோவுண்ட வேல் - பகைவரது தலைமையைக் கெடுத்த வேல், குழைந்து - மனம் கலங்கி.

510. மகர குண்டலம் - மகர மீன் வடிவாகச் செய்த குழை, கொங்குண் குழல் - தேன் நிறைந்த கூந்தல், கோட்டெருத்தம் - சாய்ந்த கழுத்து, தோன்றுமே - தோன்றுகிறதே என்றான்.

511. திருமல்க வந்த திரு - செல்வம் மிகுமாறு வந்த திரு, சீவகனைத் திருவேயென்றான், உவப்பின்கண் வந்த பால் மயக்கம், வேலாய்க்கு - வேலையுடைய நினக்கு, செரு மல்கு வேல் - போரில் வெற்றி நிரம்ப நல்கும் வேல், வரி மல்கி…. கண்ணி - வண்டுகள் மதுவையுண்டு வரியென்னும் பண்ணை அறைகின்ற கண்ணி, மாமன் - சாகரதத்தன்.

512. ஏற்ற கை… வீழ்ந்தென - எடுத்த கையிலே ஒரு தொடிதானே வந்து வீழ்ந்த தன்மைபோல, திருமா நலம் தேற்றினான் - நின்வரவு திருநலம் சூழ்க என்று தேற்றினான். தோற்ற மாதர் - வேட்கையால் உயிர் நீத்தற்கு அமைந்த விமலை, நலம் சூழ்க என்று தந்தை கூறியதைக் கேட்டலின், ஆவியும் தாங்குவாளாயினள்.

513. நீள் நகர் - நெடிய பெருமனை, பல்லியம் - பல்வகை மண வாச்சியங்கள், இம்பர் - இவ்வுலகில், இன்பம் - திருமணம்.

514. கட்டில் - திருமணக் கட்டில், காமரு - அழகிய, மட்டு - தேன், வீவிலார் - கெடுதல் இல்லாதவர், ஒட்டி - ஒன்றுபட்டு, உயிர் ஒன்றெனவே மனமும் ஒன்றாதல் பெற்றாம்.

515. குழலும் அல்குலும் மேனியும் உடையாய் என்க. பொன்னால் செய்யப்பட்டு உயர்ந்த மேகலை, மாவினுள் தாழ் தளிர் - மாமரத்திடத்தே தளிர்ந்த தளிர், மருட்டும் - ஒக்கும், போதர்வேன் - மீள்வேன், தாழ்சிலையெறிந்த கோலின் என்றதனால், தூரிதன்றி, அணியவிடத்தே போய் வருவேன் என்றான் என்று அவள் கருதினாள், வலியில்லாத அம்பு இலக்கிற் பட்டுவைத்து மீண்டும் வந்ததேனும் எய்தவனிடத்து வாராது மாறிப்போமாறு போல, யானும் நின்னிடத்து வாராது இந்நகரிலே மீண்டு வருவேன் என்று அவன் கருதினான்.

516. எழுது கண் - மை தீட்டிய கண், நின்ற நீர் - ததும்பி வீழாது நிறைந்து நின்ற கண் நீர், தெருட்டி - தேற்றி, கொடியவள் - கொடி போல்பவளாகிய விமலை.

517. உடைய்ய, ஐய்யன், குரவ்வர், அரவ்வ என்பன விகாரம், ஐயன், அம்பு ஐந்துடைய காமன் என்க, என்ன - என்று வியந்தாராக, அந்தணன் - புத்திசேனன், நம்பும் நீரர் - விரும்பும் அழகுடையர், குரங்கு நீரர் - குரங்கின் தன்மையுடையர், குரவர் - பெற்றோர், தாழ்வர் - வழிபடுவர், அரவ அல்குவார் - பாம்பின் படத்தையொத்த அல்குலையுடைய மகளிர்.

518. அற்றும் அன்று - அத்தன்மையதும் அன்று, அணிநலம் முற்றினார் - பெண்மை நலம் முற்றும் கனிந்தவர், நீடு வைப்பன் - நெடுநாள் மணம்புரியாது செறித்துவைப்பின், மூள்கும் - மூண்டுவிடும், குற்றம் - குடிக்குப் பழி, சூழ்ந்து - மகட்கொள்ள நினைந்து, உற்று அடுத்து - சென்று கொடுத்து, அயர்வுயிர்த்தல் - இளைப்பாறுதல், ஒக்கும் - ஒத்ததாம்.

519. நயந்து நாடிக் கேட்பினும் - விரும்பி நாடிக் கேட்பினும், வீடுவல் - விடுவேன், செல்வி - செல்லமகள்.

520. கனன்று காண்கிலாள் - வெகுண்டு கண்ணெடுத்துப் பாராள், வேம் - வேகும், வேய்கொள், தோளி - மூங்கில்போலும் தோளையுடைய இவளை, ஏமறுத்து - மயக்கி, எந்தையை - எந்தையாகிய நின்னை, உயர்த்தற்கண் வந்தது. அனங்கனுக்குத் திலகன் என்பேம், மா, அசைநிலை.

521. வண்டும் தேனும் சிலைக்கு நாணாக, மலர்கள் அம்பாகக் கொண்டவன் என்க, இவன் காமன், கோட்டம் - கோயில், கொடி - சுரமஞ்சரி, நீலமுண்டது காற்றி - நீலமூட்டிய நூல் பிறவண்ணம் ஏலாதாயினும் ஏற்பித்து, அவள் புதிதாகக்கொண்ட இக் கோட் பாட்டை நீக்கி, ஆண்பேர் ஊட்டுவல் - ஆடவர் பெயரை ஏற்கச் செய்வேன், காமன் கண்ட பொற்படிவம் - காமன் வடிவாகச் செய்த பொற்சிலை.

522. சில அரிக் கிண்கிணி - சில பரல்களைப் பெய்த கிண்கிணியென்னும் அணி, சிலம்பும் - ஓலிக்கும், வாயில் - வழி, அல்லலங் கிழவன் - பசித்துன்பம் உற்று வருந்தும் முதியோன், செல்லல் - செல்வதே, சேரும் வாயில், யான் செல்லல், தெளிதகவு - அவள் ஐயுறாமல் ஏற்றுக்கொள்ளும் தகுதிப்பாடு.

523. அணங் கரவு - நஞ்சுடைய பாம்பு, வணங்குவோன் சிலை - வளைந்த வலிய வில், பிணங்கு - மேலாடையுடன் பின்னிக் கிடக்கும், பெரிது ஓர் பொத்தகம் - மூப்பு வடிவ மெழுதுதற்குரிய நெறி முற்றும் எழுதப்பட்டதொரு புத்தகம், மூப்பு எழுதினது ஒப்ப - மூப்பை எழுதியதுபோல.

524. (இப்பாட்டு, சில பிரதிகளில் இல்லை) எற்று - இரக்கம் பொருட்டு, இரங்கி நோக்க - மனமிரங்கிப் பார்க்க, பொற்றொடி - சுரமஞ்சரி, நகர் - கன்னிமாடம், பைய - மெல்ல, என்ப, அசை.

525. வலியாக - பற்றுக்கோடாக, ஏங்கி - இளைத்து நின்று, இளங்கால் - இளமைக் காலத்தில், பாலடிசில் - பாற் சோறு ஒன்றையே, நயந்தார் - என்னால் விரும்பப்பட்ட மகளிர், தருவ - தருவனவெல்லாம், கேட்ட காவலர், இவன் தன் பசியையே கூறினன் என்று உணர்ந்தார், கண்டு…. காதலிப்பன் - இப்பொழுது என்னைக் கண்டு நயந்தவர் தரும் உணவைக் கொள்வேன், இது வெளிப்படை.

526. ஞிமிறு பொங்கி யார்ப்ப - வண்டுகள் எழுந்து ஒலிக்க, ஓதமணிமாலை - கடலிற் பிறந்த முத்துமாலை, ஓடிவந்து, என, உரையிலான் என முடிக்க, இது ஏதம் - இவ் வரவு குற்றம், என - என்று சொல்லி விலக்க, என்னும் - சிறிதும், உரை - மறு மொழி, ஊத உகு தன்மை - வாயால் ஊதிய வழி ஆற்றாது கீழே விழும் மென்மை, ஒல்கி - தளர்ந்து, உற - மிக நெருங்கி.

527. இது பாவம் - நோவவுரைக்கும் இது பாவமாதலால், தொடின் - தீண்டித் தள்ளுவேமாயின், ஓவியர் தம் பாவை - ஓவியர் அரிது முயன்று எழுதிய பாவை, ஒப்பரிய - ஒப்பாகமாட்டாத.

528. அடிய - அடியிடத்தனவாகிய, குறிப்புப் பெயரெச்சம், சிலம்ப - ஒலிக்க, மிழற்ற - கலீர் என ஒலிக்க, சேறு - தேன், திசைபாட - திசைதோறும் எழுந்து பாட, நாறும் - மணம் கமழும், கொம்பர் - கொம்பு, கற்பதென - கற்கின்றதுபோல, துகிலின் உள்ளும் புறமும் கிடந்து அசைதலின், வேறுபடு மேகலை யென்றார்.

529. என - என்று சுரமஞ்சரி கேட்ப, திருநீர்க் குமரியாட - அழகிய தன்மையையுடைய நின்னைக் கூட, அழகிய நீரையுடைய குமரியாற்றில் நீராட (இரு பொருள்), அந்தில் - அசை நிலை, ஆய பயன் - குமரியாற்றில் நீராடலால் உண்டாகும் பயன், முந்தி நலிகின்ற - வருங்காலத்து வாராது முன்பே வந்து வருத்துகின்ற, முந்தி - நின்கண் முன்னாக - (வேறு பொருள்), முது மூப்பு - மிக்க முதுமை.

530. நறவுஇரிய - பூமணங்களெல்லாம் தோற்க, பெரிது - மிகவும், பெறுநர் பிறரும் உளரோ - இவ்வாறு குமரியாடி இளமையைப் பெறுவார் பிறர்தாமும் உண்டோ, பேணி - ஆராய்ந்தறிந்து, துறையறிந்து - மூப்பைப் போக்கும் நெறி, நீ கொண்ட கொள்கையைக் கெடுத்துக்கூடும் துறை இம் மூப்பு வடிவந் தாங்கிவந்து கூடுவது என்பதையறிந்து - இது சீவகன் கருதும் பொருள், என நீவிர்தான் இதனை அறிவீர்போலும் என்று இகழ்ந்து கூற.

531. வடிவம் இது மூப்பு அளிது - இம் முதுமை வடிவம் நம்மால் அளிக்கத்தக்கது. வார் பவள வல்லிக் கடிகை - ஒழுகிய பவளக்கொடியினது துண்டம், துவர் - சிவப்பு, வாய், கடிகை எனவும், கண்ணும் அடியும் கமலம் எனவும் இயைக்க, கொடிது - நாம் அளி செய்யாவிடின் கொடிதாம், கோல் - திரட்சி, கடிது - விரைய.

532. வல்லது - கற்று வல்லது, என்ன - என்று சுரமஞ்சரி வினவ, மறை - வேதம், மறைந்து உருமாறி வருதல், யான் என்றானாக என முடிக்க, எல்லை - கற்றதன் எல்லை, என்ன - என்று மேலும் வினவ, பொருள் எய்தி முடிகாறும் - நினைத்த பொருள் முடியும்வரை, மறை கூறும் மூடி பொருள் முற்றவுணர்த்த உணரும் எல்லை - இது சுரமஞ்சரி கொண்ட பொருள், சொல்லும், ஏவற் பொருண்மைக்கண் வந்த உம்மீற்று முன்னிலை முற்று வினை, காலம் - காலவெல்லை, சில்லென் கிளிக் கிளவி - சிலவாகிய கிளிபோலும் சொற் களையுடையாய், சிந்தை - நினைவு.

533. இன்னவர்கள் - இத் தன்மையுடையவர்கள், அமர்ந்து - விரும்பி, போகு திறம் பேசும் - மனையினின்றும் போய்விடுமாறு சொல்லுவள், தன்னம் சிறிது - மிகவும் சிறிது, துயின்று தாழ - தூங்கினான்போலத் தலை தாழ்ந்து விழ.

534. கோல மணி - அழகிய முத்து, சாமி - சீவகன், முகம் - சுரமஞ்சரியின் முகத்தை, காலும் மிக - வாடைக்காற்று மிகுவதால், நேரம் - நெஞ்சு வருந்துகின்றது, கண் - பொழுது, துயில்குற்றேன் - சாக்காடு எய்தியுள்ளேன், காலும், நோகும், கண்ணும் துயில்கொள்ளும் என்று சீவகன் கூறியதாக அவள் கருதினாள், என் செய்கு - என் செய்வேன்.

535. அமளிப்பூவணை - அமளியாகிய பூம் படுக்கை, முன்னிய - கருதியிருந்த, மன்றல் - கந்தருவ மணம், மன்னும் - நிலைபெற்ற, முரன்றான் - பாடினான்.

536. கள்ள மூப்பின் - பொய்யான முதுமை வடிவையுடைய, வீதியே - வழியாக, வள்ளி - கொடி, தடங்கண் - பெரிய கண், புள்ளுவ மகன் - புட்களைப்போல ஓசையெழுப்பி அவற்றைப் பிடிக்கும் பறவை வேட்டுவன், மதி புணர்த்த - அறிவால் எழுப்பிய, புகன்று - விரும்பி, குழாத்தின் - கூட்டத்தைப்போல.

537. இளையவற் காணின் - முதியோனாகிய என்பால் இவ்வண்ணம் ஓடி வரும் நீவிர் இளமை நலம் மிகவுடையான் ஒருவன் வரக் காண்பீராயின், என்ன - என்று சீவகன் சொல்ல, மது விளை கண்ணி - தேன் சொரியும் கண்ணி (தலையிலணியும் பூத்தொடை), விளிக - நெடுக, அவர் பெயர் இங்கே நில்வாது கெடுக. முளையெயிற்றிவளை - முளைபோலும் பற்களையுடைய இச் சுரமஞ்சரியை, பிறிது அவ்வினையோர் செய்த வேறு தீங்கு, உளைவது - வருந்துவது.

538. வாய்ந்த - வாய்த்த, விகாரம், செய்த என்பது பொருள் தீயானாகிய அக் காளை, என்ன - என்று சீவகன் சொல்ல, அறிந்தனம் - தெளிந்துகொண்டோம்.

539. ஒட்டி - பொருந்தி, அடித்தி - சுரமஞ்சரி, மூத்த அந்தணனாதலின், தலைவியை அடித்தி என்றனர், முன்பட்டது - ஆடவரைக் காணேன் என்று கொண்டிருந்த கொள்கை, முகவியர் - முகங்கொடுத்துப் பேசி, முனிவு - ஆடவர்போல் இருந்த வெறுபபு, பொன் தொட்டேன் - தலைவிபேரால் ஆணையிட்டேம், போகொட்டேம் - போகவிடேம், இலங்கு - விளங்குகின்ற.

540. தேவகீதம் - தேவனால் கற்பிக்கப்பெற்ற பாட்டு, அரசன் - சீவகன், குடகம் - கைவளை, செருக்கிய - மயங்கிய, மஞ்ஞை - மயில், ஆடகம் - நால்வகைப் பொன்னில் ஒருவகை, மாடம் - காமன் கோயில், வரம் - இப்பாட்டையுடைய சீவகனைப் பெறுதற்குரிய வரம்.

541. ஒரு மடந்தை, மணியும் தாரும் கண்ணியும் புனைந்து, பட்டம் சேர்த்தி, பால் ஊட்டி, பாண்டில் பண்ணிக்கோல் கொள்ள என்க. வெறுப்ப - மிகவும், பாண்டில் - வண்டி, இன்னியல் பாவை - இனிய இயல்பையுடைய பாவை போன்ற சுரமஞ்சரி, ஏற்ப - ஆடவர் காணாமல் போவதற்கு ஏற்ப.

542. இரிய - நீங்க, வள்ளலை - சீவக வேதியனை, சூடு அமைமாலை - சூடுதற்கமைந்த மாலை, திருமகள் - சுரமஞ்சரி.

543. தாமரை போலும் கண்ணும் வாயும் பொற் குழையு முடையாய், காமம் - வரம், அகலம் - மார்பு, மணி மகரம் - மணி புனைந்த மகரக்கொடி, ஈவல் - தருவேன்.

544. மட்டவிழ் கோதை - தேன் சொரியும் பூமாலையை யுடையாய், இட்டிடை - நுணுகிய இடை, தோழன் - புத்திசேனன், பட்டிமை - வஞ்சனை, பரவி - பின்னும் தொழுது.

545. அடி இறை கொண்ட - காலிலே அணியப்பட்டுக் கிடக்கின்ற, கடி யறை - மணவறை, வடியுறு கடைக்கண் - மாவடுபோலும் கடைக்கண், துட் கென்ன - துண்ணென், நொடியுற ஒசிந்து - நொடிபோலத் தளர்ந்து.

546. கோட்டி - சாய்த்து, அலங்கல் - மாலை, ஒளி கான்று - ஒளி விட்டு, வில் - ஒளி, நலம் - அன்பு, நாம வேல் - அச்சந் தரும் வேல், காமர் - அழகு.

547. தேறினேம் - தெளிந்தேன், நாகு - இளம் பசு, விடை - காளை, புல்லி - புல்ல, கோல் - அம்பு, தார் குழைந்து - மாலை குழைந்து, திவண்டது - வாடிற்று.

548. இறங்கிய மாதர் - நாணித் தாழ்ந்த சுரமஞ்சரி, எரிமணிக் கடகம் - ஒளிதிகழும் மணிவைத் திழைத்த கடகம், குறங்கு - துடை, அறம் தலை நீங்க - அறம் கெட்டொழிய, சேரேனாய் விடின் - கூடா தொழிவேனாயின், செல்க - இனி நீ செல்வாயாக.

549. மணி செய் ஆழி மெல் விரல் - மணி யிழைத்த ஆழியணிந்த மெல்லிய விரல், விதியின் - விதியாதலால், நிற்ப - சுரமஞ்சரி பணிந்து நிற்ப, மிழற்ற - ஒலிக்க, ஒல்கி - அசைந்து, அல்குற் காசு - மேகலை, ஆயம் - தோழியர் கூட்டம்.

550. ஐயற்கு - சீவகனுக்கு, உரைத்த மாற்றம் - சீவகன்பொருட்டு, மகள் கேட்க வந்த சான்றோர் சொல்லிய சொல். நாய்கன் - வணிகனான குபேரதத்தன், வெய்ய…. தேற்றான் - வெய்ய தேனை வாயிடத்தில் கொண்டால் நஞ்சென்று விழுங்காமலும், இனிமையால் உமிழாமலும் இருப்பதுபோல இவன் விரதத்தால் உடம்படாமலும் சீவகனாதலின் மறாமலும் இருந்தான். நோற்றிலாதேன் - நல்வினையில்லாத யான், மையல் கொண்டு - மயங்கி, மதியில் சூழ்ந்தாள் - அறத்தொடு நிற்க நினைத்தாள்.

551. கிளைக்கெலாம் - சுற்றத்தார்க்கெல்லாம், வேட்பன - விரும்பப்படுவனவாகிய, கோள் குறைவின்றி - கொள்ளக் குறைவின்றி, குழும் இயம் - பலவாகிய வாச்சியம், நாட் கடி - நல்ல நாளில் மணம் செய்து.

552. தாங்கல் - தாங்குவாயாக, அது பொருள் - அஃது அருமையுடைய பொருள், வேண்டிற்று - வேண்டியது எதுவோ அது தவிர, ஒருமை - ஒரு நெறிப்பட்ட, சென்றேன் - ஒழுகினேன்.

553. மிடைந்த - செறிந்த, தேங் கொள் - இனிமை கொண்ட, வடுப் பொறிப்ப - வடுவைச் செய்ய, புலம்ப - தனிமைப்பட, வைகேன் - பிரிந்திரேன், வாள்மிடை தோழர் - வாளேந்திய தோழர்.

554. பரிந்து - அன்புற்று, நைய - வருந்த, ஒன்றும் கவலல் - சிறிதும் வருந்தாதே, நாவி - கத்தூரி, இவளைத் தீண்டிச் சீவகன் கொலையுண்டான் என்று உலகம் கூறலின் தீவினையுடைய என்னை என்றாள். தான் விலக்கவும் இவன் தீண்டலின் பின்னும் வேண்டா என்றாள். இவளைப் பெற்று வைத்தும் இங்ஙனம் நீக்கிக் கூறவேண்டலின் பாவியேன் என்றாள்.

555. இளையவள் - குணமாலை, துயிலமர்ந்து - கூடியிருந்து, விளை பொருள் - மேல் முடியத் தகுவனவற்றை, வாமான் வாணிகன் - தாவும் குதிரை வாணிகன்.

556. அள்ளிலை - செறிந்த இலை, அளிந்து - நன்கு பழுத்து, புள்ளி வாழ் அலவன் - புள்ளி பொருந்திய நண்டு, கமஞ்சூல் நெண்டு - நிறைந்த சூல் கொண்ட பெடை நண்டு, பள்ளி - இடம், பணித்து - மிதித்து, வழிபட - வழியுண்டாகுமாறு, படப்பை - தோட்டம், வயலுமாம், விடுத்தார் - ஆள் விட்டார், அலவன் நெண்டுக்குச் சுளை முதலியவற்றை உற்று, நோய் தணிப்பான் வழிபடக் குறைக்கும் படப்பையையுடைய விதையம் என்க.

557. மின் நோய் வரை - முகில் தவழும் மலை, வென்றோன் - அருகன், புகுதக - புகுதுக, ஒரு சொல், நகரம் - நகரில் உள்ளவர்.

558. துளங்கொளி மாடத்து - ஒளி விளங்குகின்ற மாடங்களின், உளங்கழிந் துருவப் பைந்தார் - மார்பிடத்தே கிடந்து அழகு செய்யும் பசிய மாலை, இளங்கதிர்ப் பருதி - இளஞாயிறு, இறுவரை - எழுந்து தங்கும் மலை.

559. போது - பூ, கருமழைத் தடங்கண்கள் - கரிய குளிர்ந்த பெரிய கண்கள், பூமலர்க் கோதை - இலக்கணை, மூழ்கிப் புக்கு - புக்கு மூழ்க என இயைக்க, அவள் நெஞ்சிலே புகுந்து மறைய.

560. மை தோய் வரை - முகில் தவழும் மலை, பெய்தாம மாலைப் பிடியின் - பெய்யப்பட்ட பொன்னரிமாலை யணிந்த பிடியின்மேலிருந்து, கொய் தாம மாலை - கொய்த ஒழுங்குப்பட்ட மாலை, மன்னர் முடி தேய்த்திலங்கும் கழலைத் தொழுது சென்னி சேர்த்தினான் என்க.

561. குவட்டின் - குவடுபோல, செங்கண் முத்தம் - செங்கண்ணில் சொரிந்த நீர்த்துளி, விரை மார்பம் - மணம் கமழும் மார்பு.

562. ஆனாது - அமையாது, தானாது மின்றி - தானென்கிற தன்மை யாதுமின்றி, கண் பெய் மாரி - கண்களிற் சொரிந்த கண்ணீர், சிலம்பில் சிலம்பும் - மலையிடங்களில் ஒலிக்கும், கணம் - கூட்டம், அழவுற்றது - அழுதது, கோயிலெல்லாம் கலுழ்வுற்றது என்க.

563. நரம்பு இசை பகையும் கேளா - நரம்பிசையில் பகையும் கேட்டறியாத, நலம் வகை வாடி - நலத்தின் வகை பலவும் வாடி, முந்நீரகம் - கடலிடம், கோக்கு - கோவிந்த ராசனுக்கு, மிகை நலத் தேவி - மிகையாகிய குணத்தையுடைய தேவி, விலாவணை - அழுகை.

564. நாள் உலந்தவர்க்குத் தோன்றாது ஒளிக்கும் மீன் - வாழ்நாள் அற்றவர் கண்ணுக்குத் தோன்றாது மறையும் அருந்ததி மீன், குளிக்கும் - தோற்கும், புலந்த வேல் - சினக்கின்ற வேல், புதவி - கோவிந்தராசன் மனைவி, நம்பி - சீதத்தன், குலந்தருதல் - புதல்வரைப் பயந்து மேலும் குலத்தை வளர்த்தல்.

565. மாற்றவன் - பகைவனான கட்டியங்காரன், ஒற்றாவகை - ஒற்றியறியாதவாறு, ஆற்றின தோழர்க்கு - உதவியாகிய தோழன்மார்க்கு, வேண்டூட்டு அடிசில் - தாம் தாம் விரும்பும் பொருள்களையுடைய அடிசில் ஏற்று உரி - ஏற்றினுடைய தோல் போர்த்த, நீ கொன்ற சீவகன் தோழர்க்குக் கோவிந்தன் சிறப்புச் செய்தானென்று ஒற்றர் கட்டியங் காரனுக்குக் கூறினால் மேல் உறவாகி யாம் கொலை சூழ்கின்றது தவறுமென்று கருதி மறையக் கொடுத்தான். சீவகன் குதிரை வாணிகன் வேடத்தில் இருத்தலால் அவனை ஒற்றர் அறிவது முடியாது.

566. பொய்ப் பழி புதையப் பரந்தது - பொய்யாக ஒரு பழிமுழுதும் பரந்தது. பொழில் - உலகம், சிதையப் போழ்ந்து - சிதையும்படி பிளந்து, தெளிப்பினும் - தெளிவித்தாலும்.

567. அளியன் - இகழ்ச்சிக் குறிப்பு, விளிக்கும் - அழைக்கின்றான், நூல் வலீர் - நூல் பலவும் கற்ற வல்லோர்களே, நுண்மதிச் சூழ்ச்சி - நுண்ணிய மதியால் செய்த வஞ்சம், ஈது - நட்பாய்ப் போதுகின்ற இது, பூணான் - சீவகன்.

568. உள்ளத்தால் உமிழவேண்டா - உள்ளத்திலிருந்து எவரும் வெளியே புலப்படுத்த வேண்டா, உறுபடை - மிக்கபடை, வள்ளுவர் முரசம் - வளவிய வார்க்கட்டமைந்த முரசு, வள்ளுவர் முடிக்கும் முரசு எனினுமாம்.

569. போகமகளிர் - உரிமை மகளிர், மன்னற்கு ஆகம் ஒளி மழுங்கிற்று - கட்டியங் காரனது மேனி ஒளி கெட்டது. பகற் குழற - பகற்போதிலே கூவ, பாடலிந்து - ஒலி அவிய, மாசும் - விண்ணின்று, நெய்த்தோர் - குருதி, சொரிந்து - சொரிய.

570. பெருமகன் - கோவிந்தராசன், பித்திகைப் பிணையம் - பித்திகைப் பூவால் தொடுத்த மாலை, பித்திகை - பிச்சியென்னும் ஒரு வகைப்பூ, இது பித்திகம் எனவும் வழங்கும். பைங்காற் பித்திகத்தாயிதழலர் (குறிஞ்சி) என வருதல் காண்க, போகொடாத - போகவிடாத, பாலான் - கணவனாவான், அருமகன் - அரிய ஆண்மகன்.

571. காரின் - மழை முகில்போல, போரின் - போர்த்தொழிலால் - புகை வாள் நெருப்புப் புகையும் வாள், சீரின் - சீரோடு, நீரின் முழங்க - நீர்மையுடன் முழங்க, நீல யானை - கரிய யானை.

572. கல்லார் மணி - கல்லிடத்தே பெற்ற மணி, வில்லார் கடலந்தானை - வில்லேந்திய கடல்போலும் தானை, ஒல்லான் - மனம் பொருந்தாமல், புல்லான் - தான் நிற்கும் முறைமையில் நிற்கமாட்டாது, உயிர் - அறிவு, புலம்பி - உளைந்து.

573. இறாத - முறியாத, திருந்தினார் - முனிவர், சுருக்கி - வில்லுள்ளேயாகும்படி தொடுத்து, மாறாய் இருந்தவன் பொறி - கட்டியங்காரனது நல்வினை, இயல்தரும் பொறி - திரியும் பொறி, ஒருங்குடன் - ஒரு சேர, ஊழித் தீயுரும் - ஊழித்தியும் இடியும், தவக்கிழமை - தவம் தன் பயனைத் தரும் உரிமை.

574. ஏனம் - பன்றி, ஏவுண்டு - அம்பால் அறுப்புண்டு, தெண்திரை - தெளிந்த அலையையுடைய கடல், உலம்புபு - முழக்கஞ்செய்து, குலம் பகர்ந்து அறைந்து - சீவகன் குலத்தை முதற்கண் கட்டியங்காரனுக்கு உரைத்துப் பின் ஏணையெல்லோருக்கும் அறிவித்து.

575. அலங்கல் - மாலை, கான் - மணம், வேல் மிடை சோலைவேழத்து - வேலாகிய சோலையில் நிற்கின்ற யானையினுடைய, இன்னுயிர் - தன்னையொழிந்த மற்றையோர்க்குத் தீதாய் நிற்கும் உயிர், ஒருவன் - இயக்கன்.

576. வெம்படை - கொடும்படை, அறியாய் - நீ யறியாய், நின் தந்தை அறிவன் என்றவாறு, வீக்கு - பெருமை, வஞ்சனை - வஞ்சனையாக வருவித்த கோவிந்தராசனை, அறுத்திடுக - அறுத்திடுவேன்.

577. சூரிய காந்தம் - சூரிய காந்தக் கல், ஆர் அழல் - அரிய தீ, பேரிசையான் - சீவகன், இசை - வெற்றி, கார் இடி - கார் மழையில் முழங்கும் இடி, கனன்றான் - வெகுண்டான்.

578. காற் படை - காலாட்படை, கலிமா - கலிக்கின்ற குதிரைப் படை, நூல் படு தேர் - நூல்வழிப் பட்ட தேர், நொடிப்பு - ஒரு நொடிப்பொழுதில், நூற்றுவர் - கட்டியங்காரன் மக்கள் நூற்றுவரும், முற்றும்மை தொக்கது.

579. பார் நனை - நிலமெல்லாம் நனைந்து ஈரமாக்கும், நான்கரைக் கச்சம் - நாலரைக் கச்சம், ஏர் - அழகிய, கற்பகத் தாரினான் - கற்பகமாலையணிந்த சீவகன், கச்சம், தேவகோடியென்பன சில எண்ணுப் பெயர், கார் - கருமை.

580. நிழல் மணி - ஒளி திகழும் மணி, நிழல் துழாய்க் குனிந்துகுத்தும் அழல் திகழ் கதத்த யானை - தன் நிழலைப் பகை யென்று மருண்டு கையால் துழாவிக் குனிந்து கோட்டால் குத்திச் சினம் சிறக்கும் யானை, தேரும் யானையும் தனித்தனி ஐந்தரைக் கச்சம் என்க.

581. காளமாகு இருள் - கருமை மேன்மேலும் பெருகும் இருள், போழ்ந்து - கெடுத்து, விழுங்க - விழுங்கவர அதற்கு அகப்படாதே உயரப் பொய்ப்பின்பு, முந்நீர் - கடல், நீளமர் - நெடிய போர், போர் - போரிலே, விசயம் - வெற்றி.

திங்கள் அரா விழுங்க உயரப்போய்ப் பின்பு முந்நீர்த்திரையுள் குளித்ததுபோல், மதனன் யானை நெற்றிமேல் தத்தி, விசயன் வாளின் வாய்ப்பட்டான் என்க.

582. தும்பி - விசயன் ஏறியிருந்த யானை, இவர - மன்மதன் பொங்கி வர, நீளமா - சேய்மைக்கட் செல்லுமாறு, புடைப்ப - தண்டா வடிக்க, இரண்டு கீளாக - இரண்டு கூறாக, திருகி - உடம்பைத் திருகி, துஞ்சினான் - இறந்தான்.

583. பொன்னணிதலால் சண்பகம் பூத்த மலையை யொப்பவனான தேவதத்தன், பெய்வான் - புகும்படியாக, வீழ்தரு கடாத்த - பொழிகின்ற மதத்தையுடைய, மண் பக - நிலம் பிளக்கும்படி, கடாய் - வேழத்தைச் செலுத்தி, தானை ஓட - தானை வீரர் முதுகிட்டோட, செலுத்திட்டான் - எறியாது மீண்டான்.

584. சின்னப்பூ - வீடுபூக்கள், பொன் வாள் - இரும்பாலாகிய வாள், மத்தகத்து இறுப்ப - தலையில் தங்கிற்றாக, பொன்னவிர் குழை - பொன்னாலாகிய குழை, வீழ்வான் - வீழ்கின்ற அக் கலிங்கர்கோன், பருதி கோளொடு முந்நீர்க்கண் வீழ்வதொத்தான், பருதிக்கு அவனும், கோளுக்குக் குழை முதலியனவும் கொள்க.

585. கொடுஞ்சிலை யுழவன் - கொடிய வில்வீரன், மான் தேர் - குதிரை பூட்டிய தேர், மடக்கரும் சீற்றத் துப்பின் - மடக்குதற்கு அரிய சினமும் வன்மையுமுடைய, மடக்கரு - விகாரம், இடந்து - பிளந்து, பொற்றூளி - மலையென்றதற்கு ஏற்பப் பொன்துகள் கூறினார். இறங்கி - தாழ்ந்து, அடர்ந்து, மண்டிச் சென்று, சிங்கம் இடித்திட்டது என்க.

586. குப்பை - குவியல், செம்பொன் - செம்பொன்னாலாகிய பூண், திருமகளுமாம், அரிமணியரார் - அரிய மணி வைத்திழைத்த முடியுடைய மன்னர், கொள்ளை சாற்றி - கொள்ளை கொள்ளும் தன்மையைத் தன் நெஞ்சிலே அமையப்பண்ணி, விண் தொழ - பார்த்து நின்ற விஞ்சையர் கைதொழ.

587. குருதியாறு, முடி முதலியவற்றை வரன்றி, முரசு முதலியவற்றைச் சுமந்து, மாவும் தேரும் ஈர்த்து, வேழம் கொண்டு ஒழுகிச் செல்லும்படி, வல் விளைந்தது, குரை - முழங்குகின்ற, பிச்சம் - பீலியால் அமைத்த குடை.

588. தற்புறந் தந்து - தம்மைப் பாதுகாத்து, வைத்த - உற்றவிடத்து உதவுவரென்று வைத்த, வீந்தார் - புகழ் நிற்க இறந்த வீரர், அரமகளிர் - துறக்கத்து மகளிர், தோய்வர் - கூடுவர், பொற்ற அழகிய, புகழ - வெற்றியை வியந்து பாட, கன்மேல் நிற்பர் - நடு கல்லாய் வீரர் பரவ விளங்குவர்.

589. குன்றெலாம் - குன்றுக்கெல்லாம், துளங்கி - நிலை கலங்கி, சங்கம் மத்தகத்து அலமர - சங்குகள் மத்தகத்திலே அசைய, மா நிரை - குதிரைப்படை பொலம் - பொன், தொழித்து - வெகுண்டு.

590. மாக் கடல் - கரிய கடல், காளை - சீவகன், கார்முகம் - வில், மைந்தர் ஆர்த்தவர் வாய் - ஆரவாரம் செய்த மைந்தர் வாயெல்லாம், கான்றபின் - செலுத்திய பின்பு, நெஞ்சம் - மார்பு, அம்பு உண - அம்பு உயிரை யுண்பதால், முழை - முழைஞ்சு, (caves) துஞ்சினார் - பட்டுக் கிடந்தனர்.

591. போர்க் களம் - பொய்கை, புறவிதழ் - வாட்படை, கொல்களிறு - புல்லிதழ், அரசர், அகவிதழ், கட்டியங்காரன் மக்கள் - பூவின் அல்லி, அரசன் - கொட்டை, இது தாமரைப் பூவணி, (பதுமவியூகம்), பவித்திரத் தும்பி - குலனும் குணமும் தூயனென்பது தோன்ற, பவித்திரத் தும்பி என்றார்.

592. நீரார் - தன்மையினை யுடையவர், இல்லையேல் - நல்வினையில்லையாயின், வினையின் ஆக்கம் - வினையினா லுண்டாகும் பெருக்கம், பயன் அல்லன - பொருளல்லாத பேச்சுக்களை.

593. அகப்படு பொறியினார் - பகைவர் கைப்படும் தீவினையாளர், தீவினை நீக்கி மேம்படுப்பவர், அரியர் - இல்லை, மிகப்படு பொறியினார் - மிக்குள்ள நல்வினைப் பயனை எய்துதற்கு உரியவர், வெறியா - வெற்றுடம்புடையராவார், மதியம் - திங்கள், வெய்தா - விரைவாக, பருதி - ஞாயிறு, ஆலி - ஆலங்கட்டி, பயத்தல் - விளைவித்தல்.

594. புரி - வடம், கோல் - தண்டு, சென்றற்றபோழ்து - எரிந்து போன பிறகு, தேம்பினல்லால் - தேம்பிக் கிடப்பதொன்று தவிர, தேய்ந்தால் - மாண்டால், பரிவு - ஆதரவு, கெடாமல் - கெடாதபடி, பற்றிவைப் பார் - பிடித்துவைப்பவர்.

595. எயிறு கோலி - பல் வரிசை தோன்றி, வில்லிட நக்கு - ஒளி திகழ நகைத்து, வீரன் - சீவகன், வேந்தன் - கட்டியங்காரன், சொல்லி - அஞ்சினாய் என்ற சொல்லைச் சொல்லி, நகவும் பெற்றாய் - சிரிக்கக் கடவாய், பெற்றாய் கால மயக்கம்.

596. இல்லாளையஞ்சி - மனைவிக்கு அஞ்சி, கொன்ற - மகிழ்வியாது விட்ட, புகைந்து - சினந்து, வில்லாள் அழுவம் - வில் வீரர் கடல், உந்தி - சீவகன் மேல் கடவி, கோல் - அம்பு.

597. ஆங்குத் தொடுத்த அம்பு - கட்டியங்காரன் அங்கே தொடுத்த அம்பை, தொடை வாங்கி - அம்பை விசைத்து வாங்கி, மடுத்து - அம்புகளை நிறைத்து, ஆங்க - அசை, கடுத்து - கடுகி, பிழையம்பின் - பிறைபோல வாயினையுடைய அம்பினாலே, வடித்தாரை வேல் - கூரிய நீண்ட வேல், பூணினான் - சீவகன்.

598. அழன்று - சினம் பொங்கி, வெம்ப - வெம்பும்படி, அவன் - சீவகன், பட - பட்டுக் கிடக்கும்படி, பாய்ந்திடுகு - பாய்ந்திடுவேன், பாய்வான் - பாய்பவனான கட்டியங்காரன், பொன்., ஒத்தான் - நல்வினையுலந்து தேவருலகத்திலிருந்து வீழுமொரு தேவனை யொத்தான்.

599. முலைப் போர்க்களம் - கொங்கைக்குப் போர்க்களம், செய்யோன் - செய்பவனாகிய சீவகன், சரம் - அம்புகள், வெய்தா விழியா - வெவ்விதாகப் பார்த்து, வெருவ - கண்டோர் அஞ்ச, மடியா - மடித்து, மை - முகில்.

600. கலியரசு - கலியாகிய அரசு, படைத்தொழில் - போர்த்தொழில், மன்னர் - வீரர், குருதிக்கண்ணீர் - குருதியாகிய கண்ணீர், மண்மகள் கட்டியங்காரன்பால் ஆர்வம் நீக்கினாள் என்க.

601. ஒல்லை - விரைய, பருதி - ஞாயிறு, கடலின் நெற்றி - கடலிடத்தே, கவுட்படுத்திட்டு - விழுங்குவதாலே, நாகம் பல்கலைக் கழித்த பின்பு, பன்மணி நாகந் தன்னை - அதனை, வல்லை - கடுக, போழ்ந்து போந்து - பிளந்து போந்து, நின்றது - நின்ற தன்மையை.

602. கோட்டுமீன் - சுறாமீன், மோட்டு மீன் - விண்மீன், தீவிகை - விளக்கு, முத்தம் ஆட்டு நீர்க்கடலின் - முத்தை அலைக்கின்ற நீர் நிரம்பிய கடல்போல, மாலை - ஒழுங்கு, அவன் புதல்வரைக் கொன்று பின் அவனைக் கொல்லுதலை ஒழுங்கு என்றார்.

603. உள்ளம் - கருத்து, ஈர் வளை - அரத்தால் அறுக்கப்பட்டவளை, இலங்கு - விளங்குகின்ற, மண் - அசை, வாழ்வு - வாழ்க்கைக்கு வேண்டியவை, புறம் போகியும் - புறத்தே வேறிடம் சென்றேனும், வில் நுங்க வீங்கி விழுக் கந்து எனத் திரண்ட தோள் - வில்லை வலிக்க வீங்கிச் சிறந்த தூண்போலத் திரண்டு நீண்ட தோள்.

604. தீத் தும்மு வேலான் - நெருப்பனலைக் கக்கும் வேலையுடைய சீவகன், மொழியாகிய வான் முழக்கம் என்க. அங்கு வாய்த்துக் கேட்டு - அவ்விடத்தே வாய்மையாகக் கேட்டு, மஞ்ஞைக் குழாம் -மயிற் கூட்டம், சேய்ச் செந்தவிசு - மிகச் சிவந்த தவிசு, எழும் - எழுந்து நீங்கும்.

605. அலங்கல் - பூமாலை, பொறை - சுமை, முத்துருட்டி - முத்துப்போலக் கண்ணீரை அழுது சொரிந்து, விம்மி - துயர் மிகுந்து, சண்பகச் சாம்பல் - சண்பகத்தின் வாடிய பூ.

606. எண் கொண்ட ஞாட்பு - தேவாசுரப் போர், இராமாயணப் போர், பாரதப் போர் என்ற இவற்றோடு வைத்து எண்ணத்தகும் போர், இரும்பு - வேலும் வாளும் பிறவுமாம், எச்சிற்படுத்த - புண்பட்ட, புண் போற்றிக்கொண்டு புறஞ் செய்க - புண்ணை ஆற்றும் வழியை மேற்கொண்டு காப்பீராக, வியங்கோள் வேண்டிக்கோடற் பொருட்டு, பொற்ப - இனிது, பண்கொண்ட சொல்லார் - மகளிர், பாம்பணையண்ணல் - திருமால், மண்கொண்ட வேல் - மண்ணை வென்றுகொண்ட வேல்.

607. துகைப்புண்டு - தாக்கப்பட்டு, வரை, துகைப்புண்டு புண்கூர்ந்தபோலும் வேழம், நீள்கால் விசைய நேமித் தேர் - நெடுங் காற்றுப் போலும் விசையையுடைய தேர், நேமி - ஆழி, இமைத்தார் நிலத்திற் காண்கலா தாள்வல் புரவி - நிலத்திருப்பக் கண்டு கண்ணிமைத்தவர், பின்பு காணமாட்டாத நெடுந் தொலைவு சென்று மறையும் தாள் வன்மையுடைய புரவி, ஆவித்தாங்கு - கொட்டாவி விட்டாற்போல, எஃகம் - வாள்.

608. விழுப்புண் - துன்பம் தரும் புண், குரைப்பொலி - காற்றைப் புறப்படவிடும் ஒலி, அதிர் கண் முரசு - அதிர்கின்ற கண்ணையுடைய முரசு, செவிப்புடை - செவியினது அசைப்பொலி, இறைவன் - சீவகன், கேளா - கேட்டு.

609. கண்ணனார் - புரோகிதர், கடிகை - நன்னாழிகை யறிந்து கூறும் கணக்கர், வருக என வருவார்களாக என அழைப்ப, பழிச்சிய - புகழப்பட்ட, அண்ணல் - தலைமை, அலம்வர - விலங்க, புல மகள் நக - நாமகள் மகிழ, முடியமைத்தற்குரிய நூலெல்லாம் முற்ற முடித்தலின் நாமகள் மகிழ என்றார்.

610. வானவில் மலையின் குறுக்கே கிடந்தாற் போலத் தேன் சொரியும் தார் மார்பிடைக் கிடந்தது என்க, அருவி - அம்மலையிடத்து அருவி, துயல - அசைய, எரியும் - ஒளி வீசும், ஒருவன் - ஒப்பற்ற சுதஞ்சணன், துளங்கி - அசைந்து.

611. வெருவிக் கை விதிர்ப்ப - அஞ்சிக் கை விதிர்க்கும்படி, சொரிந்து - சொரியா நிற்க, பருதி போல்வனவாகிய குடம், பூமழை சொரிய, குடத்தால் பாற்கடலில் முகந்து வந்து ஆட்டி, விதிர்க்கும்படி, தொழுது முடி கவித்தனன் என்க, பவித்திரன் - சீவகன், தனக்கு ஆசிரியனாதலின், தேவன் தொழுதான்.

612. திருவமாமணி - அழகிய மணி, அ, அசை, காம்பும் வடமும் திளைக்கும் மதி - இல்பொருளுவமை குடை - கொற்றக் குடை, பரவை - பரந்த, பொருளில் பூமகள் - ஒப்பில்லாத நிலமகளை, இமையவன் - சுதஞ்சணன்.

613. கடல் திரையின் - கடலின் அலைபோல, நிழற்ற - நிழலைச் செய்ய, பொன்னங் குடை - உலாவுக்குரிய குடை, உழைக்கலம் - அரசர் பக்கத்தே இருக்கும் மங்கலங்கள், அடியீடு - அடியிடுதல், அடுத்து இரண்டு பவனி அரசர்க்காகாமையின், கல்யாணத்திற்குப் பின்பு பவனி கூறுவார். ஈண்டு நன்னில மிதித்து மண்டபத்தே புகுந்தமை தோன்ற அடியீடேத்த, என்றார். சின்ன மலர் - விடுபூ, காத்தற் றொழிலாலும் வடிவாலும் திருமாலென்றே கூறினார்.

614. உளை - பிடரி மயிர், மங்குல் மணி - நீலமணி செஞ்சுடர் - ஞாயிறு, சீவகன், சிங்காசனத்தின்மேல், மன்னர் முடிகள் சூழ, வண்ணன் போல் குழைவில் வீச, செஞ்சுடர் போல் இருந்தான் என்க, மங்குல் - திசை, எனவே, தந்தையைப்போல் இருந்தான் என்றார்.

615. ஒன்றுடைப் பதினையாண்டு - பதினாறு யாண்டு, விட்டான் - சிறையின்றி விட்டான், இன்றேபோல் என்னும் செல்வ நலமுடையீராய் வாழ்மின், பொன்றுக - இல்லையாகுக, மன்றல மறுகு - மன்றல் விளங்கும் தெரு, அன்றே - அப்பொழுது.

616. அன்று - சீவகன் பிரிந்த அன்று, பொன்றி - கெட்டு, பொன் நிறை - பொன்போல் பெறுதற்கரிய நிறையில் கெடாதவர், திருவிரி மரைமலர் - அழகு திகழும் தாமரைப் பூ, உவகை முத்து - உவகைக் கண்ணீர்.

617. மதர்ப்பன போல - செருக்குவனவற்றைப் போல, மதர்த்தன அலர்ந்து - செருக்கி மலர்ந்து, பரிந்தவை - அற்று, சொரிய - உதிர.

618. ஆர்ந்த - ஆர்த்த, போய் - போக, வளை - சங்கு, புரையில் - குற்றமில்லாத, அரவவான் - முழங்குதலையுடைய முகில்.

619. சுந்தரத் துகள் - செந்தூரத் தூள், அந்தரத்து - வானத்தே, சாறு - திருவிழா, இவ் வழி - ஈண்டு, மலிவுற்றது - மிகுதியுற்றது.

620. அலமரும் - அசையும்; எழுந்து அலமரும் - விரிந்து அசையும், மடியிருந் துகில் - மடித்த துகில், புடை திரள் - பக்கம் திரண்ட, பூத்த - பொலிந்தன.

621. மணியுடை பொற் சிலம்பு - மணியைப் பரலாகவுடைய பொன்னாலான சிலம்பு, தாது - தேன், அடி நிலம் பெறாத - மங்கையர் அடி நிலத்தைத் தீண்டாத.

622. மங்கலப் பெருங் கணி - மங்கல நாளைக் கூறும் பெரிய கணி, சோதிடர், மங்கல அச்சுதம் - மங்கலமாகிய அறுகும் அரிசியும் முதலாயின, வாய்மொழி - அபிமந்திரித்த, கருவி - மயிர் குறை கருவி.

623. சுடர்ந்து இலங்கு - விட்டு விளங்குகின்ற, கோதை - இலக்கணை, மயிர் வினை நாட்கடி - மயிரொதுக்கும் திருமணம், பூக்கடி கோயிலாள் - பூவாகிய சிறந்த கோயிலையுடைய திருமகள், புலம்ப - இவட்கு ஒவ்வேமென்று கருதி வருந்த, ஆக்கினார் - செய்தனர்.

624. நகர் - அரண்மனை, வெள்ளியிடு மணை - வெள்ளியால் செய்த மணை, கொற்றவன் - சீவகன், மழைக் கவின்று எழுந்த - மழையால் கிளைத்துத் தழைத்த, அறுகை - அறுகம் புல்.

625. நேமியம் செல்வனாகி - சக்கரவாள சக்கரவர்த்தியாய், அடிநிழல் - ஆட்சியின் கீழ், திருவோடு - இலக்கணையோடு.

626. அறுகு வெண்மலர் அளாய - அறுகையும் வெள்ளிய மலரையும் கலந்த, மறுவில் - குற்றமில்லாத, கைவினைக் கோலம் - புனைதலமைந்த மணக்கோலம்.

627. அரத்தகம் - செம்பஞ்சி, மருளி - மருள, கண்டோர் மருள என்க, சிலம்பு குரலெடுத்து ஒலிப்ப, திருக்குலாய்க் கிடந்த மார்பின் சீவகன் - திருமேவி வீற்றிருக்கும் மார்பினை யுடைய சீவகன், தரித்திலம் - செய்திலேம், ஏமுற்றார் - மயக்கமுற்றனர்.

628. செந்நீர் - புதுநீர், பூ உந்தி - பூப்போலும் கொப்பூழ், நுடங்க - அசைய, தாவிரி வேள்வி - கெடாத மணவேள்வி, தாழ்ந்தது, தங்கிற்று, அமுதயாறு குன்றிற் பிறந்து, கடலுட் பாய்வான், பூவுந்தி, கொடி நுடங்கப் போந்து மடுவினுள் சிறிது தங்கிற்று.

629. சாண்மேல் எண்விரல் - ஒருசாண் எண்விரலகமாகப் பரப்பிய, தண்டிலத்தகத்தில் - இங்கு, அரிசியிலே, சமிதை நானான்கு - சமிதை பதினாறு, துடுப்பு - துடுப்பால், கொண்டு - கைக்கொண்டு, வலமாகச் சுழன்றெழுந்தது, நாட்டில் திருமிக்கு விளையாடும் என்றற்கு அறிகுறி. தெண்டிரை - கடல்.

630. காஞ்சனவட்டின் - பொன் வட்டுப் போல, அரசருள் அரசன் - அரசரின் தலைவனான சீவகன், அங்கை - அகங்கை, வியாழன் - பிருகற்பதி.

631. கோள் விடுக்கின்றதே போல - கொண்டதை விடுக்கின்றது போல, தளிர் புரை கை - தளிர்போலும் கை, தாமரை முகத்தைச் சேர்ந்த கை, ஒளிர்வளை - விளங்குகின்ற வளை, விடுத்து - விடுக்க, கட்டில் - விவாகம்பண்ணி யெழுந்திருந்து சாந்தியான கூத்தும் ஆலத்தியும் கண்டு அருந்ததி காணப்போமளவும் இருக்கும் கட்டில் - இஃது அரசியல்.

632. ஆன்பாலால் திருவடியை கழுவிய பின்பு, அயினி - பாலடிசில், துளங்கெயிற்றுழுவை - விளங்குகின்ற பற்களையுடைய புலி, தோகை - மயில், புலிமயிலோ டிருந்ததுபோல இருந்தான் என்பது.

633. பால்துரையின் நொய்ய அணை - பால்நுரைபோல் நொய்தாகிய அணை, இரவி கதிர்களைச் சிந்தித் திங்களோடு இருந்தது போல, வேல் நிலை செய்கண்ணி - வேலை நிரையாக வைத்தது போலும் கண்ணையுடைய இலக்கணை.

634. குளநெல் முன்றில் - குளநெல் உணங்கும் முற்றம், சோலை - சோலையிடத்தே, மணி எரிய - மணி ஒளி செய்ய, கை காய்த்து - தீயென்று கருதிக் குளிர் காய்வதற்கு, இளமையாடி - விளையாடி, சாபத்தின் - சாபத்தால், கிளை - முனிவர் சுற்றம்.

635. கேள்வியவன் - கேள்வியினையுடைய அம்முனிவன், கான்முளை - பிள்ளை, தோய்ந்த கேள்வி - பலவாய்த் தொக்க நூற்கேள்வி, துறைபோய் - முற்றக் கற்று, அலங்காரமும் தோன்றினான் - அலங்காரமென்னும் ஒரு நூலையும் தோற்றுவித்தான். மேயினான் - பெற்றான், கோலம் - அழகு.

636. வாக்கினில் செய்த - நூல்விதியோடு வாக்குண்டாக, பொன்வாள் - பொன்னாற் செய்த கத்தி, ஆக்கிய மூர்த்தத்து - பொருந்தக் குறித்த நாழிகையில், வலக்கவுள் - வலக்கன்னம், தேக்கண்.. குழலினான் - நெய்யை இடத்தேயுடைய அகிற்புகையை யுண்டு தேக்கிடும் குழலையுடையாள், நுனித்து - குறித்து, நொய்தா நோக்கி - சிறிதே நோக்கி.

637. காய்ந்த வாள் - இரும்பும் எஃகும் ஒரு நீர்மையாகக் காய்ந்த மயிர்க் கத்தி, அவிர்மதிப் பாகக் கல் - விளங்குகின்ற திங்களின் பிளவு போலும் கல், பூ நிறீஇ - கத்திவாயில் உள்ள பூவைத் தட்டி, குறங்கு - துடை, துகில் - துணி, மருள் தக - உற்றது தெரியாதபடி.

638. பூசகின்றான் என - பூசுகின்றதுபோல, ஏற்றியும் - சுற்றியும், ஏற ஒதுக்கியும் இழிய ஒதுக்கியும் நடுவு திறத்தும், கோலம் - அழகு, சுடர்ந்தது - விளங்கிற்று.

639. ஒண்ணிறப் புள் - ஒள்ளிய நிறம் படைத்த சிச்சிலிப் பறவைக்கு, வெரீஇ - அஞ்சி, இரியலுற்றன போன்று - நீங்கியோடுவது போன்று, கண் வெருவி யோடும்படியாக, திருவில் - வானவில், கண்கள் அஞ்சிப் பார்க்க விசும்பில் வளைத்த வில்.

640. குயம் - மயிர் குறை கத்தி, கத்திரிகைத் தொழில் - கத்திரிக்கும் தொழில், நீரில் - நீர்மையுடன், ஏத்துபு - வாழ்த்தி, தாரும் மாலையும் கண்ணியுமுடையான், தயங்கிணர் - விளங்குகின்ற பூங்கொத்து.

641. மாதர் - இலக்கணை இமைத்தல் செல்லான் - இமையானாய், உள்ளி - நினைந்து, சேர்தல் பேதைமை என்றாள், வேதனை பெருகி - வருத்தம் மிகுந்ததனால், தீயுமிழ்ந்திட்ட - வெகுளியால் சிவந்தன.

642. இற்றது - அழிந்தது, என்னா - என்று, இமைக்கும் - விளங்கும், பஞ்சின் சிற்றடி - செம்பஞ்சி யூட்டிய சிறிய அடி, திருமகன் - திருவுக்கு மகனாகிய காமனையொப்பவன், சீவகன், சேந்து பொற்ற - சிவந்து பொற்புடைத்தாகிய, தாமரையினின்றும் புறப்பட்டுச் சிறிது கரிய நீர்மையுடைய முத்தம் சிந்துவனபோலே கண்கள் மை கலந்து வெய்யவாகிய பனியை யுகுத்தன, ஊடல் முழுதும் தீராமையின் வெம்பனியாயிற்று.

643. கொண்ட பூண் - நீ அணிந்துகொண்டுள்ள பூணும், சார்ந்து - அருள் வடிவாகிய நின்னைச் சார்ந்ததனால், குலாய் - தழைத்து, கொழுந்து ஈன்ற - கொழுந்தையீனுவதற்குக் காரணமாயின, கண்டு - நின்னழகை விடாமல் பார்த்ததனால், காக்கலாமே - மறைக்க முடியாதன்றோ, பாவப் பயம் - தீவினையின் விளைவு, வருடி - இந் நங்கையின் காலை வருடி, வரந்தர - வரந் தருமாறு.

644. புழை - கூட்டன் வாயிலில், காவலன் - கோவிந்தராசன், யாம் உருகிச் சாவம் - நம் சேவல் நம்மை இவ்வாறு ஊடல் தீர்க்கலுறின் நாம் மனமுருகி இறந்துபடுவோம், ஒன்றும் தவறிலன் - சிறிதும் தவறு இலன், இரத்தும் - இரந்து வேண்டுவேம்.

645. கூழ் - சோறு, பிணியுழந்து இருத்தும் - பிணிப்புண்டு வருந்தியிருப்பேம், முற்றிமை - அறிவுரை, பொற்றொடி நங்கை எனக் கூட்டுக, தந்தையீரே - கிளியாரே, பொத்து - முடிக்கொள்மின், காரணக்கிளவி - காரணத்தோடு கூட்டிச் சொல்லும் சொல்.

646. இதனை - இவன் இறந்துபட்டால் இவட்குளதாம் பழியை, யான் - இவட்குப் பிள்ளையாகிய யான், நான்று - தூக்கிட்டுக் கொண்டு, நலம் - நற்குணம், நூலின் யாப்ப - நூலாலே தன் கழுத்தைக் கட்டிக்கொள்ள, மான்றவள் - உணர்ப்புவயின் வாராயூடலால் மயங்கியிருந்த இலக்கணை, மருண்டு - வியந்து, வாழிய - கிளியை வாழ்த்தியது, ஆன்றவன் - கூடற்கமைந்த சீவகன்.

647. பாண் - பாணன் வாயில் நேர்விக்குந் துறையில் கூறும் சொல், குலாய் - சொல்லி வளைத்து, படுக்கல் - அகப்படுத்தல், வைத்தார் - வளர்த்து வைத்தவர், என் - என்ன இனி வரவு, நகை முக வமுதம் - நகைத்த முகத்திடத்து வாயமுதம், நகை முகம் காட்டி மகிழ்வித்தலுமாம்.

648. வெள்ளை மை கலந்த நோக்கின் - உள்ளத்தே கள்ளமில்லாத நோக்கத்தோடு, மிழற்றி யார்ப்ப - ஒலிக்க, பிள்ளைமை - பிள்ளைத் தன்மையால், காதல் கூர - காண்டற்குக் காதல் மிக, துள்ளுபு செலீஇய - துள்ளிச் சென்ற, காமத்து உள்ளுயிர் அறிய - காமத்தின் இன்பத்தை நுகர்ந்தறியும் பொருட்டு, நோக்கின் செலீஇய தோற்றம் என இயைக்க.

649. அணிநிலா வீசும் மாலை யாங்கு - அழகிய ஒளி வீசும் பல மாலைகளை நாற்றிப் புனைந்த ஆடரங்கு, புல்லென்ன - பொலிவிழப்ப, துணி நிலா வீசும் பிறை - தெளிந்த ஒளிவீசும் பிறைத்திங்கள், மாலையில் தோன்றலின், மாலைப்பிறை யென்றார், பிறைபோலும் நெற்றி, மயங்கி - வேட்கையில் கலங்கி, நிலா வீசும் பைம்பொன் பணி கொடி, ஒளி - விளங்கும் பசிய பொன்னாலியன்ற பரந்த கொடி, தாழ்ந்த கொடியுமாம், பொற்கொடி மணியைப் பூத்ததை நிகர்த்தனர்.

650. குறையணி கொண்டவாறு - பாதி குறையாகப் பூண் அணிந்த அளவில், கால் தொடா - அடியிலே தம்மில் பிணங்க, சிறையழி தேன் - சிறையழிந்த தேன், தேன் உந்தியிலே பொழிந்தொழிக என்க, ஏந்தி - அணியாத மாலையை ஏந்திக் கொண்டு, பறையிசை வண்டு - பறத்தலையுடைய இசைவண்டு, பாதியே யணிந்த நாணத்தால் மறைய நின்றார், அண்ணல் - சிவபெருமான்.

651. பொலிசை - இலாபம், பிணையனார் - மான்பிணைபோலும் வீரமகளும் திருமகளும், பெரிய யாமும் - கற்பினால் பெருமை மிக்க யாங்களும், முந்நீர் மண் பெற்ற ஆயுள் பெற்று - கடலுலகும் மண்ணுலகும் பெற்ற வாழ்நாளைப் பெற்று, என்னாக கரைந்து - என்று வாயால் வாழ்த்தி, உப்பும் உலகும் உள்ள அளவும் வாழ்வீர், என்னும் உலக வழக்கு.

652. கொழித்து இரை ஓத வேலி - முத்து முதலியவற்றைக் கொழித்து முழங்கும் கடலை வேலியாகவுடைய நிலவுலகில், நங்கை - விசயை, விழுத்தவம் - பெரிய தவம், நின்றிட்டது - நிலைபெற்றது, பிழி - வடித்த தேன், ஆக என்பதைப் பிரித்துப் பெரியள் என்புழிக் கூட்டிப் பெரியளாக நோற்றாள் சுநந்தையே என்பார் என்க, கழித்து நின்று - வேறொரிடம் செல்லாது நின்று, அறாத கற்பு - வற்றாத அருட் கற்பு.

653. தடங்கண் - பெரிய கண், குடங்கை - அகங்கை, கொண்டு - முகந்து, குவளைக் கொம்பின் - முழுதும் குவளையே பூத்த கொம்பு போல, இன்றி - இல்லையாமாறு, ஆர - நிரம்பிய, பருகியிட் டீமின் - பருகுமின், இரண்டு கண்கள் அமையா என்பதாம்.

654. புறங்காடு - சுடுகாடு, வாணிகன் இல் - கந்துக்கடன் என்னும் வணிகன் மனையில், கைநிகரில் - ஒழுக்கத்தாலும் ஒப்பில்லாத, மேலைத்தவமே இத்திருவுடைமைக்கு ஏது என்றாராம்.

655. முழங்கு பெருந்திரை - பொருந்திய கடலும் மலையும் கடந்து, நீந்தியெனவே, கடத்தற்கருமை கட்டியதாயிற்று, பிணியுறினும் - வருந்தினும், திருமுயங்கல் - நல்வினை வந்து கூடுதல், பொருள் சட்டம் - பொருளை மிகுதியாக ஈட்டுதல், சேறவிலரேனும் - சென்றிலராயினும், பொருள் நல்வினையுடைய அவர் உறையும் ஊருக்கு வழி வினாய் உழந்துவரும் என்க, “ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்” (குறள்) என்றார் திருவள்ளுவர்.

656. அரசன் வருங்காலத்தே பிறர் புகுதாமல் கதவடைத்து அவனுக்குத் திறத்தல் இயல்பாதலால், கதவும் திறந்தன, அகிற்புகையால் மணம் நிரம்பித் திசைகள் மறைந்தன, துளக்கி - அசைத்து.

657. மறுவற - குற்றமற முற்றும், திகிரி - அறவாழி, பொறி வரம்பு - இந்திரியங்களுக்கு எல்லையாகிய, நறை - தேன், நகும் - நிகர்க்கும்.

658. உலமரும் - கலங்கிச் சுழலும், ஒட்டா மன்னவர் - பகை வேந்தர், வலமருப்பு - வெற்றி தரும் கொம்பு, கட்டில் - அரச கட்டில், நிவந்து - உயர்ந்து, அரசரில் மேலாயிருத் தலால் நிவந்தென்றார், புலமகள் - தலைமகள், பொய் தீர - மெய்யான, (நித்தியமான)

659. பேரிடர் - பெரிய இடராகிய கடல், புணை - தெப்பம், இடம் - கோயில், பாரிடம் - நிலவுலகத்தவர், நடாயினான் - நடத்தினான்.

660. உறுவலி - மிக்க வலியுடைய சீவகன், தகை - அழகு, ஆலை, ஆலமரத்திற்கு, தேன் - வண்டு, பீடம் சேர்த்தி - மேடையமைத்து - அதன் நிழலிலே பசுக்கள் கிடத்தல் அதற்கு அறமாகுமென்றும், அவற்றின் பாலை அதற்குச் சொரிதல் தகுமென்றும் கருதி, ஆன் விளையாடு மைந்தூர் என்றார்.

661. மான் நை நோக்கியர் - மான் நிகராமையால் வருந்துகின்ற பார்வையுடைய மகளிர், மது ஆடின - தேன் கொப்புளிக்கப் பட்டன, வெண் தேர் - கானல், பானல் - செங்குவளை, பால் அன்னம் - பால்போலும் நிறமுடைய அன்னம்.

662. வலையவர் - செம்படவர், சிலையவர் - வில் வேட்டுவர், குரம்பை - வீடு, சேப்ப - தங்க, இவறல் - பேராசை, இவ்வூழியிலே உலகம் தன் நிலை திரிந்து நீங்கி உத்தர குருவுமாக எனத் திரிந்து நடாத்தும் என முடிக்க.

663. அருவிலை - மிக்க விலையுடைய, நன்கலம் செய் போர்வை - நல்ல கலத்தைப் புறத்தே காட்டும் போர்வை, ஒதுங்கி - நடந்து, ஒசியும் - முறியும், நுசுப்பு - இடை, ஒல்கி - வளைந்து, மரபு - முறைமை.

664. அடித்தி தோழி - அடியளாகிய தோழி, என - என்று தேசிகப் பாவை சொல்ல, தெருளலான் - தெளியான், செல்வக் களி மயக்கினால் - செல்வத்தால் பிறந்த களி மயக்கத்தால், திசைக்கு என் அறிவு அளக்கிய - நாற்றிசையும் என் அறிவை அளந்து காட்ட வேண்டி, மருளில் - பேதைமையால், என்ன - என்று சீவகன் சொல்ல, உருளும் முத்தார் - உருளும் முத்துமாலை பொருந்திய.

665. மீது இறத்தல் செல்லா - தப்பிச் செல்லாத, நரம்பு - நரம்போசை, ஏங்க - இசைக்க, நரம்போசையின் மேற்பட்டுச் செல்லாத முடிவு முதலியன.

666. இளமையாகிய கழனி, வளை முயங்கு - வளையணிந்த, உருவமென்றோள் - அழகிய மெல்லிய தோள், கேழ்த்து - நிறம்கொண்டு, விளைபயன் - விளையும் பயனாகிய காமம், வீணை வேந்து - வீணை வேந்தனாகிய சீவகன், தோளாகிய வரம்பு சூழ் போகா நிற்க உழுதென்க, தனது சாயலால் விளைந்த அழகைக் கண்ட அளவில் காம வேட்கை விளைவித்தற்குக் கூத்தையும் பாட்டையும் நடத்துதலின் பிறந்தது காமம் என்க.

667. விண்பால் சுடர் - விண்ணில் உள்ள ஞாயிறும் திங்களும், விசும்பேந்தி - தேவருலகுக்கு மேலாய், மண்பால் - மண்ணிலுள்ள கோயில்களுக்கு, வான் பூத்தாங்கு - வானம் மீன்பூத்தாற்போல, மல்கி - நிறைய விருத்தலால், மேகம் போழ்ந்து, சுடர் விலக்கி, பூத்தாங்கு மல்குதலால், விசும்பேந்தி, திலகமாய் இயன்றது என்க, பண்பால் - பண்பாடும் பான்மையுடைய, என்பால் இகந்து உயர்ந்தர்ற்கு - எண் குணங்களால் உயர்ந்த அருகனுக்கு.

668. அல்லி யரும்பதம் - அல்லி யுணவு, ஆம்பலரிசியாலாகிய உணவு, அடகு - இலைக் கறி, நவை - இடுக்கண், இன்பம் - கோயிலெடுப்பித்த வினைப்பயன், வில்லோன் பெருமாட்டி - சச்சந்தன் தேவியாகிய.

669. உழந்து - வருந்தி, இனியாள் - இனியளாகிய விசயை, ஏமம் - பாதுகாப்பான இடம், தாபதப்

பள்ளி, உயக்கொண்ட - பிழைப்பித்துக்கொண்ட, கனியார் மொழியாள் - கனிபோலும் மொழியினையுடைய கூனிவடிவில் வந்த தெய்வம், பதி - கோயில், முனியாது - இடையறவின்றி, தெய்வத்துக்குக் கோயிலும், மயிலுக்குத் தன் மாடமும் நல்கினாளாம்.

670. பிறந்தாங்கு - பிறந்த விடமாகிய சுடுகாடு, ஆன்பால் அளந்து தோழர் ஐஞ்ஞூற்று நால்வர், சீவகன் ஆக ஐஞ்ஞூற்றைவர் பொருட்டு, நாளும் ஐஞ்ஞூற்றைவர்க்கு அடிசில் அமைதியாம், வண்ண வமுதம் - பருப்புச் சோறு, கோவிந்தன் - நந்தகோன், பரிவு - இவ்வேற்பாடுகளைச் செய்யவேண்டுமென நினைத்திருந்த வருத்தம்.

671. சேர்ந்து - கடந்து சென்று, தங்காவிருப்பின் - மிக்க விருப்பத்துடன், பெருமாள் - தாய், “னஃகானொற்று மகடூஉவை யுணர்த்திற்று,” முடிசூட்டி - முடி பொருந்த வணங்கி, “அவன் கூறிய அறமெல்லாம் தான் செய்து முடித்தலின், இன்னும் அவை உளவோ என்பது தோன்ற எங்கோ பணி என்றான்,” இருவிற்கண் - இரண்டு விற்கிடை நீளம், ஏறனையான் - சீவகன்.

672. ஒருடம்பை விட்டு ஓருயிர் போதல் போலாது, ஒருயிரை விட்டு இரண்டு உடம்பு செல்வதுபோல், ஆரியன் - அரியவனாகிய சீவகன், இது தமிழ்ச்சொல், வடசொல்லென வாய் வதறுவாரு முளர், ஒளவைமார் - தாய்மார், துறவொடு - துறவு மேற்கொண்டு, மடந்தைமார் - சீவகன் தேவிமார், வார்ந்த - கண்ணீரைச் சொரிந்தன.

673. கொடிக்குழாம் - மகளிர் கூட்டம், அல்லி - பூவின்நடு, இருந்து - நம்மை அவர் நடுவேயிருந்து, பகர் வுழி - கூறும் இடம், ஒருங்கு - சேர, கண்ணி - விசயை.

தாமரைப்பூவின் புறவிதழ் போல், மகளிர் சூழ விருப்ப, பம்மை அல்லிபோல் நடுவேயிருந்து அறம் பகர்ந்தாளாம்.

674. முளரி - விறகு, சீல நீர் - சீலமாகிய நீர், பார் கெழு நிலத்துள் - உத்தர குருவில், நாறி - முளைத்து, தீந்தேன் தார் கெழு தேவர் - தீவிய தேன் நிறைந்த மாலை அணிந்த தேவர்.

675. மணியியல் சீப்பு - மணியால் செய்த சீப்பு, நுதல் அணி - நெற்றியைச் சேர்ந்துள்ள, பணிவு - தாழ்வு, பரமன் - இறைவன், நூல் - ஆகமம், துணிபொருள் - துணியும் பொருள்.

676. பொழிய - நிரம்பி வழிய, எற்புடம்பை - எலும்பொடு கூடிய இவ்வுடம்பை, உற்று, பரப்பி - பல்லுயிர்க்கும் வந்த துன்பங்களைத் தாமும் உடனேயுற்று அவ்வுயிர்களுக்கு அருளைப் பரப்பி, அமுதம் - ஆகமப் பொருள், தவம் புரிந்து அடங்கத்தக்க நல்வினை யுடைமையின் பொற்குடத்தோடு உவமித்தார்.

677. புகழ்ந்துரை - ஒருவர் தம்மைப் புகழ்ந்துரைத்தற்கு, பொற்பில் பல்சனம் - தெளிந்த அறிவுச் சிறப்பில்லாத பல மக்களும், இரக்கம் - வருத்தம், அங்க நூல் - பல அங்கங்களையுடைய ஆகமம், அகழ்ந்து கொண்டு - கல்லியெடுத்துக்கொண்டு, பொதிந்த - நிறைந்த, திகழ்ந்து - ஒளிவிட்டு, விளக்கென - விளக்குப்போல.

678. காதலன் - காதலிக்கப்படுபவன், ஏதிலம் - சுற்றமல்லேம், என்று கண்டாய் - என்று அறிவாய், என்ன - என்று பம்மை கூற, தாதலர் தாமம் - தேன் விரியும் மாலை, போதவிழ் கண்ணி - தான் குடியிருந்த மலர்ந்த பூக்களால் தொடுத்த கண்ணியை, புனல்வர - கண்ணில் நீர் பெருகி வழிய.

679. திரை - கடல், மணியாரம் - மணியாரம் - மணி கலந்து கோத்த முத்துமாலை, வரை - மலை, சாந்தம் - சந்தனம், விரை - நறுமணம், வேண்டிய வேண்டினேம் - நீ விரும்பு வனவற்றையே யாமும் விரும்பினோம், உரைவிளைத்து - உரையைத் தாமே வலிய எழுப்பி, வேண்டிய என்றது, அவன் உறைக என்றதும், யான் நும் காதலன் என்றதும் வேண்டிக் கூறியவை.

680. யாது ஒன்றும் உற்றவர் அல்லர் - யாதொரு வருத்தமும் உற்றவரல்லர், அடிகள் - விசயமா தேவி, ஒளவை - தாய், இடர் - துன்பம்.

681. சென்றதோ செல்க - தன் கணவனையிழந்து புதல்வன் அரசை உவந்திருந்தாளென்று இதற்கு முன்னர் உலகத்து நிகழ்ந்த பழி நிகழ்ந்தே போக, இவள் - விசயை, மா பழி - பெரும்பழி.

682. கணமலை - கூட்டமான மலை, அரசன் - கலுழவேகன், மங்கை - காந்தருவத்தை, பணை - பருத்த, பவித்திரன் - சீவகன், இணைமலர் - ஒத்த மலர், புணைபுறம் - தெப்பத்தின் புறத்தை, வேறொரு பகையரசைத் தாம் கேட்டறியாமையாலும், கட்டியங்காரன் கொடுமை தன் மனத்து நிகழ்தலாலும் கட்டியங்காரனாக என்றார்.

683. அரக்கு நீர் - இங்குலிகம் கலந்த நீர், தடத்து நீர், சிவிறி - பீச்சங் குழல், தரிக்கிலராகி - எதிர்நிற்க மாட்டாராய், முகிற் குளிக்கும் மீன்போல - வெண்முகிலுள் மறையும் மின்னலைப்போல, செருக்கிய - மதர்த்த, சேப்ப - சிவக்க, சீதம் - குளிர்ச்சி.

684. குங்குமத் தாரை - குங்குமம் கலந்த நீர்த்தாரை, காண்டல் செல்லார் - காணாராய், விம்முறு துயரம் - மிகுகின்ற வருத்தம், காய்ந்து, விளையாட்டாய்ச் சினந்து, கார் - கார்முகிலே, நின்று.

685. அல்லி மேய்வார் - அல்லியில் முகத்தை மறைப்பார், பொன்மயில் - பொன்னிற முடைய தொரு மயில், இன்மலர்க்கமலம் - இனிய பூவாகிய தாமரை, பொருந்த - பூவொடு முகம் பொருந்த, மேகலையும் தோடும் கொடுத்தது, கெட்டார் திரையிடுவது போல்வது.

686. மெய்ப்படு தாரை - மெய்யிலே சென்று தாக்கும் தாரை, கைப்படை மன்னன் - கையிலே சிவிறி யேந்திய சீவகன், நிற்ப - தாரை துவாமல் வாளா நிற்ப, கதுப்பயல் மாலை - கூந்தலில் கிடந்த மாலை, செப்பட - செவ்விதாக, யாப்ப - கட்ட, தொலைந்து - தோற்று, பைப்புடை யல்குல் - படத்தின் பக்கத்தையுடைய அல்குல், பாழி - வலி, படுக்கலுற்று - கைப்படுக்கக் கருதி.

687. சாந்தும் அலங்கலும் சுண்ணமும் கவரும் புனல், அவள் உடுத்தியிருந்த வெண் பட்டினைக் கவர, பேசா - ஒலி செய்யாது, கிடப்ப - புடவையொடு கிடப்ப, என்ன - என்று சீவகன் சொல்லிக் காட்ட, மடத்தகை - காந்தருவதத்தை, புல்லி - அவனைப் புல்லிக்கொள்ள, பருதி - ஞாயிறு.

688. பருகினேற்கு - பருகின எனக்கு, நெஞ்சில் தட்டுப்படாமையின் “உருகிப் போய்” என்றாள், உள் - உள்ளம் பொறாது, கண் குருதி கொள - கண் சிவப்ப, தார் உற - மாலை பொருந்த, உள்சுட உடற்றி எனக்கூட்டிக்கொள்க.

689. உள் கறுத்து - உள்ளகம் கரிதாகி, (களங்கத்தைச் சுட்டியது), தேய்ந்தது - கலையினது தேய்வு.

690. கொப்புளித்து - காற்றுச் சிதற அடித்து, மரவம் பாவை - மரவம் பூ, வயிறார - நிரம்ப, பருகி - கவர்ந்து, தென்றல் விரவி வரவு நோக்கி - தென்றல், வாடை போகா நிற்க விரவி வருகின்ற வரவைக் குறித்து, வேனிலான் - காமன், வேனிலானுக்கு விருந்தேந்தி இணரீன்று அலர்ந்தன - காமனுக்கு விருந்திடுதலை ஏறிட்டுக்கொண்டு பூங்கொத்துக்களை - யீன்று அலர்ந்து விருந்திட்டன, வயா - வேட்கை.

691. குங்குமச் சேறு - குங்குமக் குழம்பு, நான நீர் - கத்தூரி கமழும் நீர், மலர் அளைஇ - மலர் விரவி, மணிக்கோல் வள்ளம் - மணியழுத்தி விளிம்பு பிரம்பு கட்டின வட்டில், வள்ளத்தில் மதுவையேந்த, ஒலியல் மாலை - பூமாலையும் முத்துமாலையும், கண்ண - தம் கருத்து இதுவென்பது அவன் கருதும்படி - கனிவாயார் - மகளிர்.

இப் பூவடுப்படுத்தி மோந்தும் இனிய நாற்றத்தவே யாயினாற்போல எம்மையும் உகிர் முதலியவற்றால் சிறிது வடுப்படுத்தி நுகர்தல் எமக்கு வருத்தமென்று அஞ்சினையாயினும் அஃது எமக்கு மிக்க இன்பமே யாதலின் உனக்கும் இன்பம் செய்யுமென்பது உணர்த்து வதற்குக் கிழித்து மோந்தார் என்க, இளமைச் செவ்வி மிக்க வழி மகளிர்க்கு இங்ஙனம் வடுப்படுத்தி நுகர்தல் இன்பம் செய்யுமென்று காம நூலிற் கூறுதலின் அதனையீண்டுக் கூறினார்.

692. மையாடி - மையோலை பிடித்து, படை - படைப் பயிற்சி, துளக்கின்றி - அசையாமல், மாலையும் குழலும் தோடும் குண்டலமும் அசையாமல் ஊர்தல் பிறர்க்கு அரிதாகலின் துளங்காமலூர்ந்தார் என்றார், வெகுண்டூர்ந்தார் - அடித்தேறினார், மொய்யார் - செறிந்துள்ள.

693. குடவரை - ஞாயிறு மறையும் மேற்கு மலை, குவவு - திரண்ட, தொடை மலர் - கொத்தாகிய பூ, வெறுக்கை - பாற்குடம், கையுறைப் பொருள், இடம் அது - அவளைக் காண்டற்கு இடம் அது.

694. பொற்கா - கற்பகச் சோலை, காமுற - விருப்பம் மிக, அலங்கு - அசைகின்ற, ஆட - விளையாட, நந்திற்று - சிறந்தது.

695. வார் கயிற்றூசல் - நீண்ட கயிறு கட்டிய ஊசல், கடிமலர் - மணமிக்க பூ, தேன் இமிர் குன்றம் - தேனினம் ஒலிக்கும் குன்றம், சிலம்பு - மலை, கோனமர் மகளிர் - அரசன் காதலிக்கும் மகளிர், கானில் - காவில்.

696. கடுவன் - ஆண் குரங்கு, இரிய வாட்டி - நீங்குமாறு அலைத்து, சிலதன் - சோலைக் காவலன், நச்ச வேல் - நஞ்சு தீற்றிய வேல், என்பொடு மிடைந்த காமம் - உடம்பொடு உடன் தோன்றிய ஆசை, இழிபு - ஈண்டு மூப்பின் மேலது, அரிவை - மனைவி.

697. துரந்து - ஓட்டிவிட்டு, போகத்து இன்பம் - அரசபோகத்து எய்தும் இன்பம், மெய்ப்பட - உண்மையாக, மீட்டு - மீண்டும்.

698. கீழ்ந்து - அகழ்ந்துகொண்டு, அரம்பு - குறும்பு, கலி - நுகரும் பொருள் இல்லாமையால் அதன்மேலே செல்லும் ஆசையால் பிறக்கும் வருத்தம், காலத்தால் - துறவுக்குரிய காலத்தே, நலிவிலாவுலகம் - வருந்துதலில்லாத வீட்டுலகம்.

699. வேட்கைமை - வேட்கைத் தன்மை, காம வெந்தேறல் - காமமாகிய வெவ்விய கள், மாட்சி - நற்செய்கை, ஒன்றானும் - சிறிதும், இருளை - மயக்கத்திலிருந்து, கைவிளக்கு - கைவிளக்காகிய துறவுநெறி, தோட்டி - அங்குசம்.

700. கோலி - நெரித்து, முறுவல் தூது - முறுவல் நகையாகிய தூது, இது காமக் குறிப்பு, கனிவித்தார் - மிகுவித்தார், பனிவில் - முத்துவடம், வள்ளிதழ் வளவிய இதழ், வச்சிரமனத்தானானான் - காமத்திற்கு நெகிழாத வைரம் பொருந்திய மனமுடையனான்.

701. வறை - வறுவல், குய் - தாளிப்பு, கழுமி - நிறைந்து, ஐவரு ளொருவன் - வீமன், மடையன் - சோறாக்கி, வான் சுவை - மிக்க சுவை.

702. கடிமலர் - எக்காலமும் புதிதாகிய மலர், கமலத்து அடிமலர் - கமலத்தே நடந்த அடியாகிய மலர், யாரே - யாவராய் இன்புறுவரென்றால், வடிமலர் - வடித்த மலர், வருகின்றார் - இவ்வுலகில் வருகின்றனர்.

703. இலங்கு குங்கும மார்பன் - விளங்குகின்ற குங்குமச் சேறு பூசிய மார்பையுடைய சீவகன், ஏந்து சீர் - உயர்ந்த புகழ், சாரணர் கோயிலை வலங்கொண்டு கன்மிசை யிருந்தாரை மார்பன் கண்டு வாழ்த்தினான்.

704. தீவிய - இனிய, அருமணி - பெறுதற்கரிய மணி, வரகதி - வீடு, ஏனை யாவரும் - ஏனை அறிவுடையோர் யாவரும், புகல்வ - தெளிவில்லோர் தெளிவு கருதி நாளும் ஓதுவன, மானம் - ஒப்பு, உயர் மணிவண்ணன் - சாரணர் இருவருள் ஒருவன், உயர்ந்த மணிபோலும் நிறமுடைய இரத்தினப் பிரபை என்பவன்.

705. அருமையின் - அரிதாக, திரு - நல்வினை, நீங்கிய - நீங்கப் பட்டனவாகிய, தெளி பொருட் டுணிவு - தெளியப்படும் பொருளும் தெளியும் தெளிவும், குருமை - நல்ல நிறம்.

706. பரவை - பாத்தல், படு - உண்டான, சிவணி - சென்று சேர்ந்து, அத் துளையகவயின் - வட கடலில் கிடந்த நுகத்தின் துளையிலே, செறிந்தென - கோத்தாற்போல, நோன்கழி - வலிய கழி, பெரிய யோனிகள் - பெரிய பிறப்புகள், பிழைத்து - தப்பி.

707. பொன் - சுக்கிலம், வெள்ளி - சுரோணிதம், வயிற்றகம் - கருப்பை, வீயினும் வீயும் - அழியினும் அழிந்துவிடும், கருத்தோன்றிய இருதிங்களில் வெண்ணெய்போல் திரண் டிருக்கும் என்ப, பிழைக்கவும் பெறும் - கெடும்.

708. கேள்விகள் துறை போய் - நூற் கேள்வி பலவும் கேட்டும் கற்றும் துறைபோகி, வடி கொள் - மாவடு போன்ற, இரங்க - வேட்கையால் மெலிய, குழகு - இளமை, விடையின் - காளை போல, செல்வுழி - செல்லுங் காலத்தே, விளியும் - இறக்கும்.

709. பைப்பய - மெல்ல, கடைப்பிடி - கொள்கை, உரையவிந்து - சொல்லுந்தன்மை குன்றி, உறுப்பினில் உரையா - கையால் குறித்து, தூய்மையில் குளம் - தூயதல்லாத உடம்பாகிய குளம், தூம்புவிட்டு - ஒன்பதாகிய வாயில்களைத் திறந்து, ஆம் பொருள் உணர்த்தி - முடிவில் ஆகும் பொருள் இதுவே என்று அறிவித்து, ஈமம் - சுடுகாடு, இகலமர் - மாறுபாட்டோடு கூடிய போர்.

710. வித்தி - விதைத்து, அவ்விடத்து - நரகத்தில், இவ்வென - இத்தன்மையவென, பளிக்கும் - நடுங்கும்.

711. துரப்ப - செலுத்த, ஒன்று மூழ்த்தம் - ஒரு வினாடி, பெண்ணை நெற்றி - பனை மரத்தின் தலையில், ஊழ்த்து - மிகப் பழுத்து, வெருவரத் தக்க - அஞ்சத்தக்க, உழப்ப - வருந்துவர், ஊணும் - உயிரை வாழச் செய்யும் நல்லுணவும், அருநவை நஞ்சு - அதனை இறக்கப் பண்ணும் கொடிய நஞ்சாம்.

712. எரிநீர் - எரியினது தன்மையையுடையனவாம், ஒருநீரவே - ஒரு தன்மையவே, பெருநீர… வேலோய் - பெரிய நீரவாகிய கண்ணையுடைய பெண்களை வருத்தும் தாரினையும், அடர்த்தற்கரிய தன்மையனவாகிய வேந்துகளை யடர்த்த வலியினையும், வருத்தத்தைச் செய்யும் வலியினையுடைய அரசே.

713. நிழல் நோக்கி - கண்ணாடியிலே நிழலைப் பார்த்து, தாங்கார் - தாங்கமாட்டாராய், மகிழ் தூங்கி - மகிழ்ச்சி செறிந்து, மட்டித்து - பூசப்படுவனவற்றைப் பூசி, கொம்மை - பெரிய, குழகாடும் - இளமையால் காமக் களியாட்டயரும், வெம்மை - வருத்தம்.

714. வேட்டன - விரும்பிய பொருள், விழைநர் - காதலர், மோட்டெழில் - மிக்க அழகு, ஏட்டெழுத்து - ஏட்டி லெழுதப்படும் எழுத்து, கல்வி, எள்ளற்பாடு - இகழ்ச்சி, சூட்டு - மாலை.

715. தொழிக்கப்பட்டும் - வெகுளப்பட்டும், அணிகம் - அணிகள், அணி என்பது திரிந்து அணிகமாயிற்று, மாப் பணிகள் - பெரிய பூண்கள், யாவதும் - எத்தகைய பிறப்பை எடுத்தாலும்.

716. மன்றல் - நறுமணம், மலிந்த - நிறைந்த, போலும் பெருமான் என்க, வென்றோர் - முனிவர், சென்ற - நடந்த, திருவார் - சிறப்புப் பொருந்திய, ஐந்தேயன்றி ஆறும் ஒன்பதுமாகும் என்று அறவோர் கூறுவர், இவை முறையே பஞ்சாத்திகாயம், சட்திரவியம், நவபதார்த்தம் என்பர், ஐந்து - சீலம், புற்கலம், தருமம், கருமம், ஆகாசம், ஆறு, சீவன் முதலாக ஐந்துடன் காலம் ஒன்றுசேர ஆறு, ஒன்பது, சீவம், அசீவம், புண்ணியம், பாவம், ஆசிரவம், சம்வரை, நிர்ச்சரை, பந்தம், வீடு.

717. பெரிய இன்பத்திந்திரன் - பெறும் இன்பத்துள் பெரிது இஃதெனத் தன் மனவுணர் வாலாராய்ந்து பெறும் இந்திரன், பெட்ட செய்கை - அவ்வாறின்றி மனம்போன போக்கில் செய்து திரியும் செய்கை, வினைப்பயம் - வினைப்பயன், இருசார் வினை - நல்வினை தீவினை, இறைவன் நூல் - அங்காகமம், பூருவாகமம், பகு - கருதியாகமம்.

718. உறுவர் - மிக்கோர், உவர்ப்பு - வெறுப்பு, உலையாவின்பம் - வீட்டின்பம், அறிவர் சிறப்பு - அறிவர்க்குச் செய்யும் சிறப்பு, அழிந்தோர் - தளர்ந்தவர், அவித்தல் - கெடுத்தல், இறைவன் அறம் - இச் சமயத்தவர் அனைவர்க்கும்.

719. ஒழுக்கத்தையும் உள்ளத்துணர்வையும் அழிக்கும், மட்டு - கள், புழுப் பயில் தேன் - புழு நிரம்பிய தேன், புண் - ஊன், புலால், விழுப்பயன் - வீடுபேறு, வெறு விலங்கு - உணர்வில்லாத விலங்கு, பழித்தன - கூடாவென விலக்கியவை, பார்மிசையவர் - நிலவுலகத்தே அறஞ்செய்பவர்.

720. ஒன்பது வகைக் கொடை உத்தமர்க்காகும், இன் பதம் - இனிய சோறு, இடை - இடை நிலைக் கொடை, யார்க்கும் - இழிந்தோர்க்கும், ஊட்டினார்க்கும் உண்டார்க்கும், வழங்கினார்க்கும் - அவ்விருதிறத்தார்க்கும் ஊண் பொருட்டு நல்ல பொருளைத் தந்தார்க்கும்.

கொடை ஒன்பது, எதிர்கொளல், இடம் நனி காட்டல், கால்கழீஇ அதிர்பட அருச்சனை அடியில் வீழ்தரல் மதுர நன்மொழியோடு மனம் மெய் தூயராய் உதிர்க நம் வினையென உண்டி ஏந்தினார்.

721. பூமுற்றும் - பூவைப்போலும், காமுற்று - விரும்பி, உற்று - நுகர்ந்து, ஏமுற்று - செல்வக் களிப்புற்று, கரும பூமி - மண்ணுலகு, கடை நிலைக் கொடைக்குப் பயன் நகரமாதலின், ஈண்டுக் கூறப்படவில்லை.

722. அடங்கலர்க்கு - தகுதியில்லாதார்க்கு, அலறும் - முழங்கும், முந்நீர் - ஆக்கல் அளித்தல் அழித்தல் மூன்றும் செய்யும் கடல், மக்களுடம்பும், விலங்கு முகமும் உடைய குரங்கு, ஊழ் கனி - உதிரும் பழம், மடங்கல் - சிங்கம், துப்பு - வலி.

723. திருமணி - மாணிக்கமணி, சூழ்ந்தார் - அணிந்தவர், கப்பத்துள் - கற்பகாலத்து, அமிர்தம் - பயன், உலகமெல்லாம் ஒப்ப - குடை நிழற்றி என்க, கைப்படுத்து - கைக்கொண்டு, ஆழிக்காவலர் - சர்க்கரவர்த்தி.

724. உன் பொருள் - உண்மைப் பொருள், தெள்ளிதின் - தெளிவாக, விள்ளற - நீக்கமற, இருமை ஞானம், காட்சி என்ற இரண்டு, ஒள்ளிதின் - ஒட்பமாக, தரித்தல் - நிலைபெறக் கொள்ளுதல்.

725. மும்மை - ஞானம், காட்சி, சீலம் என்ற மூன்று, கொந்தழல் - மூண்ட நெருப்பு, வினை மரம் - வினையாகிய மரம், நிரைத்து - முறையாக, விடுதல் பெற்றது - விட்டதாம், ஆடு எழில் தோளினாய் - பகைவரை அடுகின்ற உயர்ந்த தோளையுடையாய், அநந்த நான்மை - அனந்த சதுட்டயம், அவை, கடையிலா ஞானம், கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம்.

726. கிடையிலா - ஒப்பில்லாத, ஒங்கி - மிகுந்து அடைதலால் - சேருதலால், மேலுலகு என்பது ஒன்று உண்டென அறியப்பட்டது.

727. பூவை - நாகணவாய்ப் புள், (மைனா), தோகை - மயில், பல் மா - பல விலங்கு,

வாங்கி - பிரித்து, காவல் செய்து - கூட்டிலடைத்து, பொற்பிலது - சிறப்புடைத்தன்று.

728. வார் அணி மணித் துடி - வார்கட்டிய அழகிய துடி, மட்டும் - ஒக்கும், காரணி மயில் - கார்முகிலால் அழகு சிறக்கும் மயில், ஏரணி - அழகு, இறைஞ்சி - தாழ்ந்து.

729. கொடியணி - ஒழுங்காக அணிந்த, அலங்கல் - மாலை, குன்றமன்னான் - நந்தட்டன், அடிபணிந்து - சீவகன் அடியைப் பணிந்து, படுசின….. முரசம், பாம்பின் தலை நடுங்கி மயங்க இடிக்கும் இடியோசையைப் பிறப்பிக்கும் முரசம்.

730. கரிமுக வேற்றை - கரிந்த முகத்தையுடைய நத்தை, ஊனையுடைய கொம்பை யுடைய இளமைபொருந்திய ஆன், செங்கேழ் நாகு இளந்தேரை - செவ்விய நிறம்படைத்த மிக்க இளமையையுடைய தேரை - கானுடைக் கழனி - நாட்டின் தன்மையையுடைய கழனி, கதிரணை - கதிராகிய அணையில், தாயம் - அரசமுறை, ஆண்மோ - ஆளுக.

731. கரும்பு - கருப்பங்காடு, பழனநாடு - நீர்நில முடைய நாடு, சுரும்பு - வண்டு, அரும்பு உலாய் அமர்ந்த - அரும்பு நெகிழ்ந்து மலர்ந்த, அனைய - போன்ற, வழிபட்டு வாழ்வதன்றோ என் வாழ்க்கை என்க.

732. குடி - குடிமக்கள், பழியாமை - பழிக்காமல், ஓம்பின் - காவல்புரியின், அடிவழிப்படுவர் - அடியிலே நின்று வாழ்வர், நொடியல் - சொல்லற்க, கலை நீத்தம் - கலைகளாய வெள்ளம், கொடி யெடுத்தவர் - வெற்றிக்கொடி யெடுத்த அமைச்சர், நல்கு - அருள் செய்க, கொழிந்துணர் - தீங்கு நீக்கி நல்லது தேர்ந்தறியும்.

733. சேல் நடந்தாங்கு - சேல்மீன் பிறழ்வது போல, நோக்கின் - நோக்கத்தையுடைய, மாலை - குணமாலை, நாட் பயந்த - முதலில் பெற்ற, கால் நடந்தனைய மான் தேர் - காற்றுவிசை கொண்டு நடந்தாற் போன்ற குதிரை பூட்டிய தேர், காளை - சுதஞ்சணன், உடன் அணிந்து - தத்தை மகனான சச்சந்தனுடன் இருந்து, தன்போல் - தான் இளவரசனாயிருந்தது போல,

734. அயா வுயிர்த் தனைய - இளைப்பால் உயிர்த்தாற்போன்ற, குய் - தாளிப்பு, உண்டார் - உண்டவர்கள், இஞ்சிமா நகர் - மதில் சூழ்ந்த பெரிய நகரம், ஏற்றலால் - ஏற்கின்றதனைக் காண்கின்றே னாதலால், ஆர்வம் இல்லை - செல்வத்தில் ஆசையில்லை.

735. கழிந்த நாள் - சென்ற நாட்களில், காதலம் - இல்லறத்தில் காதல் கொண்டிருந்தோம், இதனின் இப்புறம் - அறம் கேட்ட இதற்குமேல், ஏதிலம் - கைவிட்ட தன்மையுடையேம், என்ற - என்று சீவகன் சொன்ன, மல்கு நீர் - மிகுந்த கண்ணீர், மார்பின் வாய் - மார்பின் கண்.

736. கண்ணார் கழி வனப்பு - கண்களைக் கவரும் மிக்க அழகு, எண்ணாய - எண்ணும் தன்மையுண்டாய, மெய் கொள்ள - அறிவைக் கவர்ந்து கொள்ளவே, ஏமுற்று - மயங்கி, பண்ணால் பயின்றீர் - யாழ் வித்தையால் வென்று கொண்டீர், என் பயில்வீர் - என்ன உறவு கொண்டாடுவீர்.

737. கொல் வேல் - கொல்லும் வேல், அல்லல் நோய் - மிக்க வருத்தம், உற்றாளுக்கு - உற்ற அவள் பொருட்டு, அடர்த்து - அடக்கி, குவடு - உச்சி, எல்லே - இரக்கக் குறிப்பு.

738. தூம்புடைய வெள்ளெயிறு - உள்ளே புழையுடைய வெள்ளிய நச்சுப்பல், துத்தி - புள்ளி, பாம்பு - பாம்பின் நஞ்சு, உடைய - நீங்கும்படி, தேம்புடைய பதுமை - தேம்புதலையுடைய பதுமை, ஆம்.. ஆகாதே, மேல் வளரும் கூற்றினையுடைய நஞ்சு ஒரு புறத்தே யடங்கித் தீராமல் நின்றது, அதுவே இன்று ஊறிற்றாகாதோ என்க.

739. வில் விலங்க - ஒளி குறுக்கிடும்படி, போழ்ந்து - போழ, ஏப் பெற்று - பார்வையம்பால் தைப்புண்டு, அமரர் இன்னமிர்தம் - தேவர் கொண்டுபோகின்ற அமுதம், தாழ்ந்து நிலத்தே வீழ்ந்தது, வீழ்ந்தாய் - விரும்பினாய், அது - அவ்விருப்பம்.

740. பிணையோ - பெண் மானோ, சிலைத்தொழில் - வில்வன்மை, புண்மேல் கிழிபோல் - புண்மீது பட்ட சீலையை மெல்ல எடுப்பதுபோல்.

741. பொன்னகர வீதி - இராசமாபுரத்துத் தெரு, மின்னின் - மின்னலைப்போல, நுடங்க - அசைய, மன்னன் - சீவகன் தந்தையான சச்சந்தன், வலைப்பட்டீர் - அவள் கண்வலையில் அகப்பட்டீர், இன்னே - இப்போது, இன்னா இடுகினவோ - அவள் கண்கள் இன்னாவாய் ஒளி குறைந்தனவோ.

742. கறை யூர் பல் - அழுக்குப் போக விளக்கமாட்டாத பல், பங்கயமே போல்வாள் - தாமரை ஞாயிற்றையே நோக்குமாறுபோல நின்னையே நோக்கிக் கற்புக்கடம் பூண்டவள், பண்ணணைத்து - பாட்டாலே வசப்படுத்திச் சேர்த்து,

743. புல்லார் - பகைவர், பொன் - வெற்றித் திருமகள், திணி - வலிமை, மல் - மற்போர், மட்டு - தேன், வாய் மடுத்திட்டு - வாயிலே உண்பித்து, ஆடினாய் - இன்புற்றாய், அல்லாந்து - அறிவு கலங்கி, அன்பின் - அன்பிலிருந்து.

744. பண்ணார் - பாடற்கமைந்த, பணை முழவம் - பெரிய முழவு - பாடு - ஒலிப்பு, மழலை - இரை, புண்ணார் - துளையமைந்த, ஏங்கா - இசை செய்யா, பாண்டில் - கஞ்சதாளம், இரங்கா - ஒலி செய்யர், பூங்கண்ணார் - பூப்போலும் கண்ணையுடைய மகளிர், ஆரா - நிரம்பா, மண்ணார் வலம்புரி - அரக்கிட்டாடிய வலம்புரி, மண்ணார் கோன் என மாற்றினுமாம்.

745. காதலஞ் சேற்றுள் - காமக் காதலென்னும் சேற்றில், பாய்ந்த - பாய்ந்து நின்ற, மதி - அறிவு, உவர்ப்பின் - வெறுப்புடன், தேற்ற - தெளிவிக்க, தாரானாகிய காதலான் தன் மனைவியர்மேல் வைத்த காதலென்னும் பிணிப்பினாலே தேற்ற என்க, காதல் - இவர் பிறப்பற்று வீடு பெறவேண்டுமென்ற காதல்.

746. தூமம் - அகிற்புகை, வினை நீத்தம் - வினைக்கடல், நாமம் - அச்சம், ஏமம் சால் இன்பம் - வீட்டின்பம், காஞ்சனக் குன்றம் - பொன்மலை.

747. வாய்ந்து - தவம் வாய்த்து, உன் - உன்னுடைய அடியை, காய்ந்து அருளல் - வெறுத்து நீக்காதருளல்வேண்டும், சாந்தம் கோவே - முயக்கத்தால் வருத்தம் நிகழ்ந்ததாகக் கருதி மலரால் கூந்தலை வழிபட்டு வருத்தம் தீர்த்தகோவே, என்றது, எமக்கு வருத்த மில்லாததனை வருத்தமாகக்கொண்ட நீ ஈண்டு வருத்தமுள்ளதனைத் தீர்க்கின்றிலை என்றதாம்.

748. மாலை - முத்துமாலை, உலகுணவு வந்து - உலகம் நுகரும்படி, காந்திய - ஒலி விளங்குகின்ற, ஏந்திய - உயர்ந்த.

749. தேய்பிறை - நுதல், தேறு நீர் - தெளிந்த நீர், ஆய் நிறக்குவளை - அழகிய நிறத்தையுடைய குவளை, குறுவிழிக் கொள்ளும் - மீண்டும் குவியும், வேய் நிறை - மூங்கிலின் வடிவழகு, சேய் - முருகனையொத்த சீவகன், சேர்ந்தான் - ஏறினான்.

சச்சந்தன் பட்டபின் தன்னுறுப்புக்கள் பொலிந்திருத்தல் ஆகாதென்று உட்கொண்டு அவற்றின் பொலிவினைக் கடிந்தமை தோன்ற நிறையாலழித்த என்றார்.

750. விசும்பறுத்து - விசும்பை ஊடறுத்து, மணிவணன் - மாணிக்க மணிபோலும் நிறமுடைய சீவகன், வரை நெற்றி - மலையுச்சி, இறைவன் - ஸ்ரீ வர்த்தமான சுவாமிகள், இவர் இருபத்துநான்காம் தீத்தங்கரர்.

751. நோய் கெட - நோய் கெடும்படி, விண்டு அலர் - விரிந்து விளங்கும், வீரன் - இறைவன், இவண் - இக் கோயிலிடத்தே, அறவமிர்து - அறமாகிய அமுது, கோடணை - தெய்வ ஆரவாரம், கொற்றம் - கோயில்.

752. ஊண் இவர் பிறவி - உடம்புகளிலே பரக்கின்ற பிறப்பு, தேன் இமிர் தாமரை திளைக்கும் சேவடி - ஒலிக்கும் தேனினம் தாமரையென்று திளைக்கும் சேவடி, ஏத்திய - ஏத்துதற்கு.

753. மணி உறை கழிப்பதுபோல - மணியை மறைத்திருந்த உறையை நீக்குவதுபோல, பணிவரு - குறை கூறுவதற்கரிய, அணிபெற அரும்பிய - அழகுறத் தோன்றிய, அருக்கன் நிலத்து இயன்றதாம் என என்று இயைக்க, என - என்று கூறும்படி.

754. செவ்வனே - நேராக, சுரிந்த உளை - சுருண்டு கிடந்த பிடரி மயிர், எரிந்தெழும் இளஞ்சுடர் - ஒளிமிக்குத் தோன்றுதற்குக் காரணமான இளஞாயிறு.

755. கோமான் - பரதராச சக்கரவர்த்தி. புங்கவன் - வர்த்தமான சுவாமி. சீலக்கடல் - ஒழுக்கமாகிய கடல். தூமாண் வலம் புரி - தூய மாட்சிமையுடைய வலம்புரிச் சங்கு. சங்கினம் - முனிவர் கூட்டம்.

756. முழுதும் - முற்றவும், அசும்பும் - அடிவழுக்கும், தொழுதி - கூட்டம், துளும்ப - தவத்தின் கனத்தால் இளக. பழுது - குற்றம். பண்ணவன் - சீவகசாமி.

757. நளிசிலம்பு - பெரிய மலை, கந்தின் - தூண்போல, கனலிவட்டம் - ஞாயிறு, சுடுவ தொத்து - சுவறப் பண்ணுவது போல, தீயுமிழ் திங்கள் நான்கு - நெருப்பைப் பொழியும் சித்திரை முதலிய நான்கு திங்களும், விளிவரும் குரைய - கெடாத, குரை - அசை, சீவகனைக் கந்தென்றமையின், அவன் மேற்கொண்டிருந்த ஞானத்தை யானை யென்றார்.

758. நீருட் குளித்து எடுப்ப எழும் முத்துக்கொத்தும் வயிரமணியும் கொண்டு ஒளிவிளங்க என்க, உலகை அருள் செய்து புரக்கும் இயல்பினையுடைய விரிந்த குடை வந்து கவித்தது, வளி பொர - காற்று ஒன்றோடொன்று பொரும்படி, உளரும் - அசையும், கதிர் என - கதிர் போல, தெளித்து - தெளிந்து, வில் - ஒளி.

759. வீவினையின்றி - கொடுந்தொழில் இன்றி, காம முலை - காமமாகிய முலை, வீங்கி - பருத்து, தாவினை யின்றி - குதித்துப் போவதின்றி, கோவினை - இறைவனை, கோதையர் - கோதாகிய பொருளையுடையவர்.

760. நன்னீர்த் தயா - நல்ல நிர்மையுடைய அருள், பொம்மென் மணி முலை - பெருத்த அழகிய முலை, புல்லிக்கொண்டு - தழுவிக் கொண்டு, கோவாய்ச் செல்லுமால் - இந்திரனாய்ச் செல்வான், இருள் கழிந்த சொல் - குற்றமில்லாத சொல், அல்லி - தாமரைப் பூ.

761. மற்று - அசை, பேரான் - பெரிய பசு, சுரக்கும் - செய்யும், தொழுவில் - மாட்டுத் தொழுவில், தீற்றி - ஊட்டி, பற்றார்வம் - பற்றும் ஆர்வமும், புற்கற்றை - மன வெழுச்சியாகிய புற்கற்றை, நிருமலன் - மலமற்றவன் சேரின் - நினைந்து அடைவாராயின், அன்பு விற்று உண்டு - அன்பைக் கொடுத்து, சிவகதி - வீட்டுலகு.

762. உழவித்தி - உழவுத் தொழிலைப் பரப்பி, கொண்டுய்யப் போகல்வேண்டி - கொள்ள வல்லார் கொண்டு பிறவியைத் தப்பப் போகலை விரும்பி, தொழு - சமவசரணம், இமில் ஏறு - கொண்டையையுடைய ஏறு, குழவித் தண் திங்கள் - பிறைத்திங்கள், விழிவித்தாய் - விழவுக்குக் காரணமாய், ஏறு சேர்ந்த திங்கள் - இடபவிராசியைச் சேர்ந்த திங்கள், உழவு - வழிபாடு, நால்வினை - வேதநீயம், ஆயுசியம், நாமம், கோத்திரம்.

763. கேவல மடந்தையென்னும், கண்ணும் கண்ணியுமுடைய பொன், பூவலர் முல்லைக் கண்ணி - முல்லைப் பூவால் தொடுத்த கண்ணி, கேழ் - நிறம், காவலன் - சீவகன், கூறு - பங்கு, புல்லி - சேர்ந்து, இன்பக் கடல் - சிவபோகம் என்னும் இன்பக் கடல்.

764. காழகப் பச்சை - கருஞ்சோற்றையுடைய தோல், கண்தெறும் - கண்ணைக் கூசும், மாழை - இளமை, ஏழைப்பெண் - தாழ்ந்த பெண் பிறப்பு, இடிய - கெடவேண்டுமென்று.

765. ஆர்வம் - இரதி கன்மம், ஓசை யுலகு - புகழ் பொருந்திய தேவருலகம், உண்ண - அவ்வுலக போகத்தை நுகர, ஏது பெண் - பொல்லாதென்று பேசும் பெண் பிறப்பு, ஞானமாய் - ஞானம் பெற்று.

766. காமவல்லி - காமவல்லிக் கொடி, இது தேவருலகத்துக் கற்பக மரத்தில் பற்றிப் படர்வது என்பர், தாம வார் குழல் - மாலையணிந்த நீண்ட கூந்தல், ஏமம் - உயிர்க்கு ஏமமாகச் சிறந்த.

767. பாவனை - பதினாறுவகைப் பாவனை, இவை தரிசன விசுத்தி முதலாக, பிரவசனவற்சலத்துவம் ஈறாக உள்ளவை, இவற்றின் விரிவை ஸ்ரீபுராணத்துட் காண்க, பட்டினி - உண்ணா நோன்பு, தீர்த்தன் - இறைவனை, கொட்பின் - மனக்கொட்பினால், பூவுண் வண்டன நாவின் வேட்கை - பூவை யுண்கின்ற வண்டையொத்த நாவினால் கொண்ட உணவு, அஃதாவது வண்டுபோலச் சிறிதாகக் கொள்ளும் உணவு, வேட்கை ஆகுபெயர், நஞ்சின் - நஞ்சுபோல.

768. கருவில் - கருவில் தங்கும்போதே, கட்டிய காலம் - இறத்தற்கு விதித்த காலம், வந்தென - வந்ததாக, உருவ…. கோட்டின் உயர்ச்சியால் தன்னிடத்தே பிறையையுடைய உச்சியால், முடித்திட்டு ஏனைத் தவங்களையும் செய்து முடித்துவிட்டு, திருவின் தோற்றம் போல் - தீவினை நீங்கி நல்வினை வந்தால் திருமகள் நினைவின்றித் தோன்றுமாறு போல, இவரும் இவ்வுடம்பினை நீக்கித் தேவர் உடம்பு பெற்றனர்.

769. மண் கனிந்த - மண்ணுதல் முற்றவும் அமைந்த, விம்ம - முழங்க, பாண்டில் - கஞ்சதாளம், பண்கனிய - பண் முற்றுப் பெறப்பாட, பதைப்ப - அசைய, விண் கனிய - விண்ணவர் மனம் உருக, விருந்து - தேவ மகளிர் காமக் கொழுந்தீன்று செய்யும் இன்பம்.

770. அந் தாமரை - இறைவன் திருவடி, தாமரைக்கு மணம் தந்த தாமரை யென்றார், ஆள் அகலத்தவன் - அத் தாமரையை யாளும் விரிந்த ஞானத்தையுடைய சீவகன், சிதர்ந்தேன் - பரக்கக் கூறினேன், தெருண்டார் - அறிஞரும் இதனை நன்றென்று தெளிந்தார், நன்மணி - விளி, நந்தா - அவியாத, சுடர் நன்மணி - உள்ளத்தே நின்றெரியும் நன்மணி, நன்மணி - குருக்கள்.

இது நூலாசிரியர் தம் குருக்கட்குக் கூறியது.

771. செய்வினை - முன்னே செய்த நல்வினை, மைவினை மறு - தீவினையாகிய களங்கம், மதி - அறிவு, மொய்வினை யிருள் - செறிந்த வினையாகிய இருள், கண் போழும் - கட்குப் புலனாகாவாறு அறக் கெடுக்கும், கைவினை செய்த - ஆராய்ந்த.